31/05/2026
பத்து வயது தங்கையை, பதினைந்து வயது சகோதரன் கழுத்து நெரித்து கொலை!
கைத்தொலைபேசியினால் வந்த வினை!! ஏறாவூர் -05 யில் சம்பவம்.
( MSM. நஸீர் - ISD, ஏறாவூர்)
நாட்டில்
ஏற்பட்டிருந்த யுத்த சூழ்நிலை காரணமாக திருகோணமலையிலிருந்தும் ,யாழ்ப்பாணத்திலிருந்தும் முறையே 1990, 2000ம ஆண்டுகளில் இரு வெவ்வேறு குடும்பங்கள் படகு மூலம் இந்தியா தமிழ்நாட்டுக்கு சென்று கண்ணியாகுமரி ,பெருமாள்நகர அகதிமுகாமில் தங்கியிருந்த வேளை இவ்விரு குடும்பங்களிலிருந்தும் திருகோணமலை மாப்பிள்ளையும், யாழ்ப்பாண பெண்ணுமாக திருமணம் செய்து ஒரு ஆண் மகனையும், ஒரு பெண் மகளையும் பெற்றெடுத்திருக்கின்றனர்.
1990 யில் இந்தியாவுக்கு அகதியாக வரும்போது திருகோணமலையை சேர்ந்த சகோதரருக்கு 07 வயது. யாழ்ப்பாண பெண் 2000 ஆண்டு இந்தியா வரும்போது 11 வயதாகவும் இருந்திருக்கிறது.
சுமார் 35 வருடமாக அகதி முகாமிலேயே காலத்தை கடத்திய இவர்களுக்கு குடியுரிமை கிடைக்காததால், சொந்த நாட்டுக்கு செல்வோம் என முடிவெடுத்து, எங்கு போகலாம் என்று யோசிக்கும்போது, குறித்த முகாமிலிருந்த மட்டக்களப்பு சகோதர் ஒருவரின் ஆலோசனைப்படி ,07 -02-2026 அன்று தாய்நாட்டுக்கு வந்து செங்கலடியில் ஒருமாதமளவில் தெரிந்தவரின் வீட்டில் தங்கியிருந்த வேளை இரு பிள்ளைகளையும் செங்கலடி மத்திய கல்லூரியில் சேர்த்திருக்கின்றனர்.
அதன் பின்னர் ஏறாவூர், ஐந்தாம் குறிச்சி வெற்றிவேல் வீதியில் வீடொன்றை கொள்வனவு செய்து நான்குபேரும் 05-04-2026 தொடக்கம் அங்கேயே தங்கியிருந்துள்ளனர்,
குழந்தைகளின் தந்தைக்கு STUDIO வேலை தெரிந்திருந்ததால் அதன் முயற்சியில் அவர் ஈடுபட, குழந்தைகளின் தாய், அவரது அம்மாவுக்கு சுகமில்லையென அறிந்து 19-05-2026 அன்று இந்தியா சென்றிருக்கிறார்.
தற்போது வீட்டில் தந்தையும் இரு பிள்ளைகளுமே இருந்துள்ளனர்.
28-05-2026 அன்று வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு 15 வயது மகனை தனியார் வகுப்புக்கு அனுப்பி வைத்துவிட்டு , மகளை அழைத்துக்கொண்டு பிறந்தநாள் நிகழ்வொன்றின் படப்பிடிப்புக்காக தந்தை சென்றிருக்கிறார்.
மகன் பாடமுடிந்து வீட்டுக்கு வந்திருப்பதை அறிந்த தந்தை, தன்னுடன் அழைத்துச்சென்ற மகளை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்து, "இருவருமாக வீட்டில் கவனமாக இருந்துகொள்ளுங்கள் ,பகல் சாப்பாடு சமைத்து வைத்திருக்கிறேன், உரிய நேரத்திற்கு சாப்பிடுங்கள் ,நான் வேலைக்கு சென்று வருகிறேன் , சிலவேளை அம்மா இந்தியாவிருந்து Call எடுத்தால் பேசுங்கள் எனக்கூறி அவரது கைத்தொலைபேசியையும் பிள்ளைகளிடத்தில் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார்.
