Cine rocket

Cine rocket 🎬🚀 Welcome to "CiniRocket: Exploring the Cinematic Cosmos"! 🚀🎬
🌟 Greetings, cinephiles
(2)

‘டியூட்’ – இந்தத் தலைமுறைக்கு ‘கியூட்டா’ தெரிகிறாரா?https://thaaii.com/2025/10/17/dude-movie-review/DUDE ஒருவனுக்கு (பிர...
17/10/2025

‘டியூட்’ – இந்தத் தலைமுறைக்கு ‘கியூட்டா’ தெரிகிறாரா?
https://thaaii.com/2025/10/17/dude-movie-review/

DUDE ஒருவனுக்கு (பிரதீப் ரங்கநாதன்) மாமன் மகள் ஒருத்தி (மமிதா பைஜூ) இருக்கிறாள்.

பால் வளத்துறை அமைச்சரான (சரத்குமார்) அந்த மாமாவின் ஒரு தங்கை இறந்து விட, இன்னொரு தங்கைதான் DUDE -ன் அம்மா (ரோகினி).

இப்படி ஒரு சூழலில், மாமன் மகள் காதலைச் சொல்ல, ''உன்னைக் காதலியாகப் பார்க்க முடியவில்லை. ஒன்லி நட்புதான்'' என்கிறான் DUDE.

மனதளவில் இற்றுப்போகும் அவள், இதற்கு மேல் அவனைப் பார்த்துக் கொண்டு ஏங்கி சாக முடியாது என்று வெளியூருக்குப் படிக்கப் போய்விடுகிறாள்.

DUDE-க்கு ஒரு விபத்து நடந்து, அவன் உயிராபத்துக்கு போன நிலையில், அவள் ஞாபகம் வர, பிழைத்த உடன் அவளைக் காதலிப்பதை உணர்கிறான் DUDE.

ஆனால், அதற்குள் அவள் இன்னொருவனைக் காதலிக்க ஆரம்பித்து விடுகிறாள். அதை அவள் DUDE-டிடம் சொல்ல, தன் காதலை DUDE மறைக்கிறான்.

DUDEக்கும் தனது மகளுக்கும் கல்யாணம் நிச்சயம் செய்கிறார் அமைச்சர்.

மாமா மகனின் காதலுக்கு உதவலாம் என்று பார்த்தால் அந்தக் காதலன் வெத்து பில்டப் ஆள். எனினும் இருவரின் காதலும் உண்மை.

மகள் அமைச்சரிடம் காதலைச் சொல்ல, வேறு சாதி ஆள் என்பதால் மறுத்து விடும் மகளிடம் ஓர் அதிர்ச்சியான உண்மையைச் சொல்லி மிரட்டி, DUDE-ஐதான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்கிறார் அமைச்சர்.

இருவரையும் வெளிநாடு அனுப்பி விடுவோம் என்று DUDE திட்டமிட, மாமன் மகள் இரண்டு மாத கர்ப்பம். காரணம் அந்தக் காதலன். அதனால் விசா மறுக்கப்படுகிறது.

கருவைக் கலைக்க முடியாத உடல் நலச் சிக்கல் அவளுக்கு.

எனவே வேறு வழி இல்லாமல் காதலனால் கர்ப்பம் ஆன மாமன் மகளைத் திருமணம் செய்து கொள்கிறான் DUDE.

குழந்தை பிறந்ததும் டைவர்ஸ் கொடுத்து காதலனையும் மாமன் மகளையும் ஃபாரினுக்கு அனுப்பி விட திட்டமிடுகிறான் DUDE.

ஒரு நிலை வரை காமெடி முகம் காட்டும் சீரியஸ் அரசியல்வாதி மாமாவுக்கு விஷயங்கள் தெரியவர நடந்தது என்ன என்பதே இந்த படம்.

DUDE ஆக பிரதீப் ரங்கநாதன். தனது முந்தைய படங்களான லவ் டுடே, டிராகன் பாணியிலேயே பரபரப்பாக, ஸ்டைலாக இளைஞர்களால் ரசிக்க முடிகிற நாடகத் தன்மையோடு நடித்துள்ளார்.

ஏமாற்றத்தின் வலியைக் காட்டிக் கொள்ளாமல் உள்ளுக்குள் புகைத்துக் கொண்டு பிரச்னைகளை எதிர்கொள்வதும், ஒரு நிலையில் உடைந்து அழுவதும் நெகிழ்ச்சி.

சுயநலவாதி என்று நினைக்க வைக்கிற கேரக்டரில் அட்டகாசமாக நடித்து இருக்கிறார் மமிதா பைஜூ.

ஆரம்ப அப்பாவி நடிப்பு, அப்புறம் எடுக்கும் வில்லத்தனம், அதன் விளைவான உருக்கம் என்று, பிரம்மாதமாக ஸ்கோர் செய்து இருக்கிறார் சரத்குமார்.

காலகாலமாக தமிழ் சினிமாவில் ஊறிக் கிடந்த தாலி செண்டிமெண்டை அந்தத் தாலியை வைத்தே கலாய்த்திருக்கிறார் இயக்குநர் கீர்த்தி வாசன்.

படத்தின் சில பிராங்க்ஸ் ஐடியாக்கள் காட்சியாகவும் மாண்டேஜஸ் எனப்படும் காட்சித் துண்டுகளாகவும் அசத்துகின்றன. அவற்றை வைத்து திரைகதையில் செய்யும் பிளேவும் திரைக்கதையில் உச்சம்.

நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவில் வண்ணமயமாக அழகியலாக ஜொலிக்கின்றன காட்சிகள். சாய் அப்யங்கரின் இசை ஓகே ராகம்.

பரத் விக்ரமனின் படத்தொகுப்பு தெறிப்பு. சிறப்பு.

சாதி ஆணவத்தை நான் சென்ஸ் என்று உடைத்துப் போடும் காட்சி அருமை. பாராட்டுக்கள்.

மாமன் மகளை சிறுவயது முதல் தோழியாகப் பார்த்ததால் அவளைக் காதலிக்க முடியவில்லை என்கிறான் DUDE. அப்படியே ஆகட்டும்.

ஆனால், சிறுவயது முதல் தான் பாசமாக பார்த்த அவள், தான் கிடைக்காத ஏக்கத்தில் நொறுங்கி அழும்போதும் இன்னைக்கு என்னவோ புதன்கிழமை என்பது போல போய் விடுகிறான் DUDE.

திரும்ப இவன் காதல் சொல்ல வரும்போது அந்த ஆறு மாதத்துக்குள் அவள் வேறொருவனை காதலித்து விட்டாளாம். இதுகூட ஒகே இன்றைய தலைமுறையில் சகஜம் என்றே வைத்துக் கொள்வோம்.

சிறு வயது முதல் அவ்வளவு பாசமான மாமன் மகள், நம்ம DUDE-டிடம் காதலை இறைஞ்சி கலங்கி அழுதபோதுகூட, பாசத்தைக் காதலாக உணரத் தெரியாமல் அலட்சியமாகப் புறக்கணித்து போகும் DUDE, தான் ஆக்சிடெண்டில் சாகும் தறுவாயில் அவள் மேல் காதல் கொண்டான் என்பது பக்கா செயற்கை.

காதல் வந்திருக்கும் என்றால் அவளது உயிர் ஒழுகும் கண்ணீரின்போதே அவனுக்கு காதல் வந்திருக்கும். வரவில்லை என்றால் செத்தாலும் இவனால் அவளைக் காதலியாகப் பார்க்க முடியாது.

ஏனென்றால், A CHARACTER IS A CHARACTER IS A CHARACTER LIKE A ROSE IS A ROSE IS A ROSE. (நன்றி ELIZABETH BARRETT BROWNING)

சரி, அது போகட்டும்.

