SHUMS TV

SHUMS TV இறைஞானமே எங்கள் மூலதனம்

இது ஷம்ஸ் மீடியா யுனிட்டின் உத்தியோகபூர்வ ஷம்ஸ் டிவி முகநூல் பக்கம்.

இவ் அமைப்பு கிழக்கிலங்கை காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் அதி சங்கையும், கீர்த்தியும் நிரம்பிய அஷ்ஷெய்குல் காமில், ஆரிப் பில்லாஹ், ஞானபிதா, மௌலவீ அல்ஹாஜ் AJ.அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ அன்னவர்களின் உயர்திரு ஆலோசனைக்கிணங்க
ஸுபிஸ இஸ்லாமியம் சார்ந்த விழுமியங்களான ஷரீஅத், தரீகத், ஹகீகத், மஃரிபத் ஆகியவற்றின் விளக்கங்க

ளையும், நுணுக்கங்களையும், ஆய்வுகளையும், வழிகாட்டுதலையும் உலகிற்கு எடுத்துரைக்கக்கூடிய ஓர் முகநூல் ஊடகமாகும்.

எமது உத்தியோகபூர்வ ஊடக வலையமைப்புக்களும், சமூக வலைத்தளங்களும்...

இணையத்தளம் - www.shumsmedia.com

யூடியுப் - www.youtube.com/shumsmedia

டுவிட்டர் - www.twitter.com/shumsnews

வாட்ஸ்அப் - +94 77 48 49 786

முகநூல் - www.facebook.com/shumsmediaunit

29/06/2025

*ஜனாஸா பற்றிய அறிவித்தல்*

புதிய காத்தான்குடி-06 MMV 2ம் ஒழுங்கையைச் சேர்ந்த ஹஸீபா பேகம் அவர்கள் இன்று அதிகாலை தாறுல் பனாவை விட்டும் தாறுல் பகாவைச் சென்றடைந்தார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்.

அன்னார் MTM. ஹஸன் (KP) (பத்ரிய்யா ஜுமுஆப் பள்ளி வாயல் காசாளர்) அவர்களின் மகளாவார்.

எல்லாம் வல்ல இறைவன் வலீமார் பொருட்டால் அன்னாரது சகல பாவங்களையும் மன்னித்து நல்லோருடன் சுவனபதியில் குடியமர்த்துவானாக! ஆமீன்!

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

தகவல் குடும்பத்தினர்.

ஜுமுஅஹ் பிரசங்கம்உரை - சங்கைக்குரிய மௌலவீ ACM. பைஸல் றப்பானீ அவர்கள்காலம் - 27.06.2025 வெள்ளிக்கிழமைஇடம் - பத்ரிய்யஹ் ஜு...
28/06/2025

ஜுமுஅஹ் பிரசங்கம்

உரை - சங்கைக்குரிய மௌலவீ ACM. பைஸல் றப்பானீ அவர்கள்

காலம் - 27.06.2025 வெள்ளிக்கிழமை

இடம் - பத்ரிய்யஹ் ஜுமுஅஹ் பள்ளிவாயல், காத்தான்குடி-5. இலங்கை.

ஜுமுஅஹ் பிரசங்கம்உரை - சங்கைக்குரிய மௌலவீ ACM. பைஸல் றப்பானீ அவர்கள்காலம் - 27.06.2025 வெள்ளிக்கிழமைஇடம் - பத்ரிய்யஹ் ஜு.....

27/06/2025

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியதாகும். அவன் நாடியவற்றை அவன் படைக்கிறான். அவன் நாடியவர்களுக்குப் பெண் மக்களை அன்பளிப்புச் செய்கிறான். அவன் நாடியவர்களுக்கு ஆண் மக்களை அன்பளிப்புச் செய்கிறான்.

அல்லது ஆண் மக்களையும், பெண் மக்களையும் கலந்தே கொடுக்கிறான். அன்றியும் அவன் நாடியவர்களை மலடாகவும் ஆக்கி விடுகிறான். நிச்சயமாக அவன் யாவையும் நன்கறிந்தவன். இன்னும் மிக்க ஆற்றலுடையவன். (ஷூறா அத்தியாயம், வசனம்: 49-50)

لِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ يَخْلُقُ مَا يَشَاءُ يَهَبُ لِمَنْ يَشَاءُ إِنَاثًا وَيَهَبُ لِمَنْ يَشَاءُ الذُّكُورَ، أَوْ يُزَوِّجُهُمْ ذُكْرَانًا وَإِنَاثًا وَيَجْعَلُ مَنْ يَشَاءُ عَقِيمًا إِنَّهُ عَلِيمٌ قَدِيرٌ،

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

மேற்கண்ட திரு வசனங்களில் அல்லாஹ் பல விடயங்களைக் கூறியுள்ளான்.

அவற்றில் வானங்களினதும், பூமியினதும் ஆட்சி தனக்கே உரியது என்று திட்டமாகக் கூறியுள்ளான். திட்டமாகக் கூறியுள்ளான் என்று ஏன் நான் சொல்கின்றேன் என்றால் திரு வசனத்தில் للهِ என்ற சொல்லை முதலில் அல்லாஹ் கூறி அதன் பிறகுதான் مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ வானங்களினதும், பூமியினதும் ஆட்சி என்ற பொருளைத் தருகின்ற வசனத்தைக் கூறியுள்ளான்.

இத்தகைய வசன அமைப்பு நாகரிக மொழி அடிப்படையில் வந்துள்ளது. للهِ என்ற சொல் “அல்லாஹ்வுக்கு” என்ற கருத்தைத் தராமல் “அல்லாஹ்வுக்கே” என்ற கருத்தை தரும்.

இவ் உண்மை فصاحة، بلاغة என்ற மொழி நாகரீகம் கற்றவர்களுக்கு மட்டுமே புரியும். மொழி நாகரீகம் தெரியாதவர் எங்கு படித்தவராயினும் அவருக்கு இது புரியாது. அவருடன் தர்க்கம் செய்ய எம்மால் முடியாது. இத்தகைய ஒருவருடன் தர்க்கம் செய்வது ரிஸ்வீ என்ற ஸூபிஸ தத்துவம் புரியாத எனது எதிரியுடன் தர்க்கம் செய்வது போன்றாகிவிடும். நேரமும் வீணாகிவிடும்.
لِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ
வானங்களினதும், பூமியினதும் ஆட்சி அல்லாஹ்வுக்கு மட்டுமேயன்றி வேறு எவருக்கமில்லை என்றால் இதன் சரியான பொருள் ஆட்சியில் உரிமை பேசத் தகுதியானவன் அல்லாஹ் மட்டுமேயாவான் என்பதேயாகும்.

இந்த வசனம் مُلْكُ السَّمَوَاتِ وَالْأَرْضِ للهِ என்று வந்திருந்தால் அல்லாஹ்வுக்கு மட்டுமே ஆட்சி என்ற பொருள் வராது. அல்லாஹ்வுக்குச் சொந்தம் என்பதற்கும், அல்லாஹ்வுக்கே சொந்தம் என்பதற்கும் வித்தியாசம் இருப்பது தம்பி ரிஸ்வீ போன்றவர்களுக்குப் புரியாது. பாலர் வகுப்பு மாணவனுக்கும், பட்டதாரி மாணவனுக்கும் வித்தியாசம் உண்டு.

இந்த நாகரீக அடிப்படையில் ஸஊதி நாட்டின் ஆட்சி இன்ன மன்னனுக்குரியது, துபாய் நாட்டின் ஆட்சி இன்ன மன்னனுக்குரியது, இலங்கை நாட்டின் ஆட்சி இன்னானுக்குரியது என்று சொல்வது உலக வழக்கத்திலுள்ளதேயன்றி எதார்த்தம் இதுவல்ல. ஒரு வகையில் இவ்வாறு சொல்வது பொய்யேதான்.

“ஹகீகத் அக்லீ - மஜாஸ் அக்லீ” என்ற விதிகள் இல்லையெனில் சொல்வதெல்லாமே பொய்யாகிவிடும். இந்த விபரம் பிர்அவனுக்குத் தெரியாமற் போனதினால்தான் وَمَا رَبُّ الْعَالَمِيْنَ உலக மக்களின் “றப்பு” என்பது என்ன சாமான்? என்று அவன் கேட்டான். அவன் போன்றவர்களில் சேர்ந்தவர்கள் நமது பொய் குருமாரிலும் உள்ளார்கள்.
يَخْلُقُ مَا يَشَاءُ
அவன் நாடியதைப் படைப்பான். அவனின் “தாத்” அல்லது “வுஜூத்” உள்ளமையில் என்ன நாட்டம் ஏற்படுகிறதோ அதை அவன் படைப்பான். அதாவது ஸூபிஸ தத்துவத்தின் படி அவனில் என்ன நாட்டம் ஏற்படுகிறதோ அதுவாக அவனே வெளியாகுவான். இதுவே சரியான பொருளும், தத்துவமுமாகும். எனது எதிரி ரிஸ்வீ நினைப்பது போல் தச்சன் கதிரையைச் செய்த கதை போன்றதல்ல.

يَهَبُ لِمَنْ يَشَاءُ إِنَاثًا
தான் நாடியவர்களுக்கு பெண் குழந்தைகளை அன்பளிப்பாக வழங்குவான். “வஹப” என்ற சொல்லுக்கு கொடுப்பான் என்று மட்டும் பொருள் கொள்ளாமல் அன்பளிப்பாக வழங்குவான் என்று பொருள் கொள்ள வேண்டும்.

ஒரு பெண்ணுக்கு தலைப்பிள்ளை - முதற் குழந்தை பெண் பிள்ளையாயிருப்பது அக்குழந்தையின் பெற்றோரின் “ஸஆதத்” நற் பாக்கியத்திற்கு ஒரு “சிக்னல்” என்பதற்கு இத்திரு வசனத்தில் மறைவான ஒரு சமிக்ஞை இருப்பது நுட்பமானவர்களுக்குப் புரியும்.

ஒரு பெண் தனது முதற் குழந்தை பெண் குழந்தையாக இருப்பதையே விரும்புவாள். இதற்குப் பெண்கள் பல காரணங்கள் எனதூரில் சொல்வர். அவற்றில் பிரதான காரணம் பெண் குழந்தை திருமணம் செய்யும் வரை தாயுடனேயே இருந்து தாயிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியதையெல்லாம் கற்றுக் கொள்ளும். தாயின் நூறு வீத வேலைச் சுமையைக் குறைக்கும். திருமணமான பின்னும் சில காலமேனும் தாயுடன் வாழ்ந்து குடும்ப வாழ்க்கை தொடர்பான, வீட்டு வேலை தொடர்பான பல அறிவுகளைக் கற்றுக் கொள்ளும்.

