CinemaYugam

CinemaYugam Latest Tamil Cinema News and Update

ஒரே ஆண்டில் ரூ. 100 கோடி கலெக்சன் செய்த 3 படங்கள்... மலையாள சினிமாவில் அரிய சாதனைமலையாளத் திரையுலகில் ஒரே ஆண்டில் மூன்று...
26/09/2025

ஒரே ஆண்டில் ரூ. 100 கோடி கலெக்சன் செய்த 3 படங்கள்... மலையாள சினிமாவில் அரிய சாதனை

மலையாளத் திரையுலகில் ஒரே ஆண்டில் மூன்று படங்கள் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மோகன் லால். நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவர் இவர். கடந்த 1978-ஆம் ஆண்டு வெளியான ‘தீரனோட்டம்’ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா திரையுலகில் கதாநாயகனாக அடியெடுத்து வைத்தவர் மோகன்லால்.

தன்னுடைய எதார்தமான நடிப்பால் குறுக்கிய காலத்திலேயே முன்னணி நடிகர் என்ற பெருமையை பெற்ற மோகன்லால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவர் மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், கன்னடம் போன்ற மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார்.

நடிகர் மோகன்லால் நடிப்பதோடு மட்டுமல்லாமல் மலையாளத்தில் ஒளிப்பரப்பாகும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறது. தற்போதுள்ள மார்டன் இயக்குநர்களுடன் வரை பணிப்புரிந்த நடிகர் மோகன்லால் இதுவரை 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவரின் நடிப்பு திறமையை பாராட்டி இவருக்கு பத்ம ஸ்ரீ, பத்மபூஷன் போன்ற விருதுகளும் வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் நடிகர் மோகன் லாலுக்கு திரையுலகில் வாழ்நாள் சாதனை படைத்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் ‘தாதா சாகேப் பால்கே’ விருது வழங்கப்பட்டது.

இந்த விருதினை டெல்லியில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கையினால் நடிகர் மோகன் லால் பெற்றுக் கொண்டார். மேலும், ”இந்தத் தருணத்தை பெருமையாக உணர்கிறேன். மலையாள சினிமாவின் பிரதிநிதியாக இந்த தேசிய அடையாளத்தை பெறும் இளமையான நடிகர் மற்றும் எங்கள் மாநிலத்திலிருந்து இந்த விருதைப் பெறும் இரண்டாவது நபர் நான்தான்.

இந்தத் தருணம் எனக்கானது மட்டுமல்ல, இது ஒட்டுமொத்த மலையாள திரை சமூகத்திற்கானது” என்று பெருமையாக பேசியிருந்தார். இந்நிலையில், மலையாள நடிகர் மோகன்லாலுக்கு இந்த ஆண்டு மிக சிறப்பாக அமைந்திருக்கிறது.

அதாவது, சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘ஹிருதயபூர்வம்’ திரைப்படம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் செய்து 100 கோடி கிளப்பில் இணைந்தது. தொடர்ந்து, ‘எம்புரான் 2’ திரைப்படம் ரூ.268 கோடியும், ‘தொடரும்’ திரைப்படம் ரூ.235 கோடியும் வசூலித்தது.

இதன் மூலம் மோகன்லால் நடித்த மூன்று படங்கள் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. மலையாளத் துறையில் ஒரே வருடத்தில் மூன்று நூறு கோடி வசூல் செய்த படங்களை கொடுத்து அரிய சாதனை படைத்திருக்கிறார் நடிகர் மோகன்லால்.

மேலும், ஒரே வருடத்தில் திரையுலகில். ரூ. 600 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டிய மலையாள நடிகர் என்ற சாதனையையும் அவர் படைத்திருக்கிறார்.

கடனில் தத்தளிக்கும் ரோபோ சங்கர் குடும்பம்; தாலியை கழற்றி கொடுத்த இந்திரஜா: பலரும் அறியாத தகவல் சொன்ன நாஞ்சில் விஜயன்!ரோப...
26/09/2025

கடனில் தத்தளிக்கும் ரோபோ சங்கர் குடும்பம்; தாலியை கழற்றி கொடுத்த இந்திரஜா: பலரும் அறியாத தகவல் சொன்ன நாஞ்சில் விஜயன்!

ரோபோ சங்கரின் உடல்நலக் குறைவுக்கு குடிப்பழக்கம் மட்டுமே காரணமல்ல என்றும், அவர் மேடைக் கலைஞராக இருந்தபோது பூசிக்கொண்ட பெயிண்ட் மற்றும் ஓயாத உழைப்பு ஆகியவையும் காரணங்கள் என்றும் நாஞ்சில் விஜயன் தெளிவுபடுத்தினார்.

திரைத்துறையில் தனது தனித்துவமான நகைச்சுவை மூலம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்த நடிகர் ரோபோ சங்கர் அண்மையில் திடீரென உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலக நண்பர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், ரோபோ சங்கரின் நெருங்கிய நண்பரும் கலைஞருமான நாஞ்சில் விஜயன் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி, அவரது குடும்பம் எதிர்கொண்ட துயரங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து பலரின் மனதை நெகிழச் செய்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் ரோபோ சங்கரின் உடல்நலக் குறைவுக்கு அவரது குடிப்பழக்கமே முக்கிய காரணம் என்று பலரும் பரப்பி வந்தனர். இந்த வதந்திக்குப் பதிலளித்த நாஞ்சில் விஜயன், "குடிப்பழக்கம் ஒரு காரணமாக இருந்திருக்கலாம், ஆனால் அது மட்டுமே காரணம் இல்லை. அவர் ஒரு மேடை கலைஞராக இருந்தபோது உடம்பில் பூசிக்கொண்டிருந்த பெயிண்ட், ஓய்வில்லாத அவரது உழைப்பு என அனைத்தும் சேர்ந்துதான் அவரது உடல்நலப் பாதிப்பிற்கு வழிவகுத்தன," என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ரோபோ சங்கர் உடல்நலம் பாதிக்கப்பட்டு, மரணத்தின் விளிம்புக்கே சென்றார். அப்போது அவரது மனைவி பிரியங்கா போராடி அவரை அந்தப் பழக்கத்திலிருந்து மீட்டு வந்தார். ஆனால், குடிப்பழக்கத்திலிருந்து மீண்டு வந்த அவரை எந்தத் தொலைக்காட்சியும் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்று வாய்ப்புகள் கொடுக்கவில்லை என்று நாஞ்சில் விஜயன் வருத்தத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

