24/12/2025
💞 ரஜப் மாதம் பற்றி அறிந்து கொள்ளுவோம் 💞
• அல்லாஹ் சில நாட்களையும், இரவுகளையும், மாதங்களையும் சிலதை விட இன்னும் சிலதை சிறப்பித்து வைத்துள்ளான். இவைகள் அவனின் ஞானத்தின் அடிப்படையிலாகும். அந்த அடிப்படையில் மாதங்களுக்கு மத்தியில் சிறப்பு மிக்க மாதங்களாக 04 மாதங்களை அல்லாஹுத்தஆலா புனித மாதங்களாக கூறி உள்ளான் அவைகள் ;
1) துல்கஅதா 2) துல்ஹஜ் 3) முஹர்ரம் 4) ரஜப்
(சூரத்துல் : அல் பகரா : 194)
(நூல் : ஸஹீஹ் புகாரி : 3197)
• ரஜப் என்று பெயர் சூட்டப்படுவதற்கான காரணம் ரஜப் என்றால் “கண்ணியப்படுத்தப்பட்டது” என்ற பொருளை குறிக்கும். ஏனெனில் அறியாமை காலத்தில கூட இந்த மாதத்தை கண்ணியப்படுத்தினார்கள். இதிலே போரிடுவதையும் அவர்கள் தடை செய்திருந்தார்கள்.
• இந்த நான்கு மாதமும் அல்லாஹ்வும் அவனுடைய தூதர் நபி (ஸல்) அவர்களும் புனித மாதங்கள் என்று கூறி உள்ளார்கள்! இம்மாதங்களில் போர் புரிவதற்கு தடை செய்யப்பட்டு உள்ளது.
• இன்னும் சில அறிஞர்கள் கூறுகின்றார்கள் : ரஜப் மாதத்தில் நிகழக்கூடிய பாவங்கள் , பெரும் பாவங்களாக கருதப்படும். ஏனெனில் அது புனிதமிக்க மாதங்களில் ஒன்றாக உள்ளது. அதேபோன்று இந்த மாதத்தில் மனிதனால் நிகழக்கூடிய அநியாயங்கழும் பெரும் குற்றமாகவே கருதப்படும். அதனை மனிதன் தனக்குத்தானே செய்துகொண்ட அநியாயமாகவும் இருக்கலாம் அல்லது பிறருக்கு செய்த அநியாயமாகவும் இருக்கலாம்.
அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவையாகும். (இவ்வாறு அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று செயல்படுதவற்குரிய) அதுதான் நேரான மார்க்கமாகும். ஆகவேஅவற்றில் (நீங்கள் வரம்புமீறி) உங்களுக்கு நீங்களே அநீதமிழைத்துக் கொள்ளாதீர்கள்!
(அல்குர்ஆன் : 09 : 36)
• பொதுவாக அனைத்து சந்தர்ப்பங்களிலும் அநீதி இழைப்பது என்பது தடுக்கப்பட்ட ஒரு விடயமாகவே இருக்கின்றது. அதிலும் இந்த 04 மாதங்களில் அநீதி இழைப்பது என்பது குறிப்பாக தடுக்கப்பட்டதாக உள்ளதுடன் அனுமதிக்கப்படாத ஒன்றாகவும் காணப்படுகின்றது. எனவேஇந்த 04 மாதங்களில் அநீதி இழைப்பது என்பது மற்ற மாதங்களில் அநீதி இழைப்பதை விட மிகவும் பாரதூரமான விடயமாகும்.
• இதை தவிர்த்து வேறு எந்த சிறப்புகளும் இஸ்லாம் ரஜப் மாதத்திற்கு கூறவில்லை! ரஜப் மாதத்திற்கு சிறப்புகள் என்று அல்குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீஸ்களிலும் எதுவும் கூறப்பட வில்லை!