ஆண் பிள்ளை பெண் பிள்ளைக்கு மாற்றமானதாகவே இருக்கும். இது மட்டுமல்ல. தாய்க்கு கட்டுப்பட்டு நடப்பதிலும் கூட ஆண் பிள்ளை பெண் பிள்ளைக்கு மாற்றமானதாகவே இருக்கும். இன்னுமிது போன்ற அநேக விடயங்களில் ஆண் பிள்ளை பெண் பிள்ளைக்கு மாற்றமாகவே இருக்கும்.

இக் காரணங்களால் ஒரு தாய் முதற் குழந்தை பெண் குழந்தையாக இருப்பதையே 90 வீதம் விரும்புவாள்.

அல்லாஹ்வும் يَهَبُ لِمَنْ يَشَاءُ إِنَاثًا என்ற திரு வசனத்தில் முதலில் பெண்கள் பற்றியே கூறியுள்ளான். இரண்டாவதாகவே ஆண்கள் பற்றி அடுத்த வசனத்தில் கூறியுள்ளான். وَيَهَبُ لِمَنْ يَشَاءُ الذُّكُوْرَ என்று கூறியுள்ளான்.
أَوْ يُزَوِّجُهُمْ ذُكْرَانًا وَإِنَاثًا
அல்லது சிலருக்கு ஆணையும், பெண்ணையும் கலந்து கொடுப்பான். அதாவது ஒரே பிரசவத்தில் ஆணையும், பெண்ணையும் கொடுப்பான். அல்லது ஒன்றில் ஆணையும், இன்னொன்றில் பெண்ணையும் கொடுப்பான்.
وَيَجْعَلُ مَنْ يَشَاءُ عَقِيْمًا
அவன் நாடிய சிலரை மலடாகவும் ஆக்கி வைப்பான்.

மேற்கண்டவாறு சிலருக்கு ஆண் பிள்ளைகளை மட்டும் கொடுப்பான். சில தம்பதிகளை நாம் பார்க்கின்றோம். அவர்களுக்கு 13 பிள்ளைகள் உள்ளனர். அனைவரும் ஆண்கள்தான். இன்னும் சில தம்பதிகளை நாம் பார்க்கிறோம். அவர்களுக்கு 12 பிள்ளைகள் உள்ளனர். அனைவரும் பெண்கள்தான். இன்னும் சில தம்பதிகள் உள்ளனர். அவர்களுக்கு ஆண், பெண் இரு பாலாரையும் கலந்து கொடுத்துள்ளான்.

இவர்களிற் சிலரின் வாழ்வு செல்வத்திலும், இன்னும் சிலரின் வாழ்வு சோகத்திலும் நகர்ந்து கொண்டிருக்கின்றது.

இன்னும் சில தம்பதிகள் உள்ளனர். இவர்களுக்குப் பிள்ளைப் பாக்கியமே இல்லை. இவர்களில் மலடு கணவனுக்கா? மனைவிக்கா? என்று கண்டு பிடிக்க முடியாதவர்களும் உள்ளனர். முடிந்தவர்களும் உள்ளனர். முடிந்தவர்களும், முடியாதவர்களும் தம்மால் முடிந்த வரை பிள்ளைப் பாக்கியத்திற்காக பல்வேறு வழிகளில் முயற்சி செய்கின்றனர். சிலர் ஏதோ ஒரு வகையில் பயனடைகிறார்கள். இன்னும் சிலர் “இதுவே நமது விதி” என்று கவலையோடு வாழ்கிறார்கள்.

பிள்ளைப் பாக்கியமற்ற தம்பதிகளிற் சிலர் பல்லாண்டுகள் கடந்தும் தமது திருமண முதலிரவு இருந்தது போன்றே கணவன், மனைவியாக இருந்து வாழ்ந்து வருகிறார்கள். இன்னும் மிகக் குறைந்த சிலர் பிள்ளைச் செல்வம் இல்லாமல் ஏங்கித் தவிக்கின்றார்கள். இதனால் கணவன், மனைவிக்கிடையில் தர்க்கங்களும், கருத்து மோதல்களும் ஏற்படுகின்றன. அவர்களிற் சிலர் “காழீ” நீதி மன்று சென்று பிரிந்து விடுகிறார்கள். இன்னும் சிலர் தன் தலைவிதி இதுதான் என்று ஒரே முடிவில் வாழ்கிறார்கள்.

ஆயினும் ஸூபிஸ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களின் பள்ளிவாயல்களில் பேசப்படுகின்ற இறை தத்துவங்களையும், “களா – கத்ர்” விதி தொடர்பான அறிவு ஞானங்களையும் அடிக்கடி செவியேற்றுச் செவியேற்று அவர்கள் மிகத் தெளிவாக உள்ளார்கள். அல்லாஹ்வின் எச் செயலாயினும் அது நியாயமானதாயும், தத்துவமுள்ளதாகவுமே இருக்கும் என்பதை சர்வ கலாசாலை மட்டத்தில் அறிந்து வைத்துள்ளார்கள். அத்தகைய இரும்பு மனிதர்களை எந்த ஒரு கவலையும் உசுப்பாது. அசைக்காது. அவர்கள்தான் இப்பூமி ஆடாமலும், அசையாமலும் இருப்பதற்கான நங்கூரங்களாக உள்ளனர். ஏனைய மலடுகளுக்கும் பெரும் பாடமாக திகழ்கிறார்கள்.

நான் அறிந்தவரை திருமணமாகி 23 ஆண்டுகள் பிள்ளைப் பாக்கியம் அற்றவர்களாயிருந்த தம்பதிகள் ஒரே சூலில் நான்கு குழந்தைகளைப் பெற்றதற்கும் வரலாறுண்டு. மூன்று குழந்தைகளைப் பெற்றதற்கும் வரலாறுண்டு. இது நான் எனது வாழ்வில் கண்ட அதிசய உண்மையாகும்.

அறவே குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் “தலஸ்மாத்” செய்கின்ற உலமாஉகளிடம் சென்று இஸ்லாமிய முறைப்படி வைத்தியம் செய்வதாலும் பலன் கிடைக்க வாய்ப்பு உண்டு. பலர் பலனடைந்துள்ளார்கள். இஸ்லாமிய முறைப்படி இல்லாமல் ஷெய்தான்களுக்கு நேர்ச்சை செய்து, தமிழ் மந்திரம் சொல்லி வைத்தியம் செய்தல் பிழையானதாகும். வைத்தியம் கற்ற, மார்க்கப்பற்றுள்ள, உலமாஉகள் மூலம் இஸ்லாமிய முறைப்படி வைத்தியம் செய்தல் குற்றமாகாது. எனினும் இதை “குப்ர்” என்று சொல்பவர்களும் உள்ளனர். இன்னோர் அறியாமை நோயால் பாதிக்கப்பட்டவர்களாவர்.

அவ்லியாஉகளின் “தர்ஹா”க்களுக்குச் சென்று, அவர்களுக்கு ஸலாம் சொல்லி, தம்மால் முடிந்த ஓதல்களை ஓதி அதன் நன்மையை அவர்களுக்குச் சேர்த்து வைத்து அவர்களிடம் நேரடியாக அல்லது அவர்களின் பொருட்டு கொண்டு அல்லாஹ்விடம் பிள்ளைப் பாக்கியத்திற்காக “துஆ” செய்வது குற்றமாகாது. இது குற்றமென்று கூறுவோர் காத்தான்குடியிலுள்ள பத்ரிய்யா ஜுமுஆப் பள்ளிவாயலில் அடக்கம் பெற்றுள்ள வலிய்யுல்லாஹ்வின் காலடியில் சில நாட்கள் தவமிருந்தார்களாயின் கைமேல் பலன் கிடைக்கும்.

அல்லது அவர்கள் தமது வீடுகளிலிருந்து கொண்டு காலையும், மாலையும் பாதிமா நாயகி, செய்னப் நாயகி, றாபிஅதுல் அதவிய்யா நாயகி ஆகியோர் பெயரால் தம்மால் முடிந்ததை ஓதி அவர்களிடம் கேட்டு வந்தாலும் காரியம் கைகூடும்.

இந்த நடைமுறை சரியானதா? என்பதில் சந்தேகமுள்ளவர்கள் என்னைச் சந்திப்பதற்கு என்னிடமே நேரம் எடுத்துக் கொண்டு குறிப்பு எடுப்பதற்கான ஒழுங்கோடு என்னைச் சந்திக்குமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கின்றேன். سَلْ تُعْطَ

தலைப்பில் நான் எழுதியுள்ள திருக்குர்ஆன் வசனத்திற்கு ஸூபீகள். இறைஞானிகள் ஆன்மிகத்தோடு தொடர்புள்ள விளக்கம் கூறுகிறார்கள். அதையும் இங்கு எழுதுகிறேன்.

يَهَبُ لِمَنْ يَشَاءُ إِنَاثًا
அல்லாஹ் நாடியவர்களுக்கு பெண் குழந்தைகளை மட்டும் நன்கொடையாக வழங்குவான் என்றால் அவர்களுக்கு “ஷரீஆ”வின் அறிவை மட்டும் கொடுப்பான் என்பதாகும்.

நாம் சில உலமாஉகளைப் பார்க்கின்றோம். “ஷரீஆ”வின் அறிவில் சிங்கம் போல் இருப்பார்கள். ஆயினும் அவர்கள் இறைஞானத்தில் - ஸூபிஸத்தில் “சீறோ”வாக இருப்பார்கள். இவர்களுக்கு நான் உதாரணம் சொல்லத் தேவையில்லை.

وَيَهَبُ لِمَنْ يَشَاءُ الذُّكُوْرَ
இன்னும் அவன் நாடிய சிலருக்கு ஆண் பிள்ளைகளை மட்டும் நன்கொடையாக வழங்குவான் என்றால் “தரீகா”வின் அறிவைக் கொடுப்பான் என்பதாகும்.

