News4 Tamil Digital

News4 Tamil Digital Online Tamil News | Tamil Nadu Political News | Tamil Cinema News | Sports News Tamil | Cricket News Tamil

தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன?அமைச்சர் முகமது பர்வேஸ் உடன் இணைந்...
30/05/2026

தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன?

அமைச்சர் முகமது பர்வேஸ் உடன் இணைந்து விராலிமலை முருகன் கோயில் வைகாசி விசாக தேரோட்டத்தை அதிமுக எம்எல்ஏ விஜயபாஸ்கர்தொடங்கி வைத்துள்ளார். கடந்த சில நாட்களாகவே விஜயபாஸ்கர் தவெகவில் இணையப் போவதாக சொல்லப்பட்டு வரும் சூழலில், தற்போது அமைச்சருடன் கோயில் நிகழ்ச்சியில் இணைந்து பங்கேற்றிருப்பது விவாதமாகி இருக்கிறது.

முன்னாள் அமைச்சரும், விராலிமலை தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கர், தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப் போகிறார் என்ற அரசியல் யூகங்கள் கடந்த சில நாட்களாகத் தமிழக அரசியலில் காட்டுத்தீயாகப் பரவி வரும் சூழலில், புதுக்கோட்டையில் இன்று நடந்த ஒரு அரசு ஆன்மீக நிகழ்வு ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது.

விராலிமலை பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் வைகாசி விசாகப் பெருந்திருவிழா தேரோட்ட நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் யாரும் எதிர்பாராத விதமாக, தமிழக அமைச்சர் முகமது பர்வேஸ் மற்றும் அதிமுக எம்.எல்.ஏ சி. விஜயபாஸ்கர் ஆகிய இருவரும் ஒன்றாக இணைந்து வடம்பிடித்துத் தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைப் புறக்கணித்துவிட்டு, தவெக தலைவர் விஜய் முன்னிலையில் விஜயபாஸ்கர் கட்சியில் இணையவுள்ளார் என அவரது ஆதரவாளர் வட்டாரங்களிலேயே கிசுகிசுக்கப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில் ஆளுங்கட்சி அமைச்சருடன் அவர் இணக்கமாக வடம் பிடித்திருப்பது புதிய விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

தேரோட்ட விழாவின் போது அமைச்சர் முகமது பர்வேஸ் மற்றும் சி. விஜயபாஸ்கர் ஆகிய இருவரும் நீண்ட நேரம் மிக நெருக்கமாக அரசியல் மற்றும் தொகுதி நிலவரங்கள் குறித்துப் பேசியபடி சென்றதாகக் கூறப்படுகிறது. பாரம்பரியமான கோயில் திருவிழா என்பதால், விராலிமலை தொகுதி எம்எல்ஏ என்ற முறையில் விஜயபாஸ்கர் இதில் கலந்து கொண்டார். எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை என அவரது தரப்பு கூறுகிறது.

ஆனால் தவெகவில் இணைகிறார் என்ற பேச்சு அதிகமாக இருக்கும் சூழலில், விஜயபாஸ்கர் எளிதாக இந்த நிகழ்வை புறக்கணித்திருக்கலாம். இதனால் விஜயபாஸ்கர் அதிமுகவில் இருந்து விலகுவது 100% உறுதி என்று பார்க்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியின் பழிவாங்கல் நடவடிக்கைக்குப் பயந்து அவர் தவெகவுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தார்.

தற்போது ஆளுங்கட்சி அமைச்சருடன் இவ்வளவு நெருக்கம் காட்டுவதைப் பார்த்தால், தன் மீதான லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குகளில் இருந்து தப்பிக்க அவர் திமுகவை நோக்கித் தனது பார்வையைத் திருப்புகிறாரா அல்லது தவெகவில் இணைவதற்கு முன்னதாக ஆளுங்கட்சியுடன் சுமுக உறவை மெயின்டெய்ன் செய்கிறாரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

தவறிழைத்த அர்ச்சகரை தண்டித்தால் நீங்கள் ஏன் கொந்தளிக்கிறீர்கள்? அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ரமேஷ் கேள்விதூத்துக்குடி மாவட்டம...
30/05/2026

தவறிழைத்த அர்ச்சகரை தண்டித்தால் நீங்கள் ஏன் கொந்தளிக்கிறீர்கள்? அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ரமேஷ் கேள்வி

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய கோயிலில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் உங்களுக்கு ஏன் கொந்தளிப்பும் பதற்றமும் வருகிறது என அனிதா ராதாகிருஷ்ணனுக்கு இந்து அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருச்செந்தூர் கோயிலில் முறைகேடு செய்ததாக அர்ச்சகர் மீது ரமேஷ் நடவடிக்கை எடுத்ததற்கு திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்திருந்தார். அதற்கு ரமேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அனிதா ராதாகிருஷ்ணன் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: புகழ்பெற்ற அருள்மிகு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு வருகை தருகிறார்கள்.

திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற சுவாமி தரிசனம் பெறுகின்றனர். வைகாசி விசாகத் திருவிழா நாளான இன்று சுவாமி தரிசனத்திற்காக விரதம் இருந்து காவடி ஏந்தி பல நாட்கள் கால்நடையாக நடந்து வந்தும் சுவாமி தரிசனம் செய்து வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர்.

இந்நிலையில் திடீர் ஆய்வு என்ற பெயரில் புதியதாக பொறுப்பேற்ற அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் காலம் காலமாக பக்தர்களுக்கு சேவை செய்து வரும் திரு சுதந்திர அர்ச்சகர் சமுதாயத்தை சார்ந்த அர்ச்சகர்களை இழிவு படுத்தியது மிகவும் கண்டனத்துக்குரியது

பல நூற்றாண்டுகளாக திருச்செந்தூர் திருக்கோயிலில் வேண்டுதலுடன் வருகின்ற பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்கான வழிகாட்டுதலும் உதவியும் திரு சுதந்திர அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர். பல வெளியூர்களிலிருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் பல்வேறு குடும்பங்களுக்கு கட்டளை ஐயர்களாக திரு சுதந்திர அர்ச்சகர்கள் மரபு வழி பொறுப்பை நிறைவேற்றி வருகின்றனர்.

