11/25/2025
" புத்தளம் எனும் புண்ணிய பூமி காக்க போவது யாரு சாமி"
பிஸ்லியா பூட்டோ ( புத்தளம் பிரதேச சபை,உறுப்பினர் , சமூக ஆர்வலர்)
புத்தளம் உப்பைத் தளமாகக் கொண்டு வந்தோரை வாழ வைத்துக் கொண்டிருக்கும் இயற்கை அன்னையின் செல்வத்தால் அனைத்து வளங்களையும் தன்னகத்தே கொண்ட மண்ணாகும். இது சுமார் 3,072 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடையது. 2012 ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி மொத்த சனத்தொகை 762,396 ஆகும். இம் மண்ணில் சொந்த ஊர் மக்கள் மாத்திரமல்லாது 1990ம் ஆண்டு வடக்கு யுத்தத்தால் விடுதலைப்புலிகள் சுமார் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்கள் வெளியேற்றினர். வெளியேற்றப்பட்ட அம் மக்களுக்கு அடைக்களம் கொடுத்த அன்னை பூமியும் புத்தளமாகும்.
அப்படிப்பட்ட மண் இப்போது அழிவை எதிர் நோக்கி வருகின்றது. காரணம் புத்தளத்தைச் சூழ அமைந்துள்ள மற்றும் அமைக்கவுள்ள தொழிற்சாலைகள்தான்.
தன்னை இழந்து வரும் புத்தளம்......
அதனடிப்படையில் புத்தளம் கல்லடிப் பகுதியில் அமைந்துள்ள சீமெந்தது தொழிற்சாலை. சீமெந்து தொழிற்சாலையினால் ஏற்படும் சூழல் பாதிப்புகள் பலராலும் கவனிக்கப்படுகின்றன. இது சுற்றியுள்ள கிராம மக்கள், விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றை பல தசாப்த காலங்கள் பாதிப்பிற்குள்ளாக்கிக் கொண்டு வருகின்றது.
சீமெந்து உற்பத்தியின் போது அதிக அளவிலான தூசித் துகள்களை (dust particles), கார்பன் டயாக்ஸைடு (CO₂), நைட்ரஜன் ஒக்சைடுகள் (NOx), சல்பர் ஒக்சைடுகள் (SOx) ஆகியவற்றை வெளியிடுகிறது. இந்த வாயுக்கள் சுவாசிக்கும் காற்றை மாசுபடுத்தி மனிதனுக்கு அஸ்துமா, மூச்சுத்திணறல், சிறுநீரக பாதிப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. அது மட்டுமல்லாது நில மாசுபாடு (Soil Pollution)தூசித்துகள் மற்றும் கழிவுகள் அருகிலுள்ள நிலத்தில் படிந்து, விவசாயத்தில் பயிர்களின் வளர்ச்சியை பாதிப்புக்குள்ளாக்குகின்றது. மேலும் நிலத்தில் heavy metals சேர்ந்து நிலத்தின் இயல்பை மாற்றுகிறது. இதனால் நிலத்தடி நீர் (குடிநீரும்) பாதிக்கப்படுகின்றது. இப்படி கூறிக் கொண்டே போகலாம்.
அடுத்து புத்தளம் மாவட்டத்தில் சுண்ணக்கல் (Limestone) அகழ்வு முக்கியமான (பனிக்கற்கள் அகழ்வுப்) பணிகளில் ஒன்றாகும். இது சிமெந்து தொழிற்சாலைகள் மற்றும் கட்டிடம் தொடர்பான உற்பத்திக்காக பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைதல் மற்றும் நீரின் இயல்பு மாற்றம், மண்ணின் தரம் குறைதல் மற்றும் மரங்களும் பசுமையும் அழிவடைந்து வருகின்றது. அத்தோடு விலங்குகளின் வாழ்விடமும் அழிக்கப்படுகின்றது.
சுண்ணக்கல் அகழ்வு புத்தளத்தில் ஒரு முக்கியமான தொழில்துறை நடவடிக்கையாக இருந்தாலும், இது சுற்றுச்சூழலுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது.
