Ghazal Publications

Ghazal Publications Ghazal Publications is a new Sri Lankan publishing house that made its debut in the Tamil literary world recently.

We publish works on fiction, poetry, literary, and non-fiction.

02/11/2024

வடகோவை வரதராஜன் எழுதிய கஸல் வெளியீடான ஆளப்போகும் வேர்கள் நூல் அறிமுகத்தை எழுத்தாளரும், இயற்கை விவசாயியுமான ஏ.ஆர்.பர்ஸான் முன்வைக்கும்போது

ஆளப்போகும் வேர்கள்--------------------இப்புடி எப்பவாவது சில புத்தகங்கள் என்னை சுரண்டி பார்த்துவிடும். நான் ஒரு தடவை ஆர்வ...
18/08/2024

ஆளப்போகும் வேர்கள்
--------------------

இப்புடி எப்பவாவது சில புத்தகங்கள் என்னை சுரண்டி பார்த்துவிடும்.

நான் ஒரு தடவை ஆர்வக்கோளாறுல சில பைகளை வாங்கி வந்து அதற்குள்ள மண்ணப் போட்டு கொஞ்சம் முளகா கண்டை பைக்குள்ள நாட்டி தாவாரத்துல வச்சு தண்ணி ஊத்தினேன். வளரவேயில்ல. அக்கா சொன்னா அடியுரம் போட்டு நாட்டனும் சும்மாநாட்டுனா வளருமா?. இரண்டு வருசமா அந்த பையில நான் போட்ட அடியுரம் மேலால முளுசிக்கின்னு கிடக்கு.

வயக்காட்டு புலவர் வடகோவையார் "ஆளப்போகும் வேர்கள்" புத்தகத்தின் மூலமாக புரடியில தட்டி அட பேயா அடியுரம் மண்ணுக்கடியில போடனும் என்று சொல்ல வேண்டிக்கிடக்கு.
என்ன மாதிரி ஆளுகளுக்கு எல்லாத்துக்குமே புத்தகம் தேவைப்படுது?

கீரோயிசம் இல்ல, சுய தம்பட்டமில்ல, பிரச்சாரமில்ல, தண்ணியில போட்ட யூரியா மாதிரி குழுகுழுன்னு இருக்கேன்னு புத்தகத்த படிச்சா,

சுய விமர்சனம் இருக்கு, தன் பணி சார்ந்த விமர்சனம் இருக்கு, தன்னைப்பற்றிய நக்கலும் நய்யாண்டியுமிருக்கு. தன்வாழ்வு குறித்த விமர்சனம் இருக்கு ன்னு மேல படிச்சா,

குறிப்பிட்ட காலத்துக்கான வாழ்வையும், பண்பாடுக் கூறுகளையும் புத்தகம் தன்னகத்தே அடியுரம் போல புதைத்து வைத்திருக்கிறது. அட நல்லா இருக்கேன்னு மேல படிச்சா,

பிரமாதமான யாழ்ப்பாணத்து வட்டார மொழியில இயற்கையான முறையில வீட்டுத் தோட்டம் செய்யிறதை வலியுறுத்துகிறாரேன்னு பார்த்தா அது மட்டுமில்ல,

விவசாயத்துல உரப் பயன்பாட்டில் உள்ள தவறான புரிதலுக்கு தான் படித்த விவசாய கல்லியை கொண்டு விளக்குகிரார் இந்த "வயக்காட்டு புலவர்".

இது கட்டுரையா, கதையான்னு நாம யோசிக்கிறதுக்குள்ள புத்தகத்த படிச்சு முடிச்சிரலாம்.
விவசாயம் குறித்த ஆக்கபூர்வமான தகவலை, அறிவியலை அங்கத சுவையுடன், சிரித்துக் கொண்டே படிக்க வைக்க வடகோவை வரதராஜனால் மட்டும்தான் முடியும்போல.

இந்த புத்தகம் அவருடைய சிறுகதைகள் மீது ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.

கஸல் பதிப்பகம் வெளியிட்ட இப்புத்தகத்தை யாழ் புத்தக கண்காட்சியில் வாங்கி அன்பளித்த தோழர் தீரனுக்கு நன்றி.

எழுத்தாளர் பத்திநாதன்

ஆளப்போகும் வேர்கள் நூல் வெளியீடு.
26/01/2024

ஆளப்போகும் வேர்கள் நூல் வெளியீடு.

எப்போதாவது வாய்க்கும் மறக்க முடியாத ஒரு விருந்து உணவு போல சிந்தையை நிறைக்கும் வண்ணம் ஒரு நூலும் நமக்குக் கிடைத்து விடுகி...
08/01/2024

எப்போதாவது வாய்க்கும் மறக்க முடியாத ஒரு விருந்து உணவு போல சிந்தையை நிறைக்கும் வண்ணம் ஒரு நூலும் நமக்குக் கிடைத்து விடுகிறது.

இலங்கை முஸ்லிம்கள் பற்றிய ஓர் அழகிய வரைபடம் அ.வா. முஹ்ஸின் எழுதிய இலங்கை முஸ்லிம்களைப் புரிந்து கொள்ளல் என்ற இந்த நூல்.

”தவறான புரிதலானது இரு பக்கங்களைக் கொண்டுள்ளது. ஒன்று முஸ்லிம்களைப் பற்றி ஏனைய சமூகங்கள் மத்தியில் நிலவுகின்ற தவறான அபிப்பிராயங்கள், இரண்டு, முஸ்லிம்கள் தம்மைப் பற்றிக் கொண்டிருக்கின்ற தவறான அபிப்பிராயங்கள். இந்த இரண்டையும் பற்றி இந்த நூல் பேசுகிறது என்கிற பின் அட்டைக் குறிப்பு இந்த நூலின் தன்மையை எடுத்துக் கூறுகிறது.

அரசியல், சமூக, மத ரீதியான பழைய பெருமையிலும் அவை குறித்த தர்க்கங்களிலும் நமது கவனத்தைச் செலுத்தி காலத்தைக் கரைத்துக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்தின் புத்திஜீவிகளுக்கு இன்றைய பிரச்சனை என்ன, இன்றைய சமூகத்தின் நிலை என்ன, அது குறித்து நாம் என்ன செய்ய வேண்டும் என்பன போன்ற உள்ளார்ந்த சிந்தனையைத் தூண்டிவிடும் நூல் இது.

மார்க்கமும் பொதுக் கல்வியிலும் பெருங் கல்வி கற்றவர்களில் பெரும்பாலானோர் அரச பதவிகளில் பதவி உயர்வுகளில் கரைந்து போய்விடுகிறார்கள். மற்றும் சிலர் சமூகத்தை சுவர்கக்த்துக்கும் நரகத்துக்குமிடையில் நிறுத்தி வைத்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சமூகத்தின் வாழ்வியற் கோலங்களைப் புரிந்து அதற்கான ஏற்பாடுகளில் கவனத்தைச் செலுத்தி வழிகாட்டுவதும் சுவர்க்கத்தை நோக்கிய பயணம்தான் என்பதை அவர்கள் மறந்து விடுவது மிகவும் துர்ப்பாக்கியமான நிலையாகும்.

