03/06/2026
முஸ்லிம் தனித்துவ அரசியலின் வீழ்ச்சியும் தேசிய நீரோட்டத்தின் எழுச்சியும்.
මුස්ලිම් පුද්ගලවාදී දේශපාලනයේ පරිහානිය සහ ජාතිකවාදයේ නැගීම.
නැඟෙනහිර පළාතේ මුස්ලිම්වරුන්ගේ දේශපාලන පරිවර්තනය සහ පරාජිත ‘රහස්’ උපාය මාර්ග.
පසුගිය ආණ්ඩු සමයේ විපක්ෂයේ දේශපාලනඥයන් භුක්ති විඳි මුදල් හා බලය සම්බන්ධයෙන් මේ වන විට විපක්ෂයේ දේශපාලනඥයන් සම්පූර්ණයෙන්ම සීමා වී ඇති අතර ඔවුන් ජනතාව අතරට ප්රක්ෂේපණය කිරීමට පවා නොහැකි වී තිබේ.
අද දිනකරන් පත්රයේ පළවූ මගේ ලිපිය.03-06-2026
கிழக்கு மாகாண முஸ்லிம்களின் அரசியல் மாற்றமும் தோற்கடிக்கப்பட்ட 'மறைமுக' வியூகங்களும்.
முந்தைய அரசாங்களின் காலத்தில் எதிர்கக்கட்சி அரசியல்வாதிகள் அனுபவித்த வரப்பிரசாரங்கள் மற்றும் அதிகார பலம் தற்பொழுது முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், அவர்களால் மக்களிடையே தங்களை முன்னிலைப்படுத்தவும் முடிவதில்லை.
++++++++++++++++++++++
இலங்கையில் தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் பதவியேற்றதைத் தொடர்ந்து, ஊழலுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள், சட்டத்தின் ஆட்சி மற்றும் புதிய பொருளாதாரக் கொள்கைகள் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள் மற்றும் அவர்களுடைய ஆதரவாளர்களும் இச்சூழலில் அரசுக்கு எதிராக எதனை கையிலெடுப்பது என்ற திண்டாட்டத்தில் உள்ளனர்.
NPP அரசாங்கம் கடந்த காலங்களில் இடம் பெற்ற முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் மீது சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் விளைவாக, ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் எதிர்க்கட்சிப் பிரமுகர்கள் அரசியல் களத்தில் செல்வாக்கை இழந்துள்ளனர். பாரம்பரியமான குடும்ப அரசியல் மற்றும் அதிகார துஷ் பிரயோகங்களுக்கு எதிராக மக்கள் மத்தியில், இளைஞர் சமூகத்தின் மத்தியிலும் பெரும் விளிர்ப்புணர்வு எழுந்துள்ளது. இதனால், எதிர்க்கட்சிகளுக்கு வழக்கம் போல் மக்களை அணிதிரட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
முந்தைய அரசாங்கங்களின் காலத்தில் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் அனுபவித்த வரப்பிரசாதங்கள் மற்றும் அதிகார பலம் தற்போது முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், அவர்களால் மக்களிடையே தங்களை முன்னிலைப்படுத்தவும் முடிவதில்லை.
நாட்டில் எது நடந்தாலும், இணக்கப்பாட்டு அரசியலை முன்னெடுத்த பாரம்பரிய முஸ்லிம் கட்சித் தலைவர்கள் NPP யின் அலையால் பாராளுமன்றத்தில் நேரடி அதிகாரத்தை இழந்தனர். மேலும், இந்த அரசாங்கத்தின் அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லை என்பது அந்த பாரம்பரியக் கட்சிகளாலும், அவர்களுக்கு சார்பாக செயற்படும் சமூக அமைப்புகளாலும் விமரிசிக்கப்பட்டு வருகின்றமை வேடிக்கையான விடயமாகவும் பார்க்கப்படுகின்றது.
கடந்த பொதுத் தேர்தலில் வடக்கு, கிழக்கு உட்பட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள முஸ்லிம் மக்கள், இனவாத அரசியலைத் தாண்டி நாட்டின் ஸ்திரத்தன்மை மற்றும் ஊழலற்ற ஆட்சி மாற்றத்தை வேண்டி தேசிய மக்கள் சக்திக்கு (NPP)க்கு கணிசமான வாக்குகளை அளித்திருந்தனர்.
