News4 Tamil Digital

News4 Tamil Digital Online Tamil News

பனையூருக்கு வந்த சிபிஐ அதிகாரி! அவசரமாக Vellfire காரில் நீலாங்கரையில் இருந்து வெளியே சென்ற விஜய்!கரூர் கூட்ட நெரிசல் வழக...
03/11/2025

பனையூருக்கு வந்த சிபிஐ அதிகாரி! அவசரமாக Vellfire காரில் நீலாங்கரையில் இருந்து வெளியே சென்ற விஜய்!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை விசாரிக்க சிபிஐ அதிகாரி பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு வந்த நிலையில் நீலாங்கரை வீட்டிலிருந்து அவசர அவசரமாக விஜய் தனது காரில் வெளியே கிளம்பிச் சென்றார்.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தவெக பிரச்சார கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் விஜய் பிரச்சாரம் செய்தார். அவரை பார்க்க ஏராளமானோர் அங்கு கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகிவிட்டனர்.

இந்த சம்பவத்திற்கு விஜய் தலா ரூ 20 லட்சம் இழப்பீடாக வழங்கினார். விஜய் கரூர் செல்லாமல் அவரவர் வங்கிக் கணக்குகளில் அந்த பணத்தை வரவு வைத்துவிட்டார். மேலும் கடந்த 27ஆம் தேதி விஜய், கரூர் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களை சென்னைக்கு வரவழைத்து அவர்களுடன் சந்திப்பு கூட்டத்தை நடத்தி ஆறுதல் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. கரூர் வழக்கில் முதல் கட்ட விசாரணையை நிறைவு செய்த அதிகாரிகள் குழு, தற்போது இரண்டாம் கட்ட விசாரணையை தீவிரப்படுத்தி வருகிறது.

அதன்படி கடந்த 31 ஆம் தேதி சிபிஐ ஏஎஸ்பி மகேஷ் குமார், சிபிஐ எஸ்பி பிரவீன் குமார், டிஎஸ்பி ராமகிருஷ்ணன், ஆய்வாளர் மனோகரன் உள்ளிட்ட 15 பேர் கொண்ட சிறப்பு அதிகாரிகள் குழு, கரூர்-ஈரோடு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேலுச்சாமிபுரம் பகுதிக்கு வந்தடைந்தனர்.

பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்திற்கு சிபிஐ அதிகாரி ஒருவர் வருகை தந்துள்ளார். அவர் விஜய் பயன்படுத்த பிரச்சார வாகனத்தை ஆய்வு செய்தார். மேலும் தவெக அலுவலகத்தில், கரூர் கூட்டம் குறித்த சில ஆவணங்களையும் அந்த அதிகாரி கேட்டார். இந்த விசாரணை நிறைவுற்று அந்த அதிகாரி பனையூர் அலுவலகத்தில் இருந்து வெளியே சென்றுவிட்டார்.

இந்த நிலையில் பனையூர் கட்சி அலுவலகத்திற்கு சிபிஐ அதிகாரி சென்ற அதே நேரத்தில் தனது வெல்ஃபயர் (Lexus Vellfire) காரில் விஜய், நீலாங்கரை வீட்டில் இருந்து வெளியேறிவிட்டதால் பரபரப்பு எழுந்தது.

SIR.. பாஜகவை லேசாக வருடிவிட்டு.. திமுகவை போட்டு தாக்கிய விஜய்.. இப்படி நிலைப்பாடு எடுத்துட்டாரே!தேர்தல் ஆணையம் கொண்டு வந...
03/11/2025

SIR.. பாஜகவை லேசாக வருடிவிட்டு.. திமுகவை போட்டு தாக்கிய விஜய்.. இப்படி நிலைப்பாடு எடுத்துட்டாரே!

தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள வாக்காளர் சிறப்பு திருத்தத்திற்கு (SIR) கண்டனம் தெரிவித்து தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை வெளியிட்டு உள்ளது. இதை ஆதரிக்கும் மத்திய பாஜக அரசை கண்டிக்கும் இந்த அறிக்கையில் விஜய் திமுகவை அதிகமாக விமர்சனம் செய்து இருப்பது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

இந்த அறிக்கையில் திமுக-வை 8 முறையும், பாஜக-வை 2 முறையும் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார் விஜய். இந்த திட்டத்தை செயல்படுத்துவது தேர்தல் ஆணையம். இந்த திட்டத்திற்கு ஆதரவாக கோர்ட்டில் வாதம் வைப்பது மத்திய பாஜக அரசின் வழக்கறிஞர்கள்தான். ஆனால் விஜய் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் திமுகவை விமர்சனம் செய்துள்ளார்.

திமுக எதிர்ப்பு
திமுக இந்த திட்டத்துக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறது. அதோடு இல்லாமல் இதற்கு எதிராக நேற்று 50+ கட்சிகளை கொண்ட அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தியது. மேலும் S.I.R. நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்க வேண்டும்; இல்லாவிட்டால், உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வழக்குகள் தாக்கல் செய்யும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இது தொடர்பாக வெளியிட்ட கண்டனத்தில், பாரதிய ஜனதா கட்சியும் (BJP) அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் (AIADMK) இணைந்து, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மாநில சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில், இந்திய தேர்தல் ஆணையத்தின் (ECI) சிறப்பு தீவிர திருத்தப் (Special Intensive Revision - SIR) பணிகளைப் பயன்படுத்தி, உழைக்கும் வர்க்கத்தினர், பட்டியல் சமூகத்தினர், சிறுபான்மையினர் மற்றும் பெண்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க திட்டமிட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.

