31/05/2026
அண்ணாமலை புதிய கட்சி அறிவிப்பு?
தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைர் அண்ணாமலையின் பிறந்தநாளான ஜூன் 4ஆம் தேதி நெருங்கி வரும் சூழலில், தமிழக அரசியல் களம் திடீர் பரபரப்பில் தொற்றிக் கொண்டுள்ளது. ஜூன் முதல் வாரத்தில் பாஜக-வின் தேசியத் தலைமையைச் சந்திக்க அண்ணாமலை நேரம் கேட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதே நேரத்தில், மற்றொரு புறம் 'அண்ணாமலை நற்பணி மன்ற' நிர்வாகிகளைத் தீவிரமாகச் செயல்படத் தொடங்குமாறு ரகசிய அறிவுறுத்தல்கள் பறந்துள்ளன. இதனால், அவர் புதிய கட்சி தொடங்கப் போகிறாரா அல்லது பாஜகவிலேயே தொடரப் போகிறாரா என்ற இரண்டு விதமான அரசியல் யூகங்களும் இறக்கை கட்டிப் பறக்கின்றன.
அண்ணாமலையின் ஆதரவாளர்கள் மற்றும் நற்பணி மன்றங்களின் தற்போதைய சுறுசுறுப்பு, அவர் ஒரு புதிய மாநிலக் கட்சியை அறிவிக்கலாம் என்ற விவாதத்தை பலப்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அண்ணாமலை நற்பணி மன்ற நிர்வாகிகளை மக்கள் நலப் பணிகளில் தீவிரமாக ஈடுபடவும், பூத் லெவலில் பலத்தை அதிகரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஜூன் 4-ஆம் தேதி அவரது பிறந்தநாளன்று, தனது அடுத்தகட்ட அரசியல் பயணமாக புதிய மாற்றுப் சக்திக்கான அடித்தளத்தை அவர் அறிவிக்க வாய்ப்புள்ளதாக ஒரு தரப்பு நம்புகிறது. அண்மைய தேர்தல் நகர்வுகளில் நிலவிய சில உட்கட்சி பூசல்களால் இந்த முடிவு எடுக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.
ஜூன் முதல் வாரத்தில் அண்ணாமலை டெல்லி செல்லவிருப்பது, தனது புதிய கட்சி முடிவை மேலிடத்திற்குத் தெரிவித்து, சுமூகமாக விடைபெறுவதற்காகக் கூட இருக்கலாம் என்று அவரது ஆதரவாளர்களால் ரகசியமாகப் பேசப்படுகிறது. அதே நேரத்தில், அண்ணாமலை பாஜக-விலிருந்து விலக மாட்டார், மாறாகப் பெரிய பொறுப்புடன் கட்சியை வலுப்படுத்துவார் என்ற மாற்று வாதமும் பலமாக உள்ளது.
இன்னொரு பக்கம் "அண்ணாமலை எப்போதும் பாஜக-வின் சித்தாந்தத்தோடு பயணிப்பவர். நற்பணி மன்றங்களைச் செயல்படச் சொன்னது கட்சியை அடிமட்ட அளவில் வலுப்படுத்துவதற்காகவே தவிர, புதிய கட்சி தொடங்குவதற்காக அல்ல" என அவருக்கு நெருக்கமான மாநில பாஜக நிர்வாகிகள் உறுதியாகத் தெரிவிக்கின்றனர்.
புதிய கட்சித் தொடக்கமா? அல்லது டெல்லி சந்திப்புக்குப் பிறகு பாஜகவில் புதிய விஸ்வரூபமா? என்ற அனைத்துக் கேள்விகளுக்கும் ஜூன் முதல் வாரத்தில் அண்ணாமலை மேற்கொள்ளும் டெல்லி பயணமும், அவரது பிறந்தநாள் நகர்வுகளும் விடை கொடுத்துவிடும். இதனால் அண்ணாமலையின் முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.