
03/02/2025
"இறந்தும் வாழ்கிறார் அண்ணா"
1962ஆம் ஆண்டு, மே மாதம், ஒன்றாம் நாள்…
அறிஞர் அண்ணா தனது முதல் உரையைப் பாராளுமன்றத்தில் நிகழ்த்துகிறார். அண்ணாவின் பேச்சு அங்கிருந்த அனைவரையும் திடுக்கிட வைத்தது..
"உங்களோடு ஒரு நாடாக இருக்கக் கூட ஆசைதான். ஆனால் ஆசை வேறு. உண்மைகள் வேறு" என்று தொடங்கிய அண்ணா,
"இந்த உலகத்திற்கு வழங்கத் திட்டவட்டமான, தெளிவான, மற்றவர்களிடம் இருந்து வேறுபட்ட சில செய்திகள் எங்களிடம் உண்டு. அதனால் எங்களுக்கு தன்னாட்சி உரிமை தேவை என்று விரும்புகிறோம்" என்று அண்ணா பேசியபோது நாடாளுமன்ற மேலவை அரண்டுதான் போனது.
தென்னகத்தில் கொதித்தெழும் புதிய தேசிய இனம் பற்றிக் குறிப்பிட்டு, விழிப்புற்றிருக்கும் அவர்களின் சார்பில் தான், தன் பேச்சு அமைந்திருப்பதாக அண்ணா கூறினார்.
"இந்தியா ஒரு நாடல்ல" என்றும், "ஏற்கனவே பிரிந்து இருந்த நாடுகள் ஒன்று சேர்ந்து இருக்கும் இந்தத் துணைக் கண்டம் ஒரு கூட்டாட்சியாகவோ அல்லது பிரிக்கப்பட்டோ சிறிய ஒரே மாதிரி மக்கள் வாழும் நாடுகளின் கூட்டமைப்பாக மாறுவது தவிர்க்க முடியாதது" என்று அண்ணா கூறினார்.
"எல்லாப் பகுதிகளும் கலந்து பழகி சமுதாய முன்னேற்றமும், பொருளாதார முன்னேற்றமும் இந்தக் கூட்டமைப்பில் கூட்டாட்சித் தத்துவமாகப் பெருகி வளரும்" என்றும் அண்ணா கூறினார்.
ஓர் ஒன்றிய அரசு கூடத் தேவைப்படாத கூட்டமைப்பைத்தான் அண்ணா உருவகமாகக் கட்டமைத்தார்.
"தமிழ்நாடு என்பது தேசம்; திராவிட நாடு என்பது ஒரு கூட்டரசு; இந்தியா என்பது ஒரு பாதுகாப்புக் கழகம்; தேசியத்தை இப்படிப் பார்க்கக் கற்றுக் கொள்ளுங்கள்" என்று அண்ணா பாராளுமன்றத்தில் பாடம் நடத்தினார்.
அண்ணா மறைந்து அரை நூற்றாண்டு கடந்து, 2022ஆம் ஆண்டில், இதே கருத்தைப் பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் திரு. ராகுல் காந்தி பேசினார்.
"கூட்டாட்சித் தத்துவத்தை புரிந்து கொள்ள முடியாவிட்டால் தமிழ்நாட்டிற்குப் போய் அதைத் தெரிந்து கொள்ளுங்கள்" என்று ராகுல் காந்தி கூறியதன் பின்னால் அண்ணாவின் குரல் இருந்தது.
"எத்தனைக் காலம் ஆனாலும் தமிழ்நாட்டை, மதவாதம் ஆள முடியாது" என்று ராகுல்காந்தி முழங்கியதன் பின்னணியில் அண்ணாவின் குரல் இருந்தது.
நாடு, இனம், மொழி ஆகிய இன்றியமையாத உரிமைகளில், ஒன்றிய அரசு, காது கேளாதது போல் நடந்து கொண்டிருந்தால், அண்ணாவின் குரல் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பாராளுமன்றத்தில் தமிழினத்தின் உரிமைக் குரலாக, வேறு வேறு குரல்களாக ஒலித்துக் கொண்டேதான் இருக்கும்.
Commemorating Former Chief Minister of Tamil Nadu on his 56th Death Anniversary