அக்கம்-பக்கம்

அக்கம்-பக்கம் இந்த "அக்கம் பக்கம்" எமது வாழ்வியலின் பல்வேறு விடயங்களை, சமூக நடைமுறைகளை, அரசியலைப் பேசும் ஒரு தளமாகும்.

தந்தையின் பெயர்==============குழந்தையை பெற்றுக் கொள்வது என்பது திருமணம் செய்து கொள்ளும் பலருக்கும் இருக்கும் ஒரு பொதுக் ...
07/21/2025

தந்தையின் பெயர்
==============

குழந்தையை பெற்றுக் கொள்வது என்பது திருமணம் செய்து கொள்ளும் பலருக்கும் இருக்கும் ஒரு பொதுக் கனவு. இது உலகில் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் பொருந்தும். ஆனால் இந்த விடயம் ஆண்களுக்கு அவர்களின் ஆண்மைக்கு அடையாளமாகவும் பெண்ணிற்கு தன்னை தகுதியை நிரூபிக்கும் சுட்டியாகவும் எமது சமூகத்தில் பார்க்கப்பட்டு வருகிறது.

அதேவேளை, அவ்வாறு திருமணம் ஆகாத சூழலில் ஒரு பெண் கர்ப்பம் தரித்தால் அந்தப் பெண் பழிச்சொல்லுக்கு ஆளாவதுடன் பிறக்கும் பிள்ளையும் காலத்திற்கும் கேலிக்கும் அவமானப்படுத்தலும் முகம் கொடுக்க வேண்டியுள்ளது. இது தெற்காசிய சமூகத்தில் மிகவும் ஆழமாக புரையோடிப் போன பிற்போக்குத்தனமான ஒரு விடயமாக இன்றும் இருந்து வருகிறது.

இவ்வாறு திருமணம் செய்யாத நிலையில் பிள்ளை பெற்றுக் கொள்ளும் அனைத்துக் பெண்களையுமே ஒழுக்கமற்றவர்கள் என்று குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது மிகவும் தவறான பார்வையே. குறிப்பாக காதலிக்கும்போது கர்ப்பம் தரிக்கும் பெண்களும் ஏற்கனவே திருமண ஆண்களால் ஏமாற்றப்பட்ட பெண்களும் பாலியல் பலாத்காரத்தினால் கர்ப்பமான பெண்களும் குற்றவாளிகள் இல்லை என்பதை எமது சமூகம் புரிந்து கொள்வதில்லை. அதனாலேயே இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் பல குழந்தைகள் ஆலய வாசல்களிலும் பொது இடங்களிலும் அனாதைகளாக விட்டுச் செல்லப்படுகிறார்கள்.

இவ்வாறான சமூகப் பின்னணியுள்ள ஒரு நாடான இலங்கையில் தற்போது பதவியில் உள்ள அரசினால் பிறந்த பிள்ளைக்குப் பெயரிடல் தொடர்பாக ஒரு அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் பெற்றோரின் திருமணப் பதிவு விபரம் தேவையில்லை, தந்தையின் பெயரைக் குறிப்பிடவும் அவசியம் இல்லை என்பதுதான் அந்த அறிவித்தல்.
அந்த அறிவித்தல் தற்போது சில கலாச்சாரக் காவலர்களையும் ஆணாதிக்க சமூகத்தைக் கட்டிக் காக்க நினைப்போரையும் கவலைக்குள்ளாக்கியிருப்பதை சமூக வலைத்தளப் பதிவுகள், கருத்துகள் மூலம் அறிய முடிகிறது. “இனிப் பெண்கள் திருமணம் செய்வதில் ஆர்வம் காட்ட மாட்டார்கள்; அப்பா இல்லாத பிள்ளைகள்தான் அதிகரிக்கப் போகிறது; இவ்வாறு செய்தால் பிள்ளையின் நிலை என்னவாகும்?” என்று அநியாயத்திற்குக் கவலைப்படுகிறார்கள்.

எமது கலாச்சாரக் காவலர்களுக்குப் பிடிக்காவிட்டாலும் குறித்த பெண்கள், அவர்களின் குழந்தைகள் எதிர்கால நலன் குறித்து நோக்கும்போது இதனை நல்லதொரு நகர்வாகவே பார்க்க முடிகிறது. ஏனெனில், இது பச்சிளம் குழந்தைகள் அனாதைகளாக வீசப்படுவதையும் வளரும்போது “உன் தந்தை யார்?” என்று சமூகத்தால் காயப்படுத்தப்படுவதையும் கணிசமாகக் குறைக்க உதவக் கூடும். அந்தப் பெண்களும் தமது பிள்ளைகளை தைரியமாக வளர்க்கவும் உதவக் கூடும்.

ஆனால் இந்த விடயம் நடைமுறைப்படுத்தப்பட்டால், இவர்கள் கவலைப்படுவது போல இந்த அணுகுமுறை பெண்களை முன்னரை விட அதிகம் பாலியல் உறவில் ஈடுபடவும் கண்டபடி பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளவும் வழிவகுக்கும் என்பது ஒரு முட்டாள்தனமான ஆருடம் கூறல் மட்டுமே.

பழமையில் ஊறி அங்கேயே தேங்கி நிற்போருக்கும், பிள்ளையைப் பெற்று, பிள்ளையின் பெயரில் தனது பெயரை ஒட்டி விடுவதில்தான் தனது ஆண்மை இருக்கிறது என்று நம்பும் “ஆண்”களுக்கும் இது அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால் நல்ல விடயங்களை ஏற்று நடைமுறைப்படுத்துவதே ஒரு சமுதாயம் முன்னோக்கி நகர உதவும் என்பதை இதனை எதிர்ப்போர் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்னும் சிலர், இந்த விடயத்தைத் தவறாகப் புரிந்து கொண்டு திருமணமானவர்களுக்கும் இதே விடயத்தை நடைமுறைப்படுத்துவார்கள் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மகளிர் விவகார அமைச்சர் அவ்வாறு எதனையும் சொல்லவில்லை. ஆனால் இவ்வாறு வாய்க்கு வந்தபடி பேசுபவர்கள் சந்தேகப்பட்டு சொல்லுவதை நடைமுறைப்படுத்தினால் அதுவும் நல்லதுதான்.

- வீமன் -

பின்னிணைப்பு:
++++++++++++
தாயின் பெயரை பிள்ளையின் குடும்பப் பெயராகப் பயன்படுத்துவது ஏற்கனவே பல நாடுகளில் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் ஒரு விடயம்தான்.
• கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, நோர்வே, சுவீடன், டென்மார்க் ஆகிய நாடுகளிலும் தாயின் பெயரை மட்டும் பயன்படுத்தும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.
• கிரீஸில் இது 1983 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
• ஸ்பெயின் மற்றும் தென்னமெரிக்க நாடுகளில் பெற்றோரின் விருப்பம் போல தந்தை அல்லது தாயின் பெயரை தெரிவு செய்யும் உரிமை 1999 முதல் நடைமுறையில் இருக்கிறது.
• பிரான்ஸ், ஜெர்மனியிலும் இது நடைமுறையில் உள்ளது.
• பிலிப்பைன்ஸில் தந்தை யார் என்று தெரியாத நிலையில் தாயின் பெயரைப் பயன்படுத்தும் நடைமுறை இருக்கிறது.
• இஸ்ரேலுக்கு வெளியே வாழும் சில யூதர்கள் மத்தியிலும் தாயின் பெயரை வழங்கும் நடைமுறை உள்ளது.
• இந்தோனேசியாவில், மேற்கு சுமாத்திராவில் இன்றும் தாய்வழிச் சமூகமாக தாயின் பெயரே சந்ததிக்குக் கடத்தப்படுகிறது.
• இந்தியாவின் மேகாலயாவிலும் தாயின் பெயரே பிள்ளைகள் வழி கடத்தப்படுகிறது.
• சீனாவில் Mosuo சமூகத்திலும் இந்த நடைமுறை இருக்கிறது.
இவ்வாறு இந்தப் பட்டியல் நீண்டு செல்கிறது. ஆர்வமுள்ளவர்கள் தேடிப் பாருங்கள்.