ஆனால் திமுகவை அறிக்கையில் விமர்சனம் செய்துள்ள விஜய் பாஜகவை மென்மையாக தடவிகொடுத்துள்ளார் என்று விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. நேற்று நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் பாஜக கூட்டணி கட்சிகளும், விஜயின் தவெகவும் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

விஜய் அறிக்கை
இதுகுறித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையைக் கேள்விக்குள்ளாக்கும் சிறப்பு தீவிரத் திருத்தத்திற்கு தமிழக வெற்றிக் கழகம் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது.

தமிழகத்தில் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. ஏற்கெனவே பீகார் மாநிலத்தில் வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம் குறித்த அறிவிப்பு வெளியானபோதே, தவெக சார்பில் அதை கடுமையாக எதிர்த்து அதன் உள்நோக்கம் குறித்து எச்சரித்தோம்.

அப்போது எச்சரித்தது போலவே பீகாரில் லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. குறிப்பாக இந்தச் சிறப்புத் தீவிரத் திருத்தத்தின் மூலம் மதச் சிறுபான்மையினர் உள்ளிட்ட சில குறிப்பிட்ட வாக்குகள் குறி வைத்து நீக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

மேலும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தம் குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. முதல் கட்டச் சிறப்புத் தீவிர திருத்தம் குறித்த தெளிவான விளக்கங்கள் அளிக்கப்படாத நிலையில் இரண்டாம் கட்டத் திருத்தத்தை மேற்கொள்வது எந்த வகையில் சரியான நகர்வாய் இருக்க முடியும்?

தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 30 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரின் பெயரையும் வெறும் 30 நாட்களில் எப்படி சரிபார்க்க முடியும்? இந்த வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தத்தின் வாயிலாக, பீகாரில் நடைபெற்றதைப் போல் தமிழகத்திலும் சிறுபான்மையினர் உள்ளிட்ட சில குறிப்பிட்ட வாக்குகள் குறிவைக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கமிட்டு வருகின்றன.

அப்படி நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்? தேசியக் குடிமக்கள் பதிவேட்டு முறை நடைமுறைப்படுத்தப்படும் அசாமில் மட்டும் தனியாகச் சிறப்புத் தீவிரத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்கிற அறிவிப்பும் இந்தச் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துவதாகவே உள்ளது. எனவே சிறப்புத் தீவிரத் திருத்தம் என்கிற குழப்பமான நடைமுறையை விடுத்து, ஏற்கெனவே இருக்கும் நடைமுறையே தொடர வேண்டும் என தமிழக வெற்றிக் கழகம் வலியுறுத்துகிறது.

மேலும் தற்போது வாக்காளர் பட்டியல் திருத்தப்படும் நிலையில் இது தொடர்பாக தவெக சில ஆலோசனைகளை முன் வைக்கிறது.

1. வாக்காளர் பட்டியலில் ஏதேனும் தவறுகள் இருப்பின், முறையான படிவத்தின்படி பட்டியல் திருத்த நடைமுறை வாயிலாக, அதனைச் சரிசெய்து முறையான, சரியான வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும்.

2. இந்த நடைமுறை வாயிலாகப் புதிய வாக்காளர்களைச் சேர்க்க வேண்டும். இறந்தவர்களின் பெயர்களையும் போலியான பெயர்களையும் நிரந்தரமாக நீக்க வேண்டும்.

3. புதிய வாக்காளர்களுக்கான அடையாளம் மற்றும் வயது ஆதாரத்திற்கு ஆதார் அட்டையை ஓர் ஆவணமாக ஏற்க வேண்டும்.

4. திருத்தம் செய்து இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலை அரசியல் கட்சிகளின் பாக முகவர்கள் சரிபார்க்கும் வகையில் அவர்களுக்கு வழங்க வேண்டும்.

5. வேட்புமனு தாக்கலுக்கான இறுதித் தேதிக்குப் பிறகு புதிய வாக்காளர்களைச் சேர்க்கக் கூடாது.

6. வாக்காளர் திருத்த நடைமுறை முடிவடைந்து புகைப்படத்துடன் வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டவுடன் அரசியல் கட்சிகளுக்கு டிஜிட்டல் இயந்திரத்தில் வாசிக்கக் கூடிய வடிவில் அப்பட்டியல் வழங்கப்பட வேண்டும்.

7. இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலை இணையத்தில் எளிதில் தேடும் வசதியுடன் வெளியிட வேண்டும்.

நம் மண்ணின், மக்களின் உரிமையைக் காக்க அரசியல் வேற்றுமைகளைப் புறந்தள்ளி இந்த விவகாரத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் எனும் நிலைப்பாட்டில் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாக இருக்கிறது. அதே சமயம் வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை வெறும் வாக்கு அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் திமுகவின் சூழ்ச்சியையும் அறிந்தே இருக்கிறோம்.

அண்டை மாநிலமான கேரள அரசு, சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு எதிராகச் சட்டசபையில் தீர்மானம் இயற்றியுள்ளது. கேரள அரசின் இந்த நடவடிக்கை, அந்த மக்களின் உரிமை மீதான அக்கறையைக் காட்டுகிறது. ஆனால் சிறப்புத் தீவிரத் திருத்தத்தைக் கடுமையாக எதிர்ப்பதாகக் காட்டிக் கொள்ளும் திமுக இது குறித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றாதது ஏன்?

தொகுதி மறுவரையறையை எதிர்க்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அரசு சார்பில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எனவே அதில் கலந்து கொண்டு மக்கள் உரிமைகளுக்காகத் தவெக நிலைப்பாட்டைத் தெரிவித்தோம். ஆனால் சிறப்புத் தீவிர திருத்தத்திற்கு எதிரான திமுகவின் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கான நோக்கத்தையும் பின்னணியையும் மக்கள் அறியாமல் இல்லை.

