Cine rocket

Cine rocket 🎬🚀 Welcome to "CiniRocket: Exploring the Cinematic Cosmos"! 🚀🎬
🌟 Greetings, cinephiles
(2)

சக்தித் திருமகன் – ‘மாஸ்’ சினிமா எப்படி இருக்கணும்?!https://cinirocket.com/sakthi-thirumagan-review/‘அருவி’, ‘வாழ்’ படங்...
20/09/2025

சக்தித் திருமகன் – ‘மாஸ்’ சினிமா எப்படி இருக்கணும்?!
https://cinirocket.com/sakthi-thirumagan-review/

‘அருவி’, ‘வாழ்’ படங்களை இயக்கிய அருண்பிரபுவின் புதிய படத்தில் விஜய் ஆண்டனி நடிக்கிறார் என்ற தகவல் அவரது ரசிகர்களையே கொஞ்சம் ‘ஜெர்க்’ ஆக வைத்தது.

இரண்டுமே நல்ல படங்கள் என்ற பெயரைப் பெற்றாலும், அவற்றை ரசித்தவர்கள் எண்ணிக்கை மிகக்குறைவு.

ஆனால், விஜய் ஆண்டனியின் படங்களோ பட்டி தொட்டியெங்கும் செல்லக் கூடியவை.

‘விஜய் ஆண்டனி மாஸ் ஹீரோவா’ என்று கேட்டால், நம்மிடம் பதில் இல்லை. ஆனால், அவர் நடித்தவற்றில் கணிசமானவை ‘மாஸ்’ படங்கள் தான். இயல்பாகவே, அப்பாத்திரங்களைக் கைக்கொள்கிற திறமை அவரிடம் உள்ளது என்பதை ‘சலீம்’, ‘பிச்சைக்காரன்’ படங்களே சொல்லும்.

சரி, இந்த ‘சக்தித் திருமகன்’னில் அருண்பிரபு – விஜய் ஆண்டனி ‘காம்போ’ தந்திருப்பது ‘மாஸ்’ சினிமாவா?

‘ச.தி.’ கதை என்ன?

மயிலாடுதுறை அருகேயுள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் ஒரு இளம்பெண் தூக்கிலிட்ட நிலையில் கிடக்கிறார். பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு அவர் கொலையானது நன்கு தெரிகிறது.

ஆனால், அந்த இல்லத்தை நடத்தி வருபவர் தமிழ்நாட்டு, இந்திய அரசியல், பொருளாதார உலகத்தை ஆட்டுவிப்பவர். அவரது பெயர் அப்யங்கர் (சுனில் கிரிப்லானி).

அவரது சொல் கேட்டு, அந்த சடலத்தை எரிக்கிறார் இன்ஸ்பெக்டர். அந்த இளம்பெண் விட்டுச் சென்ற கைக்குழந்தையை குப்பைக்கிடங்கில் வைக்கின்றனர் போலீசார்.

1989-ல் நடந்த இந்த பிளாஷ்பேக் நிறைவுற்ற பிறகு, 2025-ல் சென்னையில் நிகழ்வதாகக் கதை தடம் மாறுகிறது.

சென்னையிலுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் அனைவராலும் அறியப்படுகிற நபராகத் திகழ்பவர் கிட்டு (விஜய் ஆண்டனி). அதிகார மையங்களில் இருப்பவர்கள் மத்தியில் அவர் பாலியல் தரகராக அறியப்படுபவர். அது போக, தலைமைச் செயலகத்தில் பல துறைகளிலும் அவருக்கு வேண்டியவர்களை உருவாக்கிக் கொள்கிறார்.

அதிகார மையத்தில் இருப்பவர்களுக்குத் தெரியாமலேயே மெல்ல ஒரு ‘லாபியிஸ்ட்’ ஆக உருவெடுக்கிறார்.

பெரிய அதிகாரிகளின் பணியிட மாற்றம் முதல் சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாவது வரை பலவற்றில் கிட்டுவின் தலையீடு இருக்கிறது. அதன் வழியே அவர் கோடிகளைச் சம்பாதிக்கிறார்.

ஆனாலும், அப்யங்கரின் வீட்டில் நடக்கும் பூஜை புனஸ்காரங்களைக் கிட்டுவே ஏற்பாடு செய்கிறார். அவரது அடிமை போல நடந்து கொள்கிறார்.

லஞ்சம், ஊழலில் திளைப்பவர்களுக்குப் பணம் வாங்கிக்கொண்டு உதவும் கிட்டு, உண்மையில் பணம் இல்லாமல் கல்வி, மருத்துவம் மற்றும் இதர அத்தியாவசிய தேவைகளுக்குப் போராடுபவர்களுக்குத் தானே முன்வந்து உதவுகிறார்.

இந்த நிலையில், பள்ளியிலுள்ள நீச்சல்குளத்தில் ஒரு குழந்தை மூழ்கி இறந்ததாகக் கேள்விப்படுகிறார் கிட்டு. உண்மையில், நடந்தது ஒரு கொலை என அறிகிறார்.

அதற்குக் காரணமான நபரைக் கொலை செய்ய, ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரை பயன்படுத்துகிறார். சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகி கொலை செய்யப்பட்டபிறகே, இறந்தவர் அப்யங்கரின் உறவினர் என்று அறிகிறார் அந்த இன்ஸ்பெக்டர். கிட்டுவைச் சந்தித்து, தனது ஆத்திரத்தை வெளிப்படுத்துகிறார்.

அவரிடம் ‘இதை செய்யச் சொன்னதே அப்யங்கர் தான்’ என்று ‘பொய்’ சொல்கிறார் கிட்டு.

அது மட்டுமல்லாமல், அப்யங்கர் சம்பந்தப்பட்ட ஒரு மத்திய அமைச்சரிடம் தனது வேலையைக் காட்டுகிறார். அந்த செயலின் பின்விளைவாக, கிட்டுவின் ‘பவர்’ அரசியல் பற்றி அப்யங்கர் அறிய நேரிடுகிறது.

“யார்றா இவன்? என் காலுக்கு கீழே, எனக்கே தெரியாமல் இவ்ளோ நாளா இப்படி இருந்திருக்கான்" என்று கோபமுறும் அப்யங்கர், கிட்டுவைப் பொறிவைத்துப் பிடிக்க ஒரு ‘அதிரடிப் படை’யைக் களமிறக்குகிறார்.

அப்போதுதான் சுமார் ஆறாயிரம் கோடி ரூபாயைப் பணமாகவே கிட்டு வைத்திருப்பது தெரிய வருகிறது.

அந்த விஷயம் தெரிந்ததும் காவல் துறையினர், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மட்டுமல்லாமல் கிட்டுவுடன் பழகிய பலர் அதிர்ச்சியடைகின்றனர்.

உண்மையில் கிட்டு என்பவர் யார்? அவர் எதற்காக இதையெல்லாம் செய்கிறார்? அவருக்கு முடிவு கட்டும் அப்யங்கரின் எண்ணம் நிறைவேறியதா என்று சொல்கிறது ‘சக்தித் திருமகன்’ படத்தின் மீதி.

இந்த படத்தின் முதல் பாதி முழுக்கப் பரபரவென்று நகர்ந்து, நம்மை அடுத்தக் காட்சிக்கு இழுத்துச் செல்கிறது. இரண்டாம் பாதி அந்த அளவுக்கு இல்லை; எனினும், அது தரும் திரையனுபவம் பெரிதாக போரடிக்கவில்லை.

அது மட்டுமல்லாமல், நம் எதிர்பார்ப்பினைத் தாண்டி உயர்ந்து நிற்கிற திரைக்கதையோட்டம் ‘இது ஒரு சூப்பர் கமர்ஷியல் படம்’ என்கிற எண்ணத்தைத் தானாக உண்டாக்கிவிடுகிறது. ’மாஸ் சினிமான்னா எப்படி இருக்கணும்.. இப்படி இருக்கணும்’ என்று ‘கிளாஸ்’ எடுத்திருக்கிறது.

கொஞ்சம் நிதானித்திருக்கலாம்..!

விஜய் ஆண்டனியைப் பொறுத்தவரை, ‘பிச்சைக்காரன்’ படத்திற்குப் பிறகு அவர் கையில் கிடைத்திருக்கும் ‘ப்ளாக்பஸ்டர்’ கதை இது. அதனால், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தியேட்டருக்கு ரசிகர்களை அழைத்து வந்தாலே போதும்’ என்று திட்டமிட்டுக் களமிறங்கியிருக்கிறார்.

