Ceylon Times Network

Ceylon Times Network உலகம் சொல்லும் செய்திகள் உடனுக்குடன்...
(2)

சம்மாந்துறை மின்மினி மின்ஹாவுக்கு சுற்றுச்சூழல் துறையில் சாதனையாளருக்கான சர்வதேச விருது நூருல் ஹுதா உமர் ஆசியாவில் மிக வ...
14/10/2025

சம்மாந்துறை மின்மினி மின்ஹாவுக்கு சுற்றுச்சூழல் துறையில் சாதனையாளருக்கான சர்வதேச விருது

நூருல் ஹுதா உமர்

ஆசியாவில் மிக வயது குறைந்த சுற்றுச்சூழல் துறையில் சாதனையாளருக்கான சர்வதேச விருது சம்மாந்துரையைச் சேர்ந்த மின்மினி மின்ஹாவுக்கு கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

சர்வதேச ஆசிய உலக சாதனையாளர் அமைப்பினர் ஏற்பாடு செய்த இந்த விருது வழங்கும் விழாவில் சம்மாந்துறை அல்-அர்ஸத் மஹா வித்தியாலயத்தில் தரம் ஒன்பதில் கல்வி கற்று வரும் ஜலீல் பாத்திமா மின்ஹா தனது பதினோராவது வயதிலிருந்து (தரம் 06) காலநிலை மாற்றங்கள் தொடர்பிலான விழிப்புணர்வு உரையினை இலங்கை முழுவதுமாக நடாத்தி இருக்கிறார். இற்றை வரைக்கும் 2,60,000 பேருக்கு நேரடியாக உரை நிகழ்த்தியுள்ளார். இதனை பாராட்டும் விதமாகவே இந்த கௌரவம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இம்மாணவி 07ம் தரம் கல்வி கற்கும் போது காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புக்களில் இருந்து மனித சமூகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை கவனத்தில் கொண்டு,. நாடளாவிய ரீதியில் மரக்கன்றுகளை நடும் வேலை திட்டத்தினை சுயமான முறையில் முன்னெடுத்து, இற்றை வரைக்கும் 26,000க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டியுள்ளார். 08ம் வகுப்பு கற்கையில் கல்விகற்க பாடசாலைக்கு செல்லாத மாணவர்களின் பிரச்சினைகளை இனம்கண்டு அவர்களுக்கு கல்வி அவசியம் என உணர்ந்ததன் பேரில் - பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு "கல்விக்கு கரம் நீட்டுவோம்" எனும் வேலைத்திட்டத்தின் கீழ் உதவிகள் புரிந்து வருகிறார்.

09ம் வகுப்பு கல்வி கற்கையில் தன்னால் முடியுமான வரை வறுமையை அழிக்க வேண்டும் என எண்ணி இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் சமூக சேவை பணிகளை செய்து வருகிறார். குறிப்பாக "ஊணுக்கு உதவுவோம்" எனும் வேலைத்திட்டத்தினை முன்னெடுத்தும் வருகிறார். தற்போது இளைஞர்களின் ஆரோக்கியமான வாழ்வு மற்றும் போதை பொருள் பாவனை அற்ற இளம் சமூகம் எனும் தொனிப்பொருளில் செயல்பட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொலிவேரியன் ஹிஜ்ரா பள்ளிவாயலில் முறையான அனுமதி பெற்று ஜும்ஆத் தொழுகையை ஆரம்பிக்க தீர்மானம்.!சாய்ந்தமருது பெரிய பள்ளிவாயல...
14/10/2025

பொலிவேரியன் ஹிஜ்ரா பள்ளிவாயலில் முறையான அனுமதி பெற்று ஜும்ஆத் தொழுகையை ஆரம்பிக்க தீர்மானம்.!