தேர்தல் நெருக்கத்தில் திமுகவின் இத்தகைய முன்னெடுப்பின் நோக்கம் திமுக அரசு மீது வரிசை கட்டி வரும் ஊழல் புகார்களில் இருந்து மக்களைத் திசை திருப்பும் கபட நாடக அரசியலே ஆகும். சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு எதிராக ஏற்கனவே தமிழகத்தில் முதல் குரலாக ஓங்கி ஒலித்தது, தவெகவின் குரல்தான்.

இதை நாடும் நாட்டு மக்களும் நன்றாகவே அறிவர். நாம் முதல்முதலாகக் குரல் எழுப்பிய அந்த நேரத்தில் திமுக தூங்கிக் கொண்டிருந்ததா? ஒன்றிய பாஜகவுடன் மறைமுக உறவுக் காரராக இருந்தால் மறதி மயக்கத்தில் இருந்ததா? ஏதோ இப்போது மட்டும் சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு எதிராக முதல் முறையாக விழித்துக் கொண்டது போலவும் தான் மட்டுமே ஜனநாயக உரிமையின் ஒற்றைப் பாதுகாவலன் போலவும் கபட நாடக வேடத்தைப் பூண்டுள்ளது, அப்பட்டமான ஏமாற்று வேலை. இந்த விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் என்ற பெயரில் கூட்டணிக் கட்சிகளை ஏமாற்றுவதைப் போல எல்லோரையும் ஏமாற்றிவிடலாம் என திமுக நினைக்கிறதா?

இந்தக் கேள்விகள் மக்கள் மனதிலும் எழுந்துள்ளன. எனவே திமுகவின் நாடகத்தை மக்கள் நம்பத் தயாராக இல்லை. ஜனநாயகத்திற்காகவும் மக்கள் உரிமைகளுக்காகவும் சுதந்திரமாகக் குரல் கொடுப்பதில் தவெக எப்போதும் முதல் இயக்கமாக இருக்கிறது. இதைத் தமிழக மக்கள் அனைவரும் அறிவர். ஜனநாயக மற்றும் மக்கள் உரிமைகளுக்கு எதிராகச் செயல்பட்டால் அது ஒன்றிய பாஜக அரசாக இருந்தாலும் அல்லது வேறு யாராக இருந்தாலும் சமரசமின்றி எதிர்ப்பதில் தவெக எப்போதும் போல் தீர்க்கமாக இருக்கும்.

ஆகவே, சிறப்புத் தீவிரத் திருத்தம் குறித்து மக்களுக்குத் தெளிவாக விளக்குவதற்காக தவெக சார்பாக விழிப்புணர்வுக் கருத்தரங்கம் மற்றும் தமிழகம் முழுவதும் முகாம்கள் நடத்தப்படும். தவெக மாநில, மாவட்ட, ஒன்றிய, வட்ட பகுதி, கிளை நிர்வாகிகள் என அனைவரும் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளை விழிப்போடு கண்காணிப்பர். மக்கள் நலன், ஜனநாயகம் மற்றும் உரிமைகள் சார்ந்த அனைத்திலும் மக்களுடன் மக்களாக, மக்கள் பக்கம் மட்டுமே தவெக உறுதியாக நிற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு தவெக விஜய் தெரிவித்துள்ளார்.

கோவையில் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்த நயினார் நாகேந்திரன்கோவை விமான நிலையத்தின்...
03/11/2025

கோவையில் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்த நயினார் நாகேந்திரன்

கோவை விமான நிலையத்தின் பின்புறம் உள்ள பகுதியில் காரில் ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையிலேயே இதுபோன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது பெற்றோர்களை பதைபதைக்க வைக்கிறது. இதற்கு காரணம் திமுக என்றும், திமுக திராவிட மாடல் கட்சியல்ல, பெண்களுக்கு எதிரான பாலியல் மாடல் ஆட்சி இது என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தின் பின்புறம் உள்ள பகுதியில் நேற்று இரவு 11 மணி அளவில் காரில் ஆண் நண்பருடன் 19 வயது மதிப்புமிக்க கல்லூரி மாணவி அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, அந்த வழியாக போதையில் வந்த மூன்று இளைஞர்கள் கத்தியால் காரின் கண்ணாடியை உடைத்து இளைஞரை தாக்கி விட்டு பெண்ணை தூக்கிச் சென்றுள்ளனர். இளைஞர்கள் தாக்கியதில் பலத்த காயமடைந்த வினித் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

கல்லூரி மாணவியை தூக்கிச் சென்ற மூன்று பேர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர். போலீசார் தேடுதல் பணியின்போது நிர்வாண நிலையில் இருந்த மாணவி மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பலத்த காயமடைந்த மாணவியின் ஆண் நண்பர் வினித் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் தொடர்பான தனிப்படை அமைக்கப்பட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடிய மூன்று பேரை தீவிரமாகத் தேடப்பட்டு வருகிறது. இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவை விமான நிலையம் பின்புறம் 19 வயது இளம்பெண்ணை 3 பேர் கொண்ட போதை கும்பல் ஆண் நண்பரை தாக்கிவிட்டு, பெண்ணை இழித்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

நாக்கு கூசுகிறது, சொல்லுவதற்கு வெட்கமாக உள்ளது. பாதிக்கப்பட பெண்ணை ஆடை இல்லாமல் போலீஸார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ள கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இது தமிழகத்தின் தற்போதைய கேவலமான ஆட்சியை காண்பிக்கிறது. இந்தியாவிலேயே பாதுகாப்பான, நாகரீகமான நகரம் கோவை என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், கோவையிலேயே இதுபோன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது பெற்றோர்களை பதைபதைக்க வைக்கிறது.

