11/10/2025
The Crossway Ministries
அநுதினமும் சிலுவையைச் சுமப்போம்
அக்டோபர் 11
அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார். ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறபடியால், இருதயங்களை ஆராய்ந்துபார்க்கிறவர் ஆவியின் சிந்தை இன்னதென்று அறிவார் (ரோம. 8:26-27).
“ஆவியானவர் பலவீனங்களில் உதவிசெய்கிறார்”
பரிசுத்த ஆவியானவர் நமக்காக வேண்டுதல் செய்வதும், கிறிஸ்து நமக்காக வேண்டுதல் செய்வதும் ஒன்றல்ல. கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக வேண்டுதல் செய்கிறார் (எபி. 7:25); கிறிஸ்துவின் வேண்டுதல் இல்லாவிட்டால், ஒரு நாளுக்காகுதல் நாம் நிலைத்திருக்கமுடியாது என்பது எவ்வளவு உண்மையாயிருக்கிறது.
பரிசுத்த ஆவியானவரினால் மேற்கொள்ளப்படும் வேண்டுதல், நாம் பரிசுத்தமான வாழ்க்கையை வாழவேண்டும் என்பதனையே நோக்கமாகக் கொண்டது; மேலும் இதற்குள் பரிசுத்த ஆவியானவர் செயற்படும் முறையும் அடங்கியிருக்கிறது. நாம் தவறைச் செய்து தோல்வியடைந்தால், கிறிஸ்து நமக்காக வேண்டுதல்செய்கிறார்; அதேநேரம் பரிசுத்த ஆவியானவர் நாம் ஏன் தவறினோம் என்பதனைச் சுட்டிக்காட்ட விருப்பமாக இருக்கிறார். அந்தத் தவறு எந்தக் காலத்திலும் தவறான இடத்தில் விசுவாசத்தை வைத்ததனால் ஏற்பட்டதேயாகும். அடிக்கடி நம்முடைய ஆண்டவர் தன்னுடைய சீஷர்களை நோக்கி: “அற்ப விசுவாசிகளே” என்று சொல்வதன்மூலம் இது நிரூபிக்கப்படுகிறது; சிலுவையைப்பற்றிய தவறான வியாக்கியானம் அற்ப விசுவாசத்தில் முடிவடைகிறது.
“வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு” என்ற சொற்றொடர்மூலம் பரிசுத்த ஆவியை அல்ல, விசுவாசியைப்பற்றியே குறிப்பிடப்பட்டிருக்கிறது; அதெப்படியெனில், இருதயத்திலிருப்பதைத் தகுந்த சொற்களால் விசுவாசி ஒப்புவிக்க முடியாமலிருப்பதைப்பற்றியே சொல்லப்படுகிறது. ஆவியினுடைய நோக்கம் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதேதவிர, நம்முடைய சித்தத்தையல்ல. சிலர் பரிசுத்த ஆவியானவர் மணியடித்தவுடன் நம்மிடம் வருவார் என்ற சிந்தனையை உடையவர்களாயிருக்கிறார்கள்; அத்தகைய அனுமானம் பாரிய தவறாயிருக்கிறது. பரிசுத்த ஆவியானவருடைய உதவியைப் பெறுவதென்பது தேவனுடைய உதவியைப் பெறுவதாகும்; ஏனென்றால், பரிசுத்த ஆவியானவர் தேவன் என்பதனை நாம் மறந்துவிடக்கூடாது. இதன் அர்த்தம் நாம் பெறும் உதவி பரிபூரணமானதும், தாராளமாகப் போதுமானதுமாயிருக்கிறது. நமக்கு எது தேவை என்பதனையும், அது ஏன் நமக்குத் தேவை என்பதனையும், எவ்வளவு தேவை என்பதனையும் பரிசுத்த ஆவியானவரே அறிவார்.
“நமது பெலவீனங்களில்” என்பதன் பொருள், சரீர பெலவீனத்தையும், மனதின் பெலவீனத்தையும், அதின் குறைபாடுகளையும், நோய்களையும், வருத்தங்களையும்பற்றிக் குறிப்பிடுகிறது; விசுவாசி அடிக்கடி இதனைச் சந்திக்கவேண்டியதாக இருக்கிறது; இதற்காக நாம் ஜெபம்பண்ணவேண்டியதாயிருக்கிறது. ஆனால், எப்படி ஜெபம்பண்ணுவது என்பதனை நாம் அறியாமலிருக்கிறோம். நம்முடைய விசுவாசம் இயேசுகிறிஸ்துவிலும், அவர் சிலுவையில் நிறைவேற்றியதிலும் நிலைத்திருக்கும்பொழுது, பரிசுத்த ஆவியானவருக்குச் சட்டபூர்வமான அதிகாரம் கொடுக்கப்படுகிறது, அப்பொழுது அவர் வல்லமையாக நம்மில் செயற்பட்டு நம்முடைய பெலவீனங்களை அவர் சரிப்படுத்துவார்.
நாம் தொடர்ந்து வலியுறுத்துவது என்னவென்றால், நம்முடைய விசுவாசம் பொருத்தமான இடத்தில் (Iகொரி. 2:2) வைக்கப்படாததே, பரிசுத்த ஆவியானவருடைய உதவி நமக்கு மிகவும் குறைவாகக் கிடைப்பதற்கும் அல்லது முற்றிலும் கிடைக்காமற்போவதற்குமுரிய முக்கியகாரணமாகும்; தேவன் நம்மைச் சிட்சிப்பதற்கும், நம்முடைய விசுவாசம் திசைதிருப்பப்பட்டதே காரணமாகிறது (லூக். 22:31-32). நம்முடைய விசுவாசத்தை இயேசுகிறிஸ்துவிலும், அவர் சிலுவையில் நிறைவேற்றியதிலும் நங்கூரமிடும்பொழுது, பரிசுத்த ஆவியானவருடைய வல்லமையையும் (Iகொரி. 1:18), வேண்டுதலையும் (ரோம. 8:26), பூரணஉதவியையும் (யோவா. 16:13) நாம் பெறமுடியும்; அப்பொழுது நம்முடைய வாழ்க்கை 100 வீதம் தேவபலத்தில் செயற்படும்; இல்லையேல் நாம் மாம்சத்தில் செயற்படுவதைத்தவிர வேறுவழியில்லை (ரோம. 8:7-8).