30/05/2026
காங்கிரஸ் இனி மெல்லச் சாகும்!
தேர்தல் பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலினோடு ராகுல் காந்தி ஒன்றாக கலந்துகொள்ளவில்லை, பிரிவு உறுதியாகிவிட்டது என்று பலர் பேசினார்கள். ஆம், அணி மாறத்தயாராகி இருந்த காங்கிரஸை ப.சிதம்பரம்தான் இழுத்துப்பிடித்து ஒட்ட வைத்தார் என்று செய்திகள் வந்தன. தேர்தல் முடிந்தவுடன் அறுத்துக்கொண்டு ஓடிவிட்டது காங்கிரஸ்.
ஆனால் இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது?
விஜய்யின் பதவியேற்பு விழாவுக்கு வருகை தந்தாரே ராகுல் காந்தி! பக்கத்து மாநிலமான கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் பதவியேற்பு விழாவுக்கு கூட விஜய் செல்லவில்லை. அமைச்சர்களையும் யாரையும் அனுப்பவில்லை. அதுகுறித்து ஊடகங்கள் கேள்வி எழுப்பியபோதும் வழக்கம்போல வாயை திறக்கவில்லை விஜய்.
இப்போது டெல்லிக்கு சென்று பிரதமரை சந்தித்த விஜய் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தியையோ அல்லது ராகுல் காந்தியையோ சந்திக்கவில்லையே ஏன்? 3 கிமீ தொலைவுக்குள்தானே பிரதமர் இல்லமும் ராகுல் இல்லமும் உள்ளது. கால அவகாசமும் இருந்ததே! ஏன் சந்திக்கவில்லை?
காரணம், இனி காங்கிரஸின் தயவு தவெகவுக்கு தேவையில்லை. அதிமுகவை உடைக்க முயன்றவர்களில் நான்கு பேரை உடைத்து, தன் பக்கம் இழுத்துவிட்டோம், அவர்கள் எல்லோரையும் வெற்றி பெறச் செய்துவிடலாம் என்ற மிதப்பில் இருக்கிறார் விஜய். கூடவே, 20 ஆண்டுகள் சுமந்த திமுகவையே காங்கிரஸ் கட்சி ஒரு நொடியில் தூக்கியெறிந்து விட்டது. அரசியலில் கத்துக்குட்டியான நாம் எம்மாத்திரம் என்று யோசித்திருப்பார்கள். அதுமட்டுமல்ல, உள்ளாட்சித் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் அதிக இடங்களை ஒதுக்க வேண்டியிருக்கும், அவர்களை தூக்கிச் சுமப்பதற்கான கட்டமைப்பு பலமும் இன்னும் அங்கு உருவாகவில்லை. காங்கிரஸை தவெக இணைத்துக்கொண்டிருப்பதை பாஜகவும் விரும்பவில்லை.
எனவே காங்கிரஸை எப்படி கழட்டிவிடுவது என்று சிந்திக்கத் தொடங்கிவிட்டதன் அறிகுறியாகவே விஜய்யின் தொடர் நிராகரிப்புகள் உள்ளன. ‘கிடைக்காத கொம்புக்கு ஆசைப்பட்டு, கையில் இருந்த பூவை விட்டுவிடாதே’ என்பார்கள் ஊர்ப்பக்கம். காங்கிரஸால் எந்த காலத்திலும் தமிழ்நாட்டில் தனியாக கொம்பை எட்டிப்பிடித்து பூவை பறிக்க முடியாது. அடுத்தவர் முதுகில் சவாரி செய்துதான் சில எம்.எல்.ஏக்களையாவது பெற்றுக்கொண்டிருக்க முடியும். திமுகவும் இனி எந்த காலத்திலும் காங்கிரஸை சேர்க்கக்கூடாது என்று அக்கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி சமீபத்தில் பேசியிருக்கிறார்.
‘You will never rule over the people of Tamil Nadu’ அது பாஜகவுக்கு மட்டுமல்ல, காங்கிரஸுக்கும் சேர்த்துதான் சொல்லிக்கொண்டாரோ ராகுல் காந்தி!
காங்கிரஸ் இனி மெல்லச் சாகும்! மிச்ச சொச்ச இருப்பும் காலியாகும்!
--பகிர்வு..