Live Tamil News

Live Tamil News Online Tamil News Channel

ராமதாஸ் vs அன்புமணி - பலத்தை நிரூபிக்க 100 கார்கள் புடைசூழ வருகை: விழுப்புரத்தில் நடந்தது என்ன?பாமகவில் அதிகார மோதல் தீவ...
18/09/2025

ராமதாஸ் vs அன்புமணி - பலத்தை நிரூபிக்க 100 கார்கள் புடைசூழ வருகை: விழுப்புரத்தில் நடந்தது என்ன?

பாமகவில் அதிகார மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், தங்களது பரஸ்பர பலத்தை நிரூபிக்க தலா 100 கார்களில் புடைசூழ பவனி வந்து, வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த 21 தியாகிகளுக்கு ராமதாஸும், அன்புமணியும் நேற்று (செப்.17) அஞ்சலி செலுத்தினர்.

அதிமுக ஆட்சியில் வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 21 தியாகிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17-ம் தேதி வன்னியர் சங்கம் மற்றும் பாமக சார்பில் அஞ்சலி செலுத்தப்படும். பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இணைந்து திண்டிவனம் வன்னியர் சங்க அலுவலகம் மற்றும் சித்தனி, பார்ப்பனப்பட்டு, பனையபுரம், கோலியனூர், கொள்ளுகாரன்குட்டை ஆகிய கிராமங்களில் உள்ள இடஒதுக்கீடு தியாகிகளின் நினைவு தூண்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி வந்தனர்.

பின்னர் வயது மூப்பு காரணமாக, திண்டிவனம் வன்னியர் சங்க அலுவலகத்துடன், அஞ்சலி செலுத்துவதை ராமதாஸ் கடந்த சில ஆண்டுகளாக நிறுத்திக் கொண்டார். அன்புமணி மட்டும் தொடர் பயணம் மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில் பாமகவை தக்க வைத்துக்கொள்ள ராமதாஸும், பாமகவை கைப்பற்ற அன்புமணியும் கடந்த 9 மாதங்களாக மாபெரும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர். இதன் எதிரொலியாக, பாட்டாளி சொந்தங்களின் நம்பிக்கையை தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியில் ராமதாஸ் இறங்கி உள்ளார். இதன் விளைவாக, தைலாபுரத்தில் பெரியாரின் பிறந்தநாளை ஒட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவித்த நிறுவனர் ராமதாஸ், பின்னர், இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த 21 தியாகிகளின் உருவ படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

விழுப்புரம் அடுத்த கோலியனூரில் உள்ள இடஒதுக்கீடு தியாகிகள் நினைவு தூணில் அஞ்சலி செலுத்திய பாமக தலைவர் அன்புமணி.

இதையடுத்து பல ஆண்டுகளுக்கு பிறகு, சித்தணி முதல் கொள்ளுகாரன்குட்டை வரை உள்ள தியாகிகளின் நினைவு தூண்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர்களது குடும்பங்களுக்கு நிவாரண உதவியை வழங்கினார். அவருடன் அவரது மகள் ஸ்ரீகாந்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதேபோல் திண்டிவனத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அன்புமணி, 21 தியாகிகளின் உருவ படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும் இவரும், சித்தணி முதல் கொள்ளுக்காரன்குட்டை வரை உள்ள தியாகிகளின் நினைவு தூண்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, அவர்களது குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். இதற்கிடையில், விழுப்புரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு, அவரது பிறந்தநாளையொட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். வழக்கறிஞர் பாலு, மாநில பொருளாளர் திலகபாமா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

போக்குவரத்து பாதிப்பு: பாமகவில் அதிகாரத்தை கைப்பற்ற இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள அதிகார மோதலில், பரபஸ்பர பலத்தை நிருபிக்க தலா 100 கார்களில் தந்தையும், மகனும் அணிவகுத்தனர். நூற்றுக்கணக்கான இரு சக்கர வாகனங்களில் அதிக ஒலியை எழுப்பிக் கொண்டு இளைஞர்கள் சென்றனர். இதன் எதிரொலியாக, விக்கிரவாண்டி - பண்ருட்டி இடையே தேசிய நெடுஞ்சாலை மற்றும் விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு முதல் கோலியனூர் வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டது. புறவழிச்சாலை வழியாக கனரக வாகனங்கள் திருப்பிவிடப்பட்டது. சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள் மற்றும் தொலைதூர பயணிகள் அவதிப்பட்டனர்.

தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் கூறிய நிறுவனர் ராமதாஸ், “வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை பெறுவோம். பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்’ என்றார். திண்டிவனத்தில் பேசிய அன்புமணி, ‘வன்னியர்களுக்கு 15 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி, டிசம்பர் 17-ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாத திமுக அரசு, சமூக நீதிக்கு எதிரான துரோகி. திமுகவை தமிழக மக்கள் புறக்கணிப்பார்கள்” என்றார்.

ராமதாசை சந்திக்க நிர்வாகிகள் வருகை- தைலாபுரம் தோட்டத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்புபா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கட...
16/09/2025

ராமதாசை சந்திக்க நிர்வாகிகள் வருகை- தைலாபுரம் தோட்டத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிருபர்களை சந்தித்தபோது அன்புமணி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிற்கு 2 முறை அவகாசம் கொடுத்தும் அவர் எந்த ஒரு பதிலும் அளிக்காததால் அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் செயல் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்குவதாக டாக்டர் ராமதாஸ் அதிரடியாக அறிவித்தார்.

இதையடுத்து நேற்று பா.ம.க. மற்றும் மாம்பழம் சின்னம் தங்களுக்கு ஒதுக்கப்பட்டதாக டாக்டர் அன்புமணி தரப்பினர் திண்டிவனம் டாக்டர் ராமதாஸ் வீடு அருகே பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் அன்புமணி ஆதரவாளர்கள் கொண்டாடினர்.

