09/02/2026
வரலாற்றுப் பொக்கிஷம்: 1738-இல் எழுதப்பட்ட திருச்செந்தூர் கோயில் செப்புப் பட்டயம்! தென்கரை நாட்டுக்குடும்பர்களின் நிலவுடைமை உரிமைகள் - 288 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுச் சான்று!
-----------------------------------------------------------------------------
18-ஆம் நூற்றாண்டில் திருச்செந்தூர் கோயில் நிலத்தை கிரையம் வாங்கிய குடும்பங்கள்
செப்புப் பட்டயத்தில் தகவல்
பழனி, பிப் 8: திருச்செந்தூர் கோயில் நிலத்தை தென் இருகரை நாட்டுக்கும்பர்களுக்கு 18-ஆம் நூற்றாண்டில் கிரையம் செய்து வழங்கப்பட்ட செப்புப் பட்டயம் கண்டறியப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், ஆதிநாதபுரத்தைச் சேர்ந்த கைலாசக்குடும்பர், அவரது முன்னோர்கள் பாதுகாத்து வைத்திருந்த செப்புப் பட்டயத்தை பழனியைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தியிடம் கொடுத்து படித்து விளக்கமளிக்குமாறு கோரினார்.
இதுகுறித்து ஆய்வு செய்த தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது:
இந்த செப்புப் பட்டயம் 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இந்தப் பட்டயம் 28.7 \times 17.5 செ.மீ அளவில் 352 கிராம் எடையுடன் உள்ளது. அன்றைய திருச்செந்தூர் கோயில் நிலத்தை தென் இருகரை நாட்டுக் குடும்பர்களுக்கு கிரையம் செய்து கொடுக்கப்பட்டதாக பட்டயத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டயத்தின் இருபுறங்களிலும் 61 வரிகளில் இந்தச் சாசனம் எழுதப்பட்டுள்ளது. இந்தப் பட்டயம் 29-08-1738-ஆம் ஆண்டு எழுதப்பட்டது.
அன்றைய திருச்செந்தூர் முருகன் கோயில் நிர்வாகிகளாக இருந்த பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த 12 பேர் கோயில் நிலத்தை தென் இருகரை நாட்டுக் குடும்பர்கள் 9 பேருக்கு கிரையம் செய்து கொடுத்துள்ளனர்.
இதை எழுதிய 12 கோயில் நிர்வாக அதிகாரிகள், நிலத்தைப் பெற்றுக்கொண்ட 9 குடும்பர்கள், சாசனத்தில் கையொப்பமிட்ட 11 பேர், சாசனத்துக்கு சாட்சிகள் 5 பேர் என அனைவரின் பெயர்களும் அவர்களின் ஜாதி பெயர்களுடன் சாசனத்தில் இடம் பெற்றுள்ளது. இது 18-ஆம் நூற்றாண்டில் தமிழ் சமூகத்தில் நிலவிய ஜாதி கட்டமைப்பை உணர்த்துகிறது.
குடும்பர்களுக்கு கிரையம் செய்யப்பட்ட நிலத்தின் 4 எல்லைகளை செப்பேடு விரிவாகக் கூறுகிறது. பட்டயத்தை ஆய்வு செய்யக் கொடுத்த கைலாசக் குடும்பர், பட்டயத்தில் முதலில் குறிப்பிடப்படும் தென்கரை காட்டுப் பச்சேரி சித்திரபுத்திரக் குடும்பன் மகன் மாடக் குடும்பன் வழி வந்தவர் என்று நிரூபிக்க தன்னிடம் ஆவணங்கள் உள்ளதாகவும் தெரிவித்தார்.
செப்புப் பட்டயத்தில் திருச்செந்தூர் முருகனை இளைய நயினார் என்றும், முருகன் கோயில் நிலத்தை திருவிளையாட்டம் என்றும், திருச்செந்தூரை மாகாளி சதுர்வேதமங்கலம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தப் பட்டயம் சந்திர கிரகணம் சூழ்ந்த பௌர்ணமி நாளில் எழுதப்பட்டுள்ளது. தற்காலத்தில் கிரகண நாளில் நல்லகாரியங்கள் செய்ய உகந்ததல்ல என கருதப்படுகிறது.
ஆனால், பண்டைய கல்வெட்டுகள் கிரகண நாளை புண்ணிய காலம் என்று கூறுகின்றன. பொதுவாக கிரகண நாள்களில் கொடை அளிப்பது, கொடை பெறுவது பல மடங்கு புண்ணியம் தரும் என்பது பண்டைய தமிழர்களின் நம்பிக்கையாக இருந்தது. அதனடிப்படையில் சந்திர கிரகண நாளை முன் கூட்டியே தேர்ந்தெடுத்து, செப்புப் பட்டயத்தை எழுதியதன் மூலம் பழந்தமிழர்கள் பெற்றிருந்த வானியல் அறிவையும், அவர்களின் நிபுணத்துவத்தையும் உணர முடிகிறது என்றார் அவர்.