பயணமும் பாதுகாப்பும் !====================இலங்கையில் நடைபெறும் பல சாலை விபத்துகளுக்கு அங்குள்ள வீதிகளில் உள்ள பாதுகாப்பு...
06/30/2025

பயணமும் பாதுகாப்பும் !
====================

இலங்கையில் நடைபெறும் பல சாலை விபத்துகளுக்கு அங்குள்ள வீதிகளில் உள்ள பாதுகாப்புக் குறைபாடுகள், பாதுகாப்பற்ற புகையிரத வீதிக் கடவைகள் போன்ற உட்கட்டமைப்புக் குறைபாடுகள் தவிர்த்து சாரதிகளின் தவறுகளான அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், போதையில் வாகனம் ஓட்டுதல், இரவு நேரங்களில் பயணித்தல், செல்பேசி பயன்படுத்தியபடி வாகனம் ஓட்டுதல், சாலைவிதிகளை மீறுதல் போன்ற தவறுகள் அதிக விபத்துகள் ஏற்படுவதற்குக் காரணங்களாக அமைந்துள்ளன.

இலங்கையில் கடந்த ஆறு மாதங்களில் மாத்திரம் 2200 க்கு மேற்பட்டோர் வீதி விபத்துகளில் கொல்லப்பட்டுள்ளார்கள். பகலில் அதிக எண்ணிக்கையான விபத்துக்கள் நடைபெற்றபோதிலும் இரவில் அதிலும் நள்ளிரவில் அல்லது அதிகாலையில் நடைபெற்ற விபத்துகளில் பலர் உயிரிழந்தததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.

இவ்வாறு அதிகாலையில் நடைபெற்ற ஒரு விபத்தில்தான் கடந்த மாதம் எனது பாடசாலை கால நண்பன் ஒருவன் அந்த இடத்திலேயே மரணிக்க, அவனது அவனது மூத்த மகனும் சில ஏற்பட்ட காயம் காரணமாக சில நாட்களில் உயிரிழந்தான். அதே விபத்தில் படுகாயமடைந்த இன்னொரு உறவினர் மூன்று வாரங்கள் கழித்து மரணமடைய நேர்ந்தது.

இதேபோல சில வருடங்களுக்கு முன்னர், ஓர் நாள் நள்ளிரவு கடந்து மன்னாரிலிருந்து யாழுக்குப் பயணித்த எனது இன்னொரு நண்பனின் சகோதரன், வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததில் விபத்துக்குள்ளாகி மரணித்திருந்தார். இது போலப் பலர் இவ்வாறு நள்ளிரவில் அல்லது அதிகாலையில் நடைபெற்ற விபத்துகளில் மரணித்து இருக்கிறார்கள் அல்லது படுகாயப்பட்டிருக்கிறார்கள்.

நான் இலங்கையில் வாழ்ந்த காலத்திலும் இவ்வாறு நீண்ட தூரப் பயணங்களை இரவிரவாக மேற்கொள்ளும் பழக்கம் பலருக்கு இருப்பதை அவதானித்திருக்கிறேன். அது இப்போதும் தொடர்கிறது என்பதையே நடக்கும் விபத்துக்களும், விபத்து மரணங்களும் உறுதிப்படுத்துகின்றன.

இரவில் வீதிகளில் வாகன நெரிசல் குறைவாக இருக்கும், குறைவான நேரத்தில் பயணித்து விடலாம், இரவில் பயணித்து காலையில் குறித்த ஊரைச் சென்றடைந்துவிட்டால் மறுநாள் காலையிலேயே முக்கிய வேலைகளை ஆரம்பித்து விடலாம் என்ற நேரத்தை மிச்சம் பிடிக்கும் எண்ணமே பலரை இவ்வாறு இரவில் பயணிக்க வைக்கிறது. சிலரைப் பொறுத்தவரை, செல்லும் நகரத்தில் தங்குவதற்கான செலவைத் தவிர்த்துக் கொள்ள நினைப்பதுவும் இதற்குக் காரணமாக இருக்கிறது.


ஆனால் இவ்வாறு இரவு நேரத்தில் பயணம் மேற்கொள்வது பாதுகாப்பான ஒன்றாக இருப்பதில்லை. ஏனெனில் இரவில் பல பாதைகளில் போதிய வெளிச்சம் இருப்பதில்லை, பல சந்தர்ப்பங்களில் நீண்ட தூரம் வாகனம் ஒட்டுவதால் சாரதிகள் சோர்வடையவும் தூக்கக் கலக்கத்தில் கவனச் சிதறலுக்கும் வாய்ப்பு அதிகம். அதேபோல நாம் கவனமாகச் சென்றாலும் எதிரில் வரும் வாகன ஓட்டுநர்கள் மது அருந்திய நிலையில் வாகனம் ஓட்டுவதற்கும், தூக்கக் கலக்கத்தில் வரவும், அதிவேகமாக வருவதற்கும் சந்தர்ப்பம் உள்ளது.

மறுபுறத்தில், இலங்கையில் பல சாலைகளில் போதுமான விளக்குகள் இருப்பதில்லை; அனைத்து இடங்களிலும் சாலைக் குறிகள் தெளிவாக இருப்பதில்லை; இன்னும் பல இடங்களில் பாதுகாப்பான புகையிரதக் கடவைகள் இல்லை. இவ்வாறான வீதிக் கட்டமைப்புக் குறைபாடுகளும் இரவு நேர விபத்துகளுக்கு காரணமாக அமைகின்றன.

இவ்வாறான இரவு நேரப் பயணங்களின் அபாயங்கள் பற்றி முழுமையாக அறிந்திருந்தாலும், பலர் நேரம் மற்றும் பணத்தை மிச்சப்படுத்தும் எண்ணத்தில் இன்னமும் இரவுப் பயணங்களை மேற்கொள்கிறார்கள். ஆனால், இவ்வாறு உயிரைப் பணயம் வைப்பதைத் தவிர்த்துக் கொள்வதே புத்திசாலித்தனமானது. அதனால், உங்களால் முடிந்தவரை இரவுப் பயணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

அப்படித் தவிர்க்க முடியாத சூழல் இருந்தால், செல்லுமிடத்துக்கு நள்ளிரவுக்கு முன்னர் சென்றடையக் கூடியதாக உங்கள் பயணத்தைத திட்டமிட்டுக் கொள்ளுங்கள். இவ்வாறு இரவில் வாகனம் ஓட்ட வேண்டிய சூழல் இருந்தால் நீண்ட பயணத்துக்கு முன்னர் போதுமான ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். வாகனம் நல்ல நிலையில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

வாகனம் ஓட்டும்போது விதிக்கப்பட்ட வேக வரையறைக்குள் வாகனத்தை செலுத்துங்கள். இரவில் வீதிகள் காலியாக இருக்கும்போது வேகமாக ஓட்ட உங்கள் மனது தூண்டலாம் அல்லது உங்கள் கூட இருப்பவர் தூண்டலாம். ஆனால், நேரத்தை மிச்சப்படுத்தும் நோக்கில் உயிரைப் பணயம் வைப்பது ஒருபோதும் புத்திசாலித்தனமான முடிவல்ல. "ஒரு நிமிடம் தாமதமாக போகலாம், ஆனால் உயிரோடு போக வேண்டும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள். எந்த சூழ்நிலையிலும் பாதுகாப்பான வேகத்திலேயே வாகனத்தைச் செலுத்துங்கள்.