இந்த நிலையில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசை சந்திப்பதற்கு முக்கிய நிர்வாகிகள் தற்போது தைலாபுரம் தோட்டத்திற்கு ஒவ்வொருவராக வர தொடங்கியுள்ளனர். இதனால் தைலாபுரம் தோட்டத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

‘ஒரேநாடு ஒரே தேர்தல் குறித்து கலைஞரின் நெஞ்சுக்கு நீதி படியுங்கள்’ - விஜய் மீது நயினார் நாகேந்திரன் விமர்சனம்“விஜய்க்கு ...
16/09/2025

‘ஒரேநாடு ஒரே தேர்தல் குறித்து கலைஞரின் நெஞ்சுக்கு நீதி படியுங்கள்’ - விஜய் மீது நயினார் நாகேந்திரன் விமர்சனம்

“விஜய்க்கு அரசியல் தெரிந்திருந்தால் ஒரேநாடு ஒரே தேர்தல் குறித்து தெரிந்திருக்கும்” என்றும் நெஞ்சுக்கு நீதியில் ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து கருணாநிதி எழுதியுள்ளார், அதை விஜய் படிக்க வேண்டும்” என்றும் பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.

அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மீண்டும் என்.டி.ஏ கூட்டணிக்கு வருவாரா என்ற கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதில் அளித்துப் பேசினார்.

மதுரையில் திங்கள்கிழமை (15.09.2025) நடந்த பா.ஜ.க பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். பின்னர், அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது நயினார் நாகேந்திரன் கூறுகையில், “திண்டுக்கல்லில் செப்டம்பர் 21-ம் தேதி மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்ட பா.ஜ.க பூத் கமிட்டி மாநாடு நடக்கவுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாய்ப்புள்ளது. மக்கள் கோரிக்கையை ஏற்று ஜி.எஸ்.டி வரியைக் குறைத்துள்ளனர். தேர்தல் வருவதால் முதல்வர் ஸ்டாலின் இன்னும் நிறைய வரிகளை குறைப்பார் என நம்பலாம். மின்சார வரி, சொத்து வரி குறைய வாய்ப்புள்ளது.” என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.

ஜி.எஸ்.டி வரி குறைப்பு குறித்து தொடர்ந்து பேசிய நயினார் நாகேந்திரன், “ஜி.எஸ்.டி வரியை மத்திய அரசு மட்டும் நிர்ணயம் செய்வதில்லை. மாநில நிதி அமைச்சர்களுக்கும் பங்கு உண்டு. ஆனால், மத்திய அரசு மட்டுமே ஜி.எஸ்.டி வரியை நிர்ணயம் செய்வதாக மக்கள் நினைக்கிறார்கள். ஜி.எஸ்.டி வரி குறைப்பால் பல பொருட்களின் விலை குறையும். இதை வியாபாரிகளும், மக்களும் வரவேற்பார்கள். தீபாவளிக்கு நிதியமைச்சரும், பிரதமர் மோடியும் ஜி.எஸ்.டி வரி குறைப்பை பரிசாக கொடுத்துள்ளனர். ஆனால் தமிழக அரசுக்கு இதில் விருப்பம் இல்லை. "வேண்டாத மனைவி கைப்பட்டாலும் குற்றம் கால் பட்டாலும் குற்றம்" என்பது போல மத்திய அரசு எதை செய்தாலும் குறை கூறுகிறார்கள். முதல்வருக்கு பாராட்ட மனமில்லை” என்று விமர்சனம் செய்தார்.

அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மீண்டும் என்.டி.ஏ கூட்டணிக்கு வருவாரா என்ற கேள்விக்கு பதில் அளித்துப் பேசிய நயினார் நாகேந்திரன், “எல்லோரும் கூட்டணியில் இருந்தால் நல்லது. தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருக்கிறது. பொறுத்திருந்து பார்க்கலாம். தினகரன் கூட்டணியில் இருந்தபோது அமித்ஷா யாரை முதல்வர் வேட்பாளர் என்று சொல்கிறாரோ, அவருக்கு பிரச்சாரம் செய்வோம் என்றார். இப்போது வேறு மாதிரி பேசுகிறார்.” என்று கூறினார்.

அ.தி.மு.க தலைவர்கள் டெல்லி செல்வது குறித்த கேள்விக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், “அமித்ஷா டெல்லியில் இருந்து இங்கே வந்து கூட்டணி உறுதி செய்தார். அதைப்பற்றி யாரும் பேசவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் சோனியா காந்தியை சந்தித்ததை பற்றி பேசுவார்களா? அ.தி.மு.க-வில் ஜனநாயகம் இருக்கிறது. அதனால், எல்லோரும் சென்று சந்திக்கிறார்கள். தி.மு.க-வில் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி என வாரிசு அரசியல் தான் உள்ளது. பா.ஜ.கவில் மட்டுமே ஜனநாயகம் உள்ளது.” என்று தி.மு.க-வின் குடும்ப அரசியலை விமர்சனம் செய்தார்.

திருச்சியில் பரப்புரையின்போது பேசிய த.வெ.க தலைவர் விஜய், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்து விமர்சனம் செய்தது குறித்து செய்தியாளர்கள் நயினார் நாகேந்திரனிடம் கருத்து கேட்டனர். இதற்கு பதில் அளித்துப் பேசிய நயினார் நாகேந்திரன், “ஒரே நாடு, ஒரே தேர்தலில் என்ன நன்மைகள் உள்ளது என விஜய் புரிந்துகொள்ள வேண்டும். ஐந்து வருடத்தில் சட்டமன்றம், நாடாளுமன்றம், உள்ளாட்சி தேர்தல்களால் அரசு பணம் செலவாகிறது. அதை குறைக்க தான் ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிறோம். விஜய்க்கு அரசியல் தெரிந்திருந்தால் இதெல்லாம் தெரிந்திருக்கும். முன்னாள் முதல்வர் கலைஞர் கூட நெஞ்சுக்கு நீதியில் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று எழுதியுள்ளார். இதையெல்லாம் விஜயை படித்து பார்க்கச் சொல்லுங்கள்” என்று நயினார் நாகேந்திரன் த.வெ.க தலைவர் விஜய்க்கு அறிவுரை கூறினார்.

யாருக்கு அரசியல் புரிதல் இல்லை? நேற்று வரை திராவிட கட்சிகளுக்கு ஓட்டு போட்ட போது அரசியல் புரிதல் இருந்தது, இன்று தவெக ஆத...
15/09/2025

யாருக்கு அரசியல் புரிதல் இல்லை? நேற்று வரை திராவிட கட்சிகளுக்கு ஓட்டு போட்ட போது அரசியல் புரிதல் இருந்தது, இன்று தவெக ஆதரவாளராக மாறினால் அரசியல் புரிதல் இல்லையா? இளைஞர்கள் கொந்தளித்தால் தாங்க மாட்டீர்கள்..!

