08/10/2025
குளத்தை கலக்கிவிட்டிருக்கிறேன். தெளிவு காண விரும்புவோர் என்னைச் சந்திக்கலாம். சந்தித்தால் மட்டுமே சந்தேகம் தீரும்!
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
كُلُّ شَيْءٍ هَالِكٌ إِلَّا وَجْهَهُ
அனைத்தும் முக்காலத்திலும் இல்லாதவையே! அவன் தவிர! (28-88)
لَا يُسْأَلُ عَمَّا يَفْعَلُ وَهُمْ يُسْأَلُونَ
அவன் செய்வது பற்றி அவன் - அல்லாஹ் கேட்கப்படமாட்டான். அவர்கள் - மனிதர்கள் செய்வது பற்றி அவர்கள் - மனிதர்கள் கேட்கப்படுவார்கள். (ஸூறதுல் அன்பியாஇ, வசனம்: 23)
இத்திரு வசனத்தில் ضَمِيْرْ என்று மொழியிலக்கணத்தில் சொல்லப்படுகின்ற “பிரதிப் பெயர்கள்” பல உள்ளன. இவை மறைந்துள்ளன. மறைக்கப்பட்டவாறுதான் வசனம் அமைக்கப்பட்டுள்ளது. இது அல்லாஹ் சொன்ன திருக்குர்ஆன் வசனமாயிருப்பதால் இதில் நாம் எந்த மாற்றமும் செய்ய முடியாது. ஆயினும் விளங்காதவர்களுக்கு விளக்கி வைப்பதற்காக மறைந்துள்ள பிரதிப் பெயர்களை வெளிக் கொணர்ந்து விளக்கி வைக்கலாம். இவ் அடிப்படையில் சில பிரதிப் பெயர்களை வெளிக் கொணர்ந்து விளக்கி வைக்கிறேன்.
இவ்வாறு நான் செய்வது விடயம் விளங்காதவர்களுக்கு விளக்கி வைப்பதற்காகவேயன்றி அல்லாஹ் சொன்ன வசனத்தை மாற்றி அமைப்பதற்காக அல்ல.
சிந்தனைக்கான விளக்கம்: ஏன் இவ்வாறு எழுதுகின்றேன் என்றால் மனிதர்களிற் சிலர் உள்ளனர். அவர்களுக்குத் தேவையானவர்கள் - வேண்டியவர்கள் எத்தகைய குற்றம் செய்தாலும் அதைக் கண்டு கொள்ளமாட்டார்கள். அவர்களுக்குத் தேவையில்லாதவர்கள் சிறு குற்றம் செய்தாலும் கூட அதைக் கண்டு கொள்வார்கள்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவிலுள்ள “முப்தீ”கள் போன்று. இவர்களுக்கு வேண்டியவர்கள் - தேவையானவர்கள் பெருங் குற்றம் செய்தாலும் அதைக் கண்டு கொள்ளமாட்டார்கள். அவர்களுக்கு “பத்வா”வுமில்லை, இவர்களுக்கு “தக்வா”வுமில்லை.
உதாரணமாக உலமா சபையின் தலைவர் ரிஸ்வீ முப்தீ அவர்கள் வெசக் தினத்தில் பௌத சகோதரர்கள் போல் வெசக் விளக்கை கையிலேந்தி பக்திப் பரவசத்துடன் நின்றது போன்று. இவரின் இச் செயல் மார்க்க விரோதச் செயல் என்பது உலமாஉகள் அனைவரும் அறிந்த விஷயம்தான். இது தொடர்பாக பெருமானார் அவர்கள் தங்களின் பொன் மொழி மூலம் எச்சரித்திருந்தும் கூட, இதேபோல் இது குறித்து உலமா சபைக்கு பல கட்டுரைகள் மூலம் நான் அறிவித்து நியாயம் கேட்டிருந்தும் கூட இதுவரை இதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கான காரணம் “பத்வா” வழங்கும் முப்தீகளுக்கும், உலமா சபை நிர்வாகத்திலுள்ள சிலருக்கும் ரிஸ்வீ முப்தீ தேவை. இதனால் அவர்கள் இவரின் மார்க்க விரோதச் செயலைக் கண்டு கொள்ளவில்லை. இவருக்கு மார்க்கச் சட்டம் என்னவென்று கூடச் சொல்லவுமில்லை.