இதற்கு காரணம் இந்த திமுக, திராவிட மாடல் கட்சியல்ல.. பெண்களுக்கு எதிரான பாலியல் மாடல் ஆட்சி இது. கடந்த 2013 ஆம் ஆண்டு இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்றது. அப்போது கனிமொழி பெரிய போராட்டம் நடத்தினார். கரூரில் நடந்த 41 படுகொலை இரவோடு இரவாக முதல்வர் வந்தார். ஆனால், முதல்வரும், கனிமொழியும் கோவை சம்பவம் தொடர்பாக இதுவரை வாய் திறக்கவில்லை.

கோவையில் கஞ்சா விற்பனை அதிகம் என்பதால் தான் இவ்வாறு நடப்பதாக எங்கள் கட்சியினர் தெரிவிக்கின்றனர். போதைக்கு இரண்டாவது தலை நகரமாக கோவை உள்ளது. 60 சதவீதம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், இதுவரையிலும் மே மாதம் 5 ஆம் தேதி வரை 18,200 பாலியல் பலாத்காரங்கள் இந்த ஆட்சியில் நடைபெற்றுள்ளது. 6 ஆயிரம் கொலை குற்றங்கள், 31 லாக்கப் மரணம் நடந்துள்ளது. போக்சோ குற்றம் 50 சதவீதம் அதிகரித்திருக்கிறது.

நான் இதெல்லாம் சொன்னது சரியா, இல்லையா என்பது குறித்து முதல்வர் வெள்ளை அறிக்கை விட வேண்டும். பெண்களுக்கு இரவில் நடமாட பாதுகாப்பு இல்லை. இன்று மாலை கோவையில் வானதி சீனிவாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. நாளை தமிழ்நாடு முழுவது கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். பெண்களை பெற்றோர் பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும் என காவல்துறை வேண்டுகோள் விடுப்பது சரியா?.

காவல் துறை நடவடிக்கை ஏற்புடையது இல்லை. காவலர்கள் வெட்டும் சூழல் நடைபெற்று வருகிறது. மாணவிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவது திமுக ஆட்சியின் தோல்வி. நகரிகரமான ஊர் என கோவை சொல்லும்போது இப்படி நடப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இளைஞர்கள், மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமை ஆகக் கூடாது. பெற்றோர்கள், குழந்தைகள் கண்காணிக்க வேண்டும்.

பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை குண்டாஸ் சட்டத்தில் பிடித்துப் போட வேண்டும். ஆயுதக் கலாச்சாரம் தமிழ்நாட்டில் அதிகரித்து உள்ளது. கோவையில் துணை குடியரசுத் தலைவர் வருகையின் போது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுக்கு காவல் துறையின் மெத்தனப்போக்கு தான் காரணம்.
நூற்றுக்கு 200 சதவீதம் போலீசார் பாதுகாப்பு கோவையில் இல்லை என்றார்.

தொடர்ந்து வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சர்வதேச விமான நிலையத்தின் அருகே இப்படி நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவையின் மீது திமுக அரசுக்கு அக்கறை இல்லை. பெண்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகளவில் உயர்ந்துள்ளது. கோவைக்கு படிப்பு மற்றும் வேலைக்கு பெண்களை அனுப்பிய பெற்றோர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகளிர் அணி சார்பில் இன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இளம்பெண்கள் உங்களை பாதுகாத்துக் கொள்ள பயிற்சி, பெப்பர் ஸ்ப்ரே போன்றவற்றை கையில் வைத்துக் கொள்ள வேண்டும். வாக்கு அளித்த அரசு நம்மளை காப்பாற்றவில்லை. என்கவுண்டர் போட்டால் தப்பித்து விடலாம் என அரசின் மனநிலை உள்ளது. எதுவாக இருந்தாலும் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கையில் பெப்பர் ஸ்ப்ரேவுடன் களமிறங்கிய வானதி.. கோவை மாணவிக்காக பாஜக ஆர்ப்பாட்டம்கோவை விமான நிலையம் பின் பகுதியில் ஆண் நண்...
03/11/2025

கையில் பெப்பர் ஸ்ப்ரேவுடன் களமிறங்கிய வானதி.. கோவை மாணவிக்காக பாஜக ஆர்ப்பாட்டம்

கோவை விமான நிலையம் பின் பகுதியில் ஆண் நண்பருடன் காரில் இருந்த மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு அதிமுக, பாஜக, நாம் தமிழர், தவெக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக கோவை பாஜக சார்பில் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கைகளில் தீப்பந்தம், பெப்பர் ஸ்ப்ரே ஏந்தி, பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

கோவை விமான நிலையத்தின் பின்புற பகுதியில் உள்ள பிருந்தாவன் நகர் பகுதியில் நேற்று இரவு தனியார் கல்லூரி மாணவி 3 பேர் கொண்ட மர்ம நபர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். தன் ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த மாணவியை பார்த்த அந்த கும்பல், ஆண் நண்பரை ஆயுதங்களால் தாக்கி, மாணவியை கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து தப்பிவிட்டனர்.

அரசியல் கட்சிகள் கண்டனம்
இதுதொடர்பாக மாணவியின் ஆண் நண்பன் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். மாணவி இன்று அதிகாலை 4 மணியளவில் நிர்வாண நிலையில் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிந்து, 7 தனிப்படைகள் அமைத்து அந்த 3 நபர்களை தேடி வருகிறார்கள்.

காவல்துறை மற்றும் திமுக அரசு தொடர்ந்து மெத்தனமாக செயல்பட்டு வருவதாக அதிமுக, பாஜக, நாம் தமிழர், தவெக உள்ளிட்ட கட்சிகள் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளன. கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் இன்று மதியம் சம்பவம் நடந்த இடத்தில் நேரடியாக ஆய்வு செய்தார். பாஜக சார்பில் பாதிக்கப்பட்ட மாணவி, ஆண் நண்பர் குடும்பத்திற்கு நேரடியாக ஆறுதலும் சொல்லப்பட்டது.