சமீபத்தில் நடைபெற்ற த.வெ.க தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளைஞர்களின் அரசியல் விழிப்புணர்வு குறித்து பல விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. மாநாட்டில் கலந்துகொண்டவர்களுக்கு அரசியல் புரிதல் இல்லை என்று சிலர் விமர்சித்த நிலையில், அதற்கு வலுவான பதில்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்த விவாதம், தமிழக அரசியலில் இளைஞர்களின் பங்களிப்பு எந்த அளவுக்கு மாறியுள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது.

“மாநாட்டில் கலந்துகொண்ட இளைஞர்களுக்கு அரசியல் புரிதல் இல்லை” என்று விமர்சகர்கள் முன்வைக்கும் வாதம், ஒரு முரண்பட்ட கருத்தாக உள்ளது. கடந்த தேர்தல்களில் இதே இளைஞர்கள் அதிமுக அல்லது திமுகவுக்கு வாக்களித்தபோது அவர்களுக்கு அரசியல் புரிதல் இருந்தது. ஆனால் இன்று அவர்கள் த.வெ.க.வின் நிகழ்ச்சிக்கு வந்ததால் அவர்களுக்கு புரிதல் இல்லை என்று கூறுவது ஒரு தர்க்கரீதியான வாதமாக இல்லை. குறிப்பாக, மாநாட்டில் கலந்துகொண்டவர்களில் பலர் 25 வயதிற்கு மேற்பட்டவர்கள். அதில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் 21 வயதுடைய முதல்முறை வாக்காளர்கள். கடந்த தேர்தலில் அவர்கள் யாருக்கு வாக்களித்திருந்தாலும், அப்போது அவர்களின் அரசியல் புரிதலை ஏற்றுக்கொண்டவர்கள், இன்று அவர்களை புரிதல் அற்றவர்கள் என்று கூறுவது சரியானதல்ல.

மேல்லும் “50 ஆண்டுகளாக இந்த மண்ணை ஆண்டவர்கள் யார்?” என்ற கேள்வி இங்கு முக்கியமானது. அண்ணா, பெரியார் ஆகியோரின் கொள்கைகளை முன்னெடுத்து செல்லும் கட்சிகள்தான் இந்த அரை நூற்றாண்டு காலமாக தமிழகத்தை ஆட்சி செய்துள்ளன. இப்போது இந்த இளைஞர் கூட்டம் இரு திராவிட கட்சிகளின் செயல்கள் பிடிக்காததால் தான் ஒரு புதிய கட்சிக்கு இவ்வளவு பெரிய கூட்டம் கூடுகிறது. அப்படியென்றால் அது 50 ஆண்டுகாலம் ஆட்சி செய்த இரு திராவிடக் கட்சிகளின் தோல்வியையை தானே குறிக்கும். அப்படியே அவர்களின் வாதப்படி ஒரு பெரிய கூட்டம், அரசியல் புரிதல் இல்லாமல் இவ்வளவு காலம் இருந்தது என்றால், அதை ஆளும் கட்சிகள் தங்கள் பொறுப்பில்லாமல் செயல்பட்டதாலேயே நிகழ்ந்ததாக கருத வேண்டும்.

விஜய் அரசியலுக்கு வந்துள்ள இந்த சூழலில், தமிழகத்தில் அரசியல் விழிப்புணர்வு இல்லாத ஒரு புதிய தலைமுறை உருவாகியுள்ளது என்ற வாதம் ஏற்புடையதல்ல. மாறாக, இந்த இளைஞர்கள் தங்கள் அரசியல் விருப்பங்களை மாற்றிக்கொண்டு, புதிய தலைமையை நாடி வருகிறார்கள் என்பதே உண்மை. இது அவர்களின் அரசியல் புரிதலின்மையைக் காட்டவில்லை, மாறாக, அவர்கள் புதிய மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என்பதையே காட்டுகிறது.

கடந்த பல ஆண்டுகளாக இளைஞர்கள் அரசியலில் ஆர்வம் காட்டவும் இல்லை, ஓட்டு போடவும் பெரும்பாலும் வரவில்லை. காரணம், மாறி மாறி ஒரே கொள்கையுடைய கட்சிகள் தான் ஆட்சி செய்து வருகின்றன. மக்களின் அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்யாமல் ஊழல் செய்வதையே குறியாக இரு கட்சிகளும் இருந்ததால் தான் இளைஞர்களுக்கு அரசியல் மீதே ஒரு வெறுப்பு ஏற்பட்டது.

இந்த இரு கட்சிகளுக்கும் மாற்றாக ஒரு புரட்சியான தலைவர் வரமாட்டாரா என இளைஞர்கள் பல ஆண்டுகளாக ஏங்கி வந்தனர். விஜயகாந்த் வந்தார், ஏமாற்றினார்.. கமல்ஹாசன் வந்தார், ஏமாற்றினார். சீமான் வந்தார் அவரும் இளைஞர்களின் முழு நம்பிக்கையை பெறவில்லை. இந்த நேரத்தில் தான் விஜய் வந்திருக்கிறார், அவரை ஒரு புரட்சித் தலைவராகவும் தமிழகத்தின் விடிவெள்ளியாகவும் இளைஞர்கள் பார்க்கிறார்கள். அதனால் தான் அவருக்கு இவ்வளவு பெரிய கூட்டம் வருகிறது, அவரை முதலமைச்சர் சீட்டில் உட்கார வைக்காமல் இந்த இளைஞர்கள் விடமாட்டார்கள்’ என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அறிவார்ந்த கூட்டத்தை உருவாக்கும் சீமான்..! சற்று சிந்திப்பாரா விஜய்?தமிழக அரசியல் களத்தில் விஜய் மற்றும் சீமான் ஆதரவாளர்...
14/09/2025

அறிவார்ந்த கூட்டத்தை உருவாக்கும் சீமான்..! சற்று சிந்திப்பாரா விஜய்?

தமிழக அரசியல் களத்தில் விஜய் மற்றும் சீமான் ஆதரவாளர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.

தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. அதிலும் குறிப்பாக நடிகர் விஜயின் அரசியல் பயணம் குறித்து ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். தமிழக வெற்றிக் கழகம் (TVK) என்ற கட்சியின் மூலம் விஜய் 2026 தேர்தலை குறிவைத்து அரசியல் களத்தில் கால் பதித்துள்ளார். இதே நேரத்தில், நீண்ட காலமாக அரசியலில் இருந்து வருகின்ற சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி (NTK) வலுவான ஆதரவாளர்களைக் கொண்டுள்ளது.

இந்த நிலையில், சமூக ஊடகங்களில் விஜய் ரசிகர்களும், சீமான் ஆதரவாளர்களும் இடையே கடும் வாக்குவாதம், சில இடங்களில் சண்டையும் ஏற்படுகிறது. காரணம், “யார் உண்மையான தமிழர்?”, “யாருக்கு மக்கள் ஆதரவு அதிகம்?” என்ற விவாதம் தான். சீமான் ஆதரவாளர்கள், “விஜய் அரசியலுக்கு புதியவர். அவருக்கு அனுபவம் இல்லை” என்று குற்றம் சாட்டுகிறார்கள். மறுபுறம், விஜய் ரசிகர்கள், “விஜய்க்கு மக்களின் பேராதரவு உண்டு, 2026 தேர்தலில் வெற்றி நிச்சயம்” என்று கூறுகிறார்கள்.

இதனுடன், சீமான் மற்றும் விஜய் ஆகியோரின் அரசியல் பேச்சுகளும் அவரது ஆதரவாளர்கள் இடையே மேலும் பல்வேறு பிரச்சனைகளை தூண்டிவிடுகின்றன. சீமான், தனது உரைகளில் நேரடியாக தாக்கும் பாணியில் பேசுவதால் சர்ச்சை கிளம்புகிறது. இணையத்தில் தினமும் டிரெண்ட்டாகும் இந்த விவாதம், 2026 தேர்தலுக்கு முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது.

யாருக்கு உண்மையான மக்கள் ஆதரவு அதிகம், யார் வெற்றி பெறுவார்கள் என்பது தேர்தல் முடிவுகள் வந்த பிறகே தெரிய வரும். நேற்று நடந்த தமிழக வெற்றிக் கழக பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு மீடியாக்களில் பேட்டி அளித்த அவரது ரசிகர் பேச்சும், முழுமையாக அரசியல்படுத்தப்பட்ட சீமானின் தம்பியின் பேச்சும் என சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் சீமானின் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மாணவன் ஒருவன் பேசும்போது, “நாம் தமிழர் ஆட்சி காலத்தில் கடலில் வீணாக கலக்கும் 2500 டிஎம்சி தண்ணீரை சேமித்து மக்களுக்கு பயன்படும் வகையிலும், கோடைகாலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படாத வகையிலும் முப்போக விவசாயத்தை நாம் செய்யலாம். இதற்காக நாம் தமிழர் கட்சியும், தமிழ் தேசியமும் தேவை.

மூன்று மாதம் பெண் காவலர்களுக்கு மகப்பேறுக்கு முன்பு விடுமுறையும். அதேபோல அதற்கு பின்பு 6 மாதம் விடுமுறையும் நியமித்து விட வேண்டும் என்றால் நாம் தமிழர் ஆட்சிக்கு வர வேண்டும். தமிழ் மொழி ஆனது வழிபாட்டு மொழியாக, பண்பாட்டு மொழியாக, ஆட்சி மொழியாக இருக்க வேண்டும். இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களை சிறுபான்மையினர் என்று சொல்லாதே. பெரும்பான்மையினர் என்று சொல்லு. 19 வயது உடைய சிறுவன் உங்களிடத்தில் அரசியல் பேசுவதற்கு நாம் தமிழர் கட்சியும், தமிழ் தேசியமும் இங்கு தேவை என்று பேசினார்.

அதனையொட்டிய மற்றொரு வீடியோவில் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன் பேசிய பொழுது, “சீமான் இனி தளபதி பத்தி பேச கூடாது. அவன் கூடிய சீக்கிரத்தில் சாவ போறான்” என்று குழந்தைத்தனமாகவும், விஷமத்தனமாகவும் பேசினார். தொடர்ந்து பேசிய அந்த சிறுவன், “ஏங்க இந்த மாதிரி காசு கொடுக்காம கூட்டத்தை கூட்ட முடியுமா? மரத்தை கட்டி பிடிச்சு பேசிட்டு இருக்காரு, தைரியம் இருந்தா இங்க வர சொல்லுங்க” என்று சில கூற முடியாத ஒருமை வார்த்தைகளையும் அந்த தவெக ஆதரவாளர் ஆன அந்த சிறுவன் பேசுகிறார்.

தனது ரசிகர்கள் இன்னும் சிறுபிள்ளைத்தனமாக பேசிவருவது தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு தெரியுமா? இதுபோன்ற பேச்சுக்களை அவர் ஊக்குவிக்கிறாரா? கொள்கை, கோட்பாடு அல்லது அரசியல் என்றால் என்ன என்று தெரியாத தொண்டர்களை உருவாக்குவதே அவரது நோக்கமா? என்று நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் எழுப்புகின்றனர். இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் கூறுவதாவது, முதலில் எந்த கட்சியாக அல்லது இயக்கமாக இருந்தாலும் சரி, அதற்கு அடிப்படை கொள்கை கோட்பாடு தான்.

அந்த கொள்கை கீழ்த்தரமாக விமர்சிக்கும் வகையில் இருக்க கூடாது. ஆனால் தவெக தொண்டர்கள் பலரும் கொள்கை சார்ந்து பேசாமல் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என பாகுபாடு இல்லாமல் ஒருமையில் பேசுவது, அரசியல்படுத்தாமல் வெறும் ரசிகர்களாக அவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்ற கருத்தை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது. இதனை விஜய் கவனத்து தன் பின்னல் திரண்டிருக்கும் தொண்டர்களை ரசிகர்கள் என்ற கண்ணோட்டத்தில் பார்க்காமல், அவர்களை அரசியல்படுத்தவேண்டிய தேவை விஜய்க்கு உள்ளது” என்று அறிவுறுத்துகின்றனர்.