வேலைக்கு சென்றிருந்த தந்தை பிற்பகல் 01.30 மணியளவில் Call எடுத்தபோது , பேசிய பிள்ளைகள் பிற்பகல் 03.15 மணியளவில் Call எடுத்த போது எவருமே பேசவில்லையென்ற கவலையுடன் வேலைமுடிந்து பிற்பகல் 04.30 மணிக்கு வீடுவந்தபோது, தனது மகள் குளியலறையில் நீர்நிறைந்த பிளாஸ்டிக் வாளியினுல் தலை அமிழ்ந்த நிலையில் உணர்வற்றுக்கிடப்பதை கண்டதும் உடனடியாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது "மகள் மரணமடைந்திருப்பதை " வைத்தியர் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
தங்கையை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது, அண்ணனும் கூடவே சென்றுமிருக்கிறார்.
உடனடியாக ஏறாவூர் பொலிசாரின் வேண்டுகோளின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற. மரண விசாரணை அதிகாரி MSM.நஸீர், சம்பவ இடம்பெற்ற இடத்திலுள்ள ஆதாரங்களை பார்வையிட்டு பின்னர் வைத்தியசாலை சென்று சிறுமியின் பிரேதத்தை பார்வையிட்ட போது , சிறுமியின் மரணத்தில் சந்தேகமிருப்பதாக கண்டறிந்து, மேற்கொண்டு விசாரணைகளை தொடர, கௌரவ நீதிபதிக்கு விடயத்தை தெரியப்படுத்துமாறு பொலிசாரை பணித்தார்.
விடயமறிந்து 29-05-2026 நாடு திரும்பிய சிறுமியின் தாய், மாலை 06.45 க்கு வீடு வந்தபோது, " குழந்தையின் மரணத்தில் மகனில்தான் சந்தேகமிருப்பதாக விசாரணையாளர் தெரிவித்திருப்பதால், தயவுசெய்து நீயாவது மகனை தனியாக வைத்து கேள் " என்று கணவர் சொன்னதும், திடுக்கிடும் உண்மை வெளியானது.
கைத்தொலைபேசியை தன்னிடம் தருமாறு தங்கையுடன் சண்டைபோட்ட எனக்கு, தங்கை கையில் அடித்ததால், கோபமடைந்த நான் பதிலுக்கு நானும் அடித்து ,கீழே தள்ளி கைகளால் கழுத்துத்தை நெரித்து பிடித்தபோது மயக்கமாகிவிட்டார். அதன் பின்னர் பயம் காரணமாக நானே தங்கையை தூக்கிக்கொண்டு குளியலறையில் பிளாஸ்டிக் வாளிக்குள் தண்ணீரை நிரப்பி, அதனுல் சோப் ஒன்றையும் போட்டு தங்கையை நீரில் அமிழ்ந்தவாறு வைத்துவிட்டு, பாடத்துக்கு செல்வதுபோல் சென்றுவிட்டேன் ...என்ற அதிர்ச்சி தகவலை சொன்னதும் ஏறாவூர் பொலிசாருக்கு பெற்றோர் விடயத்தை தெரியப்படுத்தியுள்ளனர்.
அதன் பின்னர் குறித்த சிறுவன் கைது செய்யப்பட்டு விசாரணைகளை பொலிசார் தொடங்கினர்.
கௌரவ பதில் நீதிபதியின் கட்டளைக்கமைவாக சிறுமியின் பிரேத பரிசோதனை இன்று நடைபெற்ற போது (30/05) ," கைகளால் கழுத்தை நெரித்ததால் ஏற்பட்ட மரணமே " என கண்டறியப்பட்டு , சிறுமியின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. சிறுவன் , "சிறுவர் நன்னடத்தை பிரிவில்" ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்.
கைத்தொலைபேசிக்காக. முரண்டு பிடிக்கும் நமது குழந்தைகள் விடயத்திலும் கவனமாகயிருப்போம்.