Christian Historical Society

Christian Historical Society Engage, Enrich & Empower Christian Knowledge Engage, Empower and Enrich Tinnevelly

“வெள்ளைக்காரன் கொண்டு வந்த மதம் கிறிஸ்தவம்” - என்பவரா ? உங்களுக்கான பதிவு இந்திய கிருத்தவம் - அத்தியாயம் 17 வணிகம், ஆங்க...
21/07/2025

“வெள்ளைக்காரன் கொண்டு வந்த மதம் கிறிஸ்தவம்” - என்பவரா ? உங்களுக்கான பதிவு

இந்திய கிருத்தவம் - அத்தியாயம் 17

வணிகம், ஆங்கிலேயர்கள், மதமாற்றம் என்று பல இட்டுகட்டப்பட்ட புதர்களுக்குள்ளே மறைக்கப்பட்ட இந்திய கிறிஸ்தவத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஒரு அற்புதமான சான்று, 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வில்லியம் ஆஃப் மால்ம்ஸ்பரி (William of Malmesbury) என்ற ஆங்கில வரலாற்று ஆசிரியரின் குறிப்புகளிலிருந்து நமக்குக் கிடைக்கிறது. கடந்த பதிவில் எட்டாம் நூற்றாண்டிலே இங்கிலாந்து மனிதர்கள் ( சாக்சோனி )இந்திய கிறிஸ்தவத்தையும் திருச்சபையையும் அங்கீகரித்து, சகோதர திருச்சபையாக ஆதரவு அளித்ததை காண முடிந்தது. அதை தொடர்ந்து கி.பி. 1114-1123-க்கு இடையில் எழுதப்பட்ட இந்த ஆவணம், 12-ஆம் நூற்றாண்டிலேயே இங்கிலாந்து, இந்தியாவில் இருந்த கிறிஸ்தவரகளை அறிந்திருந்தது என்பதற்கு மறுக்க முடியாத ஆதாரமாக விளங்குகிறது.

இடைக்கால இங்கிலாந்தும் இந்திய கிறிஸ்தவர்களும்

12-ஆம் நூற்றாண்டின், வரலாற்று ஆசிரியரான வில்லியம் ஆஃப் மால்ம்ஸ்பரி (William of Malmesbury) தனது குறிப்புகளில், இங்கிலாந்தையும் இந்தியாவையும் நேரடியாக இணைத்த ஒரு முக்கியமான பயணத்தைப் பதிவு செய்துள்ளார்.

அவரது குறிப்பின்படி:

"எப்போதும் தர்மம் செய்வதில் கருத்தாய் இருந்த அவர் (மன்னர்), தன் தந்தையால் நியமிக்கப்பட்ட சபைகளின் சிலாக்கியங்களை உறுதிசெய்தார். மேலும், ரோமுக்கும் (Rome), இந்தியாவில் உள்ள அப்போஸ்தலர் தோமாவுக்கும் (அபோஸ்தலர் தோமாவின் திருச்சபைக்கும்) (St. Thomas in India) வெளிநாடுகளுக்கு அநேக பரிசுகளை அனுப்பினார். இதற்காக, ஷெர்போர்ன் (Sherborne) பிஷப்பான சிகெல்ம் (Sigelm) என்பவரை அனுப்பினார். அவர் வெற்றிகரமாக இந்தியாவுக்குள் வந்து... அங்கிருந்து திரும்பும்போது, அந்த நாட்டில் அதிகமாகக் காணப்படும் பல பளபளப்பான அந்நாட்டு ரத்தினங்களையும், நறுமணச் சாறுகளையும் கொண்டு வந்தார்." [ இந்திய திருச்சபையின் பெயர் தோமாவை தழுவினது என்பதினால் பல வரலாற்று குறிப்புகள் தோமாவை குறிப்பிடுவது போல திருச்சபையை குறிக்கிறது. ரோம திருச்சபை தன்னை பேதுரு (பெட்ராஸ்)என குறிப்பிடுவது போல ]
இந்தக் குறிப்பு பல முக்கியமான வரலாற்று உண்மைகளை நமக்குத் தெளிவுபடுத்துகிறது.

12-ஆம் நூற்றாண்டு ஆங்கிலத் திருச்சபை, "இந்தியாவில் உள்ள அப்போஸ்தலர் தோமாவின் சபைகளை, கிறிஸ்தவ அன்பை பேணும் அன்பளிப்புகளை பெற்றுக்கொள்ளத் தகுதியான ஒரு இடமாகக் கருதியுள்ளனர். அவர்கள் ரோமுக்கு (Rome) நிகராக இந்தியாவையும் மதித்துள்ளனர்.

ஷெர்போர்ன் (Sherborne) போன்ற ஒரு முக்கியமான திருச்சபை மையத்தின் பிஷப், இவ்வளவு செலவுமிக்க மற்றும் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டார் என்றால், இந்தியாவில் ஏற்கெனவே நன்கு வளர்ந்த கிறிஸ்தவ சபைகளும் கிறிஸ்தவர்களும் இருந்தன என்பது உறுதியாகிறது.

கி.பி. 1100-களிலேயே, இந்தியக் கிறிஸ்தவம் தொலைதூர ஐரோப்பிய சபைகளுடன் முறையான அளவுக்கு ஒழுங்கமைக்கப்பட்டும், சர்வதேச அளவில் இணைக்கப்பட்டும் இருந்தது என்பதை இது காட்டுகிறது.

அப்போஸ்தலர் தோமா தொடர்பு: ஆங்கிலக் குறிப்பேட்டில் "இந்தியாவில் உள்ள அப்போஸ்தலர் தோமா" என்று குறிப்பாகச் சொல்லப்பட்டிருப்பது, கிறிஸ்தவத்தின் ஆரம்ப காலத்திற்கே நம்மை அழைத்துச் செல்கிறது. அப்போஸ்தலனாகிய தோமா, இயேசு கிறிஸ்துவால் தேர்ந்தெடுக்கப்பட்ட பன்னிரண்டு சீடர்களில் ஒருவர். பழங்கால கிறிஸ்தவப் பாரம்பரியத்தின்படி, அப்போஸ்தலர் தோமா கி.பி. 52-ல் நற்செய்திப் பணியைச் செய்வதற்காக இந்தியாவிற்குப் பயணம் செய்தார்.

காலனித்துவ கதைகளுக்கு அப்பால்

வில்லியம் ஆஃப் மால்ம்ஸ்பரியின் (William of Malmesbury) குறிப்பு, ஐரோப்பியர்களால் தான் கிறிஸ்தவம் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டது என்ற காலனித்துவக் கதையை முற்றிலுமாகத் தகர்க்கிறது. மாறாக, இடைக்கால ஐரோப்பியர்கள் இந்தியக் கிறிஸ்தவத்தை ஒரு பழமையான, மரியாதைக்குரிய பாரம்பரியமாகவே பார்த்தார்கள் என்பதை இது வெளிப்படுத்துகிறது.

ரோமர் 10:18-ல் அப்போஸ்தலனாகிய பவுல், "அவைகளின் சத்தம் பூமியெங்கும் அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசிவரைக்கும் செல்லுகிறதே." என்று கூறுகிறார். இது நற்செய்தி ஆரம்ப காலத்திலேயே உலகம் முழுவதும் பரவியதைச் சுட்டிக்காட்டுகிறது.
12-ஆம் நூற்றாண்டில் ஒரு ஆங்கில அத்தியட்சர் இந்தியாவிற்கு ஒரு தூதரை அனுப்பி கிறிஸ்தவ நல்லுறவுகளை தொடர்புகளை ஏற்படுத்தினார் என்பது, இந்திய கிறிஸ்தவம் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக இருந்ததைக் காட்டுகிறது. இது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சமூகம் அல்ல, மாறாக சர்வதேச கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு வளர்ந்திருந்த ஒரு கிறிஸ்தவ சமூகம் என்பதையே இது காட்டுகிறது.

வில்லியம் ஆஃப் மால்ம்ஸ்பரியின் (William of Malmesbury) குறிப்பேடு, இடைக்கால இங்கிலாந்து இந்தியக் கிறிஸ்தவத்தைப் பற்றி அறிந்திருந்தது மட்டுமல்லாமல், அதை ஒரு அடையாளம் கண்டுகொள்ளகூடிய மற்றும் நன்கு வளந்த திருச்சபையாக ஏற்றுக்கொண்டு அதனுடன் தீவிரமாக ஈடுபட்டது என்பதற்கு ஒரு குறிப்பிடத்தக்க வரலாற்றுச் சான்றை வழங்குகிறது.

