UK Media - Hussainiyapuram

UK Media - Hussainiyapuram STAY UPDATE WITH LATEST NEWS

29/10/2025

ஜனாஸா அறிவித்தல்

மன்னார் பெரியமடுவை பிறப்பிடமாகவும் தற்போது புத்தளம் ஹுஸைனியாபுரத்தில் வசித்து வந்தவருமாகிய அப்துல் மஜிது ஜெமீலா உம்மா அவர்கள் காலமானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அன்னார் காலஞ்சென்ற அப்துல் மஜிது என்பவரின் அன்பு மனைவியும்,

ஜவாமில்,ஜெஸிரா, ஜவாஹிரா,ஜகானா, சியான்,ஹஸ்ஸானா ஆகியோரின் தாயும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று இஷாத் தொழுகையைத் தொடர்ந்து கரம்பை முஸ்லிம் மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

வட மாகாணத்தில் இருந்து முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு 35 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், கடந்த ஒக்டோபர் 25ஆம்...
28/10/2025

வட மாகாணத்தில் இருந்து முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு 35 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், கடந்த ஒக்டோபர் 25ஆம் திகதி கருப்பு ஒக்டோபர் தின நிகழ்வை ஞாபகப்படுத்தும் வகையில் எங்களுக்கு கிடைக்கப்பெற்ற ஆக்கங்களை ஒரு மின் சஞ்சிகை (e- magazine) வடிவில் எமது UK MEDIA தளங்களில் பகிர்ந்து கொள்கிறோம்.

ஆக்கங்களை அனுப்பி வைத்த அனைவருக்கும் UK MEDIA சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

கீழே உள்ள லிங்க் (Link) அல்லது QR Code மூலம் இச்சஞ்சிகையை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

நன்றி!



https://drive.google.com/file/d/1nOGKPXuyIL8f1RZ9V89M_kjDa1xaDEoh/view?usp=sharing

*“_வடக்கு வானின் அழியா வடு_ “*அமைதியின் அத்தியாயம் அழிந்த கதை வடக்கு மண்! அது தமிழரின் தாயகம் மட்டுமல்ல, தலைமுறை தலைமுறை...
26/10/2025

*“_வடக்கு வானின் அழியா வடு_ “*

அமைதியின் அத்தியாயம் அழிந்த கதை வடக்கு மண்! அது தமிழரின் தாயகம் மட்டுமல்ல, தலைமுறை தலைமுறையாய் வாழும் முஸ்லிம்களின் வசிப்பிடம்.
யாழ்ப்பாணச் சந்தைகள், மன்னாரின் உப்பு வயல்கள், வவுனியாவின் வர்த்தகம், கிளிநொச்சிக் கரையோரம் எங்கும் தமிழ் பேசும் இரண்டு சமூகத்தின் பிணைப்பு.
பள்ளிவாசலின் பாங்கொலியும், தேவாலய மணியோசையும், ஆலயத்தின் திருவிழாக் கோலாகலமும் அருகருகே. ஒரு தாய் மக்கள் போலவே உறவாடி வாழ்ந்த காலம். மரவுரிமைச் சண்டைகள் உண்டு, மறக்கக்கூடிய பிணக்குகள் உண்டு, ஆனால், "நீ வேறு, நான் வேறு" என்ற பிரிவினை அன்று இல்லை.
கல்விச்சாலைகளில் ஒரு தாயின் பிள்ளைகளாய், விளையாட்டுத் திடலில் ஒரு அணியின் வீரர்களாய், வியாபாரத் தலங்களில் நம்பிக்கையின் பங்காளிகளாய், அன்றாட வாழ்வில் கலந்திருந்தனர்.ஆனால், வானம் இருண்டது. அரசியல் சூழ்நிலைகள் மாறின.போராட்டத்தின் தகிப்பு, அதிகாரத்தின் கோரமுகம், அந்நியத்தின் கை விரல், ஐயத்தின் நச்சு விதைகள் .சமூக நல்லிணக்கத்தின் வேர்களை மெல்ல அரிக்கத் தொடங்கின. இழப்புகளின் சோகம் ஒரு பக்கம், இலட்சியத்தின் வேட்கை மறு பக்கம், இதற்கிடையில், அப்பாவிச் சிறுபான்மையின் தலை விதி எழுதப்பட்டது. கறுப்பு ஒக்டோபரில் (1990 )வடக்கில் ஒரு மௌனம். வெளியே தெரியாத சதியொன்று அரங்கேறியது. எல்லாத் திசைகளிலும் ஒரு துக்கச் செய்தி, அனல் காற்றாய்ப் பரவியது.
“ஒலித்தது “அந்தக் கொடிய ஆணை. "உடனே வெளியேறுங்கள்!
நம்ப முடியாத கண்கள், செவிமடுக்க மறுத்த உள்ளங்கள் இடி விழுந்த நேரம். என்ன செய்வதென்று தெரியாமல் உறைந்து போயினர். வீட்டின் நிலப் பத்திரங்களை எடுக்க நேரமில்லை,வழக்கம்போல் ஒரு வேளை உணவு சமைக்க நேரமில்லை,கட்டிப்பிடித்து அழக்கூட நிதானம் இல்லை. ஓர் ஆடை, கைச் செலவுக்கு நூற்று ஐம்பது ரூபாய்,அவ்வளவுதான் அனுமதிக்கப்பட்டது! தலைமுறைச் சொத்துகள், உழைத்துச் சேர்த்த செல்வங்கள், குழந்தைகளின் பொம்மைகள், பெண்களின் ஆபரணங்கள் எல்லாமும் பறிபோகும் 'தடைசெய்யப்பட்ட பொருள்கள்' ஆயின.
கணவனைப் பிரிந்த மனைவி, பிள்ளையைப் பறிகொடுத்த தாய், உற்றாரை இழந்த முதியவர், பாடசாலை விட்டு வந்த மாணவர்கள். கண்ணீரும், கலக்கமுமாய் திரண்டனர் வீதியெங்கும்
நடையாய் நடந்தனர், ஒரு தேசமே நடக்கத் தொடங்கியது.
எல்லா எல்லைகளிலும், மனித உரிமைகள் மிதிக்கப்பட்டன. வெளியேறிய முஸ்லிம்களால் வழியெங்கும் கூட்டம். குடிநீரின்றி, உணவின்றி, ஒதுங்க இடமின்றி. புற்று நோய் பிடித்த தந்தையைத் தூக்கிச் சென்ற மகன்,
பாலில்லாக் குழந்தைக்கு நெஞ்சைக் கொடுத்த தாய். ஒரு கணம் திரும்பிப் பார்த்தனர் தூரத்தில் எரியும் தமது சொந்த வீடுகளை பார்த்த கவலையோடு சொந்த நாட்டிலேயே அகதிகளாக நடந்தனர்.
இறுதியில் அடைக்கலம் தேடி அடைந்த இடம் புத்தளம். அதுவரை அறியாத ஒரு புதிய மண்.
மன்னார் முஸ்லிம்கள் புத்தளத்தில் முகாம்களில் அடைந்தனர். அங்கு மீண்டும் ஒரு போராட்டம் உயிர் வாழ்வதற்கான போராட்டம்.
திறந்த வெளிக் கூடாரங்கள், வறுமையின் பிடியில் வாழ்க்கை, நோய்கள், பட்டினி, கல்வி இழந்த குழந்தைகள் இரண்டு வீடு, இருபக்கமும் அகதி நிலை."புத்தளத்தில் வாழ்கிறோம், ஆனால் வடக்கு என் உயிர்!" தலைமுறைகள் கழிந்தன. ஒரு தலைமுறை முகாம்களில் பிறந்தது. வீட்டுப் பத்திரங்கள் இல்லாமை, நிலங்கள் பறிபோன சோகம், அரசுத் திட்டங்களில் புறக்கணிப்பு, சமூகத்தின் ஒதுக்குதல். இந்தக் காயங்கள் ஆறவே இல்லை. "வடக்கு முஸ்லிம்" என்ற ஒற்றை வார்த்தையே அவர்களின் வேதனை. உறவுக்கான ஏக்கம் 35 ஆண்டுகளாக கடந்துவிட்டன. போர் முடிந்து, ஆயுதங்கள் மௌனித்த பின்னும்,
நியாயத்துக்கான குரல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. மீண்டும் சொந்த மண்ணுக்குத் திரும்பும் கனவு. திரும்பி வந்த சில குடும்பங்கள் அங்கே அவர்களுக்கு வரவேற்பு இல்லை. நில ஆக்கிரமிப்புகள், எல்லைத் தகராறுகள்,அரசியல்வாதிகளின் சுயநலப் பிடுங்கல்கள்.
"வீடு திரும்பினோம், ஆனால் வாழ முடியவில்லை." வடக்கு வானம் இன்னும் அழுவதைக் காணலாம் . வெளியேற்றத்தின் வடு அழியாது. அது வரலாற்றின் பாடம்.
மீண்டும் ஒரு போதும் இத்தகைய கொடுமை நடக்கக்கூடாது அமைதியும், நீதியும், அன்பும் மீண்டும் மலரட்டும்!
மீண்டும் ஒன்று சேரட்டும் நம் சொந்தங்கள்!

_* ANAAS ASNA*_

கிராமத்து வாசம்------------------------------நாலு பக்கம் காடு-நடுவில்நம்ம ஊருஅகன்ற பெரிய குளமும்ஆகா!  சுற்றிவர வயல்வெளிக...
26/10/2025

கிராமத்து வாசம்
------------------------------
நாலு பக்கம் காடு-
நடுவில்நம்ம ஊரு
அகன்ற பெரிய குளமும்
ஆகா! சுற்றிவர வயல்வெளிகள்..பாரு

விவசாய விளைநிலங்கள்
வீடு நிறைய நெல்மணிகள்
ஊரரிசிச் சோறுண்டு
உள்ளம் மகிழ்ந்த காலம் அது......

தலை குனிந்த கதிர்கள்
தாக் கத்தி கெண்டறுத்து
உப்பட்டி சேர்த்துப் பல
மாவக்கை பண்ணி...
மாவக்கை பல சேர்த்து
கதிர் கட்டு கட்டி.......
தலையில் சுமந்து
சூடு அடுக்கி வைத்து
கதிரடிக்கும் கழத்தினிலே
காளை மாடுகள் பல
வளையவரும்விந்தை
கண்முன்னே வருகிறது...

