22/05/2026
#அம்பாறை_மாவட்ட_அபிவிருத்தி_மற்றும்_பேரிடர்_மீட்பு_நடவடிக்கைகள்_குறித்து #ஜனாதிபதி_அனுர_குமார_திசாநாயக்க_விசேட_கவனம்!
Anura Kumara Dissanayake தலைமையில் அம்பாறை மாவட்ட மக்களின் அபிவிருத்தி தேவைகள் மற்றும் “டிட்வா” சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை ஆராயும் நோக்கில் விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (22) பிற்பகல் அம்பாறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, அம்பாறை மாவட்ட அபிவிருத்திக்காக 2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் இதுவரை இல்லாத அளவிலான 22,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அந்த நிதியின் கீழ் முன்னெடுக்கப்படும் வீதி, நீர்ப்பாசனம், குடிநீர் மற்றும் வீடமைப்பு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராய்ந்த ஜனாதிபதி, ஒதுக்கப்பட்ட நிதிகளை 2026 நிதியாண்டுக்குள் முறையாக பயன்படுத்தி மக்களுக்கு விரைவாக பயன்களை வழங்குவது அரச அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி சட்டவிரோதமாக காணிகள் கைப்பற்றப்படுவது காரணமாக கிழக்கு மாகாணத்தில் உருவாகியுள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவித்த ஜனாதிபதி, கிழக்கு மாகாண காணிகளை பாதுகாக்க பிரதிப் பொலிஸ்மா அதிபரின் தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
கடலரிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு கடற்கரைப் பகுதியை பாதுகாப்பது தொடர்பிலும் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டதுடன், கடற்கரை பாதுகாப்பையும் சுற்றுலாத்துறையின் மேம்பாட்டையும் ஒருங்கிணைக்கும் வகையில் விரைவான திட்டமொன்றை தயாரிக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதேவேளை, ஒவ்வொரு ஆண்டும் களு ஓயா பெருக்கு மற்றும் அதனைச் சூழ்ந்த பகுதிகளில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு காரணமாக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண அவசர ஆய்வு மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.
மேலும், பிரதேச செயலகங்கள் மற்றும் கல்வி வலயங்கள் போன்ற நிர்வாக அமைப்புகள் இன அடிப்படையில் அல்லாது, நிலப்பரப்பு மற்றும் மக்கள் தொகை போன்ற பொதுவான அளவுகோல்களின் அடிப்படையில் அமைக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இந்த நிகழ்வில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு துறை பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். TM News Kalmunai Net e-Tamil24