இந்த நூலை எழுதியுள்ள அ.வா. முஹ்சீன் ஏற்கெனவே கவனிக்கத்தக்க ஆறு நூல்களைத் தந்தவர். இலங்கை முஸ்லிம் இயக்கங்கள் சார்ந்தவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், ஆலிம்கள், புத்திஜீவிகள், நிர்வாகப் பதவிகளில் உள்ளவர்கள் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு நூல் இது என்பது எனது அபிப்பிராயம்.

இலங்கை முஸ்லிம்கள் குறித்துப் பேசும் ஏனைய இன புத்திஜீவிகள், சமூகச் செயற்பாட்டாளர்களுக்கும் இந்நூல் பெரிதும் உதவும்.

மிக அழகான வடிவில் 146 பக்கங்களில் இலங்கை முஸ்லிம்கள் குறித்த ஒரு வடிவத்தை சுருக்கமாகவும் தெளிவாகவும் எழுதியுள்ளார் முஹ்ஸீன்.

அஸ்ரப் சிஹாப்தீன்
எழுத்தாளர்

இந்த நூலை கஸல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 219 ஏ.கே.எம். வீதி, ஏறாவூர் என்ற முகவரியில் பெற்றுக் கொள்ளவாம். தொடர்பு எண் - 0775494977

பல ஆண்டுகளுக்கு பின் கனடாவிலிருந்து சொந்த ஊர் திரும்பும் சதக்கா, தனது நண்பர்களை தேடியலைகிறான். வெயிலிலும், பொழுதிலும் மண...
23/12/2023

பல ஆண்டுகளுக்கு பின் கனடாவிலிருந்து சொந்த ஊர் திரும்பும் சதக்கா, தனது நண்பர்களை தேடியலைகிறான். வெயிலிலும், பொழுதிலும் மணிகணக்கில் மிதந்த வக்காத்து குளம் காங்கீரிட் கட்டிடங்களாக மாறி நிற்கிறது. சொந்த ஊரில் தனது நேசத்துக்குரிய குளத்தையும், மீன்களையும், குருவிகளையும், நண்பர்களையும் காணாது துடிக்கிறான். வெறும் ஐம்பது பக்கங்களே இருக்கும் இக்குறுநாவலை படித்ததும் அவ்வப்போது கடும் மழை வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் வேளச்சேரி நினைவுக்கு வந்தது. இருபது முப்பது நீர்நிலைகளுக்கு மேல் இன்று வளர்ச்சியடைந்த சென்னை வேளச்சேரி காங்கிரீட் காடுகளாக வளர்ந்து நிற்கிறது. எத்தனையோ ஊர்களில் இரவோடு இரவாக குளம், குட்டை ஆக்ரமிக்கப்பட்டாலும் அதன் பசுமையான நினைவுகளை அபகரிக்க முடியுமா?

இதன் ஆசிரியர் சேர் தீரன் நவ்சாத், காக்கா K S Mohammed Shuaib எனக்கு அறிமுகம் செய்து வைத்த கிழக்கிலங்கை எழுத்தாளர் அவர். நான் சிறுகதைகள் எழுதலாம் என முடிவெடுத்த போது தீரன் சேர் எழுதிய ‘வெள்ளிவிரல்’ கதைபோல் ஒரு நய்யாண்டி கதைவிட்டால் போதும் என தோன்றியது.

வக்காத்து குளம் பசுமை நினைவுகளை அசைப்போடும் சதக்கா, ஊர் அடைந்திருக்கும் வளர்ச்சிக்கு கீழே சிதிலங்களாக மாறிப்போன தனது பால்யத்தை தேடியலைகிறான். இந்த குறுநாவலில் வரும் சாந்தமாமா, மாலைவெள்ளி, சுபைதா, குண்டப்பன், சண்முகம் நம்முடைய பால்ய காலத்தில் நம்மோடு விளையாடிய நண்பர்கள்.நாவலின் பலம் என்னவென்றால் பொய்யும் புரட்டுமாய் லெளகீகத்தில் பெரியவர்களாகிவிட்ட நம்மை பார்த்து மீண்டும் எப்போது கள்ளங்கபடமில்லா சிறுவர்களாக போகிறீர்கள் என கேட்கும் கேள்வி ? ஆங்காங்கே சிறுவர்களின் விளையாட்டு பாடல்கள், ஒவ்வொரு இரண்டு பக்கங்கங்களும் நடுவில் வருகிறது. நம் சிறுவயதில் பாடக்கூடிய பாடல்கள் எல்லாம் இப்போது நினைத்துப்பார்த்தால் பொருளற்ற பாடல்களாக நாம் உணர்வதுண்டு.

பால்யத்தில் எனது தெருவில் இருந்த அக்காவோடு சத்திரம் போய் திரும்பி வரும்போது , மைய்யத்தாங்கரையை பார்த்து ஒருமுறை கைநீட்டிவிட்டேன். ஒரு தலைப்பிள்ளை அப்படி செய்யக்கூடாது ! நீயேன் அப்படி செய்தாய் என அழ ஆரம்பித்துவிட்டாள். சந்தையில் பிசுபிசுத்த மீன் கவுச்சி கையோடு எனது பத்துவிரலையும் வாயில் நுழைத்து கடிக்க சொன்னாள் ! அதுதான் அஅதற்கு பரிகாரம் ! நானும் மைய்யாதங்கரையை நோக்கி வாயுக்குள் போண்டாவை நுழைப்பது போல் விரல்களை அழுதுக்கொண்டே நுழைத்தேன். வயதுக்கு வந்த பின்பு அத்தகைய செயலெல்லாம் பொருளற்றதாகவும் சிரிப்புக்குள்ளாதாகவும் மாறிவிடுகிறது.

இக்கதையில் சிறுவர்கள் சதக்கா, மாலைவெள்ளி,பார்வதி, சாந்தமாமா பாடும் பாடல்கள் ஒவ்வொன்றும் கதையின் போக்கில் கண்ணாடியில் வழியும் நீர் போல் என்றாலும், கதையின் முடிவில் புத்தவிகாரையில் வரிசையாய் கண்களை மூடி நடக்கும் புத்த துறவிகளுக்கு நடுவே டிவிஸ்டாக பாடப்பெறும் ஒரு சிறுவர் பாடல் , அந்த பாடல் எழுபது வயதாகிவிட்ட சதக்காவிற்கு ஒரு தரிசனத்தையும் கண்டடைதலையும் வாழ்வின் முழு அர்த்தத்தையும் தருகிறது. ஒரே மூச்சில் இழுத்துக்கொண்ட காற்றைப்போல அந்தப்பாடல் முழு வக்காத்துகுளத்தையும் தரிசனமாக படிக்கின்ற நமக்கும் ஒரு சித்திரத்தை சேர்த்தே தருகிறது.