படத்தில் அவரது ஆக்‌ஷன், ரொமான்ஸ், சென்டிமெண்ட் நடிப்பு அளவாக, சிறப்பாக அமைந்திருக்கிறது. நிச்சயமாக, ‘இது எனது 25வது படம்’ என அவர் சொல்லிக் கொள்ளலாம்.

நாயகி திருப்தி ரவீந்திராவுக்கு இது முதல் படமா எனத் தெரியவில்லை. அவர் வரும் காட்சிகள் குறைவென்றபோதும், அப்பாத்திரத்திற்குத் தோதான உடல்மொழியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

’காதல் மணம் செய்து விவாகரத்து பெற்ற ஒரு பெண்ணை நாயகனுக்கு ஜோடியாக்குவது’ என்ற எண்ணமே கொஞ்சம் புதிதாகத்தான் இருக்கிறது.

இதில் வாகை சந்திரசேகர் பாத்திரம் பின்பாதியில் வருகிறது. அவருக்கான வசனங்களில் சில ‘பிரச்சார’ ரகம். ஆனாலும், அது பெரிதாக நெருடவில்லை.

அதிரடிப்படை அதிகாரியாக வருபவர் ஓரளவுக்கு ஈர்க்கிறார். ஆனால், திரைக்கதையில் அவருக்குத் தனியாக முக்கியத்துவம் தரப்படவில்லை.

செல் முருகன் படம் முழுக்க வருகிறார். இவர்கள் போக ரினி போட், ரியா ஜித்து, ஷோபா விஸ்வநாத் எனப் பலர் இதிலுண்டு.

இதில் வில்லனாக சுனில் கிரிப்லானி வருகிறார். ‘காதல் ஓவியம்’ கண்ணனாக நமக்கு ஏற்கனவே அறிமுகம் ஆன இவர், கிட்டத்தட்ட 42 ஆண்டுகள் கழித்து இதில் நடித்திருக்கிறார்.

அவரது பாவனைகள் ‘ஓகே’. ஆனால், குரல் இரவலா எனத் தெரியவில்லை. கேட்கும்போது, அனிருத் தந்தை ராகவேந்தர் குரலைப் போலிருக்கிறது.

ஆங்காங்கே சமஸ்கிருதம், ஆங்கிலம் கலந்து வசனம் பேசுவது ‘ஓகே’ என்றாலும், பல இடங்களில் அது கேட்கிற வகையில் இல்லை என்பது ஒரு குறை.

இது போக ’டப்பிங்’ ராஜேந்திரன் உட்படப் பலர் இப்படத்தில் இருக்கின்றனர்.

படத்தில் ‘ஹேண்டி’ ஷாட்கள் நிறைய என்றபோதும், பிரேம்கள் பெரும்பாலும் ஒரே சீரான வண்ணக்கலவையோடு, ஒன்றுக்கொன்று பொருந்தி நிற்கிற பாங்கோடு இருக்குமாறு வடிவமைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஷெல்லி ஆர் கேலிஸ்ட்.

ரேமண்ட் டெர்ரிக் கிரஸ்டா மற்றும் தின்சாவின் படத்தொகுப்பில் ஒவ்வொரு ‘ஷாட்’டும் தீப்பொறியாகத் திரையில் தெரிகிறது.

‘இவ்ளோ பாஸ்ட் தேவையா’ என்று சொல்கிற அளவுக்கு ஒருகட்டத்தில் பிரேம்கள் திரையில் தெறிக்கின்றன. அதனைக் கொஞ்சம் கட்டுப்படுத்தி, திரையில் நிதானத்தை விதைத்திருக்கலாம்.

கலை இயக்குனர் ஸ்ரீராமன், இப்படத்தில் சில இடங்களை ‘லைவ் லொகேஷன்’ போல காட்டி நம்மை ஏமாற்றியிருக்கிறார். அதுவே அவரது திறமை.

இப்படத்தில் ஒலிப்பதிவு தரம் ‘சுமாராக’ உள்ளது. அதனால் பின்னணி இசை வசனங்களைப் பின்னுக்குத் தள்ளுகிறது. சில இடங்களில் ஒவ்வொரு பாத்திரமும் என்ன சொன்னது என்று யோசிக்க வேண்டியிருக்கிறது. அவற்றைத் தவிர்த்திருக்கலாம்.

இதுபோக ஒப்பனை, ஆடை வடிவமைப்பு, டிஐ எனப் பல நுட்பங்கள் இதில் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இசையமைப்பைப் பொறுத்தவரை விஜய் ஆண்டனி, ஒரு ‘மாஸ்’ பீல் தர முயற்சித்திருக்கிறார்.

அவரே ஒரு நாயகன் என்பதால், ‘எங்கு மாஸ் காட்ட வேண்டும்’ என்பது அவருக்கு நன்றாகக் கைவருகிறது. பின்னணி இசை வழியே ரசிகர்களை படத்தோடு ஒன்ற வைக்க முடியும் என்று நூறு சதவீதம் நம்பிக் களமிறங்கி, அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்.

இந்த படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் அருண் பிரபு.

‘சக்தித் திருமகன்’ கதை நிச்சயம் புதிதல்ல. ஆனால், ‘லாபியிஸ்ட்’களின் உலகைத் திரையில் காட்டுவது புதிது தான். அதற்கேற்ப ஹீரோ, வில்லன் பாத்திர வார்ப்பை அமைத்திருக்கிறார் வெகு சிறப்பாக.. அதுவே இப்படத்தின் யுஎஸ்பி.

அனைத்துக்கும் மேலாக ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் படங்களில் வருவதைப் போல ‘ஹீரோயிசம்’ இதில் ‘ஒவராக’ இல்லை. மாறாக, ஹீரோவை ஒரு ‘பாலியல் விவகாரத் தரகர்’ ஆகக் காட்டியிருக்கிறார்.

முன்பாதியில், ஹீரோ பாத்திரம் எவ்வளவு ‘பவர்’ கொண்டது என்று காட்ட அவர் வடிவமைத்திருக்கும் இரண்டொரு காட்சிகள் ரசிகர்களைக் கதைக்களத்திற்குள் சட்டென்று இழுத்துக் கொள்கின்றன.

போலவே, சாதாரண மக்களின் வாழ்வைச் சொல்கிறேன் என்று அவர்களை பரிதாபத்திற்குரியவர்களாக மட்டுமே காட்டவில்லை. அவர்கள் கையில் ‘அதிகாரம்’ கிடைத்தால் எப்படியிருக்கும் என்று சொல்ல முயற்சித்திருப்பது நல்ல விஷயம்.

இந்தப் படத்தில் நிறைய லாஜிக் மீறல்கள் உள்ளன. அவை எதுவும் படம் பார்க்கும்போது நம் கண்கள் முன்னே விஸ்வரூபமெடுக்காது. நல்லதொரு கமர்ஷியல் படத்திற்கு அதுவே தேவை.

முதலமைச்சர் வீட்டு டைனிங் டேபிள் முதல் கிரிப்டோகாய்ன் பரிமாற்றம் மேற்கொள்ளும் அலுவலகம் வரை, இதுவரை திரையில் காட்டாத சில இடங்களை இப்படத்தில் காட்டியிருக்கிறார் அருண்பிரபு.

சென்சார் பிடியில் அந்த காட்சிகள் சிக்குமா, படம் வெளியானபிறகு சில தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வருமா என்பது உட்படச் சில விஷயங்கள் பற்றி கவலைகள் இருந்தால் மட்டுமே, அப்படியொரு காட்சியை சிந்திப்பதும் படமாக்குவதும் சாத்தியம்.

அதற்கு விஜய் ஆண்டனியும் துணை நின்றிருக்கிறார் என்பதுவும் இன்ன பிற நாயகர்களிடம் நாம் எதிர்பார்க்க முடியாதது.

அது போன்ற விஷயங்களே இப்படத்தை இன்னும் அழகாகக் காட்டுகின்றன.

அந்த வகையில், இந்த ஆண்டின் மெகாஹிட்டான ‘ஆக்‌ஷன் பொலிடிகல் த்ரில்லர்’ ஆக உருவெடுத்திருக்கிறது ‘சக்தித் திருமகன்’. இதனைப் பார்க்கிற சாதாரண ரசிகர்களில் பலர் ‘இதை.. இதை.. இதைத்தான் நாங்க உங்ககிட்ட எதிர்பார்க்கிறோம்..’ என்று நிச்சயம் விஜய் ஆண்டனியைப் பாராட்டுவார்கள்..!