அப்படிப் போன காதலி நிலைமையை உணராமல் கல்யாணத்துக்கு முன்பே அந்த பயந்தாங்குளி காதலனோடு செக்ஸ் வைத்து கர்ப்பமும் ஆவாளாம். அவளுக்காக இவன் அளப்பரிய தியாகம், பழி பாவம் எல்லாம் சுமப்பானாம். இன்றைய தலைமுறை இதை எல்லாம் ரசிக்குமா?

ஏனென்றால் இயக்குநர் விக்ரமன் கூட இப்படி ஒரு தியாக ஹீரோவைக் காட்டி படம் எடுக்கவில்லை. இந்தப் படத்தைப் பார்த்தால் அவரே கூட கலங்கி மனம் நொறுங்கி அழுது விடுவார். (விக்ரமன் சார் கவனம்)

சிம்பிள்... படத்தில் வரும் பிரதீப் ரங்கநாதன் கேரக்டருக்குள் புகுந்து அதே பாணியில் சொல்வது என்றால்... ''ஏன்டா தாங்கற அளவுக்கு நெஞ்சை நக்குனா பரவால்ல. நெஞ்செலும்பு உடைந்து பீஸ் பீசாகும் அளவுக்கா நெஞ்சை நக்கறது?''

இப்படி அடிப்படையிலேயே சில தவறுகள் இருந்தாலும், அடுத்தடுத்து சுவாரஸ்யமான சம்பவங்கள், விபரீத நிகழ்வுகளுக்குள் தைரியமாக நுழையும் திரைக்கதை, அதையும் சமாளிக்கும் DUDE இன் கெத்து என்று படம் பெரிதாக சேதாரம் செய்யவில்லை.

ஒரு வழியாகத் தட்டித் தடவி உருட்டி உருண்டை பிடித்து அது உடைவதற்குள் ரசிகனின் கையில் போட்டுவிட்டு,

“இனி உடைஞ்சா அதை சாப்பிடுவீங்களோ, இல்லன்னா உடையாத உருண்டையை கடிச்சு சாப்பிடுவீங்களோ அது உங்க பாடு. நான் உங்க கையில் கொடுக்கும்போது உருண்டையாகத் தானே இருந்தது" என்று மானசீகமாக பொறுப்புத் துறப்பு செய்கிறது படக்குழு.

சில வழமையான, பொதுப் புத்தியில் புனிதம், நியாயம், தர்மம் என்று நம்பப்படும் விசயங்களை, இளங்கன்று பயமறியாது என்ற ரீதியில் இயக்குநர் கீர்த்தி வாசன் லாஜிக்காக, டெக்னிக்கலாக, பயாலஜிகலாக உடைத்துப் போடும் விதம் ஈர்க்கிறது.

இந்தப் படம் பூமர்களுக்கும் பிடித்தால் பெரும் வெற்றி. ஆனால், பிடிக்குமா என்ற சந்தேகம் படக் குழுவுக்கும் இருந்திருக்க வேண்டும். அதனால்தான் ''ஒரு மனுசனோட தனிப்பட்ட ஃபீலிங்கை கிரிஞ்ச்-ன்னு சொல்றதுதானே இப்ப ட்ரென்ட்" என்று பிரதீப் ரங்கநாதனே ஒரு காட்சியில் சொல்கிறார்.

எனினும் DUDE ஜென்ஸீ தலைமுறைக்கு CUTE ஆகவே தெரியும்.

- சு. செந்தில் குமரன்

#டியூட் #பிரதீப்_ரங்கநாதன் #மமிதா_பைஜூ #சரத்குமார் #ரோகினி #கோமாளி #டிராகன் #அரசியல் #சாதி #தாலி #தமிழ்

பைசன் காளமாடன்: மூர்க்கமா, ஆக்கமா?https://thaaii.com/2025/10/17/bison-movie-review/தென்தமிழ்நாட்டின் தூத்துக்குடிப் பகுத...
17/10/2025

பைசன் காளமாடன்: மூர்க்கமா, ஆக்கமா?
https://thaaii.com/2025/10/17/bison-movie-review/

தென்தமிழ்நாட்டின் தூத்துக்குடிப் பகுதியில் 1990-களில் இருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் கிராமம் வனத்தி. பிற்படுத்தப்பட்ட மக்கள் வசிக்கும் கிராமம் தேமாங்குளம்.

அந்தப் பகுதி மக்களுக்கே கபடிதான் உயிரில் கலந்த 'தேசிய' விளையாட்டு. அதனாலும் அங்கு சாதிய மோதல்கள் நிகழ்வதுண்டு. அதன் பாதிப்புகள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தொடர்வதும் உண்டு.

தாழ்த்தப்பட்ட கிராமத்துக் கோவில் பூசாரிக்கு (பசுபதி) ஒரு மகன் கிட்டான் (துருவ் விக்ரம்), ஒரு மகள் (ரஜிஷா விஜயன்). கிட்டானுக்கு பெரிய கபடி வீரன் ஆக வேண்டுமென ஆசை.

கிரிக்கெட்டில் நன்றாக ஆடி இலங்கையை இந்தியா ஜெயித்தால், தமிழக மீனவர்களை சிங்கள கடற்படை சுடுவது போல,

இதற்கு முன்பு கபடி ஆட்டத்தில் சாதனை படைத்த தாழ்த்தப்பட்ட சமூக வீரன் ஒருவனை, பிற்படுத்தப்பட்ட சாதி வெறி ஆட்கள் வெட்டிக் கொன்றதைப் பார்த்த பூசாரிக்கு, மகனுக்கும் அந்த நிலை வரக் கூடாது என்ற பயம்.

எனவே கிட்டானுக்கு கபடி வேண்டாம் என்பதில் உறுதியாக நிற்கிறார்.

அதே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கபடி வீரன் ஒருவனுக்கு கிட்டானை பிடிக்காது. அதனால் கிட்டானின் குடும்பத்தையும் அவனுக்குப் பிடிக்காது.

கிட்டான் கபடியில் முன்னேறக் கூடாது என்று தாழ்த்தப்பட்ட சமூக கபடி வீரனே நினைக்கிறான். ஆனால் அவன் தங்கை (அனுபமா பரமேஸ்வரன்) கிட்டானைக் காதலிக்கிறாள்.

பிற்படுத்தப்பட்ட சாதித் தலைவர் கந்தசாமி (லால்), தாழ்த்தப்பட்ட மக்களின் சாதித் தலைவர் பாண்டியராஜா (அமீர்). இருவரும் வேறு தங்கள் கவுரவத்துக்காக இரு சமூக மக்களையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த உடற்பயிற்சி ஆசிரியர் (மதன்) கிட்டானுக்கு உதவுகிறார்.

கிட்டான் தனது ஊருக்கும் வெளியே வேறு வேறு அணிகளில் விளையாடி உயர்கிறான்.

அதன் பின்னரும் சொல்ல முடியாத கஷடங்களை அவமானங்களை தடைகளை துரோகங்களை அடி உதையை தாங்கி முன்னேறி, இந்தியக் கபடி அணியில் இடம் பெற்று, ஜப்பானில் நடக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடப் போனால், பாகிஸ்தானும் இந்தியாவும் ஆடும் முதல் மேட்ச்சில் கிட்டானுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

ஆடாமல் ஜெயிக்காமல் வந்தால் ஊருக்குள்ளே நுழைந்தால் உயிரோடு இருக்க முடியாது என்ற நிலையில்,

கிட்டானுக்கு என்ன நடந்தது? சாதி வெறி என்னும் மலையை சுமந்தபடியே தன்னை நிரூபிக்க ஓடிய கிட்டான், இலக்கை அடைந்து வென்றானா, இற்று விழுந்தானா? என்பதே இந்த ‘பைசன் காளமாடன்’.