வாய்ப்புகள் இல்லாத காரணத்தால், கடந்த இரண்டு வருடங்களாக ரோபோ சங்கர் கடுமையான மன அழுத்தத்தில் இருந்திருக்கிறார். அவர் வசித்து வந்த வளசரவாக்கம் வீட்டிற்கு மட்டும் மாதம் ஒரு லட்சம் ரூபாய் இ.எம்.ஐ செலுத்த வேண்டிய கட்டாயம் இருந்திருக்கிறது. இந்தக் கடுமையான சூழ்நிலையிலும் அவர் ஓடி ஓடி உழைத்திருக்கிறார்.

மருத்துவச் செலவுகளுக்காக ரோபோ சங்கர் குடும்பம் அனுபவித்த போராட்டங்களை நாஞ்சில் விஜயன் கண்கலங்கப் பகிர்ந்து கொண்டார். "ரோபோ சங்கர் ஏற்கனவே மருத்துவமனையில் இருந்தபோதே ஐம்பது லட்ச ரூபாய்க்கும் மேல் செலவாகிவிட்டது. அவ்வளவு பணத்தைச் செலவு செய்துதான் பிரியங்கா அவரை மீண்டும் வீட்டிற்குக் கொண்டு வந்தார். மீண்டும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, மருத்துவச் செலவிற்காக மிகவும் கஷ்டப்பட்டார்கள்.

அவரது மனைவி பிரியங்கா அணிந்திருந்த தாலி உட்பட அத்தனை நகைகளையும் மருத்துவமனையிலேயே கழட்டிக் கொடுத்தார். அதேபோல, அவரது கணவர் கார்த்திக்கும் தனது கையில் அணிந்திருந்த செயின், மோதிரம் என அனைத்தையும் கழட்டிக் கொடுத்துதான் மருத்துவச் செலவு செய்யப்பட்டது. அனைத்தையும் அருகில் இருந்து கண்கூடாகப் பார்த்தவன் நான்," என்று மனம் உருகிப் பேசியுள்ளார்.

ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா அதிக வருமானம் இல்லாத காரணத்தினால் பல பிரமோஷன் வீடியோக்களைச் செய்து வருகிறார் என்று சமூக வலைத்தளங்களில் சிலர் விமர்சனங்கள் வைக்கின்றனர். அது குறித்துப் பேசிய நாஞ்சில் விஜயன், "ஒரு குடும்பம் மகிழ்ச்சியாகத் தோன்றுகிறது என்பதற்காக அவர்களுக்கு எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என்று நினைத்துவிடக் கூடாது. ரோபோ சங்கர் குடும்பம் மிகப்பெரிய கடன் சுமையில் இருக்கிறது," என்று கூறி இந்திரஜாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

அதேபோல, ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா இறுதி ஊர்வலத்தில் ஆடியதை சிலர் விமர்சனம் செய்தனர். அதற்கு விளக்கமளித்த நாஞ்சில் விஜயன், "இறுதி ஊர்வலத்தில் ஆடியது வேதனையின் உச்சத்தில் ஆடினார். தனது கணவருக்குப் பிடித்ததை கடைசியாகச் செய்தார். அதைத் தமிழ் மக்கள் நிச்சயம் புரிந்து கொள்வார்கள்," என்று பிரியங்காவின் செயலுக்கு விளக்கமளித்துள்ளார்.

வில்லனா நல்லா போய்ட்டு இருக்கு, அதை கெடுக்க பாக்குறீங்களா? ஹீரோ வாய்ப்பை மறுத்த நெப்போலியன்!கதாநாயகன் வாய்ப்பு வரும் பொழ...
24/09/2025

வில்லனா நல்லா போய்ட்டு இருக்கு, அதை கெடுக்க பாக்குறீங்களா? ஹீரோ வாய்ப்பை மறுத்த நெப்போலியன்!

கதாநாயகன் வாய்ப்பு வரும் பொழுது தான் மறுத்ததற்கான காரணம் குறித்து நடிகர் நெப்போலியன் மனம் திறந்துள்ளார்.

தமிழ் திரையுலகில் வில்லனாக அறிமுகமானவர் நடிகர் நெப்போலியன். இவர் ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்துள்ளார். தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வலம் வந்தவர் நெப்போலியன்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பல மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் நெப்போலியன் நடிப்பது மட்டுமல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டு வந்தார். பின்னர் தன்னுடைய பிள்ளைகளின் விருப்பத்திற்கேற்ப அரசியலில் இருந்து விலகி அவ்வப்போது படங்களில் நடித்து வருகிறார்.

இவர் தற்போது அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். இந்நிலையில், நடிகர் நெப்போலியன் கதாநாயகன் வாய்ப்பை மறுத்தது தொடர்பாக விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது, "நான் எல்லா மொழிகளிலும் வில்லனாக நடித்துக் கொண்டிருந்தேன். ரொம்ப பிசியாக நடித்துக் கொண்டிருந்தேன்.

அப்போது, இயக்குநர் பி.ஜி.ஸ்ரீகாந்த், உங்களை வைத்து கதாநாயகனாக படம் செய்யப் போகிறோம் என்றார். நான் எனக்கு ஹீரோ ஆசை எல்லாம் இல்லை என்று கூறினேன். அதற்கு அவர் இல்லை கதை ரொம்ப அற்புதமான கதை. ரொம்ப உயிரோட்டமாக இருக்கும்.

உண்மை சம்பவத்தை செளபா எழுதியிருக்கிறார். அது ஜூனியர் விகடனில் வாரம் வாரம் வந்திருக்கிறது. அதை ராஜேஸ்வர் திரைக்கதையாக அருமையாக எழுதியிருக்கிறார். நீங்கள் நடித்தீர்கள் என்றால் நன்றாக இருக்கும் என்றார். கதையை படித்துப் பாருங்கள் என்றார்.

