15/04/2026
பிழையாக புரியப்பட்ட பதிவுக்கான விளக்கத்தை தருகிறார் அஷ்ஷெய்க் அப்துல் அஸீஸ் (நழீமி)
ஈரான் vs அமெரிக்கா–இஸ்ரேல் யுத்தம் தொடர்பாக நான் எழுதிய பதிவில் எந்தத் தவறான நோக்கமோ அல்லது மயக்கமோ இல்லை என்பதை தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன்.
படித்தவர்களில் சிலர் கருத்து வேறுபாட்டுடன் எதிர்த்துள்ளனர். ஆனால், சிலர் புரிதலின்றி கீழ்த்தரமாக விமர்சிப்பது கவலைக்குரியது.
ஈரான் வெற்றி பெற்றால் அது உண்மையில் ஈரானின் வெற்றி தான். நாங்கள் சமூக வலைதளங்களில் எழுதுவதால் வெற்றி கிடைக்காது. அந்தப் போராட்டத்திற்காக நாங்கள் போதுமானளவில் பிரார்த்தனை செய்யாதது கவலையாக உள்ளது. மேலும், பிரார்த்தனை செய்யவேண்டும் என்று சமூகத்தை வழிநடத்தும் தலைமைத்துவமும் பெரிதாக முன்வரவில்லை.
முகநூலில் ஆதரவு தெரிவித்தோம். அதேநேரத்தில் மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளை கடுமையாக விமர்சித்தோம். சிலர் அந்த நாடுகளுக்கே அழிவு வேண்டி பிரார்த்தனை செய்தனர். இது முற்றிலும் தவறு.
உணர்ச்சிவசப்பட்டு இவ்வாறு பேசுவதால் சமூகம் சீரழியும் அபாயம் உள்ளது.
இஸ்ரேல் மேற்கொண்ட அநீதிகளுக்கும், அப்பாவி மக்களின் உயிரிழப்புகளுக்கும் எதிராக பிரார்த்திப்பது நமது கடமை. சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பது இயல்பானது. ஆனால் அதில் அளவுகோல் இருக்க வேண்டும்.
நாங்கள் நேரடியாக களத்தில் போராட முடியாத நிலையில், கருத்துகளை பகிர்ந்து மன ஆறுதல் பெறுகிறோம். அந்தளவில் ஆதரவு வழங்குவது புரிந்துகொள்ளத்தக்கது.
முஸ்லிம்கள் என்ற அடிப்படையில், ஷியாக்களை முழுமையாக மறுப்பதில்லை. அவர்கள் இஸ்ரேலுக்கும் அமெரிக்க ஆதிக்கத்துக்கும் எதிராக நடத்தும்.
போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதில் தவறு இல்லை. ஆனால் கருத்து வேறுபாடுகளை முன்வைக்கும் போது வெறுப்பும் வன்முறையும் இடம் பெறக்கூடாது.
நான் தெளிவாகச் சொன்னது,
நான் “ஈரானியன்” அல்ல. “ஈமானின்” மனிதன்.
ஈரான் வெற்றி பெற்றால் மகிழ்ச்சி. தோல்வியடைந்தால் அது கவலைக்குரியது. சமாதானம் ஏற்பட்டாலும் அது நீடிக்காது என்ற சந்தேகத்தையும் நான் முன்வைத்தேன். இருப்பினும், சர்வதேச அழுத்தங்களால் சமாதானம் நோக்கி நகர்ந்துள்ளனர்.
ஒரு முக்கியமான விஷயம்,
ஈரான் தோல்வியடைந்தால் அது முஸ்லிம்களின் தோல்வி அல்ல. மாறாக அது ஈரானின் தோல்வியாகும். வெற்றியும், தோல்வியும் அவர்களுக்கே சொந்தமானது.
அதேநேரத்தில், இந்த அநீதிக்கு எதிராக ஈரான் மட்டும் அல்ல, பிற சக்திவாய்ந்த நாடுகளும் (உதாரணமாக துருக்கி, ரஷ்யா, சீனா போன்றவை) நடைமுறை ஆதரவுடன் செயல்பட வேண்டும் என்பது என் கருத்தாகும்.
இலங்கையில் சில இஸ்லாமிய இயக்கங்கள், ஈரானை ஈமானின் ஒரு பகுதியாக உயர்த்தி, மஹ்தி (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் பாரசீகத்தில் தோன்றுவார்கள் என்று கூறுகின்றனர். இந்தக் கருத்துடன் நான் ஒருபோதும் உடன்படவில்லை.
யார் அநீதியை எதிர்த்தாலும் அவர்களுக்கு ஆதரவு வழங்குவது சரி. ஆனால் அப்பாவி மக்களை கொல்வதை “ஜிஹாத்” என்று கூறுவது முற்றிலும் தவறு என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
நாம் உணர்ச்சியால் அல்ல, நிதானத்தால் பேச வேண்டும்.
அநீதிக்கு எதிராக நிற்க வேண்டும். ஆனால் நமது சொற்களாலும், செயல்களாலும் சமுதாயத்தை தவறாக வழிநடத்தக் கூடாது.