எப்போதும் உங்கள் வாகன ஆசன பாதுகாப்புப் பட்டியை அணியுங்கள். வாகனத்தில் பயணிக்கும் ஏனையவர்களும் பாதுகாப்புப் பட்டி அணிவதை உறுதி செய்து கொள்ளுங்கள். இது விபத்து ஏற்படும் சூழலில் உயிரிழப்பு ஏற்படும் சாத்தியத்தைக் குறைக்க உதவும். எப்போதும் சாலை விதிகளை முறையாகப் பின்பற்றுங்கள்.

எப்போதும் போதையில் வாகனம் ஓட்டுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். – இது சட்டப்படியும் குற்றம் என்பதுடன் இது உங்கள் உயிருக்கும் வீதியைப் பயன்படுத்தும் மற்றவர்களின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் செயல் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதேபோல வாகனம் ஓட்டும்போது தொலைபேசியில் பேசியபடி வாகனம் ஓட்டுவதையும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

உங்கள் வாழ்க்கையும், உங்கள் குடும்பத்தின் அமைதியும் உங்களது ஒரு பொறுப்பற்ற முடிவால் சிதைந்து போகாமல் இருக்க, தயவு செய்து சாலையில் பயணிக்கும்போது பாதுகாப்பை முதன்மைப்படுத்துங்கள். இரவு பயணங்களை முடிந்தவரை தவிருங்கள். தவிர்க்க முடியாவிடின், அவற்றை மிகுந்த நிதானத்துடனும், பாதுகாப்புடனும் மேற்கொள்ளுங்கள். உங்கள் செயல் ஒரு விபத்தைக் தவிர்க்க உதவலாம்; ஒருவரது உயிரை காப்பாற்றலாம்.

பயணங்களில் பாதுகாப்பும் ஒரு வாழ்க்கைத் தேர்வாக இருக்க வேண்டும்!

- வீமன் -

Photo Credit: HiruFMLK

செம்மணி புதைகுழியும் AI படங்களும்!===============================செம்மணி பாரிய மனித புதைகுழியின் அகழ்வின் பொது கண்டெடுக்...
06/29/2025

செம்மணி புதைகுழியும் AI படங்களும்!
===============================

செம்மணி பாரிய மனித புதைகுழியின் அகழ்வின் பொது கண்டெடுக்கப்படுகின்ற மனித எழும்புக்கூடுகளை நுண் செயற்கை திறன் தொழில் நுட்பத்தின் மூலம் அவ் எலும்புக்கூடுகளிற்குரிய இறந்தவர்களின் புகைப்படங்களாக அது ஊகித்து உருவாக்கிக் கொடுக்கும் உண்மையற்ற, பிழையான, பிறழ்பகர்வு செய்யப்பட்டு சமூக ஊடகங்களில் குறிப்பாக பலரின் முகப்புத்தகங்களில் பகிரப்படும் புகைப்படங்கள் குற்றவியல் நீதி பொறிமுறையில் ஏற்படுத்த இருக்கும் பாதிப்பை தெளிவுபடுத்த வேண்டும் என்ற சமூக பொறுப்பின் அடிப்படையில் இப்பதிவை பாதிக்கப்பட்வர்கள் சார்பில் ஆஜராகும் எனது கற்றறிந்த சட்டத்தரணிகளுடன் உறுதிப்படுத்திய பின்னரே பதிவிடுகின்றேன்.

1. முதலாவதாக ஒரு தாயும் பிள்ளையும் கட்டி அணைத்தபடி உள்ளதாக காட்டும் எழும்புக்கூடுகளும், அதன் புகைப்படமாக AI தொழில்நுட்பத்தின் மூலம் பகிரப்படும் படங்களின் உண்மைத்தன்மையும் முற்று முழுதாக புனையப்பட்ட ஒன்றாகும். அவ்வாறே வேறு சில எழும்புக்கூடுகளிற்குரிய புகைப்படங்களும் முகப்புத்தகத்தில் பொறுப்பின்றி பகிரப்பட்டு வருகின்றது.

இப்படியாக புனையப்பட்ட புகைப்படங்கள. அவ் எழும்புக்கூடுகளின் ( Originality) யை கண்டுபிடிப்பதில், சர்வதேச நியமங்களை அடிப்படையாகக் கொண்டு குற்றவியல் விசாரணை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் எமக்கு செயற்கை நுண்ணறிவிடம் விசாரணை பொறிமுறையை கையளித்து விட்டதாகவே இது அமைந்துவிடும்.

2. இரண்டாவதாக இப் புனையப்பட்ட புகைப்படங்கள் எம் உள்ளங்களில் பதியப்பட்டு உண்மையான இறந்தவரை அடையாளம் காணக்கூடிய ஒரு நீண்ட குற்றவியல் பொறிமுறையில், இப் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் ( Public Domain) இல் சேமிக்கப்பட்டு விட்டால் அவை விசாரணையின் பின்னரான உண்மைத்தன்மையை சந்தேகிக்க வைக்கும் ஒரு குழப்ப நிலையை கொண்டுவரும்.

3. உண்மையாக கண்டுடெடுக்கப்படும் எழும்புக்கூடுகளை மட்டும் வைத்து உங்கள் பதிவுகளை இடலாம். அது எந்தவித்த்திலும் பாதிப்பை ஏற்படுத்தப்போவதில்லை.

எனவே இந்த மாபெரும் மனித இனப்படுகொலையை சமூக ஊடகங்களினூடு கடத்திச் செல்ல வேண்டும் என பதிவுகளை வெளியிட்டு வரும் எமது உறவுகள், முக நூல் நண்பர்கள் உண்மையாக கண்டெடுக்கப்படும் எழும்புக்கூடுகளிற்கான படங்களை மட்டும் பதிவிட்டு உங்கள் செய்தியை கூறுங்கள். இதில் நாம் சமூகப் பொறுப்புடன் செயற்படுவதன் மூலம் இறந்தவர்களிற்கான நீதியை பெற தொடர்ந்தும் போராட முடியும்.
நன்றி: Jude Dinesh

வல்லிய வேடன்============“நீர் நிலங்களின் அடிமையாரு உடமையாரு நிலங்களாயிரம் வேலியில் திரிச்சதாரு? திரிச்ச வேலியில் குலம் ம...
05/29/2025

வல்லிய வேடன்
============

“நீர் நிலங்களின் அடிமையாரு உடமையாரு
நிலங்களாயிரம் வேலியில் திரிச்சதாரு?
திரிச்ச வேலியில் குலம் முடிச்சதெத்றபேரு?”

“ஞான் பாணன் அல்ல பறையனல்ல, புலையனல்ல.
நீ தம்புரானுமல்ல, ஆனேல் ஒரு மயிருமல்ல!”