நான் சாதாரணமாக படித்து பார்த்தேன். அந்த புத்தகத்தை ஒரே நாளில் படித்து முடித்துவிட்டேன். அதை படித்ததும் எனக்கு மிகவும் பிரம்மிப்பாக இருந்தது. என்னடா இவ்வளவு நடந்திருக்கிறது. அதுவும் உண்மையாக நடந்திருக்கிறது.

நடித்து பார்த்தால் தான் என்ன என்று நான்கு முறை படித்து பார்த்தேன். ஒரு உற்சாகம் வந்தது. அப்படி நடித்தது தான் ’சீவலப்பேரி பாண்டி’ திரைப்படம் . வெற்றி பெற்றால் கதாநாயகனாக மாறலாம். இல்லையென்றால் வில்லனாக இருக்கலாம் என்று நடித்தேன்.

ஆனால், ‘சீவலப்பேரி பாண்டி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. அதன்பின்னர் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்துவிட்டேன்.‘கிழக்கு சீமையிலே’ திரைப்படம் வெற்றி பெரும் என்று நினைத்தேன் ஆனால் மிகப்பெரிய வெற்றியடையும் என்று நினைக்கவில்லை. ஒரு வருடம் எல்ல திரையரங்கிலும் ஓடியது. சிவனாண்டி என்ற கதாபாத்திரம் உயிரோட்டமாக அமைந்தது” என்றார்.

ஏசி ரூம்ல உக்காந்து சம்பாதிக்கிறார்...இளையராஜா பற்றி ரஜினி சர்ச்சை பேச்சு...30 ஆண்டு பழைய மோதல்30 ஆண்டுகளுக்கு முன் இசைஞ...
14/09/2025

ஏசி ரூம்ல உக்காந்து சம்பாதிக்கிறார்...இளையராஜா பற்றி ரஜினி சர்ச்சை பேச்சு...30 ஆண்டு பழைய மோதல்

30 ஆண்டுகளுக்கு முன் இசைஞானி இளையராஜா பற்றி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் சர்ச்சைக்குரிய பேச்சு தற்போது மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது

தமிழ்நாடு அரசு சார்பாக இசைமைப்பாளர் இளையராஜாவுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட பாராட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது ரசிகர்களிடையே கலவையான எதிர்வினைகளை சந்தித்து வருகிறது. இதேபோல் 30 ஆண்டுகளுக்கு முன் இளையராஜாவின் 500 ஆவது பட விழாவில் இளையராஜா பற்றி ரஜினி பேசியது தற்போது நெட்டிசன்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது

இளையராஜா பாராட்டு விழாவில் ரஜினி

இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டுகால இசைப்பயணத்தை போற்றும் விதமாகவும் லண்டனில் இளையராஜா சிம்பனி இசை நிகழ்த்தியதை கெளரவிக்கும் விதமாகவும் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி நடத்தியதும முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் , கமல்ஹாசன் ஆகிய தமிழ் சினிமாவின் இரு உச்ச நட்சத்திரங்கள் கலந்துகொண்டார்கள்.

நிகழ்ச்சியில் இளையராஜா பற்றி நடிகர் ரஜினிகாந்த் பல்வேறு நிகழ்வுகளை சுட்டிக்காட்டி பாராட்டி பேசினார். ரஹ்மானின் வருகைக்குப் பின் இளையராஜா மார்கெட் இழந்தது , காப்புரிமைக்கு எதிரான சட்டப் போராட்டம் , மனைவி ஜீவா மற்றும் மகள் பவதாரிணியின் மரணம் ஆகியவற்றைப் பற்றி ரஜினி பேசியது பலவரை கவர்ந்தது. பின் ஜானி படத்தின் ரெக்கார்டிங்கின் போது இளையராஜா அரை பாட்டில் பீரை அடித்துபோட்ட ஆட்டம் பற்றியும் நடிகைகளைப் பற்றி கிசுகிசு பேசியது பற்றியும் ரஜினி கலகலப்பாக பகிர்ந்துகொண்டார். இந்த பேச்சுக்கு நேற்று தொடங்கி சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் வந்தபடி உள்ளன . முதலமைச்சர் அமர்ந்திருக்கும் மேடையில் இப்படியா பேசுவது என பலர் ரஜினியின் பேச்சை விமர்சித்தனர். அண்மையில் கூலி இசை வெளியீட்டு நிகழ்ச்சியிலும் மலையாள நடிகர் செளபின் சாஹிர் பற்றி ரஜினி பேசியது சர்ச்சைக்கு உள்ளானது. அந்த வகையில் 30 ஆண்டுகளுக்கு முன் இளையராஜாவின் 500 ஆவது பட விழாவில் இளையராஜா பற்றி ரஜினி பேசியது தற்போது நெட்டிசன்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது

ஏசி ரூமில் உட்கார்ந்து சம்பாதிக்கிறார்

மணிரத்னம் இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு வெளியான அஞ்சலி படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இது அவரது 500 ஆவது படம். இந்த படத்தின் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது இளையராஜா பற்றி பேசிய ரஜினி " அதில் ரஜினி,
நாங்கெல்லாம் பாருங்க வெயில்லையும் மழையிலயும் கஷ்டப்பட்டு நடிக்கிறோம். ஆனா இவரு பாருங்க ஏசி ரூம்ல உக்காந்துகிட்டு அந்த ரூபாய சம்பாதிக்கிறார் என்று பேசிவிட்டார்." அது அந்த சமயம் பெரிய விவாதப் பொருளானது. பத்திரிகைகளில் மாறி மாறி கட்டுரைகள் வந்தன.‌ ஒரு ஹீரோவின் சம்பளம் என்பது இசையமைப்பாளரின் சம்பளத்தை ஒப்பிடும்போது ஏகப்பட்ட மடங்கு. இப்படி கம்பேர் செய்திருக்கக் கூடாது என்றும், இசை என்பது ஒரு வேலை நடிப்பு என்பது ஒரு வேலை இரண்டையும் ஒரே தராசில் வைத்து ஒப்பிடக்கூடாது என்றும், சில பத்திரிகைகளில் அப்படி ஆர்வமாக இருந்தால் ரஜினிகாந்த் இசை அமைக்க செல்லலாமே என்று கிண்டலாகவும் பல கட்டுரைகள் வந்தன." இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி தற்போது நெட்டிசன்கள் ரஜினியை விமர்சித்து வருகிறார்கள்.