சாய்ந்தமருது பெரிய பள்ளிவாயல் இடைக்கால நம்பிக்கையாளர்கள் சபை தலைவர் அல்- ஹாஜ் எம்.எம்.முபாறக் அவர்களின் தலைமையில் (14) ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இஷா தொழுகையின் பின்னர் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாயல் கூட்ட மண்டபத்தில் இடம் பெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

இக்கூட்டத்திற்கு உலமாக்கள் உட்பட ஊரில் உள்ள முக்கியஸ்தர்கள் அழைக்கப்பட்டு பொலிவேரியன் கிராமத்தில் வாழும் மக்களின் கோரிக்கையாக இருந்து கொண்டிருக்கும் ஹிஜ்ரா பள்ளிவாயலுக்கு ஜும்ஆத் தொழுகை நடாத்த அனுமதி வழங்குதல் பற்றி அதன் சாதக பாதகங்கள் நீண்ட நேரமாக கருத்துக்கள் கேட்கப்பட்டு பரீசீலிக்கப்பட்டது.

பொலிவேரியன் கிராமம் ஒரு தனிக் கிராமம், இக்கிராமத்தையும் சாய்ந்தமருது நகரத்தையும் ஆறு ஒன்று பிரித்து இருக்கிறது. இக்கிராமத்தில் சுமார் ஆயிரம் குடும்பங்களுக்கும் அதிகமாக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள பள்ளிவாயலுக்கு ஜும்ஆத் தொழுகை நடாத்த அனுமதி வழங்குவதன் மூலம் தொழுகைக்கு வருபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என்ற சாதகமான நிலைமைகளைக் கருத்தில் கொண்டு இப்பள்ளிவாயலில் ஜும்ஆத் தொழுகை நடாத்த அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா உட்பட முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் வக்பு சபை போன்ற இடங்களில் உரிய முறையில் அனுமதி பெற்று இடமளிப்பது என கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலானவர்களின் கருத்துக்கள் பிரகாரம் முடிவு எடுக்கப்பட்டது.

இக் கூட்டத்தில் பொலிவேரியன் ஹிஜ்ரா பள்ளிவாயல் நிர்வாக சபைத் தலைவரும் முன்னாள் பிரதேச செயலாளருமான ஏ.எல்.எம். சலீம் அவர்களின் தலைமையில் மேற்படி பள்ளிவாயல் நிர்வாகிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

ஊரில் உள்ள உலமாக்கள் மற்றும் ஊர் பிரமுகர்களை அழைத்து இது விடயத்தில் உள்ள சாதக பாதகங்களை ஆராய்ந்து முடிவு எடுப்பதற்கு நடவடிக்கை எடுத்த இடைக்கால நம்பிக்கையாளர் சபையின் தலைவர் எம்.எம். முபாறக் ஹாஜியார் அவர்களுக்கு சபையினர் பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.

மதுபான விற்பனை நிலையங்களுக்கு அறவிடப்படும் கட்டணத்தை உயர்த்தினால் அரசாங்கம் நெருக்கடிக்குள்ளாகும் : தேசிய மக்கள் சக்தி உ...
14/10/2025

மதுபான விற்பனை நிலையங்களுக்கு அறவிடப்படும் கட்டணத்தை உயர்த்தினால் அரசாங்கம் நெருக்கடிக்குள்ளாகும் : தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் கு. நிரோஜன்

நூருல் ஹுதா உமர்

நாவிதன்வெளிப் பிரதேச சபையின் அதிகார எல்லைக்குள் அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையங்களுக்கு வியாபார உரிமத்திற்கு ஓராண்டுக்கு அறவிடப்படும் கட்டணத்தை 25 ஆயிரம் ரூபாயாக அதிகரிப்பதற்கு சபையில் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் அபூபக்கர் நளீர் முன்வைத்த பிரேரணையை ஏற்றுக்கொண்ட சபை வாதப்பிரதிவாதங்களின் பின்னர் வாக்கெடுப்பு அடிப்படையில் 15 ஆயிரமாக நிர்ணயித்துள்ளது.

