16/07/2025
வேதாரண்யத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்ட 25 வது மாநாடு, இம்மாதம் 14, 15 தேதிகளில் நடைபெற்றது. இதில், 37 பேர்களைக் கொண்ட புதிய மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டு, மாவட்டச் செயலாளராக சிவகுரு.பாண்டியன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். மாநாட்டில், கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக் குழு செயலாளர் கோ.பழனிச்சாமி, நாகை மக்களவை உறுப்பினர் வை.செல்வராசு, கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் கோ.பாண்டியன், மாவட்ட முன்னாள் செயலாளர் என்.சம்பந்தம், மாநிலக்குழு உறுப்பினர் டி.செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: நாகை மாவட்டத்தில் வைக்கோல், சவுக்கு, கருவேல் மரங்களை மூலப் பொருளாகக் கொண்டு காகிதத் தொழிற்சாலை அமைய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் மின் இறைவைப் பாசனத் திட்டப் பொறிமனைகளை சீரமைக்க வேண்டும், இலங்கை கடற்படையினர் மற்றும் கடற்கொள்ளையர்களால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுவதை ஒன்றிய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும், நூறு நாள் வேலை திட்டத்தில் தினக்கூலியை ரூ.600 ஆக அதிகரித்து, 200 நாள் வேலை வழங்க வேண்டும். உப்பு உற்பத்தியை மேம்படுத்தவும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் சிறப்பு திட்டத்தை உருவாக்க வேண்டும். பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும். அகஸ்தியம்பள்ளி (வேதாரண்யம்) - திருத்துறைப்பூண்டி வழித்தடத்தில் நாள்தோறும் சென்னை வரையில் பயணிகள் ரயில்களை இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.