இந்த 12-ஆம் நூற்றாண்டு சாட்சியம், கிறிஸ்தவம் காலனித்துவத்தின் மூலம் மட்டுமே இந்தியாவிற்கு வந்தது என்ற கட்டுக்கதையை உடைத்து, அதற்குப் பதிலாக உலகம் முழுவதும் இருக்கும் பாரம்பரிய திருச்சபைகளை போல அப்போஸ்தல அங்கீகாரத்தைப் பெற்ற ஒரு பழங்கால அப்போஸ்தல பாரம்பரியத்தை வெளிப்படுத்துகிறது. இது இந்திய கிறிஸ்தவர்கள் தங்களின் கிறிஸ்தவம் இப்போது வந்தது அல்ல மாறாக இங்கு இருக்கும் பல மதங்களுக்கு முன்பே இங்கு வேரூன்றி இருந்த ஒரு உண்மையான தேவனின் மீது மக்கள் கொண்ட விசுவாசம் என்று நம்பிக்கை கொள்ளத் தூண்டுகிறது. அவர்களின் விசுவாசம் ஒரு வெளிநாட்டு மக்களின் விசுவாச தொடர்ச்சி அல்ல, மாறாக கிறிஸ்துவின் அப்போஸ்தலர்கள் மூலம் வேரூன்றிய, முதல் தலைமுறை கிறிஸ்தவம். பல நூற்றாண்டுகளாகத் தொடர்ச்சியால் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு சுதேச பாரம்பரியம்.பவுல் 1 கொரிந்தியர் 3:11ல் சொல்லியபடி போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது. என்ற வசனம் இந்திய கிறிஸ்தவத்திற்கு பொருந்தும்.

சந்தேகத்திலிருந்து விசுவாசத்திற்கு தோமாவை மாற்றிய அதே கர்த்தர், இன்றும் சந்தேகப்படும் இந்திய விசுவாசிகள் மூலம் செயல்பட்டு, அவர்களை அப்போஸ்தலர்களுடனும், ஆதி விசுவாசத்திலும் இணைக்கிறார். இன்னும் இந்திய கிறிஸ்தவ மரபை ஆங்கிலேயர்கள் கொண்டுவந்தது என்போமானால் இந்த வசனம் அதற்க்கு பதில் கொடுக்கும். “அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார்.” யோவான் 20:29

என் ஆண்டவரே, என் தேவனே!

தேவனுக்கே எல்லா மகிமையும் உண்டாவதாக!!!

தொடர்ந்து பயணிப்போம்....
படைத்தவரின் பாதையில்,
திருமதி. ரெமினா சுஜித்
கிறிஸ்தவ வரலாற்று சங்கம்
குறிப்புகள்:
William of Malmesbury, Chronicle of the Kings of England (1114-1123 A.D.), p. 118, as cited in C. P. Mathew and M. M. Thomas, The Indian Churches of St. Thomas, p. 9.

ரத்தமும் கண்ணீரும் சாட்சியான சரித்திரம்: மிஷனரி எவ்ரி ஐயரின் இறுதி நிமிடங்கள் - ஒரு உயிர்ப்புள்ள கடிதம்!சில கடிதங்கள் வெ...
20/07/2025

ரத்தமும் கண்ணீரும் சாட்சியான சரித்திரம்: மிஷனரி எவ்ரி ஐயரின் இறுதி நிமிடங்கள் - ஒரு உயிர்ப்புள்ள கடிதம்!



சில கடிதங்கள் வெறும் காகிதங்கள் அல்ல; அவை சரித்திரத்தின் சாட்சியங்கள். கண்ணீரால் எழுதப்பட்டு, தியாகத்தால் முத்திரையிடப்பட்டு, விசுவாசத்தால் உயிர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள். அப்படியான ஒரு கடிதம்தான், 1857-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 20-ஆம் தேதி, சிவகாசியிலிருந்து கனம். ராக்லாந்து என்ற மிஷனரி, லண்டனுக்கு எழுதியது. அது, தன் உயிர்த் தோழனும், சக ஊழியனுமான கனம். எவ்ரி ஐயரின் மரணத்தைப் பற்றிய அறிக்கை மட்டுமல்ல; அது மரணத்தை முத்தமிட்ட ஒரு பரிசுத்தவானின் விசுவாசப் பிரகடனம்.

முடிவின் ஆரம்பம்

ஆகஸ்ட் 16, 1857, ஞாயிற்றுக்கிழமை. கனம். எவ்ரி, தேவ வார்த்தையைத் தீர்க்கமாகப் பிரசங்கிக்கிறார். அன்று மாலையே, விதி காலரா நோயின் வடிவில் அவர் கதவைத் தட்டியது. ஆனால் அந்த தேவ மனிதனோ, தன் உடல் வலியையும் மீறி, அடுத்த நாள் (ஆகஸ்ட் 17, திங்கள்), ஆறு மைல் தொலைவில் இருந்த கிராமத்திற்கு தன் மந்தையைச் சந்திக்க குதிரையில் புறப்படுகிறார். ஒரு மேய்ப்பனின் இதயம் அப்படித்தானே இருக்கும்?

ஆனால், பயணம் பாதியிலேயே நின்றது. நோய் தீவிரமடைய, எட்டு மைல் தொலைவில் தோனுகல் என்ற கிராமத்தில் தங்கியிருந்த தன் நண்பர் ராக்லாந்துக்கு மருந்து கேட்டு அவசரச் செய்தி அனுப்புகிறார். "நீ வரவேண்டாம், மருந்தை மட்டும் அனுப்பு" என்று கடிதத்தில் கெஞ்சுகிறார். நண்பனின் நிலையை அறியாத ராக்லாந்து ஒரு கணம் தயங்குகிறார். நண்பகல் வெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. ஆனால், நட்பின் குரல், வெயிலின் கொடுமையை வென்றது. எந்தத் தயக்கமும் இன்றி தன் நண்பனைக் காணப் புறப்பட்டதை, "நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்" என்று ராக்லாந்து தன் கடிதத்தில் குறிப்பிடுகிறார். அவர் மட்டும் அன்று தயங்கியிருந்தால், சரித்திரம் இந்த விலைமதிப்பற்ற இறுதி உரையாடல்களை இழந்திருக்கும்.

மரணப் படுக்கையில் மலர்ந்த விசுவாசப் பூக்கள்

ராக்லாந்து, எவ்ரியைக் கண்டபோது கண்ட காட்சி நெஞ்சை உலுக்குகிறது. கண்கள் குழிவிழுந்து, கால்களில் தசைப்பிடிப்பு, கைகள் மரணத்தின் குளிர்ச்சியைப் போர்த்தியிருந்தன. தன் நண்பனின் கரங்களைக் கண்டதும், எவ்ரி அதைத் தன் உதடுகளில் வைத்து, உடைந்த குரலில் சொன்ன முதல் வார்த்தை இதுதான்:

"ஓ! கடவுள் என் தந்தை என்று எனக்குத் தெரியாவிட்டால், நான்... மிகவும் பரிதாபத்திற்குரிய மனிதனாக இருந்திருப்பேன்."

ஆ! என்னவொரு விசுவாச அறிக்கை! மரணத்தின் வாசலில் நின்றுகொண்டு, உலகத்தின் எந்த உதவியும் தன்னைக் காப்பாற்றாது என்று தெரிந்த பிறகும், "தேவன் என் தகப்பன்" என்ற உறவின் நிச்சயம் அவருக்குள் எவ்வளவு பெரிய பெலனைக் கொடுத்திருக்கிறது!