இமாம் இப்னு உதைமீன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
ரஜபை வணக்கத்திற்காக தனிமைப்படுத்த வேண்டாம்! அது ஒரு வழிகேடான புதுமை ஆகும்! இந்த மாதத்திற்கென்று சிறப்பான தொழுகை, நோன்பு, உம்ரா எதுவும் இஸ்லாம் கூறவில்லை!
இந்த மாதம் போர்புரிவதற்கு தடுக்கப்பட்ட மாதங்களில் ஒன்று என்பதைத் தவிர வேறு எந்த சிறப்பும் இஸ்லாம் கூறவில்லை!
• இந்த மாதத்திற்கு என்று சிறப்பான அமல்கள் துஆக்கள் இல்லை என்றாலும் நாம் வழமையாக செய்ய கூடிய அமல்களை இன்னும் அதிகப்படுத்த வேண்டும்!
💟 ஸலாதுர் ரகாயிப் தொழுகை :
• ஸலாதுர் ரகாயிப் என்ற பெயரில் ரஜப் மாதத்தில் மஃரிபுக்கும் இஷாவுக்கும் இடையில் 12 ரக்அத்துக்கள் தொழப்படும். ஆனால் இவ்வாறான ஒரு தொழுகை பற்றி அல்குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீஸ்களில் எங்கும் குறிப்பிடபடவில்லை!
இப்னு தைமியா (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
ஸலாதுர் ரகாயிப் தொழுகையைப் பொருத்தவதை அது எந்தவித அடிப்படையும் கிடையாது. அதுமாத்திரமின்றி அது ஒரு பித்அத் ஆகும். அத்தொழுகையை தனியாகவோ கூட்டாகவோ தொழுவதற்கு அனுமதில்லை!
(மஜ்மூஉல் பதாவா : 23 - 132)
💟 ரஜபில் நோன்பு நோர்ப்பது :
• ரஜப் மாதத்தில் விஷேச நோன்பு, தொழுகை போன்ற வணக்கங்களை நிறைவேற்றுவது தொடர்பாக வரும் அனைத்து ஹதீஸ்களுமே பலவீனமானவையே!
• இம்மாத்தில் விஷேச நோன்பு - தொழுகை அல்லது திக்ர் - துஆ செய்வதற்கு எந்த வித ஸஹீஹான ஆதாரமும் கிடைக்கவில்லை!
இமாம் இப்னு தைமியா (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
புனிதமான மாதங்கள்: ரஜப், துல்கஃதா, துல்ஹிஜ்ஜா, முஹர்ரம் ஆகும்! எனவே இம்மாதங்களில் பொதுவாக நோன்பு நோற்பதற்கு அனுமதி உள்ளதே தவிர ரஜப் மாதத்தில் மாத்திரம் விஷேசமாக நோன்புகள் வைப்பதற்கு எந்த அடிப்படை ஆதாரம் இல்லை!
(மஜ்மூ பதாவா ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமியா (ரஹ்) : 25 / 290, 291)
இமாம் இப்னுல் கய்யிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் :
ரஜப் மாதத்தில் நோன்பு வைப்பதன், அல்லது அதன் சில இரவுகளில் நின்று தொழுகுவதன் சிறப்புகள் குறித்து வரும் அனைத்து ஹதீஸ்களும் இட்டுக்கட்டப்பட்ட பொய்களே!
(நூல் : அல் மனார் அல் முநீஃப் : 96)
நிச்சயமாக ரஜப் மாதம் ஒரு மகத்தான மாதமாகும். எவர் அதில் ஒரு நாள் நோன்பு நோற்பாரோ அவருக்கு ஆயிரம் வருடம் நோற்பு நோற்ற நன்மை கிடைக்கும்! இப்னுல் ஜவ்ஸி (ரஹ்) அவர்கள் இது இட்டுக்கட்டப்பட்டது என குறிப்பிடுகிறார்.