கபட தேசவாதி, நாட்டில் மத ஜாதி வியாதி!
-----------------------------
வல்லிய வேடனின் வில்விடு அம்பாய்
சொல்லிசையாக துள்ளிசையோடு
ஒடுக்கப்பட்டோர் ஓங்கிய குரலாய்
அவன் எழுதிய கவி வரி
சொல்லுதே அவர் வலி!
இவன் வெஞ்சினம் கண்டு
அஞ்சி நடுங்குது!
ஆண்ட வர்க்கமும் ஆளும் அரசும்!
----------------------------

விளிம்புநிலை மக்களின் குரலாய் மேடைகள் தோறும் இவன் வீறு கொள்கிறான். கேரள தேசத்து மக்களுக்காகப் பேசுகிறான். பாலஸ்தீனம், சிரியா, கொங்கோ, ரஷ்யா, அமெரிக்கா சீனம், என்று உலக அரசியல் பேசுகிறான். அவன் வலியை மட்டும் பேசவில்லை, மக்களின் வாழ்க்கையைப் பேசுகிறான்; காதலையும் பேசுகிறான்; புத்தனைப் போல் தத்துவம் பேசுகிறான்; தன் தாயின் தேசமான ஈழத்தையும் பேசுகிறான். இவற்றின் ஊடாக மக்களைக் கவர்ந்து ஒரு பேசுபொருளாகி நிற்கிறான். கடந்த சிலநாட்களாக சமூக வலைத்தளங்களிலும் பிரபலமாகி நிற்கிறான்.

அவனது சிறுபராய முதலான அனுபவங்கள், அவன் தாயின் வலி, தந்தையின் வலி என்பனவே அவனது வார்த்தைகள், சொல்லிசை என்பவற்றினூடாக ஒடுக்கப்பட்டோரின் குரலாக அவனை உரத்துப் பேச வைத்திருக்கிறது என்று நினைக்கிறேன். அவன் பேசும் விடயம் சத்தமாகக் கேட்பதால், அவனை ரசிப்பவரின் சத்தங்கள் அதைவிட அதிகமாகக் கேட்பதால் தடுமாறிப் போன கேரள அரசு அவனை அடக்க நினைத்தது. தற்போது இந்திய ஒன்றிய அரசின் பின் நிற்கும் காவிக் கூட்டம் அவன் குரலை ஒடுக்க முனைந்து நிற்கிறது என்று சொல்கிறார்கள். அதுவே அவனுக்கான மக்களின் மேலும் ஆதரவை அதிகரிக்கச் செய்துள்ளது.

அவன் தாயின் வேரான ஈழத்தின் வலியையும் பாடல் மூலம் வெளிப்படுத்தியதைக் கேட்ட அவன் எம்மவரின் தத்துப் பிள்ளையாகிப் போனதில் ஆச்சரியமில்லை. அதனால் கடந்த சில நாட்களாகவே எம்மவர் பலரின் Timeline இல் வேடனின் வேட்டைதான். ஒரு இசைக் கலைஞனை, அவனது படைப்பைக் கொண்டாடுவது தவறில்லை. அதுவும் சமூக அக்கறையுள்ள ஒரு விடயம் எனில் எதை மற்றவருக்கும் போய்ச் சேரும் வகையில் பகிர்வது நல்லதே.

ஆனால் அவனின் தாய் ஈழத்தவர் என்பதால் அவன் எமது பிள்ளை, கேரளத்தின் தத்துப் பிள்ளை என்பதெல்லாம் அர்த்தமற்றது. தன்னை கேரளத் தந்தைக்கும் ஈழத் தமிழ்த் தாய்க்கும் பிறந்த பிள்ளை என்று அவனே அடையாளப்படுத்தியுள்ளான். அதனை நாம் மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

அவன் தனக்கென்று ஒரு அடையாளத்தை வெளிப்படுத்திய பின்னரும் எம்மில் சிலர் அவன் ஈழத் தமிழன் என்று ஆளாளுக்குப் புளுகுவதும், அவனை வேறு சொல்லிசைக் கலைஞரோடு ஒப்பீடு செய்வதுமாக வழமை போல குண்டுச் சட்டிக்குள் குதிரையோடுவதையும் பார்க்க முடிகிறது. அதேபோல சில தமிழக நெட்டிசன்களும், Youtubers உம் சில “So called” சமூக, அரசியல் விமர்சகர்களும் தமது அறிவுக்கு எட்டிய வகையில் வகை தொகையின்றி ஏதேதோ பேசி வருகின்றனர்.

தமிழகத்தாரும் சரி, ஈழத் தமிழரும் சரி, அவனை எம்மவன் என்று உரிமை கொண்டாடுவதை தவிர்த்து, அவன் யார் என்று அடிமுடி தேடுவதை விடுத்து, அவனிடமிருந்து நாம் என்ன கற்றுக் கொள்கிறோம் என்பது மிக முக்கியம். குறிப்பாக அவனின் பாடல்கள் மூலம் என்ன சொல்கிறான்; அது என்ன செய்தியை சமூகத்தில் கடத்துகிறது; அவன் கூறும் விடயங்களோடு ஒப்பிடும்போது நாம் எங்கு நிற்கிறோம் என்பதையும் சுயமதிப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

ஒடுக்கப்பட்ட மக்கள், காலம் காலமாக அடக்குமுறைக்கு ஆளான சமூகங்கள்
என்பவற்றின் வலிகளை எந்தவித சமரசமும் இல்லாமல் தேவைப்படும் இடங்களில் கடும் வார்த்தைகளைப் பயன்படுத்துவதால் வேடனால் அவன் சொல்ல வந்ததை மக்களுக்கு எளிதாகக் கடத்த முடிகிறது. அவன் மலையாள மொழியில் இதனைச் செய்வதால் ஈழத் தமிழரின் பிரச்சனையை கேரளத்து மக்களில் பலரும் அறியும் ஒரு சந்தர்ப்பம் அமைந்துள்ளது.

இந்த விடயத்தை அவதானித்தபோது எனது மனதில் ஒரு கேள்வி எழுந்தது. எமது போராட்டம் பற்றி மலையாள மொழியில் பேச ஒருவன் கிடைத்துள்ளான். இதேபோல எமது நியாத்தை, வலியை பிரெஞ்சு மொழியிலும் ஜெர்மன் மொழியிலும் ஆங்கில மொழியிலும் அந்தந்த நாட்டில் உள்ள மக்களுக்கு சொல்லும் வகையில் புலம்பெயர் சமூகத்தில், எமது அடுத்த தலைமுறையில் சொல்லிசைக் கலைஞராக தமிழர்கள் இருக்கிறார்களா என்று தேடிப் பார்த்தால், அப்படி ஒருவரும் இருப்பதாகத் தெரியவில்லை. இனியாவது முயற்சி செய்தால் உலகில் பலமிக்க நாடுகளில் உள்ள மக்களுக்கு, தமிழருக்கு எதிராக நடைபெற்ற அடக்குமுறைகள், எமது வலி என்பவற்றை புரிய வைக்க முடியும்.

மாறாக, தற்போது செய்வது போல ஈழத்து, தமிழகத்து சொல்லிசைக் கலைஞர்களை வரவழைத்துப் பாட வைப்பதால் குறித்த கலைஞர்களைப் பிரபலப்படுத்த உதவலாம். அதைவிடப் பெரிதாக எமது சமூகத்திற்கு எந்த நன்மையையும் தரப்போவதில்லை.