நாங்கள் பள்ளிக்கூடம் போகும்போது பாடும் பாடல் நினைவுக்கு வருகிறது, ‘அரப்படம் திரப்படம் ஆரியமங்கள கோயில் பருப்பா 12 ! தெக்கு தெருவுல காது குத்தின வாழப்பழத்த யார் எடுத்தா ! ‘ இப்படி பலபாடல்களை தூரம் தெரியாமலிருக்க பாடிக்கொண்டே சொல்வோம். வழியில் வரும் நாய் கோழிகள், வீட்டு கூரையில் மீது கல்லெறிந்து பாடிய பாடல்கள், இதுவரை பொருளற்றதகாவே எனக்கு தோன்றியது. வாழ்வின் சூட்சுமமும் தத்துவமும் புரியும் கணத்தில் அந்த வாழைப்பழத்தை யார் எடுத்தார் என்று புரிந்துவிடுமோ என்னவோ தெரியவில்லை.

வெளியீடு : Ghazal Publications

அனிஷா மரைக்காயர் ( கே.முஹம்மது ரியாஸ்)

நன்றி - விமர்சகர் சரவணன் மாணிக்கவாசகம் என்டெ சீவியத்திலிருந்து - எஸ்.எல்.எம். ஹனிபா:ஆசிரியர் குறிப்பு:எஸ். எல்.எம். ஹனீப...
08/12/2023

நன்றி - விமர்சகர் சரவணன் மாணிக்கவாசகம்

என்டெ சீவியத்திலிருந்து - எஸ்.எல்.எம். ஹனிபா:

ஆசிரியர் குறிப்பு:

எஸ். எல்.எம். ஹனீபா இலங்கையின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். மக்கத்து சால்வை அவரது புகழ்மிக்க கதைகளில் ஒன்றாகும். இவர் மரங்கள் தாவரங்கள் ஆர்வலரும் விவசாயியும் ஆவார். பர்தா நாவல் எழுதிய மாஜிதா இவரது மகளாவார்.

எழுத்து என்பது வரம், வாசிப்பு தவம் என்று சொல்லும் மனிதரிடம் கதைகள் அதிகம் இருப்பது ஆச்சரியமில்லை. கூடவே முப்பது வருடம் போர் நடந்த தேசத்தில், தன்னினம் என்று தனித்தொதுங்காது எல்லோரையும் இழுத்துச் சேர்த்துக் கொண்ட மனிதருக்குக் கதைகள் பஞ்சமில்லை.

விடுதலைப்புலிகளிடம் இந்து மருத்துவரை விடுவிக்கப் போராடியதில் இருந்து, இந்துக்கள் நுழையாத முழுக்கவே முஸ்லீம்கள் இருக்கும் பிரதேசத்தில், இந்து நண்பர், இவர் வீட்டுக்குக் குடும்பத்துடன் அடைக்கலம் தேடி வந்ததல்லாமல், முப்பது பவுன் நகையையும் பத்திரமாக இவரிடம் கொடுத்துச் செல்லும் படியான நம்பிக்கையை வளர்த்திருக்கிறார்.

இலங்கையில் நண்பர் ஒருவர் என்னிடம் கூறினார். "முஸ்லீம்களில் துடிப்பாக இருப்பவர்களிடம் இந்துக்கள் குறித்த வதந்தியையும், இந்துக்களில் தீவிரமாக இயங்குபவரிடம் முஸ்லீம்கள் குறித்த வதந்தியையும் பரப்பித் தீக்கங்கு அணையாது பார்த்துக் கொள்ளவே பலர் இருக்கிறார்கள்". இந்த சூழலில், பரஸ்பர நம்பிக்கையின்மையின் நடுவே, சிங்களவர், முஸ்லீம், இந்து எல்லோரும் இணைந்து வாழ்வோம் வாருங்கள் என்று எழுதியிருப்பது உண்மையில் பெரிய விஷயம்.

எழுத்தாளர்கள் சிலர் குறித்த குறிப்புகள் வருகின்றன. சுந்தரராமசாமி கவிஞர்கள் குறித்துக் கூறியது, சிறுகதை, நாவலாசிரியருக்கும் பொருந்தும்." இன்றைய வாழ்க்கைக்கும் அவனுக்குமான முரண்பாடுகள் எதுவுமில்லை என்றால், அவனுக்கு நெருக்கடியோ, விசனமோ இல்லை என்றால், அவன் நிம்மதியாக இருக்க வேண்டிய பாக்கியசாலி. கவிதையை அவன் மறந்து விடலாம்".

பலா, மாம்பழம் ( இலங்கையில் எனக்கு மாமரம் பார்த்த நினைவே இல்லை), விதவிதமான மீன்கள், சமையல் குறிப்புகள் என்று சாப்பாட்டு விஷயங்களுடன், தோட்டம், மரங்கள், இனப்பிரச்சனை குறித்த குறிப்புகளும் வருகின்றன. ஒரே அமர்வில் சுவாரசியமாக முடிக்க வைக்கும் பகடி கலந்த மொழிநடை. இவர் நாவல் எழுதியிருக்கலாம் என்று தோன்றுகிறது.

பிரதிக்கு:

கஸல் பதிப்பகம் 770807787
இந்தியாவில் Commonfolks
முதல்பதிப்பு ஜனவரி 2023
விலை இலங்கை 600 ரூபாய்கள்
இந்தியா ரூபாய் 150.
#தமிழ்கட்டுரைநூல்கள்

http://saravananmanickavasagam.in/2023/12/08/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9f%e0%af%86-%e0%ae%9a%e0%af%80%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/

தேசிய கலை இலக்கியப் பேரவையினால் தற்போது யாழ்ப்பாணம் மாதகல் சென்.யோசப் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் பு...
26/11/2023

தேசிய கலை இலக்கியப் பேரவையினால் தற்போது யாழ்ப்பாணம் மாதகல் சென்.யோசப் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் புத்தக அரங்க விழாவில் கஸல் பதிப்பக புத்தகங்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.

இறுதி நாளான இன்று வாசகர்களின் வருகையை அன்புடன் எதிர்பார்க்கிறோம்.

சில காலங்கட்கு முன்பு ஒரு கதை படித்தேன். அது இவ்வாறு அமைகிறது. பிரபல தேவாலயம் ஒன்றுக்கு ஓவியங்கள் வரைய வரும் ஓவியர் ஒருவ...
20/11/2023

சில காலங்கட்கு முன்பு ஒரு கதை படித்தேன். அது இவ்வாறு அமைகிறது. பிரபல தேவாலயம் ஒன்றுக்கு ஓவியங்கள் வரைய வரும் ஓவியர் ஒருவர் முதலில் குழந்தை இயேசுவினை வரைய ஒரு மாதிரி(model) தேடுகிறார்.சில நாட்களுக்கு பிறகு ஒரு பையனை கண்டு பிடித்து தனது மனதில் இருக்கும் உருவத்திற்கு பொருந்துவதாக கூறி அவனை வைத்து வரைந்து முடிக்கிறார். காலங்கள் நகர்கின்றன.இயேசுவின் வாழ்வில் நடந்த எல்லா விடயங்களையும் ஓவியமாக்கியாயிற்று.ஆனால் யூதாஸ் பாத்திரத்திற்கு ஒரு மாதிரியை ஆண்டு கணக்கில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை. ஏனெனில் அந்த பாத்திரத்துக்குரிய முகத்தில் கருணை என்பது ஒரு துளியும் இருக்க கூடாது என்பது ஓவியரின் எண்ணம்.