(நூல் : தப்யீனுல் அஜப் : 26)
• மாதம் மூன்று நோன்பு அல்லது திங்கள் மற்றும் வியாழன் நோன்பு வைப்பது சுன்னாஹ் அதை நாம் அடிப்படையாக வைத்து ரஜப் மாதத்தில் நோன்பு வைக்கலாம் தவிர! ரஜப் மாதம் என்று குறிப்பிட்ட நோன்பு வைப்பது பித்ஆத் ஆகும்!
💟 ரஜபில் உம்ரா :
• ரஜப் மாதம் என்று குறிப்பிட்டு உம்ரா செய்வது குறிப்பிட்ட சிறப்பும் எதுவும் கிடையாது! மற்ற மாதங்களில் உம்ரா செய்தால் என்ன நன்மையோ அதே நன்மை தான் ரஜப் மாதத்தில் செய்தாலும்!
• இதில் ஏதேனும் சிறப்பு இருந்திருப்பின் இந்த மாதத்தில் நபி (ஸல்) உம்ரா செய்து இருப்பார்கள் பிறரையும் செய்ய சொல்லி இருப்பார்கள்.
அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
நபி (ஸல்) அவர்கள் ரஜப் மாதத்தில் உம்ரா செய்ததே இல்லை!
(நூல் : ஸஹீஹ் புஹாரி : 1775)
💟 ரஜப் மாதத்தில் குர்பானி :
• மக்காவில் இஸ்லாம் பரவுவதற்கு முன் அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் இந்த மாதத்தில் நோன்பு வைத்து குர்பானி கொடுப்பார்கள் இவ்வாறு செய்வதால் நினைத்தது நிறைவேறும் என்று செய்து வந்தார்கள்! ஆனால் இவ்வாறு செய்வதை நபி (ஸல்) அவர்கள் முற்றிலும் தடை செய்தார்கள்!
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ரஜப் மாதத்தின் முதல் பத்து நாள்களில் பிராணிகளைப் பலியிடுவதும் இல்லை!
(நூல் : ஸஹீஹ் புஹாரி : 5473)
• ரஜப் மாதத்தில் குர்பானி கொடுப்பதில் குறிப்பிட்ட தனிசிறப்பு எதுவும் கிடையாது! மற்ற மாதத்தில் குர்பானி கொடுத்தால் என்ன நன்மையோ அதே தான் இந்த மாதத்தில் குர்பானி கொடுத்தாலும்!
💟 ரஜப் மாதத்தில் சிறப்பு துஆ :
• ரஜப் மாதத்தை குறிப்பிட்டு சில துஆக்கள் உண்டு. ஆனால் இவ்வாறான ஹதீஸ்கள் அனைத்தும் மிகவும் பலகீனமானது ஆகும்! ரஜப் மாதத்தில் ஓதுவதற்கு என்று ஸஹீஹான எந்த துஆவும் இஸ்லாம் கூறவில்லை! கிழே குறிப்பிட்டுள்ள துஆ மிகவும் பிரபலமான ஒன்றாகும்!
நபி (ஸல்) அவர்கள் ரஜப் மாதம் நுழைந்தால், இறைவா! எங்களுக்கு ரஜபிலும் ஷஃபானிலும் பரகத் செய்வாயாக மேலும், ரமழானை எங்களுக்கு அடையச் செய்வாயாக என்று பிரார்த்திப்பார்கள்!
(நூல் : முஸ்னத் அஹ்மத் : 2346)
• இந்த ஹதீஸ் பலகீனமானது ஆகும்! இதன் அறிவிப்பாளர் வரிசையில் ஸாஇதா இப்னு அபிர்ருகாத் என்பவர் இடம்பெற்றுள்ளார்! இவர் குறித்து இமாம் புஹாரி (ரஹ்) அவர்கள் : இவரது ஹதீஸ் மறுக்கப்பட்டது என்றும்!
