10/08/2026
சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டிருந்த
பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட மூவர் இலங்கைக்கு.!!
சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட மூவர் மலேசியாவில் இருந்து இன்று (10) மாலை விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
வலான மத்திய ஊழல் தடுப்பு அதிரடிப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று, மலேசிய பொலிஸார் மற்றும் சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்புடன் மேற்கொண்ட நடவடிக்கையின் போது பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் 41 வயதுடைய ரத்மலானை பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் பேராதனை மற்றும் திஸ்ஸமஹாராம பகுதிகளிலும் தற்காலிகமாக வசித்து வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
2014ஆம் ஆண்டு பேராதனை பொலிஸ் பிரிவில் துப்பாக்கியை காட்டி ஒருவரை கடத்திச் சென்று தாக்கி படுகாயம் ஏற்படுத்தியமை மற்றும் 2016ஆம் ஆண்டு அதே பொலிஸ் பிரிவில் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தமை தொடர்பான இரண்டு வழக்குகளில் குறித்த சந்தேகநபர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வழக்குகளுக்காக நீதிமன்றத்தில் முன்னிலையாகாத காரணத்தால் அவருக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2003ஆம் ஆண்டு கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற பணக் கொள்ளை சம்பவம் தொடர்பிலும், 2007ஆம் ஆண்டு கைக்குண்டு ஒன்றை வைத்திருந்தமை தொடர்பிலும் அவர் முன்னதாக கைது செய்யப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரதான சந்தேகநபர் மலேசியாவில் கைது செய்யப்பட்டபோது அவருடன் இருந்த 35 வயதுடைய ரத்மலானை பகுதியைச் சேர்ந்த ஒருவரும், 31 வயதுடைய கல்கிஸ்ஸ பகுதியைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் மேலதிக விசாரணைகளுக்காக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸ் மா அதிபரின் ஆலோசனை மற்றும் நேரடி கண்காணிப்பின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.