29/07/2025
The Crossway Ministries
அநுதினமும் சிலுவையைச் சுமப்போம்
ஜுலை 28
எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தை நீங்கள் கேட்கும்போது, நீங்கள் தாழவிழுந்து, ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளக்கடவீர்கள் (தானி. 3:5).
“நேபுகாத்நேச்சாரின் பொற்சிலை”
தீவிரவாத மதக்கொள்கையை உடையவர்கள் தம்முடைய வழியை ஏற்றுக்கொள்ளாத ஒவ்வொருவரையும் நோக்கி: தாழவிழுந்து, தாம் உருவாக்கியிருக்கும் வழியை அல்லது தாம் உற்பத்திசெய்திருக்கும் சொரூபத்தை வணங்குமாறு கேட்டுக்கொள்கிறார்கள். இந்த மதத்தினர் தாம் தேவனைச் சேவிப்பதாகப் பலத்த சத்தத்தோடு உரிமை கொண்டாடினாலும், இவர்கள் அசுத்த ஆவியையே சேவிக்கிறார்கள். இவர்களுடைய மதவழி அல்லது இவர்கள் உற்பத்திசெய்திருக்கும் சொரூபம் போன்றவைகள் சாத்தானிடத்திலிருந்து பிறந்தவைகளேயன்றித் தேவனிடத்திலிருந்து உற்பத்தியானவைகள் அல்ல; மதத்திற்கும் தேவனுக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை; அநேகமான மதங்கள் அதை ஏற்றுக்கொண்டவர்களிடம் அடிமைத்தனமான கீழ்ப்படிவை எதிர்பார்க்கிறது. இஸ்லாமிய மதத்தில் ஒருவன் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்வானாயின் அவன் கொலைசெய்யப்படக்கடவன் என அச்சுறுத்தப்படுகிறான்; அநேகமானோர் கொலை செய்யப்பட்டு, தம்முடைய விசுவாசத்திற்கு இன்றும் சாட்சிபகர்கின்றனர். அப்படியே, களங்கப்பட்ட, வேதத்திற்கு ஒவ்வாத கிறிஸ்தவத்தை உருவாக்கினது சாத்தானே. இவ்வாறான கிறிஸ்தவத்திற்கும், வேற்று மதங்களுக்கும் எந்தவித வேறுபாடுமில்லை. சாத்தான் களங்கப்பட்ட கிறிஸ்தவத்திலும் அடிமைத்தனமான கீழ்ப்படிவைக் கட்டாயப்படுத்துகிறான்; சாத்தான் பல்வேறு வழியில் இந்த அடிமைத்தனமான கீழ்ப்படிவைப் போதகர்கள்மூலமும், கிறிஸ்தவ மார்க்கங்கள் மூலமும் உறுதிப்படுத்துகிறான்.
உதாரணமாக, அநேகமான கிறிஸ்தவ மார்க்கங்கள் தம்முடைய சபையிலுள்ள எவனாவது பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டதற்கு அடையாளமாகிய அந்நியபாஷையில் பேசுவானாகில், அவன் உடனடியாகத் தான் பெற்ற மகத்துவமான ஈவைக் கைவிட்டு, தான் ஏற்றுக்கொண்ட கிறிஸ்தவ மார்க்கத்திற்கு விசுவாசமாயிருக்குமாறு வற்புறுத்தப்படுகிறான். தாழவிழுந்து, தம்மால் உருவாக்கப்பட்ட தம்முடைய மார்க்கங்களைப் (சொரூபத்தை) பணிந்துகொள் என்று போதகர்கள்மூலம், அறிந்தோ அறியாமலோ இந்த மார்க்கத்திற்குப் பலியானவர்களைச் சாத்தான் நிர்ப்பந்திக்கிறான். இதற்கு அவர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பார்களாயின் அவர்கள் புறம்பே தள்ளப்படுகிறார்கள். பலருக்கு இது கொடுமையாகத் தென்படுவதால், அவர்கள் தேவன் கொடுத்த ஈவைப் புறம்பே தள்ளி, மறுபடியும் தம்முடைய மார்க்கத்தில் பலிக்கடாவாக இணைந்துகொள்கிறார்கள். இவர்கள்போன்றே இஸ்ரவேலியர்கள் மீட்பரையும் அவருடைய பலியையும் புறக்கணித்து, அந்நியதேவர்களைப் பணிந்துகொண்டார்கள். தேவன் இவர்களை நோக்கி: எரேமியா 2:13-14 ல் கூறியிருப்பது கிறிஸ்தவர்களாகிய நமக்கும் சேர்த்தே என்பதனைத் தெளிவாகப் புரிந்துகொள்வோமாக.