பல ஆண்டுகளுக்கு பிறகு ஒருவனை காண்கிறார்.அந்த முகத்தில் அப்படியோர் கடுமை.உடனே அவனைக்கொண்டே யூதாசையும் வரைந்து முடித்தாயிற்று.பிறகு அந்த மாதிரி ஓவியனை பார்த்து "நான் யாரென தெரிகிறதா" என வினவ ஓவியருக்கு அவனை அடையாளம் காண முடியவில்லை. உடனே அவன் கூறுகிறான் "பல ஆண்டுகளின் முன்பு குழந்தை இயேசுவாக வந்தவன் நான்தான்" எனக்கூறுகிறான்.ஓவியர் ஆச்சரியமாகி இதற்கான காரணத்தை வினவ "வாழ்வியல் ஓட்டங்கள்" என பதிலளிக்கிறான்.

வைத்தியர்.எம்.எம்.நௌஷாத் அவர்களின் "பேகம் கதீஜாவின் சாமானிய ஜீவிதம்" நாவலை வாசித்து கொண்டிருக்கையில் ,இந்த நாவலின் மைய பாத்திரமாகிய பேகம் கதீஜாவின் கணவனாக வருகின்ற ஹாதி சுல்தானின் பாத்திரமும் கூட நான் மேலே கூறிய கதையின் "வாழ்வியல் ஓட்டம்" என்ற பதத்தினுள் அடங்குவதாகவே எனக்கு தோணிற்று. ஏனெனில் கதையின் ஆரம்பத்தில் காட்டில் இருக்கும் மரங்களை அன்போடு அணைத்து கதைகள் பேசும்,இயற்கை நேசனும் ,உழைப்பாளியுமாகிய சுல்தான் பின்னாட்களில் மரங்களை அழிக்கும் ஒருவனாக காட்டப்படுகிறான்.இந்த முரண்களுக்கான காரணம் "வாழ்வியல் ஓட்டங்களன்றி" வேறென்ன?

இந்த நாவல் பின்தங்கிய கிராமம் ஒன்றில் வாழ்ந்த சாதாரண பெண் ஒருத்தியின் கதை.கதை நகரும் காலத்தை கணிக்க முடியவில்லை. ஏனெனில் கதை நிகழும் காலத்திற்குரிய அரசியல் உட்பட முக்கிய நிகழ்வுகள் இந்த நாவலில் இல்லை. எனினும் சுதந்திரத்திற்கு பிற்பட்ட கிட்டத்தட்ட 1960 களில் நிகழும் கதையென அனுமானிக்க முடிகிறது.கதையும் வாழ்வும் எப்போதும் முரண்களினாலேயே ஆக்கப்படுகின்றன.இந்த கதையின் நாயகியாகிய கதீஜாவிற்கு பொருத்தமான கணவனாக சுல்தான் அமையவில்லை. இந்த முரணே நாவலின் ஓட்டமாக இருக்கிறது.நாவலின்போக்கிலே கதீஜாவிற்கு பால்ய சிநேகிதனாக வரும் அர்பாகானே பொருத்தமான மணமகனாக அமைந்திருக்க கூடும். அப்படி நிகழ்ந்திருப்பின் இவ்வாறான கதையே முகிழ்ந்திராது.எனவே முரண்களே கதையாகின்றன.

இந்த நாவல் நிகழும் நிலமும் அந்த நிலம் கொண்டிருக்கும் சமூக அமைப்பும் பேசப்பட வேண்டிய விடயங்களாகின்றன.முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற பகுதிகளில் இருந்து விலத்தி மொனறாகலை மற்றும் பதுளைக்கிடையில் அமைந்திருக்கும் சாம்பல்மேடு என்ற வனம் சூழ்ந்த கிராமமே கதை நிகழும் களமாகிறது.

காட்டின் மத்தியில் தனித்திருப்பதும் ஏனைய கிராமங்களில் இருந்து தொலைவில் இருப்பதனாலும் இந்த கிராமத்திற்கென தனித்த பண்பாடுகளும் வழக்காறுகளும் கூட இருந்திருக்கின்றன என்பது நாவலினூடே பயணிக்கும் வாசகன் அறிவான்.இதனை நாவலின் ஆரம்பத்தில் குக்கிராமம் என ஆசிரியர் அறிமுகம் செய்தாலும் அங்கும் சமூக ஏற்றத்தாழ்வுகள் இருந்திருக்கின்றன என புலனாகிறது.ஏனெனில் கதீஜாவின் அம்மம்மா வீட்டு வேலைகள் செய்தே கதீஜாவை வளர்க்கிறாள்.அத்துடன் சமூகம் அவளை "வேலைக்காரியின் பேத்தி" என்றே அடையாளப்படுத்துகிறது.எனவே வேலையாட்களை வைத்து வேலை செய்யுமளவிற்கு அங்கே நிலச்சுவாந்தர்களும் இருந்தனர் என புரிந்து கொள்வது கடினமல்ல.

என்னதான் கிராமமாக இருந்தாலும் சமூகத்தில் காரப்படுகின்ற ஆணாதிக்க மனோபாவம் இங்கேயும் இருக்கிறது. அதுவும் சற்றே மிகையாக.ஏனெனில் கணவன் சுல்தானின் அசிரத்தை காரணமாக கதீஜாவிற்கு குழந்தை பெறுதல் என்பது "மரணத்தின் வாசனையை" நுகர்தலாகிறது.கொடுமைக்கார கணவனினால் துயரடையும் சமூகத்தின் பெண்கள் தங்கள் குழந்தைகள் மூலமாக ஆறுதலடைவது வழமை.இது குறித்து தாய்மாரிடம் பெரிய எதிர்பார்ப்புகள் கூட உண்டு. ஆனால் கதீஜாவிற்கு அந்த விடயத்திலும் கூட தோல்வியே.ஏனெனில் அவளின் மூத்த ஆண்குழந்தைகள் இருவரும் குடும்பத்தை விட்டு விலகி வேறுபாதையில் செல்கின்றனர்.

இதன் பின்னணியில் குறிப்பிடத்தக்க உளவியலும் இருக்கிறது.

1.மனிதனின் உளவியல் அவனது கருவுறும் காலத்திலேயே கட்டமைக்கப்பட்டு விடுவதாக கூறுகின்றனர். அதாவது ஆணும் பெண்ணும் கலவிகொள்கையிலேயே மனமொத்து ஈடுபடுவதனாலேயே வளமான சந்ததி உருவாவதாக கூறப்படுகிறது. ஆனால் இங்கே கதீஜாவிற்கும் சுல்தானுக்குமிடையிலான தாம்பத்தியம் என்பது எவ்வாறு இருந்தது என்பதை நாவலின் இருபதாம் அத்தியாயத்தில் விபரிக்கப்படுகிறது.இந்த விபரிப்பு நாவலாசிரியரின் ஒரு உத்தியாகிறது.ஏனெனில் இங்கு அவர்களின் தாம்பத்திய வாழ்க்கை "கட்டில்" என்ற பதத்தினால் குறிக்கப்பட்டு பூடமான குறிப்புக்களினூடே தாம்பத்தியம் குறித்து பேசுகிறார். கடைசியில் கணவனின் மரணத்தில் கூட கதீஜா மகிழ்ச்சி அடையுமளவிற்கு அந்த தாம்பத்தியம் கொடுமையானதாக இருந்திருக்கிறது .