தற்போது ஈழத் தமிழர்களும் தமிழகத்தாரும் செய்வது போல நவீன பெரியார், பாரதி போல புரட்சிக்காரன், ஈழத் தமிழச்சிக்குத் தப்பாமல் பிறந்த புலிக்குட்டி என்று ஆளாளுக்கு வேடன் மேல் பெரியாரின் ஆவியையும் பாரதியாரின் ஆவியையும் புலிகளின் ஆவியையும் ஏவி விடாமல் சரியான பக்கத்தில் உங்கள் பார்வையைச் செலுத்துங்கள். அவனை அவன் விரும்பியதைச் செய்ய விடுங்கள். உங்களுக்காக அவன் செய்வான் என்று இலவு காக்கும் வேலையை விட்டு நீங்கள் செய்ய வேண்டியதை செய்ய முயற்சியுங்கள்.

- வீமன் -

இனவழிப்பும் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியும்========================================கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் இலங...
05/13/2025

இனவழிப்பும் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியும்
========================================

கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை அரசின் அழுத்தத்தைத் தொடர்ந்து யாழ் பல்கலைக் கழகத்தில் 2019இல் பல்கலைக் கழக மாணவர்களால் கட்டப்பட்டு இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி பல்கலைக் கழக நிர்வாகத்தினால் உடைக்கப்பட்டது. செனேட்டின் அனுமதியின்றி கட்டப்பட்ட தூபி என்று இதற்குக் காரணம் சொல்லப்பட்டது. தூபி உடைக்கப்பட்டுக் கொண்டிருந்த அன்றிரவே மாணவர்கள் அதற்குத் தமது கடும் எதிர்ப்பினைத் தெரிவித்து போராட்டத்தில் இறங்கினர். எமது சமூகமும் உடனடியாகவே உபவேந்தருக்கு துரோகிப் பட்டம் வழங்கியது.

இவ்வாறு தூபி உடைக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அரசின் செயற்பாட்டுக்கு எதிராக இலங்கையில் தமிழ் அரசியல்வாதிகள் களத்தில் இறங்கினர். அதேவேளை தமிழகத்திலும் இதற்குப் பெரும் எதிர்ப்பு எழுந்தது. இதன் தொடர்ச்சியாக, யாழ் பல்கலைக்கழக உபவேந்தருக்கு நிலைமையைச் சமாளிக்க அழுத்தம் கொடுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, தூபி உடைக்கப்பட்ட இடத்தில் இரண்டு கற்களை வைத்து தானே பூசை செய்த உபவேந்தர், முறைப்படி தூபி அந்த இடத்தில் கட்டிக் கொடுக்கப்படும் என்று மாணவர்களுக்கு உறுதியும் வழங்கினார். இதற்கு இந்திய தூதரகத்தினூடாக கொடுக்கப்பட்ட அழுத்தமும் காரணம் என்று அப்போது சொல்லப்பட்டது. அவர் சொன்னது போலவே அந்த வருடமே கட்டியும் கொடுத்தார்.

அதேநேரம், இந்த விவகாரம் புலம்பெயர் தமிழர்கள் செறிந்து வாழும் மேற்குலகிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக கனடாவில் எழுந்த மக்கள் எழுச்சி, எதிர்ப்பினைத் தொடர்ந்து கனடிய அரசியல்வாதிகள் கவனத்தையும் இது கவர்ந்தது. அதன் விளைவாக பிராம்டன் நகர முதல்வர் பற்றிக் பிரவுன் தமது ஆளுகைக்குட்பட்ட நகரப் பகுதியில் நினைவுத்தூபி கட்டித் தருவதாக கூறியதுடன் நகரசைபையில் அதற்கு ஆதரவாக தீர்மானமும் நிறைவேற்றினார். அதன்பின் இதற்காக தமிழ் மக்களிடம் நிதி சேகரிப்பும் நடைபெற்றது. அதேநேரம் இதனைத் தடுத்து நிறுத்த இலங்கை அரசும் ஒன்ராறியோவில் வாழும் சிங்கள மக்களின் அமைப்புகள் சிலவும் முயன்றபோதும் அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை.
இவ்வாறு 2021இல் ஆரம்பிக்கப்பட்ட முயற்சி பல தடங்கல்களைத் தாண்டிச செயலாக்கப்பட்டு 2025 மே மாதம் 10ம் திகதி திறந்து வைக்கப்பட்டது. தற்போது, அதையிட்டு கனடியத் தமிழர்களும் உலகின் பல நாடுகளில் உள்ள தமிழர்களும் தமது மகிழ்ச்சியைப் பகிர்ந்து வருவதைப் பார்க்க முடிகிறது. அதேவேளை இந்தத் தூபியை உருவாக்க உறுதுணையாக இருந்த பற்றிக் பிரவுனையும் யாழ் உபவேந்தர் சிறிசற்குணராஜாவையும் ஒப்பிட்ட ஒரு பதிவும் தற்போது சமூக வலைத்தளத்தில் உலா வருகிறது.

“அவர் தமிழனாக இருந்தும் இனவழிப்பு அரசின் அடியாளாக மாறி நினைவுத் தூபியை இடித்துத் தரைமட்டமாக்கினார். பற்றிக் பிரவுன் வேற்றினத்தவராக இருந்தும், தனது பதவி பறிபோனாலும் பரவாயில்லை, அந்த நினைவுத் தூபியை விடப் பிரமாண்டமாக பிரம்டன் நகரில் கட்டியெழுப்புவேன் என்று சபதமிட்டார். அதன்படி செய்தும் காட்டினார்.” இவ்வாறு சொல்லும் பதிவு உபவேந்தரை வரலாறு மன்னிக்காது என்றும், மறைமுகமாகத் துரோகியென்றும் நான்கு வருடங்கள் கழித்து மீண்டும் ஒருமுறை சொல்வதாக அமைந்துள்ளது. இன்னொரு பதிவு பிரம்டன் நகரில் திறந்து வைக்கப்பட்ட தூபி 2009இற்குப் பின்னர் தமிழர் போராட்ட வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட காத்திரமான ஒரு அரசியல் நிகழ்வு என்று கூறுகிறது.

இந்த இரண்டையுமே நான் தவறாக பார்க்கவில்லை. இது குறித்த பகிர்வுகளைப் பகிர்ந்தவர்களின் உணர்வு வெளிப்பாடு. அவர்களின் உணர்வு வெளிப்பாட்டையும் நானும் மதிக்கிறேன். ஆனால் இப்படி எல்லா விடயங்களிலும் அறிவைப் ஒரு பக்கமாக வைத்துவிட்டு உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் எதில் கவனம் வைக்க வேண்டுமோ அதில் கவனம் வைக்கத் தவறி விடுகிறோம் என்பதுதான் இங்கு நாம் அவதானிக்க வேண்டிய விடயமாகும்.

2019இல் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் கட்டப்பட்ட தூபி நிர்வாக அனுமதியின்றி கட்டப்பட்டது என்பதே அப்போது சொல்லப்பட்டது. அப்போது ஆட்சியில் இருந்தது பெரும்பான்மையை மறுபடி பெற்றுக்கொண்ட ராஜபக்ஸ குடும்பம். அந்த சமயத்தில் உபவேந்தர் அரச கட்டளையை நிறைவேற்ற மறுத்திருந்தாலும் இராணுவ உதவியுடன் அவர்களால் இலகுவாக உடைத்திருக்க முடியும். அல்லது இன்னொருவரை உபவேந்தராக்கி அவர் மூலம் உடைத்திருக்க முடியும். அன்று உபவேந்தர் செயற்பட்ட விதம் அவரது இயலாமை எனப் பலர் குற்றம் சாட்டினாலும், வடமாகாணம், மற்றும் தமிழகத்தில் எழுந்த கடும் எதிர்ப்பலைகளைப் பயன்படுத்தி அவரே அதனைச் சரிசெய்து, சட்டரீதியாக மீள அந்தத் தூபியை கட்டியதையும் நாம் கவனிக்க வேண்டும். இங்கு அவர் ஒரு வகையில் அந்தக் தூபி மீண்டும் இலகுவாக உடைக்கப்பட முடியாத நிலை ஏற்படுத்தியிருக்கிறார் என்பதுதான் யதார்த்தம்.