நானும் சேர்ந்துதான் திமுகவை தேர்ந்தெடுத்தேன்; ஆனால்..! -அரியலூரில் விஜய்வாக்குத் திருட்டுக்கு எதிராக குரல் கொடுத்த விஜய்...
13/09/2025

நானும் சேர்ந்துதான் திமுகவை தேர்ந்தெடுத்தேன்; ஆனால்..! -அரியலூரில் விஜய்

வாக்குத் திருட்டுக்கு எதிராக குரல் கொடுத்த விஜய் அரியலூரில் இன்றிரவு பேசும்போது, திமுக அரசை கடுமையாக விமர்சித்தார்.

இரவு 8.45 மணியளவில் அரியலூரில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ள இடத்தில் தமது வாகனத்தின் மேலேறி நின்றபடி மைக் பிடித்த விஜய், தாமதமாக வந்தடைந்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டபின் தமது உரையைத் தொடங்கினார்.

அவர் பேசும்போது, “பாஜக செய்வது துரோகம் என்றால், திமுக அரசு நம்மை நம்பவைத்து ஏமாற்றுகிறார்கள்!

கிட்டத்தட்ட, நானும், நீங்களும், எல்லோரும் சேர்ந்துதான் இவர்கள்(திமுக) நல்லது செய்வார்கள் என்று தேர்ந்தெடுத்தோம்... ஆனால், 505 தேர்தல் வாக்குறுதிகளை நமக்கு கொடுத்தார்கள். அவற்றுள் எத்தனை வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றியிருக்கிறது?

முக்கால்வாசி வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், எல்லாவற்றையும் நிறைவேற்றிவிட்டோம் என்று கொஞ்சம்கூட மனசாட்சியே இல்லாமல் கதைவிடுகிறார்... இப்படி கதைவிடுகிறீர்களே எனது அருமை ‘சி.எம். சார்!’

ரீல்ஸ் வேற ரியாலிட்டி வேற என்று நீங்களே சொல்லிவிட்டு, இப்போது நீங்கள் சொல்வது அனைத்தும் ரீல்ஸ்தான்!

இதற்கு பெயர் நம்பிக்கை மோசடி! மக்களை ஏமாற்றுவதில் இவர்கள் இரண்டு பேரும் ஒரே வகையறாதான்!” என்றார்.

அதன்பின், அனைத்து தரப்பு மக்களையும் சார்ந்துள்ள பிரச்சினைகளைக் குறித்து திமுக வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகளையும், அதை அவர்கள் நிறைவேற்றவேயில்லை என்றும் விஜய் சுட்டிக்காட்டிப் பேசினார்.

அரியலூர் மாவட்டப் பிரச்சினைகளையும் பட்டியலிட்டுப் பேசிய விஜய், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் போக்குவரத்து அமைச்சராக இருந்தும் போதிய பேருந்து வசதிகள் இங்கு செய்யப்படவில்லையே, ஏன்? என்று கேள்வியெழுப்பினர்.

பாஜகவுடன் மறைமுக உறவை திமுக கொண்டிருப்பது தெளிவாக வெளிப்படுவதாகவும் விஜய் குறிப்பிட்டார்.

தமது உரையை நிறைவுசெய்யும் முன், “சரி வந்ததிலிருந்து அடுக்கடுக்காகக் கேள்வியெழுப்பும் நான் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வேன்? என்பதைச் சொல்கிறேன் இப்போது.

‘தீர்வை நோக்கி போவதும், தீர்வு காண்பதுமே நம்ம தவெகவின் லட்சியம்! நம்முடைய தேர்தல் அறிக்கையில் இதற்கான விளக்கத்தை ரொம்ப தெளிவாகச் சொல்லுவோம்.’

ஆனால், அதற்கு முன்னாடி, ‘அதைச் செய்வோம், இதைச் செய்வோம்’ என்று பொய்யான வாக்குறுதிகளை கொடுக்க மட்டோம். எது நடைமுறைக்கு சாத்தியமோ, எது உண்மையோ அதை மட்டுமே தேர்தல் வாக்குறுதியாகக் கொடுப்போம்!

அதிலும், பெண்களின் பாதுகாப்பு, சட்டம் - ஒழுங்கு உள்ளிட்ட அடிப்படி விஷயங்களில் சமரசம் செய்யவே மாட்டோம்.

ஏழ்மை, வறுமை இல்லாத தமிழகம்! குடும்ப ஆதிக்கம் இல்லாத தமிழகம்! ஊழல் இல்லாத தமிழகம்! உண்மையான மக்களாட்சி; மனசாட்சியுள்ள மக்களாட்சி! நம்பிக்கையுடன் இருங்கள்! நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம்” என்றார்.

போலீசாரின் கட்டுப்பாடுகளை காற்றில் பறக்கவிட்ட தவெக தொண்டர்கள்தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது...
13/09/2025

போலீசாரின் கட்டுப்பாடுகளை காற்றில் பறக்கவிட்ட தவெக தொண்டர்கள்

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்தாண்டின் தொடக்கத்திலிருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று (13.09.2025) திருச்சியில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதனையொட்டி பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் பிரத்தியேக பிரச்சார வாகனம் வடிவமைக்கப்பட்டது.

திருச்சி காந்தி மார்க்கெட் மரக்கடை பகுதியில் விஜய் உரையாற்ற இருக்கும் நிலையில் அதிகாலையில் இருந்தே ஏராளமான ரசிகர்கள் அந்த பகுதியில் கூடி உள்ளனர். அந்த பகுதியில் வரும் வாகனங்கள் பேருந்துகளில் செல்பவர்களிடம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்கு செலுத்துங்கள் என்று கோஷமிட்டு வருகின்றனர். விஜய் வரவேற்பதற்காக ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. காவல்துறை நிபந்தனைகளில் வரவேற்பு பேனர்கள் வைக்கக்கூடாது என்று விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதையும் மீறி பேனர்கள் கட்டப்பட்டுள்ளது. சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியத்தில் கட்சியின் கொடிகள் கட்டப்பட்டுள்ளது. திருச்சியில் உரையாற்றிய பிறகு அங்கிருந்து அரியலூர் செல்லும் விஜய் குன்னம், பெரம்பலூர் பகுதியில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார்.

