11/03/2026
-கட்டிடக்கலை : உள்ளூர் முதல் உலகம் வரை
என்கிற இந்த அரிய கட்டிடத்துறைத் தொகுப்பை தனிபெரும் நூலாக படைத்திருக்கும். சென்னையைச் சேர்ந்த பொறியாளர் திரு.கீதப்பிரியன் கார்த்திகேயன் அவர்கள் கட்டிடக்கலை அறிவும், கட்டுமானப் பொறியியல் அறிவும் நிரம்ப பெற்றவர். இவர் கட்டடக்கலை மட்டுமின்றி தற்சார்பு கட்டுமானம், உள்ளறை அலங்காரம், வாஸ்து போன்றவற்றை நன்கு அறிந்த சமூகப் பொறுப்புள்ள பொறியாளரும் கூட.
நமது கட்டிடத்துறை முதன்மை இதழான பில்டர்ஸ் லைனில் எளிய தமிழில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய அனுபவங்களையும், வழிகாட்டுதல்களையும் ஆலோசனைகளாக., நெடுந்தொடராக எழுதி வந்ததைத் தான், தனிப்பெரும் நூலாக தற்போது பிராம்ப்ட் பதிப்பகம் வெளியிட்டு இருக்கிறது.
சர்வதேச கட்டிடக்கலை மட்டுமின்றி, உள்ளூரில் நடைபெறும் விதிமுறை மீறல்கள், வீடுகளை வாங்கக்கூடிய உரிமையாளர்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய விழிப்புணர்வு அம்சங்கள், கட்டுநர்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய வழிமுறைகள், ஆலோசனைகள், அவ்வப்போது கட்டுமானத்துறையில் அறிமுகம் ஆகக்கூடிய கட்டுமான முறைகள், கருவிகள், அவர் பார்த்து வியந்த பல சர்வதேச கட்டுமானப் படைப்புகள், மேலும் அவர் பார்த்து வருத்தப்பட்ட கட்டுமானப் பிழைகள் என ஒன்று விடாமல் நமது பில்டர்ஸ் லைன் வாசகர்களிடையே பகிர்ந்து கொண்டு வருகிறார். இவரின் பேனா உள்ளூர் சி.எம்.டி.ஏ வைக் குட்டுவதில் துவங்கி, அயல்நாட்டு எழிற்கலைஞர்களை பாராட்டுவது வரை சகட்டுமேனிக்கு சுழன்று தனி ஆவர்த்தனம் செய்திருக்கிறது.
இயன்ற அளவு, தான் அறிந்த அனைத்தையுமே, மற்றவர் அறிவிற்கு கடத்தி விட வேண்டும் என்கிற அளப்பரிய ஆர்வம் கொண்ட திரு. கீதப்பிரியன் கார்த்திகேயன் அவர்களின் இந்த கட்டிடக் கலை பற்றிய நூலானது, கட்டுமானப் பொறியியல் பயிலும் மாணவர்களுக்கும், இளம் பொறியாளருக்கும் மட்டுமன்றி, அனுபவ பொறியாளர்களுக்கும் பல ஆலோசனைகளை எடுத்துச் சொல்லும்.
சர்வதேச கட்டிடக்கலையின் ஒவ்வொரு முப்பரிமாணமங்களையும் இவர் தன்னுடைய எளிமையான எழுத்தில் அச்சில் கொடுத்திருக்கிறார் என சொல்லலாம். இது வெறும் நூலல்ல, தகவல் களஞ்சியம் என்பது மட்டும் உண்மை.