வெள்ள மாட்டுவண்டியிலே
விளைச்சலைத்தான் ஏத்திகிட்டு
குடும்பச்சுமை தாங்கிவந்து
நெல் மணிகள் மூட்டை
களாய் வீடு நிறைய
அடுக்கி வைத்து
எத்தனை மூட்டை என்று
எண்ணிப்பார்த்த காலமது...

பசும் பாலை இறுகக்காய்ச்சி
பானையில ஆடை சேர்ந்தால்
கைபோட்டு எடுத்து அதை
ஆ! என்று-... அண்ணாந்து
வாய் பிளந்துஅப்படியே
தின்ற காலம்தொண்டை
நனைகிறது இன்றும்

ஆடு மாடு கோழியுடன்
அத்தனையும் வளர்த்து நிதம் முட்டையுடன் இறைச்சியுமாய் விற்றுப் பெற்ற புதிய பணம்
விரிகிறதுநெஞ்சினிலே.......

காட்டிற்கு போய் வாப்பா வேட்டையாடி ..மான்,
மரைய சுட்டு வீழ்த்தி..
காய்ந்த இறைச்சிகளை
வீட்டிற்கு சுமந்து வந்து
மூலையிலே கொட்டிக்
குவித்து வாய் நிறைய
வயிறு நிறைய சாப்பிட்ட
காலம் விரிகிறது நெஞ்சில்..

தேடித் தேடிக் காட்டினிலே
தேன் எடுக்கச்செல்லும்
அப்பா குடம் குடமாய்த்
தேன் சேர்த்து தெவிட்டு மட்டும்
தின்னத்தந்த காலமது
நாவு இனிக்கிறது இன்றும்

குளத்தில குதித்துப் பாய்ந்து
குளியோடி விளையாடி
கண் சிவந்து போனாலும்
கரைக்கு வர மனமின்றி
வாழ்ந்த காலமது.......

மிளகாய் தோட்டத்துடன்
வாழை, பலா, மாங்கனிக்கு
பேரு போன ஊரு நம்ம
பெரியமடுக் கிராமம்தானே

தொண்ணூறின்பின்னே
நான் தொலைத்த அந்தக்
கிராமத்து வாசம் இண்றும்
தேடு கி�

தொண்ணூறின்பின்னே
நான் தொலைத்த அந்தக்
கிராமத்து வாசம் இண்றும்
தேடு கிறேன் மீண்டும்.......

இதுவும்கடந்துபோகுமென்பர்
35 வருடத்திற்கு முன் தொலைத்து விட்ட ஊர் மீண்டும்உருவாகி விட்ட
காலம்இன்று வந்தரிச்சி

கல்வியிலே சிறக்கிறது
விவசயம் சிறப்படைகிறது
நீர்வசதி மின்சாரம் கலாச்சாரம்
இன மத பேதமற்ற வாழ்க்கை
சமாதானக் கொடி பறகின்றது

சிறந்த கிராமத்தை மீண்டும்
பெற்று விட்டபோதினிலும்
எம்மில் எத்தனை பேர்
மரணித்துப் போயிற்றனர்

எமக்கு மீண்டும் சென்று
வாழ வயதே போய் விட்டதே..
தேடுகிற கிராமம் திரும்பிடுமா?கற்பனையில் கனவில்
மீண்டும் தேடுகிறேன் தினம்
எம்ம ஊர் பெரியமடுவ..

......... றுவைதா மதீன்.....

"இளமையில் கல்வி சிலையில் எழுத்து" என்பார்கள். ஆனால் எம் சிறு பிராயம் "இளமையில் பயம் தலையில் எழுத்து" என்றாகியது. கருப்பு...
25/10/2025

"இளமையில் கல்வி சிலையில் எழுத்து" என்பார்கள். ஆனால் எம் சிறு பிராயம் "இளமையில் பயம் தலையில் எழுத்து" என்றாகியது.

கருப்பு ஒக்டோபர் என ஆதங்கப்படும் நாம் அதற்கு முந்திய பாசிச பயங்கரவாத ஒடுக்குமுறையை சிலாகிக்க மறந்து போகின்றோம். அந்தக் காலம் 1989, 1990 காலப்பகுதிகளில் என நினைக்கின்றேன். அந்தப் பெரிய எமது ஊரில் 14 வயதிற்கு மேற்பட்ட எந்த ஆண் பிள்ளையையும் காணக் கிடைக்கவில்லை. துப்பாக்கி றவையின் அடக்கு முறைக்குள் நம் வாலிபர்கள் கொல்லப்படலாம் அல்லது கட்டாயப் புலிப் படை ஆட்சேர்ப்பிற்குட்படலாம் என்ற பயப் பீதியில் ஒன்றோன்றாய் நம் இளைஞர்கள் ஊரைவிட்டு தெரியாமல் தெற்கு நோக்கிப் புறப்பட்டதோடு எம் அகதி வாழ்க்கை ஆரம்பமாகியது. "கருப்பு ஒக்டோபர் எனும் கரும்புள்ளியில் அது வலுவானது" இளைஞர்கள் இன்றிய அந்தக் காலம் இருண்ட நாட்களாகவே எனக்கு தென்பட்டது.

பின்னேரத்தில் மைதானங்களில் foot ball, volley ball என கலகலத்த நாட்கள் காணமல் போயின. நாம் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் எதோ விளையாடினோம். கலகலப்பை காணவில்லை.

வயல், தோட்டம் என வரிந்து நிற்கும் வாலிபர்கள் இன்றி தந்தையர்கள் அநாதைகளாக நின்றார்கள். பிள்ளைகளை முதல் முதலாகப் பிரிந்த அன்னையர் தவித்த தவிப்பு பேச்சுப் புலனுக்கு அப்பாற்பட்டவை.

ஊரில் கடும் பஞ்சம். தோட்டதிற்கு நீரிறைக்க மண்ணேண்ணை இல்லை. அத்தியாவசியப் பொருட்களுக்குத் தடை. ஒளியற்ற இரவுகளுக்குள் பயம் மட்டும் தாராளமாய் பரவியிருந்தது. தென்னாலி ராமன் கமல் போல பயப்படுவதற்கு பயப்படவில்லை. எங்கும் பயம். எதிலும் பயம். எப்போது என்ன நடக்குமென்று தெரியாத நடைப்பிண வாழ்க்கை. பள்ளியின் கணீர் பாங்கொலி மட்டும் மனதை திடப்படுத்தியது. படைத்தவன் படியளப்பான் என்று.

பாடசாலை எப்போதாவது நடக்கும். எப்போதும் மூடப்படும். இது கறுப்பு ஒக்டோபருக்கு முன் நாம் சுமந்த வலிகள்.

வலிகளை விட ரணங்கள் வலிமையானதோ!

இந்த நேரத்தில்தான் பாங்கொலி சொல்லும் பள்ளி மைக்கில்
"அனைத்து வாகனங்கள் உட்பட சொத்துக்களை கொண்டு வந்து பள்ளிக் கூத்தில் ஒப்படைத்து ஊரை விட்டு வெளியேறுங்கள்" புலிகள்

என்ற ஓசை காற்றில் மிதந்தது. 12 வயதில் நான் உழைத்து வாங்கிய சைக்கிளை ஓடிச் சென்று ஒப்படைத்து 3km நடந்து வீடு வந்த அந்த நேரம் ரணங்கள்.

" வலிகளை அனுபவித்தோம். ரணங்களைச் சுமக்கின்றோம். வாழ்ந்துதான் காட்டுகின்றோம் வல்லவன் அருளாலே"

" நாங்கள் பீனிக்ஸ் அல்ல ரணங்களைச் சுமக்கும் வழிகாட்டிகள்"

இளைய உறவுகளுக்கு சமர்ப்பணம்.

அப்துல் காதர் றாசிதீன்

பெரிய மடுவின் பசுமையான நினைவுகளும் இடப்பெயர்வுகளும்....சொர்க்கமே என்றாலும் நம் ஊரைப் போல வருமா சொந்தமே என்றாலும் நம் நாட...
25/10/2025

பெரிய மடுவின் பசுமையான நினைவுகளும் இடப்பெயர்வுகளும்....

சொர்க்கமே என்றாலும் நம் ஊரைப் போல வருமா சொந்தமே என்றாலும் நம் நாட்டைப் போல வருமா

கவிஞனின் கவி வரிகள் ஆமினாவின் மனதில் சிறகடிக்க அந்த அழகிய பெரியமடு கிராமத்தின் இன்ப நினைவுகளில் லயித்துப் போய் தன்னையே மறந்திருந்தாள் ஆமினா. அரிசியை எடுத்து அரிச்சி அடுப்புல வை என சட்டென கேட்ட அம்மாவின் குரலில் திடுக்கிட்டு நிமிந்து சுய நினைவிற்கு வந்தாள். ஆமினாவின் கண்களில் கண்ணீர் மல்க அந்தக் கால இன்பத் துன்பங்களில் லயித்துப்போனாள்.

ஆமாம் அழகே எப்போதும் பச்சை பசேலென காட்சி தரும் கிராமம். மன்னாரின் தலைநகரில் இருந்து சங்குப்பிட்டி பாதையில் 15-ம் மயில் கல்லில் கிழக்கு பக்கமாக எட்டு மைல் சென்று கிராமத்துக்குள் நுழையலாம்.90 வீதமான மக்கள் விவசாயத் தொழிலையே மும்முகமாக ஈடுபட்டனர்.

மன்னார் மாவட்டத்தில் மூன்றாம் இடத்தை வகிக்கும் பெரியமடுக் குளம். சுமார் 1000 ஏக்கர் நீர் பாசன நீரேந்து பரப்பைக் கொண்டது. 1956ஆம் ஆண்டு இக் கிராமம் புதிய குடியேற்ற கிராமமாக உருவெடுத்தது.


ஊரெங்கும் மேட்டுப்பயிற் செய்கை அதைத்தொடர்ந்து கிராமத்துக்கு வெளியே பச்சை பசேலான விரிந்து கிடக்கும் நெற்பயிர் வயல்கள். 7 ஆம் வாய்க்கால் வரை நீர்ப்பாசன வாய்க்கால்கள் பிரிக்கப்பட்டு சலசலவென நீர் பாய்ந்து செல்லும். தண்ணீர் பாய்ச்சல்,களையகற்ற, வேளாண்மை அறுவடை செய்ய என எப்போதும் மக்கள் வயல்களில் உலாவித் திரிவர். மீனாட்சி, வள்ளியம்மா, நசீரா, காமாட்சியென வயலில் களைகளை அகற்ற வென பெண்கள் கூட்டமும் சிரித்து மகிழ்ந்து குனிந்து நிமிர்ந்து வேலை செய்து கொண்டிருப்பர்.