இதனை இன்னொரு கோணத்தில் பார்த்தோமானால், அங்கு தூபி உடைக்கப்பட்டதால்தான் தற்போது மேற்குலக நாடொன்றில் அரச அங்கீகாரத்துடன், கனடிய பல்வேறு ஊடகக் கவனிப்பையும் பெற்றதாக ஒரு தூபி அமைக்கப்பட்டுள்ளது. அதுவும் போரில் இறந்த மக்களுக்கான தூபி என்று சொல்லப்படாமல், “தமிழர் இனவழிப்பு ஞாபகார்த்த தூபி” எனக் காத்திரமான ஒரு செய்தியைச் சொல்லும் வகையில் இந்தத் தூபி அமைக்கப்பட்டுள்ளது. இது தமிழர்கள் மீது சிங்களப் பேரினவாத அரசு கடந்த பல தசாப்தங்களாக மேற்கொண்டது இனவழிப்புத்தான் என்பதை வலியுறுத்தும் அடையாளமாகவும் நிலைக்கப் போகிறது. அந்த வகையில் பார்க்கும்போது யாழ் உபவேந்தர் ஒரு கர்த்தாவாக இல்லாது ஒரு கருவியாகச் செய்த ஒரு காரியம் இன்று பெரும் நன்மையில் முடிந்துள்ளது என்பதே நாம் இன்று காணக் கூடியதாக உள்ள ஒரு விடயம்..

“பிரம்டன் நகரில் திறந்து வைக்கப்பட்ட தூபி 2009இற்குப் பின்னர் தமிழர் போராட்ட வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட காத்திரமான ஒரு அரசியல் நிகழ்வு” என்ற பதிவிலும் எனக்கு முழுமையான உடன்பாடு இல்லை. ஏனெனில் ஈழத்தில் இருந்த மாவீரர் நினைவுச் சின்னங்களை இடித்து அழித்து, தொடர்ந்தும் மக்களைப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி பல்வேறு வகைகளில் மிரட்டியும், கைது செய்தும் நினைவுகூருவதைத் தடுக்க முயன்றாலும் போரில் இறந்த உறவுகளை நினைவுகூரும் உரிமையைக் கடந்த பதினைந்து வருட காலத்தில் போராடி அங்குள்ள தமிழ் உறவுகள் அந்த உரிமையை நிலைநாட்டியதே எனது பார்வையில் கடந்த பதினாறு வருடங்களில் தமிழர் போராட்ட வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட காத்திரமான அரசியல் நகர்வாக வேண்டியதொன்றாகும்.

அவ்வாறு ஈழத்தில் மக்கள் முன்னெடுக்கும் அரசியலோடு ஒப்பிடும்போது, கனடாவில் தூபி அமைக்கப்பட்டதுதான் கடந்த 16 வருடத்தில் நடைபெற்ற காத்திரமான நிகழ்வு என்பதுவும் மிகைப்படுத்தலே. அதேபோல, நாம் தமிழருக்கு நடந்த இனவழிப்பை எந்தத் தடையுமின்றி நினைவு கூர கிடைத்த சந்தர்ப்பத்தை அனுபவிக்காமல் கொண்டாட வேண்டிய தருணத்தில் உபவேந்தரைத் துரோகியென்று பழசைக் கிளருவதும் தேவையற்ற இடத்தில் எமது சக்தியை வீணடிக்கும் செயலே. நாம் இவ்வாறுதான் கடந்த காலங்களில் எமது கவனத்தையும் சக்தியையும் தேவையற்ற விடயங்களில் வீணடித்து வந்திருக்கிறோம். இனியாவது எமது சக்தியை, சிந்தனையை எம்மை முன்னோக்கி நகர்வதற்குப் பயன்படுத்த வேண்டும் என்பதே எனது அவா!

- வீமன் -

அடி சறுக்கும் அனுர?================தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்கில் பெரும் வெற்றியைப் பெறுவோம் என...
04/28/2025

அடி சறுக்கும் அனுர?
================

தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்கில் பெரும் வெற்றியைப் பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் இருந்திருக்கவில்லை. அதனால் அதிக அழுத்தம் இல்லாமலே பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் வடக்கு, கிழக்கில் அவர்கள் எதிர்பார்த்ததை விடவே மக்கள் அள்ளிக் கொடுத்தார்கள். தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகள் 9 ஆசனங்களைப் பெற, NPP 12 ஆசனங்களைப் பெற்று, வன்னி மற்றும் மட்டக்களப்பு நீங்கலாக வடக்கு, கிழக்கில் அதிக ஆசனங்களைப் பெற்றுக் கொண்டது.

அதன் பின்னர் தாம் தமிழரின், குறிப்பாக வடக்கு வாழ் தமிழரின் இதயங்களை வென்று விட்டதாக பிரச்சாரம் செய்வதை தனது பகுதிநேர வேலையாகவே NPP மேற்கொள்ளத் தொடங்கியது. ஆனால் வடக்கு, கிழக்கு மக்கள் அனுரவிடம் எதை எதிர்பார்த்து அவரது கட்சி பாராளுமன்றில் அறுதி பெரும்பான்மையைப் பெறத் தமது பங்களிப்பையும் வழங்கினார்களோ அந்த எதிர்பார்ப்புகளை இன்னமும் நிறைவேற்றவில்லை என்பது ஒருபுறம் இருக்க, இனிவரும் நாட்களில் நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கையையும் வழங்க இந்த அரசு தவறி வருகிறது.

குறிப்பாக வடக்கு, கிழக்கு போரினால் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் பல முக்கிய விடயங்களில் அனுர அரசின் வாக்குறுதிக்கு மேலாக ஆக்கபூர்வமான செயற்பாட்டையே எதிர்பார்க்கிறார்கள். அவை என்னவென்று அனுரவுக்கு மட்டுமல்ல, வடக்குக் கிழக்கின் NPP பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றாகவே தெரியும்.

யாழில் நடைபெற்ற கூட்டத்தில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் வலியைத் தன்னாலும் உணரமுடியும் என்றும், தனது குடும்பமும் அவ்வாறு ஒரு குடும்ப உறுப்பினரை இழந்த குடும்பம் என்றும் கூறியிருந்தார். ஆனால் அவர் பதவிக்கு ஆறு மாதம் கடந்த நிலையிலும் அவரது கட்சி பெரும்பான்மையுடன் பதவிக்கு வந்து ஐந்து மாதங்கள் கடந்த நிலையிலும் இன்று வரை அரசு எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கையை எடுத்ததாகத் தெரியவில்லை. அவர்களை எது தடுக்கிறது என்றும் புரியவில்லை. அதேபோல, ஆரம்பத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விரைவில் விடுவிப்போம் என்று வாக்களித்த அரசு பின்னர் அவ்வாறு கைதிகள் யாரும் தடுப்புக் காவலில் இல்லை என்று சொல்லி எதிர்பார்ப்போடு இருந்த குடும்பங்களின் எதிர்பார்ப்பில் மண் அள்ளிக் கொட்டி விட்டது.

