17/04/2025
தோழர் அநுர குமார திஸாநாயக
ஜனாதிபதி
இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசு.
15.04.2025
நீதியை நிலை நாட்டுதல் தொடர்பாக...
கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் 21 ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசதுறை சந்திரகாந்தன் என்பவரின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் சில தகவல்கள் சமூகவலை தளங்கள் வாயிலாக பரப்பப்பட்டு வருகின்றன. அதன் உண்மைத் தன்மை இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருந்த போதிலும் முன்னாள் அமைச்சர்கள், அரசியல்வாதிகள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் ரிஸ்வி முப்தி போன்றோரின் பெயர்கள் பேசப்படுகின்றன.
கூறப்படும் தகவல்கள் உண்மையாயின் அனைத்து தரப்பினரும் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என்பதே நாட்டு மக்கள் அனைவரினதும் ஏகோபித்த வேண்டுகோளாகும். அது யாராக இருந்தாலும் சரியே! அவ்வாறு தண்டிக்கப்படும் பட்சத்தில் 10 ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்ட அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைவர் ரிஸ்வி முப்தியும் தண்டிக்கப்பட வேண்டும். அவர் தண்டிக்கப்பட்டால் முழு முஸ்லிம் சமூகமும் உங்களது அரசுக்கு எதிராக வாக்களிப்பர் என்ற ஒரு மாயையை ஏற்படுத்துவர். விடயம் அவ்வாறில்லை. அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பதிவு செய்யப்பட்ட ஓர் அமைப்பே அன்றி முழு முஸ்லிம்களினதும் ஏக பிரதிநிதிகள் அல்ல.
எனவே, உண்மையில் அவர் குற்றவாளியாக காணப்படுமிடத்து அவர் தண்டிக்கப்படுவதுடன், அவர் தலைமை வகிக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையும் இந்நாட்டில் தடை செய்யப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும். முன்னைய அரசாங்கத்தினால் குண்டுதாரி ஸஹ்றான் செய்த ஈனச் செயலைத் தொடர்ந்து அவர் தலைமை வகித்த தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பும் தடை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
நல்லாட்சி அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் இது தொடர்பில் ஸஹ்றானை நேரடியாக எதிர்த்த காத்தான்குடியில் இயங்கும் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் (incorporated by act of parliament No 46 of 2009) செயலாளரினால் வாக்கு மூலம் அளிக்கப்பட்டதை தாங்கள் அறிந்திருப்பீர்கள். அதேபோல் குறித்த அமைப்பினால் வழங்கப்பட்ட தகவல் தொடர்பாக நீங்கள் எதிர்க்கட்சியில் இருந்த போது பாராளுமன்றில் பேசியுமுள்ளீர்கள்.
அதேபோல் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிலும் சாட்சியம் வழங்கப்பட்டுள்ளது. எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை.
குறித்த ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்க வந்த ரிஸ்வி முப்தி வட்டிலப்பக் கோப்பைகளை நீதிபதிகளுக்கு வழங்க முயன்றதையும் தாங்கள் அறிந்திருப்பிர்கள்.
எனவே, முஸ்லிம்களின் வாக்குகள் தமது கட்சிக்கு இல்லாமலாகிவிடும் என்பதை கவனத்திற் கொள்ளாது நீதியை நிலை நாட்டுவீர்கள் என்று எதிர்பார்க்கின்றோம். முஸ்லிம்கள் என்றும் நீதிக்கு தலை சாய்ப்பர்.
நன்றி,
அகில இலங்கை முஸ்லிம் அத்வைதிகள் சம்மேளனம்.
காத்தான்குடி.