05/06/2026
பின்தங்கிய எல்லைக் கிராம பாடசாலை மைதானத்தை சீரமைத்துக் கொடுத்தது போரதீவுப்பற்று பிரதேச சபை!
மட்டக்களப்பு மாவட்டம்
போரதீவுப்பற்று பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மிகவும் பின்தங்கிய எல்லைக் கிராமமான 35ஆம் கிராமம் கண்ணன் வித்தியாலயத்தின் (மட்/மண்டூர் 35 கண்ணன் வித்தியாலயம்) விளையாட்டு மைதானம் இன்று (05.06.2026) வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக புனர்நிர்மாணம் செய்து சீரமைக்கப்பட்டது.
கடந்த காலங்களில் குண்டும் குழியுமாகவும், புதர்கள் மந்தியும் காணப்பட்டதால் இம்மைதானம் மாணவர்கள் விளையாட முடியாத அவல நிலையில் இருந்தது.
இதுகுறித்து பாடசாலை நிர்வாகம் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கம் விடுத்த வேண்டுகோளுக்கமைய, போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் வி. மதிமேனனின் முழுமையான அனுமதியோடு, உப தவிசாளர் த. கயசீலனின் நேரடி கண்காணிப்பின் கீழ் இப்புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
கடந்த மாதம் (10.05.2026) முதற்கட்டமாக ஜேசிபி (JCB) இயந்திரம் மூலம் புதர்கள் அகற்றப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்ட நிலையில், இன்று (05.06.2026) மோட்டார் கிரேடர் (Motor Grader) போன்ற கனரக வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டு, மைதானம் முழுமையாக சமப்படுத்தப்பட்டு விளையாட்டுக்கு உகந்த நிலைக்கு கொண்டுவரப்பட்டது.
இப்பணியில் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், விளையாட்டுக்கழகங்கள், கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் ஒன்றிணைந்து தங்களது முழுமையான சிரமதான ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர்.
நிகழ்வில் நேரடியாகக் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த உப தவிசாளர் த. கயசீலன்
"அடுத்த கிராமமாக ஒரு சிங்களக் கிராமத்தைக் கொண்டுள்ள இந்த எல்லைக் கிராமம் மிகவும் பின்தங்கிய சூழலில் உள்ளது.
எமது பிரதேச சபை இருக்கும் வரை, மாணவர்களின் கல்வி மற்றும் விளையாட்டுத் துறையின் எதிர்காலத்திற்காக, ஆலயங்களை விடவும் இத்தகைய பாடசாலைகளின் உள்கட்டமைப்புகளுக்கு முன்னுரிமை வழங்கி, இவற்றை முன்னுதாரணமான நிலைக்குக் கொண்டு வருவது மக்களால் தெரிவு செய்யப்பட்ட எங்களது கடமையாகும்" எனக் குறிப்பிட்டார்.
அத்துடன், இந்த உன்னதமான பணிக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கிய கிராம மக்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு அவர் தனது மனமார்ந்த நன்றியினையும் தெரிவித்தார்.
(ரஞ்சன்)