நாவிதன்வெளி பிரதேசசபையின் மாதாந்தக் கூட்டம் (04 வது சபை அமர்வு) இன்று 2025.10.14 செவ்வாய்கிழமை சபை மண்டபத்தில் தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் தலைமையில் உப தவிசாளர் மற்றும் சகல உறுப்பினர்களின் பிரசன்னத்துடன் நடைபெற்றது. இந்த அமர்விலையே பிரதேச சபை உறுப்பினர் அபூபக்கர் நளீர் பிரேரணையை முன்வைத்து உரையாற்றினார். தனது உரையில் மதுபான விற்பனை நிலையங்களினால் மக்கள் எதிர்நோக்கும் சவால்களை முன்வைத்து உரையாற்றினார். அதனை தொடர்ந்து அங்கு கருத்து வெளியிட்ட தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் குஞ்சரமூர்த்தி நிரோஜன் மதுபான விற்பனை நிலையங்களுக்கு அறவிடப்படும் கட்டணத்தை உயர்த்தினால் மதுப்பிரியர்கள் சிரமப்படுவார்கள் என்றும் இந்த கட்டண உயர்வால் அதை ஈடுசெய்ய போத்தலுக்கு 1000 ரூபாய் உயர்த்த வேண்டி வரும். இதனால் மதுபிரியர்களிடமிருந்து அரசாங்கத்திற்கு அழுத்தம் வரும். அதனால் அரசாங்கமும் சிரமத்தை எதிர்கொள்ளும் என்றார். சபை நாகரிகத்தை பேணுமாறு கோரி இந்த கருத்தை தவிசாளர் ரூபசாந்தன் கண்டித்தார்.

இது தொடர்பில் உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்டறிந்த தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன், பல்வேறு கருத்துக்கள் முன்மொழியப்பட்தால் சபையில் வாக்கெடுப்பை நடத்தி மதுபான விற்பனை நிலையங்களுக்கு வியாபார உரிமத்திற்கு ஓராண்டுக்கு அறவிடப்படும் கட்டணத்தை 15 ஆயிரமாக உயர்த்த சபை தீர்மானம் நிறைவேற்றியது.

மேலும் உறுப்பினர் எம்.பி நவாஸ் அவர்களினால் முன்வைக்கப்பட்ட சாளம்பைக்கேணி-01 இல் அமைந்துள்ள வண்ணாத்தி குளத்தை அளவீடு செய்து எல்லை நிர்ணயம் செய்து தரக் கோரிய பிரேரணை ஆராயப்பட்டது. இங்கு கருத்து வெளியிட்ட உறுப்பினர் எம்.பி நவாஸ் இந்த வண்ணாத்தி குளத்தை கண்டுகொள்ளாமல் விட்டால் பின்னாட்களில் இந்த குளம் இருந்த இடமே இல்லாமல் அழிந்துவிடும். விவசாயிகளின் நன்மைகருதி இந்த விடயத்தில் கரிசனை செலுத்துமாறு கேட்டுக்கொண்டதுடன் இது விடயமாக பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவிலும் பேசியதாகவும் நடவடிக்கை எடுப்பதாக கூறிய ஏ.ஆதம்பாபா எம்.பி இதுவரை அதை செய்ய முன்வரவில்லை என்றும். அவர் செயலில் எதையும் செய்வதாக இல்லை. சொல்வதை செய்யும் பழக்கமில்லாத ஒருவராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் இந்த குளம் தொடர்பில் நீர்ப்பாசன திணைக்களத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும், ஏ.ஆதம்பாபா எம்.பி யாரையும் மதிக்காமல் நடந்து கொள்வதாகவும் அவருடைய நடவடிக்கையில் தனக்கும் அதிருப்தி உள்ளதாகவும் தெரிவித்தார். இது தொடர்பில் அமரதாஸ ஆனந்த, ஏ. நளீர் போன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்கும் போதும் ஏ.ஆதம்பாபா எம்.பி தொடர்பில் தனது அதிருப்தியை பதிவு செய்தார்கள். காணி அதிகாரம் சபைக்கு இல்லாததால் மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை அரச அதிகாரிகளை நாடி செய்துகொள்ள தீர்மானம் எடுக்கப்பட்டது.

