27/10/2025
சவால்கள் நிறைந்த பூர்வீக கிராமம் - காத்தான்குடி மீடியா போரம் கள விஜயம்.
(எம்.பஹத் ஜுனைட்)
மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட உன்னிச்சை இருநூறுவில் கிராம மக்கள் எதிர்நோக்கு பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு காத்தான்குடி மீடியா போரத்தின் உறுப்பினர்கள் ஞாயிற்றுக் கிழமை (26) கள விஜயம் மேற்கொண்டனர்.
போரத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.நூர்தீன் தலைமையில் விஜயம் மேற்கொண்ட ஊடகவியலாளர்கள் அக்கிராம மக்கள் எதிர்நோக்கும் சவால்கள் பிரச்சினைகள் தொடர்பில் அக்கிராம மக்கள் மற்றும் பள்ளிவாயல் நிர்வாகிகளிடம் தகவல்களை பெற்றுக்கொண்டனர்.
அக்கிராமமானது முஸ்லிம் மக்களின் பூர்வீக கிராமமாகும் வயல் நிலங்கள் நிறைந்த இயற்கையான அழகான கிராமம் 1985 காலப்பகுதியில் நாட்டில் ஏற்பட்டிருந்த உள்நாட்டு யுத்தத்தின் போது தங்களது இருப்பிடங்கள், பள்ளிவாயல்கள், பாடசாலை, வாழ்வதாரம் அனைத்தையும் விட்டி பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர்.
அதன் பின்னர் 2009 இல் மீள் குடியேறிய இக்கிரம மக்கள் தற்போது தங்களது காணிகள் இருந்து இக்கிராமத்தில் வாழ முடியாத சூழ்நிலைகள் காரணமாக மீண்டும் குடிபெயர்ந்து செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
இக் கிராமத்தில் சுத்தமான குடிநீர், நேர்த்தியான போக்குவரத்து வீதிகள்,பாடசாலை, வைத்தியசாலை, வாழ்வதாரம் போன்றவை இல்லாமையினாலும் யானை, குரங்கு போன்றவற்றின் அட்டகாசம் காரணமாக மக்கள் உயிர்வாழ்வதற்க்கு அச்சுருத்தலாக காணப்படுவதுடன் வேளாண்மை, பயிர்ச்செய்கை போன்றவை நாசமாகி வருகிறது. இது தொடர்பில் அம் மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.
தங்களது ஊடங்கள் ஊடாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள்,திணைக்களங்களுக்கு அறிக்கை சமர்ப்பிப்பதாக அவ் ஊடக குழுவினர் தெரிவித்தனர்.
இவ் விஜயத்தில் போரத்தின் ஆயுட்கால தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ்.எம்.முஸ்தபா (பலாஹி) உள்ளிட்ட அரச ,தனியார் ஊடக நிறுவனங்களின் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.