அறநிலையத்துறையைச் சார்ந்தவர் அல்லாத திரு சுதந்திர அர்ச்சகர்கள் காலம் காலமாக மரபு வழியாக இந்த சுவாமி தரிசன உதவியை செய்து வருகின்றனர் பக்தர்கள் தரும் தட்சணையை பெறுகின்றனர் இந்த நிலையில் திரு சுதந்திர அர்ச்சகர்கள் செய்யும் ஆன்மீகப் பணியை இழிவுபடுத்தி உள்ளார் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்.

அறநிலையத்துறை அமைச்சரின் இந்த செயல் திரு சுதந்திர அர்ச்சகர் சமுதாயத்தினரிடம் பெரும் மனவேதனையை ஏற்படுத்தி உள்ளது மேலும் உள்ளூர் மக்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கான வழிமுறை பற்றிய எந்த அறிவிப்பும் வெளியிடாதது சரியானது அல்ல என்று ஊர் மக்கள் கருதுகின்றனர்.

திருச்செந்தூர் தொகுதி அனைத்து சமுதாய மக்களின் நலனை வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கு ஏழாவது முறையாக வெற்றி பெற்ற சட்டசபை உறுப்பினர் என்ற முறையில் எனது பணி இருந்து வரும் நிலையில் திரு சுதந்திர அர்ச்சகர் சமுதாயத்தை இழிவு படுத்தியதோடு அருள்மிகு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் புகழை சிறுமைப்படுத்திய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷுக்கு எனது வன்மையான கண்டனத்தை மீண்டும் அழுத்தமாக பதிவு செய்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அனிதா ராதாகிருஷ்ணன் தனது அறிக்கையில் ரமேஷின் சமூகத்தை குறிப்பிட்டிருந்த நிலையில் இதுகுறித்து அமைச்சர் ரமேஷ் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: மாண்புமிகு திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா R.ராதாகிருஷ்ணன் அவர்களே (உங்களை போல் பெயருக்கு பின்னால் சாதிப் பெயர் போடும் வழக்கம் உண்மையில் பெரியாரை பின்பற்றுவர்களுக்கு கிடையாது) மக்களை சுரண்டி பிழைப்பது யாராக இருந்தாலும் சாதி மத பாகுபாடு இன்றி நடவடிக்கை எடுக்க தான் மக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்துள்ளனர்.

பக்தர்களிடம் சட்டத்துக்கு புறம்பாக பணம் பெற்றுதான் சேவை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை, அப்படி செய்வது சேவையும் இல்லை, அதை எந்தக் கடவுளும் செய்ய சொல்லவும் இல்லை.

நேற்று வரை சாதியை வைத்து ஆதரவாக செயல்படுகிறேன் என்று திமுகவினர் பேசினீர்கள். இன்று அதே சாதியை சார்ந்தவர்களை அவமதித்து விட்டதாக பேசுகிறீர்கள்.

தவறு செய்தவர்களை தண்டித்தால் தங்களுக்கு எதற்காக திடீர் கொந்தளிப்பும் பதற்றமும் வருகிறது என்பது தெரியவில்லை.

இன்னும் பல முறைகேடுகள் திருச்செந்தூர் திருக்கோயிலில் நடந்து வருவதை விரைவில் வெளிக்கொணர்வேன், அதில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். அது யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! என தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விரைவு தரிசனத்திற்கு பணம் பெறுவதாக வந்த புகாரை அடுத்து மாஸ்க் அணிந்து கொண்டு ஆய்வுக்கு சென்ற இந்து அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ், அங்கிருந்த அர்ச்சகரிடம் விரைவு தரிசனத்திற்கு எவ்வளவு கட்டணம் என கேட்டதற்கு ஒருவருக்கு ரூ 1000 என அவர் தெரிவித்தாராம்.

உடனே "நாங்கள் 4 பேர் இருக்கிறோம்" என ரமேஷ் சொன்னதும் அந்த அர்ச்சகர் ஒரு ஜிபே எண்ணை அனுப்பி ரூ 4000 செலுத்துமாறு கூறினாராம். அதன்படி ரமேஷும் பணத்தை செலுத்தினாராம். இதையடுத்து கோயில் நிர்வாக அலுவலகத்தில் ஆய்வு செய்த போது ரமேஷ் இந்த ரூ 4000 முறைகேடு குறித்து அந்த அர்ச்சகரை கண்டித்தாராம்.

இதையடுத்து அந்த அர்ச்சகர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார் ரமேஷ். ஆனால் அவரிடம் இருந்து மன்னிப்பு கடிதம் வாங்கியதாக தகவல்கள் கிடைத்தன. ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் வீல் சேருக்காக லஞ்சம் பெற்றதாக ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் அர்ச்சகர் மீது அமைச்சருக்கு ஏன் கரிசனம், குறிப்பிட்ட சமூகத்தினர் மீது மட்டும் அவர் நடவடிக்கை எடுக்க மாட்டாரா என்ற கேள்வி எழுந்தது. அர்ச்சகர் ஐயப்பன் பூஜை செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. அவருக்கு உடந்தையாக இருந்த இரு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

ஜூன் முதல் டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்! காலி பாட்டில் கையில் வாங்க வேண்டாம்..அமைச்சர் விக்னேஷ் உறுதிடாஸ்மாக் கடைகளில் நீ...
30/05/2026

ஜூன் முதல் டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்! காலி பாட்டில் கையில் வாங்க வேண்டாம்..அமைச்சர் விக்னேஷ் உறுதி