ராக்லாந்தின் இதயம் உடைந்துபோக, "நீங்கள் பிழைத்துக்கொள்வீர்கள்" என்று ஆறுதல் கூறுகிறார். ஆனால் எவ்ரியோ, நித்தியத்தை நோக்கி தன் பார்வையைத் திருப்பியிருந்தார். அவர் அடுத்து சொன்ன வார்த்தைகள், ஒவ்வொரு கிறிஸ்தவனும் தன் இதயத்தில் பதிக்க வேண்டியவை:

"நான் விரும்புகிறது என்னவென்றால், புறப்பட்டு இயேசுவுடன் இருக்க வேண்டும்; ஆனால் தேவன் எனக்கு பூமியில் இன்னும் செய்ய வேலை வைத்திருந்தால், நான் இருக்கத் தயாராக இருக்கிறேன்."

பரலோகத்தின் மீது வாஞ்சை, அதே சமயம் பூமியில் தேவ சித்தத்தைச் செய்ய முழுமையான அர்ப்பணிப்பு. இதுவல்லவோ பக்குவப்பட்ட விசுவாசம்!

காலராவின் கொடிய தாகம் அவரை வாட்டியது. அப்போது அவர் முணுமுணுத்தது:

"எனக்கு மிகவும் தாகமாக இருக்கிறது; ஆனால் அது ஒன்றும் பெரிதல்ல, பசியும் தாகமும் இல்லாத இடத்திற்கு நான் விரைவில் சென்றுவிடுவேன்."

தன் சரீர வேதனையை, வரப்போகும் பரலோகத்தின் மகிமையோடு ஒப்பிட்டு, அதைத் துச்சமாக எண்ணிய அந்த வைராக்கியம் நம்மைச் சிலிர்க்க வைக்கிறது.

அன்பின் இறுதிப் பரிமாற்றம்

அந்தச் சின்னஞ்சிறு பள்ளிக்கூடத்தில், ராக்லாந்து, சில வேத போதகர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் எவ்ரியின் உண்மையுள்ள குதிரைக்காரன் ஜான் ஆகியோர் இரவு முழுவதும் கண்விழித்து பணிவிடை செய்கின்றனர். அவரின் குளிர்ந்த கால்களைத் தேய்த்து சூடுபடுத்த முயல்கின்றனர். வலியால் துடித்த நண்பனைப் பார்த்து ராக்லாந்து, "சகோதரரே, வலியைப் போக்க எப்படித் தேய்ப்பது என்று எனக்குத் தெரியவில்லையே" என்று வருந்துகிறார். அதற்கு எவ்ரி சொன்ன பதில், ராக்லாந்தின் இதயத்தை அன்பால் நிரப்பியது:

"ஓ! அன்புள்ள திரு. ராக்லண்ட், நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன்."

மரண வேளையிலும் அன்பு பாராட்டவும், நன்றி சொல்லவும் மறக்காத அந்தப் பண்பட்ட உள்ளம் எப்பேர்ப்பட்டது! "இரட்சிப்பின் வாரிசுகளுக்குப் பணிவிடை செய்வது தேவதூதர்களின் வேலை; அவருக்குப் பணிவிடை செய்வதை நான் ஒரு கௌரவமாக உணர்ந்தேன்" என்று ராக்லாந்து எழுதுகிறார். ஆம், அது தேவ தூதர்கள் பொறாமைப்படும் பணிவிடை.

ஓய்வுக்குள் பிரவேசித்த போர்வீரன்

ஆகஸ்ட் 18, 1857, செவ்வாய் காலை 7:30 மணி. மூச்சுத்திணறல் அதிகமாகிறது. அவரை ஒரு நாற்காலியில் அமர வைக்கிறார்கள். ராக்லாந்து தன் நீல நிற "ரயில்வே போர்வையால்" அவரைப் போர்த்தி, தன் தலையணையை அவர் தலைக்குப் பின்னால் தன் கைகளால் தாங்கிக்கொள்கிறார். அந்த இறுதி அரைமணி நேரம், ராக்லாந்துக்கு ஒரு யுகமாக இருந்திருக்கும். தன் நண்பன் வேதனையின்றிச் செல்ல வேண்டும் என்று அவர் ஏறெடுத்த ஜெபத்தைக் கர்த்தர் கேட்டார்.

காலை 8:00 மணிக்கு, எந்தப் போராட்டமும் இன்றி, ஒரு குழந்தை தன் தாயின் மடியில் உறங்குவது போல, தன் பரலோக தந்தையின் கரங்களில் அமைதியாய் இளைப்பாறினார் எவ்ரி.

அன்று மாலை 8 மணிக்கு, பனையடிபட்டியில், கட்டப்பட்டுக்கொண்டிருந்த மிஷன் பங்களா அருகே, ஒரு மரத்தடியில் எளிய கல்லறை தோண்டப்பட்டது. ஒரு தச்சர் செய்த மரப்பெட்டியில், ராக்லாந்து தன் நண்பனுக்குப் போர்த்திய அதே நீல நிற ரயில்வே போர்வை விரிக்கப்பட்டு, அதன்மேல் எவ்ரியின் உடல் வைக்கப்பட்டு, அவர் உண்மையாய் சேவித்த கர்த்தர் அவரை எழுப்பும் வரை இளைப்பாற அடக்கம் செய்யப்பட்டது.

நமக்கான சவால்

ராக்லாந்து தன் கடிதத்தை இப்படி முடிக்கிறார்:

"அவர் எவ்வளவு பிரகாசமான, பரிசுத்தமான ஓட்டத்தை ஓடியிருக்கிறார்... கர்த்தர் தனது சிறந்தவர்களை முதலில் எடுத்துக்கொள்கிறார்... சரி, அவர் தனக்குச் சொந்தமானதை வைத்து அவர் விரும்பியதைச் செய்யட்டும்: அது சரியானது; அது மகிமையானது, அது சிறந்தது."

இந்தக் கடிதம் வெறும் காகிதமல்ல. அது ஒரு சவால். எவ்ரியின் தியாகம், ராக்லாந்தின் அன்பு, அன்று உடன் நின்ற வேதபோதகர்களின் அர்ப்பணிப்பு... இன்று நம்மிடம் என்ன கேட்கிறது? நம்முடைய விசுவாசம், சோதனையின்போது "தேவன் என் தந்தை" என்று சொல்லுமளவிற்கு உறுதியாக இருக்கிறதா? பரலோகத்தின் மீது வாஞ்சையும், பூமியில் உழைக்க அர்ப்பணிப்பும் நம்மிடம் உண்டா? மரணத்தின் குளிரிலும் அன்பு காட்ட நம்மால் முடியுமா?

சிந்திப்போம். இந்த மிஷனெரிகளின் தியாகம் வீண்போகவில்லை என்பதை நம் வாழ்வின் மூலம் நிரூபிப்போம்.

#சரித்திரத்தின்சாட்சியம் #விசுவாசத்தின்வீரர்கள்


fans

Christian Historical Society

கிழக்கிந்திய கம்பெனிக்கு முந்தைய இந்திய கிறிஸ்தவமும் - இங்கிலாந்தும் இந்திய கிருத்தவம் - அத்தியாயம் 16  வரலாற்றுப் புத்த...
19/07/2025

கிழக்கிந்திய கம்பெனிக்கு முந்தைய இந்திய கிறிஸ்தவமும் - இங்கிலாந்தும்

இந்திய கிருத்தவம் - அத்தியாயம் 16

வரலாற்றுப் புத்தகங்களின் தூசி படிந்த பக்கங்களுக்குள், இந்தியாவில் கிறிஸ்தவத்தின் வருகை குறித்த நமது எண்ணங்களை மாற்றக்கூடிய மற்றொரு அற்புதமான சாட்சி மறைந்துள்ளது. கி.பி. 883-ஆம் ஆண்டைச் சேர்ந்த ஆங்கிலோ-சாக்சன் வரலாற்றுப் பதிவேடு (Anglo-Saxon Chronicle) ஒரு அசாதாரண நிகழ்வைப் பதிவு செய்கிறது. அது, இங்கிலாந்து (England) மன்னரான ஆல்ஃபிரட் (Alfred), அப்போஸ்தலர்களான தோமா (Thomas) மற்றும் பர்த்தொலொமேயு (Bartholomew) ஆகியோரின் அப்போஸ்தல பாரம்பரியம் ஏற்கனவே வேரூன்றியிருந்த இந்தியாவிற்குத் தனது குழுக்களை அனுப்பியதை விவரிக்கிறது. இந்தச் சிறிய வரலாற்றுப் பதிவு, ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முன்பே, ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் இந்தியாவை வெற்றி கொள்ளப்பட வேண்டிய ஒரு பகுதியாகப் பார்க்கவில்லை, மாறாக கிறிஸ்துவின் சொந்த சீடர்களே நற்செய்தியின் விதையை விதைத்த ஒரு பூமியாக அங்கீகரித்திருந்தனர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் இந்தியா கிறிஸ்தவத்தை அறியாத இடமாக அல்ல - மாறாக கிறிஸ்தவ திருச்சபை உள்ள இடமாகவே பார்க்கப்பட்டது.