உதயசங்கரன் பாடகலிங்கம்

#சக்தித்திருமகன்விமர்சனம் #அருண்பிரபு #விஜய்ஆண்டனி #சுனில்கிரிப்லானி #ரவீந்திரா

தண்டகாரண்யம் – இதுவரை சொல்லாதது!https://cinirocket.com/thandakaaranyam-review/இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு சொந்தமான நீலம் ...
20/09/2025

தண்டகாரண்யம் – இதுவரை சொல்லாதது!
https://cinirocket.com/thandakaaranyam-review/

இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு சொந்தமான நீலம் புரொடக்‌ஷன்ஸ் ஒரு திரைப்படத்தைத் தயாரிக்கிறது என்றால், அதில் வருகிற கதை அல்லது களம் அல்லது பாத்திரங்கள் வழியே விரிகிற உலகம் புதியதொரு அனுபவத்தைத் தரும் என்ற முடிவுக்கு வரலாம். இதற்கு முன் அவர் தயாரித்தவை அப்படித்தான் இருந்தன.

‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ தந்த அதியன் ஆதிரை இரண்டாவதாக இயக்கியுள்ள ‘தண்டகாரண்யம்’ படம் அந்த வரிசையில் சேர்கிறதா?

‘தண்டகாரண்யம்’ கதை!

மலை மற்றும் வனப்பகுதி கொண்ட ஒரு கிராமத்தைச் சார்ந்தவர்கள் சடையன் (தினேஷ்) மற்றும் முருகன் (கலையரசன்). இருவரும் சகோதரர்கள்.

தனது ஊர், மக்கள் சார்ந்த பிரச்சனைகளுக்காகக் குரல் கொடுப்பதை முதல் பணியாகக் கொண்டவர் சடையன்.

அதனால் பஞ்சாயத்து நிர்வாகத்தினர், காவல் துறையினர், இதர அரசு அதிகாரிகள், எம்.எல்.ஏ உள்ளிட்ட அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள் உடன் அவருக்குப் பிரச்சனைகள் உருவாகின்றன.

‘தன்னைப் போல் அல்லாமல் நல்லதொரு அரசு வேலையைத் தம்பி பெற்று, அதன் வழியே மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைக்கிறார் சடையன்.

அதற்கேற்ப, வனத்துறையில் சுமார் 7 ஆண்டுகளாகத் தற்காலிகப் பணியில் தொடர்ந்து வருகிறார் முருகன்.

ஆனால், ஒரு வனத்துறை அதிகாரி முருகன் மேல் காட்டும் வன்மம் அதனைத் தலைகீழாக்குகிறது. அவர் சடையனை அழைத்து வர, விஷயம் இன்னும் சிக்கலாகிறது.

காட்டுக்குள் சென்ற முருகன், உள்ளே சிலர் கஞ்சா கடத்துவதை அறிகிறார்.

அதை வனத்துறை அதிகாரியிடம் சொல்ல, அடுத்த சில நாட்களில் முருகனைச் சிலர் கொலை செய்ய முயற்சிக்கின்றனர்.

அதனை அறிந்ததும், காட்டுக்குள் நடப்பதைப் பதிவு செய்து செய்திகளாக்குகிறார் சடையன்.

அது சட்டவிரோதமாகக் காட்டுக்குள் சில விஷயங்கள் செய்து வருபவர்களைச் சிறையில் தள்ளுகிறது.
அதன் தொடர்ச்சியாக, முருகனின் பணியும் காலி ஆகிறது.

அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் திணறும் சடையன், பூர்விக நிலத்தை விற்று முருகனை ராணுவத்தில் சேர்க்க முடிவு செய்கிறார் சடையன். வனத்துறை அலுவலகத்தில் அறிமுகமாகிற நபர் ஒருவர், அந்த ஐடியாவைக் கொடுக்கிறார்.

அப்படிக் கிடைத்த சுமார் 5 லட்சம் ரூபாய் பணத்தை ஒரு தரகரிடம் கொடுத்து, முருகனை ஜார்க்கண்டில் உள்ள ராஞ்சிக்கு அனுப்பி வைக்கிறார்.

அங்குள்ள பயிற்சி முகாமில் சேர்க்கப்படுகிறார் முருகன். அவரைப் போலச் சுமார் இருநூறுக்கும் மேற்பட்டோர் இருக்கின்றனர்.

அவர்கள் அனைவரையும் ‘நக்சல்’களாக இருந்து சரணடைந்தவர்கள் என்று முத்திரை குத்த முயற்சி நடக்கிறது.

அதன் தொடர்ச்சியாக, ‘நக்சல் மறுவாழ்வு திட்டத்தின்’ கீழ் அவர்களுக்கு பணி கிடைக்குமென்றும் சொல்லப்படுகிறது. அதற்கு முருகன் போன்றே பலரும் உடன்படுகின்றனர்.

ஆனால், அதன்பின் நடப்பதோ வேறாக இருக்கிறது. காவல் துறை ஆவணங்களில் அவர்கள் ‘நக்சல்கள்’ என்று குறிப்பிடப்படுகின்றனர்.

அதனால், அவர்களது குடும்பத்தினர் காவல்துறை அடக்குமுறைக்கு ஆளாகின்றனர்.

இன்னொரு புறம், அந்த முகாம்களில் ‘அரசு வேலை’ என்ற அந்தஸ்தைப் பெறத் தினமும் அவர்கள் பல அவஸ்தைகளை அனுபவிக்கின்றனர்.

அனைத்தும் நிறைவுற்றபிறகு, தாங்கள் விரும்பியது கிடைக்கும் என்று முருகன் நினைக்கிறார்; அங்கிருக்கும் பலருக்கும் அதுவே எண்ணம்.

ஒருநாள் அது எதுவுமே நிகழாது என்பது அவர்களுக்குத் தெரிய வரும்போது என்ன நடக்கிறது என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.

முன்பாதியில் ஒரு மலைக்கிராமத்தில் நடக்கிற சாதீய அடக்குமுறைகளை எதிர்த்து, சட்ட விரோதச் செயல்களை எதிர்த்து நாயகன் போராடுவது ஒரு கதை.

இரண்டாம் பாதியில் மொழி தெரியாத ஒரு மண்ணில் ‘மனம் திருந்திய நக்சல்கள்’ என்ற போலியான அடையாளத்தைத் தாங்கிக்கொண்டு அவர் உலாவுவது இன்னொரு கதை. அது ராஞ்சியில் நடப்பதாகக் காட்டப்பட்டுள்ளது.

ராஞ்சியில் உள்ள ஒரு போலி பயிற்சி முகாமைப் பற்றித்தான் முழுமையாகச் சொல்ல வேண்டும் என்றால், மொழி ஒரு தடையாக இருக்கும்.

நாயகன் தமிழில் பேசினால், வேறு சில பாத்திரங்கள் இந்தியிலோ அல்லது வேறு வட மொழிகளிலோ பேச வேண்டும். ஆனால், இப்படத்தில் எல்லா பாத்திரங்களும் தமிழில் பேசுகின்றன.

மொழி தொடர்பு விஷயத்தில் பார்வையாளர்கள் சங்கடப் பட வேண்டாம் என்று இயக்குநர் நினைத்திருக்கலாம்.

ஆனால், மொழி ஒரு தடையாக உள்ளது எனத் தமிழில் இருவர் வசனம் பேசிக்கொள்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை.

அந்த இடங்களை வேறு மாதிரியாகக் கையாண்டிருக்கலாம்.

இதே கதையை சடையன் பாத்திரத்திற்கு முக்கியத்துவம் தந்து மாற்றியிருக்கலாம். அது, தமிழ்நாட்டு மலைக்கிராமத்தில் இருக்கிற பழங்குடியின மக்களின் அவலங்களைச் சொல்லியிருக்கும்.

இரு வேறு கதைகளையும் ஒரே சரடில் இணைத்தது கூடத் தவறில்லை.

ஆனால், இரண்டுக்குமே முக்கியத்துவம் தருவேன் என்கிற இயக்குநரின் முடிவு தான் இப்படத்தை முழுமையற்றதாக மாற்றியிருக்கிறது.

விவாதம் ஏற்படுத்துகிற கதை..!

வேலை தேடும் இளைஞர்களை நக்சல்கள் என்ற பெயரில் சரணடைய வைத்து, அவர்களுக்குப் பயிற்சி தருவதாகச் சொல்லி சித்திரவதைகளுக்கு உட்படுத்துவது செய்திகளாக வெளியாகியிருக்கிறது.