டாஸ்மாக் கடைகளில் நீண்டகாலமாக இருந்து வரும் காலி ம*துபாட்டில் வசூல் மற்றும் ஊழியர்கள் ஸ்டிக்கர் ஒட்டும் நடைமுறைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். ஜூன் மாதத்திற்குள் காலி பாட்டில்களை ஊழியர்கள் கையில் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது என்றும், ம*துபான உற்பத்தி நிலையங்களிலேயே ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வரும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் அமைச்சர் விக்னேஷை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினர். பின்னர் ஊழியர்கள் மத்தியில் பேசிய அமைச்சர், டாஸ்மாக் துறை பல ஆண்டுகளாக தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு வருவதாகவும், அந்த நிலையை மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

ஜூன் மாதத்திற்குள் காலி ம*து பாட்டிலை ஊழியர்கள் கையில் வாங்க வேண்டிய தேவை இருக்காது. அது தொடர்பாக பேசிக்கொண்டு இருக்கின்றோம் எனவும், ம*து பாட்டிலில் ஊழியர்கள் ஸ்டிக்கர் ஒட்டாமல், மதுபாட்டில் தயாரிப்பின் போதே ஸ்டிக்கர் ஒட்டி வருவது போன்ற பணிகளை செய்து கொண்டிருக்கிறோம் என டாஸ்மாக் ஊழியர்கள் மத்தியில் மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷை நேரில் சந்தித்து தங்கள் கோரிக்கைகள் குறித்து நேற்று மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் விக்னேஷ் டாஸ்மாக் ஊழியர்கள் மத்தியில் பேசினார். அப்போது, பார் நடத்துபவர்களை எந்தெந்த இடத்தில் கட்டுப்படுத்த வேண்டும் என்பது தெரியும். மதுவிலக்கு துறை தான் இருப்பதிலேயே புறக்கணிகப்பட்ட, ஒதுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட துறையாக இருக்கிறது.

டாஸ்மாக் துறை என்றால் அதை பார்ப்பதிலேயே ஏளனமாக பார்க்கிறார்கள். எனக்கே இப்படி என்றால் உங்களுக்கு குழந்தைகள் எங்க அப்பா டாஸ்மாக்கில் வேலை செய்கின்றார் என்று சொல்வது கஷ்டமாக இருக்கும் எனவும். டாஸ்மாக் ஆரம்பித்ததன் நோக்கமே கள்ளச் சாராயத்தை ஒழிக்க வேண்டும். மக்கள் வேறு பாதையில் சென்று விடக்கூடாது என்பதற்காகத்தான்.

வருவாய் மட்டுமே என்பது நோக்கம் அல்ல. 23 ஆண்டுகளாக டாஸ்மாக் என்றாலே சம்பாதிப்பதற்கும், தவறு செய்வதற்கு மட்டும்தான் இந்தத் துறை என்று மாற்றிவிட்டார்கள். பத்து ரூபாய் பாட்டிலுக்கு வாங்கினாலும், அந்த பாட்டிலில் இருந்து 1 ரூபாய், அல்லது 1.5 ரூபாய் உங்களுக்கு வரும். மற்றவை வேறு யாருக்கோ செல்கிறது.

மற்றவர்களுக்கு சம்பாதித்து கொடுத்துவிட்டு பழி வாங்குவது நீங்கள் தான். அதனால்தான் முதலில் பாட்டிலுக்கு பத்து ரூபாயை ஒழிக்க வேண்டும். பலர் இதை தவறாக புரிந்து கொண்டார்கள். நீங்கள் வந்த உடனேயே பத்து ரூபாய் வாங்கத்தானே செய்கின்றார்கள் என்கிறார்கள். நாம் டெபாசிட் அமௌன்ட் ஸ்டிக்கருக்கு பத்து ரூபாய் வாங்க வேண்டும். அதற்கு மேல் 10 ரூபாய் வாங்க கூடாது.

ஜூன் மாதத்திற்குள் அந்த டெபாசிட் தொகையையும், பாட்டிலையும் நீங்கள் கையில் வாங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். அது தொடர்பாக பேசிக்கொண்டு இருக்கின்றோம். படிப்படியாக ஊதிய உயர்வு வழங்கவும், பாட்டிலில் ஸ்டிக்கரை ஊழியர்கள் ஒட்டாமல் ம*துபாட்டில் தயாரிப்பின் போதே ஸ்டிக்கர் ஒட்டி வருவது போன்ற பணிகளை செய்து கொண்டிருக்கிறோம்.

எனக்கு வேறு எந்த வேலையும் இல்லை. எந்த நோக்கமும் இல்லை. தமிழகத்தில் உள்ள 4,600 பார்களையும் நானே எடுத்துக் கொண்டு, 3600 பார்களை மற்றவர்களுக்கு கொடுப்பேன் என எதுவும் இந்த ஆட்சியில் இருக்காது. இதுபோன்ற தவறுகளை எல்லாம் ஒழிக்க வேண்டும் என முதல்வர் சொல்லியிருக்கிறார்.
அமைச்சராகி இந்த எட்டு நாட்களாக நன்றாக படித்திருந்தால், ஐஏஎஸ் கூட ஆகியிருப்பேன். எட்டு நாட்களாக அவ்வளவு விஷயங்கள் படித்திருக்கிறேன்.

டாஸ்மாக் உருவான காலத்தில் இருந்து, முன்பு எப்படி இருந்தது, எப்படி எல்லாம் மாறி இருக்கின்றது என்பது முதல் படித்து இருக்கின்றேன். ம*து குடிப்பவர்களை மட்டுமின்றி, டாஸ்மாக் ஊழியர்களையும் இது பாதித்து இருக்கிறது. குடிப்பவர்கள் ம*துவிற்கு அடிமையானது போல நமது ஆட்கள் சில விஷயங்களுக்கு அடிமையாகி இருக்கிறார்கள். அவர்களையும் மீட்க வேண்டிய நிலை வேண்டி இருக்கிறது.