இக் கிராமத்தில் 95 சதவீதமான மக்கள் இஸ்லாமியர்கள். மீதமுள்ள விகிதத்தினர் கிறிஸ்தவம், சைவம், பௌத்த சமயம் என மக்கள் கலந்து ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர். எல்லோரும் ஒற்றுமையாக சமய கலாச்சாரங்களை பின்பற்றி சந்தோஷமாக வாழ்ந்த காலமது. காலை தொடக்கம் மாலை வரை குடு குடு பட படவென வாட்டர் பம்ப் சத்தம் மிளகாய் தோட்டங்களில். ரசணையை ஒலிக்கும். குடும்பத்தில் அனைவரும் இத்தொழிலிலேயே பாடுபடுவர். வள்ளியும் மல்லிகாவும் நசீராவும் பாத்திமாவும் என கூட்டம் கூட்டமாக மிளகாய் பழம் பறிக்கவென கூடை மேலே கூடை வைத்து இடுப்பிலே சாரியை செருகிக் கொண்டு ஆடிப்பாடி மகிழ்ந்து கதை பேசி பாதையில் செல்வர்.


நெல் விதைப்பிற்காக மாடு ரெண்டு பூட்டி கலப்பை ஏற்றி காலையிலேயே காதர் காக்கா சலங்கை மாடு பூட்டிய வண்டியில் சவாரி செய்வார். சலசலவென எங்கும் ஓடைகளும் பெரிய வாய்க்கால்களும் பாய்ந்து கொண்டிருப்பதால் ஊத்தை உடுப்பு மூட்டையை இறக்கி மதகுகளிலேயே தப்பி பெண்கள் துவைப்பர். சின்னப் பிள்ளைகள் முட்டை கட்டி ஓடி வந்து குதித்து வாய்க்காலில் முங்கி முங்கி குளித்து தண்ணீரிலே விளையாடி மகிழ்வார்கள்.

விவசாயிகள் பலர் முதுகிலே சட்டையும் இல்லாமல் மண்வெட்டியை தோளிலே சுமந்தபடி சந்தி சந்தியாய் நின்று வயல் வேலைகள் பற்றி கதைத்துக் கொண்டிருப்பர், சிலர் நையாண்டி கதைகளையும் கதைத்து சிரித்து மகிழ்வர்.

புற் புதர்களும் பற்றைக் காடுகளும் நிறைந்த வளமான நில புலம் காணப்பட்டதால் கால்நடைகளுக்கு பஞ்சமில்லை. எல்லா வீடுகளிலும் மாட்டுப் பட்டி இருக்கும். கன்று குட்டிகளை கட்டி பால் கறந்து குடிப்பர். பலர் ஆட்டுப்பட்டிகளும் வைத்து வருமானம் பெறுவர். காடுகளில் புல் மேய்ந்து காட்டருவிகளில் நீர் அருந்தி மாலையில் வரிசை வரிசையாக வீடு திரும்பும் கால்நடைகள் ஏராளம்.

கிராமத்தில் வாழை இலையில் சோறு போட்டு திருமண பந்தங்களும் ஆடிப்பாடி சம்பிரதாய முறைப்படி முகூர்த்தம் பார்த்து வெகு விமர்சையாக த நடக்கும்.

இந்நிலையில் வாழ்க வளமுடன் என்பதற்கேற்ப நிம்மதியாய் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தபோது கறுப்பு புள்ளி விழுந்தால் போல் அந்த பாசிச பயங்கரவாதம் நாடளாவிய ரீதியில் உருவெடுத்தது. இது வளர்ந்து வளர்ந்து 1985 ஆம் ஆண்டிற்கு பிறகு மிக மோசமான செயல்பாடுகளாக மாறியது. பலர் காரண காரியம் இன்றி சுட்டுக் கொல்லப்பட்டார்கள். பலர் வாழ முடியாமல் வேறு மாவட்டங்களுக்கு தப்பிச் சென்றனர். விசேடமாக வடமாகாணத்தில் அதன் தாக்கம் அதிகமாக இருந்தது. எங்கு பார்த்தாலும் துப்பாக்கி கலாச்சாரம் மேலோங்க தொடங்கியது. இறுதியில் இது முஸ்லிம்களை குறி வைத்து அவர்களை சொந்த இடங்களை விட்டு விரட்டப் போவதாக கதைகள் வரத் தொடங்கியது. ஆயினும் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இருந்த ஒற்றுமையான உறவால் யாரும் இதனை நம்பவில்லை. ஆயினும் அது வரவர வலுப்பெற்று 1990 ஆம் ஆண்டு அளவில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கப்பட்டது. முஸ்லிம்களின் சொத்துக்கள் அனைத்தும் பயங்கரவாத குழுக்களிடம் பாரம் கொடுக்கப் பட வேண்டி இருந்தது. முஸ்லிம்கள் என்ன செய்வதென தெரியாது அங்கும் இங்கும் அங்கலாய்த்து திரிந்தனர். நகைகளையும் பணங்களையும்கொண்டு போக முடியாத எனவும் கதைகள் உருவாகின.

அவ்வாறு அறிந்த நேரத்தில் அது ஒரு கடுமையான மழை காலம். 1990 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் திகதிக்குள் முஸ்லிம்கள் தங்களது சொந்த வாழ்விடங்களை விட்டு வெளியேற வேண்டும் என மூன்று நாளைக்கு முன்பதாக பள்ளி வாசல்களின் ஒலிபருக்கிகள் வீரா வேசத்துடன் ஒலிபெருக்கின.

அப்பாடா, என்ன செய்வது எங்கே போவது எனத் தாயும் தந்தையும் அங்கும் இங்கும் ஓடினர். என்ன செய்வது? என்ன செய்வது?எங்கே போவது என்று மக்கள் வீதிகளில் திண்டாடினர். வானமும் காற்றும் தாவரங்களும் அமைதியாகின. வானம் கண்ணீர் ஊற்றுவதைப் போல் மழையை பொழிந்து கொண்டிருந்தது. பறவைகள் அமைதியாகின. மரங்கள் ஆடாமல் அசையாமல் உறங்கின. நாய்கள் செய்தி அறிந்து அங்குமிங்கும் ஓலமிட்டன. மாடுகள் காட்டில் இருந்து வந்து வீட்டு முற்றத்தில் என்றும் இல்லாதவாறு படுத்திருந்தன. தந்தை தாயை மறந்தார். காதலனும் காதலியும் வாடி நின்றனர். வீடுகளில் அடுப்பு மூட்டப்படவில்லை. குழந்தைகள் கவனிப்பாரற்று ஓலமிட்டனர். இளைஞர்கள் பைத்தியம் பிடித்தாற் போல் அலைந்து திரிந்தனர். எவ்வாறு போவது, எங்கே போவது, கைகளில் பணம் இல்லை, நடக்க முடியாத வயோதிபர்கள், குழந்தை பெறுவதற்குரிய காலத்தில் உள்ள நிறை மாத கற்பிணிகளும் கலங்கி கண்ணீர் வடித்தனர். பணமும் நகையும் வெறுத்துப் போயின.
சிலர் ஓவன வாய் விட்டு அழுது புலம்பினர். உறவினர்கள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துத் தழுவினர்.
வயோதிபர்கள் நின்ற இடத்திலேயே மயக்க முற்றனர். சிலர் பாதைகளில் கூடி கூடி அழுது வடித்தனர்.
தாய்மார் பிள்ளைகளுக்கு பால் கொடுக்க மறந்தனர். தாய் பிள்ளையை வெறுத்தால். மங்கையர்கள் கண்ணீர் மல்க அங்கும் இங்கும் செய்தி அறிய ஓடினர். கதறி அடித்து அழுது புலம்பினர். காளையர்கள் செய்வதறியாத மயக்கத்தில் வாடி வதங்கினர். நடக்க முடியாத வயோதிபர்கள் இடி இடித்தார் போல் உறைந்திருந்தனர். நிறை மாத கர்ப்பிணிகள் இரத்த அழுத்தத்துக்குள்ளாகினர். தாய் தந்தையரின் சோகம் கண்டு சிறுவர்கள் அழுது நின்றனர். சூரியன் வெயிலடிக்க வெட்கப்பட்டு மந்தாரமாக காட்சி தந்தது. மழை அடை மழையாக சோக மழை பொழிந்தது. மரங்கள் காற்றசைவின்றி அமைதியாய் நின்றன. மொத்தத்தில் இயற்கையே சோபை இழந்திருந்தது.

இன்னும் வீடு வாசல், சொத்துக்கள், நிலபுலங்கள், வாகனங்கள், கால்நடைகள், யாவற்றையும் விட்டு எங்கே போவது எப்படிப்போவதென்று மக்கள் ஓவெனப்புலம்பினர்.
கண்ணுறங்கும் நேரத்திலும் கடுகளவும் தூக்கமில்லாமல் துன்பங்களைச் சுமந்து கொண்டு துரதிஸ்ரராய் நடந்தார்கள். மொத்தத்தில் அனாதைகளைப் போல் ஆக்கப்பட்டார்கள். காலம் செய்த கோலமிது. கல்லும் கணிந்துருகி கண்டவர்கள் மனம் பதறும்படி நடந்து நடந்து களைத்து ஆற்றாமல் அழுது கொண்டு போகுமிடம் எங்கேயென்று புரியாமல் அங்கலாய்த்து

1990 ஆம் ஆண்டு 30 ஆம் திகதி அதிகாலையிலே எல்லோரும் பள்ளி வாசலிலே ஒன்று கூடி அழுது புலம்பி நல்ல வழியை எங்களுக்கு காட்டுவாயாக என்று பிரார்த்தித்தவர்களாக லொறிகளிலும் வேன்களிலும் பசி பட்டினியோடு குடும்பம் குடும்பங்களாக பாலம்பிட்டி மடுக்கோவில் வழியாக பண்டிவிரிச்சான் கிராமத்தை அன்றிரவு வந்தடைந்த போது தங்குவதற்கு இடமில்லாமல் மக்கள் அங்குமிங்கும் இருந்த கட்டிடங்களின் தாழ்வாரத்தில் நித்திரையில்லாமல் ஒதுங்கி இருந்து அடுத்த நாள் காலையில் சேறும் சகதியும் நிறைந்த பாதையில் மூட்டை முடிச்சிகளுடனும் பிள்ளை குட்டிகளுடன் மழையோடு மழையாக நடந்து நடந்து வந்து வவுனியா மன்னார் பிரதான வீதியை அடைந்து அங்கிருந்து திரும்பவும் கால் நடையாகவும் கிடைக்கின்ற லொறிகளிலும் ஏறி ஏறி வவுனியா பம்பமடு சந்தியுனூடாக மீண்டும் சுமார் 5 மைல்கள் நடந்து சேறு நிறைந்த குறுக்குப் பாதை வழியாக வவுனியா பூந்தோட்ட கிராமத்திலுள்ள பாடசாலைக்கட்டிடத்திலும் ஏனைய பொதுக்கட்டிடங்களிலும் இரண்டாவது இரவை இம்மக்கள் கழித்தனர். இதே போல ஏனைய மக்களும் நடக்க முடியாமலும் வயோதிபர்களையும் குழந்தைகளையும் சுமந்து வந்தவர்கள் இடையிடையே வேறு கிராமங்களிலும் இடைநடுவே தங்கி இருந்தனர். அந்த இரண்டாவது நாளும் உணவோ நீரோ கிடைக்கப்பெறவில்லை.

