26/06/2026
ஐஸ், ஹெரோயினுக்கு முற்றுப்புள்ளி! கொழும்பை அதிரவைத்த ‘ரட்டம எக்கட’ பேரணி
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினமான இன்று (ஜூன் 26), கொழும்பில் ‘ரட்டம எக்கட’ (Ratama Ekata) தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இளைஞர்கள், மாணவர்கள், அரச அதிகாரிகள், பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த பேரணியின் மூலம், ‘ஐஸ்’ (Crystal M**h), ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களை முற்றாக ஒழித்து, போதைப்பொருள் இல்லாத இலங்கையை உருவாக்குவோம் என்ற வலியுறுத்தல் முன்வைக்கப்பட்டது.
அரசாங்கத்தின் ‘ரட்டம எக்கட’ தேசிய திட்டம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்பாட்டை ஒழிப்பதோடு மட்டுமல்லாமல், கிராம மட்டத்திலிருந்து சமூக பங்கேற்பை வலுப்படுத்தி, இளைஞர்களை போதைப்பொருள் அச்சுறுத்தலிலிருந்து பாதுகாப்பதே அதன் முக்கிய நோக்கமாகும்.
இதற்கிடையில், கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தேசிய நடவடிக்கையின் மூலம் இதுவரை சுமார் 10 மெட்ரிக் டன் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சு அண்மையில் அறிவித்திருந்தது. இதில் 2,100 கிலோ ‘ஐஸ்’, 1,950 கிலோ ஹெரோயின், 5,800 கிலோ கஞ்சா உள்ளிட்ட பெருமளவிலான போதைப்பொருட்கள் அடங்குகின்றன.