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் விஜய் திருச்சி வந்தடைந்த விஜய் பிரச்சாரத்திற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட பேருந்து மூலம் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தார். அவரது வாகனத்தை தொண்டர்கள், ரசிகர்கள் பின்தொடர்ந்து ஓடினர். இதனால் பேருந்து ஊர்ந்து சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ரசிகர்கள், தொண்டர்கள் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி ஐந்து பெண்கள் மயக்கமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மயக்கமடைந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க தூக்கிக்கொண்டு ஓடும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

மேலும் போலீசாரின் கட்டுப்பாடுகளை விஜய்யின் ரசிகர்கள் பின்பற்றாத சூழல் ஏற்பட்டுள்ளது. போலீசாரின் கட்டுப்பாடுகளை மீறி விஜய்யின் பேருந்தை இருசக்கர வாகனங்களில் ரசிகர்கள் தொடர்ந்து வருகின்றனர். விஜய் உரையாற்றவுள்ள இடத்தில் உள்ள எம்ஜிஆர் சிலை இரும்பு கூடத்தின் மீது ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் விஜய்யின் தொண்டர்கள் ஏறினர். போலீசார் சொல்லியும் கேட்காத நிலை அங்கு பரபரப்பான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக தோன்றிய பின் திமுக 2வது முறை ஆட்சிக்கு வந்ததாக வரலாறே இல்லை.. எதிர்க்கட்சிகள் பிரிந்து இருப்பது திமுகவுக்கு சாதகம...
09/09/2025

அதிமுக தோன்றிய பின் திமுக 2வது முறை ஆட்சிக்கு வந்ததாக வரலாறே இல்லை.. எதிர்க்கட்சிகள் பிரிந்து இருப்பது திமுகவுக்கு சாதகம் தான்.. ஒருவேளை திமுக தோற்றால் அதற்கு விஜய் மட்டும் தான் காரணமாக இருப்பார்.. திமுகவின் கனவை கலைப்பது தவெக தான்..!

திமுக தனது இரண்டாவது ஆட்சி காலத்திற்கு தயாராகிவரும் நிலையில், வரும் சட்டமன்ற தேர்தல் பல்வேறு எதிர்பார்ப்புகளையும், விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த 53 ஆண்டுகளில் திமுக தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி அமைத்ததில்லை என்ற புள்ளிவிவரம், இந்த தேர்தலை ஒரு பெரிய சவாலாக பார்க்க வைக்கிறது.

1972-ல் அண்ணா திமுக உருவான பிறகு, தமிழகத்தில் திமுக தொடர்ந்து இரண்டு முறை ஆட்சிக்கு வந்ததில்லை. இந்த புள்ளிவிவரம், திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவது என்பது மிக மிகக் கடினமானது என்பதை காட்டுகிறது.

எம்.ஜி.ஆர். திமுகவில் இருந்த காலத்தில் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சிக்கு வந்தது என்றால், அதில் எம்ஜிஆர் பங்கு பெருமளவு உண்டு. திமுகவின் வெற்றிக்கு அவரும் ஒரு முக்கிய காரணமாக இருந்தார். ஆனால், அண்ணா திமுக உருவான பிறகு, இரட்டை இலை சின்னத்துடன் அந்த கட்சி களத்தில் இறங்கிய பின்னர், ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்த திமுகவிற்கு 2வது முறை வெற்றி என்பது இயலாத ஒன்று என்று தான் இருந்தது என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இந்த புள்ளிவிவரங்களின்படி, திமுக இரண்டாவது முறை வெற்றி பெறுவது என்பது கடினமாக விஷயம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் அதே நேரத்தில் புள்ளிவிவரங்கள் திமுகவுக்கு சாதகமாக இல்லை என்றாலும் கள நிலவரங்கள் வேறுவிதமாக உள்ளன. திமுகவிடம் அதிக அளவில் பணபலம் உள்ளது. ஆட்சி கையில் உள்ளது. இது தேர்தல் பிரசாரத்திலும், களப்பணியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். வலுவான கூட்டணிகள் திமுகவுக்கு ஆதரவாக உள்ளன. இது வாக்குகளை பிரிப்பதை தடுத்து, வெற்றியை எளிதாக்கலாம்.

அண்ணா திமுக கட்சிக்குள் உள்ள ஒற்றுமையின்மை திமுகவுக்கு சாதகமாக உள்ளது. இரட்டை இலை சின்னம் மீண்டும் களத்தில் வந்தாலும், இந்த உள் பூசல்கள் அதிமுகவின் வெற்றியை பாதிக்கக்கூடும். அதுமட்டுமின்றி எதிர்க்கட்சிகள் சிதறிக் கிடப்பது, திமுகவுக்கு ஒரு கூடுதல் பலமாக உள்ளது.

ஒருவேளை திமுக வரும் தேர்தலில் தோல்வி அடைந்தால் அதற்கு விஜய் தான் முக்கிய காரணமாக இருப்பார். விஜய்யின் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய சக்தியின் வருகை, 2026 தேர்தலில் ஒரு புதிய புரட்சியாக உள்ளது. இது திமுகவுக்கு எதிராக அலைகளை உருவாக்கினாலும், அலைகள் எப்படி மாறும் என்பதைப் பொறுத்துதான் இறுதி முடிவுகள் அமையும்.

இந்த சூழ்நிலையில், புள்ளிவிவரங்கள் திமுகவுக்கு பாதகமாக இருந்தாலும், திமுகவின் பணபலம் மற்றும் வலுவான கூட்டணி காரணமாக, அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை திமுக ஆட்சியை இழந்தால் அதற்கு விஜய் தான் முழு காரணமாக இருப்பார் என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

பதவி பறிப்பு எதிரொலி: செங்கோட்டையன் ஆதரவாளர்கள் கூண்டோடு ராஜினாமாஅ.தி.மு.க. மூத்த தலைவர் செங்கோட்டையனை கட்சிப் பொறுப்புக...
07/09/2025

பதவி பறிப்பு எதிரொலி: செங்கோட்டையன் ஆதரவாளர்கள் கூண்டோடு ராஜினாமா

அ.தி.மு.க. மூத்த தலைவர் செங்கோட்டையனை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கியதை எதிர்த்து, கோபி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த சுமார் 300 அ.தி.மு.க. நிர்வாகிகள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

பதவி பறிப்பு எதிரொலி: செங்கோட்டையன் ஆதரவாளர்கள் கூண்டோடு ராஜினாமா

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வலியுறுத்தி அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அக்கட்சியின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள் கெடு விதித்திருந்தார். இதற்கு பதிலடியாக செங்கோட்டையனின் கட்சி பொறுப்புகளை பறித்து எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் சிலரின் கட்சி பதவியும் பறிக்கப்பட்டது.