அது நிச்சயம் நடக்கும். அரசுக்கு வருவாய் மட்டுமல்ல, ஒரு கண்ணியமான துறையாக கேரளா, கர்நாடகா, ஆந்திராவைப் போல சக தொழிலாளர்கள் பார்க்கும் வகையில் டாஸ்மாக் துறையை செயல்படுத்துவோம் என்று ஊழியர்கள் மத்தியில் அமைச்சர் விக்னேஷ் பேசினார்.

முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் முதலமைச்சராக விஜய் ப...
30/05/2026

முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்

முதலமைச்சராக விஜய் பதவியேற்று பல நாட்கள் ஆன பின்னரும், இன்னமும் மரியாதை நிமித்தமாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, முதல்வரை சந்திக்காமல் இருப்பது, மாநகராட்சி நிர்வாகம்-மாநில அரசு நிர்வாகத்திற்கு இடையே மோதலை ஏற்படுத்தும் சூழலை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இது குறித்து துணை மேயர் மகேஷ் விளக்கமளித்துள்ளார்.

தினமணி செய்தி ஊடகத்திற்கு பிரத்யேக பேட்டியளித்திருக்கும் துணை மேயரும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான மு.மகேஷ்குமார், தவெக அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க இருப்பதாக கூறியிருக்கிறார்.

என்ன பஞ்சாயத்து?
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. ஆனால், சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை, மேயர், துணை மேயர், மண்டல தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள் என அனைத்து பொறுப்பிலும் திமுகவினர் இருக்கினற்னர். மாநகராட்சிக்கு உட்பட்ட மொத்தம் 200 வார்டுகளில் 153 வார்டுகளில் திமுகதான் வெற்றி பெற்றிருந்தது.

எனவே இன்று வரை முதலமைச்சர் விஜய் மேயர், துணை மேயர் என யாரும் சென்று சந்திக்கவில்லை. நிர்வாக ரீதியில் பார்த்தால் நகராட்சி நிர்வாகத்துறை முதல்வர் வசம்தான் இருக்கிறது. ஆனால் நிர்வாக பொறுப்பில் இருக்கும் மேயர் உள்ளிட்டோர் விஜய்யை சந்திக்கவில்லை. இதனால், மாநகராட்சி நிர்வாகத்திற்கும், மாநில அரசு நிர்வாகத்திற்கும் மோதல் ஏற்படும் சூழல் உருவாகியிருக்கிறது.

துணை மேயர் சொல்வது என்ன?
இப்படி இருக்கையில்தான் இந்த விவகாரம் குறித்த துணை மேயர் பேட்டியளித்திருக்கிறார். அதில் ஏன் முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் மேயர் உள்ளிட்ட மாநகராட்சி நிர்வாகிகள் பங்கேற்கவில்லை என்பது குறித்து விளக்கமளித்துள்ளார்.

"முதல்வரின் பதவியேற்பு நிகழ்ச்சிக்கும், அதன்பின்னர் இரண்டு முறை நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சிகளுக்கும் மாநகராட்சி மேயர், துணை மேயர் உள்ளிட்ட யாருக்கும் அழைப்பு அனுப்பப்படவில்லை. அவசரம் காரணமாக அழைக்கப்படவில்லை என்று கூறப்பட்டாலும், அடுத்தடுத்த நிகழ்வுகளிலும் அதே நிலை தொடர்ந்தது," என்றார் அவர்.

முதல்வரை சந்திப்பது பற்றி
மேலும், "அரசுத் தரப்பிலேயே மாநகராட்சி மக்கள் பிரதிநிதிகளைப் புறக்கணிப்பது போல் செயல்பட்டு வரும் நிலையில், முதல்வருடனான மரியாதை நிமித்தமான சந்திப்பு குறித்து கேள்வி எழுப்புவது நியாயமானதல்ல," என்று மு. மகேஷ்குமார் அழுத்தந்திருத்தமாகத் தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை மேயராக இருந்தபோது, அதிமுக ஆட்சிக்கு வந்து ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்ற நிகழ்வில் கலந்துகொண்டது சுட்டிக்காட்டப்பட்டபோது, "அதிமுக ஆட்சியின்போது, அப்போதைய மேயரான மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு அனுப்பி வைக்கப்பட்டதால்தான் அவர் பங்கேற்றார்," என்று மகேஷ்குமார் தெளிவுபடுத்தினார்.

மரபு சார்ந்ததுதான்
நகராட்சி நிர்வாகத் துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் இருப்பதால், துறையின் தலைவராக அவரை சந்தித்திருக்கலாமே என்ற கேள்விக்கு, "முதல்வரை உள்ளாட்சிப் பிரதிநிதிகள் சந்திக்க சட்ட விதிமுறை ஏதுமில்லை. சந்திப்பது மரபு சார்ந்ததுதான்," என்று அவர் பதிலளித்தார்.

மேலும், "பாரம்பரியமிக்க சென்னை மாநகராட்சியை அரசே புறக்கணிக்கும் சூழலில், நாங்களாக வலியச் சென்று சந்திப்பது என்பது சாத்தியமற்றது," என்று மு. மகேஷ்குமார் கூறினார். மாநில அரசுக்கும், உள்ளாட்சி நிர்வாகத்திற்கும் இடையே இத்தகைய முரண்பாடு, மக்கள் நலத்திட்டங்களைப் பாதிக்காதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

முழு ஒத்துழைப்பு
அதற்கு, "அரசின் திட்டங்களை சென்னை மாநகராட்சியில் நிறைவேற்ற தவெக அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளோம். நிர்வாகச் செயல்பாடுகளை அதிகாரிகள் பார்த்துக் கொள்வார்கள். மக்கள் நலத்திட்டங்களுக்கு திமுக ஒருபோதும் தடையாக இருக்காது," என்று மகேஷ்குமார் உறுதிபடத் தெரிவித்தார்.

சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்?அதிமுகவில் நீடித்து வர...
30/05/2026

சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்?

அதிமுகவில் நீடித்து வரும் உட்கட்சி குழப்பங்களுக்கு மத்தியில், விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் அதிமுக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் சிவி சண்முகம் தரப்பினர் ஒப்படைத்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதனால் சிவி சண்முகம் எடப்பாடியிடம் சரண்டராக விட்டாரா? அல்லது சண்டைக்கு தயாரா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இந்நிலையில் வரும் வாரத்தில் அவர் தவெகவில் ஐக்கியமாவார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி மோதல் இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. 2026 தமிழக சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சிக்குள் பல்வேறு அணிகள் உருவாகின.

குறிப்பாக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி, சிவி சண்முகம் உள்ளிட்டோர் எடப்பாடி எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்தது அதிமுக தலைமையை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதன் தொடர்ச்சியாக, கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், சிவி சண்முகத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு உருவானது.

அதிமுக பிளவு
இந்த விவகாரம் வெளிப்படையாக பேசப்படாத போதிலும், இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட அரசியல் இடைவெளி தொடர்ந்து அதிகரித்து வந்ததாக கூறப்பட்டது. அதேநேரத்தில், சில நாட்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மீண்டும் ஒருங்கிணைந்த அணியாக செயல்பட ஒப்புக் கொண்டனர். இதனால் அதிமுகவில் நிலவி வந்த பிளவு முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு உருவானது.

சிவி சண்முகம்
ஆனால் அந்த சந்திப்பில் முக்கிய தலைவரான சிவி சண்முகம் பங்கேற்காதது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு இன்னும் நீடிக்கிறதா என்ற சந்தேகமும் எழுந்தது. இந்த சூழ்நிலையில் தான், விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலக சாவி விவகாரம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. நீண்ட நாட்களாக யார் கட்டுப்பாட்டில் அலுவலகம் இருக்கும் என்ற விவகாரத்தில் இழுபறி நிலவி வந்ததாக கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி
தற்போது அந்த சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பினர் நியமித்துள்ள புதிய மாவட்ட செயலாளர் பசுபதியிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது அரசியல் ரீதியாக கவனிக்கத்தக்க நகர்வாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மாவட்ட அமைப்பின் கட்டுப்பாட்டை சிவி சண்முகம் தரப்பு கைவிட்டதா அல்லது கட்சிக்குள் மேலும் மோதல் வேண்டாம் என்ற நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதா என்பது குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.

சாவி ஒப்படைப்பு
மறுபுறம், சாவி ஒப்படைப்பு சம்பவம் நடந்த மறுநாளே சிவி சண்முகம் தனது மயிலம் தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பயணத்தை தொடங்கியுள்ளார். கிராமம் கிராமமாக சென்று மக்களை சந்தித்து நன்றி தெரிவித்த அவர், தொகுதி மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன் என்றும், எந்த நேரத்திலும் தன்னை அணுகலாம் என்றும் உறுதியளித்துள்ளார்.

மயிலம் தொகுதி
இந்த நன்றி அறிவிப்பு பயணமும் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. பொதுவாக தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் நன்றி தெரிவிப்பு நிகழ்ச்சிகளை விட, தற்போதைய அரசியல் சூழ்நிலையில் சிவி சண்முகத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும் பரபரப்பாகவே இருக்கிறது. இதற்கிடையில், அவரது அரசியல் எதிர்காலம் குறித்து பல்வேறு ஊகங்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக, அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணையலாம் என்ற பேச்சுகள் தொடர்ந்து அரசியல் வட்டாரங்களில் அடிபட்டு வருகின்றன.

எம்எல்ஏ பதவி ராஜினாமா
எனினும், இதுகுறித்து சிவி சண்முகம் தரப்பில் எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் இதுவரை வெளியாகவில்லை.
அவரது ஆதரவாளர்களில் ஒரு பகுதியினர், தற்போதைய அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு புதிய முடிவை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக கருதுவதாக கூறப்படுகிறது. மற்றொரு தரப்பினர், அதிமுகவிலேயே இருந்து அரசியல் பயணத்தை தொடர வேண்டும் என்ற கருத்தையும் முன்வைத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகம்
இதனால், விழுப்புரம் மாவட்ட அலுவலக சாவி ஒப்படைப்பு என்பது ஒரு சாதாரண நடவடிக்கை என்பதை தாண்டி, அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளுக்கான அறிகுறியாக மாறியிருக்கிறது. இந்நிலையில், அடுத்தவாரம் அதாவது திங்கட்கிழமை சிவி சண்முகம் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யப் போகிறார் எனவும், அன்றே தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் சட்டமன்ற தேர்தலில் அதிமுக 3...
30/05/2026

எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ்

சட்டமன்ற தேர்தலில் அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இது அதிமுகவில் பிரச்சனையை கிளப்பியது. அதிமுகவின் 4 எம்எல்ஏக்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தலைமை செயலகத்தில் வைத்தே தவெகவில் இணைந்தனர். அதிமுகவில் மேலும் பல மூத்த நிர்வாகிகள் தவெகவில் இணைந்து வருகிறார்கள். இந்த பிரச்சனைக்கு அதிமுகவில் சமீபத்தில் இணைந்த லாட்டரி அதிபர் மனைவி லீமாரோஸ் காரணம் என புகார்கள் எழுந்தன. தற்போது அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி - வேலுமணி அணிகள் இணைந்துள்ளன. தன்னை விமர்சித்தவர்களை வாடகை பேச்சாளர்கள் என்று லீமாரோஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

லால்குடி எம்எல்ஏவும், அதிமுக மாநில மகளிரணி இணைச் செயலாளருமான லீமா ரோஸ் மார்ட்டின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அனைவருக்கும் வணக்கம். அதிமுகவின் முன்னணி தலைவர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் களைந்து கழகம் ஒன்றுபட்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. சமீப காலமாக என்னை வைத்து சில வாடகை பேச்சாளர்கள் எந்தவித அடிப்படை ஆதாரமும் இன்றி சொல்லிய கட்டுக்கதைகள் பொய்த்துப் போயின.