விஜய் ஆண்டனி பெயர் வச்சது இவர்தான்: இப்போ ராசியா இருக்காரே, என்ன குறைச்சல்? விஜய் அம்மா ஷோபா பேச்சு!இசையமைப்பாளராக ரசிகர...
12/09/2025

விஜய் ஆண்டனி பெயர் வச்சது இவர்தான்: இப்போ ராசியா இருக்காரே, என்ன குறைச்சல்? விஜய் அம்மா ஷோபா பேச்சு!

இசையமைப்பாளராக ரசிகர்களின் மனதில் வெற்றி கொண்ட விஜய் ஆண்டனி, நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் அசத்தி வருகிறார். தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் முதன்முதலில் இசையமைப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கினார். 2005ல் ‘சுக்ரன்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அவர், 2008ல் வெளியான ‘காதலில் விழுந்தேன்’ படத்தின் "நாக்க முக்கா" பாடலால் பெரும் புகழைப் பெற்றார். இதைத் தொடர்ந்து, ‘வேட்டைக்காரன்’, ‘நான்’, ‘பிச்சைக்காரன்’ போன்ற படங்களில் இசையமைத்ததுடன், பின்னணிப் பாடகராகவும் இடம்பிடித்தார்.

2012ல் ‘நான்’ திரைப்படத்தின் மூலம் நடிகராகத் திரைத்துறையில் புதிய அடிமை எடுத்து வைத்தார். 2016ல் வெளியான ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் அவரது திரைப்பட பயணத்தில் மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது. இதில் நடிகராகவும், இசையமைப்பாளராகவும், தயாரிப்பாளராகவும் இருந்தார். பிச்சைக்காரன் படம் பல மொழிகளில் டப் செய்யப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து, ‘சாலை’, ‘யாமிருக்க பயமேன்’, ‘காளி’, ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’, ‘பிச்சைக்காரன் 2’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

‘பிச்சைக்காரன் 2’ படம் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார். தனது படங்களில் சமூகத்தின் உண்மைகள், உணர்ச்சி பூர்வமான கதைகள், ஏழை மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு செல்வதன் மூலம் தனித்துவமான பாணியை உருவாக்கியுள்ளார். விஜய் ஆண்டனி ஒரு இசையமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகத் திறமைகளுடன் தமிழ் சினிமாவில் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளார்.

இசையமைப்பாளராக ரசிகர்களின் மனதில் வெற்றி கொண்ட விஜய் ஆண்டனி, நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் அசத்தி வருகிறார். தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி, தமிழ் சினிமாவின் வெற்றி நாயகனாகவும் உலா வருகிறார்.

இவரின் 25-வது படமாக சக்தித் திருமகன் படம் உருவாகியிருக்கிறது. அருவி, வாழ் போன்ற படங்களை இயக்கிய அருண் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் ட்ரைலர் வெளியீடு, விஜய் ஆண்டனியின் 25-வது படத்துக்கான நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அதில் அவரை பற்றி தளபதி விஜயின் அம்மாவான ஷோபா அவர்கள் பேசியுள்ளார்.

அதில் அவர் பேசுகையில், "விஜய் ஆன்டனி எங்கள் வீட்டில் ஒருவர் போல தான். நான் இன்றைக்கு வேறு ஒரு இடத்தில இருந்தேன். என்னை கால் செய்து அழைத்தார். நான் உடனே ஓகே நான் வரேன் என்று கூறிவிட்டேன். அவ்வளவு தான் விஜய் ஆன்டனி எங்களுக்கு. எண் கணவர் தான் 'சுக்ரன்' படத்தின் மூலம் அறிமுக படுத்தினார். அப்போது அவருடைய பெயர் பிரான்சிஸ் ஆன்டனி சிறில் ராஜா அனால் எண் கணவர் தான் விஜய் ஆன்டனி என்று மாற்றினார்." என்று பகிர்ந்துகொண்டார்.

இணையத்தில் ஓவர் நைட்டில் வைரலான பாடகர் சத்யன் மகாலிங்கம்...யார் இவர்?ரோஜா ரோஜா பாடலின் மூலம் கடந்த இரண்டு நாட்களாக இணையத...
09/09/2025

இணையத்தில் ஓவர் நைட்டில் வைரலான பாடகர் சத்யன் மகாலிங்கம்...யார் இவர்?

ரோஜா ரோஜா பாடலின் மூலம் கடந்த இரண்டு நாட்களாக இணையத்தில் பயங்கர வைரலாகியுள்ளார் பாடகர் சத்யன் மகாலிங்கம்

யார் இந்த சத்யன் மகாலிங்கம்

கடந்த இரு நாட்களாக வைரலாகி வருகிறார் பின்னணி பாடகர் மற்றும் இசையமைப்பாளர் சத்யன் மகாலிங்கம். இணையத்தில் ஒரு இளைஞர் காதலர் தினம் படத்தில் ரோஜா ரோஜா பாடலை பாடிய வீடியொ வைரலாகி வந்தது. யார் இந்த இளைஞர் என ரசிகர்கள் தேடுகையில் இது பின்னணி பாடர் சத்யன் மகாலிங்கம் என தெரியவந்துள்ளது. தமிழ் படங்களில் பல்வேறு பாடல்களை பாடியுள்ள இவருக்கு பெரியளவில் புகழோ அங்கீகாரமோ ஏன் கிடைக்கவில்லை என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

சத்யன் மகாலிங்கம் பாடிய பாடல்கள்

வசூல் ராஜா MBBS 2. ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் – கழுகு 3. சில் சில் மழையே – அறிந்தும் அறியாமலும் 4. அட பாஸு பாஸு – பாஸ் என்கிற பாஸ்கரன் 5. குட்டி புலி கூட்டம் – துப்பாக்கி 6. கனவிலே கனவிலே – நேபாளி 7. தோஸ்த் படா தோஸ்த் – சரோஜா 8. தீயே தீயே – மாற்றான் 9. குப்பத்து ராஜாக்கள் – பானா காத்தாடி 10. பகவான் Rap Song ஆகிய பாடல்களை சத்யன் மகாலிங்கம் பாடியுள்ளார்.