தலித் இளைஞனும் சிறந்த கபடி வீரருமான மணத்தி கணேசன் என்பவரின் வாழ்வில் நடந்த சில உண்மைச் சம்பவங்களோடு கற்பனைகளையும் சேர்த்து இந்தப் படத்தை எழுதி இருப்பதாக படத்தின் துவக்கத்தில் சொல்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

படத்தை சிறப்பாகப் படைத்துள்ளார் மாரி செல்வராஜ். சமரசம் இல்லாத கடின உழைப்பு, மிக நீண்ட லாங் ஷாட்கள் மூலம் கதை நடக்கும் நிலவியல், மண் மனம், கதை நடக்கும் சூழல் இவற்றை சிறப்பாக உருவாக்குவதன் மூலம் சாதாரண காட்சிகளையும் தரக்கூட்டல் செய்துள்ளார்.

''யாருன்னே தெரியாத ஒருத்தன் வந்து கட்டிப் புடிச்சு, நீ நம்ம ஆளுங்கறான். யாருன்னே தெரியாத ஒருத்தன் முறைக்கிறான். எவன் உண்மை, எவன் பொய்ன்னு தெரியல?” என்று துருவ் விக்ரம் புலம்புவது தாழ்த்தப்பட்ட மக்களின் ஆழ் மன வலியை நேர்மையாக வெளிப்படுத்தும் வசனம்.

‘கர்ணன்’ படத்தில் லால் கதாபாத்திரத்திடம், செத்துப் போன மனைவியின் தோழி சொல்லும் விஷயம் காமம் சம்மந்தப்பட்டது என்பதையும் மீறி நெகிழ வைக்கும்.

அந்த அளவுக்கு இல்லை என்றாலும் அந்த வழியில் படத்தின் இரண்டு கதாநாயகிகளின் (அனுபமா, ரெஜிஷா) காதலன்களும் பெண்களைவிட வயதில் சிறியவர்கள். சிறப்பு மாரி செல்வராஜ்.

பிற்படுத்தப்படுத்தப்பட்ட ஆட்களிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உதவியதால் தன் சமூக ஆட்களிடம் அடிவாங்கிய பிற்படுத்தப்பட்ட ஆட்களும் உண்டு.

சொந்த லாபத்துக்காக சாதி வெறி பிடித்த பிற்படுத்தப்பட்ட சாதி ஆட்களிடம் பணத்துக்காக தன் சமூகப் போராளிகளைக் காட்டிக் கொடுக்கும் தாழ்த்தப்பட்ட ஆட்களும் உண்டு என்று நேர்மையாகப் பதிவு செய்திருக்கிறார் மாரி செல்வராஜ்.

''நம்ம ஆளுக அப்படி எல்லாம் செய்யமாட்டாங்க அண்ணா'' என்று ஒரு காட்சியில் தன்னிடம் சொல்லும் உதவியாளரிடம் அமீர் சொல்லும் பதில் மாரியின் மனசாட்சியின் குரலாகவே இருக்கட்டும்.

‘இயக்குநர் மேதை’ மகேந்திரன் தனது நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படம் பற்றிக் கூறியபோது,

''கல்யாணத்துக்கு முன்பு, விரும்பி ஜாக்கிங் போகும் பழக்கம் உள்ள ஒரு பெண், கல்யாணத்துக்கு அப்புறம் தன் கணவன் உயிரைக் காப்பாற்ற ஓடுகிறாள் என்ற வாக்கியம்தான் அந்தப் படம் உருவாகக் காரணம்'' என்றார்.

அதே போல இந்தப் படத்தில், சாதி ரீதியான அவமானங்களையும் புறக்கணிப்புகளையும் ஓடி ஓடியே தீர்த்துக் கொண்ட இளைஞன், ஒரு நிலையில் தன் சாதி அவமானத்தைக் களையவும், லட்சியத்தை அடையவும், உயிர் பிழைக்கவும் ஓடுகிறான்.

நடிப்பு, உழைப்பு என இந்தப் படத்தில் பிரம்மிக்க வைக்கும் பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார் துருவ் விக்ரம். நம்பிக்கையை விதைக்கிறார்.

துருவ் தமிழ் சினிமா வானில் ஒரு துருவ நட்சத்திரமாக வருவார்.

இயல்பில் ஜொலிக்கும் நடிப்பைப் படம் முழுக்க வழங்குகிறார் பசுபதி. தமிழ் சினிமாவின் பொக்கிஷம் அவர்.

கம்பீரமான கேரக்டரில் பட்டாசு வசனங்களைப் பேசி பலம் சேர்க்கிறார் அமீர். ரெஜிஷா மிகப்பொருத்தம்.

சற்றே மலையாள வாசனைப் பேச்சு, மலையாள நடை, உடை, பாவனை இருந்தாலும் அனுபமா பரமேஸ்வரன் நடிப்பும் சிறப்பு.

பல படங்களில் தமிழை மலையாளம் போல பேசி அதையும் விக்கல் வந்த மாதிரி பேசும் வழக்கமுள்ள லால் இந்தப் படத்தில் சிறப்பாக பேசியிருப்பது ஆச்சர்யம் (ஒருவேளை அவர் மாதிரி வேறு யாரும் பேசினார்களோ என்னவோ)

இயக்கத்தையும் எழில் அரசுவின் ஒளிப்பதிவையும் தனித்தனியாக பிரித்துப் பார்க்கவே முடியவில்லை.

இயக்குநரின் கற்பனையை நிஜத்தில் கொண்டு வருவதில் மாபெரும் பங்களிப்பை தந்திருக்கிறது ஒளிப்பதிவு.

நிவாஸ் பிரசன்னாவின் பாடல் இசை உருவாற்றுகிறது எனில், பின்னணி இசை ஒரு தனி மொழி போல் உணர வைக்கிறது.

பைசன் என்பது காட்டெருமை. அதாவது எருமை. ஆனால் காளமாடன் என்பது வேறு. பைசன் எப்படி காளமாடனாகவும் இருக்க முடியும் என்ற கேள்வி ஆரம்பத்தில் வந்தது நிஜம்.

ஆனால், மண்ணின் மைந்தர்களுக்கு அவன் காளமாடன். காஸ்மாபாலிட்டன் சமூகத்தின் பார்வையில் அவன் பைசன் என்று உணரவைக்கும் விதம் அருமை.

இப்படி எல்லாம் சுயசாதி ஆட்கள் தொடங்கி இந்தி வாலாக்கள் வரை எல்லோராலும் புறக்கணிக்கப்படும் கிட்டான்,

இவ்வளவு கத்திகள், உருட்டுக் கட்டைகள், வேல் கம்புகளையும் மீறி தப்பிக்காமல் போய் விடுவானோ, இல்லை மாட்டிக் கொள்வானோ என்ற பதட்டம் ஒவ்வொரு காட்சியிலும் வந்திருக்க வேண்டும். அப்படி வந்திருந்தால் இந்தப் படத்தின் ரேஞ்சே வேறு.

ஆனால், எடுத்த எடுப்பிலேயே கிட்டான் ஜப்பானில் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு இந்திய அணியின் சார்பாகப் போய்விட்டான் என்று சொல்லி விடுவதன் மூலம்,

''அதாம் லே அவன் சப்பான் போயிட்டாம்லா, உசுருக்கு ஒண்ணும் பங்கமில்லப்பா..." என்று படம் பார்ப்பவர்கள் ரிலாக்ஸ் ஆகி விடுகிறார்கள்.