இதேபோல் பிரசித்தி பெற்ற முஸ்லிம் அரசியல்வாதி ஒருவர் அந்நிய பெண்ணைப் பகிரங்கமாகக் கட்டியணைத்துள்ளார். இவருக்கும் இதுவரை உலமா சபை எந்தவொரு “பத்வா”வும் வழங்கவில்லை. இதற்கான காரணமும் உலமா சபைக்கு இந்த அரசியல்வாதி தேவை. இதனால் இவரின் மார்க்க விரோதச் செயலையும் உலமா சபை கண்டு கொள்ளவில்லை. இதேபோல் இன்னுமோர் அரசியல்வாதியின் மகள் தனது தந்தை விசாரணைக்குட்படுத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த வேளை பௌத மதத்தைச் சேர்ந்தவர்களுடன் அவர்களின் வணக்கத்தளத்துக்கு மலர் தட்டுடன் சென்றது தொடர்பிலும் உலமா சபை கண்டு கொள்ளவுமில்லை. “பத்வா” வழங்கவுமில்லை. இதற்கும் காரணம் அந்த அரசியல்வாதி உலமா சபைக்குத் தேவை.
என்போல் உலமா சபைக்குத் தேவையற்றவர்களாயின் அவர்கள் குற்றம் செய்யாவிட்டாலும் கூட அவர்களுக்கு – உலமா சபைக்கு குற்றமாக விளங்கினால் அதைப் பெருங்குற்றமாக பூதாகரமாக்கி “பத்வா” கொடுப்பார்கள். இவர்கள் யார் தெரியுமா? இவர்கள்தான் நரகத்து விறகுகள்.
இப்போது இக்கட்டுரையில் திருக்குர்ஆன் வசனத்திற்கு நான் கூறும் விளக்கம் சரியாக இருந்தாலும் கூட நான் அவர்களுக்குத் தேவையற்றவனாக இருப்பதால் என்னைக் குற்றவாளியாக்கி மீண்டும் ஒரு “பத்வா” வழங்கத் திட்டமிடுவார்கள் என்ற காரணத்தினால்தான் இந்தக் குறிப்பை எழுதுகிறேன். யார் குரைத்தாலும் குரைக்கட்டும் என்ற முடிவுடன் தலைப்பில் நான் எழுதியுள்ள திருக்குர்ஆன் வசனத்திற்கு விளக்கம் எழுதுகிறேன். இத்துடன் சிந்தனைக்கான விளக்கம் நிறைவு பெற்று விட்டது.
لَا يُسْأَلُ عَمَّا يَفْعَلُ وَهُمْ يُسْأَلُونَ
அவன் - அல்லாஹ் செய்வது பற்றி அவன் கேட்கப்படமாட்டான். அவர்கள் - மனிதர்கள் செய்வது பற்றி அவன் - அல்லாஹ் கேட்பான்.
இத்திரு வசனத்தில் பிரதிப் பெயர்களிற் சில மறைந்துள்ளது தொடர்பாக நான் விளக்கம் எழுதுகிறேன். கல்விமான்கள், மற்றும் சிந்தனையாளர்கள் கவனத்திற் கொள்ளுமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன்.
“லா யுஸ்அலு” لَا يُسْئَلُ என்றால் “அவன் கேட்கப்படமாட்டான்” என்று பொருள். இதில் “அவன்” என்பதற்கான சொல் வெளிப்படையாகக் கூறப்படாவிட்டாலும் இச் சொல் لَا يُسْئَلُ என்பதில் மறைந்துள்ளது. மறைந்துள்ள அச் சொல் ضَمِيْرْ பிரதிப் பெயர் என்று சொல்லப்படுகின்ற هُوَ என்பதாகவும் இருக்கலாம். அல்லது அந்தப் பிரதிப் பெயர் “அல்லாஹ்” என்ற பெயர்ச் சொல்லாகவும் இருக்கலாம்.