பெப்பர் ஸ்ப்ரேவுடன் ஆர்ப்பாட்டம்
மாணவிக்கு நீதி கேட்டும், திமுக அரசை கண்டித்தும் பாஜக சார்பில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் வானதி சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது கையில் தீப்பந்தம் மற்றும் பெப்பர் ஸ்ப்ரே ஏந்தி பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது திமுக மற்றும் காவல்துறைக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன், "மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே பகுதியில் சட்ட விரோதமாக மதுபான பார் கடை இயங்கி வந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த உள்ளோம். இதுபோன்ற வழக்குகளில் காவல்துறை என்கவுன்டர் நடவடிக்கை எடுத்து முடித்து விடுகிறார்கள்.

பெண்கள் பாதுகாப்பு
இந்த வழக்கையும் என்கவுண்டர் என்று மூடி மறைக்க கூடாது. குற்றதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான் தீர்வு. காவல்துறையின் செயல்பாட்டில் மக்களுக்கு நம்பிக்கை இல்லை. குடியரசு துணைத் தலைவர் வருகையின் போது பாதுகாப்பை மீறி உள்ளே நுழைந்த இரண்டு இளைஞர்கள் யார். காவல்துறை அவர்களின் பெயரை செய்தி குறிப்பில் ஏன் போடவில்லை. கோவையில் டேட்டிங் செயலி மோசடி குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை வேண்டும்.

அந்த செயலி குறித்து மத்திய அரசிடம் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். பெண்கள் மீது வன்கொடுமை அதிகரித்துள்ளது. ஆட்சியாளர்களுக்கு டிராமா செய்ய நேரம் உள்ளது. குடும்பத்தை பார்க்க நேரம் உள்ளது. பெண்களை பார்க்க நேரம் இல்லை.. பெண்களுக்கு ஆயிரம் கொடுத்தால் மட்டும் உங்கள் பக்கம் நிற்க மாட்டார்கள். ஆட்சியில் இருக்கும் நான்கு மாதங்களாவது பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். "என்றார்.

கோவை கல்லூரி மாணவியை தூக்கி சென்று நாசம் செய்த கொடூரம்.. இதுதான் அப்பா மாடல் அரசா? கொந்தளித்த தவெககோவை விமான நிலையம் அரு...
03/11/2025

கோவை கல்லூரி மாணவியை தூக்கி சென்று நாசம் செய்த கொடூரம்.. இதுதான் அப்பா மாடல் அரசா? கொந்தளித்த தவெக

கோவை விமான நிலையம் அருகே மதுரையை சேர்ந்த கல்லூரி மாணவியை தூக்கி சென்று 3 காமுகன்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் பொதுவெளியில் சுதந்திரமாக நடமாட முடியாத அளவிற்கு, பாதுகாப்பில்லாத நிலை தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது என தமிழக வெற்றிக் கழகம் ஆதவ் அர்ஜூனா விமர்சித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தின் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகர் அருகே நேற்று இரவு 11 மணி அளவில் கல்லூரி மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் கார் அருகே நின்றபடி பேசிக்கொண்டிருந்தார்.

7 தனிப்படை அமைத்த போலீசார்
அப்போது அங்கு வந்த 3 பேர் திடீரென ஆண் நண்பரை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கிவிட்டு கல்லூரி மாணவியை தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர். இதையடுத்து அந்த நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதற்கிடையே படுகாயத்துடன் மயங்கி கிடந்த ஆண் நண்பர் அதிகாலையில் கண்விழித்த பிறகு நடந்ததை கூறி பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். மாணவி மற்றும் ஆண் நண்பருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதன்பேரில் 7 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் தமிழகம் முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்டோர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

செல்வப்பெருந்தகை கண்டனம்
கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் "அரசு தீவிர நடவடிக்கை எடுத்தாலும் கூட காவல்துறையினர் போதிய கண்காணிப்பு, விழிப்புணர்வுடன் இல்லாததே இதற்கு காரணம். பாலியல் வன்கொடுமையை தடுக்க காவல்துறை கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவியின் முழு மருத்துவ செலவை அரசு ஏற்க வேண்டும்" இவ்வாறு செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

ஆதவ் அர்ஜுனா கண்டனம்
கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. கோவையில் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் மாணவி, நேற்று ஞாயிறு இரவு, கோவை விமான நிலையம் அருகே தனது நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, மதுபோதையில் அங்கே வந்த மூன்று பேர் காரில் அமர்ந்திருந்த அந்த மாணவியின் நண்பரைக் கடுமையாகத் தாக்கிவிட்டு, மாணவியைக் கடத்திச் சென்றுள்ளனர்.

பிறகு, அதே பகுதியில் கூட்டுப் பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். நீண்ட நேரத்திற்குப் பிறகு, மயக்கம் தெளிந்த ஆண் நண்பர் தனது செல்போன் மூலமாக பீளமேடு காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பெண்கள் பொதுவெளியில் சுதந்திரமாக நடமாட முடியாத அளவிற்கு, பாதுகாப்பில்லாத நிலை தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது என்பதற்கு இந்த சம்பவம் மற்றொரு சான்றாக உள்ளது.