அதைக் கொண்டு இப்படத்தை அமைத்திருக்கிறார் இயக்குநர் அதியன் ஆதிரை. அந்த ‘ஐடியா’ நிச்சயம் பல விவாதங்களை ஏற்படுத்தக் கூடியது. இந்தி உட்பட வட இந்திய மொழிப் படங்களில் இதுவரை சொல்லாதது.

ஆனால், அதனைத் திரையில் சொன்ன விதத்தில் ஆங்காங்கே ‘ஹீரோயிசம்’ புகுந்து கொள்வதால் பல பாத்திரங்களின் உணர்வெழுச்சி மழுங்கிப் போகிறது. அதுவே இக்கதையின் பலவீனம்.

இப்படம் இந்தியில் ‘டப்’ செய்யப்படுமா என்ற கேள்வி, இதனைப் பார்த்து முடித்தவுடன் நம் மனதில் எழுகிறது.
காடு, மேடு எனப் பல களங்களில் சுழன்று ஓடியிருக்கிறது பிரதீப் கலைராஜாவின் ஒளிப்பதிவு.

படத்தொகுப்பாளர் செல்வா ஆர்.கே. இயக்குநர் தந்த காட்சிகளைச் சரியாகத் தொகுத்திருக்கிறார்.

ஆனால், அவற்றை ஒரு கண்ணியில் இணைக்கிறபோது எதனை மேலோங்கி நிற்கச் செய்ய வேண்டும் என்பதில் தடுமாறியிருக்கிறார்.

ராமலிங்கத்தின் கலை வடிவமைப்பு இப்படத்தில் வருகிற பாத்திரங்களின் பின்னணியை, அவை வாழும் இடங்களை நம்பகத்தன்மையுடன் காட்ட உதவியிருக்கிறது.

ஜஸ்டின் பிரபாகரன் தந்த பின்னணி இசை, ஒவ்வொரு காட்சியோடும் பார்வையாளர்கள் ஒன்றுகிற வகையில் உள்ளது. பாடல்கள் கேட்டவுடன் ஈர்க்கிற ரகம்.

இது போகப் பல தொழில்நுட்பங்கள் சிறப்பாகவே இதில் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கின்றன.

நாயகனாக வரும் கலையரசன் சிறப்பானதொரு நடிப்பைத் தந்திருக்கிறார்.

இளைய சகோதரராகப் பிறந்து, நல்லதொரு வேலையில் செட்டிலாக வேண்டுமென்ற உணர்வை படம் முழுக்கப் பிரதிபலித்திருப்பது சிறப்பு.

அவரது ஜோடியாக வின்சு ரேச்சல் சாம் சட்டென்று ஈர்க்கிற வகையில் ஒவ்வொரு காட்சியிலும் தோன்றியிருக்கிறார்.

ஆனால், இருவரும் சம்பந்தப்பட்ட கற்பனைக் காட்சிகள், பாடல்கள் சரிவரத் திரையில் கடத்தப்படவில்லை. அவற்றின் நீளமும் அதற்கொரு காரணம்.

தினேஷ், ரித்விகா ஜோடி மலைவாழ் மக்களாகத் தெரிவதுவே அவர்களது நடிப்பின் சிறப்பு. ஆனால், சில காட்சிகளில் ஒரு ‘ரோபோ’ போல வசனம் பேசியிருப்பதை தினேஷ் தவிர்த்திருக்கலாம்.

முத்துகுமார், அருள்தாஸ் திரையில் வெளிப்படுத்துகிற வில்லத்தனம் ‘சினிமாத்தனம்’ மேலோங்கி நிற்கிறது.

அதேநேரத்தில், ஜார்க்கண்ட் போர்ஷனில் வரும் யுவன் மயில்சாமி மற்றும் அவரது மேலதிகாரிகளாக, அமைச்சராக வரும் அஜித் கோஷி உள்ளிட்டோர் வெளிப்படுத்துகிற வில்லத்தனம் ரசிகர்களை மிரட்டும் வகையில் அமைந்திருக்கின்றன.

பால சரவணன் வரும் இடங்கள் வாய் விட்டுச் சிரிக்க வைக்கின்றன. அதனை அகலப்படுத்தினால் ‘டாணாக்காரன்’ சாயல் வந்துவிடும் என படக்குழு தவிர்த்திருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இப்படத்தில் சபீர் கல்லாரக்கல் நடிப்பு நம்மை ஈர்க்கும். அந்த காட்சிகள் மிகச்சரியாக வடிவமைக்கப்பட்டு காட்சிகள் ஆயிருக்கின்றன.

இது போக சரண்யா ரவிச்சந்திரன் உட்படச் சில முகங்கள் இக்கதையில் வந்து போகின்றன.
‘கண் சிவந்தால் மண் சிவக்கும்’ படத்தில் வரும் ‘மனிதா மனிதா’ பாடல் இதில் வேறொரு வடிவத்தில் எடுத்தாளப்பட்டிருக்கிறது.

வாழ்க்கைச் சூழல் எப்படி மாறினாலும் இளையராஜாவின் பாடல்கள் அதனோடு பொருந்திப் போகும் என்பதற்கான சாட்சி அது.

ஆனால், அந்த காட்சிகளில் யதார்த்தம் இல்லாமல் ‘ஹீரோயிசம்’ மிகுந்திருப்பது திரையோடு ஒட்டுவதைத் தடுத்து நிறுத்துகிறது.

இந்தப் படத்தில் தினேஷின் காட்சிகளை வெகுவாக வெட்டியெறிந்துவிட்டு கலையரசனை மட்டும் காட்டியிருந்தால், நம் மனதுக்கு நெருக்கமானதொரு படைப்பு கிடைத்திருக்கும்.

ஒருவேளை திரைக்கதை ஆக்கும் பணியை வேறு படைப்பாளிகளிடம் இயக்குநர் அதியன் ஆதிரை ஒப்படைத்திருந்தால் அது நிகழ்ந்திருக்குமோ என்னவோ..!

- உதயசங்கரன் பாடகலிங்கம்

#இயக்குநர்_அதியன்ஆதிரை #தண்டகாரண்யம் #கலையரசன் #பாலசரவணன் #டாணாக்காரன் #தினேஷ் #ரித்விகா #வின்சு_ரேச்சல்_சாம் #சபீர்_கல்லாரக்கல் #ராஞ்சி #பா_ரஞ்சித் #நீலம்புரொடக்ஷன்ஸ் #இரண்டாம்உலகப்போரின்கடைசிகுண்டு #இளையராஜா #சரண்யா_ரவிச்சந்திரன் #சடையன் #ஜார்க்கண்ட் #நக்சல் #மொழி #மண் #ஜஸ்டின்பிரபாகரன் #இசை #கண்சிவந்தால்_மண்சிவக்கும் #மனிதா_மனிதா #வனத்துறை #அஜித்கோஷி

விட்டுக் கொடுத்து வாழுங்கள், அது தான் வாழ்க்கை!https://cinirocket.com/interview-of-vadivukkarasi/1978ம் ஆண்டில் இருந்து ...
19/09/2025

விட்டுக் கொடுத்து வாழுங்கள், அது தான் வாழ்க்கை!
https://cinirocket.com/interview-of-vadivukkarasi/

1978ம் ஆண்டில் இருந்து இன்று வரை தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார் வடிவுக்கரசி.

பெரியப்பா ஏ.பி.நாகராஜன் இயக்கிய ‘வடிவுக்கு வளைகாப்பு’ பட சமயத்தில் பிறந்ததால், வடிவுக்கரசி என்று பெயர் வைத்தார் பெரியப்பா.

இன்று வரை தனக்கனெ ஒரு பாணி என அமைத்துக் கொண்டு, அரசியாகவே தனக்கான உலகில் வாழ்ந்து வருகிறார்.

ஒருகாலத்தில் ஓஹோ என்றிருந்த குடும்பம், நொடித்துப் போனதால் 75 ரூபாய் சம்பளத்தில் இருந்து தொடங்கிய வாழ்க்கை வடிவுக்கரசியுடையது.

44 வருட திரையுலக வாழ்க்கையில், இன்னமும் வடிவென ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

எத்தனையோ திரைப்படங்களில் நடித்திருந்தாலும் நடிகை வடிவுக்கரசியின் கேரக்டர் கதாபாத்திரமாகவே மாறிவிடும்.

குறிப்பாக அருணாச்சலம் திரைப்படத்தில் ரஜினியை மிரட்டும் அந்த பாட்டியை யாராலும் மறக்க முடியாது. பார்க்கும் ரசிகர்களுக்கு கூட பயம் வந்துவிடும். அந்த அளவிற்கு அவருடைய பார்வையில் கோபமும் வெருப்பும் இருக்கும்.