பிரதிப் பெயர் என்று நாம் வைத்துக் கொள்வதாயின் لَا يُسْئَلُ - هُوَ என்று வசனம் அமையும். هُوَ என்றால் அவன் கேட்கப்படமாட்டான். “அவன்” என்றால் அல்லாஹ்வைக் குறிக்கும். இவ்வாறும் நாம் வசனம் அமைக்கலாம். இதற்கும் சட்டத்தில் இடமுண்டு. அல்லது குறித்த பிரதிப் பெயரை பெயர்ச் சொல்லாகவும் அமைக்கலாம். இவ்வாறு அமைத்தால் لُا يُسْئَلُ اللهُ என்று வசனம் அமையும். எவ்வாறு வசனம் அமைந்தாலும் “அல்லாஹ் கேட்கப்படமாட்டான்” என்றுதான் பொருள் வரும்.
عَمَّا يَفْعَلُ
“அவன் செய்வது பற்றி” இச்சிறு வசனத்தின் பொருள் இதுதான். முழு வசனத்தையும் சேர்த்துப் பொருள் சொல்வதாயின் “அல்லாஹ் செய்வது பற்றி அல்லாஹ் கேட்கப்படமாட்டான்” என்று பொருள் வரும்.
இதையடுத்து அதன் தொடர் பின்வருமாறு வரும். وَهُمْ يُسْئَلُوْنَ “அவர்கள் கேட்கப்படுவார்கள்” அவர்கள் என்றால் மனிதர்கள். அவர்கள் செய்வது பற்றி அவர்கள் அல்லாஹ்வினால் கேட்கப்படுவார்கள்.
விளக்கமான பொருள் என்னவெனில், அல்லாஹ் என்னதான் செய்தாலும் அவன் செய்தது பற்றியோ, அவன் செய்வது பற்றியோ எவராலும் அவன் கேட்கப்படமாட்டான். அதாவது எவரும் அவனிடம் கேட்க முடியாது.
لَا يُسْأَلُ عَمَّا يَفْعَلُ وَهُمْ يُسْأَلُونَ
அவன் செய்வது பற்றி அவன் கேட்கப்படமாட்டான். அவர்கள் செய்வது பற்றி அவர்கள் கேட்கப்படுவார்கள்.
மேற்கண்ட இவ்வசனத்தில் கேட்கப்படுபவர்கள் யாரென்று தெளிவாகக் கூறப்படாவிட்டாலும் அவர்கள் மனிதர்கள்தான் என்பது இடத்தைப் பொறுத்தும், وَهُمْ என்ற சொல் சுட்டிக் காட்டுவது கொண்டும் விளங்கப்படுகிறது.
சிந்தனைக்கு:
ஒரு நாட்டின் அரசன் நீதியாகவும், நேர்மையாகவும் ஆட்சி செய்பவனாகவும் இருப்பான். நேர்மை, நீதியின்றி ஊழலான ஆட்சி செய்பவனாகவும் இருப்பான்.
நேர்மையான அரசனாயிருந்தால் தனது ஆட்சிக்குட்பட்ட மக்களிடம், “நான் எது செய்தாலும் நீங்கள் என்னிடம் கேட்க வேண்டும். நீங்கள் எது செய்தாலும் நான் உங்களிடம் கேட்பேன்” என்று பகிரங்கமாகச் சொல்வான்.
நேர்மையற்ற, ஊழல் செய்யும் அரசனாயிருந்தால், “நீங்கள் எது செய்தாலும் நான் உங்களிடம் கேட்பேன். நான் எது செய்தாலும் நீங்கள் என்னிடம் கேட்கக் கூடாது” என்று சொல்வான்.