அவன் ஜெயிப்பானா, இல்லையா என்ற ஒரே விசயத்துக்குள் விசயத்துக்குள் படம் சிக்கிக் கொண்டது.

இப்படி சில குறைகள், கேள்விகள் எழுந்தாலும், பைசன் காளமாடன் - திமில் திமிறும் சிறப்பான சீற்றம்.

- சு. செந்தில் குமரன்

#இயக்குநர்_மாரி_செல்வராஜ் #துருவ்_விக்ரம் #பைசன் #காளமாடன் #ரஜிஷா_விஜயன் #பசுபதி #கிட்டான் #லால் #அனுபமா_பரமேஸ்வரன் #அமீர்

முத்துராமனை அடையாளம் காட்டிய படம்!https://cinirocket.com/script-about-actor-muthuraman/தமிழ் சினிமாவில் சிவாஜி, எம்.ஜி.ஆ...
17/10/2025

முத்துராமனை அடையாளம் காட்டிய படம்!
https://cinirocket.com/script-about-actor-muthuraman/

தமிழ் சினிமாவில் சிவாஜி, எம்.ஜி.ஆர் காலத்தில் தனக்கென்று ஒரு பாணியில் பாதையை அமைத்துக் கொண்டு வெற்றிநடை போட்டவர் நடிகர் முத்துராமன்.

ஒன்றாக இருந்தால் தன் அப்பாவுக்கும் தனக்கும் ஆகாது என்று ஒரு ஜோசியர் சொன்னதன் பேரில் சென்னைக்கு நடிக்க வந்தவர் தான் முத்துராமன்.

ஆரம்பத்தில் கிடைத்த வேலைகளை செய்துகொண்டு இருந்த முத்துராமன் பல நாடக சபைகளில் ஏறி இறங்கினார்.

நடிகரும் நாடக உரிமையாளருமான எஸ்.வி.சகஸ்ரநாமனின் நாடகக் கம்பெனியில் சேர்ந்து பல நாடகங்களில் நடித்து பிரபலமானார் முத்துராமன்.

அதே நாடகக் கம்பெனியில் இருந்த நடிகர் கோபி என்பவர் போலீஸ்காரன் என்ற நாடகத்தைப் பார்க்க வருமாறு இயக்குனர் ஸ்ரீதரிடம் சொல்ல அதன் மூலம் ஸ்ரீதர் தனக்கு வாய்ப்பு கொடுப்பார் என்று கோபி இந்தத் திட்டத்தை போட்டிருக்கிறார்.

ஸ்ரீதரும் நாடகத்தைப் பார்த்து முத்துராமனை பார்த்திருக்கிறார். அப்போது நெஞ்சில் ஓர் ஆலயம் படத்திற்காக கதா நாயகனைத் தேர்வு செய்து கொண்டிருந்த ஸ்ரீதருக்கு லட்டாக மாட்டினார் முத்துராமன்.

எதிர்பாராத அதிர்ஷ்டத்தில் துள்ளிக் குதிச்ச முத்துராமனுக்கு கூடவே ஒரு அதிர்ச்சியும் காத்துக் கொண்டிருந்தது.

நெஞ்சில் ஓர் ஆலயம் படப்பிடிப்பின் அதே கால்ஷீட் நாளில் எஸ்.வி.சகஸ்ரநாமனின் நாடகமும் பம்பாயில் 10 நாட்கள் நடக்கப் போவதாக தகவல் வந்தது.

இதனால் மனமுடைந்த முத்துராமன் அந்தப் படத்தில் நடிக்க முடியாது என ஸ்ரீதரிடம் சொல்லியிருக்கிறார்.

ஆனால், ஸ்ரீதர் முத்துராமனிடம், “எஸ்.வி.எஸிடம் இந்த நிலையை கூறி என்ன செய்வதென்று கேள், அதன் படி முடிவுசெய்” என்று சொல்லி அனுப்பினாராம்.

எஸ்.வி.எஸ் இதை கேட்டு முத்துராமனிடம், “இது உனக்கு கிடைத்த அருமையான வாய்ப்பு, ஆகவே இதைத் தவறவிடாதே, என் நாடகத்தில் ஒரு இரண்டு நாள் மட்டும் வந்து நடித்துக் கொடுத்து விட்டுப் போ, பின் 8 நாள்கள் அந்தப் படப்பிடிப்பிலேயே பயன்படுத்திக் கொள்” என்று கூறினாராம்.

அதன்படியே முத்துராமன் செய்ய ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படம் முத்துராமன் கெரியரில் ஒரு திருப்பு முனையாக அமைந்த படமாக மாறியது. இந்த சுவாரஸ்யத் தகவலை சித்ரா லட்சுமணன் தெரிவித்தார்.

- நன்றி: சினி ரிப்போர்ட்டர்

#சிவாஜி #எம்ஜிஆர் #நடிகர்முத்துராமன் #எஸ்விசகஸ்ரநாமன் #இயக்குனர்ஸ்ரீதர் #நெஞ்சில்ஓர்ஆலயம் #எஸ்விஎஸ் #சித்ராலட்சுமணன்

ரசிகர்களின் மனம் கவர்ந்த ‘மகா நடிகை’!https://cinirocket.com/actress-keerthy-suresh-bday-spl-article/தென்னிந்திய சினிமாவி...
17/10/2025

ரசிகர்களின் மனம் கவர்ந்த ‘மகா நடிகை’!
https://cinirocket.com/actress-keerthy-suresh-bday-spl-article/

தென்னிந்திய சினிமாவில் திறமையான நாயகி என்கிற அங்கீகாரத்தை அனைத்து தரப்பிடமிருந்தும் குறுகிய காலத்தில் பெற்றுவிட்டவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

குழந்தை நட்சத்திரத் தொடக்கம்:

'கீழ்வானம் சிவக்கும்', 'நெற்றிக்கண்' உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்த மேனகாவுக்கும் மலையாள இயக்குநர் - தயாரிப்பாளர் சுரேஷ் குமாருக்கும் மகளாகப் பிறந்தவர் கீர்த்தி.

தன் தந்தை தயாரித்த சில மலையாளப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர், பிரியதர்ஷன் இயக்கத்தில் 2013-ல் வெளியான 'கீதாஞ்சலி' மலையாளப் படத்தில் முதல் முறையாக கதாநாயகியாக நடித்தார்.

முதல் படத்திலேயே இரட்டை வேடம் அமைந்தது. அடுத்ததாக ரவி இயக்கத்தில் திலீப்புடன் கீர்த்தி சுரேஷ் நடித்த படம் 'ரிங் மாஸ்டர்' மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இந்தப் படத்தில் பார்வைத் திறனற்றவராக நடித்திருந்தார் கீர்த்தி.

தேடிவந்த தமிழ் வாய்ப்புகள்:

இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ்ப் படங்களில் நடிக்கும் பல வாய்ப்புகள் கீர்த்தி சுரேஷை நாடி வந்தன.

2015-ல் விஜய் இயக்கத்தில் வெளியான 'இது என்ன மாயம்' கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான முதல் தமிழ்ப் படமானது.

அவர் கல்லூரி மாணவியாக நடித்திருந்த இந்தப் படம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் கீர்த்தி சுரேஷ் தமிழ்த் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷுடன் 'தொடரி' படத்தில் நடித்தார். அந்தப் படம் மிகவும் தாமதமாக வெளியானது.

இடைப்பட்ட காலத்தில் சிவகார்த்திகேயனுடன் கீர்த்தி சுரேஷ் நடித்த 'ரஜினி முருகன்', 'ரெமோ' ஆகிய இரண்டு படங்களும் வெற்றிபெற்றன.