அப்படி நடிப்பதற்கு ரொம்பவே கஷ்டப்பட்டாலும் அது எனக்குப் பிடித்தது என்று கூறி இருக்கிறார்.

இன்று வரை எனக்கு சோறு போடுவது ‘முதல் மரியாதை’ பொன்னாத்தாதான் என்கிறார் பெருமையாக.

கணவருக்கும் இவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவருடைய கணவர் இவரை விட்டுவிட்டு விலகிச் சென்று விட்டாராம். அதற்கு பிறகு இவருக்கு இருந்த ஒரே மகளையும் அவருடைய அம்மா தான் வளர்த்து வந்திருக்கிறார்.

தன்னுடைய குழந்தையை வளர்க்காத நான் இப்போது நடித்துக் கொண்டிருந்தாலும் என்னுடைய குழந்தையின் குழந்தையான என்னுடைய பேத்தியை நான் தான் பார்த்து பார்த்து வளர்த்து வருகிறேன் என்கிறார் வடிவுக்கரசி.

வாழும் வாழ்க்கையை நல்ல படியாக வாழுங்கள், விட்டுக் கொடுத்து வாழுங்கள். அது தான் வாழ்க்கை என்று தனது அனுபவத்தைச் சொல்கிறார் நிஜ வாழ்க்கையில் நடிக்கத் தெரியாத வெள்ளந்தியான மனுஷி வடிவுக்கரசி.

#வடிவுக்கரசி #முதல்_மரியாதை #அருணாச்சலம் #ஏபிநாகராஜன் #பொன்னாத்தா #வடிவுக்கு_வளைகாப்பு #நடிகை #வில்லி #நாடகம் #சிவாஜி #ரஜினி #கமல்

பேரறிஞர் அண்ணாவுக்குப் பிடித்த பாடகி கே.பி.எஸ்!https://thaaii.com/2025/09/19/article-about-k-b-sundarambal/04-05-1975 தே...
19/09/2025

பேரறிஞர் அண்ணாவுக்குப் பிடித்த பாடகி கே.பி.எஸ்!
https://thaaii.com/2025/09/19/article-about-k-b-sundarambal/

04-05-1975 தேதியிட்ட 'ராணி' இதழுக்கு கே.பி.சுந்தராம்பாள் அளித்த பேட்டி

‘என் இசை மட்டும் அல்ல. என் வாழ்க்கையெல்லாம் அந்த முருகனுக்கே' என்று சதா சர்வகாலமும் முருகனையே தியானித்துக் கொண்டு இருக்கிறார் திருமதி கே.பி.சுந்தராம்பாள்.

அவர் எங்கே கச்சேரி செய்யச் சென்றாலும் அங்கேயெல்லாம் பல்லாயிரக்கணக்கான மக்கள் அவரது இனிய இசையைக் கேட்கக் கூடுகிறார்கள்.

ஆனால், வீட்டில் தவமுனி போல சுந்தராம்பாள் தனிமையாக வாழுகிறார். எந்நேரமும் முருகா! முருகா! என்று வாய்விட்டு கூப்பிட்டுக்கொண்டு தனது வாழ்க்கையை நடத்திக் கொண்டுவருகிறார்.

68 வயது

கே.பி.சுந்தராம்மாளுக்கு இப்பொழுது 68 வயது ஆகிறது. ஆனால், அவரது குரல் இன்னும் பதினெட்டு வயது போல இளமையாக இனிமையாக இருக்கிறது.

'கணீர்' என்ற வெண்கலக் குரலில் பாடத் தொடங்கினார் என்றால், ரசிகர்கள் மெய்மறந்து கேட்கிறார்கள்!

திரைப்படங்களில் அவரது பாடல் இடம்பெற்றால் அதுவே அந்தப் படத்துக்கு ஒரு வெற்றியாக ஆகிவிடுகிறது.

"சிறந்த பாடகி யார் என்று என்னிடம் கேட்டால், கே.பி.சுந்தராம்பாள் என்றுதான் சொல்லுவேன்” என்று அறிஞர் அண்ணா ஒருமுறை கூறினார்.

அந்த இன உணர்ச்சி மற்றவர்களிடம் இல்லாததால், கே.பி.சுந்தராம்பாளின் இசைப் புகழ் வெளிநாடுகளுக்குப் பரவாமல் அந்த இசை ஞானி தனது இசைத் தமிழ் செல்வத்தை எட்டுத் திக்கிலும் சென்று பரப்ப முடியாமல், குடத்துக்குள் வைத்த குத்துவிளக்கு போல தமிழ்நாட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார். நியாயமாகக் கிடைக்க வேண்டிய புகழ் கூடக் கிடைக்கவில்லை.

'முருகா' என்று வீட்டோடு இருக்கும் கே.பி சுந்தராம்பாளைக் காண 'ராணி' நிருபர் சென்றார்.

விளம்பரம் விரும்பாதவர்

விளம்பரத்தின் மீது விருப்பம் இல்லாத கே.பி.சுந்தராம்பாள், இதுவரை எந்தப் பத்திரிகைக்கும் பேட்டி அளித்தது இல்லை.

நல்ல பெண்மணிகளை நாட்டுக்கு அறிமுகப்படுத்துவது மற்ற பெண்மணிகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாக இருக்கும் என்று நிருபர் வற்புறுத்திக் கூறினார். அதன்பின் பேட்டி அளிக்க சுந்தராம்பாள் சம்மதித்தார்.

அவரது வீட்டின் முன் அறையில் காலஞ்சென்ற அவருடைய கணவர் திரு.எஸ்.ஜி.கிட்டப்பா அவர்களின் படம் மாலை சூடப்பட்டு மாட்டப்பட்டு இருந்தது. மற்றொருபுறம் அவருடைய பாட்டியின் படம் இருந்தது. அவர் 110 வயது வரை வாழ்ந்துவிட்டு காலமானாராம்.

மற்றொருபுறம் விநாயகர் படம், முருகனின் அறுபடை வீடு படம் ஒன்றும் பழநி ஆண்டவர் படம் ஒன்றும் மாலைகளுடன் காட்சி அளித்தன. அவருடைய வீடு மிகவும் எளிமையாக அமைதியாக இருந்தது!

சுந்தராம்பாளின் 95 வயது தாயார். அவருடைய சொந்த ஊரான கொடுமுடியில் தன் மகனுடன் [சுந்தராம்பாளின் தம்பி] வசித்து வருகிறார்.

கண்ணீர்

“இங்கே சென்னையில் உங்களுடன் யாரும் இல்லையா?” என்று நிரூபர் கேட்டார்.

“என் மாமா இருந்தார். அவர் சில மாதத்துக்கு முன்பு காலமாகி விட்டார். என்னை உருவாக்கியதே அவர்தான். தாய்ப்பசுவை இழந்த கன்றைப் போல, என் மாமாவை இழந்து நான் அனாதை ஆகிவிட்டேன்” என்று கண்ணீர் வடித்தார் சுந்தராம்பாள்.

நீங்கள் எத்தனை வயதிலிருந்து பாடுகிறீர்கள்? உங்கள் குரு யார்?

நான் என்னுடைய 6-வது வயதிலிருந்து பாடிக்கொண்டு இருக்கிறேன். என் குரு, முருகன்தான். எனக்கு மாதா, பிதா, குரு, தெய்வம் எல்லாமே முருகன்தான்! என் தாயார் முருக பக்தி உடையவர். அவர் கருவில் வளர்ந்த எனக்கு அவர் [முருகன்] மீது பக்தி ஏற்பட்டுவிட்டது.

உங்களுக்கு முருகன் மீது அப்படி அளவற்ற பக்தி ஏற்பட்டதற்கு என்ன காரணம்?

நிறைய காரணங்கள் உள்ளன! ஒரு சம்பவத்தைக் கூறுகிறேன். சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு, நான் கடலூரில் கோவலன் நாடகத்தில் நடித்துக்கொண்டு இருந்தபொழுது திடீர் என்று என் தொண்டை அடைத்துக் கொண்டது. பாட முடியவில்லை. பேசவும் முடியவில்லை.

நாடகத்தை அப்படியே நிறுத்திவிட்டு, நான் சென்னைக்கு வந்துவிட்டேன். யார் எது கேட்டாலும் எழுதியே பதில் சொல்லி வந்தேன்.