இதேபோல இந்த அரசு வடக்குக் கிழக்கில் முப்படைகள் வசம் இருக்கும் தமிழ் மக்களின் காணிகள் படிப்படியாக ஒப்படைக்கப்படும் என்றும் அனுர வாக்குறுதி அளித்திருந்தார். அப்போது, படையினர் கட்டுப்பாட்டில் விவசாய நிலங்களும் உள்ளன என்பதை தான் அறிவேன் என்றும், அவை தொடர்பாக ஒரு ஆய்வு செய்யப்பட்டு, அவை உண்மையில் முன்னர் விவசாயக் காணிகளாக இருந்தன எனக் கண்டறியப்பட்டால் அவை விடுவிக்கப்படும் என்றும் கூறியிருந்தார். இதன்மூலம் இவர் விவசாயக் காணிகளை விடுவிப்போம், ஏனையவற்றை விடுவிக்க மாட்டோம் என்று சொல்ல வருகிறாரா என்ற கேள்வியும் எழுகிறது. அதற்கு மேலாக எப்போது அந்த ஆய்வு செய்யப்படும், எப்போது காணிகள் விடுவிக்கப்படும் என்ற கால எல்லையும் அவரால் சொல்லப்படவில்லை.

அதேபோல வடக்கின் மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சனைக்கும் மீன்பிடி அமைச்சரும் சரி, NPP அரசும் சரி இன்னமும் தீர்ப்போம் என்று சொல்கிறதே தவிர இந்தியாவுடன், குறிப்பாக தமிழக அரசுடன் சுமூகமான பேசிப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான முதல் அடியையே எடுத்து வைத்ததாகத் தெரியவில்லை. வடக்கிற்கு வரும் அமைச்சர் சந்திரசேகரன் அதுபற்றிப் பேசும்போது அதற்கு தீர்வு தரப்படும் என்று சொன்னாலும் அவரும் அது தொடர்பாக காத்திரமான செயற்பாட்டில் இறங்கியதாகத் தெரியவில்லை.

இவற்றை விட இவர் மீதான நம்பிக்கையை சிதைக்கும் வகையில் அவர் பேசிய மேலும் இரண்டு விடயங்கள் அமைந்துள்ளன. அவற்றுள் முக்கியமானது தையிட்டி தொடர்பானது. தையிட்டியில் தனியார் காணியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட விகாரைப் பிரச்சனை தொடர்பாக வடக்கின் அரசியல் கட்சிகளோ தெற்கின் கட்சிகளோ தலையிடக் கூடாது என்கிறார். வடக்கில் இனவாதம் பேசும் கட்சிகள் இதில் தலையீடும்வரை அந்தப் பிரச்சனையைத தீர்க்க எதுவும் செய்ய முடியாது என்கிறார். அது விகாரதிபதியும் அந்தப் பிரதேச மக்களும் நாகதீப விகாரதிபதியும் பேசித் தீர்க்க வேண்டும் என்கிறார். இத்தனைக்கும் அந்த இடத்தை ஆக்கிரமித்தது அவருக்கு கீழே இருக்கும் படையினர் என்பது அவருக்கும் தெரியும். இலங்கையில் ஊழலற்ற, சட்டத்தின் ஆட்சியைக் கொண்டு வருவோம் என்று கூறும் ஒரு நாட்டின் தலைவர் இப்படி சுற்றி வளைத்து பேசுவதும் நிலத்தை இழந்த மக்களின் வலியை உணர மறுப்பதும், இவரும் சிங்கள பௌத்த பேரினவாத அரச இயந்திரத்தின் சாரதிதானோ என்று எண்ண வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

அதேபோல, உள்ளூராட்சி சபைகள் தொடர்பாகப பேசும்போதும், NPPயினர் கைவசப்படும் நகரசபை, மாநகரசபை போன்றவற்றுக்கு அவை கேட்கும் நிதி வழங்கப்படும் என்றும் ஏனைய ஊழல் கட்சிகள் கவசமாகும் சபைகளின் நிதிக் கோரிக்கைகள் ஓன்று பத்துத தடவைகள் மீளாய்வு செய்தே நிதி வழங்குவது தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்றும் கூறினார். அதன் பின்னர் அடுத்த கூட்டத்தில் தான் அந்த அர்த்தத்தில் கூறவில்லை என்று அதை மறுத்திருந்தார்.

ஏற்கனவே NPP கட்டமைப்பில் உள்ள பலர் முன்னுக்குப் பின் முரணாக பேசுவதாலும் பொய்யான தகவல்களைப் பகிர்ந்ததாலும் அந்தக் கட்சி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வரும் நிலையில், இன்னமும் அந்தக் கட்சி தமது துருப்புச் சீட்டாக நினைத்து உள்ளூராட்சித் தேர்தலில் வெல்ல அவருடைய நாவன்மை பயன்படும் என்று நம்பி இறக்கிய அனுரவே ஆங்காங்கு சறுக்குவதை அவதானிக்க முடிகிறது.

ஈஸ்டர் தாக்குதல், பட்டலந்த போன்ற விடயங்களில் அனுரவும் அவர் கட்சியும் காட்டும் அக்கறை ஏன் சிறுபான்மையினர் தொடர்பான விடயங்களில் காட்டப்படவில்லை என்ற கேள்வி விடை தரப்படாமல் காற்றில் அலைந்து கொண்டிருக்கிறது.

- வீமன் -

வடக்கு -கிழக்கில் முகாமிடும் தோழர் கூட்டம்====================================ஜனாதிபதித் தேர்தலில் தோழர் அனுர வென்ற பின்...
04/14/2025

வடக்கு -கிழக்கில் முகாமிடும் தோழர் கூட்டம்
====================================

ஜனாதிபதித் தேர்தலில் தோழர் அனுர வென்ற பின்னர், பாராளுமன்றத் தேர்தலில் வடக்குக் கிழக்கிலும் வெற்றி பெறவேண்டும் என்று மூலோபாயத்துடன் NPP செயற்பட்டு ஜனாதிபதியும் நேரடியாகச் பிரச்சாரத்தில் இறங்கியிருந்தார். அவர் யாழுக்கும் சென்றதுடன் மக்களிடம் ஆதரவு கேட்டிருந்தார். அப்போது அவர் ஆற்றிய உரை உண்மையில் வடக்கின் வாக்காளர்கள் பலரைக் கவர்ந்திருந்தது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஆனால் அதனால் மட்டுமே வடக்குக் கிழக்கு மக்கள் NPPயின் கட்சிக் கொள்கைகளால் கவரப்பட்டு அந்தக் கட்சிக்கு வாக்களித்தார்கள் என்று சொல்லிவிட முடியாது. மகிந்த கட்சி மீது இருந்த வெறுப்பு, ரணில் மற்றும் சஜித் ஆகியோர் தமிழருக்கு எதுவும் செய்யப் போவதில்லை என்ற கணிப்பு, இதுவரை வாக்களித்த கூட்டமைப்பு சிதைந்து தனித் தனியாகப் பிரிந்து போட்டியிட்டது என்பனவும் சேர்ந்தே NPPயின் வெற்றியைச் சாத்தியமாக்கியது.