மேலும் சொறிக்கல்முனை பொது மயான விடயம், நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள் தொடர்பான விடயங்கள், வறிய குடும்பங்களுக்கு குடிநீர் வழங்கும் விடயம், வீதி அபிவிருத்தி விடயங்கள், வடிகான் அமைத்தல், பாலர் பாடசாலை மேம்பாடு, மாடு அறுக்கும் மடுவத்திற்கு மின்சாரம் பெறுதல், பேருந்து தரிப்பிடங்களை புனர்நிர்மானம் செய்தல், அறிவித்தல் பலகை வைப்பது, வடிகானுக்கு முடி இடுதல், பெயர்ப் பலகை நிர்மாணித்தல், இடர் கடன் வழங்குதல், தேசிய வாசிப்பு மாத நிகழ்வினை நடத்துவதற்கான உத்தேச செலவு அறிக்கை, மூன்று மாத கால உள்ளக பயிற்சியினை மேற்கொள்வதற்கான அனுமதி போன்ற பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டு சபை தீர்மானங்களை எடுத்தது.

மக்கள் அபிமானம் பெற்ற ஊடகவியலாளர்களுக்கு மகுடம் சூட்டிய "குரு விருதுகள் சீஸன் 02" விருது வழங்கும் விழா !நூருல் ஹுதா உமர்...
14/10/2025

மக்கள் அபிமானம் பெற்ற ஊடகவியலாளர்களுக்கு மகுடம் சூட்டிய "குரு விருதுகள் சீஸன் 02" விருது வழங்கும் விழா !

நூருல் ஹுதா உமர்

ஊடகப்பரப்பில் சிறந்து விளங்கும் ஊடகவியலாளர்கள் மற்றும் செய்தியாளர்களை கௌரவிக்கும் "குரு விருதுகள் சீஸன் 02" விருது வழங்கும் விழா குரு ஊடக வலையமைப்பின் முகாமைத்துவ பணிப்பாளர் ஹிஸாம் ஏ.பாவா தலைமையில் சாய்ந்தமருது தனியார் மண்டபத்தில் பிரமாண்டமாக 2025.10.12 அன்று மாலை இடம்பெற்றது.

குரு ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில் இரண்டாவது தடவையாக இடம்பெற்ற இவ்விருது வழங்கல் விழாவில் மயோன் குரூப் நிறுவனத்தின் தவிசாளரும், சமூக செயற்பாட்டாளருமான மயோன் எடுகேஷன் எய்ட் தலைவர் எம்.எம்.றிஸ்லி முஸ்தபா பிரதம அதிதியாக கலந்து கொண்டு விருதுகளை வழங்கி வைத்தார்.

மேலும் வசந்தம் தொலைக்காட்சி முகாமையாளர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.இர்பான் கௌரவ அதிதியாக கலந்து கொண்டு ஊடகப்பரப்பில் நவீன ஊடகங்கள் தொடர்பிலும், ஊடக வளர்ச்சி தொடர்பிலும் உரையாற்றி விருதாளர்களுக்கு கௌரவமளித்தார். மேலும் இந்நிகழ்வில் சட்டத்தரணி எம்.கே.எம்.பர்சான், நெஸ்ட் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் பொறியியலாளர் என்.எம்.சப்னாஸ், டொப் பிரிண்டிங் நிறுவன பணிப்பாளர் எம்.ஐ.எம்.மர்லியாஸ் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

ஊடகத்துறையில் சிறந்த சாதனையாளர்களை உலகிற்கு அடையாளங்காட்டும் இந்த விருது வழங்கல் விழாவில் விவரணம், சுகாதாரம், சுற்றாடல் எழுத்தாளர்,மனிதாபிமான உரிமை தொடர்பான ஊடகவியலாளர்கள், வானொலி அறிவிப்பாளர்கள், விளையாட்டு செய்தி அறிக்கையாளர், சிறந்த இளம் யூடியுப்பாளர்கள், கட்டுரை எழுத்தாளர், ஊடகத்துறையின் வாழ்நாள் சாதனையாளர் போன்ற பல்வேறுபட்ட துறைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