அப்பொழுது சென்னையில் தொண்டை வைத்திய நிபுணராக இருந்த திரு சங்கரநாராயணனிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ளும்படி எல்லோரும் சொன்னார்கள். நான் மறுத்துவிட்டேன். முருகனையே நம்பி இருந்தேன்.

ஒருநாள் விடியற்காலை 3 மணியளவில் ஒரு சிறுவன் என் முன்னே தோன்றினார். நான் பழனியில் இருந்து வந்திருக்கிறேன். ‘வாயைத்திற' என்று கூறினான். நான் வாயைத்திறக்க, தன் வேலினால் என் தொண்டையைத் தொட்டு, 'இப்பொழுது பேசு' என்றான்.

எனக்கு 'முருகா' என்றுதான் பேசவந்தது. பழனிக்கு வந்து தேன் அபிஷேகம் செய்' என்று கூறிவிட்டு மறைந்து விட்டான்.

அதன்பின்பு சென்னையில் ஒரு நாடகமும், கோயம்புத்தூரில் ஒரு நாடகமும் நடத்திவிட்டு நான் நேராக பழனிக்குச் சென்று 16 டின் தேன் வாங்கி அபிஷேகம் செய்தேன்.

இப்படி எத்தனையோ நிகழ்ச்சிகள் என் வாழ்வில் நடந்துள்ளன. அதிலிருந்து முருகன் மீது தீவிர பக்தி ஏற்பட்டுவிட்டது.

'முருகனைத் தவிர வேறு தெய்வங்களை வணங்குவதும் இல்லையா? என்று கேட்டதற்கு, 'அப்படி அல்ல. எல்லா தெய்வங்களையும் வணங்குவேன். திருப்பதி, குருவாயூருக்கு அடிக்கடிச் சென்று வருகிறேன். நாகூர் ஆண்டவனை வணங்குவதுண்டு.

கிறிஸ்தவ கோவிலுக்கு போவேன், அங்காள பரமேசுவரி என் குலசெய்வம்! முருகானும் மகமாயியும் என் கண் கண்ட தெய்வங்கள்! மற்ற எல்லோரையும் 'கடவுள்' என்று எண்ணி வணங்குவேன்.

முருகன் மீது அளவிலா பக்தி அவ்வளவுதாள். எந்தக் கச்சேரியிலும் முதலில் விநாயகர் மீது பாடலைத் தொடங்கி, பின்பு முருகன் மீது பாடுவேன்.

தியாகராஜ கீர்த்தனைகளும் பாடுவேன், மீரா பஜனும் பாடுவேன்' என்றார் சுந்தராம்பாள்.

உங்கள் குரல் இந்த வயதிலும் 'கணீர்' என்று இருக்கிறதே... அதற்காக மருந்து எதுவும் சாப்பிடுகிறீர்களா?

எனக்கு இப்பொழுது 68 வயது ஆகிறது. நான் கணீர் என்று பாடுவது முருகன் அருள். தினமும் பச்சை தண்ணீரில்தான் குளிக்கிறேன். பச்சை தண்ணீர்தான் குடிக்கிறேன். இருவேளை உணவு, இரு வேளை காபிதான். பழைய சோறு, கம்பஞ்சோறு, களி முதலியவை எனக்கு பிடித்த உணவு.

நான் டாக்டரிடம் போனது இல்லை. முருகன்தான் டாக்டர்! இயற்கை வைத்தியம்தான். கச்சேரிக்கு செல்லும் பொழுதுகூட குளிர்ந்த தண்ணீர் குடித்துவிட்டுச் செல்லுவேன்.

மாத்திரை, கஷாயம் சாப்பிடுவது இல்லை. என் குரல் 'கணீர்' என்று இருப்பது முருகனின் அருள் அவ்வளவுதான். இந்த வயதிலும் நான் வேகமாக ஒடுவேன்! வீட்டு வேலைகள் செய்வேன். நானே சமையலும் செய்வேன்.

தனித்திருந்து வாழும் என்ற பாட்டில் 'என்ன என்ன' என்று அடுக்கிக்கொண்டு போகிறீர்களே... அது உங்கள் சொந்த கற்பனையா?

ஆமாம். பாட்டு அமைத்தவர் ‘என்ன’ என்பதை ஒரே ஒருமுறை பாடும்படிதான் அமைத்தார். நான் அப்படி மேடையில் கச்சேரி செய்யும்பொழுது 'என்ன' என்று ஒரே ஒருமுறை பாடியதும் மக்கள் ரசிக்கவில்லை.

அதையே 'என்ன, என்ன, என்ன' என்று 3 முறை 4 முறை பின்பு பலமுறை பாடவும் ரசிகர்கள் ரசித்து கைகட்டி, நிரம்பப் பாராட்டினார்கள். பலமுறை பாடவும் ரசிகர்கள் ரசித்து கைதட்டி, நிரம்பப் பாராட்டினார்கள்.

அநேகம் பேருக்கு ஆவேசம்கூட வந்துவிட்டது! அதன்பின் தொடர்ந்து கச்சேரிகளில் அப்படியே பாடி வருகிறேன்.

நீங்களே இசை அமைத்துப் பாடுவீர்களா?

மற்றவர் இசை அமைத்தும் பாடுவேன். நானே இசை அமைத்தும் பாடுவேன். சமீபத்தில் அம்பாளின் மீது இசை அமைத்துப் பாடி இருக்கிறேன். நானே, எதுகை, மோனை அமைத்து பாடியது கேட்டு சில பெரியவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.

அந்தக் கால சினிமா இசைக்கும் இந்தக் கால சினிமா இசைக்கும் வேறுபாடு என்ன?

அந்தக்கால இசையிலும் இருபொருள்பட பாடல்கள் உண்டு. உதாரணமாக, தும்பிக்கையான் என்றால் 'மூலிகைகள்' என்ற பொருளும் உண்டு. விநாயகர் என்ற பொருளும் உண்டு. ஆனால் இந்தக் காலத்திலும் இரு பொருள்கள்பட பாடல்கள் உள்ளன. அவற்றிற்கு அர்த்தம் சொல்லப் போனால்... என்று சிரித்தார்.

நீங்கள் எத்தனைப் படங்களின் நடித்து இருக்கிறீர்கள்?

நான் 11 படங்களில் நடித்து இருக்கிறேன். எல்லாமே பக்தி வேடந்தான்! என் கணவர் இருக்கிறவரை அவருடன் நாடகங்களில் நடித்து வந்தேன். பட்டிதொட்டி எல்லாம் எனக்கு மாபெரும் புகழை தேடித் தந்தது அவ்வையார்தான்!

இப்பவும் நான் வெளியூர் சென்றால் மக்கள் என்னை அவ்வையாராக நினைத்து மதித்து வணங்குகிறார்கள்! நானும் சென்ற இடங்களில் எல்லாம் அவர்களுக்கு விபூதி பூசி ஆசிர்வதிக்கிறேன்.

நான் சென்ற இடம் எல்லாம் மக்கள் என்னை அன்புடன் வரவேற்கிறார்கள், அவர்களுடைய அளவற்ற அன்பை என்னால் மறக்கவே முடியாது.

நன்றி: 'ராணி' இதழ்

#கேபிசுந்தராம்பாள் #அறிஞர்அண்ணா #எஸ்ஜிகிட்டப்பா #கேபிஎஸ்

தீபாவளிக்கு ‘ரெண்டு’ பிரதீப் ரங்கநாதன் படமா?!https://thaaii.com/2025/09/19/pradeep-ranganathans-2-movies-are-release-in-...
19/09/2025

தீபாவளிக்கு ‘ரெண்டு’ பிரதீப் ரங்கநாதன் படமா?!
https://thaaii.com/2025/09/19/pradeep-ranganathans-2-movies-are-release-in-diwali/

திரையுலகில் ஒரு நடிகர் நட்சத்திரமாக மாறுவதென்பதும் அவரது வளர்ச்சி ஏறுமுகமாக இருப்பதும் இன்று மட்டும் நிகழவில்லை. தியாகராஜ பாகவதர், சிவாஜி கணேசன் காலம் தொட்டு அது தொடர்ந்து வருகிறது.

எழுபதுகளின் இறுதியில் அப்படித்தான் ரஜினிகாந்த் உச்சம் நோக்கி முன்னேறினார். அவரது நடையைப் போன்றே அந்த வளர்ச்சியும் சரசரவென்று அமைந்தது. மோகன், ராமராஜன் போன்றவர்களும் அப்படித்தான் வெற்றி பெற்றார்கள்.

2010-க்குப் பிறகு அப்படியொரு ஏற்றத்தைச் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி போன்றோர் சம்பாதித்தனர். இயக்குனர் சசிகுமாரையும் அந்த வரிசையில் சேர்க்க முடியும்.