ஆனால் இந்த அரசு அதீத பெரும்பான்மை பெற்றாலும் தான் சொன்ன விடயங்கள் எதையும் நிறைவேற்றவில்லை என்ற அதிருப்தி இலங்கை முழுவதும் இருந்தாலும் வடக்கு மற்றும் கிழக்கில் அது கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது எனலாம். குறிப்பாக இறுதி யுத்தத்தின் பின்னர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஜனாதிபதி எந்த விதமான காத்திரமான நடவடிக்கையையும் செய்யவில்லை. மாறாக அரசு சிறையில் அவ்வாறு கைதிகள் யாரும் இல்லை என்று சொல்லி முடித்து விட்டது. ஆகக் குறைந்தது அவர்களுக்கு என்ன நடந்தது என்ற விசாரணையை முன்னெடுக்கவோ நிச்சயமாக உயிரோடு இல்லை எனத் தெரிந்தவர்களின் உறவினர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரவோ அரசு தயாராக இல்லை.

மாறாக தமிழ் மக்கள் அவற்றை மறந்துவிட வேண்டும் என்ற எண்ணமே அரசுக்கு இருப்பதாகவே ஊகிக்க வேண்டியுள்ளது. தற்போது பட்டலந்த விவகாரத்தில் சர்வதேச விசாரணை செய்யவும் தயார் என்ற இதே அரசுதான் சில வாரங்களுக்கு முன்னர் தமிழர் படுகொலைகள் தொடர்பாக சர்வதேச விசாரணையை அனுமதிக்கப் போவதில்லை என்று உறுதிபடுத்தியது.. மறுபுறத்தில், முப்படையினர் கைப்பற்றியிருக்கும் தனியார் காணிகளை விடுவிப்பதிலும் அரசு சரியான இதய சுத்தியுடன் செயற்படவில்லை என்பதையே அவதானிக்க முடிகிறது. தேர்தல் வரும்போது மட்டும் குறுகிய தூர வீதிகளைத் திறப்பது, ஒரு சிறிய நிலபரப்பை மட்டும கையளிப்பது, நிபந்தனைகளுடனான வீதித் திறப்பு என அரசியல் சித்து விளையாட்டையே இந்த அரசும் செய்கிறது.

நவம்பரில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் தோழர் அனுரவின் யாழ் கூட்டம் அவர்கள் அணிக்குப் பலம் சேர்த்திருந்தது. ஆனால், இம்மாதம் தோழர் அனுர மற்றும் தோழர் ஹரணியின் வடக்கு, கிழக்குப் பயணங்களும் பிரசாரங்களும் தற்போதே கட்சி மீதான எதிர் விமர்சனங்களை ஏற்படுத்தி வருகின்றன என்பதே கள நிலைமையாக இருக்கிறது.

குறிப்பாக மாவிட்டபுர முருகன் கோவில் கும்பாபிசேக நாளில் அங்கு சென்ற பிரதமர் ஹரிணியின் பாதுகாப்புக் கருதி ஏற்படுத்தப்பட்ட பாதுகாப்புக் கெடுபிடிகள் மற்றும் அதிரடிப்படையினர் காலணியுடன் ஆலய வளாகத்தில் உலாவியது பகதர்களுக்கு பெரும் கசப்புணர்வையே ஏற்படுத்தியிருந்தது. மறுபுறத்தில், ஹரிணியின் செல்வாக்கைப் பயன்படுத்த நினைத்த NPP ஒன்றிற்கு மேற்பட்ட இடங்களில் தேர்தல் விதிமுறைகளை மீறியதும் கட்சி மீதான எதிர் விமர்சனங்களை ஏற்படுத்தியது.

இவ்வாறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், அடாத மழையிலும் விடாது குடை பிடிப்பது போல அமைச்சர் சந்திரசேகரன், “மற்றைய கட்சிகள் முன்னர் செய்யாத ஒன்றையா நாங்கள் செய்துவிட்டோம்?” என்று தமது தேர்தல் விதிமுறை மீறல்களை நியாயப்படுத்த முனைந்தது, இவர்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்றே எண்ண வைத்தது.

இதே நேரம், கிழக்கில், மட்டக்களப்பில் தோழர் அனுர பேசிய ஒரு விடயம், அவரைப்பற்றி தமிழ் மக்கள் பலர் கடந்த ஒரு வருடத்தில் வைத்திருந்த நல்லபிப்பிராயத்தை சிதைக்கும் வகையில் அமைந்து விட்டது.

கடந்த சில வருடங்களாகவே தையிட்டி சட்டவிரோத விகாரை விடயம் தமிழ் அரசியல் பரப்பில் ஒரு பேசு பொருளாகவே இருந்து வருகிறது. அதனாலேயே அந்த விடயம் கடந்த ஜனவரி மாதம் அனுர யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டபோது அதுவும் ஒரு பேசு பொருளாக்கப்பட்டது. அன்று அதற்கு சரியான பதில் சொல்லாது தவிர்த்துக் கொண்டார். அவர் பதில் சொல்ல முன்னர் ஒரு யாழ் எம்பி ஒருவர் தலியீடு அனுரவின் உள்ளக் கிடக்கையை மக்கள் அறிந்து கொள்ளாமல் செய்துவிட்டது.

ஆனால் இரண்டு மாதங்கள் கழித்து ஏப்ரல் 12 இல் மட்டக்களப்பில் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனுரவின் பேச்சு அனுரவினதும் அரசினதும் நிலைப்பாட்டைத தமிழர்கள் அறிந்து கொள்ள உதவியது எனலாம். அவர் தனது உரையில் தனியார் காணிக்குள் சட்டவிரோதமாக கட்டப்பட்ட விகாரை தொடர்பில் அந்தக் காணி உரிமையாளருக்கு நியாயம் வழங்க வேண்டிய நிலையில் இருந்து விலகியது மட்டுமில்லாமல், அங்கு விகாரை கட்டப்பட்டதை நியாயப்படுத்தும் வகையிலேயே பேசியிருந்தார்.

பொதுவாக கோவில்கள், விகாரைகள் தொடர்பான பிரச்சனைகளைப் பற்றிப பேசுவதைப் போல தையிட்டி விகாரை தொடர்பாக விகாராதிபதியும் மக்களும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டிய விடயம் என்று சொல்லி அந்த விகாரையை கட்டிய முந்தைய அரசின் குற்றத்திற்கு வெள்ளையடித்ததையும் பார்க்க முடிந்தது. தனது பொறுப்பைத் தட்டிக் கழித்ததையும் அவதானிக்க முடிந்தது. சட்ட விரோத விகாரைக்கு எதிரான மக்கள், மற்றும் தமிழ்க் கட்சிகளின் போராட்டத்தை மலினமான அரசியல் உத்தி என்றும் அது இனவாத அரசியல் என்றும் விமர்சித்தார். இவ்வாறு தனது நிலைப்பாட்டை நைச்சியமாக வெளிப்படுத்தி தானும் சிங்கள பேரினவாத அரச இயந்திரத்தின் ஒரு சாரதி மட்டுமே என்பதை வெளிப்படுத்தியிருந்தார்.

மொத்தத்தில் வடக்கு கிழக்கில் மெல்லச் சரிந்து வரும் தமது செல்வாக்கை நிமிர்த்த யாழுக்கு விரைந்த தோழர் ஹரணியின் பயணமும் கிழக்கில் தோழர் அனுரவின் பயணமும் அவர்களின் கட்சிக்குப் பலம் சேர்க்கத் தவறியுள்ளது. மெல்ல மெல்ல NPPயின் சாயமும் வெளுக்கத் தொடங்கியுள்ளது.

- வீமன் -

Address

London, ON

Website

Alerts

Be the first to know and let us send you an email when அக்கம்-பக்கம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category