இந்த நிலையில் கோபி சட்டமன்ற தொகுதியில் பதவி வகித்து வரும் ஒன்றிய, நகர, கிளை, கழக, பேரூர் கழக, வார்டு செயலாளர்கள்என சுமார் 300 பேர் செங்கோட்டையனுக்கு ஆதரவாக தங்களுடைய கட்சி பதவியையும் ராஜினாமா செய்து கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம்அனுப்பியுள்ளனர்.

அந்தக் கடிதத்தில் அவர்கள் கூறியிருப்பதாவது: அதிமுக பழைய வலிமையை பெறவேண்டும் வெற்றிப் பாதையில் பயணிக்க வேண்டும் எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் மக்களுக்கு பயனுள்ள ஒரு ஆட்சி அமைய வேண்டும். இந்த நல்ல நோக்கம் நிறைவேற அதிமுக ஒன்றுபட வேண்டும். கட்சியிலிருந்து பிரிந்தவர்களை இணைக்க வேண்டும் என செங்கோட்டையன் கூறியிருந்தார். அதற்கு தாங்கள் அவரை கட்சி பதவியில் இருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து எங்களது கட்சி பதவிகளில் இருந்து விலகுகிறோம் எனவும் கட்சி ஒன்று பட்டால் பதவியில் நீடிப்போம் என்றுஅவர்கள் ஒரு படிவத்தில் கையெழுத்து போட்டு அனுப்பியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளனர்.

செங்கோட்டையன் ‘வாய்ஸ்’ பின்னணியில் திமுக? - என்னமோ நடக்குது... மர்மமாய் இருக்குது..!அதிமுக-வை ஒருங்கிணைக்க 10 நாட்கள் அவ...
06/09/2025

செங்கோட்டையன் ‘வாய்ஸ்’ பின்னணியில் திமுக? - என்னமோ நடக்குது... மர்மமாய் இருக்குது..!

அதிமுக-வை ஒருங்கிணைக்க 10 நாட்கள் அவகாசம் கொடுத்து அதிரடியைத் தொடங்கியுள்ளார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். அண்ணா பிறந்த நாளான வரும் 15-ம் தேதி இந்த கெடு முடியும் நிலையில், அவர் பெயரில் இயங்கும் அதிமுக அந்த நாளில் முக்கிய திருப்பத்தைச் சந்திக்குமா என்ற கேள்வியை அரசியல் அரங்கில் எழுப்பிவிட்டிருக்கிறார் செங்கோட்டையன்.

அதிமுக-வில் இருந்து சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் உள்ளிட்டவர்கள் நீக்கப்பட்டதுதான் கட்சியின் தொடர் தோல்விக்கு காரணம் என்பது நீக்கப்பட்டவர்கள் தரப்பு வாதமாக இருந்து வருகிறது. மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பிறகு முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன்,
எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், நத்தம் விசுவநாதன், அன்பழகன் ஆகியோர், இபிஎஸ்ஸை சந்தித்து இதே வாதத்தை முன்வைத்தனர். ஆனால், நீக்கப்பட்டவர்கள் சொன்னதை மட்டுமல்லாது, தன்னுடைய சகாக்கள் சொன்ன வாதத்தையும் இபிஎஸ் ஏற்கவில்லை.

இந்த சம்பவத்திற்கு பிறகு, ‘பூனைக்கு யார் மணி கட்டுவது’ என்பது போல், இணைப்பு தொடர்பாக இபிஎஸ்ஸிடம் யார் பேசுவது என்ற தயக்கம் தொடர்ந்து வந்தது. இந்த நிலையில் தான், நீக்கப்பட்டவர்களை ஒன்றிணைத்தால் தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என, மனம் திறந்திருக்கும் செங்கோட்டையன், அதற்கான முயற்சிகளைத் தொடங்க 10 நாள் கெடுவும் விதித்துள்ளார்.

எம்ஜிஆர் காலத்து மூத்த நிர்வாகி, நீண்ட அரசியல், தேர்தல் அனுபவம் கொண்ட செங்கோட்டையனின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் சீரியஸாக விவாதிக்கப்படுகிறது. ஆனால், அதிமுக வட்டாரமோ எந்த சலனமும் இல்லாமல் இருக்கிறது. ஓபிஎஸ், சசிகலா, வைத்திலிங்கம் போன்ற அதிருப்தியாளர்களிடம் இருந்து மட்டுமே வரவேற்பு வந்துள்ளது. தேர்தல் ஆதாயம், கட்சி பொறுப்பு போன்ற காரணங்களால், அதிமுக நிர்வாகிகள் இந்த விஷயத்தில் மூச்சுவிடாமல் இருக்கிறார்கள்.

அதேசமயம், பதவிகளில் இல்லாத அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள், நடுநிலையாளர்கள் மத்தியில் செங்கோட்டையனின் உரிமைக்குரல் விவாதப் பொருளாகி இருக்கிறது. “இணைப்பு குறித்து 5 முன்னாள் அமைச்சர்களுடன் நான் பேசியதற்கு பிறகு, கட்சி தொடர்பான பொதுவான கருத்துகள் குறித்து இபிஎஸ் என்னிடம் பேசியதில்லை” என்ற செங்கோட்டையனின் கருத்தும் இங்கு கவனிக்கத்தக்கது. இணைப்பு குறித்தான சந்திப்பிற்கு செங்கோட்டையனே தூண்டுதலாக இருந்துள்ளார் என முடிவு செய்த இபிஎஸ், அதன் பிறகு அவருக்கான முக்கியத்துவத்தை முழுமையாகக் குறைத்திருக்கிறார் என்று தெரிகிறது.

இதன் உச்சமாக, இந்த முறை கோபி தொகுதியில் போட்டியிட செங்கோட்டையனுக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்ற தகவலும் இபிஸ் தரப்பில் இருந்து கசியவிடப்பட்டது. அதோடு, அவர் திமுக-வில் சேரப்போகிறார் என்றும் வதந்திகள் சமீபத்தில் உலாவரத் தொடங்க, பொறுமை கடந்த செங்கோட்டையன் பொங்கிவிட்டார் என்கின்றனர் அதிமுக-வின் உட்கட்சி விவகாரங்களை அறிந்தவர்கள்.