இப்பிரயாணத்தின் மூன்றாவது நாள் பூந்தோட்டம் கிராமத்தில் இருந்து மீண்டும் சுமார் 8 மைல் தூரம் நடந்து வவுனியா நகரை அடைந்த போது அரசாங்கத்தினால் அகதிகளை பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டு சமைத்த உணவுகளும் வழங்கப்பட்டது.

இரண்டு நாட்களுக்கு பிறகு மீண்டும் எங்கே போவது என்று தெரியாமல் எமது முஸ்லிம் மக்கள் வாழுகின்ற புத்தளம் மாவட்டத்தை நோக்கி கூடுதலான மக்கள் தாங்களே லொறிகளையும் ஏனைய வாகனங்களையும் பிடித்து புத்தளம் மாவட்டத்தை வந்தடைந்த போது எமது உறவுகள் செய்தியறிந்து வந்த மக்கள் அனைவரையும் பாடசாலைகளில் தங்க வைத்து தேவையான உணவுகளையும் தண்ணீரையும் வெளிச்ச வசதியையும் மல கூட வசதிகளையும் மக்களுக்கு வழங்கி உதவி புரிந்தனர்.இந்த நிகழ்வில் புத்தளம் வாழ் மக்களும் பள்ளி வாசல் சபைகளும் அரசியல் வாதிகளும் இணைந்து அகதி மக்களுக்கு உதவியதை என்றும் மறக்க முடியாததாகும்.இதே போல கொழும்பு,அநுராதபுரம்,குருநாகல் போன்ற மவட்டங்களிலும் அகதிகளாக மக்கள் தஞ்சமடைந்தனர்.

இடம்பெயர்ந்த மக்களில் 90 வீதமானோர் புத்தளம் மாவட்டத்தில் தஞ்சமடைந்ததுடன் காலப்போக்கில் வேறு வேறு கிராமங்களில் சென்று அகதி முகாம்களை அமைத்து வாழ்ந்து சுமார் 5,6 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த இடங்களுக்கு திரும்பி செல்ல முடியாத நிலையில் ஊர்,ஊராக சேர்ந்து சிறு சிறு காணிகளை வாங்கி அரசாங்கத்தினதும் நிறுவனங்களினதும் உதவியுடனும் அடிப்படை தேவைகளையும் பெற்று வாழ்ந்து வருகின்றனர்

*PMM.JIFRY*

25/10/2025

கறுப்பு ஒக்டோபர்

செந்நீரை கண்ணீராக்கி, இதயங்களை இறுக்கி பிழிந்து,
உள்ளங்களை சுக்குநூறாக உடைத்தெறிந்து,
உயிர் மட்டும் பிரியாமல்,
எமது உறவுகளையும், உடமைகளையும் பிரிய முடியாமல் பிரிந்த துயரம்.
செல்லும் திசைமட்டுமல்ல, செய்வதென்னவென்றறியாது திகைத்து நின்ற தருணம்,
இதுவரை ஊரை விட்டு வெளியே செல்லாதவர்களும் ஊரை விட்டே வெளியேற்றிய துயரம், வானம் பொழிய உழவு இயந்திரத்தில் நனைந்த கோழிகளாய் குளிரில் நடுங்கிய அவலம்,
எம்மை ஆளாக்கிய பாடசாலையும் வணங்கிய வணக்க ஸ்தலங்களும் அழிந்துபோன அவலம்.
சொத்துக்களின் சூறையாட்டம், சில மனங்களின் சுகபோகம், சகோதர இனங்களின் பெரும்பகுதி பதை பதைத்த தருணம்,
செய்த குற்றம் யாதென்று அறியாது குற்றுயிராய் இடம் பெயர்ந்த வரலாறு.
மீண்டும்,
பிறந்த மண்ணுக்கு திரும்பி வருவோம் என்று மீழாத் துயரில் ஆழ்ந்து,
மாண்டு போனோர் ஏராளம். நாம் பிறந்த மண்ணில் பிறக்காத எம் குழந்தைகள் இம்மண்ணை மறந்த ஒரு மாபெரும் சலனம். மொத்தத்தில் சல்லடையாய் போல எம் உள்ளங்கள் சாந்திக்காய் பிரார்த்திக்கின்றன.

A. M. ஹலீம் மஜீட்

25/10/2025

எப்போதும் போகும் பேருந்து அதிலே நமக்கென ஒரு இருக்கை

பேருந்து நிறுத்ததம் காலை உணவு டீக்கடை

இப்படி அன்றாடம் வாழ்வில் ஏற்படும் நிகழ்வுகளில் சிறிய மாற்றம் வந்தாலும் அந்த நாளே ஏதோ போல் இருக்கும்

இப்படி இருக்க காலையில் செய்தியாம் மாலையில்

வீடு உணவு எமது தெரு செல்லப்பிராணி வீட்டுத்தோட்டம் விளையாட்டு மைதானம் பாடசாலை
வனக்கஸ்தலம் நண்பர்கள்

வயலிலே போடப்பட்ட மண்வெட்டி நாளைக்கு தருவதாய் வாங்கிய மிளகாய் தூளும் சீனியும் பக்கத்து வீட்டில் குளத்தில் போடப்பட்ட வலை தெப்பம்

வீடு கட்ட கல்யாணத்துக்காக படிப்பிற்காக வேலைக்காக இப்படி ஆயிரம் தேவைகளைக் கொண்டு அன்றாடம் உறங்கி விழித்து ஊரைவிட்டு எல்லோரும் மாலை வெளியேற வேண்டும் என்பதை

வெளியேறிய எங்களை நினைத்தால் இன்றும் இப்போதும் புதுமையாகவும் வியப்பாகவும் இருக்கின்றது

Raza marlin

25/10/2025

கவிதை
கறுப்பு ஒக்டோபர்
_________________________

இயற்கை எழிலும்
இதமான பொழுதும்
இரண்டரக்கலந்த
இப்பெரியமடு மண்ணிலே
இதயத்தை துளைத்து
இருளாய் - மாறியது
இரும்பர்களால் ஆன
இருட்டான அந்நாள்..!!

அரவணைக்க யாருமின்றி
அனைத்தும் இழந்து
அகதிகளாய் - நாமெல்லாம்
அடிமைச்சிறையில்
அகப்பட்டு
அள்ளி வீசப்பட்டோம்
அங்குமிங்குமாய்
அன்றொரு நாளிலே..!!

உறவுகளை தொலைத்து
உணர்வுகளை புதைத்து
உண்ண உணவின்றி
உடுத்த உடையின்றி
உறங்க உறையுளின்றி
ஊசலாடினோம் - நாம்
ஊர்க்குருவிகளாய்..!!

கட்டிவைத்த எங்கள்
கனவுகள் கலைந்தது
கற்பனைகள் உடைந்தது
கண்ணெதிரே யாவும்
கானல் நீராய்
காணாமல் - எங்கோ
கரைந்தோடியது....
கல் நெஞ்சக்கார
கயவர்களின் சதியால்..!!

சிந்தை நொருங்கி
சிறகிழந்த
சிட்டுக்குருவிகளாய்
சின்னாபின்னமாகி
சிதைந்து போனது
சிறகடிக்கும்
சிறார்களின்
சித்திர எண்ணங்கள்
அன்றைய - நாளிலே..!!

மல்லிகை மணம் வீசும்
மாசில்லா எம்
மனது - அன்று
மணிக்கணக்காய் - பயத்தில்
மறத்துப்போனது - பலவற்றை
மறந்தும் போனது..!!

பச்சிளம் மழலையும்
பாமர கூட்டமும்
பண்டித பரம்பரையும்
பட்டாசுகளின்
பயங்கரத்தால் - சிறகிழந்த
பட்டாம்பூச்சியாய்
பதறித்துடித்தார்கள் - ஈரமற்ற
இனவாதிகளின்
ஈனச்செயலால்..!!

துரதிஷ்டமாய்
துப்பாக்கி ரவைகளால்
துரத்தியடிக்கப்பட்டு
தூர தேசங்களில்
தூக்கி வீசப்பட்ட - எமக்கு
தூண்களாய் - எம்மோடு
துணை நின்றார்கள் - எமது
தூர தேச உறவுகள்..!!

மீள் குடியேற்றம் எனும் பேரில்
மறுமலர்ச்சியாய்
மலர்ந்த எம் பெரியமடு
மாநிலம் - மீண்டும்
மனதற்ற மாயவர்களால்
மடிந்து போகாமல்
மாசுக்கள் படியா
மல்லிகை மலராய்
மலர்ந்து
மணம் பரப்ப வேண்டுமென
மனதார வாழ்த்துகின்றேன்..!!

Jazeem Simaza Farvin
Periyamadhu
Mannar

25/10/2025

வருடங்கள் கடந்தாலும்
அழியாத வரலாறு.
-------------------------------------------
வடக்கு முஸ்லிம்களின் அகதி வாழ்க்கை ; ஒரு நாள் இரு நாளாகி,இரு நாள் பலநாளாகி, பலநாள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்களாகி இன்றுடன் 35 வருடங்களை எட்டிக் கொண்டு தொட்டுவிட்டது. பலர் இன்றும் தம் அகதி வாழ்க்கையை நினைத்து வருத்தப்பட்டாலும் சிலரே அகதிகளின் வருத்தத்திற்குரிய வரலாற்றை அறிந்திருக்கின்றனர். எனவே ஒவ்வொரு தனிப்பட்ட இலங்கை பிரஜையும் வடக்கு முஸ்லிம்கள், தம் சொந்த பிரதேசத்தை விட்டு எவ்வாறு வெளியேற்றப்பட்டார்கள், ஏன் வெளியேற்றப்பட் டார்கள், எப்போது வெளியேற்றப்பட்டார்கள் மற்றும் அவர்களுக்கு தஞ்சமளித்து தங்குமிடம் கொடுத்து உதவியோர் யார்? என்ற பல்வேறு அம்சங்களை விபரமாக நோக்குவதற்கே இக்கட்டுரை சமர்ப்பணமாகிறது.