போதைப் பொருள் பயன்பாடு
பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, பொதுவெளியில் அவர்கள் அச்சமின்றி பயணிக்கின்ற பாதுகாப்பான சூழலை ஒரு அரசு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டியது கடமை. ஆனால், தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறை தொடங்கி, தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்கு இந்த அரசின் மீதான அச்சத்தைப் பெண்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

இந்த குற்றச் செயல்களுக்குக் காரணமாக, பெரும்பாலான வன்முறைகளுக்குக் காரணமான மது மற்றும் போதைப் பொருட்களின் பயன்பாடுகள் தமிழகம் முழுவதும் நீக்கமற நிறைந்துள்ளது. அதைக் கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறையோ, அதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வரும் பாதிக்கப்பட்ட மாணவி அவர்கள் விரைவில் நலம்பெறவும், குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்து கைது செய்து, சட்டத்தின் முன் அவர்களுக்கு கடுமையான தண்டனையை உறுதிப்படுத்துமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

அப்பா மாடல் அரசு
தமிழக வெற்றிக கழக கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர் அருண்ராஜ் கூறுகையில், "பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாறியுள்ளது என்பதற்கு, கோவை தனியார் கல்லூரி மாணவி மீது நிகழ்த்தப்பட்ட கூட்டு பாலியல் வன்முறை மற்றுமொரு சாட்சி.

போதை கலாச்சாரத்தால் தமிழகத்தின் இளைஞர்கள், மாணவர்கள் சீரழிந்து வருகிறார்கள் என்று பலமுறை வலியுறுத்தியும் இந்த போலி 'அப்பா' மாடல் அரசு எந்த ஒரு நடவடிக்கையும் முறையாக எடுக்காத காரணத்தால், போதையின் பாதையில் சென்ற அந்த கூட்டம் நேற்று (2-11-2025) இரவு கோவை மாநகர் விமானநிலையம் ஒட்டியுள்ள பகுதியில், தனியார் கல்லூரி மாணவியின் நண்பரை தாக்கி அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தமிழ்நாட்டையே அதிரவைத்துள்ளது!

தமிழ்நாட்டின் மகள்களுக்கு பாதுகாப்பு தர முடியாத தி.மு.க., அரசு வெட்கப்பட வேண்டும்! குற்றவாளிகள் அச்சமின்றி சுற்றுகிறார்கள், ஏனெனில் முதல்வரின் இரும்புக் கை, தமிழ்நாட்டு மகள்களை அல்ல... தி.மு.க. அறிவாலய அமைச்சர்களை அமலாக்கத்துறையில் இருந்து காப்பாற்ற தான் பயன்படுகிறது.. தி.மு.க., ஆட்சி அராஜகம் செய்பவர்களுக்கான ஆட்சி என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. தமிழ்நாட்டில் காவல்துறை ஒன்று இருக்கிறதா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முதல்வரின் காலணிக்கு போலீஸ் காவல்? பஞ்சாபில் வெடித்த புதிய சர்ச்சை!பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் குருத்வாரா சென்றபோது, அ...
03/11/2025

முதல்வரின் காலணிக்கு போலீஸ் காவல்? பஞ்சாபில் வெடித்த புதிய சர்ச்சை!

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் குருத்வாரா சென்றபோது, அவரது ஷூவைப் பாதுகாக்க காவலர்கள் நியமிக்கப்பட்டதாக வெளியான உத்தரவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் பகவந்த் மானும் இந்த விமர்சனங்களைக் கிண்டல் செய்து நிராகரித்துள்ளார்.

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ஸ்ரீ முக்த்சர் சாகிப் குருத்வாராவுக்குச் சென்றபோது, அவரது ஷூவை பாதுகாக்க இரண்டு காவலர்களை நியமிக்கக் கோரும் உத்தரவு வெளியாகி சர்ச்சையாக வெடித்துள்ளது.

எதிர்க்கட்சிகள் இந்த உத்தரவைப் பயன்படுத்தி ஆளும் ஆம் ஆத்மி அரசை (AAP) கடுமையாகத் தாக்கி வருகின்றன. ஆனால், பஞ்சாப் காவல்துறை இந்தச் செய்திகளை "முற்றிலும் போலியானவை" என்று கூறி நிராகரித்துள்ளது.

காலணிக்குக் காவல்?

முக்த்சர் காவல் துறையால் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் அந்த உத்தரவில், தலைமை காவலர் ரூப் சிங் மற்றும் காவலர் சர்பத் சிங் ஆகியோர் சாதாரண உடையில், 7-ஆம் எண் நுழைவாயிலில் பஞ்சாப் முதல்வரின் ஷூவைப் பாதுகாக்கும் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. சில மணி நேரங்களிலேயே, எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆம் ஆத்மி அரசுக்கு எதிராகக் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். காவல் துறையைத் தனிப்பட்ட பணியாளர்களாக மாற்றிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

எதிர்க்கட்சிகளின் தாக்குதல்

காவல்துறையிடன் இந்த உத்தரவு ஆம் ஆத்மி அரசின் 'விஐபி கலாச்சாரத்துக்கு எடுத்துக்காட்டாகக் உள்ளது என்று விமர்சிக்கின்றனர். மத்திய அமைச்சர் ரவ்னீத் பிட்டு, "இந்த உத்தரவு முதல்வரின் காலணிகளுக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில், சாதாரண மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும் என்பதைக் காட்டுகிறது" என்று கிண்டல் செய்தார்.

சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ. பர்கட் சிங், "இப்போது முதல்வரின் காலணிகளுக்கும் சிறப்பு போலீஸ் பாதுகாப்பா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பகவந்த் மான் கிண்டல்

இதற்கிடையில், குரு கோவிந்த் சிங் ஸ்டேடியத்தில் ரூ.138.83 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு (AMRUT 2.0 திட்டம்) அடிக்கல் நாட்டிப் பேசிய முதல்வர் பகவந்த் மான், இந்த விமர்சனங்களை நிராகரித்தார்.

"இந்த அரசியல் எதிரிகளிடம் பஞ்சாப் வளர்ச்சிக்கான செயல்திட்டம் ஏதும் இருக்கிறதா? அவர்களுக்கு செருப்புகள் ஷூக்களும் ஒரு பிரச்சினையாக மாறிவிட்டன," என்று பகவந்த் மான் கேலி செய்தார்.