இன்றைய இந்தியர்களுக்கு, இந்த பண்டைய சாட்சியம் ஆழமான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. நமது தேசத்தில் கிறிஸ்தவத்தின் இருப்பு, பிற்காலத்தில் வந்த காலனித்துவ ஆதிக்கத்தினாலோ அல்லது வெளிநாட்டுக் கலாச்சாரத் திணிப்பினாலோ ஏற்படவில்லை என்பதை இது நிரூபிக்கிறது. மாறாக, அதன் வேர்கள் இயேசு கிறிஸ்துவோடு நேரில் வாழ்ந்தவர்களின் நேரடி சாட்சியத்தில் ஆழமாகப் பதிந்துள்ளன.

ஐரோப்பா விசுவாசத்திற்காக இந்தியாவை நோக்கிய காலம்

ஆங்கிலோ-சாக்சன் பதிவேட்டின் கி.பி. 883-ஆம் ஆண்டுக்கான குறிப்பு, பிற்கால வரலாற்று விவரிப்புகளுக்கு முற்றிலும் நேர்மாறான ஒரு சித்திரத்தை அளிக்கிறது. ஐரோப்பியர்கள் இந்தியாவிற்குக் கிறிஸ்துவை நேரடியாக அறிவிப்பதற்க்கு வருவதற்குப் பதிலாக, இங்கிலாந்தின் (England) மிகவும் புகழ்பெற்ற கிறிஸ்தவ மன்னர்களில் ஒருவரான ஆல்ஃபிரட் (Alfred) இருந்தார். அப்போஸ்தல கிறிஸ்தவம் ஏற்கனவே செழித்து வளர்ந்திருந்த ஒரு தேசத்திற்குத் தனது தூதுக்குழுக்களை அனுப்பினார்.

"இந்த வருடத்தில் (கி.பி. 883) சிகெல்ம் (Sighelm) மற்றும் ஏத்தெல்ஸ்தான் (Athelstan) ஆகியோர், மன்னர் ஆல்ஃபிரட் (Alfred) கட்டளையிட்ட காணிக்கைகளை ரோம் (Rome) நகருக்கும், மேலும் இந்தியாவிலுள்ள அப்போஸ்தலர் தோமா (Thomas) மற்றும் அப்போஸ்தலர் பர்த்தொலொமேயுவிடமும் (Bartholomew) கொண்டு சென்றனர்... பின்னர் அவர்கள்... தேவனின் கிருபையால், தங்கள் பொருத்தனைகளை நிறைவேற்றிய பிறகு மிகுந்த வெற்றியைப் பெற்றனர்”.

மன்னர் ஆல்ஃபிரட் (Alfred) தனது கவனத்தை இந்தியாவின் பக்கம் திருப்பினார் என்பதே, அந்தக் காலகட்டத்தில் இந்தியக் கிறிஸ்தவம் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டிருந்தது என்பதற்கான தெளிவான சான்றாகும். இது ஒரு சாதாரண நடவடிக்கை அல்ல, மாறாக நமது தேசத்தில் ஆவிக்குரிய ரீதியில் முக்கியமான ஒன்று நடப்பதை உணர்ந்து, அதை ஏற்றுக்கொண்டதன் வெளிப்பாடாகும். வெகு தொலைவில் உள்ள இங்கிலாந்தில்கூட, தொடக்ககால கிறிஸ்தவ வரலாற்றில் இந்தியாவிற்கு ஒரு சிறப்பு இடம் உண்டு என்பதை விசுவாசிகள் புரிந்துகொண்டிருந்தனர் என்பதை இந்தப் பதிவு சுட்டிக்காட்டுகிறது.

அப்போஸ்தல அடித்தளம்: இயேசுவின் சீடர்களுடன் நேரடித் தொடர்பு

இந்தப் பதிவேடு, தோமா (Thomas) மற்றும் பர்த்தொலொமேயு (Bartholomew) ஆகியோரைப் பற்றிக் குறிப்பிடும்போது அப்போஸ்தல பாரம்பரியத்தைக் கொண்டு வந்தவர்களாக அடையாளம் காட்டுகிறது. இவர்கள் இருவரும் இயேசு கிறிஸ்துவால் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பன்னிரண்டு சீடர்களில் அடங்குவர். தோமா, இயேசுவின் உயிர்த்தெழுதலை ஆரம்பத்தில் சந்தேகப்பட்டாலும், பின்னர் அவரின் காயங்களைக் கண்டபின் கிறிஸ்துவின் மரணத்தின் மீதான வெற்றிக்கு ஒரு ஜீவனுள்ள சாட்சியாக மாறினார். பர்த்தொலொமேயு (நத்தானியேல் என்றும் அழைக்கப்படுகிறார்), இயேசுவால், “இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன்” (யோவான் 1:47) என்று பாராட்டப்பட்ட சீடர்.

இவர்கள் வெறும் மத போதகர்களோ தத்துவஞானிகளோ அல்ல. மாறாக, இயேசுவின் அற்புதங்களைக் கண்ணால் கண்டவர்கள், அவருடைய போதனைகளை நேரடியாகக் கேட்டவர்கள், அவருடைய உயிர்த்தெழுதலை தனிப்பட்ட முறையில் அனுபவித்தவர்கள். இந்தியாவில் இவர்களுடைய "அப்போஸ்தல பாரம்பரியம்" என்று இந்தப் பதிவேடு குறிப்பிடும்போது, அது வெறும் மத சடங்குகளைப் பற்றிப் பேசவில்லை. மாறாக, கிறிஸ்துவிடமிருந்து நேரடியாகப் பெறப்பட்ட வல்லமையுள்ள நற்செய்தியையே அது சுட்டிக்காட்டுகிறது.

அப்போஸ்தலனாகிய யோவான் சொன்னது போல, "ஆதிமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக்குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம்" (1 யோவான் 1:1). இந்த சாட்சியத்தின் அடிப்படையில் உருவானதே இந்திய கிறிஸ்தவம்.

மேலான வெற்றி: தேவனின் கரம் ஆரம்பகால இந்திய ஊழியத்தில்

அந்த வரலாற்றுப் பதிவில் உள்ள மிக முக்கியமான சொற்றொடர், "தேவனின் கிருபையால், அவர்கள் மிகவும் வெற்றிகரமாக இருந்தனர்" என்பதாகும். இந்த எளிய வாக்கியம் ஆழமான இறையியல் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இந்தியாவில் இந்த ஆரம்பகால கிறிஸ்தவ ஊழியங்களின் வெற்றிக்குக் காரணம் மனிதனின் திறமையோ, அரசியல் அதிகாரமோ, செல்வாக்கோ, கலாச்சார மாற்றங்களோ அல்ல, மாறாக அது தேவனுடைய கிருபை என்று தெளிவாகக் கூறப்படுகிறது.

ஆங்கிலோ-சாக்சன் பதிவேட்டின் இந்தச் சிறிய சாட்சியம், இந்தியக் கிறிஸ்தவம் மிகவும் வலிமையான அடித்தளத்தின் மீது நிற்கிறது என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. அந்த அடித்தளம், மனித முயற்சியால் அல்ல, மாறாக கிறிஸ்துவின் சொந்த அப்போஸ்தலர்களின் நேரடி சாட்சியாலும், தேவனுடைய கிருபையால் ஆசீர்வதிக்கப்பட்டதாலும், அற்புதமான வல்லமையால் வெற்றி பெற்றதாலும் உருவானது.