சாத்தான் தன்னுடைய செயற்பாடுகளில் ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை; ஏனெனில், அவனுடைய வஞ்சகம் எவ்விதத் தடையுமின்றி அவனுக்குப் பலிக்கடாவானவர்களினால் சந்தோஷமாக ஏற்றுக்கொள்ளப்படுமாயின் அவன் ஏன் தன் யுக்திகளை மாற்றவேண்டும்!! நம்முடைய மரணத்துக்கு அதிகாரியான சாத்தான் மாற்றமேயில்லாமல் தன்னுடைய வஞ்சக யுக்திகளைச் செயற்படுத்தி, “தாழவிழுந்து, என்னைப் பணிந்து கொள்ளுங்கள்” என்ற தன்னுடைய கொள்கையை எவ்வாறு நடைமுறைப்படுத்துகிறான் என்பதனைப் பார்ப்போம்.
* அநேகமான கிறிஸ்தவ மார்க்கங்கள் தம்மிடத்தில் அண்டிக்கொள்கிறவர்களை நோக்கி: நீங்கள் உங்களுடைய விசுவாசத்தை உங்களுடைய மார்க்கத்திற்கு உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்; இல்லையேல் புறம்பே தள்ளப்படுவீர்களென எச்சரிக்கிறது. அப்படியே சாத்தானைப் பிரதிபலிக்கும், ராஜாவாகிய நேபுகாத்நேச் சாரும் எச்சரித்தான் (தானி. 3:6) . அப்படியே சாத்தான் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை “உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய்: உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து, நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன்” (மத். 4:8-9) என வாக்குறுதி கொடுத்தானே.
* அப்படியே கிறிஸ்து இப்பூமியில் பிரசன்னமாயிருந்த நேரம் அவரை ஏற்று, அவரை விசுவாசித்த யூதஜனங்கள் யூதமார்க்கங்களினால் புறம்பே தள்ளப்பட்டனர் (யோவா. 9:34) அவ்வாறே ஆதி சபையில் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட அநேகமான யூதர்கள் புறம்பே தள்ளப்பட்டனர். அப்படியே அநேகமான பெந்தெகொஸ்தே சபைகள் தம்முடைய மார்க்கங்களின் சட்டதிட்டங்களையும் பிரமாணங்களையும் விசுவாசிக்குமாறு விசுவாசிகளை நிர்ப்பந்திக்கிறார்கள்; இது வேதவாக்கியத்திற்கு எதிரான வன்முறை என்று கூறுவதே பொருத்தமானது. யாராவது போதகர் வேதவாக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, மார்க்கங்களின் பிரமாணங்களை உதாசீனஞ்செய்தால், உடனடியாகவே அந்தப் போதகர் “தாழவிழுந்து, மார்க்கத் தலைவர்கள் ஏற்படுத்திய பிரமாணங்கள் என்னும் சொரூபத்தை வணங்குமாறு வேண்டப்படுகின்றனர்” . அடிபணிய மறுத்தால், அந்தப் போதகரை நிர்மூலமாக்குவதற்கு சகல முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறது.
இப்படியே பரிசேயர்களும் சதுசேயர்களும் வேதபாரகர்களும் ஏரோதியர்களும் செய்தார்கள். நாட்டின் சட்டதிட்டம் இடம் கொடுக்குமாயின் இந்த மார்க்கத்தலைவர்கள் தம்முடைய கொள்கைகளுக்கு எதிரானவர்களுக்கு மரணதண்டனை விதித்து, கர்த்தருடைய நாமத்தில் அதனை நிறைவேற்றவும் தயங்கமாட்டார்கள். கிறிஸ்துவுக்கும் அப்படிச் செய்தார்களே; அப்போஸ்தலர்களுக்கும் அப்படிச் செய்தார்களே; இன்றும் அப்படியே செய்கிறார்கள். இவர் ள் என்னையும் பிதாவையும் அறியாதபடியினால் இப்படிச் செய்கிறார்கள் என ஆண்டவர் கூறியிருக்கிறார் (யோவா. 16:3) . கிறிஸ்தவ மதம் வேதாகமத்தை முற்றுமுழுவதுமாக உதறித்தள்ளி, மனுஷனுடைய வழிகளாகிய பாரம்பரியம், கலாச்சாரம், சமூகவியல், மனுஷஞானம், மனோதத்துவ சாஸ்திரம், புராணக்கதைகள் மற்றும் தம்முடைய பிரமாணங்களை சுவிசேஷங்களாகப் போதிக்கின்றனர்; இவர்கள் வீணாய்த் தேவனுக்கு ஆராதனை செய்கிறார்கள் (மத். 15:9) . இதோ, தம்முடைய அந்தகார வழியைவிட்டு, இவர்கள் தேவனிடம் திரும்பாவிட்டால், தம்முடைய ஆத்துமாவையே இழந்துபோவார்கள். இவர்களை நான் அறியேன் என ஆண்டவர் கூறுகிறார் (மத். 7:21-23; லூக். 13:25-28) ; இவர்களைவிட்டு விலகவேண்டும் எனப் பவுல் அப்போஸ்தலரும் கூறியுள்ளார் (IIகொரி. 6:14-18) .