பீகாரில் பேசிய பிரதமர்..அதே கருத்தை தமிழகத்தில் வந்து சொல்ல முடியுமா?-முதல்வர் சவால்!பிரதமர் மோடி அவர்கள் பீகாரில் பேசிய...
03/11/2025

பீகாரில் பேசிய பிரதமர்..அதே கருத்தை தமிழகத்தில் வந்து சொல்ல முடியுமா?-முதல்வர் சவால்!

பிரதமர் மோடி அவர்கள் பீகாரில் பேசிய அதே கருத்தை தமிழகத்தில் வந்து மக்கள் முன்னிலையில் கூறத் துணிசல் இருக்கிறதா என முதல்வர் மு.க. ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணியின் இல்லத்தில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்க, சென்னை விமான நிலையத்திலிருந்து தனியார் விமானத்தில் சேலம் சென்றார். அங்கிருந்து வாகனம் மூலம் தர்மபுரிக்குப் பயணித்த அவர், திருமண நிகழ்வில் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.பின்னர் திருமண நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், சென்னையில் நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தி விடுத்து , இன்று திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நானும் நண்பர் திருமாவளனும் வந்திருக்கிறோம்.

திமுக அனைத்து கட்சி கூட்டம்

நேற்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், பல்வேறு கருத்துக்களை ஆலோசனைகள் எல்லாம் வழங்கி இருக்கிறோம் முக்கியமான ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றி இருக்கிறோம். அது என்ன என்பது உங்களுக்கும் தெரியும். அடுத்த ஆண்டும் தமிழகத்தில் 2026 ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாடு தேர்தலை அடிப்படையாக வைத்து வாக்காளர் பட்டியல்ல ஏற்பட்டிருக்கக் கூடிய எஸ் ஐ ஆர் என்ற ஒரு திட்டத்தை அவர்கள் மையப்படுத்திச் சீராய்வு என்ற பெயரில் சதிச் செயலைத் தேர்தல் ஆணையம் செய்வதற்குத் திட்டமிட்டு இருக்கிறது.

அதைத் தடுப்பதற்கான முயற்சியில் நாம் நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து பேசி தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறோம் .ஆலோசனை நடத்திய அத்தனை பேரும்,நேர்மையாகத் தேர்தல் நடத்த வேண்டும். உண்மையான வாக்காளர் பட்டியல் அவசியம் என்ற கருத்தை வலியுறுத்திப் பேசியிருக்கிறார்கள். அது மட்டும் அல்ல அதற்கு உரிய அவகாசக் காலத்தைக் கொடுக்க வேண்டும். பதற்றம் இல்லாமல் சூழலில் தான் இதைச் செய்ய வேண்டும். அப்படி இல்லாமல் தேர்தலுக்கு என்ன சில மாதங்களே இருக்கக்கூடிய இந்தச் சூழ்நிலையில், முழுமையான திருத்தப் பணிகளைச் செய்யத் தேர்தல் ஆணையம் இணைகிறது .

சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம்

அதற்குக் காரணம் உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம் அது என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர்,இதுபோன்ற நடைமுறைகளை பீகார் மாநிலத்தில் தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்தியது.தற்பொழுது இதுபோன்ற நடவடிக்கையில் மற்ற மாநிலங்களில் ஈடுபடத் தேர்தல் ஆணையம் முயற்சிகளைச் செய்து வருகிறது. பீகாரில் நடந்த போது தமிழகத்திலிருந்துமுதல்களாகஎதிர்ப்புக் குரல் கொடுத்தது நாம் தான்.

அதுமட்டுமின்றி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், ராகுல் காந்தி மற்றும் பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி (ஆர்.ஜெ.டி) தலைவர் எஸ். ஆர் ருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் , தேர்தல் ஆணையம் அதற்குரிய பதிலைச் சொல்லவில்லை. உரிய விளக்கத்தையும் கொடுக்கவில்லை. தொடர்ந்து பீகார் மாநிலத்தில் நடத்தப்பட்ட நடைமுறைகளைத் தமிழ்நாட்டிலும் செயல்படுத்தத் தேர்தல் ஆணையம் மும்மரம் காட்டி வருகிறது.

தேர்தல் ஆணையம் திட்டமிட்ட சதி

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில், எதிர்க்கட்சியான அதிமுக உள்ளிட்ட சில கட்சிகள் புறக்கணித்தது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி இந்த விவகாரத்திலும் இரட்டை வேடத்தில் நடந்து வருகிறார் என முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். பாஜக அரசின் அழுத்தத்தால் பழனிசாமி தேர்தல் ஆணையத்திற்கே பயப்படுகிறார் என்றும் அவர் கூறினார்.

பீகார் மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வேலைக்காக வரும் தொழிலாளர்கள் இங்குத் தங்களுக்கு நல்ல வாய்ப்புகள், பாதுகாப்பான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். ஆனால், பீகாரில் வாக்கு அரசியலுக்காகப் பிரதமர் நரேந்திர மோடி நாடகமாடி வருகிறார் எனவும் முதல்வர் ஸ்டாலின் விமர்சித்தார்.

மேலும், “பீகாரில் பிரதமர் மோடி கூறிய அதே கருத்தைத் தமிழகத்தில் வந்து மக்கள் முன்னிலையில் கூற முடியுமா?” என அவர் சவால் விட்டார். எத்தனை அவதூறுகள் நமக்கெதிராக பரப்பப்பட்டாலும், 2026 தேர்தலில் திமுக தலைமையிலான ஆட்சி மீண்டும் உருவாகும் என்பதை மக்கள் தீர்மானித்து விட்டனர் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ரகசியமாக அணு ஆயுத சோதனை நடத்திய பாகிஸ்தான்.. ட்ரம்ப் பரபரப்புத் தகவல்!ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் மறைமுகமாக...
03/11/2025

ரகசியமாக அணு ஆயுத சோதனை நடத்திய பாகிஸ்தான்.. ட்ரம்ப் பரபரப்புத் தகவல்!

ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் மறைமுகமாக அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருவதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், உலகின் சில நாடுகள் ரகசியமாக நிலத்தடி அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருவதாக
டிரம்ப் கூறினார். ரஷ்யா, சீனா சோதனைகளை செய்கின்றன. ஆனால் அவர்கள் இதைப் பற்றிப் பேசுவதில்லை. நாங்கள் ஒரு திறந்த நாடு, எங்களிடம் சுதந்திரமான ஊடகம் உள்ளது. அதனால் நாங்கள் இதை வெளிப்படையாகச் சொல்கிறோம். வட கொரியா சோதனை செய்கிறது.பாகிஸ்தானும் செய்கிறது. எனவே நாமும் இதை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது,” கூறியுள்ளார்.

ரஷ்யா, சீனா,வட கொரியா..

அமெரிக்கா 30 ஆண்டுகளுக்குப் பிறகு அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்தார். இதற்கு காரணம் மற்ற நாடுகள் தொடர்ந்து அணு சோதனைகளை செய்து கொண்டிருப்பதே. நாங்கள் மட்டும் இதைச் செய்யாமல் இருக்க முடியாது. மற்ற நாடுகள் செய்கின்றன என்றால், நாமும் செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது என்று கூறினார்.

அணு ஆயுதங்களின் எண்ணிக்கையில் உலகின் மிகப்பெரிய சக்தியாக அமெரிக்கா இருப்பதாக டிரம்ப் தெரிவித்தார். “அமெரிக்காவிடம் உலகை 150 மடங்கு அழிக்கக்கூடிய அளவுக்கு அணு ஆயுதங்கள் உள்ளன. இதே சமயத்தில், ரஷ்யா புதிய அணு ஆயுதங்களை உருவாக்கி சோதனை செய்து வருவதாகவும், சீனாவும் இதேபோன்ற முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் டிரம்ப் சுட்டிக்காட்டினார்.

இந்த கருத்து சர்வதேச அளவில் பல்வேறு விளக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், அணு ஆயுத சோதனைகளைத் தடை செய்யும் CTBT (Comprehensive Nuclear-Test-Ban Treaty) ஒப்பந்தம் பல நாடுகளால் கையெழுத்திடப்பட்டுள்ள நிலையில், இவ்வாறான சோதனைகள் அந்த ஒப்பந்தத்தின் விதிகளை மீறுவதாகும். இதனால் உலகளாவிய அமைதிக்கும், பாதுகாப்புக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

நிலத்தடியில் அணு ஆயுத சோதனை

அணு ஆயுத சோதனைகள் நடைபெறும் போது நிலத்தின் அடியில் மிகப் பெரிய வெடிப்பு ஏற்படுகிறது. இது பல நேரங்களில் சிறிய அளவிலான நிலநடுக்கத்திற்கும் காரணமாகிறது. இதனால், சோதனைகள் ரகசியமாக நடத்தப்பட்டாலும், புவிசார் கண்காணிப்பு அமைப்புகள் (Seismic Networks) அவற்றை கண்டறிய முடியும். எனவே, டிரம்ப் கூறியபடி பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் சோதனை செய்துள்ளனவா என்ற கேள்வி, இவ்வாறான தொழில்நுட்ப தரவுகள் மூலம் உறுதி செய்யப்பட வேண்டியது முக்கியம்.

இந்த குற்றச்சாட்டு வெளிவந்த நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அமெரிக்காவுடன் இருந்த புளூட்டோனியம் ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளார். அந்த ஒப்பந்தம் இராணுவ பயன்பாட்டுக்கான அணு உற்பத்தியை கட்டுப்படுத்தும் வகையில் இருந்தது. இதனால் அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே புதிய பதற்றம் உருவாகியுள்ளது.

பாகிஸ்தான் குறித்த டிரம்பின் குற்றச்சாட்டு

மறுபுறம், பாகிஸ்தான் குறித்த டிரம்பின் குற்றச்சாட்டு தென்னாசியப் பிராந்தியத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா–பாகிஸ்தான் உறவுகள் ஏற்கனவே பதட்டமான நிலையில் உள்ளன. இந்நிலையில், பாகிஸ்தான் அணு சோதனை செய்கிறது என்ற தகவல் வெளிவந்தால், பாதுகாப்பு சூழல் மேலும் மோசமடையும் வாய்ப்பு அதிகம்.

டிரம்ப் கூறியுள்ள கருத்துக்கள் நிஜமானவையாக இருந்தால், அது உலகளாவிய அமைதிக்கு ஆபத்தாக அமையக்கூடும். ஆனால், இதுவரை எந்த சர்வதேச அமைப்பும் இதனை உறுதிப்படுத்தவில்லை. எனவே, நாடுகள் வெளிப்படையாக விளக்கம் அளிக்கவும், ஐநா அமைப்புகள் விசாரணை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முடிவில், டிரம்ப் கூறிய இச்செய்தி, அணு ஆயுதப் போட்டியை மீண்டும் தூண்டும் அபாயத்தை உருவாக்கியுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டே இருந்தால், உலக அமைதி மீண்டும் ஆபத்தில் சிக்கக்கூடும். இதனைத் தவிர்க்க, அரசியல் பக்கங்கள் வாக்குவாதத்தில் அல்ல, பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டியது தான் தற்போதைய தேவை.

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when News4 Tamil Digital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News4 Tamil Digital:

Share