இன்றைய இந்தியாவில் கிறிஸ்தவ அடையாளம் குறித்த சவால்களையும் கேள்விகளையும் நாம் எதிர்கொள்ளும்போது, இந்த வரலாற்று உண்மையிலிருந்து நாம் நம்பிக்கையைப் பெறலாம்: நற்செய்தியை விதைத்தவர்கள் இயேசுவை தனிப்பட்ட முறையில் அறிந்தவர்கள், அதை வளர்த்தது கர்த்தருடைய கிருபை. அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னது போல, “சகோதரரே, நான் உங்களிடத்தில் வந்தபோது, தேவனுடைய இரகசியத்தை அறிவிக்க, மிகுந்த ஞானத்தோடும் விசேஷித்த பேச்சோடும் வரவில்லை. இயேசு கிறிஸ்துவையும், சிலுவையில் அறையப்பட்ட அவரையும் தவிர, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன்” (1 கொரிந்தியர் 2:2). இந்த வசனத்தில் பவுல் கிறிஸ்துவை மட்டுமே மையப்படுத்தி போதிக்க விரும்பினார், மற்ற ஞானங்களையோ அல்லது பேச்சாற்றலையோ காட்ட விரும்பவில்லை அதே போலத்தான் அப்போஸ்தலர்களின் சுவிசேஷப் பணியையும், வரலாறுகளையும் நாம் பார்க்கும்போது, அவர்கள் கிறிஸ்துவை மட்டுமே மையமாகக் கொண்டு உண்மையையும், ஜீவனையும், சத்தியத்தையும் விதைத்ததை காண்கிறோம். அவர்கள் எல்லாவற்றிலும் கிறிஸ்துவே கருவாகவும், முக்கியத்துவமாகவும் இருந்தார்.

தேவனுக்கே எல்லா மகிமையும் உண்டாவதாக!!!

தொடர்ந்து பயணிப்போம்....
படைத்தவரின் பாதையில்,
திருமதி. ரெமினா சுஜித்
கிறிஸ்தவ வரலாற்று சங்கம்

குறிப்பு:
James Ingram (trans.), The Anglo-Saxon Chronicle, p. 68 - Entry for 883 A.D.

ஹென்றி கான்ஸ்டன்டைன் ஹக்ஸ்டபிள்: சாயர்புரம் கண்ட சிற்பி பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழகத்தின் சமய மற்றும் சமூக வெளியில் ...
19/07/2025

ஹென்றி கான்ஸ்டன்டைன் ஹக்ஸ்டபிள்: சாயர்புரம் கண்ட சிற்பி

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழகத்தின் சமய மற்றும் சமூக வெளியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய மேலைநாட்டு சமயப் பரப்பாளர்களுள் ரெவரெண்ட் ஹென்றி கான்ஸ்டன்டைன் ஹக்ஸ்டபிள் (Rev. Henry Constantine Huxtable) குறிப்பிடத்தக்கவர். அவரது திடமான கொள்கைகள், தொலைநோக்குப் பார்வை மற்றும் அயராத உழைப்பினால், குறிப்பாக சாயர்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கிறிஸ்தவ சமய வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றினார். திருச்சபை நிர்வாகம், கல்வி மற்றும் சமூக சீர்திருத்தம் எனப் பல்துறைகளிலும் முத்திரை பதித்த அவரது வாழ்க்கை மற்றும் பணிகள் குறித்த விரிவான ஆய்வு இது.

பிறப்பு மற்றும் ஆரம்பகால வாழ்க்கை

ஹென்றி கான்ஸ்டன்டைன் ஹக்ஸ்டபிள் 1826 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரில் பிறந்தார். இவரது தந்தை டாக்டர் ஏ. ஹக்ஸ்டபிள் ஆவார். லண்டனில் உள்ள புகழ்பெற்ற கிங்ஸ் கல்லூரியில் தனது இறையியல் மற்றும் klasiki கல்வியைப் பயின்றார். கிறிஸ்தவ சமயத்தின் மீது கொண்ட ஆழமான பற்றுதல், அவரை சமயப் பரப்பாளராக வெளிநாடுகளில் பணியாற்றத் தூண்டியது.

திருமணமும் இந்தியப் பயணமும்

எலிசா அமியர் (1824-1901) என்ற பெண்மணியை மணந்த ஹக்ஸ்டபிள், அவருடன் இணைந்து சமயப் பணியாற்றுவதற்காக இந்தியா வந்தார். 1852 ஆம் ஆண்டில் அவர்களது மகன் ஹென்றி அந்தோணி ஹக்ஸ்டபிள் மெட்ராஸில் பிறந்தார்.

சாயர்புரம் திருச்சபையில் ஹக்ஸ்டபிளின் ஊழியம் (1852-1857)

1852 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், ரெவரெண்ட் ஹக்ஸ்டபிள் சாயர்புரம் திருச்சபையின் பொறுப்பை ஏற்றார். அவர் பொறுப்பேற்றபோது, சாயர்புரம் சேகரத்தின் நிலை குறித்த புள்ளிவிவரங்கள் 'சாயர்புரம் திருச்சபை சரித்திரம்' என்ற நூலில் பின்வருமாறு பதிவு செய்யப்பட்டுள்ளது:

• சமயப் பரப்பாளர் - 1
• ஐரோப்பிய உபதேசியார் - 1
• சுதேசி உபதேசியார்கள் – 7
• ஞானஸ்நானம் பெற்ற கிறிஸ்தவர்கள் - 388 (ஆண்கள் 98, பெண்கள் 95, பிள்ளைகள் 200)
• ஞானஸ்நானம் பெறாத ஆயத்தக்காரர்கள் - 1,137 (ஆண்கள் 330, பெண்கள் 298, பிள்ளைகள் 509)
• நற்கருணைப் பங்காளர்கள் – 70

திருச்சபை நிர்வாகமும் ஆன்மீக வளர்ச்சியும்

ஹக்ஸ்டபிள் ஒரு கண்டிப்பான நிர்வாகியாகவும், ஆன்மீக ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவராகவும் திகழ்ந்தார். திருச்சபை உறுப்பினர்கள் ஒழுங்கான ஆராதனைப் பங்களிப்பையும், நற்கருணை உட்கொள்ளுதலையும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார். அவரது காலத்தில், சாயர்புரத்தில் ஒரு புதிய மற்றும் பெரிய தேவாலயத்தின் தேவை உணரப்பட்டது. இதற்காக பெருமுயற்சி எடுத்து, 1854 ஆம் ஆண்டு அக்டோபர் 19 ஆம் தேதி, பரிசுத்த தமதிரித்துவ ஆலய கட்டுமானத்திற்கு (Holy Trinity Church) அஸ்திவாரம் நாட்டினார்.

கல்விப் பணி

சாயர்புரம் செமினரியின் வளர்ச்சியில் ஹக்ஸ்டபிளின் பங்கு மகத்தானது. கல்வியின் மூலமே சமூகத்தின் உண்மையான விடுதலையும், ஆன்மீக வளர்ச்சியும் சாத்தியம் என அவர் நம்பினார். செமினரியின் பாடத்திட்டங்கள் மற்றும் நிர்வாகத்தில் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்து, அதன் தரத்தை உயர்த்தினார்.

சமூகப் பணிகள் மற்றும் சவால்கள்

ஹக்ஸ்டபிளின் ஊழியத்தில் சமூக சீர்திருத்தமும் ஒரு முக்கிய அங்கமாக இருந்தது. குறிப்பாக, ஆதரவற்றோருக்கான புகலிடம் ஒன்றை நிறுவுவதில் அவர் ஆர்வம் காட்டினார். அவரது பணிக்காலத்தில், திருச்சபைக்குள் நிலவிய சாதியப் பிரிவினைகள் பெரும் சவாலாக இருந்தன. "சட்டாம்பிள்ளை" குழுவினரால் ஏற்பட்ட பிரிவினையை அவர் உறுதியுடன் கையாண்டு, திருச்சபையின் ஒற்றுமையைப் பாதுகாக்க முயன்றார்.

இறுதிக் காலமும் மரணமும்

1857 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஏற்பட்ட சிப்பாய்க் கலகத்தைத் தொடர்ந்து, பல ஐரோப்பிய சமயப் பரப்பாளர்கள் தங்கள் தாயகம் திரும்பினர். அந்தச் சூழலில், ஹக்ஸ்டபிளும் தனது குடும்பத்துடன் இங்கிலாந்து திரும்பினார். இங்கிலாந்தில், ஹியென்ட்போர்டு, யோவில் மற்றும் பெட்டிஸ்கோம்ப், சோமர்செட் ஆகிய இடங்களில் குருவானவராகப் பணியாற்றினார்.
1870 ஆம் ஆண்டில், மொரிஷியஸ் தீவின் ஆயராக நியமிக்கப்பட்டார். எனினும், அவரது ஆயர் பதவிக்காலம் குறுகியதாகவே இருந்தது. 1871 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மொரிஷியஸில் காலமானார்.