வேதநாயகம் ஜெகதீசன் துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் புதிய பதில் செயலாளராக நியமனம்நூருல் ஹுதா உமர் இலங்கை நிர...
14/10/2025

வேதநாயகம் ஜெகதீசன் துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் புதிய பதில் செயலாளராக நியமனம்

நூருல் ஹுதா உமர்

இலங்கை நிர்வாக சேவை சிரேஷ்ட தர அதிகாரியான வேதநாயகம் ஜெகதீசன் துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் பதில் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என். எஸ். குமநாயக அவர்கள் இன்று (14.10.2025) முதல் அமுலாகும் வகையில் அதிகாரப்பூர்வமாக வழங்கியுள்ளார். வி. ஜெகதீசன், இதற்கு முன்பு அதே அமைச்சின் மேலதிக செயலாளராகப் பணியாற்றி வந்த நிலையில், இன்று (14) தமது புதிய பதவியை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

அரசு நிர்வாகத்தில் சிறப்பான சேவையைப் புரிந்துள்ள வி. ஜெகதீசன், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகவும், பதில் அரசாங்க அதிபராகவும், பதில் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளராகவும் திறன்பட கடமையாற்றியுள்ளார். அவரின் நியமனம், துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் துறையின் நிர்வாக மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு புதிய ஊக்கத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேடப்பட்டு வந்த இஷாரா செவ்வந்தி நேபாளில் கைது- கணேமுல்ல சஞ்சீவ கொலையின் முக்கிய சந்தேகநபர்– கெஹல்பத்தர பத்மேவின் கூட்டாள...
14/10/2025

தேடப்பட்டு வந்த இஷாரா செவ்வந்தி நேபாளில் கைது

- கணேமுல்ல சஞ்சீவ கொலையின் முக்கிய சந்தேகநபர்
– கெஹல்பத்தர பத்மேவின் கூட்டாளி உள்ளிட்ட ஐவர் சிக்கினர்

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி நேபாளில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் ‘கெஹல்பத்தர பத்மே’வின் கூட்டாளி எனக் கூறப்படும் சந்தேகநபர்கள் உள்ளிட்ட மொத்தமாக 5 சந்தேகநபர்கள் நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான கெஹல்பத்தர பத்மே வெளிப்படுத்திய தகவல்களின் அடிப்படையில் நாட்டை விட்டு தப்பிச் சென்ற இஷாரா செவ்வந்தியைக் கைது செய்ய அண்மையில் ஒரு விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

சர்வதேச பொலிஸாரான இன்டர்போலின் ஆதரவுடன் கொழும்பு குற்றவியல் விசாரணைப்பிரிவு இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சம்மாந்துறை வலய மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு.அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்விப்பிரிவின் ஏற்பாட்டில், சம்மாந்துறை வ...
12/10/2025

சம்மாந்துறை வலய மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்விப்பிரிவின் ஏற்பாட்டில், சம்மாந்துறை வலயத்திற்குற்பட்ட பாடசாலைகளில், உயர்தர பரீட்சையில் 3A சித்திகளைப் பெற்ற மாணவர்களையும், சாதாரண தர பரீட்சையில் 9A சித்திகளைப்பெற்ற மாணவர்களையும் கெளரவிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (10) வெள்ளிக்கிழமை சம்மாந்துறை மஜீட் மண்டபத்தில், பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹீர் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு, பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் கலந்து கொண்டதுடன், அதிதிகளாக கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹீர், சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் மஹேந்திரகுமார், சம்மாந்துறை பிரதேச சபையின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சம்மாந்துறை வலயத்திற்குற்பட்ட சம்மாந்துறை, இறக்காமம், வரிப்பதான்சேனை பிரதேச பாடசாலை மாணவர்களும் பெற்றோர்களும் இதன் போது கெளரவிக்கப்பட்டனர்