நாம் சில உலமாஉகளைப் பார்க்கின்றோம். “தரீகா”வின் அறிவில் சிங்கம் போல் இருப்பார்கள். ஆயினுமவர்கள் “ஷரீஆ”வின் அறிவில் “சீறோ”வாக இருப்பார்கள்.

أَوْ يُزَوِّجُهُمْ ذُكْرَانًا وَإِنَاثًا
அல்லது அல்லாஹ் அவர்களுக்கு ஆண் பிள்ளைகளையும், பெண் பிள்ளைகளையும் கலந்து கொடுப்பான்.

அல்லாஹ் சிலருக்கு “ஷரீஆ”வின் அறிவையும், “தரீகா”வின் அறிவையும் கலந்து கொடுப்பான்.

நாம் இன்று சில உலமாஉகளைப் பார்க்கின்றோம். அவர்கள் “ஷரீஆ”வின் அறிவில் சிங்கமாக இருப்பது போல் “தரீகா”வின் அறிவிலும் அவ்வாறே இருப்பார்கள்.

وَيَجْعَلُ مَنْ يَشَاءُ عَقِيْمًا
இன்னும் அல்லாஹ் நாடியவர்களை பிள்ளைப் பாக்கியமற்ற மலடாக ஆக்கி வைப்பான்.

நாம் இன்று மனிதர்களில் அதிகமானவர்களைப் பார்க்கின்றோம். அவர்கள் “ஷரீஆ” அறிவு இல்லாதவர்களாகவும், “தரீகா”வின் அறிவு இல்லாதவர்களாகவும் உள்ளனர். இவர்கள் பிள்ளைப் பாக்கியமற்றவர்கள். எந்த ஒரு அறிவுமில்லாதவர்களாக - பிள்ளை எதுவுமில்லாத மலடுகளாக உள்ளார்கள். உண்மையில் மலடுகள் இவர்கள்தான்.

மேற்கண்ட நான்கு பிரிவினரில் முதலாம் பிரிவினருக்கு யாரை உதாரணமாகக் கூறலாம்? இரண்டாம் பிரிவினருக்கு யாரை உதாரணமாகக் கூறலாம்? மூன்றாம் பிரிவினருக்கு யாரை உதாரணமாகக் கூறலாம்? நாலாம் பிரிவினருக்கு யாரை உதாரணமாகக் கூறலாம்? என்பதை வாசக நேயர்களின் விருப்பத்தில் விடுகிறேன். அவர்கள் உதாரணம் சொல்வார்களா?

முற்றும்.

25/06/2025

அல்லாஹ்வின் சந்நிதானத்தைப் பயந்தவனுக்கு இரண்டு சுவர்க்கங்கள் உள்ளன. (55-46)
وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ

மேற்கண்ட திரு வசனத்தில் அல்லாஹ்வின் சந்நிதானத்தைப் பயந்தவனுக்கு இரண்டு சுவர்க்கங்கள் இருப்பதாக அல்லாஹ் சொல்லியுள்ளான்.

மேற்கண்ட திரு வசனம் وَلِمَنْ خَافَ رَبَّهُ جَنَّتَانِ எவன் அல்லாஹ்வைப் பயந்தானோ அவனுக்கு இரண்டு சுவர்க்கங்கள் என்று வரவில்லை.

இவ்வாறு வந்திருந்தால் இரண்டு சுவர்க்கங்கள் எவை? என்ற கேள்விக்கு மட்டுமே இடம் இருந்திருக்கும். சந்நிதானம் தொடர்பான கேள்விக்கு இடமிருக்காது.

இவ்வாறு வராமல் அதாவது وَلِمَنْ خَافَ رَبَّهُ جَنَّتَانِ அல்லாஹ்வைப் பயந்தவனுக்கு இரண்டு சுவர்க்கங்கள் உள்ளன என்று வராமல் وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ அல்லாஹ்வின் சந்நிதானத்தைப் பயந்தவனுக்கு என்று வந்துள்ளதால் இங்கு இரண்டு கேள்விகளுக்கு இடமிருக்கின்றன. ஒன்று. அல்லாஹ்வின் சந்நிதானம் என்றால் என்ன? என்ற கேள்வி. மற்றது இரண்டு சுவர்க்கங்கள் என்பன எவை? என்ற கேள்வி.

அல்லாஹ்வைப் பயப்படுவதும், அவனின் சந்நிதானத்தைப் பயப்படுவதும் இரண்டும் ஒன்றுதான் என்றிருந்தால் திரு வசனம் இரண்டு விதமாக வந்திருக்கமாட்டாது.

திருக்குர்ஆனில் அல்லாஹ்வைப் பயப்படுகின்றவனுக்கு சுவர்க்கம் உண்டு என்ற பொருளில்தான் அதிக வசனங்கள் வந்துள்ளனவேயன்றி அல்லாஹ்வின் சந்நிதானத்தைப் பயப்படுகின்றவனுக்கு என்று அதிக வசனங்கள் வரவில்லை.

இதன் மூலம் அல்லாஹ்வைப் பயப்படுதல் என்பது வேறு. அவனின் சந்நிதானத்தைப் பயப்படுதல் என்பது வேறு என்ற கருத்து விளங்கப்படுகிறது.

எனவே, அல்லாஹ்வைப் பயப்படுதல் என்றால் என்ன? அல்லாஹ்வின் சந்நிதானத்தைப் பயப்படுதல் என்றால் என்ன? என்பதை ஆதாரங்களுடன் நிறுவி விளக்கமான கட்டுரை எழுதுபவர்களில் முதலாம் இடத்தில் தெரிவாகும் ஒருவருக்கு மட்டும் 10 ஆயிரம் ரூபாய் இலங்கைப் பணமும், 1000க்கும் ஆதிகமான எனது சொற்பொழிவுகள் உள்ள “பென்ட்ரைவ்” ஒன்றும் அன்பளிப்பாக வழங்கப்படும்.

தொடர்பு கொள்ள விரும்புவோர் தமது வங்கிக் கணக்கு இலக்கத்தையும், முகவரியையும் எழுதியனுப்புமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன்.

தொடர்புகளுக்கு: வட்ஸ்அப் இல: 0094 773 186 146.

اَلْجَنَّةُ قِسْمَانِ حِسِّيَّةٌ وَمَعْنَوِيَّةٌ، وَأَمَّا الْحِسِّيَّةُ فَهِيَ الْحُوْرُ وَالْقُصُوْرُ وَالْحَدَائِقُ، وَأَمَّا الْمَعْنَوِيَّةُ فَهِيَ جَنَّةُ الْمَعَارِفِ وَالشُّهُوْدِ، وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ،
சுவர்க்கம் இரு வகை. ஒன்று “ஹிஸ்ஸிய்யத்”, மற்றது “மஃனவிய்யத்”.

“ஹிஸ்ஸிய்யா” என்றால் ஐம்புலன்களால் அனுபவிக்கும் இன்பங்களும், சுகங்களுமாகும்.

ஐம்புலன்களால் அனுபவிக்கின்ற - “ஹூறுல் ஈன்” சுவர்க்கத்துப் பேரழகிகளால் அனுபவிக்கின்ற இன்ப சுகங்களும், மாட மாளிகைகளில் பஞ்சணையில் மற்றும் “ஸ்விம்மிங் பூல்” நீச்சல் தடாகத்தில், பூந்தோப்புக்களில் அனுபவிக்கின்ற இன்ப சுகங்களுமாகும்.

“மஃனவிய்யா” என்றால் இறைஞானங்களும், இறை காட்சி நிலைகளும் போன்ற ஆன்மிக இன்ப சுகங்களாகும்.

ஒரு சுவர்க்கம் சிற்றின்பம் சுவைப்பதற்காக உள்ளது. மறு சுவர்க்கம் பேரின்பம் சுவைப்பதற்காக உள்ளது.

பேரின்பம் பெரிய இன்பம்தான்.
சிற்றின்பம் சிறிய இன்பம்தான்.

காதிமுல் கவ்மி,
25.06.2025

உருவ வழிபாடு ஏன் கூடாது? | Idol Worship | Part-1 | Moulavi Jahany Rabbani | Sufi VaasalSpeech - Moulavi MJM. Jahaany Rab...
25/06/2025

உருவ வழிபாடு ஏன் கூடாது? | Idol Worship | Part-1 | Moulavi Jahany Rabbani | Sufi Vaasal

Speech - Moulavi MJM. Jahaany Rabbani
Published by - Shums Media Unit, Shums TV

உருவ வழிபாடு ஏன் கூடாது? Uruva Vazhifaadu Ean KoodathuSpeech - Moulavi MJM. Jahaany RabbaniPublished by - Shums Media Unit, Shums TV #உருவவழிபாடு ...

25/06/2025

“அல் அவாலிம்” உலகங்களின் எண்ணிக்கை!

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

وَقَدْ حَكَى الْبَغَوِيُّ عَنْ سَعِيْدِ بْنِ الْمُسَيَّبِ أَنَّهُ قَالَ: للهِ اَلْفُ عَالَمٍ، سِتُّمِأَةٍ فِِى الْبَحْرِ، وَأَرْبَعُمِأَةٍ فِى الْبَرِّ،
وَقَالَ وَهْبُ بْنُ مُنَبِّهٍ: للهِ ثَمَانِيَةَ عَشَرَ اَلْفِ عَالَمٍ، اَلدُّنْيَا عَالَمٌ مِنْهَا،
وَقَالَ مُقَاتِلٌ: اَلْعَوَالِمُ ثَمَانُوْنَ اَلْفًا،
وَقَالَ كَعْبُ بْنُ الْأَحْبَارِ: لَا يَعْلَمُ عَدَدَ الْعَوَالِمِ إِلَّا اللهُ عَزَّ وَجَلَّ،
وَحَكَى الْقُرْطُبِيْ عَنْ أَبِيْ سَعِيْدٍ الْخُدْرِيِّ أَنَّهُ قَالَ: إِنَّ للهِ أَرْبَعِيْنَ اَلْفَ عَالَمٍ، اَلدُّنْيَا مِنْ شَرْقِهَا إِلَى غَرْبِهَا عَالَمٌ وَاحِدٌ،
وَقَالَ الزَّجَّاجُ: اَلْعَالَمُ كُلُّ مَا خَلَقَ اللهُ فِى الدُّنْيَا وَالْآخِرَةِ،
وَقَالَ الْقُرْطُبِيْ: وَهَذَا هُوَ الصَّحِيْحُ، إِنَّهُ شَامِلٌ لِكُلِّ الْعَالَمِيْنَ، قاَلَ رَبُّ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا إِنْ كُنْتُمْ مُوْقِنِيْنَ،
وَالْعَالَمُ مُشْتَقٌّ مِنَ الْعَلََامَةِ، لِأَنَّهُ عَلَمٌ دَالٌّ عَلَى وُجُوْدِ خَالِقِهِ وَصَانِعِهِ وَوَحْدَانِيَّتِهِ،

மேற்கண்ட அறபு வசனங்களுக்கான மொழியாக்கமும், விபரங்களும்.