மொழிபெயர்ப்பு மற்றும் எழுத்துப் பணிகள்

ஹக்ஸ்டபிள் நேரடியாக தமிழ் மொழிக்கு ஆற்றிய பங்களிப்புகள் குறித்த விரிவான பதிவுகள் கிடைக்கப்பெறவில்லை. இருப்பினும், அவரது கடிதங்கள் மற்றும் திருச்சபை அறிக்கைகள், அக்காலத்தின் சமூக, சமய நிலைகளைப் புரிந்துகொள்ள உதவும் முக்கிய வரலாற்று ஆவணங்களாகத் திகழ்கின்றன. இந்த ஆவணங்கள், அன்றைய திருநெல்வேலி கிறிஸ்தவ சமூகத்தின் வளர்ச்சி மற்றும் அவர்கள் எதிர்கொண்ட சவால்கள் குறித்து விரிவான பார்வையை அளிக்கின்றன.

முடிவுரை

ரெவரெண்ட் ஹென்றி கான்ஸ்டன்டைன் ஹக்ஸ்டபிளின் ஐந்தாண்டு கால சாயர்புரம் ஊழியம், குறுகியதாக இருப்பினும், அது ஏற்படுத்திய தாக்கம் ஆழமானது மற்றும் நீண்டகால விளைவுகளைக் கொண்டது. ஒரு கண்டிப்பான நிர்வாகியாக, ஆன்மீக வழிகாட்டியாக, கல்வி மேம்பாட்டாளராக மற்றும் சமூக சீர்திருத்தவாதியாக அவர் ஆற்றிய பணிகள், சாயர்புரம் திருச்சபையின் வரலாற்றில் அவரை ஒரு முக்கிய சிற்பியாக நிலைநிறுத்துகிறது. அவரது அர்ப்பணிப்புள்ள ஊழியம், இன்றும் பலருக்கு உத்வேகம் அளிப்பதாக அமைந்துள்ளது.


fans

கிறிஸ்தவர்கள் – இந்தியாவின் பூர்வ குடிகள் -  தரிசப்பள்ளி செப்பேடுகள்இந்திய கிருத்தவம் - அத்தியாயம் 15 இந்திய கிறிஸ்தவ வர...
18/07/2025

கிறிஸ்தவர்கள் – இந்தியாவின் பூர்வ குடிகள் - தரிசப்பள்ளி செப்பேடுகள்

இந்திய கிருத்தவம் - அத்தியாயம் 15

இந்திய கிறிஸ்தவ வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால், சில ஆவணங்கள் மட்டுமே தரிசப்பள்ளி செப்பேடுகளைப் (Tarisapalli copper plates) போல முக்கியத்துவமும் வாய்ந்ததாக இருக்கின்றன. கி.பி. 849-ம் ஆண்டைச் சேர்ந்த இந்த பழங்காலச் செப்பேடுகள், இந்தியத் துணைக்கண்டத்தில் கிறிஸ்தவர்கள் செழித்து வளர்ந்திருந்தன என்பதற்கு, இந்தியாவிலேயே உருவான மிகப்பழமையான சாட்சியமாகத் திகழ்கின்றன. இவை வெறும் வரலாற்றுச் சின்னங்கள் மட்டுமல்ல; தேவனுடைய பராமரிப்பு என்பது எந்த ஒரு நாட்டிற்கோ அல்லது கலாச்சாரத்திற்கோ உரியது மட்டுமல்ல, அவருடைய நாமம் மகிமைப்படும் எல்லா இடங்களிலும் அவர் தம் மக்களை நிலைநிறுத்துகிறார் என்ற ஆழமான உண்மையையும் வெளிப்படுத்துகின்றன.

இந்தச் செப்பேடுகளில் பொறிக்கப்பட்டுள்ள வரலாறு கேரளாவில் ஒரு இந்து மன்னர் இயேசு கிறிஸ்துவின் சீடர்களை அங்கீகரித்து, அவர்களுக்கு "பூமியும், சந்திரனும், சூரியனும் உள்ள காலம் வரை" நிலைத்திருக்கும் சிலாக்கியங்களை வழங்கிய காலத்தைப் பற்றிப் பேசுகிறது. இந்த ஆவணம், கொல்லத்தில் (Quilon/Kollam) ஒரு கிறிஸ்தவ தேவாலயம் நிறுவப்பட்டதை மட்டும் விவரிக்கவில்லை, மாறாக கர்த்தர் தம்முடைய சித்தத்தை நிறைவேற்ற இந்த உலகத்தில் உள்ள அதிகாரிகளை எப்படிப் பயன்படுத்துகிறார் என்பதையும் காட்டுகிறது. வேதம் சொல்வது போல, "ராஜாவின் இருதயம் கர்த்தரின் கையில் நீர்க்கால்களைப் போலிருக்கிறது; அதைத் தமது சித்தத்தின்படியெல்லாம் திருப்புகிறார்" (நீதிமொழிகள் 21:1).

தரிசப்பள்ளி செப்பேடுகள்: இந்தியாவின் முதல் கிறிஸ்தவ சாசனம்

தரிசப்பள்ளி செப்பேடுகள் என்று அழைக்கப்படும் இந்தச் சாசனம், ஸ்தாணு ரவி (Sthanu Ravi) மன்னனின் ஐந்தாவது ஆட்சி ஆண்டில், வேணாடு (Venad) ராஜ்யத்தின் அரசனான அய்யனடிகள் திருவடிகள் (Ayynadikal) என்பவரால் வழங்கப்பட்டது. இன்றைய கேரளாவின் தென் பகுதியை உள்ளடக்கிய இந்த வேணாடுதான், பிற்காலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானமாக உருவானது. இந்தச் செப்பேடுகள் தமிழ்-மலையாளம் கலந்த மொழியில் எழுதப்பட்டு, சில பகுதிகள் பஹ்லவி (Pahlavi) மற்றும் அரபு (Arabic) மொழிகளிலும் காணப்படுகின்றன. புதிதாகக் கட்டப்பட்ட ஒரு தேவாலயத்திற்கு வழங்கப்பட்ட மானியங்களை இந்த சாசனம் விவரிக்கிறது.

இந்தச் செப்பேடுகளின் தனித்துவத்திற்கு காரணம் அதன் பழமை மட்டுமல்ல, அதன் உள்ளடக்கமும்தான். இது இன்றைய சொத்து பத்திரங்கள் அல்லது சட்ட ஆவணங்களைப் போல ஒரு சட்ட சாசனமாக விளங்குகிறது. ஆனால், நிரந்தரமாக இருக்க வேண்டும் என்பதற்காக செப்பேடுகளில் பொறிக்கப்பட்டுள்ளது. எளிதில் அழிந்துபோகக்கூடிய பனை ஓலைகளில் பதிவுகள் செய்யப்பட்ட ஒரு காலத்தில், செப்பேட்டைத் தேர்ந்தெடுத்ததே, இந்தச் சாசனம் நிரந்தரமானது என்பதைக் காட்டுவதற்காகத்தான்.