வாடகை பேச்சாளர்கள்
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் உருவாக்கப்பட்டு, இதய தெய்வம் அம்மா அவர்களால் செழுமைப்படுத்தப்பட்ட பேரியக்கத்தில் பிரிவுகள் ஏற்படுத்த நான் ஒருபோதும் எண்ணியதில்லை. என் மீது களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு சில வாடகை பேச்சாளர்களால் பரப்பப்பட்ட வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது இந்த இணைப்பு.

பல கோடி மக்களின் நம்பிக்கையாக திகழும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு லால்குடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டது என் வாழ்நாளின் பெரும் அங்கீகாரமாக கருதுகிறேன். எனது தொகுதி மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கிடவும், தொகுதி வளர்ச்சிக்கு உழைப்பதுமே என்னுடைய முதன்மை கடமையாக எண்ணுகிறேன்.

லீமாரோஸ் காட்டம்
தமிழ்நாட்டில் மீண்டும் அம்மாவின் நல்லாட்சி மலர்ந்திட கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடியார் தலைமையில் அயராது பாடுபடுவோம்" என்று கூறியுள்ளார். அவரின் பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறார்கள். கட்சிக்குள்ளேயும், வெளியேயும் தன்னை விமர்சித்தவர்களுக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

என்னப்பா அங்க சத்தம்.. ஆக்‌ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி?சட்டமன்றத் தேர்தல் தோ...
30/05/2026

என்னப்பா அங்க சத்தம்.. ஆக்‌ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி?

சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் வெடித்த உட்கட்சி மோதல், கடந்த சில வாரங்களாக தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிக்கும், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு, கட்சி பிளவு வரை சென்று விட்டதாக அரசியல் வட்டாரங்கள் பேசின. ஆனால் தற்போது இரு அணிகளும் மீண்டும் இணைந்துள்ளன. இந்நிலையில், அதிமுக இணைப்புக்கு காரணம் அமித் ஷாவின் தலையீடு தான் காரணம் என்கின்றனர் அதிமுகவினர்.

2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அணிக்கும், எஸ்.பி. வேலுமணி - சி.வி. சண்முகம் தரப்பிற்கும் இடையே கடும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. குறிப்பாக, சட்டப்பேரவையில் தவெக அரசுக்கு ஆதரவு அளித்த விவகாரம் அதிமுகவில் பெரிய பிளவை ஏற்படுத்தியது.

இதையடுத்து, எஸ்.பி. வேலுமணி தரப்பை சேர்ந்த பலரின் கட்சிப் பொறுப்புகள் பறிக்கப்பட்டன. மேலும், இரு அணிகளும் தனித்தனியாக சட்டப்பேரவைத் தலைவரை சந்தித்து ஒருவருக்கு எதிராக ஒருவர் மனு அளித்திருந்தனர்.

அதிமுக பிளவு
இந்த சூழலில், கடந்த சில நாட்களாக இரு தரப்பினருக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவந்தன. அதன் தொடர்ச்சியாக, சிவி சண்முகம், சி விஜயபாஸ்கரை தவிர பிற எம்.எல்.ஏ.க்கள் அதிமுக முகாமுக்கு திரும்பியுள்ளன. இந்நிலையில், அமித் ஷா நேரடி தலையீட்டால் தான் அதிமுக மீண்டும் சேர்ந்ததாக சொல்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள். அதிமுக வட்டாரங்களில் கூறப்படும் தகவலின்படி, ஆரம்பத்தில் எஸ்.பி.வேலுமணி தரப்பினரிடம் இருந்து பறிக்கப்பட்ட கட்சிப் பொறுப்புகளை மீண்டும் வழங்க முடியாது என்ற நிலைப்பாட்டில்தான் எடப்பாடி பழனிசாமி இருந்தாராம்.

சமரச பேச்சுவார்த்தை
பின்னர் மாவட்ட செயலாளர் பொறுப்புகளை பிரித்து வழங்குவது உள்ளிட்ட சில சமரச யோசனைகள் முன்வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இறுதியில், முன்பு இருந்த பல பொறுப்புகளையும் மீண்டும் வழங்க தயாராக இருப்பதாக இபிஎஸ் தரப்பு சமிக்ஞை கொடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனாலும், எஸ்.பி.வேலுமணி தரப்பு உடனடியாக சமாதானத்திற்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையில், டெல்லி தரப்பில் இருந்தும் சில முக்கிய ஆலோசனைகள் வந்ததாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமித்ஷா
குறிப்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தரப்பில் இருந்து, "முன்னாள் முதலமைச்சராக இருந்த ஒருவர் இவ்வளவு தூரம் இறங்கி வந்து பேசுகிறார். இப்போது பிடிவாதம் பிடிப்பது சரியான அணுகுமுறை அல்ல" என்ற வகையில் பேசியதாகச் சொல்லப்படுகிறது. இதனால் தான், எஸ்.பி.வேலுமணி அணியினர் சமரசத்திற்கு முன்வந்ததாகவும், இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

சி வி சண்முகம்
அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கே.பி.முனுசாமி, ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோர் இந்த பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்கு வகித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த சமரசம் அனைவரையும் திருப்திப்படுத்தவில்லை என்பதுதான் தற்போது பேசப்படும் முக்கிய விஷயமாக உள்ளது. குறிப்பாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அருண்மொழித்தேவன் ஆகியோர் இன்னும் வேறு நிலைப்பாட்டில் தான் இருப்பதாக கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி
சி.வி.சண்முகத்தைப் பொறுத்தவரை, எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட மோதல்களும், சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தில் ஏற்பட்ட கடுமையான கருத்து வேறுபாடுகளும் இன்னும் அவரை பாதித்து வருவதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். மீண்டும் இபிஎஸ் தலைமையின் கீழ் செயல்படுவது குறித்து அவர் தீவிர யோசனையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரத்தில், அவர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வது பற்றியும் ஒரு கட்டத்தில் சிந்தித்ததாக கூறப்படுகிறது.