மாளிகைக்காடு, சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி அமைப்பினருக்கு வீரமானிடர் விருது -2025நூருல் ஹுதா உமர் தமதுயிரைப் பணயம் வைத்து...
11/10/2025

மாளிகைக்காடு, சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி அமைப்பினருக்கு வீரமானிடர் விருது -2025

நூருல் ஹுதா உமர்

தமதுயிரைப் பணயம் வைத்து பிற உயிர்களைக் காப்பாற்றிய வீரமானிடர்களை கௌரவிப்போம் எனும் தொனிப்பொருளில் பொதுமக்கள் வீர செயலுக்கான மன்றம் ஏற்பாடு செய்த 28 வது தேசிய வீரமானிடர் விருது விழா 2025 இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று அக்டோபர் 11, 2025 ரஜமல்வத்தை வீதி, பத்தரமுல்ல மிஹிகந்த மெதுர, காணிச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பேரிடரின் போது தமது உயிரைப் பணயம் வைத்து, உயிராபத்திலுள்ள மக்களைக் காப்பாற்றிய அல்லது காப்பாற்ற முனைந்த வீரமானிடர்களை பாராட்டும் விதமாக கடந்த 2024.11.26 அன்று காரைதீவு மாவடிப்பள்ளி வெள்ள அனர்த்தத்தில் 13 பேருடன் பயணித்த போது கவிழ்ந்த உழவு இயந்திரத்திலிருந்து அவர்களை மீட்க போராடியமைக்காக கிழக்கு பிராத்தியத்தில் முன்னோடி சமூக சேவை அமைப்புக்களாக திகழும் மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பு, சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி அமைப்பு, மட்டுப்படுத்தப்பட்ட கல்முனை ஆழ்கடல் சுழியோடிகள் நீரியல்வள மீனவர் கூட்டுறவுச் சங்கத்தினர், காரைதீவு ராவனா அமைப்பினர் ஆகியோர் வீரமானிடர் விருது பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

பொதுமக்கள் வீர செயலுக்கான மன்றத்தின் இந்த விருது வழங்கும் விழா 28 வது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எஸ்.பிரணவ ரூபன், அனர்த்த நிவாரண சேவை காரைதீவு பிரதேச உத்தியோகத்தர் எம்.ஐ.எச். சர்பின், பொதுமக்கள் வீர செயலுக்கான மன்ற உறுப்பினர்கள், மத போதகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பினருக்கு வீரமானிடர் விருது -2025நூருல் ஹுதா உமர் தமதுயிரைப் பணயம் வைத்து பிற உயிர்களைக...
11/10/2025

மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பினருக்கு வீரமானிடர் விருது -2025

நூருல் ஹுதா உமர்

தமதுயிரைப் பணயம் வைத்து பிற உயிர்களைக் காப்பாற்றிய வீரமானிடர்களை கௌரவிப்போம் எனும் தொனிப்பொருளில் பொதுமக்கள் வீர செயலுக்கான மன்றம் ஏற்பாடு செய்த 28 வது தேசிய வீரமானிடர் விருது விழா 2025 இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரிசின் கௌரவ சபாநாயகர் டொக்டர் ஜகத் விக்ரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று அக்டோபர் 11, 2025 ரஜமல்வத்தை வீதி, பத்தரமுல்லை மிஹிகந்த மெதுர, காணிச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பேரிடரின் போது தமது உயிரைப் பணயம் வைத்து, உயிராபத்திலுள்ள மக்களைக் காப்பாற்றிய அல்லது காப்பாற்ற முனைந்த வீரமானிடர்களை பாராட்டும் விதமாக கடந்த 2024.11.26 அன்று காரைதீவு மாவடிப்பள்ளி வெள்ள அனர்த்தத்தில் 13 பேருடன் பயணித்த போது கவிழ்ந்த உழவு இயந்திரத்திலிருந்து அவர்களை மீட்க போராடியமைக்காக கிழக்கு பிராத்தியத்தில் முன்னோடி சமூக சேவை அமைப்பாக திகழும் மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பினருக்கு வீரமானிடர் விருது பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

