14/08/2026
✅👉உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு : -
✅👉மனுதாரர் தரப்பு சாட்சியங்கள் நேற்றுடன் நிறைவு..!
🗓️ On, August 14, 2026
📝 News Editor
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் மனுதாரர் தரப்பு சாட்சியங்கள் நேற்றுடன் நிறைவு பெற்றன.
இந்தநிலையில் எதிர்த்தரப்பு விசாரணை எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு தொடர்பான விசாரணைகளில் முக்கிய திருப்பமாக, முறைப்பாட்டுத் தரப்பின் சாட்சி விசாரணைகள் மூவரடங்கிய கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று பிற்பகல் நிறைவடைந்தன.
நீதிபதி நவரத்ன மாரசிங்க தலைமையில் சுஜீவ நிஷ்சங்க மற்றும் ராமநாதன் கண்ணன் ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய ஆயம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை இடம்பெற்று வருகிறது.
நௌபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள 23,270 குற்றச்சாட்டுகள் தொடர்பில், 2023 ஒக்டோபர் 10 ஆம் திகதி முதல் இதுவரை மொத்தம் 547 சாட்சிகளிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2076 வழக்குச் சான்றுகளும் குறியீடு செய்யப்பட்டுள்ளன.
முன்வைக்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் பிரதிவாதிகளிடம் எதிர்த்தரப்பு வாக்குமூலங்களைக் கோருவதற்குப் போதுமான காரணங்கள் இருப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, எதிர்த்தரப்பு விசாரணைகளை எதிர்வரும் 17ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2017 நவம்பர் 01 முதல் 2019 ஏப்ரல் 21 வரை
அனுராதபுரம்,
மாவனெல்ல,
கண்டி,
நுவரெலியா,
ஹம்பாந்தோட்டை,
காத்தான்குடி,
கொழும்பு,
தெஹிவளை,
போன்ற இடங்களில், சஹ்ரான் ஹாசீம் மற்றும் மரணித்த ஏனைய தீவிரவாதிகளுடன் இணைந்து தீவிரவாத சித்தாந்தங்களை பரப்பி,
ஆயுதப் பயிற்சி பெற்று, சதித் திட்டங்களை தீட்டி தொடர் குண்டுத் தாக்குதல்களை நடத்தியமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை என்பது முதன்மை குற்றச்சாட்டாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து சந்தேகநபர்களுக்கும் எதிராக வாய்மொழி மூலமான குற்றச்சாட்டு விபரங்களை கோருவதற்குப் போதுமான தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் திருப்தி தெரிவித்தது.
இந்தநிலையில், நீதிமன்றத்தின் தமிழ் மொழிபெயர்ப்பாளர் மூலம் சந்தேகநபர்களுக்குத் தமிழில் விளக்கிக் கூறப்பட்டன.