"சுல்தான் மரணித்த பிறகு அவள் முற்றாக குணமடைந்து விட்டாள்.கட்டிலை பீடித்திருக்கும் ஆவியாகிய ஹாதி சுல்தான் மீண்டும் முத்தமிட வரப்போவதில்லையே" (பக் 132).

2.குழந்தைகள் பிறந்ததும் அவர்கள் வளர்க்கப்படும் சூழல் கூட உளவியலில் தாக்கம் செலுத்துகிறது. ஆனால் இந்த நாவலில் வரும் குழந்தைகள் கருவுறும்போதோ அல்லது வளர்ந்து வரும் காலத்திலோ எதுவுமே நன்றாக அமையவில்லை. இதுவே அவர்களின் பிறழ்வான நடத்தைக்கு காரணமாக அமைந்துள்ளது.

இவ்வாறு நகரும் கதையில் நாவலின் இறுதிப்பகுதி ஜீரணிக்க சற்றே கடினமான விடயமாக அமைந்துள்ளது. சுல்தான் மற்றும் கதீஜாவின் ஒட்டாத ஜீவிதத்திற்கான பிரதான காரணம் அவர்கட்கிடையிலான அதிகரித்த வயது வேறுபாடே.ஆனால் அதே தவறு மீண்டும் இழைக்கப்படுகிறது நாவலின் இறுதியில். கிட்டத்தட்ட கதீஜாவின் வயதை ஒத்தவனும் கதீஜாவை ஒருதலையாக காதலித்தவனும் சுல்தானின் நண்பனுமாகிய ஸாஹிபுவிற்கு கதீஜாவின் மகளாகிய ஜெமீலா மணம் முடிக்கப்படுகிறாள்.

இந்த சூழலை மதிப்பிடுகையில் கதீஜாவிற்கான மாற்று தேர்வுகள் ஏதுமில்லை என கூறினாலும் நாவலின் முடிவு கூட இந்த கதையின் இரண்டாம் பாகத்தை கட்டியம் கூறுகிறதோ என தோன்றுகிறது.

கதையை நகர்த்தி செல்லும் மொழி பற்றி கவனிக்கையில் நௌஷாத் அவர்களின் சிறுகதைகளில் இருக்கும் வேகமோ அல்லது இறுக்கமோ இங்கு இல்லவே இல்லை. இதுவே அடிப்படை வாசகனுக்குமுரிய நாவலாக இதனை மாற்றி விடுகிறது.

நாவலின் முடிவில் வாசகனின் மனதில் பேகம் கதீஜா தன்மீதான கவனத்தை ஈர்த்து விடுகிறாள்.அவரின் முதல் முயற்சியை பாராட்டலாம். ஏனெனில் விளிம்பு நிலை சமூகம் குறித்து நிறையவே பேச வேண்டியுள்ளது.

வாழ்த்துக்கள் டொக்டர்.

(இது முகநூல் அறிமுக குறிப்பு.விரிவான கட்டுரை விரைவில் எழுதவுள்ளேன்)

-எழுத்தாளர் லலிதகோபன்

முன்னுரையிலேயே நூலாசிரியர் புத்தகத்தின் நோக்கத்தை "நமது நாட்டில் சமூகங்களுக்கிடையிலான உறவுகள் ஆரோக்கியமற்ற நிலையில் இருப...
17/11/2023

முன்னுரையிலேயே நூலாசிரியர் புத்தகத்தின் நோக்கத்தை "நமது நாட்டில் சமூகங்களுக்கிடையிலான உறவுகள் ஆரோக்கியமற்ற நிலையில் இருப்பதை கருத்தில் கொண்டு இந் நூல் எழுதப்பட்டிருக்கிறது" என்று தெளிவாக கூறியிருக்கிறார்.

'அரகலய' எனும் அநீதிக்கு எதிரான அமைதியான ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து பல புத்தகங்களும் இதழ்களும் கட்டுரைகளும் வெளிவந்தாலும் கூட, முஸ்லிம்களை மட்டுமே முழுக்க முழுக்க மையப்படுத்தி வெளிவந்த புத்தகங்கள் என்றால் எப்படியும் இருக்காது. இருந்தாலும், இந்த புத்தகத்தை போல ரத்தின சுருக்கமாகவும் விலாவரியாகவும் தெளிவாகவும் இருக்காது என்றே நினைக்கிறேன்.

ஏழாவது அறிமுக நூல்:
இலங்கை முஸ்லிம்களை
புரிந்து கொள்ளல்

நூல் வகை:
வரலாறு

நூலாசிரியர்:
அ.வா. முஹ்சீன்

பக்கங்கள்:
146

வெளியீடு:
Ghazal Publications

முதல் பதிப்பு:
ஜனவரி 2023

விலை:
LKR - 900/= || INR - 220/=

கிடைக்குமிடங்கள்:
இலங்கையில் - Fathima Book Centre
இந்தியாவில் - CommonFolks

"ஒரு வரலாற்று பதிவு" என்ற தலைப்பின் கீழ் மகாவம்சத்தில் இடம்பெறும் சில பகுதிகளோடு ஆரம்பிக்கும் இந்த புத்தகம் "இலங்கை முஸ்லிம்களின் அரசியல் போக்குகள்" என்ற தலைப்பினூடாக பயணித்து "முடிவாக" என்ற பகுதியினூடாக புத்தகத்தின் சுருக்கத்தை நான்கு பக்கத்திற்குள் தெளித்து முடித்திருக்கிறார் நூலாசிரியர்.

ஒரு சமூகத்தை புரிந்து கொள்ள அச் சமூகத்தின் பொருளாதாரம், மதம், பண்பாடு & மரபுகள், நடத்தை பாங்குகள், வரலாறு, அரசியல் போக்குகள் என்பவை முக்கியமாக அடங்கும் என்று கூறி இவற்றை வைத்தே முழுக்க முழுக்க இலங்கை முஸ்லிம் சமூகத்தை அலசுகிறார்.

பொருளாதாரம் என்ற பகுதியில் இலங்கை முஸ்லிம்களின் விவசாயம், மீன்பிடி, பொட்டணி வியாபாரம், நடைபாதை வியாபாரிகள், இரத்தினக்கல் & ஆடை வர்த்தகம் பற்றியும் அவர்களின் பங்களிப்பு பற்றியும் விபரிக்கப்படுகின்றது.

இந்த நாட்டில் பிற சமூகங்களை விட அதிக வீதத்தில் ஏழைகளையும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்கின்றவர்களையும் கொண்ட சமூகமாக இலங்கை முஸ்லிம்கள் இருக்கின்றார்கள் என்றும் இந்த உண்மைகள் சரியாக புரிந்து கொள்ளப்படாததன் காரணமாக முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறை தாக்குதல்களில் பிரதானமாக இரண்டு உதாரணங்கள் எடுத்துக்காட்டப்படுகின்றன

2019 ஈஸ்டர் தாக்குதலுக்கு பின் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான வீடுகளும் கடைகளும் தாக்கப்பட்டன.