அல்லாஹ் நினைத்திருந்தால் لَا أُسْئَلُ عَمَّا أُفْعَلُ “நான் செய்வது பற்றி நான் கேட்கப்படமாட்டேன்” என்றும், وَأَنْتُمْ تُسْئَلُوْنَ عَمَّا تَفْعَلُوْنَ “நீங்கள் செய்வது பற்றி நீங்கள் கேட்கப்படுவீர்கள்” என்றும் சொல்லியிருக்கலாம்.
அல்லாஹ் இத்தகவலை படர்க்கை அமைப்பில் கூறியுள்ளானேயன்றி முன்னிலை அமைப்பில் சொல்லவில்லை.
இதில் ஓர் இரகசியம் இருப்பது மனம் சுத்தமானவர்களுக்கு மறைவானதல்ல.
நேர்மையான, ஊழலற்ற, கள்ளம் கபடமில்லாத ஆட்சி செய்யும் ஓர் அரசனாயிருந்தால் நான் என்ன செய்தாலும் நீங்கள் என்னிடம் கேளுங்கள். அதேபோல் நீங்கள் என்ன செய்தாலும் நான் உங்களிடம் கேட்பேன் என்று சொல்லியிருக்கலாம்.
அல்லாஹ் நேர்மையான, நீதியான, கள்ளங்கபடமற்ற ஆட்சியாளனாயிருந்தும் கூட அவ்வாறு சொல்லவில்லை.
சந்தேக நிவர்த்தி: இங்கு பின்வருமாறு ஒரு சந்தேகம் ஏற்பட இடமுண்டு. அதாவது அல்லாஹ் கர்வத்தோடும், அகங்காரத்தோடும் அவ்வாறு சொல்லியுள்ளானா? என்று. இல்லை. அவ்வாறு அவன் சொல்வதாயின் لَا أُسْئَلُ عَمَّا أَفْعَلُ நான் செய்வது பற்றி நான் கேட்கப்படமாட்டேன். நான் செய்வது பற்றி எவரும் என்னிடம் கேட்கக் கூடாது என்று படர்க்கையில் சொல்லாமல் தன்மையில் சொல்லியிருப்பான். இதன் மூலம் அவன் கர்வத்திலோ, அல்லது ஆணவத்திலோ அவ்வாறு சொல்லவில்லை என்பது தெளிவாகிறது.
“பனா”வில் பல வகையுண்டு:
எந்த வகையாயினும் பொதுவாக “பனா” என்றே சொல்லப்படும். சுருக்கமாக “பனா” என்பதை ஆய்வு செய்தால் அது மூன்று வகை என்பது புரியும்.
ஒன்று: اَلْفَنَاءُ فِى أَفْعَالِهِ அல்லாஹ்வின் செயல்களில் “பனா” ஆதல்.
இரண்டு: اَلْفَنَاءُ فِى أَسْمَائِهِ அல்லாஹ்வின் திரு நாமங்களில் “பனா” ஆதல்.
மூன்று: اَلْفَنَاءُ فِى ذَاتِهِ அல்லாஹ்வின் “தாத்”தில் “பனா” ஆதல்.
“அல் பனா” என்பது மூன்று வகை. மூன்று வகை “பனா”வும் அப்துல்லாஹ் என்பவனுக்கு ஏற்பட்டால் அவன் இல்லாமற் போவான். அதாவது தன்னுணர்வில் அவன் இல்லாமற் போவான்.
இது குறித்து “ஆரிபீன்” இறைஞானிகள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
فَنَاءٌ فِى فَنَاءٍ فِى فَنَاءٍ - وَكَانَ فَنَاءُهُ عَيْنَ الْبَقَاءِ
மூன்றாவது வகை “பனா”வான اَلْفَنَاءُ فِى الذَّاتِ “தாத்”தில் “பனா” ஆதல் என்பது அதுவே عَيْنُ الْبَقَاءِ “ஐனுல் பகா” என்று சொல்லப்படும். நாலாவது “பனா” என்று ஒன்றில்லை.