ஒன்றில் சிறு நகரப் பெண்ணாகவும் இன்னொன்றில் பெருநகரில் வாழும் மருத்துவராகவும் நடித்திருந்தார் கீர்த்தி.

இதே ஆண்டில் ராம் போதினேனி ஜோடியாக 'நேனு சைலஜா' படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் கால் பதித்தார் கீர்த்தி சுரேஷ். தெலுங்கில் அறிமுகப் படமே வெற்றிப் படமாக அமைந்தது.

2017 பொங்கலுக்கு வெளியான 'பைரவா' படத்தில் விஜய்யின் இணையாக நடித்தார் கீர்த்தி சுரேஷ். இந்தப் படம் வெற்றிபெறவில்லை என்றாலும் கீர்த்தி சுரேஷ் முதல்நிலை நட்சத்திரங்களில் நடிப்பதற்கான தொடக்கமாக அமைந்தது.

அதே ஆண்டில் பாபி சிம்ஹாவுடன் நடித்த 'பாம்பு சட்டை' தெலுங்கில் முன்னணி நாயக நடிகர் நானியுடன் நடித்த 'நேனு லோக்கல்' படங்கள் வெளியாகின.

சாவித்திரியின் மறுவார்ப்பு

2018-ம் ஆண்டு கீர்த்தி சுரேஷின் திரை வாழ்வில் மிக முக்கியமான ஆண்டு. நான்கு தமிழ்ப் படங்கள், ஒரு தெலுங்குப் படம், ஒரு தெலுங்கு - தமிழ் இருமொழிப் படம் என ஐந்து படங்களில் நாயகியாகவும் நடித்தார் கீர்த்தி.

இவற்றில் தெலுங்கில் 'மஹாநதி' என்றும் தமிழில் 'நடிகையர் திலகம்' என்றும் பெயரிடப்பட்டு உருவான இருமொழிப் படம் தென்னிந்திய சினிமா வரலாற்றில் தலைச் சிறந்த நடிகையரில் ஒருவரான சாவித்திரியின் வாழ்க்கைக் கதையைத் திரையில் பதிவுசெய்தது.

இதில் சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷின் தோற்றப் பொருத்தமும் நடிப்பும் அவ்வளவு சிறப்பாக அமைந்து அனைவரையும் வியக்க வைத்தன.

இரு மொழிகளிலும் படம் வெற்றிபெற்றது. விமர்சகர்கள் அனைவரையும் படத்தையும் கீர்த்தி சுரேஷையும் பாராட்டு மழையில் நனையச் செய்தார்கள்.

1981-ல் இறந்துவிட்ட சாவித்திரி 2018-ல் மீண்டும் உயிர்பெற்று திரையில் தோன்றிய உணர்வை ஏற்படுத்தியதாக ரசிகர்களும் விமர்சகர்களும் கொண்டாடினார்கள். கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.

அதே ஆண்டில் விக்னேஷ் சிவன் இயக்கிய 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் சூர்யா, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'சர்கார்' படத்தில் விஜய், ஹரி இயக்கத்தில் 'சாமி 2' திரைப்படத்தில் விக்ரம், லிங்குசாமி இயக்கிய 'சண்டக்கோழி-2'வில் விஷால் ஆகிய நட்சத்திர நடிகர்களின் ஜோடியாக நடித்தார்

இது தவிர 'சீமராஜா' படத்தில் கெளரவத் தோற்றத்தில் மகாராணியாக நடித்தார்.

அடுத்து, நாயகியை மையப்படுத்தி கார்த்திக் சுப்பாராஜ் தயாரித்திருந்த 'பெண்குயின்' படத்தில் படத்தில் தொலைந்துவிட்ட தன் மகனைத் தேடிச் செல்லும் கர்ப்பிணித் தாயாக சிறப்பாக நடித்திருந்தார் கீர்த்தி.

நட்சத்திரங்களின் நாயகி

அடுத்ததாக தெலுங்கில் 'மிஸ் இந்தியா', 'குட்லக் சகி' ஆகிய படங்கள் வெளியாகக் காத்திருக்கின்றன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் 'அண்ணாத்த' படத்திலும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் 'மரக்கர்: அரபிக்கடலிண்டே சிம்மம்' ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

இவை தவிர இயக்குநர் செல்வராகவன் நடிகராக அறிமுகமாகும் 'சாணி காயிதம்' படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் உருவாகும் 'சர்க்காரு வாரி பாடா' என்னும் தெலுங்கு படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

இப்படித் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் நடித்துவருகிறார் கீர்த்தி சுரேஷ்.

நட்சத்திர நடிகர்களோடு நடிக்கும் படங்களைத் தவிர நாயகியை மையப்படுத்திய படங்களிலும் நடித்துவருகிறார். மூன்று மொழிகளிலும் முதலிடத்தை நோக்கி வேகமாகப் பயணித்து வருகிறார்.

தமிழர்க்கு நெருக்கமான நாயகி:

அழகு, திறமை ஆகியவற்றைத் தாண்டி தோற்றம், சொந்தக் குரலில் பிழையற்ற உச்சரிப்புடன் பேசுவது என அனைத்திலும் முழுமையான தமிழ்ப் பெண்ணாக இருப்பது கீர்த்தி சுரேஷை தமிழ் ரசிகர்களின் மனதுக்கு மேலும் நெருக்கமானவர் ஆக்குகின்றன.

'நடிகையர் திலகம்' படத்தில் அவருடைய அபார நடிப்புத் திறமை வெளிப்பட்டு அனைவரையும் வியந்து பாராட்ட வைத்தது என்றாலும் அவர் மற்ற படங்களிலும் கதாபாத்திரத்தின் தன்மையை முழுமையாக உள்வாங்கி மிகையின்றியும் குறையின்றியும் கச்சிதமாக நடிக்கும் திறமைசாலியாகவே இருக்கிறார்.

'ரெமோ' படத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டவருக்கும் காதலனுக்கும் இடையில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்னும் மனப் போராட்டத்தையும் 'தொடரி’யில் ரயில் பயணத்தில் ஆபத்தில் சிக்கிக்கொண்ட ஒரு அப்பாவி ஏழைப் பெண்ணின் மருட்சியையும்,

'சண்டக்கோழி 2'வில் துணிச்சலும் துடுக்குத்தனமும் நிறைந்த கிராமத்துப் பெண்ணாகவும் அவருடைய நடிப்பு வெகு சிறப்பாக அமைந்திருந்தது. அவருடைய நடனத் திறனும் ரசிக்கத்தக்கதாகவே இருந்துள்ளது.

தற்போது இவர் பாலிவுட்டிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் கீர்த்தி சுரேஷ், சமீபத்தில் வெளியான ‘பேபி ஜான்’ படத்தில் நடித்திருந்தார். இப்படம் தமிழில் வெளியான படத்தின் ‘தெறி’ படத்தின் ரீமேக் ஆகும்.

வருண் தவான் கதாநாயகனாக நடித்திருந்த இப்படத்தை இயக்குனர் அட்லி தயாரித்திருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

கடைசியாக தெலுங்கில் வெளிவந்த உப்பு கப்புரம்பு என்ற படத்தில் தான் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிப் பெறவில்லை.

இதை எதிர்பார்த்த இவர் சில படங்களில் கமிட்டாகி நடித்திருக்கிறார். அந்த வகையில் இவர் விஜய் தேவரகொண்டவுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது.

மிக இளம் வயதில் தேசிய விருதை வென்று, தமிழ், தெலுங்கு, மலையாளம் என மும்மொழிகளில் அழுத்தமான முத்திரை பதித்துவிட்டு தன் வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ்,

வரும் ஆண்டுகளில் இன்னும் பல தரமான திரைப்படங்களில் சவாலான கதாபாத்திரங்களில் நடித்து மேலும் பல சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என்று அவரை மனதார வாழ்த்துவோம்.

