
08/05/2025
செம்மணிப் புதைகுழி.......! ( தமிழ் கட்டுரை )
நாங்கள் தமிழர் என்பதால் கொல்லப்பட்டோம்,
இனியும் கொல்லப்படப்போகின்றோம்.....! இது இலங்கை அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரல்களில் ஒன்று. ஏனெனில்.....? அந்த நாடு சிங்கள பவுத்த நாடாக மாற்றப்படுவதற்கே.
இனப்படுகொலையின் ஒரு சான்று
செம்மணி மனிதப் புதைகுழி.
செம்மணிப் புதைகுழி, ஈழத்தமிழர் பலரது செங்குருதி கலந்த மர்மக்குழி. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மறைக்கப்பட்ட கதைகள் புதைந்துகிடக்கின்ற தமிழர் பூமி. இறுதியுத்த இனவழிப்பின் சான்றுபோன்றே இதுவும் யாழ்குடாநாட்டில் இலங்கை அரசுநடத்திய பெரும் இனப்படுகொலையின் ஒருபகுதி.
இன்று , செம்மணி சிந்துபாத்தி மயான புதைகுழியே எங்கும் பேசுபொருளாக இருக்கின்றது. இப் புதைகுழியில் தோண்டத்தோண்ட குழந்தைகள் தொடக்கம் பெண்கள், ஆண்கள் என்ற வேறுபாடின்றி வரும் நூற்றுக்கு மேற்பட்ட மனித எச்சங்களால் உலகமே அதிர்ச்சியடைந்துள்ளது. இதனால் ஈழத்தமிழர் இதயங்கள் நொறுங்குகின்றன. தம் பிள்ளைகளை, கணவன்மார்களைக் காணாமல் இன்றும் தேடியலையும் உறவுகளுக்கு இன்னும் கண்ணீரை வரவைக்கின்றன. இறுதியுத்தம் முடிந்து அதன் தாக்கத்திலிருந்து இன்னும் மீளமுடியாமல் இருக்கும் மக்கள் மத்தியில் இப்புதைகுழி சம்பவம் இன்னும் பேரதிர்ச்சியையே கொடுக்கின்றது.
1996 ஆம் ஆண்டு கிருஷாந்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அவரோடுசேர்த்து மேலும் மூவர் படுகொலை செய்யப்பட்டதை சட்டம் அறிந்தும் அதற்கான தீர்வுகள் முழுமையாக மூடிமறைக்கப்பட்ட நிலையில் தொடர்ந்தும் பல உறவுகள் ஏன் கொன்றார்கள் ? யார்கொன்றார்கள்? என்ன காரணத்துக்காக கொன்றார்கள்? எப்போது கொன்றார்கள்? ஏன் கைதுசெய்தார்கள்? என்ற விசாரணைகளுமின்றியே உயிரோடு புதைந்துபோயுள்ளன. எமக்கொரு நீதி கிடைக்காதா? எங்களை இன்று கண்டுபிடிப்பார்களா? என்ற ஏக்கத்தோடே எலும்புக்கூடுகளாக பலர் புதையுண்டு கிடக்கின்றனர். செம்மணியில் மட்டுமன்றி எம்மண்ணில் தோண்டாப்படாமல் எச்சங்கள் நிறைந்த புதைகுழிகள் இன்னும் பரவிக்கிடக்கின்றன. கிருஷாந்தி உள்ளிட்ட நால்வரின் சான்றுகள் கிடைக்காதிருந்திருந்தால் செம்மணியும் மறைமுக புதைகுழியாகவே இன்று இருந்திருக்கும்.
முள்ளிவாய்க்கால் மண்ணில் கண்முண்ணே நடந்த படுகொலைக்கு இதுவரை எந்தத் தீர்வும்கிடைக்காமல் உலகநாடுகளுடன் முட்டிமோதும் எமக்கு , இதற்கு ஒரு நீதியை பன்னாட்டு அரசுகள் பெற்றுதருமா? என்பது பெருந்துயரம். இருப்பினும் இதுதொடர்பான பன்னாட்டு சுதந்திர விசாரணையை நடத்தி அறிவியல்ரீதியான அகழ்வினை மேற்கொண்டு உரிய நடவடிக்கையை விரைந்து எடுத்து தக்க தீர்வினைப் பெற்றுத்தரவேண்டும் என்பதே தமிழ்மக்களின் ஒருமித்த குரலாக உள்ளது.
https://en.wikipedia.org/wiki/Chemmani_mass_graves