முதலாவது “பனா” اَلْفَنَاءُ فِى أَفْعَالِهِ அல்லாஹ்வின் செயல்களில் “பனா” ஆதல் என்பதாம். இந்த முதலாவது “பனா” ஏற்படுமுன் ஒருவன் தனக்கு செயலுண்டு என்று நம்பினவனாகவே இருப்பான். நான் செய்தேன், நான் சாப்பிட்டேன், நான் குடித்தேன், நான் நுகர்ந்தேன், நான் அடித்தேன் என்று செயல்கள் தனக்குரியவை என்று நம்பியிருப்பான். சொல்லியும் வந்திருப்பான். எவரால் எச் செயல் நடந்தாலும் அது அல்லாஹ்வின் செயல் என்று நம்பியிருந்திருக்கவுமாட்டான். மனிதர்களால் வெளியாகும் செயல்கள் மட்டுமல்ல. படைப்பினங்களினால் ஏற்படுகின்ற எச் செயலாயினும் அது அல்லாஹ்வின் செயலேயாகும். பொதுவாக اَلْأَفْعَالُ كُلُّهَا للهِ அனைத்துச் செயல்களும் அல்லாஹ்வின் செயல்கள் என்றுதான் ஒரு விசுவாசி நம்பியிருப்பான்.
சுருக்கம்:
இத்திரு வசனத்தின் சுருக்கம் என்னவெனில், ஓர் அடியான் ஸூபிஸ வழி நடந்து, “பனா” நிலைகள் தொடர்பாக ஆராய்ந்தறிந்து, அல்லாஹ்வின் “அஸ்மாஉ” திரு நாமங்களில் அவன் “பனா”வாகி, அதாவது படைப்புகளுக்குள்ள பெயர்களாயினும், அப் பெயர்கள் யாவும் அவனின் பெயர்கள்தான் என்று “அஸ்மாஉ”களில் “பனா”வாகி, எவனால் எச் செயல் வெளியானாலும், அல்லது எந்த வஸ்துவால் எச் செயல் வெளியானாலும் பொதுவாகச் செயலெல்லாம் அவன் செயலே என்று “அப்ஆல்” செயல்களில் “பனா”வாகி, இறுதியில் அவனின் “வுஜூத்” உள்ளமை தவிர வேறு எதுவும் உள்ளமையுள்ளதல்ல. அவன் மட்டுமே உள்ளான் என்ற “பனா” اَلْفَنَاءُ فِى الذَّاتِ “தாத்”தில் “பனா” ஆதல் என்ற நிலைக்கு வந்த - இந்நிலையை அடைந்த ஒருவனின் செயல் அல்லாஹ்வின் செயலேயாகும். இந்நிலை அடைந்தவனின் எச் செயலாயினும் அது அல்லாஹ்வின் செயலேயன்றி படைப்பின் செயல் அல்ல. இந்த நிலை அடைந்தவன் அல்லாஹ்தான். அவனின் செயல்பற்றி அல்லாஹ்வினால் கேட்கப்படமாட்டாது என்பதே மேற்கண்ட திருக்குர்ஆன் வசனத்தின் விளக்கமாகும்.
இந்நிலை அடைந்தவனின் “திக்ர்” لَا فَاعِلَ إِلَّا اللهُ செய்பவன் அவன் தவிர வேறு யாருமில்லை என்ற “திக்ர்” ஆகவே இருக்கும்.
நாமும் இந்நிலையடைந்து لَا فَاعِلَ إِلَّا اللهُ செய்பவன் அவன் தவிர வேறு யாருமில்லை என்ற நிலைக்கும், لا موجود إلا الله இருப்பவன் அவன் தவிர வேறு யாருமில்லை, வேறு எதுவுமில்லை என்ற நிலைக்கும் வருவோம்.
தொடரும் அல்லது முற்றும்.