200 க்கும் மேல் பாடல்களை பாடிய சத்யனுக்கு கொரோணா காலத்தில் யாரும் பாட வாய்ப்பு தராததால் ஹோட்டலில் வேலைக்குச் சென்றார். விழித்திரு படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் சத்யன் மகாலிங்கம். கொரோணா நோய்த் தொற்று பரவலின் போது பல்வேறு மேடை மெல்லிசை இசைக் கலைஞர்கள் வேலை இல்லாமல் திண்டாடி வந்தனர். அவர்களுக்கு உதவும் விதமாக தனது சமூக வலைதள பக்கத்தில் 3 மாதங்கள் பாடல்களை பாடி அதில் வரும் நன்கொடையை தமிழ்நாடு மேடை மெல்லிசை கலைஞர்கள் சங்கத்திற்கு வழங்கினார். கிட்டதட்ட 16 லட்சம் ரூபாய் இப்படி அவர் நன்கொடையாக திரட்டி தமிழ்நாடு முழுவதிலும் உள்ள மேடை மெல்லிசை கலைஞர்களின் வங்கி கணக்கில் நேரடியாக ரூ 1000 செலுத்த உதவினார்.

இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா...ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஸ்பெஷல் பரிசு !முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ...
09/09/2025

இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா...ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஸ்பெஷல் பரிசு !

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இசைஞானி இளையராஜாவுக்கு செப்டம்பர் 13ஆம் தேதி பாராட்டு விழா நடைபெற இருக்கிறது.

இளையராஜாவுக்கு பாராட்டு விழா

தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இசைஞானி இளையராஜாவுக்கு செப்டம்பர் 13 ஆம் தேதி சென்னையில் பாராட்டு விழா நடக்கவுள்ளது. ரஜினி, கமல் உள்ளிட்ட பல திரையுலகினர் கலந்துகொள்ளும் இவ்விழாவில் இளையராஜா சிம்பொனி இசை நிகழ்ச்சியும் இந்த விழாவில் நடைபெற இருக்கிறது.

'அன்னக்கிளி'யில் அறிமுகம்

தன் அண்ணன் வைத்திருந்த பாவலர் இசைக்குழுவில் இசையமைத்து வந்தவர் இளையராஜா. தாயார் விரும்பி வைத்திருந்த ரேடியோவை விற்ற பணத்துடன், தன் சகோதரர்களுடன் சேர்ந்து சென்னை வந்தார்.பின்னர் வாய்ப்பு தேடி பல இடங்களில் சுற்றினார். அப்போது இயக்குனர் தேவராஜ் மோகன் இயக்கிய, சிவக்குமார் – சுஜாதா நடித்த ‘அன்னக்கிளி’ (1976) படத்தில் இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தின் பாடல்கள் – அன்னக்கிளி, மச்சானை பாத்தீங்களா, அடி ராக்காயி – பெரும் வரவேற்பைப் பெற்றன.

50 ஆண்டு இசை வாழ்க்கை

அந்த வருடமே நான்கு படங்களுக்கு இசையமைத்தார். பின்னர், அவர் அமைத்த பாடல்கள் நகரம் முதல் கிராமம் வரை பரவியது. ஒரே வருடத்தில் 30-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த காலமும் இருந்தது. எம்.ஜி.ஆர் முதல் விஜய் சேதுபதி, விக்ரம் வரை நான்கு தலைமுறையிலான நாயகர்களுக்காக பாடல்கள் அமைத்துள்ளார்.

விருதுகள்

அவரது பங்களிப்புக்காக 2010-இல் இந்தியாவின் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூஷண்வும், 2018-இல் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண்வும் வழங்கப்பட்டது. மேலும், தேசிய விருதை ஐந்து முறை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பனி இசை

தனது 82 ஆவது வயதில் 'வேலியன்' என்கிற தனது முதல் சிம்பனி இசையை உருவாக்கினார் இளையராஜா. கடந்த மார்ச் மாதம் இந்த சிம்பனி இசை லண்டனில் அரங்கேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதே இசைக்குழுவுடன் இந்த சிம்பனி இசையை தமிழ்நாட்டில் நிகழ்த்த இருக்கிறார்.

சரவண பவன் ராஜகோபால் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கும் மோகன்லால் ?சரவண பவன் ராஜகோபாலின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை மோகன்ல...
07/09/2025

சரவண பவன் ராஜகோபால் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கும் மோகன்லால் ?

சரவண பவன் ராஜகோபாலின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை மோகன்லாலை வைத்து இயக்குநர் த செ ஞானவேல் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஜகோபால் வாழ்க்கை வரலாற்றில் மோகன்லால்

ஜெய் பீம் , வேட்டையன் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் த செ ஞானவேல் தனது அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார். ஹோட்டல் சரவண பவன் நிறுவனர் ராஜகோபால் வாழ்க்கை வரலாற்றை ' தோசா கிங்' என்கிற படமாக எடுக்க பல ஆண்டுகளாக முயற்சித்து வந்தார் ஞானவேல். இதில் பல்வேறு சவால்கள் இருந்ததால் இந்த படத்திற்கான வேலைகள் தள்ளிப்போய் கொண்டிருந்தன. தற்போது சரவண பவன் ராஜகோபாலின் வாழ்க்கை வரலாற்று படத்தில் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். கன்னட இயக்குநர் ஹேமந்த் ராவ் இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். 150 கோடி பட்ஜெட்டில் இப்படம் 7 மொழிகளில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிச்சை ராஜகோபாலின் வாழ்க்கை வரலாறு