பாரசீக வளைகுடா பகுதிக்கும் கேரளாவுக்கும் இடையே இருந்த வர்த்தகத் தொடர்பின் ஒரு பகுதியாக இங்கு வந்த மர்வான் சபரிசோ (Marwan Sabriso) என்ற சிரியன் கிறிஸ்தவ வணிகரால் இந்த தேவாலயம் கட்டப்பட்டது என்று செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. இவர் சாசனத்தில் "ஈசோ தா தபிர்" (Eso da Tapir) மற்றும் "மருவன் சபிர் ஈசோ" (Maruvan Sapir Eso) என்றும் குறிப்பிடப்படுகிறார். சிரியன் கிறிஸ்தவர்கள், பாரம்பரியத்தின்படி முதல் நூற்றாண்டில் இந்தியாவிற்குக் நற்செய்தியைக் கொண்டு வந்த அப்போஸ்தலரான தோமாவின் (Thomas) மூலம் கிறிஸ்துவை அறிந்தவர்கள் ஆவர்.
தரிசப்பள்ளி செப்பேடுகளில் காணப்படும் சில பெயர்கள், வெறும் பெயர்களாக இல்லாமல், ஆழமான வரலாற்று மற்றும் ஆவிக்குரிய அர்த்தங்களைக் கொண்டுள்ளன. குறிப்பாக, தேவாலயத்தைக் கட்டிய நபரின் பெயர் இரண்டு விதமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை:

1. "ஈசோ தா தபிர்" (Eso da Tapir)
இந்த சொல், வரலாற்று சிறப்புமிக்க நபரின் பெயராகவோ அல்லது பட்டமாகவோ இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது "குரக்கேணி கொல்லத்தில் (Kurakkeni Kollam) இருந்த ஈசோ தா தபிர்" என்பவரைக் குறிப்பதாக ஒரு தரவு சொல்கிறது. மற்றொரு தரவு, இந்த "ஈசோ தா தபிர்" என்பவரே தேவாலயத்தை நிறுவியவர் என்றும் குறிப்பிடுகிறது.

"ஈசோ" (Eso) என்பது "இயேசு" என்ற பெயரின் சிரியன் அல்லது உள்ளூர் வடிவமாக இருக்கலாம்.

"தா தபிர்" (da Tapir) என்பதன் சரியான பொருள் குறித்து ஆய்வாளர்களிடையே விவாதம் உள்ளது. இது ஒரு இடத்தின் பெயராகவோ, குடும்பப் பெயராகவோ அல்லது ஒரு பட்டப்பெயராகவோ இருக்கலாம். எப்படி இருந்தாலும், இது தேவாலயத்தைக் கட்டிய நபரை அடையாளம் காட்டும் ஒரு முக்கியக் குறிப்பாகும்.

2. "மருவன் சபிர் ஈசோ" (Maruvan Sapir Eso)
இந்தப் பெயர் இன்னும் ஆழமான அர்த்தங்களைக் கொண்டுள்ளது. இது ஒரு நபரின் பட்டப்பெயர் மற்றும் பெயரின் கலவையாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

"மருவன்" (Maruvan): இது "மார்" (Mar) என்ற சிரியன் வார்த்தையின் திரிபாக இருக்கலாம். "மார்" என்பது சிரியன் கிறிஸ்தவ மரபில், அத்தியட்சர்களுக்கு (Bishops) வழங்கப்படும் ஒரு மரியாதைக்குரிய பட்டம். எனவே, இந்த நபர் ஒரு சாதாரண வணிகர் மட்டுமல்ல, ஒரு அத்தியட்சராகவோ அல்லது அதற்கு சமமான தலைவராகவோ இருந்திருக்கலாம் என்பதைக் இது காட்டுகிறது.

"சபிர் ஈசோ" (Sapir Eso): இது சிரியன் பெயரான "சப்ரிஷோ" (Sabrisho) என்பதன் வடிவமாகக் கருதப்படுகிறது. "சப்ரிஷோ" என்ற பெயருக்கு "இயேசுவே என் நம்பிக்கை" என்று பொருள். இந்த விளக்கம் உண்மையாக இருப்பின், தேவாலயத்தைக் கட்டியவர் தனது பெயரிலேயே தனது ஆழமான விசுவாசத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

வேறு சில ஆய்வாளர்கள், இது கேரளாவிற்கு முன்பே வந்த "மார் சாபோர்" (Mar Sapor) மற்றும் "மார் புரோத்" (Mar Prodh) ஆகிய இரண்டு அத்தியட்சர்களின் பெயர்களின் இணைப்பாக இருக்கலாம் என்றும் கருதுகின்றனர்.

ராஜ அங்கீகாரம்:

இந்த செப்பேடுகளின் மிக முக்கியமான அம்சம், ஒரு இந்து ஆட்சியாளரால் கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்பட்ட மாபெரும் அங்கீகாரம்தான். வேணாட்டு மன்னரான அய்யனடிகள், கிறிஸ்தவர்களின் இருப்பை ஏற்றுக்கொண்டது மட்டுமல்ல, அவர்களை பாதுகாக்கவும் செய்தார். இது வேதம் சொல்லும் சத்தியத்தை பிரதிபலிக்கிறது: "ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களையும் அவனுக்குச் சமாதானமாகும்படி செய்வார்" (நீதிமொழிகள் 16:7).

இந்த மானியங்கள், பல்வேறு அதிகாரிகள், மந்திரிகள் மற்றும் அஞ்சுவண்ணம் (Anjuvannam), மணிக்கிராமம் (Manigramam) போன்ற முக்கிய வர்த்தக சபைகளின் பிரதிநிதிகள், 'அறுநூற்றுவர்' (the Six Hundred) என்ற நிர்வாகக் குழு மற்றும் பூனத்தலை, பொலக்குடி தலைவர்களுடன் கலந்தாலோசித்து வழங்கப்பட்டன. இந்த வர்த்தக சபைகள், இடைக்கால கேரளாவின் சக்திவாய்ந்த அமைப்புகளாக இருந்தன. அரசின் முக்கிய முடிவுகளில் இந்த அமைப்புகளும் பங்கேற்றன என்பது, தேவாலயம் நிறுவப்பட்டது ஒரு தனிப்பட்ட நிகழ்வு மட்டுமல்ல, பரந்த ஒருமித்த கருத்தைக் கோரும் ஒரு அரசு சார்ந்த முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக இருந்தது என்பதைக் காட்டுகிறது.

"இந்த சாசனத்தைப் பாதுகாப்பவர்களை கிறிஸ்து ஆசீர்வதிப்பார்" என்று மன்னர் அறிவித்தது மிகவும் குறிப்பிடத்தக்கது. இங்கே ஒரு இந்து ஆட்சியாளர் இயேசு கிறிஸ்துவின் வல்லமையையும் அதிகாரத்தையும் ஏற்றுக்கொண்டு, கிறிஸ்துவின் சீடர்களுக்கு உண்மையாக இருப்பதன் மூலம் மேலான ஆசீர்வாதம் கிடைக்கும் என்பதை அங்கீகரிக்கிறார்.

இடைக்கால கேரளாவில் கிறிஸ்தவர்கள்:

9-ஆம் நூற்றாண்டு கேரளாவில் கிறிஸ்தவர்கள் வெறும் குடிமக்களாக நடத்தப்படவில்லை, அதையும் தாண்டிய ஒரு சமூக அந்தஸ்துடன் வாழ்ந்தார்கள் என்பதை இந்த செப்பேடுகள் வெளிப்படுத்துகின்றன. இந்து சமூகத்தில் உயர் பதவியில் இருப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் "எழுபத்திரண்டு சிறப்புரிமைகள்" அவர்களுக்கு வழங்கப்பட்டன. திருமண ஊர்வலங்களின்போது யானை மீது மண் மற்றும் நீரைக் கொண்டு செல்லும் சிறப்பு மரியாதை இதில் அடங்கும். இது அவர்களைச் சமூகத்தின் உயர் தட்டில் வைத்தது.

தேவாலயத்திற்குச் சேவை செய்த குறிப்பிட்ட சமூகத்தினருக்கும் இந்த மானியங்கள் நடைமுறைச் சலுகைகளை வழங்கின. ஈழவர் (Ezhavas) சமூகத்தைச் சேர்ந்த நான்கு குடும்பங்களுக்கும் (மொத்தம் பன்னிரண்டு நபர்கள்), ஒரு வண்ணார் சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்திற்கும் பல்வேறு வரிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இதில் தொழில் வரி, கூரை வேய்வதற்கான வரி (வீட்டு வரி), திருமண அணிகலன்கள் அணிவதற்கான வரி, பஞ்ச காலங்களில் விதிக்கப்படும் கட்டாய வரி (இரவடு - Iravadu), மற்றும் எண்ணெய் விற்பனை மீதான வரி ஆகியவை அடங்கும். ஈழவர் குடும்பங்களுக்குச் சிறப்பு வர்த்தக உரிமைகள் வழங்கப்பட்டன. அவர்கள் தங்கள் வண்டிகளைக் கோட்டைப் பகுதிகளுக்கும் சந்தைகளுக்கும் வணிகத்திற்காகக் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதே நேரத்தில், வண்ணார்சமூகத்தைச் சேர்ந்த குடும்பம் கோட்டை மற்றும் சந்தைப் பகுதிக்குள் தங்கள் தொழிலைச் செய்ய அனுமதிக்கப்பட்டது. காவல்துறை அதிகாரிகள் உட்பட அரசாங்க அதிகாரிகள் இந்த நடவடிக்கைகளைத் தடுக்கக் கூடாது என்று குறிப்பாக அறிவுறுத்தப்பட்டனர்.