தேசிய மக்கள் சக்தி ஊடாக முஸ்லிம் பிரமுகர்கள் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மேலும், சர்வமத நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இனவாதத்திற்கு அப்பால் தேசிய வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
மத மற்றும் இன அடையாளங்களை முன்னிறுத்திப் பேரம்பேசும் பாரம்பரிய அரசியல் தளம் மாற்றப்பட்டு, அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய 'ஒரே இலங்கை' என்ற கோட்பாட்டின் அடிப்படையில் பிராந்திய அரசியல் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாக உள்ளது. வரலாற்றில் முதல் முறையாக முஸ்லிம் தனித்துவக் கட்சிகளின் பிடி தளர்ந்து, முஸ்லிம் மக்கள் தேசியக் கொள்கை சார்ந்த மாற்று அரசியலை நோக்கி நகர்வதை இந்த ஆட்சிப் மாற்றம் நாட்டுக்கும் சர்வதேசத்திற்கும் எடுத்துக்காட்டியுள்ளது.
கிழக்கு மாகாண முஸ்லிம்கள் தமது தனித்துவக் கட்சிகளை வெறுப்பதற்குக் காரணம், அக்கட்சிகள் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் தவறியமையும், தலைவர்கள் ஆட்சியாளர்களுடன் இணைந்து சுயநலன்களை மாத்திரம் முன்னெடுத்துச் சென்றமையாகும்.
முஸ்லிம் மக்களின் பூர்வீகக் காணிகள் அபகரிக்கப்படுகின்றன மற்றும் எல்லை நிர்ணயப் பிரச்சினைகள் என தேர்தல்கால முழக்கங்களில் ஈடுபவர்களின் நோக்கம் வாக்கு சேகரிப்பதிலும் இன்னொரு சமூகத்திற்கு எதிரான உணர்ச்சிகளை தூண்டுகின்ற வீர வசனங்களாகவுமே இருந்தன. தேர்தலுக்கு பிற்பாடு பாராளுமன்றத்தில் சமூகத்துக்கு தேவையான விவாதங்களிலோ அல்லது அவை தொடர்பான ஆக்கபூர்வமான செயற்பாடுகளிலோ அவர்கள் ஈடுபடுவதில்லை என்ற ஆதங்கம் மக்கள் மத்தியில் எழத் தொடங்கி இருந்தது.
வீரவசனங்கள் ஊடாக மக்களின் ஆதரவைப் பெற்று அதிகார கதிரையில் உட்கார்ந்த அவர்களினால், தங்களின் பேரம் பேசும் சக்தியைப் பயன்படுத்தி மக்களுக்குரிய உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கத் தவறியுள்ளனர்.
தேர்தல் காலங்களில் மாத்திரம் கிழக்கு மாகாணத்தின் தனித்துவத்தைப் பேசி வாக்குக் கேட்கும் தலைவர்கள், தேர்தல் முடிந்தவுடன் கொழும்புக்குச் சென்று மக்களை மறந்து விட்ட வரலாறுகள்தான் மீதமாக உள்ளது. வடக்கு - கிழக்கு இணைப்பு போன்ற தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் பேசப்படும் போது, அவற்றிற்கு எதிராகக் குரல் கொடுப்பதுடன், முஸ்லிம்களின் இருப்பைப் பாதுகாப்பதற்கான சரியான தீர்வோ அல்லது அது சார்ந்த கொள்கை அரசியலோ அவர்களிடத்தில் மருந்துக்கும் இல்லை என்பதில் கிழக்கு இளைஞர் சமூகம் தெளிவடைந்த சமூகமாக மாறியுள்ளது.
முஸ்லிம் அல்லாத பிற தேசியக் கட்சிகளின் உறுப்பினர்கள் கூட சில நேரங்களில் தங்களின் உரிமைக்காகக் குரல் கொடுப்பதை அவதானிக்கும் முஸ்லிம் சமூகம், இனவாத அரசியலையும் தாண்டி அபிவிருத்தி மற்றும் ஜனநாயக மாற்றங்களை வேண்டி தனித்துவக் கட்சிகளை வெறுக்கத் தொடங்கியுள்ளனர்.
கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கிய பேரினவாத நெருக்குதல்கள், கொவிட்-19 உடல்கள் கட்டாயத் தகனம், மற்றும் ஈஸ்டர் தாக்குதலின் பின்னரான அச்சுறுத்தல்களின் போது இந்தத் தனித்துவக் கட்சிகள் அவர்களைப் பாதுகாப்பதில்தான் கவனம் செலுத்தினார்களே தவிர, மக்களின் நலன்களையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் விடயங்களில் செயற்படவில்லை என்பது முஸ்லிம் சமூகத்தின் உள்ளங்களில் ஆறாத வடுவாக இன்னுமுள்ளது.
அந்த நேரத்தில் முஸ்லிம் அல்லாத பிற தேசியக் கட்சிகளின் உறுப்பினர்கள் என்ற வகையில் பாராளுமன்றத்தில் அதிகமாக முஸ்லிம் சமூகத்தினுடைய பாதுகாப்பு பற்றியும், அச்சமூகத்துக்கு இழைக்கப்படும் திட்டமிடப்பட்ட அரசியல் ரீதியான அநீதிகளை சுட்டிக்காட்டி எதிராக குரல் கொடுக்க முன்வந்தது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் ஜே.வி.பி மட்டுமே.
முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த திட்டமிட்ட அநீதிகளுக்கு எதிராக பாராளுமன்றத்திலும், அதற்கு வெளியிலும் பகிரங்கமாக செயற்பட்ட அரசியல் சக்தியாக இருந்ததும் மக்கள் விடுதலை முன்னணியே ஒன்றே.
தேர்தல் சமயத்தில் மாத்திரம் இன, மத உணர்வுகளைத் தூண்டி, "சமூகப் பாதுகாப்பு" என்ற கோஷத்தை முன்வைத்து வாக்குகளைப் பெற்றுக்கொண்டு, தேர்தல் முடிந்ததும் மக்களைக் கைவிடுவதை தனித்துவ கட்சிகள் வாடிக்கையாக கொண்டிருந்தனர். கிழக்கின் பெரும்பாலான முஸ்லிம் கிராமங்கள் முறையான வாழ்வாதார மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளின்றி இன்னும் அவல நிலையில் காணப்படுகின்றன.
காலங்காலமாக இன அடையாளத்தை மட்டும் வைத்து அரசியல் செய்த கட்சிகளை விடுத்து, தற்போதுள்ள இளைய தலைமுறையினர் இன, மத எல்லைகளைக் கடந்து தேசிய அரசியல் நீரோட்டத்தை (உதாரணமாக தேசிய மக்கள் சக்தி - NPP) ஆதரிக்கத் தொடங்கியுள்ளனர். ஊழலற்ற, பொதுவானதொரு அரசியல் மாற்றமே தங்களின் வாழ்வை மேம்படுத்தும் என அவர்கள் நம்புகின்றனர். சுருக்கமாகக் கூறின், "உரிமைகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி உசுப்பேற்றி, வாக்குகளைப் பெற்று, அதன் மூலம் தங்களின் பதவிகளைத் தக்கவைக்கும்" முஸ்லிம் தனித்துவ கட்சிகளின் தேர்தல்கால ஓரங்க நாடகங்களில் தெளிவடைந்த சமூகமாக முஸ்லிம் சமூகம் மாறத்தொடங்கி உள்ளது.
இந்த நிலையில், தோற்கடிக்கப்பட்ட பல பாரம்பரிய அரசியல்வாதிகள், கடந்த காலங்களைப் போலவே தற்போதைய NPP அரசாங்கத்துடன் ஏதேனும் ஒரு வழியில் இணைந்து கொள்ளலாம் அல்லது ஆதரவு வழங்கி தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என்ற பகற்கனவு காண்பதில் நேரத்தை அதிகம் செலவு செய்ய தொடங்கியுள்ளார்கள்.
இன்னொரு பக்கத்தில் இவர்களுக்கு நேரடி அரசியல் களத்தில் செல்வாக்கு குறைந்துள்ளதால், ஜம்மியத்துல் உலமா, தேசிய சூறா கவுன்சில் (NSC) போன்ற சிவில் மற்றும் மத அமைப்புகளின் பின்னால் ஒழிந்து கொண்டு தங்களது அரசியல் கருத்துக்களை சமூக மயமாக்க முயற்சிக்கின்றார்கள். இதன் மூலம் தேசிய மக்கள் சக்தியினுடைய( NPP ) முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மறைமுக நெருக்கடிகளை கொடுக்கவும் முற்படுகின்றனர். ஆகவே முஸ்லிம் சமூகத்தில் உள்ள நடுநிலை சிந்தனையாளர்களும், இளைஞர் சமூகமும் இவர்கள் விடயத்தில் மிகக் கவனமாக செயற்பட வேண்டிய தேவை எழுந்துள்ளது.