• இமாம் நஸாஈ (ரஹ்) அவர்கள் : இவர் யார் என்று எனக்குத் தெரியாது என்றும்! இமாம் இப்னு ஹிப்பான் (ரஹ்) அவர்கள் : இவரது செய்தியைக் கொண்டு ஆதாரம் எடுக்க முடியாது என்றும் கூறியுள்ளார்கள்!
💟 ரஜப் 27 மிஃராஜ் தினமா?
• நபி (ஸல்) அவர்கள் கஃபாவிலிருந்து அக்ஸா பள்ளிவாசல் வரை இரவோடு இரவாக இஸ்ராஃ பயணத்தை மேற்கொண்டு அங்கிருந்து ஏழு வானங்களுக்கு மேல் உயர்த்தப்பட்டார்கள். இது அல்லாஹ்வினால் நிகழ்த்தப்பட்ட அற்புதங்களில் ஒன்றாகும்! இதனை இஸ்ராஃ பயணம் (மிஃராஜ்) என்று குறிப்பிடப்படுகிறது.
• இன்று பல ஊர்களில் ஒவ்வொரு வருடமும் ரஜப் மாதத்தின் 27 ம் நாள் மிஃராஜுடைய தினம் என குறிப்பிட்டு அதில் நோன்பு வைப்பதும், பள்ளிகளில் கந்தூரிகள் வைத்து மௌலிதுகள் ஓதுவது, அதிகம் திக்ர் செய்வது, நபில் தொழுகை தொழுவது போன்ற செயல்களில் ஈடுப்படுகிறார்கள்!!!
• ஆனால் இதற்க்கு அல் குர்ஆனிலோ அல்லது ஹதீஸ்களிலோ அல்லது ஸஹாபாக்கள் வாழ்விலோ எந்த விதமான ஆதாரமும் கிடையாது!
• மிஃராஜ் என்பது உண்மையான நிகழ்வு ஆனால் அது எந்த நாளில் நடைபெற்றது என்பதை பற்றி நபி (ஸல்) அவர்கள் எந்த இடத்திலும் குறிப்பிட வில்லை!
• மிஃராஜ் பயணத்தின் பின் நபி (ஸல்) அவர்கள் பல வருடங்கள் வாழ்ந்தார்கள்! இதில் ரஜப் மாதம் வந்து விட்டால் இந்த நாளில் இந்த இரவில் இந்த அமல் செய்யுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறவும் இல்லை! நபி (ஸல்) அவர்களும் அன்று சிறப்பாக எந்த ஒரு அமலையும் செய்யவில்லை!!!
• ஸஹாபாக்கள் வாழ்வில் பார்த்தாலும் ஒரே ஒரு ஸஹாபி கூட மிஹ்ராஜ் இரவு அல்லது நாள் என்று இதை சிறப்பாக எந்த ஒரு காரியமும் செய்ய வில்லை!! மிஃராஜ் தினத்தை சிறப்பித்து கொண்டாடுவது தெளிவான வழிகேடாகும்!!!
• இஸ்லாம் எல்லா நிலைகளிலும் ஆணித்தரமாகக் கூறுகிறது! நமது மார்க்கமான இஸ்லாத்தில் நாம் எப்போதும் உறுதியாக இருக்க வேண்டும் அதே போன்று இஸ்லாத்தில் புதியவைகள் கலந்து விடாமலும் கவணமாக இருக்க வேண்டும்!
• ஏன் என்றால் இஸ்லாத்தில் புகும் ஒவ்வொரு புதுமையும் அது இஸ்லாம் என்ற பெயரில் நன்மை என்று கூறி வந்தாலும் சரியே அவை நம்மை நரகதிற்க்கே வழி காட்டும்!
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வின் வேதமாகும்! நடைமுறையில் மிகவும் சிறந்தது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும்!
காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும்! புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும்!
ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும்! ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்!
(நூல் : சுனன் நஸயீ : 1560)
@அல்லாஹ் போதுமானவன் 💞