இலங்கையின் இனப்பிரச்சினையது பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரை பலி கொண்டுள்ளதுடன் இலட்சக்கணக்கான மக்களை அவர்களின் வாழிடத்தை இழக்கச் செய்து அநாதரவாக்கியது. குறிப்பாக இனப்பிரச்சினையின் தாக்கம் வடக்கு மாகாண முஸ்லிம்களை பாரதூரமாக தாக்கியது. இப்பிரதேசத்தில் வாழ்ந்த முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட உயிர் இழப்பு, பொருள் சேதம் என்பன ஒரு புறம் இருக்க இம்மக்கள் அனைவரும் 1990 ஆம் ஆண்டு வட மாகாணத்தை விட்டு வெளியேற்றப்பட்டமை மிகப் பாரதூரமாக இம்மக்களின் வாழ்க்கையைப் பாதித்தது.

1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 05 ஆம் திகதி இலங்கை இராணுவத்திற்கும்
விடுதலை புலிகளுக்குமிடையில் கடுமையான போர் பரவலாக ஏற்பட்டது. இச்சந்தர்ப்பத்தில் 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி மன்னார்தீவின் சில முஸ்லிம் கிராமங்களில் விடுதலைப் புலிகள் உள் நுழைந்து அம்முஸ்லிம்களின் பணம், நகைகள்
போன்றவற்றை அபகரித்துச் சென்றார்கள். இந்நிகழ்வு மன்னார் பிரதேசத்தில் வாழ்ந்தோருக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. ஏனெனில் இந்நிகழ்வு விடுதலைப்புலிகளின் வழமையான நடவடிக்கைகளுக்கு முரணாக இருந்தது. மன்னார் பிரதேச மக்கள் 22ஆம் திகதி, இவ் இரவு நிகழ்ச்சியின் அதிர்ச்சியிலிருந்து விடுபடுவதற்கு முன்னர் மற்றுமொரு அதிர்ச்சி 23ஆம் திகதி அவர்களுக்கு காத்திருந்தது. அதுவே. "அன்று காலை 10 மணியளவில் விடுதலைப் புலிகளால் மன்னார் தீவின் முஸ்லிம் கிராமங்களில் கட்டாய வெளியேற்றம்" பற்றிய அறிவித்தல் செய்யப்பட்டிருந்தமை ஆகும். இதனால் மன்னார் தீவின் அதிர்ச்சியடைந்த முஸ்ஸம்கள்,சிலர் விடத்தல்தீவு வழியாக மன்னாரை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.

சூழ்நிலை இவ்வாறிருந்தாலும் விடத்தல்தீவு, பெரியமடு போன்ற மாந்தை முஸ்லிம் கிராமங்கள் வழமையான நிலையில் காணப்பட்டன. இப்பிரதேச முஸ்லிம்கள் கட்டாய வெளியேற்றம் பற்றி விடுதலை புலிகளிடம் விசாரித்த போதும் கூட அவ்வாறான அதிர்ச்சி உமக்கு ஏற்படாது என்றவாறான வாக்குறுதி பிரதேசமட்ட விடுதலைப்புலி உறுப்பினர்களால் அளிக்கப்பட் டது. ஆனால் அதே நேரத்தில் வீடத்தல்தீவு, பெரியமடுப் பிரதேச முஸ்லிம்கள் விடுதலைப்புலிகளால் வேறொரு வகையான வற்புறுத்தலுக்கு உள்ளானார்கள். யாதெனில், 23 ஆம் திகதி காலை விடத்தல்தீவு முஸ்லிம்கள் தம்மிடம் பெறுமதியான பொருட்கள் பற்றிய
விபரங்களை எழுத்தில் எழுதித் தரும்படி கேட்கப்பட்டிருந்தார்கள். 24 ஆம் திகதி அவ்வாறு எழுதிக் கொடுக்கப்பட்ட பொருட்களை விடத்தல்தீவு விடுதலைப் புலிகளின் தலைமையகத்தில் சமர்ப்பித்து பற்றுச்சீட்டுப் பெற்றுக் கொள்ளும்படி பணிக்கப்பட்டார்கள். இவ்வாறு விடுதலைப் புலிகளிடம் சமர்ப்பிக்கப்படும் பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் என்ற பொய்யான உறுதி மொழியும் முஸ்லிம்களுக்குக் கூறப்பட்டது.

இவ்வாறான நிகழ்வு முல்லைத்தீவு முஸ்லிம்களுக்கும் ஏற்பட்டது. அதாவது 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் 25ஆம் திகதி விடுதலை புலிகள் தங்களின் வாகனங்களில் முல்லைத் தீவு முஸ்லிம்களை அவசர அவசரமாக ஏற்றிக் கொண்டு வட மாகாணத்தின் எல்லையில் அதாவது வவுனியா நகருக்கருகில் இறக்கிவிட்டனர். அதாவது 1990 ஆம் ஆண்டு முஸ்லிம்கள் ஏன் வாலில்லாப்புலிகளால் வெளியேற்றப் படுகின்றோம் என்று அன்று யாருக்கும் தெரியவில்லை. வெறுங்கையுடன் உடுத்திய உடையுடன் வயோதிபர்கள். நோயாளிகள், கர்ப்பிணி தாய்மார்கள், கைக்குழந்தைகள் மற்றும் இரண்டு முன்று வயது பாலகர்கள் போன்ற அனைவரும் பல மைல் தூரம் சேறும் சகதியும், கல்லும் முள்ளும், குன்றும் குழியும் நிறைந்த காட்டுப்பாதை வழியாக வெளியேற்றப்பட்டார்கள். எங்கு செல்வது இன்றிரவுப் பொழுதை எங்கு கழிப்பது என்று எதுவுமே அறியாமல் தெரியாமல் வெளியேற்றப்பட்டார்கள். ஆண்டாண்டு காலமாக பரம்பரையாகச் சேர்த்த சொத்துக்கள், வீடுகள்,விளைபொருட்கள்,விளை நிலங்கள் மற்றும் ஆயிரக் கணக்கான கால்நடைகள் அத்தனையையும் பறி கொடுத்து விட்டு வெறுங்கையுடன் வெளியேற்றப்பட்டார்கள்.

விரக்தியுற்று வெளியேற வேண்டும் என்ற முடிவுக்குத்தள்ளப்பட்ட வடமாகாண முஸ்லிம்கள் தமக்கு கிடைத்த பாதைகளின் மூலம் தமது சொந்தபிர தேசத்தை விட்டு வெளியேற தொடங்கினார்கள். மேலே முல்லைத்தீவு முஸ்லம்களின் வெளியேற்றம் குறிப்பிட்டது போல ஒவ்வொரு கிராம மக்களினது அனுபவங்களும் வெவ்வேறாக காணப்பட்டன. அதனை விரிவாக நோக்குகையில் விடத்தல்தீவு முஸ்லிம்கள் ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதியிலிருந்து கூட்டம் கூட்டமாக கிராமத்தை விட்டு வெளியேறினர். அக்காலத்தில் இவர்கள் வெளியேறுவதற்கு வசதியாக காணப்பட்ட பாதை பெரியமடு, பாலம் பிட்டி வழியான மடுப்பாதை ஆகும். விடத்தல்தீவு முஸ்லிம்கள் தமது ஊரிலிருந்து ஏறக்குறைய 18 மைல்கள் கால்நடையாக வந்து பெரியமடுவை அடைந்தார்கள். 27 ஆம்திகதி இரவு மடுக்கோயிலில் தங்கி மறுநாள் கால்நடையாகப் பூந்தோட்டம் வழியாக வவுனியாவை அடைந்தார்கள். வவுனியாநகரில் அன்று அவர்களுக்கு ஒரு பாடசாலையில் தஞ்சம் கொடுக்கப்பட்டது. அங்கிருந்து அனுராதபுரத்தில் நொச்சியாகமக் கிராமத்திற்கு வந்து பின்னர் புத்தள மாவட்டத்திற்கும், ஏனைய இடங்களுக்கும் அகதிகளாக அபயம் தேடிச் சென்றார்கள்.

பெரியமடு முஸ்லிம்கள் மடு, பண்டிவிரிச்சான் வழியாக வவுனியாவை அடைந்தார்கள். பண்டிவிரிச்சானில் வைத்து விடுதலை புலிகளால் தாம் அனுமதிக்காத ஏதாவது பொருட்களை எடுத்துச் செல்கின்றார்களா என்று பரீட்சிக்கப்பட்டார்கள். பெரியமடு முஸ்லிம்களில் அநேகமானோர் அரசாங்கப் பாடசாலை ஒன்றில் 07 நாட்கள் தங்கிவிட்டு நிரந்தர அகதி தளமாக பிரதானமாக புத்தள மாவட்டத்தை நோக்கி சென்றார்கள்.

வட்டக்கண்டல் முஸ்லிம்கள் 26 ஆம்திகதி தமது சொத்து சுகங்களை விட்டு விட்டு மடு வழியாக வெளியேறினார்கள். மூன்று நாட்கள் வவுனியாவில் தங்கியருந்து கெக்கிராவை G.P.S அகதி முகாமுக்கும், புத்தள பிரதேச அகதி முகாம்களுக்கும் சென்றார்கள். ஆய்வுகளின்படி ஒக்டோபர் இறுதி வாரத்தில் ஏறக் குறைய 40000 வட மாகாண ; யாழ்ப்பாண; முல்லைதீவு,வவுனியா, மன்னார் மாவட்ட முஸ்லிம்கள் அகதி வெள்ளமாக வவுனியாக நகரினூடாக இடம் பெயர்ந்தாக கூறப்படுகிறது.