“ஆலம்” என்றால் உலகம். இது ஒருமை. “அவாலிம்” என்றால் உலகங்கள். இது பன்மை.

அல்லாஹ் படைத்த உலகங்கள் எத்தனை என்பதில் அறிஞர்களுக்கிடையிலும், ஆய்வாளர்களுக்கிடையிலும் கருத்து வேறுபாடுகள் உள்ளன. அவற்றை இங்கு குறிப்பிடுகிறேன்.

இது தொடர்பாக அறிஞர்களிலும், ஆய்வாளர்களிலும் எட்டுப் பேர்கள் கூறிய கருத்துக்களை முதலில் எழுதுகிறேன். இதற்கு முதல் அவர்களின் பெயர்களையும், அவர்கள் பற்றிய குறிப்புக்களையும் தருகிறேன்.

அவர்களின் பெயர்கள்:

01. இமாம் பஙவீ: اَلْإِمَامْ بَغَوِيْ
02. இமாம் ஸயீத் இப்னுல் முஸய்யப்: اَلْإِمَامْ سَعِيْدُ بْنُ الْمُسَيَّبْ
03. வஹ்ப் இப்னு முனப்பிஹ்: وَهْبُ بْنُ مُنَبِّهْ
04. முகாதில்: مُقَاتِلْ
05. கஃப் இப்னுல் அஹ்பார்: كَعْبُ بْنُ الْأَحْبَارْ
06. இமாம் குர்துபீ: اَلْإِمَامْ قُرْطُبِيْ
07. அபூ ஸயீத் அல்குத்ரீ: أَبُوْ سَعِيْدْ اَلْخُدْرِيْ
08. அஸ்ஸஜ்ஜாஜ்: اَلزَّجَّاجُ

1. இமாம் பஙவீ என்பவர் ஓர் அறிஞர். இவர் ஹிஜ்ரீ 1041ம் ஆண்டு பிறந்து 1122ம் ஆண்டு “வபாத்” மரணித்தார். இவர் இமாம் ஷாபிஈ அவர்களின் “மத்ஹப்” வழியைப் பின்பற்றியவர். “ஸுன்னத் வல் ஜமாஅத்” கொள்கை வழியிற் செல்பவர். இவர் ஒரு مُحَدِّثٌ ஹதீதுக் கலை மேதையாகவும், مُفَسِّرْ திருக்குர்ஆன் விளக்க மேதையாகவும் திகழ்ந்தார். இவர் معالم التنزيل، مصابيح السنّة، شرح السنّة ஆகிய நூல்களை எழுதியவராவார்.

2. இமாம் ஸயீத் இப்னுல் முஸய்யப் என்பவர் ஹிஜ்ரீ 15ம் வருடம் திரு மதீனா நகரில் பிறந்தார். ஹிஜ்ரீ 94ல் திரு மதீனாவிலேயே “வபாத்” ஆனார். இவர் سَيِّدُ التَّابِعِيْنْ “தாபியீன்”களின் தலைவர் என்று பிரசித்தமானவர்.

மேற்கண்ட இவ்விருவரும் ஆயிரம் உலகங்கள் உள்ளன என்றும், அவற்றில் கடலில் 600 உலகங்கள் உள்ளன என்றும், தரையில் 400 உலகங்கள் உள்ளன என்றும் கூறியவர்களாவர்.

3. வஹ்ப் இப்னு முனப்பிஹ். இவர் 18 ஆயிரம் உலகங்கள் உள்ளன என்று சொன்னவரும், அவற்றில் இந்த “துன்யா”வும் ஒன்று என்று சொன்னவருமாவார். இவர் ஹிஜ்ரீ 655ல் “திமார்” எனும் ஊரில் பிறந்தார். ஹிஜ்ரீ 738ல் “ஸன்ஆ” என்ற ஊரில் மரணித்தார். “ஸுன்னத் வல் ஜமாஅத்” கொள்கையை ஏற்றுக் கொண்டவர். அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் என்பவரிடம் கல்வி பெற்றார். இவர் ஒரு வரலாற்றாசிரியர். ஹதீதுக் கலை மேதை, ஷரீஆ நீதிவான் ஆவார். இவரின் மொழி அறபு.

4. முகாதில். இவர் உலகங்கள் 80 ஆயிரம் என்று சொல்லியுள்ளார். இவர் 8வது நூற்றாண்டில் பிறந்தவர். பிறந்த இடம் “பல்கு”. ஹிஜ்ரீ 150ல் “வபாத்” ஆனார். கொள்கை தொடர்பான அறிஞர். அறபு மொழி பேசுபவர்.

5. கஃப் இப்னுல் அஹ்பார். இவர் உலகங்களின் எண்ணிக்கைய அல்லாஹ் தவிர எவரும் அறியமாட்டார் என்ற கூறியுள்ளார். பிறப்பு: 06ம் நூற்றாண்டு. எமன் நாட்டில் பிறந்தார். “தாபிஃ” ஆவார். கொள்கை தொடர்பான அறிஞர்.

6. இமாம் குர்துபீ. இவர் அபூ ஸயீத் அல் குத்ரீ அவர்கள் உலகங்களின் எண்ணிக்கை 40 ஆயிரம் என்று கூறியதை அறிவித்துள்ளார். ஆனால் ஸஜ்ஜாஜ் என்பவர் அறிவித்ததையே சரி கண்டுள்ளார். பிறப்பு: ஹிஜ்ரீ 1214, மரணம்: 1273. ஸ்பெய்ன் நாட்டைச் சேர்ந்தவர். மாலிக் மத்ஹப் வழி நடப்பவர். “ஸுன்னத் வல் ஜமாஅத்” கொள்கை வழி நடப்பவர். இவர் “அகீதா” கொள்கையோடு சம்பந்தப்பட்டவர். திருக்குர்ஆன் விரிவுரையாளர். ஹதீதுக் கலை மேதை. இவரின் மொழி அறபு. இவர் எழுதிய நூல்கள்: தப்ஸீறுல் குர்துபீ, “அத் தத்கிறது பீ அஹ்வாலில் மவ்தா வஉமூரில் ஆகிறா” التذكرة بأحوال الموتى وأمور الآخرة، تفسير القرطبي ஆகியன இவர் எழுதிய நூல்களாகும்.

7. அபூ ஸயீத் அல்குத்ரீ. நபீ தோழர்களில் ஒருவர். இவர்கள் உலகங்களின் எண்ணிக்கை 40 ஆயிரம் என்று கூறியுள்ளார்கள். பிறப்பு: ஹிஜ்ரீ 10. பிறந்த இடம்: திரு மதீனா நகர். மரணம்: ஹிஜ்ரீ 74. மரணித்த இடம்: திரு மதீனா. அடக்கவிடம்: “ஜன்னதுல் பகீஃ” தந்தை: மாலிக் இப்னு ஸினான் مالك بن سِنان . இவர்கள் அறிவித்த நபீ மொழி 1170. இவர் ஒரு مُحَدِّثْ ஹதீதுக் கலை மற்றும் இஸ்லாமிய சட்டக்கலை மேதை. போர் வீரர்.

8. அஸ்ஸஜ்ஜாஜ்: اَلزَّجَّاجْ இவர் “பக்தாத்” இறாக் நாட்டவர். பிறப்பு: ஹிஜ்ரீ 241, மரணம்: ஹிஜ்ரீ 311. இவர் ஒரு மொழியிலக்கண மேதை. இவர் அல்லாஹ் இவ் உலகிலும், மறு உலகிலும் படைத்த எல்லாமே ஆலங்கள் தான் என்று கூறியுள்ளார்.

“அவாலிம்” ஆலங்கள் - உலகங்கள் தொடர்பாக பலர் பல கருத்துக்கள் சொல்லியிருந்தாலும் மேற்கண்ட எட்டுப் பேர்களும் இது தொடர்பாக விஷேட கருத்துக்கள் சொன்னவர்களாவர். இவர்கள் கூறிய கருத்துக்களை நாம் ஏற்றுக் கொள்கிறோம். இவர்களில் ஒவ்வொருவரும் தனக்குத் தெரிந்த கருத்துக்களை கூறியுள்ளார்கள். இவர்களில் “விலாயத்”| எனும் ஒலித்தனம் பெற்றவர்களும் இருக்கலாம். இவர்கள் “இல்ஹாம்” மூலம் மற்றவர்கள் தெரிந்து கொள்ளாத அறிவுகளைத் தெரிந்தவர்களாகவும் இருக்கலாம்.

மேலே கருத்துக்கள் கூறியவர்களில் குர்துபீ என்பவர் அஸ்ஸஜ்ஜாஜ் என்பவர் சொன்ன அல்லாஹ் இவ் உலகிலும், மறு உலகிலும் படைத்த எல்லாமே ஆலங்கள் தான். இதுவே சரியானதென்றும் கூறியுள்ளார்.

“ஆலமுல் கயால்” عَالَمُ الْخَيَالْ என்ற கனவுலகமும் அல்லாஹ் படைத்த உலகங்களில் ஒன்றுதான். இதற்குச் சென்றவர்கள் மனிதர்களில் அதிகமானவர்கள் இருப்பார்கள்.

இங்கு எனது தந்தை அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் அவர்கள் இந்தியாவில் மார்க்கக் கல்வி கற்றுக் கொண்டிருந்த காலத்தில் நடந்த சம்பவம் ஒன்று என் நினைவுக்கு வருகிறது. அதையும் இங்கு குறிப்பிடுகிறேன்.