சி விஜயபாஸ்கர்
ஆனால், குடும்பத்தினரும் நெருங்கிய ஆதரவாளர்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. குறிப்பாக, அவரை நம்பி செயல்பட்டு வரும் கட்சித் தொண்டர்கள் மற்றும் வாக்காளர்களின் உணர்வுகளை கருத்தில் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தற்போது அவர் எந்த முடிவையும் அறிவிக்காமல் அமைதியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம், சி.விஜயபாஸ்கரின் நடவடிக்கைகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. விராலிமலை மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் தனது ஆதரவாளர்களுடன் அவர் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

அதிமுக-தவெக கூட்டணி
தேர்தலுக்கு முன்பே அதிமுக-தவெக கூட்டணி அமைய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்ததாகவும், அது நடக்காததால் அதிருப்தியில் இருந்ததாகவும் அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், அவரது அடுத்த அரசியல் முடிவு என்னவாக இருக்கும் என்பது குறித்து பல்வேறு யூகங்கள் கிளம்பியுள்ளன. குறிப்பாக, தவெக நோக்கி அவர் நகரக்கூடும் என்ற பேச்சு அரசியல் வட்டாரங்களில் பரவி வருகிறது. அதற்காக ஆதரவாளர்களின் கருத்துகளையும் அவர் கேட்டு வருவதாக கூறப்படுகிறது.

எஸ்.பி.வேலுமணி
அதேநேரத்தில், இதுவரை சி.விஜயபாஸ்கர் தரப்பிலோ, தவெக தரப்பிலோ எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவே, இந்த தகவல்கள் அனைத்தும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படும் தகவல்களாகவே பார்க்கப்படுகின்றன. இதனால், எஸ்.பி.வேலுமணி அணி மற்றும் இபிஎஸ் அணி இடையேயான மோதல் ஓரளவுக்கு முடிவுக்கு வந்தாலும், சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் போன்ற முக்கிய தலைவர்களின் அடுத்தகட்ட அரசியல் முடிவுகள் என்னவாக இருக்கும் என்பதே தற்போது அதிமுக வட்டாரத்தில் மிகப்பெரிய கேள்வியாக மாறியுள்ளது.

அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை...
30/05/2026

அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக தீவிரமாக முயற்சி செய்தது. ஆனால் தேர்தலில் தோல்வி ஏற்பட்டது திமுகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேர்தல் தோல்வியால் திமுகவில் பல அதிரடி மாற்றங்கள் அரங்கேறவுள்ளன. 60 வயதிற்கு மேற்பட்டோர் முக்கிய பதவிகளில் இருக்க கூடாது என்று திமுக முடிவு செய்துள்ளது. இந்நிலையில் உடல் நலக்குறைவால் திமுக பொதுச் செயலர் பதவியில் இருந்து விலக துரைமுருகன் முடிவு செய்துள்ளாராம். பொதுச்செயலாளர் பதவியில் அடுத்து அமரப்போவது யார்.

சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுகவை பின்னுக்கு தள்ளி தவெக ஆட்சியமைத்துள்ளது. அதிமுக இரண்டாக பிரிந்து மீண்டும் இணைந்துவிட்டது. ஆனால் சிட்டிங் எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், சீனியர் நிர்வாகிகள் பலர் தவெகவில் இணைந்து வருகிறார்கள். ஆட்சியை தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட திமுக எதிர்க்கட்சியாகியுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலினே கொளத்தூரில் தோல்வியடைந்தார்.

திமுகவில் அதிரடி மாற்றம்
தேர்தலுக்கு பிறகு திமுக கூட்டணி உடைந்துவிட்டது. திமுக கூட்டணியில் இருந்து விலகி காங்கிரஸ் தவெகவுடன் இணைந்தது. காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளன. திமுகவின் முக்கியமான பலங்களில் ஒன்றாக கூட்டணி கருதப்பட்டது. அந்த கூட்டணி உடைக்கப்பட்டிருப்பது திமுகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுகவில் தோல்விக்கான காரணங்கள் குறித்து ஆராய தொகுதி வாரியாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கள ஆய்வின் அடிப்படையில் கட்சியில் பல அதிரடி மாற்றங்களை அரங்கேற்ற திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து திமுக நிர்வாகிகள் கூறுகையில், "தமிழக அரசியல் விஜய் உதயநிதி என்கிற வகையில் மாறிவிட்டது. தவெக அமைச்சரவையில் உள்ள பலரும் இளைஞர்களாக உள்ளனர். அதனால் திமுகவிலும் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பணியாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

துரைமுருகன் பதவி விலகல்
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு வயதாகிவிட்டது. ஆட்சியில் இருந்தபோதே அவர் அடிக்கடி மருத்துவ சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆட்சியிலும், கட்சியிலும் அவரின் செயல்பாடு குறைவாக இருந்தது. சட்டமன்ற தேர்தலிலேயே அவர் போட்டியிட மாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என எதிர்பார்த்து அவர் தேர்தலில் போட்டியிட்டார்.