70%-க்கும் அதிகமான முஸ்லிம்கள் தேசிய மக்கள் சக்திகக்கு NPP வாக்களித்தும் முஸ்லிம் சமூகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்து, தங்களின் இழந்த வாக்கு வங்கியை இவர்கள், மீண்டும் சரிசெய்து கொள்ள முயற்சிக்கின்றனர். இதன் மூலம் முகவரி இழந்துள்ள "முஸ்லிம் தனித்துவ அரசியல் கட்சிகள்" சமூகத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை மீண்டும் நிரூபிக்க அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
சுதந்திர விடுதலைக்குப் பின் இலங்க வரலாற்றில் முதன்முறையாக தேசிய மக்கள் சக்தியின்( NPP) புதிய அமைச்சரவையில் முஸ்லிம் சமூகத்திற்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை என்பதை தோற்கடிக்கப்பட்ட முஸ்லிம் தலைவர்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தும் ஆயுதமாக மாற்றியுள்ளார்கள். இவர்களைப் போன்றவர்கள் கடந்தகால அரசாங்கங்களில் அமைச்சரவை அந்தஸ்த்துடன் இருந்த பொழுது முஸ்லிம் சமூகத்துக்கு என்ன நடந்தது என்பது தற்பொழுது இவர்களுக்கு மறந்து போய்யுள்ளது
கிழக்கு மாகாண முஸ்லிம்களின் அரசியல் மாற்றம் என்பது, தேசிய கட்சிகளிடம் தமது பேரம் பேசும் சக்தியை இழந்து நிற்கும் தற்போதைய நிலையில், சுயநல அரசியலைத் தாண்டி சமூகத்தின் நிரந்தரப் பாதுகாப்பு, இழந்த காணிகளை இன்னுமொரு தரப்பினருக்கு பாதிப்பில்லாமல் நியாயமான முறையில் மீட்டெடுத்தல் மற்றும் சுயநிர்ணய உரிமைகளை மையப்படுத்திய உறுதியான புதிய தலைமைத்துவத்தை உருவாக்குவதில்தான் தங்கியுள்ளது.
1980களில் உருவான தனித்துவ அரசியல் தற்காலத்தில் அதன் வீச்சை இழந்துவிட்ட நிலையில், புத்திஜீவிகள் மற்றும் புதிய சிந்தனையாளர்களைக் கொண்ட ஒரு புதிய, நேர்மையான தலைமைத்துவத்தை அல்லது சரியான தேசிய கொள்கை சார் அரசியலை நோக்கி முஸ்லிம் இளைஞர் சமூகத்தை வழி நடாத்துவது முஸ்லிம் புத்திஜீவிகளின் மிகப் பெரும் கடமையாக உள்ளது.
இது கிழக்கில் பெரும் பான்மையாக வாழும் தமிழ் மக்களோடு குறுகிய அரசியல் இலாபங்களுக்காக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட முரண்பாடுகளைக் களைந்து, இரு சமூகங்களுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினைகள் மற்றும் நிர்வாகச் சிக்கல்களைப் பேசித் தீர்த்துக்கொள்ளும் அரசியல் முதிர்ச்சியின் வெளிப்பாடு தேசியத்துக்கு நன்மையளிக்கும் சந்தர்ப்பமாக அமையும்.
கிழக்கு சூழலில் தமிழ் பேசும் மக்கள் என்ற பொதுவான தளத்தில் நின்று, சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக இரு சமூகத் தலைமைகளும் புரிந்துணர்வுடன் செயற்படுவது எந்த அளவு காலத்தின் தேவையாக உள்ளதோ; அந்தளவு இரு சமூகங்களும் அதில் வெற்றி காண்பதற்காக சரியான தேசிய கொள்கை அரசியலில் பயனிப்பதாற்காக தேசிய மக்கள் சக்தியுடன்(NPP) கைகோர்த்து ஒற்றுமையுடன் தங்களை நிலைநிறுத்திக் கொள்வது மிக முக்கிய தேவையாகவே உள்ளது.
தென்னிலங்கை அரசியல் மாற்றங்களைச் சரியாகக் கணித்து, முஸ்லிம்கள் தங்களின் தனித்துவத்தினையும்,அடையாளத்தினையும், பாதுகாத்துக் கொண்டே தேசிய அரசியலில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய வியூகங்களை வகுக்க வேண்டும். அரசியல் பதவிகளை மட்டும் நம்பியிருக்காமல், கிழக்கு பிராந்தியத்தின் கல்வி மற்றும் சுயதொழில் பொருளாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்துவதன் மூலமே நீடித்த அரசியல் மாற்றத்தை உருவாக்க முடியும்.
அதற்கு சரியான பாதை என்பது, தேசிய மக்கள் சக்தி எனும் ஜனநாயாக வட்டத்துக்குள் சமத்துவ அரசியல் கொள்கை ஊடாக ஒருங்கிணைந்த இலங்கைத் தேசத்தினை கட்டியெழுப்புவதை இலக்காக கொண்டு செயற்படும் மக்கள் விடுதலை முன்னணியின் ஆல விருட்சமான தேசிய மக்கள் சக்தி, ஜனாதிபதி அநுர குமார திசா நாயக்கவின் கரங்களை பலப்பபடுத்தும் விடயத்தில் தோழமையாக இறுதி வரைக்கும் ஒருமித்து செயற்படுவதில் முஸ்லிம் சமூகம் நிலைதவறாமல் இருப்பதே தெளிவான பாதையாக அமையும்.
அஹமட் இர்ஷாட்.
இன்றைய தினகரன்,
03-06-2026