1940ம் ஆண்டளவில் இந்தியா - தமிழ் நாட்டில் ஓதிக் கொண்டிருந்த காலத்தில் தமிழ் நாட்டில் ஏதோ ஓர் ஊரில் ஒரு வலீ இருப்பதாக கேள்விப்பட்டு அவரைக் கண்டு அருள் பெறுவதற்காக அந்த ஊருக்கு பஸ் - பேரூந்தில் சென்றார்களாம். (ஊரின் பெயர் என் நினைவில் இல்லை)

அந்த ஊருக்குச் செல்லும் வழியில் “மக்ரிப்” தொழுகைக்கான நேரம் வந்ததால் தொடர்ந்து பிரயாணம் செய்யாமல் இடையிலுள்ள ஓர் ஊரில் இறங்கி மக்ரிப் தொழுகைக்காகப் பள்ளிவாயலுக்குச் சென்றார்கள். தொழுகையை முடித்த பின் அப்பள்ளிவாயலிலேயே அன்றிரவு தங்கி மறு நாள் காலையில் அவர்கள் போக நினைத்திருந்த ஊருக்குச் செல்லலாம் என்று முடிவு செய்து அப்பள்ளிவாயலிலேயே “இஷா” தொழுகை வரை தங்கியிருந்து “இஷா” தொழுகையின் பின் ஒருவர் வந்து எனது தந்தையை இரவுச் சாப்பாட்டிற்கு ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்று சாப்பாடு கொடுத்துள்ளார். அவர் யாரென்று என் தந்தைக்குத் தெரியவில்லை. சாப்பாட்டின் பின் உறங்குவதற்காக பள்ளிவாயலுக்கு என் தந்தை வந்துள்ளார்.

உறங்கிக் கொண்டிருந்த சமயம் அறபீ உடையில் கனவில் தோன்றிய ஒருவர் நீ எங்கு செல்வதற்காக இங்கு வந்துள்ளாய்? என்று வினவியுள்ளார். தந்தை அவர்கள் வலிய்யுல்லாஹ்வின் பெயரையும், ஊரின் பெயரையும் குறிப்பிட்டு அந்த மகானைப் பார்ப்பதற்காகவே இங்கு வந்துள்ளேன் என்று பதில் கூறிய போது கனவில் தோன்றியவர் என் தந்தைக்கு அடித்து வலிய்யுல்லாஹ்வைப் பார்ப்பதற்கு நீ யார்? என்று கேட்டார். தந்தை அவர்கள் அடியை வாங்கிக் கொண்டு அப்பள்ளிவாயலிலேயே அன்றிரவு தங்கியிருந்து அன்று காலை வலிய்யுல்லாஹ்வைச் சந்திப்பதற்காக அந்த ஊருக்கு வந்து வலிய்யுல்லாஹ்வின் வீட்டை அறிந்து கொண்டு அங்கு சென்றுள்ளார்கள்.

வலீ அவர்களின் வீடு மாடி வீடு. வீட்டுக்கு முன்னால் பெரும் பூந்தோட்டம். இதைக் கண்டு வியந்து போன என் தந்தை வலிய்யுல்லாஹ்வுக்கு இந்தப் பெரிய மாடி வீடும், இந்தப் பெரிய பூங்காவும் எதற்கு? என்று மனதில் நினைத்தவர்களாக கீழ் மாடியில் வலீ அவர்களைச் சந்திப்பதற்காக வந்திருந்த கூட்டத்துடன் என் தந்தையும் ஒருவராக அமர்ந்து கொண்டார்கள். தந்தைக்குப் பக்கத்திலிருந்த ஒருவரிடம் வலிய்யுல்லாஹ் எங்கே என்று கேட்டார்கள். அதற்கவர் வலிய்யல்லாஹ் மாடியில் உள்ளார்கள். இன்னும் சில நிமிடங்களின் பின் சிஷ்யர்களைச் சந்திப்பதற்காக கீழே இறங்கி வருவார்கள் என்று அவர் சொன்னார்.

சில நிமிடங்களில் வலிய்யுல்லாஹ் அவர்கள் கீழே இறங்கி அங்கு வீற்றிருந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களில் என் தந்தையை மட்டும் குறிப்பாகப் பார்த்து, يَا عَبْدَ الْجَوَادْ تَعَالْ அப்துல் ஜவாதே இங்கு வா! என்றழைத்து هَلْ عَرَفْتَنِيْ قَبْلَ هَذَا இதற்கு முன்னர் நீங்கள் என்னைக் கண்டிருக்கிறீர்களா? என்னைத் தெரியுமா? என்று கேட்டார்கள். என் தந்தை இல்லை. நான் கண்டதில்லை என்று கூறினார்கள். வலிய்யுல்லாஹ் அவர்கள், أَمَا عَرَفْتَنِيْ فِى أَيِّ الْعَوَالِمِ؟ நீ என்னை எந்த “ஆலம்” - உலகத்திலாவது அறியவில்லையா? என்று கேட்டார்கள். அவ்வாறு அவர்கள் கேட்ட பிறகுதான் தான் கண்ட கனவும், ஓர் அறபீயின் தோற்றத்தில் ஒருவர் அடித்ததும் என் தந்தையின் நினைவுக்கு வந்ததாம். அப்போதுதான் ஆம், நான் உங்களை “ஆலமுல் கயால்” கனவுலகத்தில் கண்டுள்ளேன் என்று சொன்னார்களாம் என் தந்தை.

இறுதியாக வலிய்யுல்லாஹ் அவர்கள் என் தந்தையின் தலை தடவி “துஆ”வும் செய்து அனுப்பி வைத்தார்களாம்.

இந்த வரலாறை என் தந்தை அவர்கள் மக்கள் மத்தியில் உபதேசம் செய்யும் போது கூறுவார்கள். ஒரு வலீயுடன் தொடர்பாக இருப்பதிலுள்ள நற் பாக்கியம் பற்றிச் சொல்வார்கள்.

அல்லாஹ் எனக்கும், இதை வாசிக்கின்ற உங்களுக்கும் வலீமாரின் தொடர்போடு வாழும் பாக்கியத்தை நல்குவானாக!

முற்றும்.

21/06/2025

மஸ்தான் சாஹிபு பாடல்!

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

மஹ்ழிய்யத்தான தாதுல் கிப்ரியாவில்
மறைந்த கன்சுல் மக்பியாம்
மஸ்கூது அன்ஹு கதீமுல் அமாவான
மவ்ஜூதெனும் ஸிர்பிலே
அஹதிய்யத்துஹதாதிவாஹிதிய்யத்தான
ஆலம் அர்வாஹானதில்
ஆலம் மிதாலாகி ஆலம் அஜ்ஸாமாகி
ஆலம் இன்ஸானான பின்
பஃதியதில்லா ஜலாலோடு ஜமாலும்
பதீஉல் கமாலுமாகி
பஃது கப்லற்ற லாஹூது ஜபறூதில்
பகாவான ஹுவிய்யத்தினால்
நஹ்ஸியத்தற்றுமுன்றாளி நிழல் பெற்றடிமை
நான் நினைவு மற்றுய்வனோ
நற்குணங்குடி கொண்ட பாதுஷாவான குரு நாதன் முஹ்யித்தீனே!

பர்தானிய்யத்திலோ ஸுப்ஹானியத்ததெனப்
பகர் பரா பரம தனிலோ
பற்பல விதங் கொண்ட அஃயானியத்திலோ
பரிபூரணந் தன்னிலோ
அரிதான தாத்திலோ அலிபெனுஞ் சுகவாரி
யாவும் “நுக்தா”வதனிலோ
அஹ்லுல் உலாவான ஆல மலகூத்திலோ
ஆலம் அஸ்பல் தன்னிலோ
குறிகுணாத் தீதவட்டாக யோகத்திலோ
கோடான கோடி மறையாற்
கூறரிய சிவராச யோகத்திலோவருட்
குறையாப் பெருங்கடலிலோ
நாலை நிகரருளாளனே நீயிருப்பதிந்
நாயினேற்கருள் செய்குவாய்
நற்குணங்குடி கொண்ட பாதுஷாவான குருநாதன் முஹ்யித்தீனே!

மேற்கண்ட இப்பாடல்கள் குணங்குடி எனும் ஊரைச் சேர்ந்த ஞானக்கடல், மஜ்தூப் “அல் பானீ பில்லாஹ்” அப்துல் காதிர் ஆலிம் புலவர் அவர்களால் பாடப்பட்டவையாகும்.

இவர்கள் திருமணம் செய்யாதவர்கள். இவரின் பெற்றோர் இவருக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்து முடித்து ஒரு நாளிரவு இஷா தொழுகையின் பின் திருமணம் செய்வதற்கான ஒழுங்கு செய்யப்பட்ட நிலையில் எவருக்கும் தெரியாமல் மறைந்த மகான்தான் இவர்கள். இவர்களின் வரலாறு பின்னர் எழுதப்படும்.

தொடரும்...

21/06/2025

1950ம் ஆண்டுக்கு முன் ஒரு “மஸ்தான்” இறைஞானியால் சபிக்கப்பட்ட ஒரு பெண் பைத்தியக்காரியான வரலாறு.

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

இந்தப் பெண்ணை 1950ம் ஆண்டிலிருந்து நான் அறிவேன். அந்நேரம் எனக்கு ஆறு வயது. அவரின் வயது 35 அளவில் இருந்திருக்கும். காத்தான்குடி 06 மெயின் வீதியில் இரும்புத் தைக்காப் பள்ளிவாயல் இருந்தது. இப்பள்ளிவாயல் நான் பிறந்து வளர்ந்த பிரதேசத்தில் இருந்ததால் நான் சிறு வயதிலிருந்து இப்பள்ளிவாயலில்தான் ஐங்காலமும் தொழுது வந்தேன்.

என் மூத்தவாப்பா - தந்தையின் தந்தை - அலியார் ஆலிம் (நாஹூர் ஆலிம்) என்று அழைக்கப்பட்டவர் இப்பள்ளிவாயலில்தான் நல்லடக்கம் பெற்றிருந்தார்.

1950ம் ஆண்டிற்கு முன்னுள்ள காலத்தில் நடந்த சம்பவங்கள் பிறர் சொல்ல நான் கேட்ட செய்திகளேயன்றி நான் கண்டவையல்ல. ஆயினும் நான் கூறப் போகும் பெண் தொடர்பான வரலாறு 1950ம் ஆண்டுக்குப் பின் நான் நேரில் கண்டதாகும்.

நான் பிறந்த 1944ம் ஆண்டுக்குமுன் காத்தான்குடியில் ஒரு மஸ்தான் இருந்துள்ளார். இவரைப் பொது மக்கள் “நெருப்பு மஸ்தான்” என்று அழைப்பார்கள். இவரின் பூர்வீக வரலாறை அறிய முடியவில்லை. இவர் வாழ்ந்த காலத்தவர்களுக்கே இவரின் வரலாறு தெரியாது.

