09/09/2026
டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட ‘கொண்ட ரஞ்சி’ கட்டுநாயக்க விமான நிலையத்தில் CID-யால் கைது
பாதாள உலகக் குழு உறுப்பினராகக் கூறப்படும் ரஞ்சித் குமார் என்ற 'கொண்ட ரஞ்சி', டுபாயிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட நிலையில், இன்று (09) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தவுடன் குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயன்றபோது, கடந்த ஜனவரி 9 ஆம் திகதி டுபாயில் அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
அப்போது, அவருடன் பயணித்த மனைவியும் குழந்தைகளும் கைது செய்யப்பட்ட போதிலும், விசாரணைகளின் பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் ஒருங்கிணைப்புச் செயலாளரின் கொலைச் சம்பவம் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக, 'கொண்ட ரஞ்சி' இலங்கை பொலிஸாரால் நீண்டகாலமாக தேடப்பட்டு வந்த சந்தேகநபராகக் கருதப்படுகிறார்.
மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்னெடுத்து வருகிறது.