அடுத்து நுரைச்சோலையில் அமைந்துள்ள அனல்மின் நிலையம். அனல்மின் நிலையத்தில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காக நிலக்கரியை எரிப்பதனால் வெளியேறும் சல்பர்டைஒக்சைடு (SO2), நைட்ரஜன் ஒக்சைட்கள் (NOx), சாம்பல் மற்றும் சிறுதுகல்கள் (PM2.5, PM10) காற்றை மாசுபடுத்துகின்றன.
PM2.5 மற்றும் PM10 என்பது காற்றில் உள்ள மைக்ரோ நிலைத்த தூசிக் கருக்களில் (particulate matter) உள்ள அளவைக் குறிக்கும். PM10 விட்டம் 10 மைக்ரோமீட்டர் அல்லது அதற்கு குறைவாக இருக்கும். தூசித் துகள்கள். (மண்ணில் பரவலாக உருவாகும் தூசி) PM2.5 – விட்டம் 2.5 மைக்ரோமீட்டர் அல்லது அதற்கு குறைவாக இருக்கும். மிகவும் நுண்ணிய துகள்கள். (வாகன புகை, எரிவாயு)
இவை இரண்டும் காற்றின் தரத்தை பாதிக்கக்கூடியவையாகும். PM2.5 மிகவும் ஆபத்தானது, ஏனெனில் அது நம்முடைய நுரையீரலுக்குள் நுழைந்து சுவாசத் தொற்றுகள், ஹார்ட் அட்டாக், கேன்சர் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் ஆபத்து அதிகம். இவை பருவநிலை மாற்றம், தொழிற்துறைகள், வாகனங்கள், எரிப்பு முறைகள் போன்றவற்றால் அதிகரிக்கின்றன.
மேலும் மண் மற்றும் நீர் மாசுபாடு. அதாவது தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் சாம்பல் கழிவுகள் மற்றும் இரசாயனக் கழிவுகள் நிலத்திற்கும் அருகிலுள்ள கடலுக்குள் செல்வதாலும் தாக்கம் ஏற்படுத்துகின்றன. சாம்பல்க்கிடங்கு மற்றும் நீர்வெளியீடு மூலம் நிலத்தடி நீர் மற்றும் கடலோரப் பகுதிகள் பாதிக்கப்படுகின்றன.
அனல்மின் நிலையத்தில் இருந்து வெளியேறும் வெதும்பிய நீர் கடலில் வீழ்வதால் மீன்களின் வாழ்விடங்கள் அழிக்கப்படுகின்றன. இதனால் சிறு மீன்பிடித் தொழில் குறைந்து மீனவர்களின் வாழ்வாதாரம் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது.
மேலும் நிலத்தடி நீர் மாசுபடுத்தப்பட்டு அப்பகுதி மக்கள் இப்போது அன்றாடம் குடிப்பதற்காகப் பயன்படுத்தும் நீரைக் கூட விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்ல சுவாசக் கோளாறுகள் ஆஸ்துமா, தலைவலி, உடற் சோர்வு போன்ற உடல்நலக் குறைகள் அதிகரித்து வருகின்றன.
அடுத்து புத்தளத்தில் அமைந்துள்ள காற்றாலை (Wind Power Plant) மின்சார உற்பத்தி நிலையம். பொதுவாக ஒரு பசுமை (green) மற்றும் சூழலுக்கு உகந்த ஆற்றல் மூலமாகக் கருதப்படுகிறது. ஆனால், இதன் மூலம் பாதிப்புகள் உள்ளன. ஒலி மாசுபாடு (Noise Pollution) காற்றாலை சுழலும் போது சுழற்சி அடிப்படையில் தொடர்ந்து உண்டாகும் ஒலி, அருகிலுள்ள குடியிருப்புகளுக்கு சிரமங்களை ஏற்படுத்துகின்றன. தொடர்ச்சியான ஒலியினால் உறக்கம் குறைதல், மனஅழுத்தம், மனநிலை மாற்றங்கள் போன்ற தாக்கங்கள் ஏற்படுகின்றன.