ச.கோபாலகிருஷ்ணன்

நன்றி: இந்து தமிழ் திசை

#கீர்த்திசுரேஷ் #கீழ்வானம்_சிவக்கும் #நெற்றிக்கண் #தொடரி #ரஜினிமுருகன் #ரெமோ #பைரவா #சாவித்திரி #மஹாநடி #நடிகையர்திலகம் #தானாசேர்ந்தகூட்டம் #சர்கார்

பற்றிக் கொள்ளுமா ‘டீசல்’?https://cinirocket.com/diesel-movie-review/சண்முகம் முத்துசாமி இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், அதுல...
17/10/2025

பற்றிக் கொள்ளுமா ‘டீசல்’?
https://cinirocket.com/diesel-movie-review/
சண்முகம் முத்துசாமி இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி, வினய், சாய் குமார் உள்ளிட்டோர் நடிப்பில், தேர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தேவராஜுலு மார்கண்டேயன் மற்றும் எஸ்பி சினிமாஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘டீசல்’.

பெட்ரோல், டீசல் இவற்றின் தாய்ப் பொருளான குரூட் ஆயிலிலிருந்து பெட்ரோல், டீசல், மண்ணெண்ணைய், கேரோசிலின், ஜெட் விமானங்களுக்கான எரிபொருள், எல்பிஜி கேஸ், தார் என பல பொருட்கள் கிடைக்கின்றன.

இவை பெட்ரோல் பங்குக்கு வரும் வரை நடக்கும் ஊழல்கள், குற்றங்கள், கார்ப்பரேட் நிறுவனங்களின் கொடிய கரங்கள், அதற்கு ஏற்றபடி ஆடும் ஆளும் அரசியல்கள்,

அதிகார மோதல்கள், வடக்கு தெற்கு பாகுபாடு என இவற்றையெல்லாம் ஓர் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு கற்பனைகளும் கலந்து சொல்லும் படம்தான் ‘டீசல்’.

1979 ஆண்டு சென்னையில் திருவொற்றியூரில் இருந்து எண்ணூர் வரை பிரம்மாண்ட ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டன.

பல கிலோ மீட்டர் நீளம் உள்ள அந்தக் குழாய்கள் மண்ணுக்கு அடியில் பாதிக்கப்பட்டாலும் ஒரு கிலோ மீட்டர் தூரம் மட்டும் அது தரைக்கு மேலே இருக்கும்.

கப்பலில் இருந்து வரும் குரூட் ஆயில் அங்கிருந்து குழாய் வழியாகக் கொண்டு போகப்படும். அந்த ராட்சஷ குழாய் இருக்கும் அந்தப் பகுதிகளில் மீனவ மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. வறுமை சூழ்கிறது.

இதனால் கோபம் கொண்ட ஒரு நபர் (சாய் குமார்) நிலத்துக்கு மேல் இருக்கும் குரூட் ஆயில் குழாயில் இருந்து குரூட் ஆயிலை பல்லாயிரக்கணக்கான லிட்டர் அளவில் திருடுகிறான்.

அவனது வளர்ப்பு மகனான கெமிக்கல் இன்ஜினியரிங் படித்த இளைஞனும், (ஹரீஷ் கல்யாண்) களம் இறங்குகிறான்.

இவர்களால் கடத்தப்படும் குரூட் ஆயில் பம்பாயில் பெரும் தொழில் அதிபராக இருக்கும் பதானி, (மன்னிக்கவும்... பதான். ஆமா, அதான்.) என்பவருக்கு அனுப்பப்பட,

அவர் குரூட் ஆயிலைப் பிரித்து மற்ற பொருட்களை விற்று அவர் லாபம் பார்த்துக் கொண்டு, இவர்கள் அனுப்பிய குரூட் ஆயில் அளவுக்கு மட்டும் பெட்ரோல் டீசலை மட்டும், ஆயில் திருடும் நபர்களுக்கு அனுப்புவார்.

இந்த பெட்ரோலும் டீசலும் பெட்ரோல், எரிபொருள் துறையால் கொடுக்கப்படும் பெட்ரோல் டீசல் அளவுக்கு அப்பாற்பட்டு, நேரடியாக பெட்ரோல் பங்குக்கு நாயகனாலும் வளர்ப்பு அப்பாவாலும் அனுப்பப்படும்.

அதில் அரசுக்கு பணம் போகாது என்பதால், அதில் கிடைக்கும் பணம் பெட்ரோல் பங்க் முதலாளிகள், கடத்தல் நாயகர்கள், மும்பை பதான் ஆகியோருக்கு போகும்.

நாயகனுக்கு வரும் லாபத்தில் பெரும்பகுதி, இந்தக் குழாய் திட்டத்தால் பாதிக்கப்பட்ட மீனவ மக்களுக்கு போய்ச் சேரும்.

குரூட் ஆயில் கடத்தலில் தானும் ஈடுபட்டு, பெரும் பணம் சம்பாதிக்க ஆசைப்படுகிறான் இன்னொருவன் (விவேக் பிரசன்னா). அவனுக்கு பக்க பலமாக இருக்கிறார் ஆணவம் பிடித்த ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் (வினய் ராய்.)

அவன், கேசரிப் பொடியைக் கலந்து கலப்பட பெட்ரோல் தயாரிக்க, நாயகன் கலப்பட பெட்ரோல் நபரை பிடிக்க, அவனுக்கு ஆதரவாக இன்ஸ்பெக்டர் வர, அது நாயகன் - இன்ஸ்பெக்டர் பகையாகிறது.

ஒரு நிலையில் மும்பை பதான் சென்னையில் ஒரு மாபெரும் தனியார் துறைமுகத்தை உருவாக்கி, அதன் மூலம் பெரும்பணம் சம்பாதிக்க திட்டமிடுகிறான்.

பதானியின் திட்டம் நிறைவேறினால் சென்னையில் மீனவர்கள் மீன் பிடிக்கவே முடியாத நிலை ஏற்படும். அதன்பிறகு நடந்தது என்ன என்பதே ‘டீசல்’.

மக்களுக்கு விழிப்புணர்வைக் கொடுக்கும் கதை. இனம், மொழி, வர்க்கம், வடக்கு - தெற்கு பேத அரசியல்... இவை குறித்த சண்முகம் முத்துசாமியின் தெளிவு கொண்டாடத்தக்கது.

நாயகன் ஹரீஷ் கல்யான் தனது 'டெண்டர்' காதலன் என்ற என்ற இமேஜில் இருந்து முழு ஆக்ஷன் ஹீரோ என்னும் சந்திரமுகியாக மாறி இருக்கும் படம் இது.

ஒரு காட்சியில் அதுல்யாவுக்கு ஒரு குளோசப் போடுகிறார்கள். நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் படத்தில் விஜய் சேதுபதி சொல்லும் ''ப்ப்ப்ப்ப்ப்ப்பா....வை" பல மடங்கு டெசிபல்களில் நம்மை அறியாமலே சொல்ல வேண்டிய நிலைமை.

படத்தின் டோன், கலர், ஃபிரேமிங், அதன் மூலம் கடலையும் கடல் புறத்தையும் உணர வைப்பது, இரவின் மர்மத்தைக் காட்டுவது என்று, ரிச்சர்ட் நாதன் அட்டகாசமான ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்.

ரிச்சர்ட் எம் நாதனும் எம் எஸ் பிரபுவும் திபு நினன் தாமஸ் இசை இந்தப் படத்திலும் அபாரம்.