கடந்த இரண்டாண்டுகளாக அப்படியொரு புகழோடு இருக்கிறார் இயக்குனர், நடிகரான பிரதீப் ரங்கநாதன். ‘பிஆர்’ என்று சுருக்கமாக இவரை அழைக்கிறது தமிழ் திரையுலகம்.

இத்தனைக்கும் ஜெயம் ரவியை ஹீரோவாக வைத்து ‘கோமாளி’ இயக்கியபிறகு, ‘லவ் டுடே’ படத்தை இவர் இயக்கி நடித்தார். மிகச்சிறிய பட்ஜெட்டில் உருவான அந்தப் படம் பல மடங்கு லாபத்தைத் தந்ததால், ‘ஓவர்நைட்’டில் நட்சத்திரமாக உருவெடுத்தார்.

தனது காலேஜ் சீனியர் அஸ்வத் மாரிமுத்து உடன் இவர் இணைந்து தந்த ‘டிராகன்’ வசூலில் பெருவெற்றி பெற்றது மட்டுமல்லாமல், ரசிகர்கள் ‘நல்ல கமர்ஷியல் சினிமா’ என்று சொல்லும்படியாகவும் அமைந்தது. அதனால், குடும்பத்தோடு படம் பார்க்க வருகிற ரசிகர்களையும் இவர் சம்பாதித்திருக்கிறார்.

தற்போது பிஆர் நடிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ எனும் ‘லைக்’ தயாராகியிருக்கிறது. இன்னொருபுறம் கீர்த்தீஸ்வரன் இயக்கியுள்ள ‘டூட்’ படமும் தயாராகியுள்ளது.

இவ்விரண்டில் ‘டூட்’ படம் தீபாவளிக்கு வரும் என்று முதலிலேயே சொல்லப்பட்டது. அதற்கு முன்னதாகவே ‘லைக்’ வரும் என்று கூறப்பட்டது.

ஒரு திரைப்படம் மெதுவாகத் தயாராக, இன்னொரு படம் வேகமாக வளர, தற்போது இரண்டுமே தீபாவளிக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சில நாட்களுக்கு முன்னதாக நடந்த ஒரு பட விழாவில் பேசிய பிரதீப் ரங்கநாதன், “எனது இரண்டு படங்களில் ஏதாவது ஒரு படம் தான் இந்த தீபாவளிக்கு வரும்’ என்று தெரிவித்திருந்தார். அதற்குப் பிறகுதான், இந்த அறிவிப்புகள் வெளியாகியிருக்கின்றன.

அதனால், தனது இரு படங்களையும் ஒரே நாளில் பந்தயத்தில் இறக்குகிற கட்டாயத்திற்கு பிஆர் ஆளாகியிருக்கிறார்.

தீபாவளியை முன்னிட்டு, இவ்விரு படங்கள் மட்டுமல்லாமல் மாரி செல்வராஜ் – துருவ் விக்ரமின் ‘பைசன்’, ஹரிஷ் கல்யாண் நடித்து நீண்ட நாட்கள் காத்திருப்பில் இருக்கும் ‘டீசல்’, சமுத்திரக்கனி மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் நடித்துள்ள ‘கார்மேனி செல்வம்’ என ஐந்து படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

தீபாவளிக்கு நெருக்கமாக, இப்படங்களுக்கு எத்தனை தியேட்டர்கள் கிடைக்கும் என்ற பேச்சு நிச்சயம் எழும். அதிக தியேட்டர்களில் ஒரு படத்தை வெளியிடுவதே பெரும் லாபத்தைக் கொடுக்கும் என்ற ‘ட்ரெண்ட்’ வந்தபிறகு இப்படியொரு பிரச்சனையும் எழுந்திருக்கிறது.

பிரதிப் ரங்கநாதன் நடித்த ‘டூட்’, ‘லைக்’ இரண்டும் ஒரேநாளில் வெளியாகிறபோது அவற்றுக்கான தியேட்டர் ஒதுக்கீடு, ரசிகர்கள் வருகை, வரவேற்பு என எல்லாமே இரண்டாகப் பிரிவதற்கே சாத்தியம் அதிகம். அதனால், முடிந்தவரை ஏதேனும் ஒரு படம் பின்வாங்கும் என்றே தமிழ் திரையுலகப் பண்டிதர்கள் ’கணிப்பு’களைச் சொல்லி வருகின்றனர்.

சரி, கடந்த காலத்தில் இதுபோன்று ஒரே ஹீரோவின் இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாகியிருக்கின்றனவா? அவை இரண்டுமே வெற்றி பெற்றனவா அல்லது ஏதேனும் ஒன்றுதான் ரசிகர்களின் கவனத்தைக் குவித்ததா?

சிவாஜியின் சாதனை!

தமிழ் சினிமாவில் சுமார் 250-க்கும் மேற்பட்ட படங்களில் நாயகனாகவும் முதன்மை பாத்திரங்களிலும் நடித்தவர் சிவாஜி கணேசன். உடல்நலக்குறைவு, அரசியல் கட்சி தொடக்கம் போன்ற காரணங்களால் தொண்ணூறுகளில் அவர் திரைப்படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டார்.

போலவே, ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனின் எழுச்சிக்குப் பிறகு அவரது படங்களின் மீதான கவனிப்பும் குறைந்தது.

ஆதலால், 1950 முதல் 1980 வரையிலான காலகட்டத்தில் சிவாஜி நடிப்பில் சுமார் 180 படங்கள் வெளியாகியிருக்கும் என்று சொல்ல முடியும். குறைந்தபட்சம் ஓராண்டுக்கு ஐந்தாறு படங்களாவது வரும் என்ற உத்தரவாதத்தைத் தருகிறது அவரது ‘பிலிமோகிராஃபி’.

அதில் 17 முறை அவர் நடித்த இரண்டு படங்கள் ஒரே நாளில் ‘ரிலீஸ்’ ஆகியிருக்கின்றனவாம்.

1954 ஆகஸ்ட் 26 அன்று எம்ஜிஆரும் சிவாஜியும் இணைந்து நடித்த ஒரே படமான ‘கூண்டுக்கிளி’ மற்றும் ‘தூக்கு தூக்கி’ ஆகியன வெளியாகின. இப்படங்களில் இரண்டாவது மிகப்பெரிய வெற்றியை அடைந்தது.

அதற்கு முன்னதாக, அதே ஆண்டு ஏப்ரல் 13 அன்று ‘கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’, ‘அந்த நாள்’ படங்கள் வெளிவந்தன.

1955-ம் ஆண்டு நவம்பர் 13 அன்று ‘கோடீஸ்வரன்’, ‘கள்வனின் காதலி’ இரண்டும் வந்தன. ‘கள்வனின் காதலி’ படமே நூறு நாட்களைக் கடந்து வெற்றி பெற்றது.

1956-ம் ஆண்டு ஜனவரி 14 அன்று வெளியான இரண்டு படங்களில் ‘நல்ல வீடு’ தோல்வியடைய, ‘நான் பெற்ற செல்வம்’ பெருவெற்றியை ஈட்டியது.

1959-ம் ஆண்டு அக்டோபர் 31 அன்று ‘பாகப்பிரிவினை’, ‘அவள் யார்’ ஆகியன வந்தன. இதில் எந்தப் படத்தின் டைட்டில் நமக்குத் தெரியும் என்று யூகித்தால், அதன் வெற்றியையும் அறியலாம்.

1960-ம் ஆண்டு அக்டோபர் 19-ம் தேதியன்று ’பெற்ற மனம்’, ‘பாவை விளக்கும்’ படஞ்கள் வெளியாகின.

இதே போன்று 1961-ம் ஆண்டு ‘எல்லாம் உனக்காக’, ‘ஸ்ரீ வள்ளி’ மற்றும் ‘நவராத்திரி’, ‘முரடன் முத்து’ ஆகியன இரு வேறு தினங்களில் வெளியாகின. இப்படங்களில் நவராத்திரிக்கு ஈடாக ஓடியிருக்க வேண்டிய ‘முரடன் முத்து’ பெரிய கவனிப்பைப் பெறவில்லை. அதற்கு, இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியானதே காரணம் என்ற கருத்து சிவாஜி ரசிகர்கள் மத்தியில் நிலவியது.

1967-ம் ஆண்டு நவம்பர் 1 அன்று ‘இரு மலர்கள்’, ‘ஊட்டி வரை உறவு’ வெளியாகின. இரண்டுமே வெற்றியைப் பெற்றன.