2014யில் பேருவளை, அளுத்கம போன்ற பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 429 வர்த்தக நிலையங்களும் 147 வீடுகளும் சேதமாக்கப்பட்டதோடு, கிட்டத்தட்ட 53 வாகனங்களும் எரியூட்டப்பட்டன. மொத்த சேதங்களின் பெருமதி 250 கோடியாக மதிப்பிடப்பட்டது என்று இலங்கை முஸ்லிம்களை பிற சமூக மக்கள் புரிந்து கொள்ளாமையினால் வந்த வினை என்று ஏக்கத்தோடும் இனி இது இடம்பெறாமல் இருக்க சமூக நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்ற உறுதியையும் இந்த புத்தகம் இந்த பகுதியில் பேசுகிறது.

மதம் என்ற பகுதியில் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் இஸ்லாமிய இயக்கங்கள், உயர்த்த ஞாயிறு கொண்டு தாக்குதல்களும் இலங்கை முஸ்லிம்களின் எதிர் வினைகளும், வஹ்ஹாபிஸமும் இலங்கை முஸ்லிம்களும், ஷரீஆ - இஸ்லாமிய சட்ட முறைமை என்பவற்றோடு அண்மையில் ஏற்பட்ட சர்ச்சையான காவி நீதிமன்றங்களில் பெண்கள் பொறுப்பேற்பது பற்றிய விடயத்தையும் பெண்களின் திருமண வயது அவர்களுக்கான சுதந்திரங்கள் பற்றியும், ஏனைய சமூகங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக தொழுகைக்காக அழைக்கும் பாங்கு, ஜும்ஆ, மத்ரசாக்கள் பற்றியும் உரையாடப்படுகின்றன.

பண்பாடு என்ற பகுதியில் சமீப காலங்களில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த இலங்கை முஸ்லிம்களின் உணவு முறை, ஹலால் சான்றிதழ், பெண்களின் ஆடை முறை போன்றவற்றை பற்றி முஸ்லிம்களும் விளங்கிக் கொள்ள வேண்டிய முக்கியமான விடயங்களை பற்றி பேசுகின்றது.

நடத்தை பாங்குகள் என்ற பகுதியில் முஸ்லிம்கள் பிற சமூகங்களுடன் எப்படி இணங்கி வாழ வேண்டும் என்பது பற்றியும், பதி இடங்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பது பற்றியும் மதரீதியான கருத்துக்களை முன்வைக்கும் போது எவ்வாறு எந்த விதத்தில் முன் வைக்க வேண்டும் என்பது பற்றியும் இலங்கை முஸ்லிம்களுக்கு அறிவுரை வழங்குகிறது.

கடைசி பகுதியான இலங்கை முஸ்லிம்களின் அரசியல் போக்குகள் என்ற பகுதியில் பல்லின சமூகங்களை கொண்ட நாடு, இனம், மதம், மொழி என ஒன்றுக்கு மேற்பட்ட அடையாளங்களின் கீழ் மக்கள் வாழ்கின்ற சூழலில் பிற சமூகங்களுடன் இணக்கமாகவும் அவர்கள் மத்தியில் வெறுப்புணர்வுகளும் பகைமையும் தூண்டப்படாத முறையில் வாழ வேண்டிய, நிலை நாட்ட வேண்டிய நடுநிலை அரசியலின் தேவை பற்றி முக்கியமாக எடுத்துரைக்கிறது.

இலங்கை முஸ்லிம்கள் பற்றி பிற சமூகங்களுக்கு மத்தியில் நிலவுகின்ற தப்பெண்ணங்களையும் இலங்கை முஸ்லிம்களிடம் நிலவுகின்ற தப்பெண்ணங்களையும் அடையாளம் காட்டும் உரையாடலாக இப் புத்தகம் அமைகின்றது. என்னைப் பொறுத்தமட்டில் இந்த புத்தகத்தை வாசிப்பதால் ஏற்படும் மிக முக்கியமான நன்மை யாதெனில், அண்மையில் சமூக ஊடகங்களில் சில தமிழ் சகோதர உறவுகள் பாலஸ்தீன - இஸ்ரேல் பிரச்சனையின் மீது தெளிவில்லாததன் காரணமாக பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இருக்கும் இலங்கை முஸ்லிம்களை தூற்றினர். தூற்றுவதற்கு காரணம் பாலஸ்தீன - இஸ்ரேல் பிரச்சனையின் மீது தெளிவில்லை என்பதை தாண்டி இருக்கும் மிக முக்கியமான காரணம் ஒன்றே ஒன்றுதான் - இலங்கை முஸ்லிம்களை பற்றிய சரியான புரிந்துணர்வு இல்லாமைதான். அதற்கு பல ஆதாரங்களோடு கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்த புத்தகம் உதவும்.

ஆக, முஸ்லிம்கள் இந்த புத்தகத்தை வாங்கி படிப்பது எவ்வளவு அவசியமோ அதை போல பிற சமூக மக்களும் வாசிப்பது அத்தியாவசியமானது என்பதை இங்கு வலியுறுத்தி கூற நான் மிக கடமைப்பட்டிருக்கிறேன்.

- றஜா முஹம்மத்
Rajaa Muhammadh

மார்ச்-18காலை 8.30இல் இருந்து இரவு 8.30 வரை “எஸ்.எல்.எம்.இன் “என்டெ சீவியத்திலிருந்து“ம் நானும்....இலக்கிய உலகம் எப்பொழு...
12/11/2023

மார்ச்-18
காலை 8.30இல் இருந்து இரவு 8.30 வரை
“எஸ்.எல்.எம்.இன் “என்டெ சீவியத்திலிருந்து“ம் நானும்....

இலக்கிய உலகம் எப்பொழுதும் அற்புதங்கள் நிறைந்தது. அது நம்மை எங்கெங்கு கொண்டு செல்ல வேண்டுமோ தேவையான பொழுதில் அங்கு கொண்டு சேர்க்கும்.
யார்? யாருடன்!
கோர்க்க வேண்டுமோ அவ்வளவு லாவகமாக கொண்டு கோர்க்கும்!

அசரீரிகளும்! டெலிபதிகளும்! நவீன காலத்தில் நிரூபணமாகும் ஓர் அற்புத உலகம்....

புத்தகங்கள் தவிர வேறு உலகம் அறியா ஒருவனை! அப்படித்தான் ஓட்டமும் நடையுமாய் இந்தப் பிரபஞ்சத்தில் நடமாட வைத்துக் கொண்டிருப்பதும் இந்த மாஜிக்தான்.

2005இல் “இவை என் உரைகள்“ எனும் நூல் மூலம் எனக்கு அறிமுகமான சுந்தர ராமசாமி! எனும் மனிதனின் உரைகளே எனக்கு மிகவும் உவப்பாய் இருந்த தருணம் அது. நமது கவிஞர் கந்தசாமி ஜெகதீஸ்வரன் அவர்கள் அந்தப் புத்தகத்தினை எனக்குப் படிக்கக் கொடுத்தார். அதில் இருந்து மீளவே சில வாரங்கள் ஆயிற்று. அப்போது தான்.... சுந்தர ராமசாமி எனும் கலைஞனை நான் அறிந்து கொண்ட தருணத்தில் அவனைக் காலம் விழுங்கிக் கொண்டது.