காட்பாடி தொகுதியில் போட்டியிட்ட அவர் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு தோல்வியடைந்தார். உடல்நிலை ஒத்துழைக்க மறுப்பதால் துரைமுருகன் அரசியலில் இருந்து ஓய்வு எடுக்க முடிவு செய்துவிட்டாராம். இதை துரைமுருகனே தன்னுடைய ஆதரவாளர்களிடம் சொல்லியுள்ளார். துரைமுருகன் பதவி விலகும் பட்சத்தில், திமுக பொருளாளராக உள்ள டி.ஆர். பாலு பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது" என்றனர்.

Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்அமைச்சர் ஆதவ் அர்ஜுன...
30/05/2026

Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இணையாத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சிதான் என அதிமுக மாநிலங்களவை எம்பி இன்பதுரை கிண்டலாக பதிவு போட்டுள்ளார். மேலும் அவரை நிழல் முதல்வர் என்றும் விமர்சித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவிக) மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் சமீபத்திய செயல்பாடுகளும், அதிமுக உள்ளிட்ட பிற அரசியல் கட்சிகள் குறித்த அவரது விமர்சனங்களும் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

இந்நிலையில், அவரது இந்த அதிரடி அரசியல் நகர்வுகள் குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் காரசாரமான கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக, அதிமுக மாநிலங்களவை எம்பி இன்பதுரை பகிர்ந்துள்ள விமர்சனம் தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

அதில், "அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் செயல்பாடுகள் மற்றும் அதிமுக உள்ளிட்ட பிற அரசியல் கட்சிகள் குறித்து அவர் தெரிவித்து வரும் கருத்துக்களைப் பார்த்தால், அவர்தான் தமிழக வெற்றிக் கழக அரசாங்கத்தின் நிழல் முதலமைச்சர் போலத் தோன்றுகிறது. இதுவரை அவர் இணையாத ஒரே கட்சி 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' மட்டும்தான் போல!" என்று கிண்டலாகக் பதிவிட்டுள்ளார்.

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் இன்னும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள நிலையிலும், அமைச்சராக இருக்கும் ஆதவ் அர்ஜுனா மற்ற கட்சிகளைத் தொடர்ந்து விமர்சித்து வருவது, அவரே கட்சியின் உச்சகட்ட அதிகார மையமாகச் செயல்படுகிறாரோ என்ற கேள்வியைக் கிளப்பியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

அதன் வெளிப்பாடாகவே இத்தகைய கடுமையான மற்றும் நையாண்டி கலந்த விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும் தவெகதான் உண்மையான அதிமுக என்றும் 90 சதவீத அதிமுகவினர் தவெகவில் இணைவார்கள் என தெரிவித்திருந்தார்.

அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை மக்கள் தலைவர்களாக உருவாக்கியது போல, மக்கள் முதல்வர் ஜோசப் விஜய்யையும் உருவாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

ஆதவ் அர்ஜுனாவின் இந்த கருத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுகவை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது என்றும், தொண்டர்கள் என்றும் கட்சியின் பின்னே உறுதியாக நிற்பார்கள் என்றும் அவர் விமர்சித்துள்ளார். அது போல் திமுகவின் பண்ணையார் மனநிலைதான் அதன் தோல்விக்கு காரணம் என்றும் அவர் விமர்சித்திருந்தார்.

சட்டசபை தேர்தலில் வென்ற அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமா, பெருந்துறை ஜெயக்குமார், இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.

முக்கியத் தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள்

வெல்லமண்டி என். நடராஜன்: அதிமுக ஆட்சிக்காலத்தில் சுற்றுலாத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர். திருச்சியில் பலத்த செல்வாக்குடைய இவர், தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்தைச் சந்தித்து முறைப்படி கட்சியில் இணைந்தார்.

ஆர். நடராஜ் (முன்னாள் டி.ஜி.பி மற்றும் எம்.எல்.ஏ): சென்னை மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினரும், ஓய்வுபெற்ற டி.ஜி.பி-யுமான ஆர். நடராஜ் சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

ஜே.கே.என். இராமஜெயலிங்கம்: ஜெயங்கொண்டம் தொகுதியின் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ).

சாதன் பிரபாகர்: பரமக்குடி தொகுதியின் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்.

கே. கமலகண்ணன்: அதிமுகவின் அதிகாரப்பூர்வ தொழிலாளர் அமைப்பான அண்ணா தொழிற்சங்கத்தின் முக்கியப் பொறுப்பில் இருந்தவர்.

தேர்தல் முடிவுகள் வெளியாகி தவெக ஆட்சி அமைத்த சில நாட்களிலேயே, 4 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் (MLAs) தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதனால் அந்த 4 தொகுதிகளும் தற்போது காலியாக அறிவிக்கப்பட்டுள்ளன.

புகழேந்தி (முன்னாள் அதிமுக செய்தித் தொடர்பாளர்): தவெக அமைச்சர்களைச் சந்தித்துப் பேசியுள்ள இவர், விரைவில் தவெகவில் அதிகாரப்பூர்வமாக இணையவுள்ளதாக அறிவித்துள்ளார்.

மாற்றத்திற்கான காரணம்: "ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அதிமுக தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வருவதாலும், தவெக தங்களின் கொள்கைத் தலைவர்களான பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரை ஏற்றுக் கொண்டுள்ளதாலும், தவெகவை 'உண்மையான அதிமுக'வாகக் கருதி வருகிறோம்" என்று கட்சியில் இணைந்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவிலிருந்து தவெகவிற்கு இந்தத் தொடர் இடப்பெயர்வு நடந்து வருவதால், சென்னை பனையூர் தலைமையகத்தில் வாரந்தோறும் பிற கட்சியினரை இணைக்கும் சிறப்பு நிகழ்வுகள் தவெக தரப்பில் நடத்தப்பட்டு வருகின்றன.

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when News4 Tamil Digital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News4 Tamil Digital:

Share