மெல்லிசைப் பாடல்கள், குத்துப் பாடல்கள், குறிப்பாக கடலில் நாயகனை சந்தித்து விட்டு நாயகி பிரிந்து செல்லும் காட்சியில் அந்த வரும் பின்னணி இசை அருமை. இசையோடே போய் விடுகிறது மனசு.

‘தளபதி’ படத்தில் வந்த “ராக்கம்மா கையத்தட்டு” பாட்டு ஒரு நிலையில் சட்டென்று மெலடியாகி ''குனித்த புருவமும்..." என்று சோபனா வருவாரே அதே பாணியில் தில்லு பாரு ராஜா பாட்டில் அதுல்யாவை அறிமுகப்படுத்துகிறார் இயக்குநர்.

கலை, இயக்கம் சண்டைக் காட்சிகளும் அருமை.

நடிப்பில் சாய் குமார் அசத்தி இருக்கிறார். வினய் ராய் கேரக்டரின் வன்மை குணத்தை சிறப்பாக சுமந்து ரசிகனுக்குக் கடத்துகிறார்.

நாசர், காளி வெங்கட், போஸ் வெங்கட் இவர்கள் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் என்ற நிலைக்கு கொஞ்சம் மேலான கேரக்டர்களில். இல்லை இல்லை ரோல்களில் வந்து, ''வாம்மா மின்னல்...'' போலப் போகிறார்கள்.

இதுபோன்ற சமூக அக்கறை உள்ள கதைகளைக் கொண்ட படங்களில் முதலில் எதைப் பற்றிய படம் என்பதை லேசாகக் கோடு போலக் காட்டி விட்டு,

ஒரு வணிக ரீதியான படத்துக்கு தேவையான காதல், செண்டிமெண்ட், பாசம் எல்லாவற்றையும் தேவைப்படும் அளவுக்கு மட்டும் சட்டு புட்டென்று காட்டி விட்டு, முக்கிய விசயத்துக்கு வந்து அதன் திசை மாறாமல் பரபரவென்றோ, அழுத்தமாகவோ பாய வேண்டும்.

ஆனால், இந்தப் படம் ஆரம்பக் காட்சிகளில் ஆர்வத்தை தூண்டி விட்டு அப்புறம் ஆயிரம் முறை ரசிகர்கள் பார்த்த வழக்கமான சினிமாக் காட்சிகள் எனும் கடலில் மிதக்க ஆரம்பித்து விடுகிறது.

மீண்டும் மீண்டும் அப்படியே ஆர்வம் தூண்டும் விஷயங்கள் சில நிமிடங்கள் மட்டும் காட்டப்பட்டு விடப்பட, வழக்கமான காட்சிகள் நீட்டி முழக்கி சொல்லப்படுகின்றன.

இரண்டாயிரம் கோடி லிட்டர் குரூட் ஆயிலைப் படத்தில் இரண்டு குளோசப்களில் மட்டும் வரும் காளி வெங்கட் கேரக்டர் ஒரு இரவுக்குள் போட்களில் ஏற்றிக் கடலுக்குள்,

அதுவும் யாருக்குமே தெரியாமல் ரக ரக ரக ரகசியமாக கடத்தி விடுகிறது என்பது காதில் பூமாலையே போடும் கதை.

இரண்டாம் பகுதியில் எமோஷனலாக வர வேண்டிய காட்சிகள் மேட்டர் ஆப் ஃபேக்ட் ஆகக் கடக்கின்றன.

ஒருவேளை இந்தப் படம் மக்களின் நல்லாதரவைப் பெறவில்லை என்றால் அதற்குக் காரணம் திரைக்கதைதான்.

- சு. செந்தில் குமரன்

#டீசல் #பெட்ரோல் #விவேக்பிரசன்னா #திபுநினன்தாமஸ் #இசை #குரூட்ஆயில் #சண்முகம் #முத்துசாமி #ஹரிஷ்கல்யாண் #அதுல்யாரவி #வினய் #சாய்குமார்
















‘கம்பி கட்ன கதை’ – இன்னும் செறிவாக்கி இருக்கலாம்!https://cinirocket.com/kambi-katna-kathai-review/மங்காத்தா ஃபிலிம்ஸ் சா...
16/10/2025

‘கம்பி கட்ன கதை’ – இன்னும் செறிவாக்கி இருக்கலாம்!
https://cinirocket.com/kambi-katna-kathai-review/

மங்காத்தா ஃபிலிம்ஸ் சார்பில் ரவி தயாரிக்க, நட்டி நடராஜ், சிங்கம் புலி, ஜாவா சுந்தரேசன் என்கிற சாம்ஸ், முகேஷ் ரவி, ஸ்ரீ ரஞ்சனி, ஷாலினி, முத்துராமன், முருகானந்தம் நடிப்பில், நாதன் பெரியசாமி இயக்கி இருக்கும் படம் ‘கம்பி கட்ன கதை’.

இந்தியாவில் இருந்து கோஹினூர் வைரம் பிரிட்டிஷ் மகாராணிக்கு போன வரலாறு பலருக்கும் தெரியும்.

இந்தப் படத்தின் கதைப்படி, அப்படிப் போனது ஒரு வைரம் அல்ல, இரண்டு வைரம். ஒரு வைரத்தை மகாராணிக்கு கொடுத்த பிரிட்டிஷ் அதிகாரி, அடுத்த வைரத்தைத் தானே அமுக்கிக் கொள்கிறார்.

அது ரகசியமாகவே இருந்து, பின்னாளில் இந்திய அரசியல்வாதியின் பினாமியாக லண்டனில் உள்ள ஒரு நபர் கைக்கு வருகிறது. அதை இந்தியாவுக்குக் கடத்தி வரும் வழியில் அதைக் கைப்பற்ற ஒரு போலீஸ் அதிகாரி திட்டமிடுகிறார்.

ஆனால், அதற்கு முன்பே அதை ஒரு கஸ்டம்ஸ் அதிகாரி கவர்ந்து கொள்கிறார்.

அவரிடம் இருந்து அதைத் திருட போலீஸ் அதிகாரி நினைக்கிறார்.

அதற்கு ஒரு எமகாதகன் வேண்டும் (?) என்பதால்,

எம் எல் எம், பக்தி, பேச்சுத் திறமை இவற்றின் மூலம் பலரை ஏமாற்றி காசு சம்பாதிக்கும் ஒரு எமகாதகனை (நட்டி நடராஜ்) நியமிக்கிறார்கள்.

கஸ்டம்ஸ் அதிகாரி வீட்டிலிருந்து அதையும் பணத்தையும் எடுக்கும் அவன், வைரத்தை ஓரிடத்தில் புதைத்து விட்டு போலீசிடம் பணத்தை மட்டும் கொடுத்துவிட்டு வைரம் இல்லை என்கிறான். எனினும் அவனை நம்பாத போலீஸ் அடி, உதை என்று பின்னி எடுக்கிறது.

அதையெல்லாம் தாங்கி, சில மாதங்கள் கழித்து விடுதலை ஆகி, வைரத்தைப் புதைத்த இடத்தில் போய்ப் பார்த்தால் ஒரு பெரிய சாமியார் ஆசிரமம் இருக்கிறது. அது எம்.எல்.ஏ (முத்துராமன்) கண்ட்ரோலில் இருக்கிறது.

எம்.எல்.ஏ மகளை (ஷாலினி) காதலிக்கும் ஒருவன் (முகேஷ் ரவி) அதற்காகவே எம்.எல்.ஏ-விடம் உதவியாளனாக இருக்கிறான். ஆனால், எம்.எல்.ஏவிடம் இருந்து எமகாதகன் பணத்தைத் திருட, உதவியாளனை விரட்டி அடிக்கிறார் எம்.எல்.ஏ.