தூத்துக்குடியில் ஒரு சிறிய கிராமத்தில் வெங்காய விவாசாயிக்கு மகனாக பிறந்தவர் பிச்சை ராஜகோபால். 1973 ஆம் ஆண்டு சென்னைக்கு வந்து ஒரு சிறிய மளிகை கடையைத் தொடங்கினார். நெருப்பு சம்பந்தபட்ட ஒரு தொழிலை தொடங்கும்படி ஜோசியர் ஒருவர் வழங்கிய அறிவுரையின்படி 1981 ஆம் ஆண்டு சரவண பவன் என்கிற சைவ உணவகத்தைத் தொடங்கினார். குறைவான விலையில் தரமான உணவு வழங்கப்பட வேண்டும் என்பதை தனது கொள்கையை கடைசிவரை கடைபிடித்தார். மேலும் தனது உணவகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் , மருத்துவ காப்பீடு , வீட்டு கடன் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்துகொடுத்து மக்களால் செல்லமாக 'அண்ணாச்சி ' என அழைக்கப்பட்டார். ஒரு சிறு ஹோட்டலில் தொடங்கி 2019 ஆம் ஆண்டுக்குள் 22 நாடுகளில் 111 கடைகளை உருவாக்கினார். இதன் மொத்த சொத்து மதிப்பு ரூ 3000 கோடி.

ஜீவஜோதி வழக்கு

ஒருபக்கம் வியக்கதகுந்த மனிதராக கருதப்படும் ராஜகோபாலின் வாழ்க்கைக்கு மற்றொரு இருண்ட பக்கமும் இருக்கிறது. ஜோதிடத்தின் மேல் தீவிர நம்பிக்கைக் கொண்டிருந்தவர் ராஜகோபால் தனது தொழில் ரீதியான எல்லா முடிவுகளையும் ஜோதிடத்தின் அடிப்படையில் எடுக்கக் கூடியவர். அதே ஜோதிடத்திற்கு கட்டுப்பட்டு தனது உதவி மேலாளரின் மகள் ஜீவஜோதியை மூன்றாவது திருமணம் செய்துகொண்டால் உலகத்தின் மிகப்பெரிய செல்வந்தராகிவிடலாம் என நம்பினார். ஏற்கனவே பிரின்ஸ் சாந்தகுமார் என்பவருடம் திருமணம் ஆனவர் என்றபோது தொடர்ச்சியாக ஜீவஜோதிக்கும் அவரது குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுத்தார். 2001 ஆம் ஆண்டு ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமாரை கொலை செய்ததற்காக ராஜகோபாலுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது நீதிமன்றம். தண்டனையை குறைக்க ராஜகோலா மனுதாக்கல் செய்தபோது அவருக்கு ஆயுள் தண்டனையை தீர்ப்பளித்தது உயர் நீதிமன்றம். சிறை செல்வதற்கு இரண்டு நாட்கள் முன்பு ராஜகோபால் உயிரிழந்தார்.

கருத்து மோதல், அஜித்தை ரூமுக்குள் வைத்து அடித்தது உண்மையா? 'நான் கடவுள்' பற்றி மனம் திறந்த பாலா!கோலிவுட்டின் தவிர்க்க மு...
06/09/2025

கருத்து மோதல், அஜித்தை ரூமுக்குள் வைத்து அடித்தது உண்மையா? 'நான் கடவுள்' பற்றி மனம் திறந்த பாலா!

கோலிவுட்டின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார் அஜித்குமார். ஹெச்.வினோத் இயக்கத்தில் கடைசியாக அவர் நடித்த துணிவு படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்க அடுத்ததாக மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்கவிருக்கிறார் அஜித். இதன் ஷூட்டிங் விரைவில் தொடங்கவிருக்கிறது. லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். ஹீரோயின் யார் என்பதை இன்னும் படக்குழு முடிவு செய்யவில்லை.

அஜித் இப்போது கமர்ஷியல் ஹீரோவாக இருக்கிறார். ஆனால் தனது கரியரின் ஆரம்பத்தில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து கெட்டப்புகளை மாற்றி நடித்திருக்கிறார். அப்படி அவர் நடித்த வாலி,வில்லன், வரலாறு,சிட்டிசன் உள்ளிட்ட படங்கள் ஹிட்டாகவும் செய்தன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வரலாறு படத்தில் பெண் குணாதிசியங்களோடு ஏற்றிருந்த கதாபாத்திரம் பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

சேது படம் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் பாலா. அப்படத்தின் வெற்றிக்கு பின்னர் அவருடன் படம் பண்ண ஆர்வம் காட்டிய நடிகர்களில் அஜித்தும் ஒருவர். அந்த வகையில் நந்தா படத்தை முதலில் அஜித்தை வைத்து தான் உருவாக்க இருந்தாராம் பாலா. ஆனால் சில காரணங்களால் அஜித் அப்படத்தில் இருந்து விலகிவிட, பின்னர் தான் அதில் சூர்யா நடித்திருக்கிறார். நந்தா படமும் பிளாக்பஸ்டர் ஹிட்டாகிவிட, மீண்டும் பாலாவை நாடிய அஜித், அவரிடம் தனக்காக கதை ஒன்று தயார் செய்யுமாறு கூறி இருக்கிறார். அவர் அஜித் மீது என்ன கோபத்தில் இருந்தாரோ தெரியவில்லை. ஒரு அகோரி கதையை தயாரி செய்திருக்கிறார். அது தான் நான் கடவுள்.

இயக்குனர் பாலாவிடம் ஒரு பழக்கம் இருக்கிறதாம். அவர் யாருடன் படம் பண்ணினாலும் முழு கதையை சொல்ல மாட்டாராம். தன்னை நம்பினால் படத்தில் நடியுங்கள், இல்லையென்றால் வேண்டாம் என மூஞ்சில் அடித்தபடி சொல்லிவிடுவாராம். இந்த அகோரி கதையில் நடிக்க அஜித் ஓகே சொன்னதும் அவரை நீளமாக முடி மற்றும் தாடி வளர்க்க சொல்லி இருக்கிறார் அஜித்.