இவருக்கு நிரந்தரமான சொந்த வீடோ, இடமோ இல்லை. காத்தான்குடியிலும், இதை அடுத்துள்ள காங்கேயனோடை என்ற ஊரிலும், இன்னும் பல இடங்களிலும் நடமாடுவார். சிலர் இவரை “மஜ்தூப்” என்று நம்பினார்கள். இவரைக் கண்ணியப்படுத்தினார்கள். இவரை ஆதரித்தார்கள். இன்னும் சிலர் இவரை “அக்ல்” பழுதானவர் என்று கருதினார்கள். இவர் மையவாடிகளிலும் தங்கியிருப்பார்.

இவர் மையவாடி மற்றும் தெருக்களில் காணப்படும் குப்பைகளை ஓர் இடத்தில் கூட்டி வைத்து விட்டு “ஹூ” என்று சொல்லி அதில் ஊதுவார். குப்பை எரிந்து சாம்பலாகும். இவரின் இச் செயலை சிறுவர்கள் கூட்டமாக நின்று வேடிக்கை பார்ப்பார்கள். இதனால்தான் இவர் பொது மக்களால் நெருப்பு மஸ்தான் என்று அழைக்கப்பட்டார்.

இவர் குறிப்பிட்ட சிலருக்கு “காதிரிய்யா தரீகா”வின் அடிப்படையில் “பைஅத்” வழங்கியுள்ளார். இவரிடம் “பைஅத்” பெற்றவர்களில் பெண்களிற் சிலரும் அடங்குவர்.

இவர் சில நேரம் நிதானமாகவும் மக்களுடன் பேசுவார். சில நேரம் நிதானமின்றியும் பேசுவார். இவர் பொதுவாக பல நிலைகளில் இருப்பார்.

சில நாட்களில் காத்தான்குடி மெயின் வீதி மீரா பாலிகா வித்தியாலத்திற்கு மேற்குப் பக்கமுள்ள சேர் றாசிக் பரீட் மாவத்தையிலுள்ள நாகையடி அம்மா தர்ஹாவின் வெளிப்புறத்தில் அமர்ந்திருப்பார். வெள்ளிக்கிழமை அவ் வீதியால் “ஜுமுஆ” தொழுகைக்காக “ஜாமியுள்ளாபிரீன்” பள்ளிவாயல் நோக்கிச் செல்பவர்களிடம் எங்கே போகிறீர்கள்? வானத்திற்கு சூத்தைக் காட்டவா போகின்றீர்கள்? என்று கேட்பார். அவரின் “ஜத்பு” நிலையை அறிந்தவர்கள் அவருக்கு பதில் கூறாமல் பள்ளிவாயலுக்குச் சென்று விடுவார்கள்.

இவர் காத்தான்குடியில் ஒரு வீட்டிற்கு மதிய உணவுக்காக அழைக்கப்பட்ட நேரம் அவ் வீட்டிலுள்ள பெண் ஒருவரும், இன்னும் பக்கத்து விட்டிலுள்ள சில பெண்களும் இவரிடம் “பைஅத்” ஞான ஒப்பந்தம் செய்ய விரும்பி அவரிடம் அனுமதி கேட்டார்கள். இன்றிரவு 09.30 மணியளவில் “வுழூ” என்ற சுத்தம் செய்து கொண்டு வரவும் என்றார்.

அதன்படி மூன்று பெண்கள் குறித்த நேரம் குறித்த முறைப்படி வந்தனர். மகான் அவர்கள் மூவருக்கும் “பைஅத்” வழங்கி அவர்களுக்குச் சொல்ல வேண்டிய ஆலோசனைகளும், அறிவுரைகளும் கூறினார்.

அன்றிரவு மூன்று பெண்கைளயும் அழைத்து நீங்கள் மூவரும் நான் சொல்லித் தந்த “திக்ர்”களை சொல்லிக் கொண்டு அமைதியாக இருக்க வேண்டும். அவர்கள் அங்கிருந்த ஒரு அறையைச் சுட்டிக் காட்டி இன்றிரவு “ஸுப்ஹ்” தொழுகை வரை அவ் அறையிலேயே நான் இருப்பேன். உங்களில் எவரும் நான் வெளியேறும் வரை கதவைத் தட்டவோ, திறக்கவோ கூடாது. துவாரத்தால் எட்டிக் கூடப் பார்க்கலாகாது என்று கூறிவிட்டு அறைக்குள் சென்று விட்டார்.

மூன்று பெண்களில் அந்த வீட்டுக்காரப் பெண் மட்டும் ஷெய்கு அவர்கள் இவ்வாறு கடினமான நிபந்தனை சொல்வதற்கு என்ன காரணம் என்று கண்டு கொள்வதற்காக உறங்காமல் விழித்திருந்து திறப்பிற்குரிய துவாரம் வழியாக ஷெய்கு என்ன செய்கிறார் என்று பார்த்தாள்.

இவள் பார்த்ததைக் கண்ட ஷெய்கு அவர்கள், “அடியே பைத்தியக்காரி! என்னடி ஷெய்தான்!” என்று சத்தமிட்டார். அதே கனம் அவள் பைத்தியக் காரியாகிவிட்டாள். அவள் கிழவியாகி மரணிக்கும் வரை பைத்தியக் காரியாகவே இருந்து மரணித்தாள். இவளின் பைத்தியம் ஏனைய பைத்தியங்கள் போலன்றி வித்தியாசமாக இருந்தது.

இவள் தனக்கு சாபம் கிடைத்த நாளிலிருந்து மரணிக்கும் வரை ஒரு நொடி நேரமேனும் உறங்காமலேயே இருந்து மரணித்தாள்.

இவளுக்கு குருவின் சாபம் ஏற்படுமுன் இவள் திருமணம் செய்து ஓர் ஆண் பிள்ளையும், ஒரு பெண் பிள்ளையும் பெற்றவள் என்பதும் குறிப்பிடத்தக்கது. “குருவின் சாபம் கருவையும் கலைக்கும்” என்று சொல்லப்படுவது போல் அந்தப் பெண்ணின் இரு பிள்ளைகளும் வயது வந்த பின் பைத்தியக் காரர்களாகி மரணித்து விட்டார்கள்.

இன்றுவரை குறித்த அப் பெண்ணின் உறவினர்களில் ஒவ்வொருவரும் சற்றுப் புத்தி குறைந்தவர்களாகவே இருந்து வருகின்றனர்.

நபீமார், வலீமார், ஷெய்குமார், ஸாதாத்மார், பெற்றோர் ஆகியோரினது சாபத்தை நாம் என்றும் பயந்து கொள்ள வேண்டும்.

அல்லாஹ் ஏழு பேர்களின் “துஆ” பிரார்த்தனையை தட்டாமல் உடனே ஏற்றுக் கொள்வான்.

وَسَبْعَةٌ لَا يَرُدُّ اللهُ دَعْوَتَهُمْ
مَظْلُوْمٌ وَالِدٌ ذُوْ صَوْمٍ وَذُوْ مَرَضٍ
وَدَعْوَةٌ لِأَخِيْ بِالْغَيْبِ ثُمَّ نَبِيْ
لِأُمَّةٍ ثُمَّ ذُوْ حَجٍّ بِذَاكَ قُضِيْ

அல்லாஹ் ஏழு பேர்களின் பிரார்த்தனையை தட்டமாட்டான்.

01. அநீதி செய்யப்பட்டவன்.
02. பெற்றோர்.
03. நோன்பாளி.
04. நோயாளி.
05. ஒருவன் தனது சகோதரனுக்கு, நண்பனுக்கு மறைமுகமாக கேட்கும் துஆ.
06. ஒரு நபீ தனது “உம்மத்”துக்காக கேட்கும் துஆ.
07. ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ் செய்தவனின் துஆ.

இவ் ஏழு பேர்களின் “துஆ” தங்கு தடையின்றி ஏற்றுக் கொள்ளப்படும்.

அநீதி செய்யப்பட்டவர்களில் காபிர் - முர்தத் என்று அநீதியாக “பத்வா” வழங்கப்பட்டவர்களுக்கு முதலிடம் உண்டு.

“பத்வா” வழங்கப்பட்டவர்களான ஸூபீ முஸ்லிம்களே! ஐந்து நேரமும் தொழுது விட்டு உங்களைக் காபிர்கள், முர்தத்துகள் என்று “பத்வா” வழங்கியவர்கள், அந்த பத்வாவை அமுல் செய்பவர்கள், அநீதியாளர்கள் நாய்கள், பன்றிகள் சாவது போல் சாக வேண்டுமென்று “துஆ” செய்யுங்கள். அவர்கள் கொரோனா, கென்ஸர் போன்ற பயங்கர வியாதிகளால் பாதிக்கப்பட்டு சாக வேண்டுமென்று “துஆ” செய்யுங்கள். அவர்களின் பொருளாதாரம் அழிந்து பட்டினி, பசியுடன் சாக வேண்டுமென்றும் அல்லாஹ்விடம் “துஆ” செய்யுங்கள்.

இறுதியில் சில வரிகள். உலமாஉகளிற் சிலரும், பொது மக்களிற் பலரும் அவ்லியாஉகளையும், ஷெய்குமார்களையும் கிண்டல் பண்ணுகிறார்கள். நையாண்டி செய்கிறார்கள். இவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருந்து கொள்ள வேண்டும்.

20/06/2025

இக்கால இளைஞர்கள் இதுவரை அறிந்திராத காத்தான்குடியில் நடந்த சில சம்பவங்கள்!

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

நான் 05.02.1944 புதன்கிழமை அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் றஹிமஹுல்லாஹ் அவர்களுக்கும், சஹ்றா உம்மா அவர்களுக்கும் மகனாக காத்தான்குடி 06ம் குறிச்சி பிரதான வீதி இரும்புத் தைக்காப் பள்ளிவாயலின் எதிரில் உள்ள “ஜாமிஉள்ளாபிரீன்” வீதியிலுள்ள களி மண்ணால் ஆன, மேற் கூரை தென்னை ஓலையினாலான, கழிவறை, குளியலறை இல்லாத சிறிய வீடொன்றில் பிறந்தேன்.