கொல்லம் தேவாலயம்:

மர்வான் சபரிசோவின் முயற்சியால் கட்டப்பட்ட கொல்லம் தேவாலயம், ஒரு ஆராதனை செய்யும் இடமாக மட்டுமல்லாமல், பொருளாதாரம் மற்றும் சமூக நடவடிக்கைகளின் மையமாகவும் விளங்கியது. ஒரு பெண் யானையை நடக்கவிட்டு அதன் மூலம் நிலத்தின் எல்லையை நிர்ணயிக்கும் அன்றைய பாரம்பரிய முறையில், தேவாலயத்திற்கு விரிவான நிலங்கள் வழங்கப்பட்டதை செப்பேடுகள் வெளிப்படுத்துகின்றன. கிழக்கே வயல்கால் (ஏரி உட்பட), தென்கிழக்கு எல்லையாக சேரிக்கல் சுவர் மற்றும் மேற்கே கடல் என அதன் எல்லைகள் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன.

இந்த நில மானியத்தில், "நான்கு வெள்ளாளர் சமூகத்தைச் சார்ந்த குடும்பங்களும், ஒரு தச்சர் குடும்பமும்" நிலத்தைப் பயிரிட நியமிக்கப்பட்டனர். முக்கியமாக, "அவர்கள் அனைவரும் தேவனின் (கிறிஸ்துவின்) நிலத்தைப் பயிரிட்டு, தேவாலயத்திற்குத் தடையின்றி எண்ணெய் மற்றும் பிற தேவைகளை வழங்க வேண்டும்" என்று செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. இந்த வார்த்தைகள், இந்த நிலம் கிறிஸ்துவுக்கே உரியது என்றும், அதைப் பயிரிடுபவர்கள் தேவனுடைய சொத்தின் நிர்வாகிகள் மட்டுமே என்றும் புரிந்து கொள்ளப்பட்டதை வெளிப்படுத்துகிறது.

தேவாலயம் அதன் அதிகார எல்லைக்குள் வரும் தொழில்கள் மீது வரி வசூலிக்கும் அதிகாரத்தைக் கொண்டிருந்தது. இது தேவாலயம் ஒரு நகராட்சி அதிகாரம் போல செயல்பட்டதைக் காட்டுகிறது. இந்த அளவிலான குடிமைப் பொறுப்பு, தேவனுடைய மக்கள் தங்கள் சமூகங்களில் "உப்பாகவும் ஒளியாகவும்" (மத்தேயு 5:13-14) இருக்க வேண்டும் என்ற வேதக் கொள்கையைப் பிரதிபலிக்கிறது.

தேவாலயத்திற்கு வழங்கப்பட்ட வர்த்தகச் சலுகைகள் விரிவானவை. அதன் எல்லைக்குள் பொருட்கள் கொண்டுவரப்படும்போது 1/60 பங்கு வரி வசூலிக்கப்படக் கூடாது என்றும், விற்கப்படும் பொருட்களுக்கும் வரி கிடையாது என்றும் குறிப்பிடப்பட்டது. தேவாலயம் வாங்கும் அடிமைகளுக்கு வரி விதிக்கப்படவில்லை. இருப்பினும், தேவாலயம் குறிப்பிட்ட கட்டணங்களை வசூலிக்கலாம்: வாகனங்களுக்கு 8 காசுகளும், படகுகளுக்கு 4 காசுகளும் (வரும்போதும் போகும்போதும்). "வரிக்குட்பட்ட பொருட்களுக்கான வரி, தேவாலயப் பிரதிநிதிகள் முன்னிலையில் தீர்மானிக்கப்பட வேண்டும்" என்றும், விலை நிர்ணயம் செய்யும்போதும், அரசர் தொடர்பான எந்தவொரு விஷயத்திலும் தேவாலயப் பிரதிநிதிகளிடம் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன.

சிலாக்கியங்களும் பொறுப்புகளும்:

செப்பேடுகள் உரிமைகளை மட்டுமல்ல, கடமைகளையும் கோடிட்டுக் காட்டுகின்றன. கிறிஸ்தவர்கள் அனைவரும் அதன் அதிகார எல்லைக்குள் ஒழுங்கைப் பராமரிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவர்களுக்குள் நடக்கும் குற்றங்களை விசாரிக்கும் அதிகாரம் தேவாலயத்திற்கே வழங்கப்பட்டது. இந்த நீதிப் பொறுப்பு, சிலாக்கியம் என்பது பொறுப்புடன் வருகிறது என்பதைக் காட்டுகிறது. இது தலைமைத்துவம் மற்றும் உக்கிராணத்துவம் பற்றிய வேதப் போதனைகளில் ஆழமாக வேரூன்றிய ஒரு கொள்கையாகும்.

அஞ்சுவண்ணம் மற்றும் மணிக்கிராமம் ஆகிய வர்த்தக மையங்கள், தேவாலயத்தையும் அதன் நிலங்களையும் பாதுகாக்கக் கடமைப்பட்டிருந்தன. இந்த ஏற்பாடுகளின் நிரந்தரத் தன்மை "பூமியும், சந்திரனும், சூரியனும் உள்ள காலம் வரை" என்ற சொற்றொடருடன் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. இது தேவனுடைய நித்திய உடன்படிக்கையைப் பற்றிய வேத வசனத்தை எதிரொலிக்கிறது. இது ஒரு தற்காலிக ஏற்பாடு அல்ல, மாறாக கிறிஸ்தவத்தை கேரளாவின் சமூகக் கட்டமைப்பின் நிரந்தரப் பகுதியாக அங்கீகரித்த ஒரு நீடித்த தீர்வாகும்.

9-ஆம் நூற்றாண்டு கேரளாவில் ஒரு இந்து மன்னர் கிறிஸ்துவின் சீடர்களை அங்கீகரித்து ஆசீர்வதித்தது போலவே, இன்றும் தேவன் தனது நோக்கங்களை முன்னெடுத்துச் செல்ல எதிர்பாராத வழிகளில் தொடர்ந்து செயல்படுகிறார். அந்த ஆரம்பகால கேரள கிறிஸ்தவர்களைப் போலவே அதே விசுவாசம், நேர்மை மற்றும் கலாச்சார உணர்திறனுடன் வாழ இந்தச் செப்பேடுகள் நம்மை அழைக்கின்றன. தேவனுடைய வாக்குறுதிகள் "பூமியும் சந்திரனும் சூரியனும் உள்ள காலம் வரை" நிலைத்திருக்கும் என்று விசுவாசிப்போம்.

அவன் சந்ததி என்றென்றைக்கும் இருக்கும்; அவன் சிங்காசனம் சூரியனைப்போல எனக்கு முன்பாக நிலைநிற்கும். சந்திரனைப்போல அது என்றென்றைக்கும் உறுதியாயும், ஆகாயமண்டலத்துச் சாட்சியைப்போல் உண்மையாயும் இருக்கும் என்று விளம்பினீர். (சேலா.) சங்கீதம் 89:36-37

தேவனுக்கே எல்லா மகிமையும் உண்டாவதாக!!!

தொடர்ந்து பயணிப்போம்....

படைத்தவரின் பாதையில்,
திருமதி. ரெமினா சுஜித்
கிறிஸ்தவ வரலாற்று சங்கம்

குறிப்புகள்:
Elamkulam Kunjan Pillai, Studies in Kerala History, pp. 371–375.
C. V. Cheriyan, A History of Christianity in Kerala, pp. 112–115.

Address

Tirunelveli

Alerts

Be the first to know and let us send you an email when Christian Historical Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Christian Historical Society:

Share

Category