அந்த இளைஞனையும் தன்னிடம் ஏமாந்த மாதிரியே மக்களை ஏமாற்ற முயன்ற ஒரு நபரையும் (சிங்கம் புலி), துணையாக வைத்துக்கொள்ளும் எமகாதகன்,

தான் இமயமலையில் இருந்து வந்த சாமியார் என்று எல்லோரையும் நம்பவைத்து, ஆசிரமத்தைக் கையில் எடுக்கிறான்.

எம்.எல்.ஏ வும் அவனை நம்பி, பெரும் பணத்தை சாமியார் வசம் கொடுக்கிறார்.

வாய்ப்புத் தேடி வந்த ஒரு சீரியல் நடிகையை வளைக்கிறார் சாமியார்.

பல மாதங்களுக்கு முன்பு தான் வைரத்தைப் புதைத்த இடத்தில் சாமியார், ரகசியமாகத் தோண்டிப் பார்க்க அங்கே வைரம் இல்லை.

அதன்பிறகு என்ன நடந்தது என்பதே படம்.

கதையில் கூறப்பட்டிருக்கும் படத்தின் அடிப்படை விஷயங்கள் ஒரு வெற்றிகரமான கமர்ஷியல் படத்துக்கு ஏற்றவைதான்.

சதுரங்க வேட்டையை ஞாபகப்படுத்தும் இந்தப் படம் (காரணம் ஹீரோயிக் வில்லன் அதே நட்டி நடராஜ் என்பதால். அதனால்தான் அவரை ஹீரோவாகவே போட்டு இருக்கிறார்கள்) எனவே சதுரங்க வேட்டையோடு ஒப்பீடு தானாகவே வருகிறது (ஒருவேளை நாயகன் நட்டி இல்லை என்றால் கூட இந்த ஒப்பீடு வந்திருக்காது)

இந்தக் காரணத்தாலேயே அடிப்படையில் திரைக்கதையில் சதுரங்க வேட்டையை மிஞ்சி இதன் திரைக்கதை இருக்க வேண்டும். அது முடியாவிட்டாலும் ஓரளவாவது சுவாரஸ்யமாக இருக்க வேண்டும்.

ஆனால், சதுரங்க வேட்டை படத்தின் மலிவுப் பதிப்பு இணைப்பு போல இருக்கிறது படம். ‘சதுரங்க வேட்டை’யில் மிக சாதாரணமாக நடித்திருந்த நட்டி நட்ராஜ், இந்தக் ‘கம்பி கட்ன கதை’ படத்தில் அட்டகாசமாக நடித்து இருக்கிறார்.

படத்தின் தயாரிப்பாளர் ரமேஷ், படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியபோது, "22 ஆண்டுகளாக நான் உருவாக்கிய கதை இது" என்றார். சதுரங்க வேட்டை படம் வெளி வந்தே பதினோரு ஆண்டுகள் ஆகிறது.

அதற்கு பதினோரு வருடம் முன்பிருந்தே தயாரிப்பாளர் ஆசைப்பட்ட படம் என்பதில் ஒன்றும் தப்பு இல்லை.

ஆனால் பதினோரு வருடம் முன்பு சதுரங்க வேட்டை என்ற படம்தான் வினோத் என்ற அஜீத், விஜய் இயக்குநரையும் நட்டி நடராஜை ஹீரோவாகவும உருவாக்கிய படம் என்னும்போது,

அடுத்த பதினோரு ஆண்டுகள் கழித்து அதே நட்டியை ஹீரோவாகப் போட்டு எடுக்கும்போது திரைக்கதையில் சும்மா தெறிக்க விடும்படி தயாரிப்பளார் திரைக்கதை வசனம் தயார் செய்திருக்க வேண்டும். அது இல்லை.

முருகானந்தம் திரைக்கதையில் நேர்த்தி என்று எதுவும் இல்லை. அவரின் வசனங்கள் சில இடங்களில் வாய்விட்டு சிரிக்கவும் சில இடங்களில் லேசாகப் புன்னகைக்கவும் வைக்கிறது. பல நேரம் வசனங்கள் வெகு சாதாரணமாகப் போகின்றன.

அதோடு, அவர் காமெடி என்று ஒரு கேரக்டரில் நடித்து இருக்கிறார். காமெடியே இல்லை.

படத்தில் நீளம் இரண்டு மணி நாற்பது நிமிடம்.

அந்தக் காட்சிகளை மொத்தமாக தூக்கினால் படத்தின் அதிக நீளம் குறையும்.

இது போன்ற குறைகளால் எம்.ஆர்.எம் ஜெய் சுரேஷின் ஒளிப்பதிவு, சதீஷின் இசை இவை பலன் தரவில்லை.

எடிட்டர் பாசில் இன்னும் கொஞ்சம் விடாப்பிடியாக இருந்திருக்கலாம். கலை இயக்குநர் சிவகுமார் பாராட்டுப் பெறுகிறார். (அதற்கு தயாரிப்பாளரும் காரணமாக இருந்திருக்கலாம்).

படத்தின் இரண்டாவது கதாநாயகனான முகேஷ் ரவி ஆரம்பத்தில் அழகிகளோடு சிக்ஸ் பேக்கில் குளித்துக் கொண்டு, எக்சர்சைஸ் செய்து கொண்டு ஒரு பாட்டுப் பாடுகிறார். அனேகமாக அவர் தயாரிப்பளருக்கு நெருங்கியவராக இருப்பார் என்று தோன்றுகிறது.

இந்தக் கேரக்டருக்கு எதுக்கு அந்தப் பாட்டு? அப்புறம் கனவு என்று சொல்வது எல்லாம் எந்தக் கால உத்தி?

அந்தக் கேரக்டருக்கு எதுக்கு சிக்ஸ் பேக்? ஏனெனில் கிளைமாக்ஸ் ஃபைட்டிலும் நட்டிதான் ஸ்கோர் செய்கிறார்.

படம் போகப் போக எப்படா முடியும் என்று தோன்றுகிறது. அவ்வளவு நீளம். அவ்வளவு பேச்சு. சிறு சிறு திருப்பங்களும் முடியும்போது சாதாரணமாக முடிகின்றன.

ஒரு படம் என்றால் அதில் குற்றவாளி வில்லனோ அல்லது ஹீரோவோ ஒரு நிலையில் திருந்தினான் அல்லது தண்டிக்கப்பட்டான் அல்லது செத்துப் போனான் என்று சொல்வது ஒரு படைப்பின் கடமை அல்லவா?

இப்போதெல்லாம் சினிமாவில்தான் நியாயம் ஜெயிக்கிறது. அதையும் கொன்று விட்டால் எப்படி?

இந்தப் படம் பார்த்து வெளியே வரும் யாருக்கும், “தக்காளி... யாரையாவது ஏமாத்தியாவது சம்பாதிக்கணும்டா" என்ற கொலைவெறி வரவும் வாய்ப்பிருக்கிறது.

அதுக்கு எதுக்கு தம் பிடித்து கம்பி கட்டணும்?

பரவால்ல.. இந்த மாதிரி படம்தான் பிடிக்கும் என்பவர்கள் இந்தப் படத்துக்கு போய் வரலாம்.

மொத்தத்தில் ‘கம்பி கட்ன கதை’... சதுரங்க வேட்டையில் கட்டிய கம்பிகளை எல்லாம் அறுத்து விட்டிருக்கிறார்கள்.

- சு. செந்தில் குமரன்

#நட்டிநடராஜ் #சிங்கம்புலி #ஜாவாசுந்தரேசன் #முகேஷ்_ரவி #ஸ்ரீரஞ்சன் #நாதன்பெரியசாமி

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Cine rocket posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share