மழை பெய்தால் அவ் வீட்டின் தரை நனைந்து விடும். நுளம்பு, பூரான், நட்டுவக்காலி, புலிமுகச் சிலந்தி, பல்லி, கரப்பத்தான், தவளை, தேரை, பாம்பு முதலானவற்றின் ஒதுங்குமிடமாக அவ் வீடு மாறிவிடும். அங்கு மின் விசிறியுமில்லை, குளிரூட்டியுமில்லை, மின்சாரமுமில்லை. பனை ஓலை விசிறி வாங்க அதுவுமில்லை.

அக்கால கட்டத்தில் என் தந்தை ஊர் வீதி முஹ்யித்தீன் தைக்காப் பள்ளிவாயலை அண்மித்துள்ள “அல்மவ்ஹிபதுஸ் ஸமதானிய்யா” குர்ஆன் பாடசாலையில் மாதம் 20 ரூபாய் சம்பளத்திற்கு திருக்குர்ஆன் ஓதிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

என் பெற்றோருக்கு நான் இரண்டாவது பிள்ளை. என் பெற்றோருக்கு முதல் குழந்தை பெண் குழந்தை. எனக்குப் பின் என் பெற்றோருக்கு இரண்டு ஆண் பிள்ளைகளும், ஆறு பெண் பிள்ளைகளும் பிறந்தனர். அவர்களில் இரு பெண் பிள்ளைகள் சிறு வயதிலேயே மரணித்து விட்டார்கள்.

தற்போது என்னோடு சகோதர, சகோதரிகள் 07 பேர் உயிரோடுள்ளனர்.

என் தந்தையின் ஆரம்ப கால முதற் சம்பளம் 20 ரூபாய். 72 வயதில் (ஹிஜ்ரீ ஆண்டுக் கணக்கு) மரணிக்கும் போது பெற்ற சம்பளம் 125 ரூபாய்.

என் தந்தை பிறந்த ஆண்டு 1908. மரணித்த ஆண்டு 1978. தந்தை உயிர் வாழ்ந்த காலத்தில் நான்கு பிள்ளைகளுக்கு வளவு வாங்கி வீடு கட்டி அவர்களுக்கு திருமணமும் செய்து வைத்தார்கள். ஒருவருக்கு மாத்திரம் நான் வளவு வாங்கி வீடு கட்டி திருமணம் முடித்து வைத்தேன்.

அன்பிற்குரிய நேயர்களே!

நான் இக்கட்டுரையில் இரண்டு விடயங்கள் குறித்து விபரங்கள் எழுதியுள்ளேன். நான் இவ் விபரங்களை ஏன் எழுதினேன்? என்று வாசகர்கள் பல கோணங்களில் சிந்திக்கலாம். எவர் எவ்வாறு சிந்தித்தாலும் நான் ஏன் எழுதினேன் என்பதற்கு என் மனதில் ஒரு காரணம் இருக்க வேண்டுமல்லவா? அது என்னவென்று எனதுள்ளத்தில் உள்ளவாறு விபரம் எழுதுகிறேன்.

வறுமையிலும் பொறுமை செய்ய வேண்டும். இது வாசக நேயர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்.

பொறுமை என்பது வணக்கங்களில் மிகச் சிறந்த வணக்கமாகும். குறிப்பாக வறுமையில் பொறுமை செய்வது மா பெரும் “ஜிஹாத்” ஆகும். இதற்கான கூலி சுவர்க்கம்தான். அதாவது அல்லாஹ்வின் திரு முகக் காட்சிதான்.

பொறுமை தொடர்பாக திருக்குர்ஆன் வசனங்களும், நபீ மொழிகளும், அவ்லியாஉகளின் வழி காட்டல்களும், வரலாறுகளும் அதிகம் உள்ளன.

ஆயினும் என் தந்தை கடும் வறுமையிலும் பொறுமை செய்த ஒரு தியாகி. அவர்களின் வரலாறுகளை அறிபவர்கள் அவர்கள் போல் பொறுமை செய்து அல்லாஹ்வின் அருளையும், அன்பையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதை ஆதரவு வைத்தவனாகவே அவர்களின் பொறுமை பற்றி இங்கு எழுதுகிறேன்.

சிலர் வறுமையின் சுமையை தாங்கிக் கொள்ளாமலும், அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் கொள்ளாமலும் தமது “ஈமான்” நம்பிக்கைக்கு மாறாக முடிவு செய்து வருகிறார்கள். சிலர் நஞ்சருந்தி மரணிக்கிறார்கள். இன்னும் சிலர் வேறு விதத்தில் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இன்னும் சிலர் தமது மனைவி மக்களைப் பிரிந்து விடுகிறார்கள். இன்னும் சிலர் தலைமறைவாகியும் விடுகிறார்கள்.

இன்னோர் இவ்வாறு செய்வதன் மூலம் அல்லாஹ்வின் செயலைப் பொருந்திக் கொள்ளாதவர்களாகி விடுகிறார்கள்.

அல்லாஹ்வைப் பொருந்திக் கொள்வதென்றால் அவனின் செயல்களையும், அவனின் நாட்டங்களையும் பொருந்திக் கொள்வதேயாகும். அவனின் செயல்களைப் பொருந்திக் கொள்ளாமலும், அவனின் நாட்டத்தைப் பொருந்திக் கொள்ளாமலும் அவனைப் பொருந்திக் கொள்தல் என்பது அர்த்தமற்றதாகும். நாமும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொள்ள வேண்டும். அவனும் எம்மைப் பொருந்திக் கொள்ள வேண்டும். رَضِيَ اللهُ عَنْهُمْ وَرَضُوْا عَنْهُ என்ற திரு வசனம் மேற்கண்ட கருத்தையே உணர்த்துகிறது.

எதில் பொறுமை செய்ய வேண்டும்? என்ற கேள்விக்கு எதிலெல்லாம் பொறுமை செய்ய வேண்டுமென்று இஸ்லாம் வழி காட்டுகிறதோ அதிலெல்லாம் பொறுமை செய்ய வேண்டும். இஸ்லாம் கூறினாலும், கூறாவிட்டாலும் மனிதன் தனது மனச் சாட்சியை வழிகாட்டியாகக் கொண்டு செயல்பட வேண்டும். நபீ பெருமானார் கூறினார்கள். اِسْتَفْتِ قَلْبَكَ، وَإِنْ أَفْتَاكَ الْمُفْتُوْنَ “பத்வா” வழங்குவோர் “பத்வா” வழங்கினாலும் உனது உள்ளத்திடம் “பத்வா” கேள்” என்று.

சொற்களின் விபரம்:

اِسْتَفْتِ
என்ற சொல் اِسْتَفْتَى என்ற சொல்லின் اَمْرُ حَاضِرْ முன்னிலை ஏவல் வினைச் சொல்லாகும். இதன் اِسْمُ الْفَاعِلْ - مُسْتَفْتِيْ என்று வரும். أَفْتَى என்றால் “பத்வா” கொடுத்தான் என்று பொருள். مُفْتِيْ என்பது اِسْمُ الْفَاعِلْ ஆகும். இதன் பொருள் “பத்வா” கொடுப்பவன் என்று வரும். مُفْتُوْنْ என்ற சொல் مُفْتِيْ என்ற சொல்லின் பன்மைச் சொல்லாகும். اَفْتَى என்ற சொல்லின் اِسْمُ الْمَفْعُوْلْ - مُفْتَى என்று வரும். இதன் பன்மை مُفْتَوْنَ என்று வரும். இதன் பொருள் “பத்வா” வழங்கப்பட்டவர்கள் என்று வரும்.

மேற்கண்ட விபரம் பொது மக்களுக்குத் தேவையில்லை. صَرْفْ என்று சொல்லப்படுகின்ற அறபு மொழியின் சொல்லிலக்கணம் தொடர்பான விபரமாகும். அறபுக் கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் இது பொருத்தமானது.

“பத்வா” வழங்குவோர் “பத்வா” வழங்கினாலும் நீ உனது உள்ளத்திடம் “பத்வா” கேட்டுக் கொள் என்ற நபீ மொழியின் படி கெட்டவன் ஒருவன் தனது “கல்பு” உள்ளத்திடம் “பத்வா” கேட்கும் போது அவனின் “கல்பு” உள்ளம் நல்லதை நல்லதென்றும், கெட்டதை கெட்டதென்றும் சொல்லுமா? அல்லது மாறாகச் சொல்லுமா? கெட்டவனாயினும், நல்லவனாயினும் அவனின் மனம் சுத்தமானதாயிருந்தால் அது நல்லதையே சொல்லும்.

வறுமை:

வறுமை “குப்ர்” நிராகரிப்புக்கு நெருங்கிவிட்டது என்று நபீ பெருமானார் கூறியுள்ளார்கள்.
قال النبي صلى الله عليه وسلّم: كَادَ الْفَقْرُ أَنْ يَكُوْنَ كُفْرًا،
வறுமை “குப்ர்” எனும் நிராகரிப்புக்கு நெருங்கிவிட்டது என்று கூறியுள்ளார்கள். நபீ பெருமானார் அவர்கள் ஏன் இவ்வாறு சொன்னார்கள்? என்றால் களவைத் தொழில் போல் செய்து பழகியவன் அதை “ஹலால்” என்று நம்புவதற்கும் சாத்தியம் உண்டு. அவ்வாறு அவன் நம்பினால் - அதாவது மார்க்கத்தில் “ஹறாம்” ஆக்கப்பட்ட ஒன்றை “ஹலால்” என்று யாராவது நம்பினால் “குப்ர்” நிராகரித்தவராகிவிடுவார்.

“ஹறாம்” ஆக்கப்பட்ட ஒன்றை “ஹலால்” என்று சொல்வது அல்லது நம்புவது “குப்ர்” நிராகரிப்பை ஏற்படுத்துமென்பதை ஒவ்வோர் முஸ்லிமும் அறிந்திருக்க வேண்டும்.

காத்தான்குடி பள்ளிவாயல்களிலுள்ள காணிக்கை உண்டியல்களில் இரும்புத் தைக்காப் பள்ளி உண்டியல் மட்டும்தான் மாதாந்தம் அதிக பணம் சேரும் உண்டியலாகும். வஹ்ஹாபிஸம் தலை நீட்டிய பிறகு உண்டியல்களில் பணம் சேர்வது மிகவும் குறைந்து விட்டது. ஆயினும் வஹ்ஹாபிஸம் வருவதற்கு முன்னுள்ள காலத்தில் பள்ளிவாயல்கள் அனைத்திலும் உண்டியல்கள் நிறைந்துதான் இருந்தன.