நீண்ட நாட்கள் அதே முடி மற்றும் தாடியோடு இருப்பதால் வேறு படங்களில் நடிக்க முடியாமல் போய் இருக்கிறது. அதேபோல் படத்தின் ஸ்கிரிப்டை தயார் செய்வதிலும் தாமதம் ஏற்பட்டு இருக்கிறது. ஒரு கட்டத்தில் பாலா என்ன தான் செய்கிறார் என்பதை தெரிந்துகொள்ள பாம் குரோ ஹோட்டலுக்கு சென்றிருக்கிறார் அஜித். அங்கு பாலா தன்னுடைய திரையுலக நண்பர்களுடன் இருந்தாராம்.

அஜித் மற்றும் பாலா இடையே வாக்குவாதம் நடந்ததாக கூறப்படும் ஓட்டல் சம்பவம் இன்னும் மர்மமாகவே உள்ளது. சிலர் அஜித்தை பாலாவின் நண்பர் அடித்ததாகவும், சிலர் அஜித் சேரை உதைத்து சென்றதாகவும், கூடவே துப்பாக்கி மிரட்டலும் நடந்ததாகவும் கூறுகிறார்கள். இந்த விவகாரம் குறித்து, நடிகை சங்கீதா பாலாவிடம் நேர்காணலில் கேள்வி எழுப்பினார்.

நான் கடவுள் படத்தில் அஜித் நடிக்க இருந்தபோது அவரை நீங்கள் ஓட்டல் அறைக்கு அழைத்து சென்று அடித்தீர்களா என்று சங்கீதா கேள்வி எழுப்ப, அதற்கு பதிலளித்த பாலா, நான் அஜித்தை அடித்தேன் என்று சொல்வதெல்லாம் பத்திரிகையாளர்களின் கற்பனை. ஆனால் அதே சமயம் எனக்கும் அவருக்கும் இடையே மனஸ்தாபம் வந்தது உண்மை தான் என்று பாலா சொன்னதும், அந்த அறையில் என்ன நடந்தது என சங்கீதா கேட்க, அது அல்டிமேட்டிடம் கேட்க வேண்டிய கேள்வி என்னிடம் ஏன் கேட்குறீங்க என சொல்லிவிட்டார் பாலா. இருந்தாலும் அந்த அறையில் நடந்த பிரச்சனை என்பது இன்றளவும் புரியாத புதிராகவே உள்ளது.

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தயாரிப்பாளர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த இளையராஜா!ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தி...
05/09/2025

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தயாரிப்பாளர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த இளையராஜா!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வெளியாகியுள்ள படம் குட் பேட் அக்லி. சிம்ரன், த்ரிஷா, பிரியா வாரியர், அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் பல பகுதிகளில் நாஸ்டால்ஜியாவிற்காக பழைய பட பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறாக கமல்ஹாசன் நடித்து வெளியான சகலகலா வல்லவன் படத்தில் வரும் ‘இளமை இதோ இதோ என்ற பாடலை அஜித்தின் சண்டை காட்சி ஒன்றில் பயன்படுத்தி இருந்தனர். அதுபோல அர்ஜூன் தாஸ் எண்ட்ரிக்கு ‘ஒத்த ரூபா தாரேன் என்ற பழைய பாடலை பயன்படுத்தி இருந்தனர். இந்த பாடல்களுக்கு இசையமைத்தவர் இளையராஜா.

இதையடுத்து இளையராஜா குட் பேட் அக்லி படக்குழுவிற்கு நோட்டிஸ் அனுப்பினார். தன்னுடைய அனுமதி இல்லாமல் தான் இசையமைத்த பாடல்களை படத்தில் பயன்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள அவர் அதற்கு இழப்பீடாக ரூ.5 கோடி தர வேண்டும் என்றும், இல்லாவிட்டால் வழக்குத் தொடரப்படும் என்றும் கூறியிருந்தார். ஆனால் சட்டப்பூர்வ உரிமையாளரிடம் பணம் பெற்றுக்கொண்டுதான் அந்தப் பாடலை பயன்படுத்தினோம் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ள இளையராஜா “சட்டப்பூர்வ உரிமையாளரிடம் இருந்து அனுமதிப் பெற்றதாக சொன்னாலும், அந்த நபர் யாரென்று சொல்லவில்லை.” எனக் கூறி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அவங்க ரொம்ப உயரம், நான் குள்ளம்; என்னால நடிக்க முடியாது; பிரபல நடிகரின் மனைவியுடன் ஜோடி சேர மறுத்த சிவகுமார்; நடிகை யார்...
04/09/2025

அவங்க ரொம்ப உயரம், நான் குள்ளம்; என்னால நடிக்க முடியாது; பிரபல நடிகரின் மனைவியுடன் ஜோடி சேர மறுத்த சிவகுமார்; நடிகை யார் தெரியுமா?

உயரம் காரணமாக ஒரு நடிகையும் நடிகர் சிவக்குமார் நடிக்க மறுத்துள்ளார். இந்நிலையில் உயரத்தால் சிவக்குமாருடன் இரண்டு படங்களில் நடிக்கும் வாய்ப்பு தவறி விட்டதாக அந்த நடிகையே கூறியுள்ளார்.

நடிகை பாரதி தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ்த் திரைப்படங்களில் 'நம்ம வீட்டு லட்சுமி', 'சந்திரோதயம்', 'நாடோடி', 'உயர்ந்த மனிதன்', 'நில் கவனி காதலி', 'ஆயுதம்', 'அம்முவாகிய நான்' போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

1975 ஆம் ஆண்டில், அவர் பிரபல கன்னட நடிகர் டாக்டர் விஷ்ணுவர்தனை மணந்தார். இவர்களுக்கு கீர்த்தி மற்றும் சந்தனா என்ற இரண்டு வளர்ப்பு மகள்கள் உள்ளனர். கன்னடத் திரையுலகில் சூப்பர் ஸ்டாராகக் கொண்டாடப்பட்ட விஷ்ணுவர்தன், சிவாஜி கணேசனுடன் 'உயர்ந்த மனிதன்' படத்தில் நடித்தவர். அவர் மறைந்த பிறகு, அவரது நினைவாக ஒரு நினைவிடம் அமைக்கும் பணியில் பாரதி தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் அவள் விகடனுக்கு அளித்த ஒரு பேட்டியில், நடிகை பாரதி நடிகர் சிவகுமாருடன் தனக்கு இருந்த நல்ல உறவு பற்றி மனம் திறந்து பேசினார். அப்போது, சிவகுமார் உடன் இரண்டு படங்களில் நடிக்க தான் நிராகரிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இதற்குக் காரணம், அவர்களது உயர வேறுபாடு. தன்னை விட பாரதி மிகவும் உயரமாக இருந்ததால், அவரால் ஜோடியாக நடிக்க முடியாது என சிவகுமார் அப்போது கூறியதாக பாரதி தெரிவித்தார்.