1970-ம் ஆண்டில் ’விளையாட்டுப் பிள்ளை’, ‘தர்த்தி’ என்ற இந்திப்படம் இரண்டு பிப்ரவரி 20 அன்று வெளியாகின. அதே ஆண்டு அக்டோபர் 29 அன்று ‘எங்கிருந்தோ வந்தாள்’, ‘சொர்க்கம்’ படங்கள் வந்தன.

1971-ம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று சாவித்திரி இயக்கிய ‘பிராப்தம்’, சி.வி.ராஜேந்திரனின் ’சுமதி என் சுந்தரி’ வந்தன. இரண்டில் ‘பிராப்தம்’ பெருந்தோல்வியைச் சந்தித்து, சாவித்திரியின் திரை வாழ்வைச் சின்னாபின்னமாக்கியது.

1975-ம் ஆண்டு நவம்பர் 2 அன்று ‘டாக்டர் சிவா’, ‘வைர நெஞ்சம்’ ஆகியன வந்தன. ஸ்ரீதரின் ‘வைர நெஞ்சம்’ சுமார் மூன்றாண்டு கால தாமதத்திற்குப் பிறகு வந்து கவனிப்பைப் பெறாமல் போனது.

இவை போக ‘பரிட்சைக்கு நேரமாச்சு’, ‘ஊரும் உறவும்’ மற்றும் ‘இரு மேதைகள்’, ‘தாவணிக் கனவுகள்’ ஆகியன ஒரே நாளில் வெளியாகியிருக்கின்றன.

1987-ம் ஆண்டு ‘ஜல்லிக்கட்டு’, ‘கிருஷ்ணன் வந்தான்’ படங்கள் சிவாஜி நடிப்பில் ஒரே நாளில் வந்தன. அவ்விரண்டில் ‘ஜல்லிக்கட்டு’ பம்பர் ஹிட்டானது.

சில ஆச்சர்யங்கள்..!

எம்ஜிஆர் நடித்த படங்கள் எதுவும் ஒரே நாளில் ‘ரிலீஸ்’ ஆனதில்லை. தனது படங்களின் தொடக்கம் முதல் தியேட்டர் வெற்றி வரை ஒவ்வொன்றையும் மிகுந்த திட்டமிடலோடு அணுகியதுதான் அதற்குக் காரணம்.

அதையும் மீறி, 1966-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி ‘அன்பே வா’, ‘நான் ஆணையிட்டால்’ படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டன. ஆனால், எம்ஜிஆரின் தலையீட்டினால் அந்த ஆண்டு பிப்ரவரி 4 அன்று ‘நான் ஆணையிட்டால்’ வெளியானதால் அந்த போட்டி தவிர்க்கப்பட்டது.

ஜெமினி கணேசன் நடிப்பில், 1959-ம் ஆண்டு ஏப்ரல் 9 அன்று டி.பிரகாஷ்ராவ் இயக்கிய ‘நல்ல தீர்ப்பு’ மற்றும் ஸ்ரீதரின் ‘கல்யாண பரிசு’ ஆகியன வெளியாகின. இரண்டில் ஸ்ரீதர் படம் பெற்ற வரவேற்பு முன்னதற்குக் கிடைக்கவில்லை.

இதற்கு முன்னதாக, ஜெமினி நடித்த ‘ஆசை மகன்’, அதன் மலையாளப் பதிப்பான ’ஆஷா தீபம்’ இரண்டும் 1953-ம் ஆண்டு செப்டம்பர் 18 அன்று வெளியாகின.

1978-ம் ஆண்டு அக்டோபர் 30 அன்று தேவர் பிலிம்ஸின் ‘தாய் மீது சத்தியம்’, ருத்ரய்யா இயக்கிய ‘அவள் அப்படித்தான்’ படங்கள் வெளியாகின. இரண்டிலும் ரஜினிகாந்த் பிரதான பாத்திரத்தில் நடித்தார்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் இணைந்து நடித்த காலகட்டத்தில் வெளியான ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘தாயில்லாமல் நானில்லை’ இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாகின. இரண்டிலும் ‘மெய்ன் ஹீரோ’ ஆக கமல் நடித்திருந்தார். இரண்டுமே வெற்றியைப் பெற்றன.

இயக்குனர் மணிவண்ணன் இயக்கிய ‘விடிஞ்சா கல்யாணம்’, ‘பாலைவன ரோஜாக்கள்’ ஆகியன ஒரே நாளில் வெளியாகியிருக்கின்றன. 1986ஆம் ஆண்டு நவம்பர் 1 அன்று வெளியான இவ்விரு படங்களும் ‘சூப்பர்ஹிட்’ ஆகின. இரண்டிலும் சத்யராஜ் நாயகனாக நடித்திருந்தார் என்பது இன்னொரு சிறப்பு.

இதே நாளில் விஜயகாந்த் நடித்த ‘தழுவாத கைகள்’, ‘தர்ம தேவதை’ படங்களும் வெளியாகின. சோகம் நிறைந்த ‘தழுவாத கைகள்’ படத்தில் விஜயகாந்தின் நடிப்பு பாராட்டப்பட்டாலும், பெரிய வெற்றியைப் பெறவில்லை.

1987-ம் ஆண்டு அக்டோபர் 21 அன்று ‘உழவன் மகன்’, ‘சட்டம் ஒரு விளையாட்டு’ படங்கள் வந்தன. இரண்டில் ‘உழவன் மகன்’ படத்தின் பட்ஜெட்டும் வெற்றியும் பெரியதாக இருந்தன.

1989-ம் ஆண்டு அக்டோபர் 28 அன்று ‘ராஜநடை’, ‘தர்மம் வெல்லு’ படங்கள் வெளியாகின. இதில் ‘ராஜநடை’ படத்தின் கதை சமீபத்தில் வெளியான ‘தி கோட்’ போல இருக்கும்.

’பில்லா’ கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சத்யராஜ் நடித்த ‘திராவிடன்’, பி.வாசு இயக்கிய ‘வாத்தியார் வீட்டு பிள்ளை’ படங்கள் அதே நாளில் வெளியாகின. அதில் பி.வாசுவின் படமே சத்யராஜுக்கு கைகொடுத்தது.

1990-ம் ஆண்டு அர்ஜுனின் ‘தங்கைக்கு ஒரு தாலாட்டு’, ‘ஆத்தா நான் பாஸாயிட்டேன்’ படங்கள் ஒரே நாளில் ‘ரிலீஸ்’ ஆகியிருக்கின்றன.

இதேபோன்று பிரபு, ராம்கி, முரளி எனச் சில நாயகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாகியிருக்கின்றன. தமிழ் மட்டுமல்லாமல் வேறு மொழிகளில் நடித்த படங்களும் ஒரே நாளில் வெளியான பெருமையைச் சில நாயகர்கள் பெறுகின்றனர்.

அடுத்தடுத்த நாட்களில் ஒரே நாயகனின் வெவ்வேறு படங்கள் வெளியானதும் தமிழ் திரையுலக வரலாற்றில் நிகழ்ந்திருக்கின்றன.

இவை போக நடிகைகள் நடித்து ஒரே நாளில் வெளியான படங்கள் என்று தனியாகப் பட்டியல் இடலாம். சில இயக்குனர்களின் படங்களும் அப்படி வந்திருக்கின்றன. எஸ்.பி.முத்துராமன் இயக்கிய ‘எங்கேயோ கேட்ட குரல்’, ‘சகலகலா வல்லவன்’ ஆகியன அப்படி வெளியாகியிருக்கின்றன. இரண்டுமே அவரைப் புகழின் உச்சத்தில் நிறுத்தின எனலாம்.

ஆதலால், இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாவது நிச்சயம் பாதகமாக அமையாது; ஒருவேளை அந்த வெற்றியின் அளவு சிறிதளவு குறையலாம். உள்ளடக்கம் சத்தோடு இருந்தால் கண்டிப்பாக இரண்டு படங்களுமே வெற்றி பெறும் என்பதையே கடந்த கால உதாரணங்கள் ரசிகர்களுக்கு எடுத்துரைக்கின்றன.

- மாபா

#பிரதீப்ரங்கநாதன் #பிஆர் #ஜெயம்ரவி #கோமாளி #லவ்டுடே #அஸ்வத்மாரிமுத்து #டிராகன் #விக்னேஷ்சிவன் #லவ்இன்சூரன்ஸ்கம்பெனி #லைக் #கீர்த்தீஸ்வரன் #டூட்

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Cine rocket posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share