இதற்கான காரணம் குறித்த பள்ளிவாயல் காத்தான்குடி பிரதான வீதியில் அமைந்திருப்பதேயாகும். பிரதான வீதியால் போக்கு வரத்துச் செய்கின்ற வாகனங்களில் பயணிப்பவர்கள் இன, மத வேறுபாடின்றி காணிக்கை செலுத்தியே செல்வார்கள். இதற்கு இன்னுமொரு காரணம் இருந்தது. குறித்த பள்ளிவாயலில் வலீமாரின் நடமாட்டமும் இருந்ததேயாகும்.

சன நடமாட்டம் குறைந்த காலத்தில் சுமார் 75 வருடங்களுக்கு முன் - நான் சுமார் ஏழு வயதுச் சிறுவனாயிருந்த காலத்தில் இப் பள்ளிவாயல் உண்டியல் அடிக்கடி கள்வர்களால் திருடப்படும்.

ஒரு நாளிரவு ஒரு திருடன் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற போது வீதியில் நாகைப் பாம்பினால் தீண்டப்பட்டு ஸ்தலத்திலேயே மரணித்தான். இது 1951ம் ஆண்டு அல்லது 52ம் ஆண்டு நடந்ததாகும்.

இன்னுமொரு திருடன் ஒரு நாளிரவு சுமார் இரண்டு மணியளவில் உண்டியலை உடைப்பதற்குச் சென்ற நேரம் என்னதான் நல்லெண்ணம் ஏற்பட்டதோ தெரியவில்லை. உண்டியலுக்கு முன்னால் நின்று, இறைவா! எனது வறுமை காரணமாக உனது பள்ளிவாயல் உண்டியலை உடைத்து பணம் திருட நான் வந்துள்ளேன். எனது கஷ்டத்தினால் நான் எடுக்கிறேன். நீ என்னை மன்னித்துக் கொள் என்று “துஆ” செய்து விட்டு உண்டியலை உடைக்க முற்பட்ட போது ஒருவர் அவனின் தோளில் தட்டி தங்கப் பவுன் 02 கொடுத்து நீ திருடாதே என்று கூறியுள்ளார். அவன் திருடாமல் வீடு சென்று மறு நாட்காலை எனது தந்தையிடம் சென்று நடந்ததைக் கூறி 2 பவுன்களையும் தகப்பனாரிடம் காட்டியுள்ளார்.

இது நடந்த காலத்தில் ஒரு பவுன் தங்கம் 15 ரூபாயாக இருந்த காலம் என்று சொல்லப்பட்டது.

والله يغني من يشاء،
والله يعطي من يشاء بغير حساب،

உப்புக் கட்டியார் ஆலை:

இரும்புத் தைக்கா பள்ளிவாயலுக்கு எதிரில் மார்க்கட் - சந்தையை நோக்கிச் செல்லும் வழியில் மையவாடியில் நின்றிருந்த ஆலை மரம் உப்புக் கட்டியார் ஆலை என்று மக்களால் அழைக்கப்பட்டு வந்தது. இது 1945 - 50ம் ஆண்டுகளில் - சுமார் 75 ஆண்டுகளுக்கு முன் காத்தான்குடியில் காணப்பட்ட ஆலை மரங்களில் மிகப் பெரிய ஆலையாக இருந்தது.

இது உப்புக் கட்டியார் ஆலை என்று அழைக்கப்படுமுன் எவ்வாறு அழைக்கப்பட்டதென்பதற்கு ஆதாரம் கிடைக்கவில்லை.

ஆயினும் இந்த மரம் உப்புக் கட்டியார் ஆலை என்று அழைக்கப்பட்டதற்கு ஒரு வரலாறு உண்டு. இது முன்னோர் சொல்ல நான் கேட்டதாகும்.

இந்த மரம் இரும்புத்தைக்காப் பள்ளிவாயலுக்கு அண்மையில் இருந்தது. இந்த மரம் இருந்த இடத்திலிருந்து சுமார் 10 மீற்றர் தூரத்தில் ஓர் வீடு இருந்தது. அந்த வீட்டுக் காரர் ஓர் ஏழை மனிதன். அவர் இரும்புத் தைக்காப் பள்ளிவாயலில் “முஅத்தின்” ஐவேளை பாங்கு சொல்வதற்காக நியமிக்கப்பட்டிருந்தார்.

அக்காலத்தில் அப் பள்ளிவாயலில் வெள்ளிக்கிழமைகளிலும், றபீஉனில் அவ்வல் மாதத்திலும் மார்க்க விஷேட நிகழ்வுகள் நடைபெற்று வந்தன. அந்த நிகழ்வுகளின் போது ஊர் மக்களால் நேர்ச்சைப் பொருட்கள் பள்ளிவாயலுக்கு வழங்கப்படுவதும், அவை ஏலத்தில் விற்கப்படுவதும் வழக்கம்.

ஒரு சமயம் “உப்பு” நேர்ச்சைப் பொருளாக வழங்கப்பட்டது. அதோடு வேறு நேர்ச்சைப் பொருட்களும் வழங்கப்பட்டன.

வழங்கப்படுகின்ற நேர்ச்சைப் பொருட்கள் தினமும் நிகழ்ச்சி முடிந்ததும் ஏலத்தில் விற்கப்படுவது வழக்கம்.

ஒரு நாள் வந்த நேர்ச்சைப் பொருட்களில் உப்பு ஒரு பெட்டி காணாமற் போய்விட்டது. நேர்ச்சைப் பொருட்களுக்குப் பொறுப்பாயிருந்த “முஅத்தின்” பாங்கு சொல்பவரிடம் வினவப்பட்ட போது அவர் அது பற்றித் தனக்குத் தெரியாதென்று சொல்லிவிட்டார்.

பள்ளிவாயல் “பேஷ் இமாம்” தொழுகை நடத்துபவர் மௌவலீ பட்டம் பெறாதவராயினும் ஓரளவு ஓதத் தெரிந்தவராயும், ஓரளவு விஷேஷமுள்ளவராயும் இருந்ததால் “உப்பு திருடப்பட்டுள்ளது தொடர்பில் நாம் ஒரு “துஆ” ஓதுவோம். உப்புத் திருடன் யாரென்று தெரிய வரும்” என்று சொன்னார். அவரே “துஆ” ஓதினார். அவர் “துஆ” ஓதும் போது இப்பள்ளிவாயலில் அடக்கம் பெற்றுள்ள அலியார் ஆலிமின் பொருட்டால் திருடன் பிடிபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். (அலீ ஆலிம் என்பவர் என் தந்தையின் தந்தையாவார்) பள்ளி கலைந்தது.

அன்று இரவு “ஸுப்ஹ்” தொழுகைக்கு பாங்கு சொல்வதற்கு “முஅத்தின்” பாங்கு சொல்பவர் வரவில்லை. தொழ வந்த யாரோ ஒருவர் பாங்கு சொன்னார். தொழுகையும் முடிந்தது. மக்கள் கலைந்து சென்றனர்.

ஆயினும் பள்ளிவாயல் தலைவரும், இன்னும் சிலரும் பாங்கு சொல்ல வராத முஅத்தினைப் பார்த்து வருவதற்காக அவரின் வீட்டிற்குச் சென்றார்கள். முஅத்தின் சுகவீனம் காரணமாக உறங்கிக் கொண்டிருக்கிறார் என்று அவரின் மனைவி சொன்னார். பள்ளிவாயல் தலைவரும், அவருடன் சென்றவர்களும் “முஅத்தின்” உறங்கிய அறைக்குள் சென்றார்கள். “முஅத்தின்” தனது உடல் முழுவதையும் துணியால் மறைத்துக் கொண்டிருந்தார். போனவர்கள் துணியை அகற்றினார்கள். ஸுப்ஹானல்லாஹ்! “முஅத்தின்” உடைய உடல் முழுவதும் உப்புக் கட்டிகள் போல் இருந்ததைக் கண்டு என்ன உப்புக் கட்டியார்? என்று கூறினார்கள். இறுதியில் அவர் நான்தான் திருடினேன். என்னை மன்னித்து விடுங்கள் என்று போனவர்களிடம் மன்னிப்புக் கேட்டார்.

அன்று முதல் அவரின் வீட்டுக்குப் பக்கத்திலிருந்த ஆலை “உப்புக் கட்டியார் ஆலை” என்று அழைக்கப்படலாயிற்று.

இந்த வரலாறில் பலருக்குப் பல பாடங்கள் உள்ளன. படித்துக் கொள்வார்களா?

திருடுதல் என்பது பாவங்களில் தண்டனைக்குரிய குற்றமாகும். எதெல்லாம் தண்டனைக்குரிய பாவங்கள் என்று “ஷரீஆ”வில் சொல்லப்பட்டுள்ளதோ அதெல்லாம் حَدٌّ தண்டனைக்குரிய பாவங்களாகும். அதாவது பெரும் பாவங்களாகும்.

இரும்புத் தைக்காப் பள்ளிவாயலில் பாங்கு சொல்வதற்காக நியமிக்கப்பட்டிருந்த “முஅத்தின்” பாங்கு சொல்பவர் திருடியது பெறுமதியான ஒரு சாமான் அல்ல. ஆயினுமது அல்லாஹ்வின் வீட்டில் செய்த களவாகும். இதனால் அல்லாஹ் அவரை ஒரே இரவில் தண்டித்து விட்டான்.

இன்று பள்ளிவாயல் நிர்வாகிகளிற் பலர் பள்ளிவாயலுக்குரிய சொத்துக்களைத் தமது சொத்துக்கள் போல் பாவிப்பதாக நாம் அறிகிறோம். இன்னோர் அல்லாஹ்வின் தண்டனையை பயந்து கொள்ள வேண்டும்.

இரும்புத் தைக்கா முஅத்தினுக்கு அல்லாஹ் வழங்கிய தண்டனையை அனைத்துப் பள்ளிவாயல்களினது நிர்வாகிகளும், வேலையாட்களும், கடமைக் காரர்களும் தமது மனதில் வைத்துச் செயல்பட வேண்டும்.

Address

Abdul Jawad Alim Road
Kattankudi
0094

Alerts

Be the first to know and let us send you an email when SHUMS TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SHUMS TV:

Share

Category