பொதுமக்கள் வீரச்செயலுக்கான மன்றத்தின் இந்த விருது வழங்கும் விழா 28 வது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் பொதுமக்கள் வீர செயலுக்கான மன்ற உறுப்பினர்கள், மதபோதகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் உலக ஆசிரியர் தின நிகழ்வுகள்நூருல் ஹுதா உமர் கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட கல...
09/10/2025

இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் உலக ஆசிரியர் தின நிகழ்வுகள்

நூருல் ஹுதா உமர்

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் உலக ஆசிரியர் தின நிகழ்வுகள் இன்று 2025.10.08 ம் திகதி இடம்பெற்றது.

பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆசிரியர் தினத்தில் பாடசாலை அதிபர் ஏ.ஜீ.எம். றிசாத் அவர்கள் உட்பட அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களாலும், பெற்றோர்களாலும் மாலை அணிவித்து பூச்செண்டு வழங்கி சிறந்த முறையில் கௌரவிக்கப்பட்டனர்.

இதன் போது ஆசிரியர்களின் கலை, கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

நன்நடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் துவிச்சக்கரவண்டிகள் வழங்கிவைப்புநூருல் ஹுதா உமர் கிழக்கு...
09/10/2025

நன்நடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் துவிச்சக்கரவண்டிகள் வழங்கிவைப்பு

நூருல் ஹுதா உமர்

கிழக்கு மாகாண நன்நடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தினால் சம்மாந்துறை கல்வி வலயத்தில்
தெரிவுசெய்யப்பட்ட நலிவுற்ற குடும்பங்களிலுள்ள மாணவர்களின் வீட்டிலிருந்து பாடசாலை கல்வியை தொடர்வதற்கான துவிச்சக்கரவண்டி வழங்கும் வேலைத்திட்டம் நடைபெற்று வருகின்றது.

இத்திட்டத்தினூடாக இறக்காமம் பிரதேச செயலக பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கான துவிச்சக்கரவண்டிகள் பிரதேச செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். றஸ்ஸான் (நளீமி) அவர்களின் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டன.

இறக்காமம் கல்விக் கோட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் இதனூடாக பாடசாலை இடைவிலகளை தவிர்த்து, அவர்களின் பாடசாலைக் கல்வி மற்றும் கற்றல் நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தும் நோக்கில் இவ் உதவித்தட்டம் வழங்கிவைக்கப்பட்டது.

மேலும், இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி ஏ.கே. றொஷின்தாஜ் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் தெரிவு செய்யப்பட்ட மாணவருக்கு துவிச்சக்கர வண்டியினை வழங்கிவைத்தார்.

நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம். சப்றின், பிரிவுக்கான கிராம உத்தியோகத்தர் ஏ.எல். ஹுசைன், உளவளத்துணை உவியாளர் ஏ.எச்.றகீப், முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.எம். இம்டாட், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.ஐ. பஸீனா மற்றும் பெண்கள் அபிவிருத்தி வெளிக்கள உதவியாளர் எம்.ஜி. சுவர்னா ஹேமலதா
ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

பிரதேச மட்ட சிறுவர் கண்காணிப்பு மற்றும் பால்நிலை வன்முறை தொடர்பான செயற்குழு கூட்டம் !நூருல் ஹுதா உமர்இறக்காமம் பிரதேச சி...
09/10/2025

பிரதேச மட்ட சிறுவர் கண்காணிப்பு மற்றும் பால்நிலை வன்முறை தொடர்பான செயற்குழு கூட்டம் !

