27/02/2022
மெட்ரோ இரயில் பணி காரணமாக
போரூர் – பூந்தமல்லி குமணன்சாவடி வரை தற்காலிக போக்குவரத்து மாற்றம்
போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு
பூந்தமல்லி, பிப்.27: மெட்ரோ இரயில் 2-ம் கட்ட திட்டப் பணிக்காக சென்னை மவுண்ட் பூந்தமல்லி ஆவடி நெடுஞ்சாலையில் போரூர் ஏரி சிவன் கோயில் சந்திப்பிலிருந்து பூந்தமல்லி குமணன்சாவடி வரை தற்போது உள்ள போக்குவரத்து முறையில் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆவடி மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது குறித்து அந்த செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: பிப்.26 மற்றும் 27-ம் தேதிகளில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை சோதனை ஓட்டம் முறையிலும், பின்னர் 2 மாதங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் பணி காரணமாக சென்னை மவுண்ட் – பூந்தமல்லி ஆவடி சாலையில் சென்னை பைபாஸ் சந்திப்பிலிருந்து, அதாவது போரூர் ஏரி சிவன் கோயில் சந்திப்பிலிருந்து குமணன்சாவடி சந்திப்பு வரையிலான போக்குவரத்தில், இலகு ரக வாகனங்களான கார், ஜீப், ஆட்டோ, மோட்டார் சைக்கிள் செல்வதற்கும், கனரக வாகனங்களான வேன், டிரக், பஸ் மற்றும் வணிக வாகனங்கள் மாற்று வழியில் செல்லும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆம்புலன்ஸ்களுக்கு மட்டும் விலக்கு அளித்து அந்த வாகனங்கள் செல்வதற்கு அனுமதிக்கப்படும்.
போரூரிலிருந்து மவுண்ட் பூந்தமல்லி ஆவடி சாலையில் பூந்தமல்லி மற்றும் குமணன்சாவடி சந்திப்பு நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் இதர வணிக வாகனங்கள் கட்டாயமாக மேற்படி சாலையில் இருந்து வலதுபுறம் திரும்பி மதுரவாயல் டோல்கேட் பைபாஸ் சந்திப்பு – பூந்தமல்லி நெடுஞ்சாலை, வானகரம், வேலப்பன்சாவடி, ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி, சவீதா பல் மருத்துவமணை சென்று இடதுபுறம் திரும்பி குமணன்சாவடி சந்திப்பு வழியாக அனுமதிக்கப்படும்.
சென்னை பூந்தமல்லி, மாங்காடு, சவீதா பல் மருத்துவமணை பகுதிகளில் இருந்து மவுண்ட் பூந்தமல்லி சாலையில் போரூர் நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் இதர வணிக வாகனங்கள் குமணன்சாவடி சந்திப்பில் திரும்பி பூந்தமல்லி நெடுஞ்சாலை சென்று சவீதா பல் மருத்துவமனை, ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி, வேலப்பன்சாவடி, வானகரம் வழியாக மதுரவாயல் பைபாஸ் சாலையில் சென்று சுங்கச்சாவடி அருகே இடதுபுறம் திரும்பி சமயபுரம் வழியாக போரூர் நோக்கி செல்ல அனுமதிக்கப்படும்.
பொதுமக்கள் மேற்படி பணியினை விரைவில் முடிப்பதற்காக முழு ஒத்துழைப்பு தர வேண்டும். மேலும், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தங்களது ஆலோசனைகளை காவல் துணை ஆணையாளர் ஆவடி போக்குவரத்து அவர்களின் இணையதள முகவரியான [email protected] மற்றும் கட்டுமான பணி அதிகாரியின் இணையதள முகவரியான [email protected] என்ற மெயிலுக்கு அனுப்பலாம். மேலும் காவல் உதவி ஆணையாளர் ஆவடி போக்குவரத்து கைப்பேசி எண்.8056217958 மற்றும் காவல் ஆய்வாளர் போரூர் எஸ்.ஆர்.எம்.சி. போக்குவரத்து கைப்பேசி எண். 9498141613 மற்றும் ஆவடி போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு அறை எண். 7305715666 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.