இவ்வகதி வெள்ளத்தின் வாழ்க்கைக்கான அமைவிடம் தீர்மானிக்கப்பட்ட முறையை விபரிக்கையில் ; விடத்தல்தீவு முஸ்லிம்களில் மிகப் பெரும்பான்மையானோர் (சுமார் 70 சதவீதமானோர்) புத்தளம் நகருக்கு வந்தார்கள். ஆரம்பத்தில் இவர்களுக்குப் புத்தளம் நகரத்தின் சாஹிராக் கல்லுாரியில் அபயம் கொடுக்கப்பட்டது. ஏறக்குறைய ஒரு வாரத்திற்குப் பின்னர் இவர்களில் ஒரு பகுதியினர் கரம்பைக்கும், வேறு சிலர் கொத்தாந்தீவுக்கும் மற்றும் சிலர் நுரைச்சோலைக்கும் செல்ல வேறு சிலர் புத்தளம் நகரத்திலேயே தங்கத் தீர்மானித்தார்கள்.

பெரியமடு அகதிகள் புத்தளத்தில் பாடசாலை ஒன்றில் ஒருகிழமை தங்கிவிட்டு, பின்னர் புத்தளம் நகரம், விருதோடை,கரம்பை, பூலாச்சேனை, கனமூலை, கொத்தாந்தீவு மற்றும் புளிச்சாக்குளம் போன்ற இடங்களில் அமைக்கப்பட்ட அகதி முகாம்களில் வாழச் சென்றார்கள்.

முல்லைதீவு நகர அகதி முஸ்லிம்களில் ஏறக்குறைய 35 சதவீதமானோர் புத்தள நகரத்திலும், 40 சதவீதமானோர் கற்பிட்டியிலும் வந்து தஞ்சமடைந்தனர். விரிவாக நோக்கு கையில் அவர்கள் தஞ்சமடைந்த பிரதேசங்களாக; ஆலங் குடா, நுரைச்சோலை, நல்லாந்தழுவை, கடையாமோட்டை, விருதோடை, கனமூலை, சமீராகம மற்றும் பெருக்குவட்டான் ஆகிய மரதேசங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. 1990 ஆம் ஆண்டு ஒக்டோபரில் இவ்வாறான நிகழ்வு நிகழ முன்னரே, 1990 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முல்லைதீவு முஸ்லிம் மக்கள் பெருமளவில் அகதிகளாக தம் சொந்த பிரதேசத்தை விட்டு வெளியேறி வந்த போது இம்மக்களுக்கு அபயமளித்த இடங்களில் ஒன்று புத்தள மாவட்டத்திற்குரிய ஆலங்குடா முஸ்லிம் கிராமமாகும். பெருந்தன்மையும், பரஸ்பர ஒற்றுமையும் கொண்ட ஆலங்குடா முஸ்லிம்கள் தமது கிராமச் சூழலில் முஸ்லிம் அகதிகளுக்கு முகாம் அமைப்பதற்கு அனுமதி வழங்கியதோடு அகதிகளின் நிவாரண வேலைகளிலும் நேரடியாக ஈடுபட்டு உதவி செய்தார்கள்.

1990 ஆம் ஆண்டு ஜுலையில் இருந்து ஒக்டோபர் கடைசிப் பகுதிவரை முல்லைத்தீவைச் சேர்ந்த முஸ்லிம்கள் மாத்திரமே இப்பிரதேசத்தில் அகதிகளாக வாழ்ந்து வந்தமை தெளிவாக்கப்படுகின்றது. அதே வருடம் ஒக்டோபர் இறுதிப்பகுதியில் புத்தளம் மாவட்டத்தில் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. இக்காலத்தில் ஆயிரக்கணக்கான வடமாகாண முஸ்லிம்கள் அகதிகளாக புத்தளம் மாவட்டத்திற்கே அபயம் தேடி வந்தார்கள். இவர்களில் பலர் வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்திலிருந்து கடல் வழியாக கற்பிட்டிக்கும், மற்றவர்கள் தரைவழியாக புத்தளம் மாவட்டத்தின் கரைத்தீவு, புத்தள நகரம், புத்தளத்தின் தெற்கு பிரதேசங்களுக்கும் வரத் தொடங்கினர்.

புத்தளம் நோக்கி வந்த அகதி வெள்ளத்தினால் இப்பிரதேசம் நிலை குலைந்தது. ஆயிரக்கணக்கில் வந்த அகதிகளுக்கு அபயம் கொடுப்பதற்காக பாடசாலைகள், பள்ளிவாயில் வளவுகள், மத்ரசாக் கட்டடங்கள் போன்ற இடங்களில் தற்காலிக அபாயம் கொடுக்கப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகியது. மேற்குறித்த கட்டடங்கள் அகதிகளின் உறைவிட வசதிக்குப் போதாமல் போனபோது தனியார் வீடுகளும் ஏனைய பொதுக் கட்டடங்களும் இந்நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகியது. இவ்வாறு புத்தளம் மாவட்டத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழ்ந்த புத்தளம், கற்பிட்டி, முந்தல், வண்ணாத்திவில்லு போன்ற உதவி அரசாங்க பிரிவுகளின் பாடசாலைகள், வணக்கஸ்தளங்கள், பொதுக்கட்டங்கள் மற்றும் தனியார்வீடுகள் முழுமையாக முஸ்லிம் அகதிகளைப் பரிபாலிப்பனவாக மாற்றியமைக்கப்பட்டன.

மற்றுமொரு ஆய்வின் படி, "புத்தளம் வந்த அகதிகளில் பலர் கற்பிட்டிப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஆலங்குடா முஸ்லிம் கிராமத்திற்கும் அபயம் தேடி வந்தார்கள். இவ்வாறு வந்தவர்களில் வடமாகாணத்தின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் உள்ளடங்குவர். இதில் முல்லைத்தீவு முஸ்லிம்களும் மன்னார் மாவட்டத்தின் முசலிப் பிரதேச முஸ்லிம்களும் எண்ணிக்கை ரீதியாக அதிகமாக காணப்பட்டார்கள். 1990 ஆம் ஆண்டு ஜனவரியில் ஏறக்குறைய 5000 முஸ்லிம் அகதிகள் அபயம் தேடி ஆலங்குடா முஸ்லிம் கிராமத்திற்கு வந்திருந்தார்கள்." என கூறப்படுகின்றது. ஏனைய கிராம முஸ்லிம் அகதிகளான; இலந்தை மோட்டை முஸ்லிம்கள் கரம்பை மீளமைவுக் குடியேற்றத்திலும். ஆண்டான்குள முஸ்லிம்கள் அக்கரை வெளி, (உளுக்காப்பள்ளம்) ஹூஸைனியா புரம், றகுமத்புரம் ஆகிய இடங்களிலும், நொச்சிக்குள முஸ்லிம்கள் நுரைச்சோலையில் கொய்யாவாடி சொந்த குடியேற்ற திட்டத்திலும் அகதிகளாக வாழ்ந்ததாக கூறப்படுகின்றது.

1991 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமளவில் முஸ்லிம்களின் அகதி வாழ்க்கையை பராமரிக்கும் முகமாக ஒழுங்கு செய்யப்பட்டது. மாந்தை-நானாட்டான் முஸ்லிம் அகதிகள் சில முகாம்களில் கிராம உறவினர்களுடன் கூட்டாகவும், தனியாக்கப்பட்டும் வேறு பல கிராம, பிரதேச, மாவட்ட முஸ்லிம் அகதிகளுடன் சேர்ந்தும் தமது முகாம் வாழ்க்கையைத் தொடங்கினார்கள். மாந்தை - நானாட்டான் முஸ்லிம்களின் அகதி வாழ்க்கையில் இவர்களுக்கு மிகவும் கரிசணை யோடு உதவி செய்த புத்தள மக்கள் மீண்டும் மீண்டும் நினைவு கூறத்தக்கவர்களாவர்கள். இதைப்போன்றே விடத்தல் தீவு, பெரியமடு முஸ்லிம்கள்,புத்தளம் மாவட்டத்திற்கு அகதியாகவந்த போது அங்கு வாழ்ந்த புத்தள மக்கள் அகதிகளுக்கு உணவளித்து, உறைவிடமளித்து, ஆறுதல்கூறி அரவணைத்தார்கள். அகதிகளாக வந்தோரை வாழ் வைக்க புத்தள மண்ணும் புத்தள மக்களும் பெரும் பங்காற்றியமை நன்றாக தெளிவு படுத்தப்படுகின்றது. இருப்பினும் அகதிகள் பல்வேறு இன்னல்களை எதிர் நோக்கியமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அகதிகளுக்கான தற்காலக குடிசைகள் அமைப்பதற்கும், அகதி முகாம்களில் வாழ்ந்த மக்களுக்கு நீர், மலசலகூட வசதிகளை ஏற்படுத்துவதற்கும் அரசாங்கமும், அரசசார்பற்ற நிறுவனங்களும் உதவி செய்தன. இவ்வுதவிகள் அக்கால கட்டத்தில் அகதிகளுக்கு மிக அத்தியவசியமானவையாக இருந்தன. இவ்வாறான உதவிகளை பெற்றுக் கொண்டாலும் கூட பல முகாம்கள் போதிய நீர், மலசலகூட வசதிகளைப் பெற்றிருக்கவில்லை. உரிய காலத்தில் பொருத்தமான குடிசை கட்டும் பொருட்கள் வழங்கப்படா மையினாலும் பாரிய கஷ்டங்களுக்கு உள்ளாயினர். உதாரணமாக பெரியமடு மக்கள் வாழ்ந்த விருதோடை அகதி முகாம்களில் போதிய கிடுகு, தளபாடங்கள் கிடைக்காமையால் ஒரு ஓலைக்குடிசையில் ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் நெருக்கமாக வாழ வேண்டிய நிலையிலும் ஒரு மலசலகூடத்தை நூற்றுக்கணக்கானவர்கள் பாவிக்க வேண்டிய நிலையிலும் இருந்துள்ளனர்.

அகதிகளை பராமரிக்கும் நோக்கில் உணவு நிவாரணம் அரசால் வழங்கப்பட்டது. அரசாங்கம் 05 அல்லது அதற்கு மேற்பட்ட அகதிகுடும்பம் ஒன்றிற்கு மாதாந்தம் 1000 ரூபா பெறுமதியான உலர் உணவு நிவாரணத்தை வழங்கியது. உண்மையில் இவ்வுணவு நிவாரணம் அகதிகளை பட்டினியில் இருந்து பாதுகாத்தாலும் பற்றாக்குறையான ஊட்டச்சத்துள்ள வழங்கலால் போசாக்கின்மை, நோய்கள் என்பவற்றில் இருந்து அகதிகளைப் பாதுகாக்க முடியாது போயிற்று. இவ்வாறு அகதிகள் முகங்கொடுக்கும் இன்னல்களை தம்மாள் இயன்றளவு குறைப்பதற்கு உதவிக்கரம் நீட்டி புத்தள மக்கள் அரவணைத்தார்கள். அதாவது அகதிகளுக்கு கிடைக்கும் உலர்உணவுகளில் மேலதிகமானவற்றை வீணாக்காது அவற்றை பண்டமாற்று முறைப்படி தாம் பெற்று அகதிகளுக்கு தேவைப்படும் உணவு பண்டங்களை அப்பிர தேச மக்கள் கொடுத்துதவினோர் மற்றும் அப்பிரதேச மக்கள் தங்கள் தோட்டங்களில் விளையும் மரக்கறிகளை வாரிவழங்கி அகதிகளுக்கு துணைநின்றனர். மற்றும் தொழில் வாய்ப்புக்களை அகதி களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தும் உதவினார்கள்.