அப்போது, எழுந்த அந்த வெப்புசாரத்தினை பதிவு செய்ய முகநூல் போன்ற ஊடகங்கள் இல்லாததினால் “இலக்கியச் சிந்தனை“ எனும் பெயரில் 2005 ஒக்டோபர் 18ம் திகதி சிறு பிரசுரம் ஒன்றினை அச்சிட்டு நண்பர்களுக்கு பகிர்கின்றேன்.

பல மூத்த படைப்பாளிகளுக்கும் தபாலில் அனுப்பி வைக்கின்றேன். என் அண்மையில் இருந்த மிக நீண்ட நாட்களாக சந்திக்க வேண்டும் என ஆவல் கொண்டிருந்த. “எழுவான் பண்ணை“யின் நாயகன் “மக்கத்துச் சால்வை“ தந்த எழுத்தாளர் எஸ்.எல்.எம். அவர்களுக்கும் அதை நேரில் சந்தித்து வழங்கி விட்டு, சிறிது நேரம் அவருடன் கடையில் இருந்து உரையாடி விட்டு வந்து விட்டேன்.

அதன் பின்னர், இரண்டாவது “இலக்கியச் சிந்தனை“ வெளியீட்டிற்கு தயாராகிக் கொண்டிருந்த வேளையில் எஸ்.எல்.எம். இடமிருந்து சிறிய கடிதம் ஒன்று வந்தது. என்னுடைய இதழ் முயற்சியினை பாராட்டி எழுதி இருந்தார்.

தமிழ் இலக்கியத்தின் மிகப்பெரும் ஆளுமையான எஸ்.பொ. அவர்களுடன் மிகுந்த தோழமை கொண்டிருந்த எஸ்.எல்.எம். மின் அறிமுகம் மிகுந்த மகிழ்ச்சியை தந்தது.

அந்நாட்களில் இணைய வெளியில் “இலக்கியம்“ பகிர்ந்து வந்த “அம்பலம்“ எனும் இணையத்தளத்தில், எஸ்.எல்.எம்.மின் “மக்கத்துச் சால்வை“ பற்றி எஸ்.பொ.அவர்கள் எழுதியிருந்த முன்னீடு பிரசுரமாகவே, அதனை நன்றியுடன் “இலக்கியச் சிந்தனை“ வழியாக நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்வதற்காக மீள் பிரசுரம் செய்திருந்தேன். மூன்று இதழ்களில் தொடர்ச்சியாக பிரசுரமானது என நினைக்கின்றேன்.

அதன் பின் எஸ்.எல்.எம். மனதுக்கு மிகவும் நெருக்கமானார்.

அப்போது! ஆரம்பித்த பழக்கம்! அவ்வப்போது அவரை நேரில் சந்திப்பேன்! மணிக்கணக்காய் உரையாடுவோம்!

அவருடன் தனியாய் இருந்து அவர் பேசுவதை பல நாட்கள் கேட்டு லயித்திருக்கின்றேன். பின்னர் எழுவான் பண்ணையை விட்டு நீங்கி வீட்டில் பேரப்பிள்ளைகளுடன் ஐக்கியமான அவரை, மீராவோடையில் அவரது மகளது வீட்டைத் தேடிச் சென்று சந்தித்து உரையாடி வந்தேன்.

அவர் முகநூலில் இணைந்து இயங்கத்தொடங்கியது முதல்.... நேரில் சந்திக்க வேண்டிய தேவைகள் குறைந்தது போல் தோன்றினாலும்... சில தடவைகள் சந்தித்துள்ளேன் என நினைக்கின்றேன்...

“ஸ்ரீதர் சிங் - தமிழ்ப் புலி - சந்திரகாந்தனின் விசுவாசி“இவை....
15 வருடங்களுக்கும் மேலான பழக்க காலத்தில்! என்னை அவர் விழித்த பெயர்கள்! காரணம்! அந்தப் பெயர்களுக்கேற்றவாற்போல் தான் நம் வாழ்க்கைப் பாதை நகர்ந்து கொண்டே சென்றது....

“மக்கத்துச் சால்வை“ மண்ணும் மணமும் - தொகுப்பிற்கு என்னால் எழுத முடியாது போனது! எனது தனிப்பட்ட சோம்பேறித்தனம் அல்லது! வேறேனும் மனக் கிலேசங்கள் காரணமாக இருந்திருக்கலாம்.

ஆனால்... “இந்த “என்டெ சீவியத்திலிருந்து”

பாகம்-1 குறித்து என் மனப்பதிவுகளை இங்கே பதிவு செய்ய வேண்டியது அவருக்கு நான் செலுத்த வேண்டிய அன்புக்கடன் எனத் தோன்றுகின்றது.

மார்ச் 18ம் திகதி எனது மூன்றாவது இரண்டாவது சகோதரனின் மகளின் முதலாவது பிறந்த தினத்திற்காய் தம்பிலுவில்லில் உள்ள அவர்களது இல்லத்திற்குச் செல்வதற்காய் வாழைச்சேனையில் இருந்து மட்டக்களப்புக்குச் செல்லும் பஸ்ஸில் புத்தகத்துடன் ஏறி அமர்ந்தேன்.

தனியாகப் பயணிக்கும் வேளைகளில் படிக்க வேண்டிய புத்தகம் ஒன்றினை கையில் எடுத்துக் கொள்வேன்! சிரமங்கள் இருக்கக்கூடாது என்பதற்காய் கடைசி சீட்டில் ஏறி உட்கார்ந்து கொண்டால் பஸ் ஓடும் வரைக்கும் தான் சிரமம் இருக்காது! ஓடத் தொடங்கியதும் மேலும் கீழுமாய் குதியாட்டம் போட வேண்டியிருக்கும்! இருந்தாலும் தம் பிடித்துக் கொண்டு ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து புத்தகத்தினைப் படிக்க ஆரம்பித்தேன்.

அதன் பின், மட்டக்களப்பு சின்ன ஆஸ்பத்திரிக்கு முன்னால் இறங்கி அக்கரைப்பற்று பஸ்ஸிக்கு மாறி, அக்கரைப்பற்றில் இறங்கி பேருந்து தரிப்பிடத்துக்கு முன்பாய் இருந்த ஒரு கடையில் இஞ்சி பிளேன்ரீயுடன் மரக்கறி ரொட்டியையும் வயிற்றில் நிரப்பிவிட்டு... பொத்துவில் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தேன். பொத்துவின் என்றதும் நமக்குத் தெரிந்தது கவிஞர் பொத்துவிஸ் அஸ்மின் பெயர் மட்டும் தான்.

தம்பிலுவில் எப்போது வரும்! எந்த ஊர் தாண்டியதும் வரும்! எவ்விடத்தில் இறங்க வேண்டும்! என எதுவும் தெரியாது எஸ்.எல்.எம்.முடன் குலுங்கிக் குலுங்கிப் பயணமானேன்.

