09/05/2025
Glorious Nellai கோரிக்கை ஏற்பு.! நெல்லையில் அமையவுள்ள மாபெரும் நூலகத்திற்கு காயிதே மில்லத் பெயர்.! - முதல்வர் ஸ்டாலின்.
*கடந்த பதிவில் நெல்லையில் அவருக்கு போதிய நினைவகம் இல்லை என்று தெரிவித்து இருந்தோம்..
தீரம் மிக்க திருநெல்வேலி ஆளுமைகள்:
------------------------------
நெல்லை காயிதே மில்லத்.!
திருநெல்வேலி தாமிரபரணிக் கரையில் பிறந்து இந்திய நாட்டின் முஸ்லிம்கள் அனைவருக்கும் தலைவராக பொறுப்பேற்று பல பதவிகளை அலங்கரித்தவர் திருவாளர். காயிதே மில்லத் என்ற முகமது இஸ்மாயில் அவர்கள். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு முகமது அலி ஜின்னா வகித்து வந்த இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் பொறுப்பை மிகுந்த நெருக்கடிக்கு மத்தியில் ஏற்றவர் நம் மண்ணின் மைந்தர் திரு.காயிதே மில்லத்.
“காயிதே மில்லத்” - என்ற சொல்லுக்கு “வழிகாட்டும் தலைவர்” என்று பொருள். “கண்ணியமிகு” காயிதே மில்லத் என்று அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களாலும் புகழப்பட்வர் நம் மண்ணின் மைந்தர் காயிதே மில்லத் ஆவார்.
திருநெல்வேலிக்காரர்:
காயிதே மில்லத் திருநெல்வேலி மாநகரத்தின் பேட்டையில் 1896ம் ஆண்டு பிறந்தார். இவரது குடும்பம் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்திற்கு துணி தயாரித்து வழங்கும் நெசவு வணிக குடும்பமாகும். ஆரம்பத்தில் திருநெல்வேலி மதிதா இந்து கல்லூரியில் படிப்பை ஆரம்பித்து பின்னர் திருச்சி, சென்னை கிருத்துவ கல்லூரி என கல்வி கற்றார். பின்னர் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து நாடு தழுவிய முஸலீம் தலைவராக உயர்ந்தார். முகமது அலி ஜின்னாவோடு முஸ்லீம் லீக் கட்சியில் பயணித்தவர், நாடு பிரிவினையின் போது அவருடன் முரண்பட்டு இந்திய முஸ்லீம்களின் தலைவராக பதவியேற்றார்.
இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கும் குழுவில் முக்கிய உறுப்பினராக இருந்தார்.
பச்சைத் தமிழர்:
நான் இந்திய முஸ்லீம், எனது தாய் மொழி தமிழ்” என்று அரசியலமைப்பு சட்ட உருவாக்கும் அவையிலேயே முழங்கியவர். பழம்பெருமைமிக்க எனது தமிழ் மொழியே இந்தியாவின் ஆட்சி மொழியாகும் தகுதியுள்ள ஒரே மொழி என இந்திய அரசியல் சட்ட உருவாக்க அவையில் கம்பீரமாக முழங்கினார்.
தமிழ்நாட்டின் முதல் எதிர்க்கட்சித்தலைவர்:
இந்திய விடுதலைக்கு பிறகு அமைந்த மதறாஸ் மாகாண சட்டமன்றத்தின் முதல் எதிர்க்கட்சி தலைவர் திரு.காயிதே மில்லத் தான். காமராஜர், அண்ணா, இந்திரா காந்தி, எம்.ஜி.ஆர், கருணாநிதி போன்ற தலைவர்களுடன் நெருங்கி பழகியவர்.
1962,1967,1971 தோ்தல்களில் கேரள மாநிலம் மஞ்சேரி மக்களவை தொகுதி எம்பியாக தொகுதிக்கே பிரச்சாரம் செய்ய செல்லாமல் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று பெரும் மக்கள் செல்வாக்கு மிக்க தலைவராக காயிதே மில்லத் விளங்கினார்.
மறைவு:
1972ம் ஆண்டு திடீர் உடல்நலக்குறைவினால் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வைத்து காயிதே மில்லத் காலமானார். இவரது இறுதி ஊர்வலத்தில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்தே சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார் எம்.ஜி.ஆர். இவரது நினைவாக நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு இவரது பெயரை சூட்டினர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா.
திருநெல்வேலியில் போதிய நினைவகம் இல்லை:
நம் திருநெல்வேலியில் பிறந்து இந்திய முஸ்லீம் மக்களுக்கு தலைவராக உயர்ந்த பெருமைக்கு உரியவர் திரு. காயிதே மில்லத் அவர்கள். திருநெல்வேலியில் காயிதே மில்லத் நினைவாக சிறிய அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அவர் பிறந்த பேட்டைக்குள் செல்லும் சாலைக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. தேசிய அளவில் பெரும் தாக்கம் செலுத்திய மக்கள் தலைவருக்கு பிறந்த மண்ணில் போதிய நினைவு சின்னங்கள் இல்லை என்பது பெரும் குறையாக நீடிக்கவே செய்கிறது.
தீரம் மிக்க திருநெல்வேலி ஆளுமைகள் தொடரும்..