ஆரம்பகாலத்தில் இந்த உயர வேறுபாடு தனக்கு ஒரு தடையாக இருந்ததாகவும், ஆனால் பின்னர் அது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை என்றும் அவர் கூறினார். காட்சிகளில் சக நடிகர்களின் உயரத்திற்கு ஏற்ப தன்னை சரிசெய்து கொள்ள வேண்டியிருந்தது எனவும், அதற்கேற்ப இயக்குநர்களும் சரிசெய்தார்கள் எனவும் அவர் தெரிவித்தார். சிவகுமார் உயர வேறுபாட்டைக் காரணம் காட்டியபோதிலும், நாகேஸ்வர ராவ் மற்றும் என்.டி. ராம ராவ் போன்ற நடிகர்கள் தனக்கு இணையாக இருந்தனர் என்பதையும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.

நடிகர் சிவகுமாருடன் இரண்டு படங்களில் நடிக்க இருந்த வாய்ப்பை இழந்ததாக பாரதி தெரிவித்தார். அவங்க ரொம்ப உயரம், நான் குள்ளம் என்னால நடிக்க முடியாது என்று சிவகுமார் கூறியதால் அந்தப் படங்களிலிருந்து தான் நீக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். தனது தொழில் வாழ்க்கையின் ஆரம்பத்தில் இந்த உயர வேறுபாடு ஒரு பெரிய தடையாக இருந்ததாகவும் குறிப்பிட்டார். அதுமட்டுமின்றி சிவக்குமார் நல்ல மனிதர் தற்போது கூட என்னிடம் நன்றாக பேசுவார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நகைச்சுவை என்ற பெயரில் க்ரிஞ்ச்.. ஃபகத் பாசிலுக்கு இப்படி ஒரு சோதனையா.. ரசிகர்கள் வருத்தம்ஃபகத் பாசில் நடிப்பில் வெளியா...
31/08/2025

நகைச்சுவை என்ற பெயரில் க்ரிஞ்ச்.. ஃபகத் பாசிலுக்கு இப்படி ஒரு சோதனையா.. ரசிகர்கள் வருத்தம்

ஃபகத் பாசில் நடிப்பில் வெளியான ஓடும் குதிர சாடும் குதிர படத்தை ரசிகர்கள் கடுமையாக விமர்சிக்கின்றனர்.

ஓடும் குதிர சாடும் குதிர

கேரள மாநிலத்தில் ஒணம் பண்டிகை கொண்டாட்டம் களைகட்ட தொடங்கியுள்ளது. இந்தியா முழுக்க இருக்கும் கேரள மக்கள் ஓணத்தை சிறப்பானதாக மாற்ற திட்டமிட்டு வருகிறார்கள். புத்தாடைகள், ஆட்டம் பாட்டம் என அனைத்திற்கும் தயாராகிவிட்டனர். கல்லூரிகளிலும் ஓணத்திற்கான ஸ்பெஷல் தீம் ட்ரெண்டாகி வருகிறது. அதேபோன்று மக்களின் மற்றொரு கொண்டாட்டமாக பார்ப்பது சினிமா. ஓணம் பண்டிகையை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை பல படங்கள் வெளியாகியுள்ளன. கல்யாணி பிரிதர்ஷன் நடித்துள்ள லோஹா திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படம் சூப்பர் ஹீரோ கதை கொண்ட படமாக பார்க்கின்றனர். டோமினிக் அருண் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் இப்படத்தை திரை விமர்சகர்கள் நல்ல விதமாக பாராட்டி வருகின்றனர். மலையாள சினிமாவில் ஹாலிவுட் தரத்திற்கு சூப்பர் ஹீரோ படமாக இருப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் மலையாள சினிமாவின் ஐகான் நடிகராக திகழ்பவர் ஃபகத் பாசில். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படத்தை படு மோசமாக கலாய்த்து வருகின்றனர்.

ஃபகத் பாசில், கல்யாணி பிரிதர்ஷன், ரேவதி பிள்ளை உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் ஓடும் குதிர சாடும் குதிர திரைப்படம் மோசமான விமர்சனத்தை பெற்று வருகிறது. கதை, திரைக்கதை சரியாக அமையவில்லை. இதெல்லாம் ஒரு காமெடி படமா என்ற அளவிற்கு சமூவலைதளங்களில் ரவுண்டு கட்டி விமர்சிக்க தொடங்கிவிட்டனர். ஃபகத் பாசிலிடம் இருந்து இப்படியொரு படத்தை எதிர்பார்க்கவில்லை என்றே தெரிவிக்கின்றனர். ஃபகத் எங்களை ஏமாற்றிவிட்டதாகவும் கூறி வருகின்றனர். காதல் திருமணம் பின்னணியில் நகைச்சுவையாக உருவான இப்படம் ரசிக்கும் படி இல்லை என்பதே ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.

முன்னதாக ஃபகத் பாசில் தமிழில் நடித்த மாரீசன் திரைப்படம் பெரிய அளவில் கவனத்தை ஈர்க்கவில்லை. முதல் பாதி நன்றாக இருந்தும் இரண்டாம் பாதியில் கதை மோசமாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தனர். ஃபகத் பாசிலுக்கு இந்த ஆண்டு மோசமானதாக இருக்கிறது என ரசிகர்கள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when CinemaYugam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share