மேலும் அகதிகளின் முகாம் வாழ்க்கையை நோக்குகையில், ஆய்வுகளின்படி; புத்தள மாவட்டத்தில் 150இற்கும் மேற்பட்ட முகாம்கள் காணப்பட்டதாக கூறப்படுகின்றது. முஸ்லிம்களின் அகதி வாழ்க்கை பற்றி சரியாக அறிந்து கொள்ள இம்மக்கள் வாழ்ந்த முகாம்கள் பற்றியும் அதன் வசதிகள் பற்றியும் அறிவது அவசியமாகும். அகதி முகாம் என்பது இனப்பிரச்சனையால் பாதிக்கப்பட்டு சொந்த இடங்களை விட்டு வெளியேறிய மக்களுக்கு அரசு, அரசசார்பற்ற. நிறுவனங்களினால் தற்காலிகமாக அமைத்துக கொடுக்கப்பட்ட வாழ்விடமாகும். பல முகாம்கள் இடப்பற்றாக்குறையால் பொருத்தமான குடியிருப்புக்கான நிலமின்மையால் நெருக்கமாகவும் பொருத்தமற்ற சுற்றுச் சூழலாலும் நெருக்கமான குடிசைகளைக் கொண்டிருந்தமையாலும் அதிகமாகப் பாதிக்கப்பட்டன. இப்பாதிப்புகளில் அகதிமக்கள் உடல் ஆரோக்கியரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டார்கள்.

மாந்தை - நானாட்டான் முஸ்லிம்கள் வாழ்ந்த ஏறக்குறைய 50க்கு மேற்பட்ட முகாம்களில் பெரியமடு, விடத்தல்தீவு முஸ்லிம்கள் வாழ்ந்த முந்தல் பிரதேச முகாம்களை உதாரணமாக நோக்குவோம். 1991 ஆண்டிலிருந்து 1995 ஆம் ஆண்டு வரை புத்தளம் மாவட்ட முந்தல் பிரதேசத்தில் 44 சிறிய, பெரிய முகாம்கள் காணப்பட்டன. இவற்றில் விருதோடைப் பகுதியில் 12 முகாம்கள் அமைவுற்றிருந்தன. விருதோடையில் அக்காலத்தில் ஏறக்குறைய 600 குடும்பங்கள் அகதிகளாக வாழ்ந்தன. இப்பிர தேசத்தில் காணப்பட்ட அகதி முகாம்கள் சூழற் பிரச்சனை கல்வி பிரச்சனைகளினால் பாதிப்புக்கு உட்பட்டிருந்தன.

ஆயினும் இம்முகாமைச் சுற்றிக் காணப்பட்ட சமூகச் சூழல் அகதிகளுக்கு உறுதுணையாக இருந்தது. இச்சூழலில் வாழ்ந்த உள்ளூர் மக்கள் அகதிகளின் நலனில் அக்கறை காட்டினர். தங்களுடைய பள்ளிவாயில், மத்ரசா போன்ற சமய நிலையங்களிலும், பாடசாலை, சனசமூக நிலையங்கள் போன்ற பொதுக்கட்டிடங்களிலும் அகதி முஸ்லிம்களுக்குச் சமஉரிமை கொடுத்து கௌர வித்தார் கள்.

எனினும் துரதிஷ்டவசமாக இம்முகாமின் பௌதீகச் சூழல் மக்கள் வாழ்க்கைக்குப் பொருத்தமானதாக அமைக்கப்படவில்லை. தாழ்நிலமான இம் முகாமின் (விருதோடை) கிழக்கெல்லையாக உவர்நீரோடை காணப்பட்டது. இதனால் மழை காலங்களில் நீரோட்டம் அதிகரிக்கும் போது இம்முகாமில் பெரும்பலான குடிசைகள் வெள்ளத்துள் மூழகின. வெள்ள நீர்மட்டம் அதிகம் உயராத போது நிலக்கசிவினாலும் சுற்றுப்புறப் பள்ளங்கள், கேணிகளில் நீர் தேங்கி நிற்பதாலும் வதிவிடப் பிரச்சனைகள் இக்காலங்களில் அதிகரித்தன. மேலும் மலேரியா, வயிற்றுளைவு போன்ற நோய்களும் அதிகரித்தன. "பட்ட புண்ணிலே படும்"என்றவாறு மென்மேலும் . அகதிகளுக்கு ஏற்படும் இன்னல்களை கண்டு அப்பிரதேச மக்கள் மிகவும் மனம் வருந்தினர். மற்றும் பிரதேச வைத்தியர்கள் மூலம் இலவச மருந்துகளும் அளித்து உதவினார்கள்.

மேலும் அகதிகள் எதிர்நோக்கிய பிரச்சினைகளாக; பற்றாக் குறையான நிவாரணம், தொழிலின்மையால் பல விதமான பொருளாதார, கல்வி, உளவியல் பாதிப்புக்கு உள்ளானார்கள். போஷாக்கின்மை அகதிகள் மத்தியில் காணப்பட்ட பொதுவான பிரச்சனையாகும் இதனால் குழந்தைகளும், கர்ப்பிணித் தாய்மார்களும், வயோதிபர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். பொருத்தமான கல்வியின்மை மற்றுமொரு பிரச்சினையாகும். கரம்பை, மெல்சிரிபுர, பூலாச்சேனை போன்ற பிரதேசங்களில் வாழ்ந்த மாந்தை-நானாட்டான் அகதிகள் அதிகம் பாதிக்கப்பட்டார்கள். அது மட்டுமன்றி அகதிகள் வாழ்கின்ற இடங்களுக்கு அருகில் காணப்பட்ட உள்ளூர் பாடசாலைகளில் அகதி மாணவர்களை கட்டிட, தளபாட, ஆசிரியர் பற்றாக்குறையினால் அனுமதிக்கத் தயங்கினர். இதனால் அகதி மாணவர்களின் கல்வி மிகவும் பாதிகப்பட்டதால் அப்பிரதேச மக்கள் மிகவும் வருத்தப்பட்டதுடன். மாந்தை - நானாட்டான் முஸ்லிம் அகதிகள் வாழ்ந்த விருதோடை, புத்தள நகரம்,கொத்தான் தீவு போன்ற பாடசாலை களில் அகதி மாணவர்களுக்கு பி.ப 2.00 மணியிலிருந்து பாடசாலை ஒழுங்கு பி.ப 5.00 மணிவரை மாலை நேரத்தில் செய்து கொடுக்கப்பட்டது. எவ்வாறாயினும் அகதிகளுக்கு கல்வியில் இருந்து ஆர்வமானது இத்தகைய வசதியின்மையால் பாதிக்கப்பட்டது.

மேலும், அகதிகள் தமது உற்றார் உறவினார், ஊரவர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு புதிய சூழலில் வாழ்ந்தமையானது, இவர்கள் அகதி வாழ்க்கையில் அனுபவித்த துன்பங்களிலெல்லாம் சிகரம் பொன்று காணப்பட்டது. சொந்த இடத்தில் சிறு எண்ணிக்கையில் மிகக் கூட்டுறவுடன் வாழ்ந்த இப்பிரதேச முஸ்லிம்கள்
தொடர்பற்ற 50இற்கும் மேற்பட்ட முகாம்களில் உற்றார், உறவினர்,ஊரவர் துணையின்றி வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அவ்வாறு இருந்தும் பல சிரமங்களுக்கு மத்தியில் இம்மக்கள் மேற்கூறியோரின் இன்பங்களிலும். துன்பங்களிலும் பங்கு பற்றி வந்தார்கள். தொடர்ச்சியாக தமது சொந்தப் பிரதேசத்தில் காணப்பட்ட சமூக சூழல் இவர்களை ஈர்த்துக் கொண்டே இருந்தமையால் பின்னர் உறவினர்களை நோக்கிய இடம் பெயர்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கவொரு விடயமாக காணப்படுகிறது.

அகதியாக்கப்பட்டு தற்காலிக வாழ்விடம் கிடைக்கப்பெற்ற காலத்திலிருந்து அகதிகள் தமக்குப் பொருத்தமான சமூக வாழ்விட சூழலை நோக்கி இடம் பெயர்த்து வாழ முயற்சித்து வந்தார்கள். இவ்வாறான இடப் பெயர்வு முயற்சியில் உறவினர்கள் வாழ்ந்த இடத்தினை நோக்கி இடம் பெயர்ந்து செல்ல வேண்டும் என்ற ஆர்வம் அகதிகள் மத்தியில் காணப்பட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக அகதிகளின் அவ்வாறான சுதந்திரமான இடப்பெயர்வை நேரடியாகவும், மறைமுகமாகவும் அரசு கட்டுப்படுத்தி வந்தது. இச் சூழ்நிலையிலும் மாந்தை-நானாட்டான் பிரதேசத்தைச் சேர்ந்த பல கிராமத்தவர்கள் பொருத்தமான வாழ்விடம் தேடி, தொடர்ச்சி யாக இடம் பெயர்ந்து கொண்டிருந்தனர். இவ்வாறான இடம் பெயர்ச்சிகள் புத்தள மாவட்டத்தை நோக்கியும், புத்தள மாவட்டத்திற்குள்ளும் இடம்பெற்றன. உதாரணமாக குருநாகல் மாவட்ட மெல்சிரி புர, கெகுனு கொல்ல கிராமங்களில் வாழ்ந்த விடத்தல் தீவைச் சேர்ந்த முஸ்லிம் அகதிகள் புத்தளம் மாவட்டத்தின் ஹுஸைனியாபுர கிராமத்திற்கு (உளுக்காப்பள்ளம்) இடம் பெயர்ந்து வந்தனர்.