நூருல் ஹுதா உமர்

இறக்காமம் பிரதேச சிறுவர்களின் உரிமை, பாதுகாப்பு, அபிவிருத்தி, சிறுவர் நலன் மற்றும் மேம்பாடு மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகள், பெண்கள் எதிர்நோக்கும் துஷ்பிரயோகங்கள், அவர்களின் பாதுகாப்பு, ஆரோக்கியம் என்பவை தொடர்பாக காலாண்டுக்கு ஒரு முறை பிரதேச சிறுவர் அபிவிருத்தி மற்றும் பால்நிலை வன்முறை தடுப்பு குழு கூட்டத்தில் ஆராயப்பட்டு வருகின்றது.

அந்த வகையில், 2025 ஆம் வருடத்தின் மூன்றாம் காலாண்டுக்கான பிரதேச சிறுவர் கண்காணிப்பு மற்றும் பால்நிலை வன்முறை தொடர்பான செயற்குழு கூட்டம் (DCMC & SGBV Task ) இறக்காமம் பிரதேச செயலக சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி பி. யசோதா அவர்களின் ஒருங்கிணைப்பில் நிருவாக உத்தியோகத்தர் ஐ.எல். முஹம்மட் றஸாக் அவர்களின் தலைமையில் இறக்காமம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் பிரதேச சிறுவர்களின் உரிமை மற்றும் பாதுகாப்பு என்பவற்றை உறுதிப்படுத்தும் நோக்கில், பாடசாலை இடைவிலகல், கல்வி ரீதியான பிரச்சினைகள், பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு, பிரத்தியேக கல்வி நடவடிக்கைகள், சிறுவர்களை மையப்படுத்திய போதைப் பாவனை, இளவயது திருமணம், சிறுவர்களின் சுகாதார மேம்பாடு, விசேட தேவையுடைய சிறுவர்களின் நலனோம்பல் தொடர்பான விடயங்கள் மற்றும் கிராம மட்ட சிறுவர் அபிவிருத்தி குழுவின் 2025 ஆம் ஆண்டில் இரண்டாம் காலாண்டு வருடத்திற்கான செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

மேலும், பால்நிலை வன்முறை மற்றும் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், பிரதேச மட்டத்திலான அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் வேலைத்திட்டங்கள், குடும்ப வன்முறை, பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் எதிர்நோக்கும் சவால்கள் அவற்றை குறைப்பதற்கும் தடுப்பதற்குமான நடவடிக்கைகள் போன்ற பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன.

இந்த கூட்டத்திற்கு இறக்காமம் பிரதேச சபை தவிசாளர் சார்பாக உறுப்பினர் ஏ.எம். சாகீர் மற்றும் பொலிஸ் நிலைய குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி, வலயக் கல்வி பணிமனையின் உதவி கல்வி பணிப்பாளர் எஸ்.எல். நிஸார், சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.எல்.சபீர், சிறுவர் நன்னடத்தை திணைக்களம், அதிபர்கள், ஜும்ஆ பள்ளிவாசல், ஜம்இய்யதுல் உலமா சபை, பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள், இஸ்லாமிக் ரிலீப் நிறுவனத்தின் பிரதிநிதிகள், மகளிர் சங்க பிரதிநிதிகள், உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.எச்.றகீப், முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர். முஹம்மட் இம்டாட், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி எம். எம்.கே. சாஜிதா, சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திருமதி எம்.ஐ. பஸீனா, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அபிவிருத்தி உத்தியோகத்தர் டி. ஜெயமோகன், கலாச்சார உத்தியோகத்தர் ஏ. எம். ஆரிப், ஏ.எல். நௌபீஸா, அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல். றினோஸா, சமுதாயம்சார் சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ. நிஸ்வான் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர். ஆகியோர் கலந்து கொண்டனர்.

Address

Kalmunai

Alerts

Be the first to know and let us send you an email when Ceylon Times Network posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ceylon Times Network:

Share