அது மட்டுமல்ல காற்றாளை மின்விசிறிகளில் சில புத்தளத்தில் உள்ள குபா எனும் கிராமத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளதால், ஆரம்பத்தில் விசிறிகள் திடீர் என தீப்பற்றி எறிவதும் அவை அருகில் உள்ள குடிசைகளில் வீழ்வதும் இடம்பெற்று வந்துள்ளது. இதனால் அப்பகுதி கிராம மக்கள் அவ்விடத்தை விட்டு வேறு இடங்களுக்கு கட்டாய இடப்பெயர்வு செய்ய வேண்டிய சூழலுக்கு ஆளக்கப்பட்டனர்.
மேலும் தரையமைப்புப் பாதிப்பு (Land Use Impact) பெரிய அளவில் நிலம் இதை அமைப்பதற்கு தேவையாகும். மேலும் இவற்றுள் அதிகமானவை மக்கள் பயன்பாட்டு நிலப்பகுதிகளிலே அமையப்பெற்றுள்ளதால் மீன்பிடி, விவசாயம் போன்றவற்றின் நிலப்பகுதியும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் சில சமயங்களில் காற்றின் இயல்பு பாதிக்கப்படுவதாக சில கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே இவைகள் ஒன்றினைந்து நஞ்சூட்டப்பட்ட புத்தள சூழலை உருவாக்கிக் கொண்டிருக்க, அடுத்த நாசகார செயலாக அருவக்காடு குப்பைத் திட்டத்தை 2014ம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ஸ பாதுகாப்புச் செயலாளராக இருக்கும் போது ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டம் ஆரம்பிக்கப்படுமாக இருந்தால், அருவக்காடு அருகில் கடலோரம் இருப்பதால், குப்பையின் கழிவுகள் கடலுக்குச் செல்லும் வாய்ப்பு அதிகமுள்ளது. அப்படிக் கடலுடன் கழிவுகள் கலக்கப்பட்டால் கடலியல் உயிரினங்கள் மற்றும் மீன்வளத்தையும் பாதிக்கக்கூடும்.
மேலும் பெரும் அளவில் குப்பைகள் கொண்டு வரப்படுமேயானால் சுற்றியுள்ள கிராமப்புறங்கள் வாழ்விட சீர்கேடு, நிலத்தின் மதிப்பு குறைதல், நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்பட்டு அது குடிநீரையும் சேர்த்து பாதிப்புக்குள்ளாக்கும். தொடர்ந்து மக்கள் குடியிருப்பு பிரச்சினை போன்றவற்றோடு, அருவக்காடு பகுதியில் இயற்கை வனங்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் உள்ளன. குப்பைகளின் நச்சு, கழிவுகள் அவற்றின் வாழ்விடத்தை அழித்துவிடும். குப்பைகளை எரித்தால் துர்நாற்றம், விஷவாயுக்கள் (பொலிதீன், பிளாஸ்டிக் எரிப்பின் மூலம்) காற்று மாசுபடுத்தப்படும். இது அந்தப் பகுதி மக்களுக்கு சுவாசப் பிரச்சினை, ஆஸ்துமா மற்றும் தொற்று நோய்களையும் ஏற்படுத்தும்.
இவை அனைத்தாலும் புத்தள மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. மாறாக பொதுவான பிரச்சினைகளாக இயற்கை தன்னைத் தானே தற்கொலை செய்து கொள்ளும் இதனால் காலப்போக்கில் புத்தளம் ஒரு மயான பூமியாக மாறிவிடும்.
புத்தளத்தின் ஒவ்வொரு தொழிற்சாலை உருவாக்கத்தின் போதும் மக்கள் போராடத போராட்டமே இல்லை. சில போராட்டங்களின் போது உயிர்கள் கூட பரிபோயுள்ளன. ஒவ்வொரு அரசும் நாட்டின் இயற்கை வளங்களை பாதுகாத்து எம் நாட்டை செழுமையாக்குவோம் என்ற வாக்குறுதியுடனேயே ஆட்சி பீடம் ஏறுகின்றனர்.
ஆனால் குறிப்பிட்ட காலத்தின் பின்னர் அதை மறந்து மக்களை ஏமாற்ற ஆரம்பித்து விடுகின்றனர்.
அபிவிருத்தி என்ற பெயரில் மக்களின் இருப்புக்களுக்கு அச்சுறுத்தலாக மாறும் போது,
நாம் வாழும் சமூகம் நம் கண் முன்னே மாண்டு போவதற்கு இடமளிக்கக் கூடாது.