முகாம்களுக்கிடையிலான அகதிகளின் இடப் பெயர்ச்சியால் பல நடைமுறைச் சிக்கல்கள் காணப்பட்டன.முகாம்கள் அவை அமைக்கப்பட்ட போது இடமின்மைப் பிரச்சினையை எதிர் நோக்கி மிக நெருக்கமாகக் குடிசைகள் அமைவுற்ற நிலையில் காணப்பட்டன. இம்முகாம்களில் நீர், மலசலகூடம் மற்றும் ஏனைய அடிப்படை வசதிகள் மட்டுப் படுத்தப்பட்டவையாக இருந்தன. இச்சூழ்நிலையில் புதிய அகதிகளின் வருகை ஏற்கனவே அங்கு வாழ்ந்தவர்களால் வரவேற்கப்படவில்லை. உறவினர்களுடன் ஒன்றாக வாழ விரும்பி இடம் பெயர்ந்துவர நினைத்த அகதிக் குடும்பங்களுக்கு இது ஒரு பெரும் பிரச்சினையாகக் காணப்பட்டது. இப்பிரச்சினை தனியொரு பிரச்சினையாக அல்லாமல் குடும்ப பிரச்சினையாகவும் காணப்பட்டது. இப்பிரச்சினைச்குத் தீர்வு காண மாந்தை-நானாட்டானைச் சேர்ந்த குடும்பங்கள் மற்றொரு வகையில் முயற்சித்தன. அம்முயற்சிகளில் ஒன்று உறவினர், குடும்பங்கள் ஒன்று சேர்ந்து புதிய காணியொன்றைத் தேடி ,அங்கு ஒரு சிறிய முகாமை அமைத்து உற்றார் உறவினருடன் கௌரவமாக வாழ்வ தாகும். இந்த வகையில் பல புதிய முகாம்கள் உருவாகத் தொடங்கின. இதற்கு உதாரணமாக தில்லையடியிலுள்ள அமைக்கப்பட்ட முகாமைக் குறிப்பிடலாம்.

1995 ஆம் ஆண்டுக் காலகட்டம் மாந்தை -நானாட்டான் முஸ்லிம் அகதிகளைப் பொறுத்தளவில் முக்கியமானதொரு கால கட்டமாகும் இக்காலத்தில் பல குடியிருப்பு மாற்றங்கள் இம்மக்கள் மத்தியில் ஏற்பட்டன. அதில் முக்கியமானது புதிய இடத்தில் சொந்தமாகக் காணி வாங்கி உற்றார், உறவினர், ஊரவரோடு வாழ்வதற்கு இம்மக்கள் எடுத்த முயற்சியாகும். இம்முயற்சியின் பிரதிபலனாகப் புத்தளம் மாவட்டத்தில் உளுக்காப்பள்ளம் என்ற இடத்தில் சொந்தக் குடியேற்ற மொன்றைப் பெரியமடு, விடத்தல்தீவுக்கிராம மக்கள் ஏற்படுத்த முயற்சித்தார்கள். இம்முயற்சி 1995 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமளவில் எடுக்கப்பட்டது. பாலாவி - கற்பிட்டி பிரதான பாதையில் பாலாவிச் சந்தியில் இருந்து கிட்டத்தட்ட
2 மைல் தொலைவில் உளுக்காப்பள்ளம் அமைந்துள்ளது. இங்கு ஏறக்குறைய 40 ஏக்கர் காணியை சொந்தமாக வாங்கி ஒரு குடும்பத்திற்கு 20 பேர்ச்சு என்ற அடிப்படையில் பிரித்துக் கொடுத்து அங்கு தமது அகதி வாழ்க்கையைத் தொடர முயற்சி எடுத்தார்கள்.

அதே காலகட்டத்தில் இவ் உளுக்காப்பள்ளக் காணியுடன் தொடர்ச்சியாகக் காணப்பட்ட ஏறக்குறைய 25 ஏக்கர் காணியை விடத்தல்தீவு முஸ்லிம்கள் சொந்தமாக வாங்கி அவற்றைத் தமது உற்றார், ஊரவர்கள் மத்தியில் பங்கிட்டுத் தமது சொந்தக் குடியேற்றத்தை அமைத்துக் கொண்டார்கள். இதே போல புத்தளம் நகருக்குத் தெற்காகத் தில்லையடி என்ற பிரதேசத்தில் சிறிய அளவில் மாந்தை-நானாட்டான்பிரதேச முஸ்லிம்களால் சொந்தக் குடியேற்றம் அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மேற்குறிப்பிட்ட சொந்தக் குடியேற்றங்களுக்குள், சிதறி வாழ்ந்த மாந்தை - நானாட்டான் முஸ்லிம்கள் இடம் பெயர்ந்து வந்தார்கள். இதில் உளுக்காப்பள்ள சொந்தக்குடி யேற்றத்தை எடுத்துக் கொள்கின்ற போது புத்தள நகரம், கனமூலை, பூலாச் சேனை, கரம்பை, புளிச்சாக்குளம் ஆகிய இடங்களில் வாழ்ந்த பெரியமடு முஸ்லிம்கள் பெருமளவில் இச்சொந்தக் குடியேற்றத்திற்கு இடம் பெயர்ந்தார்கள். விடத்தல்தீவு மூஸ்லிம்கள்; உளுக்காப் பள்ளம், தில்லையடி போன்ற பிரதேசங்களில் அமையப்பெற்ற சொந்த குடியேற்றங்களுக்கு இடம் பெயர்ந்தனர். கொத்தான்தீவு, விருதோடையில் வாழ்ந்த விடத்தல்தீவு முஸ்லிம்கள்; தில்லையடிக்கும், கரம்பை, பூலாச்சேனையில் வாழ்ந்த விடத்தல்தீவு முஸ்லிம்கள்; உளுக்காப்பள்ளத்திற்கும் ,அதே போல குருநாகல் சியம்பளாகஸ் கொட்டுவ, கெகுனுகொல்ல மக்கள்; உளுக்காப்பள்ளத்திற்கும், பாணந்துறை, கொழும்பு ஆகிய இடங்களில் வாழ்ந்த விடத்தல்தீவு முஸ்லிம்கள்; உளுக்காப்பள்ளத்திற்கும்இடம் பெயர்ந்தனர்.

அகதி முஸ்லிம்களின் அண்மைக்கால மாற்றங்களை அறிந்து கொண்ட அரசு,அகதியாக்கப்பட்ட ஆறு வருடங்களுக்குப் பின்னர், முஸ்லிம் அகதிகளின் அகதி வாழ்க்கைக்கு மாற்றுத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த முற்பட்டது. இத்திட்டத்தின் மூலம் வட மாகாணத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை அவர்கள் அகதிகளாக வாழ்கின்ற பிரதேசங்களில் நிரந்தரமாகக் குடியேற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ்வாறு இம் மக்களை அவ்வப்பிரதேசங்களில் நிரந்தரமாகக் குடியேற்றுவதன் மூலம் இம்மக்களின் அகதிப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருவது அரசின் நோக்கமாகக் காணப்பட்டது.

மாந்தை - நானாட்டான் முஸ்லிம்களால் ஏற்படுத் தப்பட்ட சொந்தக் குடியேற்றங்களில் முக்கியமானதொன்று உளுக்காப்பள்ளச் சொந்த குடியேற்றமாகும். இக்குடியேற்றத் திட்டத்தில் ஏறக்குறைய அன்று 2000 மக்கள் குடியிருப்பு அடிப்படை அற்ற நிலையில் வாழ்ந்து வந்தார்கள். மற்றும் அன்றைய நிலையில் தொழில் வாய்ப்பும் அகதிகளுக்கு உரியவாறு அமையவில்லை. ஆயினும் உளுக்காப்பள்ளக் குடியிருப்பை விட வசதிகள் குறைந்த நிலையில் தில்லையடி, கரம்பை,றகுமத்புரம் ஆகிய மாந்தை - நானாட்டான் முஸ்லிம் களின் சொந்தக் குடியேற்றங்கள் காணப்பட்டன. இதைவிட இலந்தை மோட்டை, வட்டக்கண்டல், ரசூல் புது வெளி, நொச்சி க்கும் ,பூவரசன்குளம், சொர்ணபுரி, ஆண்டான்குளம், கட்டைக்காடு. மினுக்கன், விளாங்குளி போன்ற மாந்தை - நானாட்டான் முஸ்லிம் கிராமங்களின் முஸ்லிம்கள் தொடர்ந்து அகதி முகாம்களில் வாழ்ந்துள்ளதுடன், சொந்த முயற்சியில் ஒரு மாற்று வாழ்க்கைமுறையை ஏற்படுத்திக் கொள்ள முடியாத நிலையிலும் காணப்பட்டுள்ளனர். ஆகவே இவ்வாறு மீள் குடியேற்ற திட்டத்தில் பலவீனமான நிலையில் காணப்பட்ட பிரதேசங்களுடன் உளுக்காப்பள்ளம்,தில்லையடி, கரம்பை, 25 ஏக்கர், றகுமத்புரம் போன்ற புத்தள மாவட்டத்திற்குரிய மீள்குடியேற்ற பிரதேசங்களை ஒப்பிடுகையில் புத்தள மாவட்டத்தில் தஞ்சமடைந்த அகதிகள் புண்ணியவாதிகளாகவே காணப்படுகின்றனர்.

அதாவது புத்தள மாவட்டத்திற்கு வெறுங் கையுடன் அநாதாரப்பட்ட நிலையில் வந்த அகதிகள் இன்று பல அபிவிருத்தியுடன் கூடிய வாழ்க்கையை வாழ்ந்த வருகின்றனர். இவர்களுக்கு சொந்தக் குடியேற்றம் நிறுவதற்கு, புத்தள மாவட்ட ஊர்மக்களே தங்களுடைய காணிகளை குறைந்தவிலையில் விற்று ஒவ்வொரு குடும்பங்களுக்கும் பிரித்துக் கொடுத்து உறுதுணையாக நின்றனர். இந்தவகையில் இன்றும் என்றும், வந்தோரை வாழவைக்க புத்தள மண்ணும்,அம்மக்களும் பட்ட அர்ப்பணிப்புக்களை மறவாதே நன்றியுள்ளத்துடன் கட்டுரைக்கு முடிப்புரை வழங்கும் இவள் அகதிகுடும்பங்களின் பேரப்பிள்ளை.

Hadheeja Faizal

Address

Husainiyapuram
Puttalam
61280

Alerts

Be the first to know and let us send you an email when UK Media - Hussainiyapuram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to UK Media - Hussainiyapuram:

Share