சக பிரயாணி ஒருவர் மூலம்... தம்பட்டை தாண்டியதும் வரும்... தம்பிலுவில் வரும் என்றும் அதன் முற்பகுதியில் உள்ள பாடசாலையினையும் தெரிந்து கொண்டு இறங்கி விட்டேன். அதற்குள்

வாப்பாவின் பூனை
இளவரசி
தேவராஜ்

வரை வாசித்து விட்டேன்...

பின்னர், பிறந்த நாள் வீட்டு கொண்டாட்டங்கள் முடிந்ததும், களுதாவளையில் வசிக்கும் எனது இளைய சகோதரன் தனது பைக்கில் அக்கரைப்பற்று பஸ் நிலையத்தில் வந்து விட்டுச் சென்றான்! பின்னர் அங்கிருந்து கல்முனை வரை எஸ்.எல்.எம்.முடன் பயணித்து... கல்முனையிலிருந்து கட்டுநாயக்கவுக்கு 6.30க்கு புறப்படத் தயாராய் நின்ற பஸ்ஸில் ஏறி கடைசி சீட்டில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து கொண்டேன்! கிட்டத்தட்ட 30 நிமிடங்களுக்கு மேலாய் அவ்விடத்தில் பஸ் நின்றதால் இன்னும் 03 பத்திகளைப் படிக்க முடிந்தது!

அதன்பின்! இருட்டு அதிகமானது கையில் இருந்த எஸ்.எல்.எம்.மடியில் தவழத் தொடங்கினார். ஆனாலும், வாழைச்சேனைக்கு வந்து சேர்ந்த 8.30 வரை யான 2 மணி நேரங்களும்!.... பஸ் தாண்டி வந்த இடங்களும்! பஸ்ஸினுள் நடந்தவை எவையும் என் கவனத்திற்கு வராதவாறு எஸ்.எல்.எம்.மின் வாழ்க்கைப் பதிவுகள் என் மனதினை நிறைத்துக் கொண்டன.

நாம்! வாழ்கின்ற இந்தச் சூழல்!

வாழைச்சேனை மீன்பிடித்துறைமுகம் வரையான பிரதான வீதிக்கு அப்பால் வாழ்கின்ற முஸ்லிம்களும், இப்பால் வாழ்கின்ற தமிழர்களும்! இப்போதுள்ள வெளித்தோற்றங்களுக்கு அப்பால்! அவர்களது உள்மனக் கிடக்கைகள்! தத்தமது சமூக மட்டத்தில் நிகழ்கின்ற அவர்களது உரையாடல்களை நாமும் செவி மடுக்க நேர்வதாலும்...
சில அரசியல் மனிதர்கள் தமது வாக்கு அரசியலுக்காய் மேற்கொள்கின்ற திட்டமிட்ட ஏமாற்று நாடகங்களினாலும் பல வேளைகளில் நீர்த்துப் போன மனநிலையில் ஒரு வாசகனாய்! புத்தக நேசனாய் நான் நிலையற்று மௌனிப்பதுண்டு!

தமிழ்-முஸ்லிம் என்கின்ற நீறுபூத்த நெருப்பின் பின்னால், எம் போன்றவர்களுக்கு அடர்ந்த காடு போன்ற பசுமையினையும், மனங்குளிரும் அளவு குளிர்ச்சி தருகின்ற ஓடுகின்ற ஆற்றுநீர் போல சில உறவுகளைத் தந்தது இந்த இலக்கிய உலகம் தான்!

ஆரம்பத்தில் இருந்து நான் மிகவும் மதிக்கின்ற ஒரு மனிதர்களாக விளங்குகின்ற 2004இல் என்னுடைய முதல் இதழ் வெளியீட்டில் கலந்து சிறப்பித்த ஜொலி ஹவுஸ் புடைவைக் கடை உரிமையாளர் கவிஞர். பாவலர் சாந்தி முஹைதீன், அதன் பின்னர் என்னை மிகுந்த தேடலுக்குள் ஆழ்த்திய பித்தன் கே.எம்.ஷா, 2012இன் பின்னர், அதிகம் பேசி மகிழ்ந்த ஏபிஎம்.இத்ரிஸ், வியாபார ரீதியில் அறிமுகமாகி புத்தக நேசர்களாக நெருங்கிப் போன ஏறாவூர் ஹிரா பிரிண்டர்ஸ் ரஹ்மான், என் உயர்தர வகுப்பு தமிழ் வகுப்பு நண்பன் ஜிப்ரி ஹசன் என அதிகமான இஸ்லாமிய தமிழ்ப் படைப்பாளிகளுடன் பேசிப் பழகி மகிழ்ந்த எம் போன்றவர்களுக்கு!

இந்த இலக்கிய உலகத்தினை விட்டு வெளியில் வந்தால் அரசியல் வெளியில் உண்டாகின்ற கசப்பு மிகு தருணங்கள் வருத்தத்தை தான் தருகின்றன.... இருப்பினும், நம் கூடவே உடன் சிரித்த முகங்களின் பின்னால் உள்ள வன்மங்களைக் காண்கின்ற போதினில்.... மதம் எதுவானாலும்... மனிதர்கள் எல்லோரும் ஒரே மாதிரித்தான் உள்ளார்கள் என்கின்ற உண்மை தான் உறைக்கின்றது.

இவற்றினை இங்கு மீட்டிக் கொள்ள வேண்டிய தேவை ஏன் எழுந்தது எனில் எஸ்.எல்.எம்.மின் “என்டெ சீவியத்திலிருந்து“ - பாகம்-1இல் உள்ள பதிவுகள் நமக்கு படம் பிடித்துக் காட்டுகின்ற பல விடயங்கள்.... நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியாத ஒரு எஸ்.எல்.எம். போன்ற ஒரு சில படைப்பாளிகளுக்கே வாய்த்துள்ள தருணங்கள் அவை!

முதல் பாகத்தில்! எஸ்.எல்.எம். என்ற மனிதநேயனின் - ஒரு மாணவனின் - நண்பனின் - கால்நடை வளர்ப்பு போதனாசிரியனின் - சமூக அரசியல் ஆர்வலனின் முகங்கள் இவற்றை எல்லாம் தாண்டி! நம் எல்லோருக்கும் தெரிந்த குதூகலமான ஒரு எஸ்.எல்.எம்.மினை அனைவரும் தரிசிக்க முடியும்.

இதனைப் படித்ததும்! ஏன் நமது நூலகத்தின் எஸ்.எல்.எம்.மை அழைத்து இந்த நூலுக்கு ஒரு அறிமுக விழாச் செய்யக் கூடாது என்று யோசித்தேன். நூலகரிடம் தெரிவித்தேன். அவரது உடல் நிலை அதற்கு இடம் தருமோ தெரியாது என்று அவர் தெரிவித்தார்.

ஆனாலும், எஸ்.எல்.எம்....

Sridhar Ariyanayagam.

பிரதிக்கு
கஸல் பதிப்பகம்
0775494977

தபால் செலவுடன் 700/

Address

219, AKM Road
Eravur
30300

Alerts

Be the first to know and let us send you an email when Ghazal Publications posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category