மேற்கு மண்டலமான கோவையில் இருந்து, இபிஎஸ் தனது பிரச்சாரப் பயணத்தை தொடங்கிய நிலையில், “2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக-வின் தோல்வி மேற்கு மண்டலத்தில் இருந்து தான் தொடங்கும்” என கடந்த மாதம் முதல்வர் ஸ்டாலின் சூசகமாக ஒரு சேதியைச் சொன்னார். தற்போது மேற்கு மண்டலத்தின் அதிமுக தளகர்த்தரான செங்கோட்டையன் ’வாய்ஸ்’ கொடுத்திருப்பதை அத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால், ‘என்னமோ நடக்குது... மர்மமாய் இருக்குது’ என்று தான் பாடத்தோன்றுகிறது.

இதனிடையே, ஒருவேளை பாஜக கூட்டணியை அதிமுக உதறித்தள்ளினால் செங்கோட்டையன், சசிகலா, தினகரன், ஓபிஎஸ் வகையறாக்களை வைத்து பாஜக சித்துவிளையாட்டுக் காட்டும். கடைசி நேரத்தில் எதுவுமே ஒத்துவராமல் செங்கோட்டையன் கைவிடப்பட்டால் திமுக அவரை கைகொடுத்து தூக்கிவிட்டு கோல் அடிக்கவும் தயங்காது என்றெல்லாம் செங்கோட்டையன் வாய்ஸ் குறித்து செய்திகள் பலவாறாக சிறகடிக்க ஆரம்பித்துவிட்டன.

ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வை உன்னால் எழுத முடியுமா? சவால் விட்ட அம்மா, சாதித்த ஷாருக்கான்: ஆனா அவர் இன்ஜினியர் அல்ல!ஷாருக்கான்...
06/09/2025

ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வை உன்னால் எழுத முடியுமா? சவால் விட்ட அம்மா, சாதித்த ஷாருக்கான்: ஆனா அவர் இன்ஜினியர் அல்ல!

ஷாருக்கான் டெல்லி பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கு முன்பே, அவர் ஐஐடி நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல். தனது அம்மாவுக்காக இதை செய்துள்ளார்.

பாலிவுட் சினிமாவின் பாட்ஷா என்று அழைக்கப்படும் நடிகர் ஷாருக்கான், தனது அம்மாவுக்காக ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றதாகவும், அந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவுடன், உனக்கு விருப்பமான பாடத்தை படி என்று அம்மா சொன்னதாகவும் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான், பள்ளியில் ஒரு சிறந்த மாணவராகத் திகழ்ந்தார். அவரது நண்பர்கள் பலரும் அவர் வாழ்க்கையில் சாதிக்கத் தேவையான அர்ப்பணிப்பும், கவர்ச்சியும் அவரிடம் இருந்ததாகக் கூறியுள்ளனர். ஷாருக் டெல்லி பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படித்தார் என்பதும், பிறகு ஜாமியா மில்லியா இஸ்லாமியாவில் ஊடகத் தொடர்பியல் (Mass Communication) பயின்றார் என்பதும் அனைவரும் அறிந்ததே. அதே சமயம் அவர், டெல்லி பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கு முன்பே, அவர் ஐஐடி நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.

2000-ஆம் ஆண்டில் பிபிசியில் கரண் தாப்பருடன் நடந்த நேர்காணலில் பங்கேற்ற ஷாருக், தனது பள்ளிப்படிப்பில் அறிவியல் படித்ததாகவும், ஆனால் கல்லூரியில் வேறு ஒரு பாடப்பிரிவில் சேர விரும்புவதாகவும் அம்மாவிடம் கூறியபோது, அறிவியல் படிப்பை தொடர விரும்பிய அவரது அம்மா, ஐஐடி நுழைவுத் தேர்வை எழுதிப் பார்க்கச் சொன்னார். ஷாருக்கும் அந்தத் தேர்வை எழுதி, அதில் வெற்றியும் பெற்றார். அதன்பிறகு அம்மா நீ விரும்பியதை படி என்று கூறிவிட்டதாக தெரிவித்துள்ளார்,

அவர் மேலும் கூறுகையில், "நான் எனது வாழ்க்கைப் பாதையைத் தேர்வு செய்தபோது, என் அம்மா 'நீ அறிவியல் படிப்புக்குச் சென்றால் நன்றாக இருக்கும் என்று சொன்னார். நானும், 'சரி, நான் தேர்வை எழுதுகிறேன். ஆனால் நான் பொருளாதாரம் படிக்க விரும்புகிறேன் என்று சொன்னேன். அப்போது, 'நீ பொருளாதாரம் படிக்க விரும்புகிறாயா? அப்படியானால், ஐஐடி நுழைவுத் தேர்வை உன்னால் எழுத முடியுமா? இந்த இன்ஜினியரிங் நுழைவுத் தேர்வை உன்னால் எழுத முடியுமா?' என்று அவர் கேட்டார்.

நான் 'என்னால் முடியும் என்று சொன்னபோது. 'சரி, அதை எனக்கு செய்து காட்டு என்று அம்மா சொன்னார். அதற்காக நான் அந்த தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றேன். அதன் பிறகு என் அம்மா, 'நீ இதை எடுத்துக்கொள்ளத் தேவையில்லை, இப்போது சென்று உன் பொருளாதாரப் படிப்பைத் தொடங்கு என்று சொன்னதாக ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

இதே நேர்காணலில், ஷாருக் தனது குடும்பம் ஒரு "தாராளமயமான" குடும்பம் என்றும், தங்களுக்கு விருப்பமான மதத்தை பின்பற்றலாம் என்ற சுதந்திரம் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அவர், தனது குழந்தைப் பருவம் பற்றிப் பேசுகையில், "அது அருமையாக, எளிமையாக, மிகுந்த சுதந்திரத்துடன் இருந்தது. எனக்கு ஒரு அக்கா உண்டு. நாங்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்று ஒருபோதும் சொல்லப்பட்டதில்லை. எனது குடும்பம் மிகவும் தாராளமயமான குடும்பம்.

உண்மையில், மத போதனைகள், சடங்குகள், படிப்பு, தொழில் என எல்லாவற்றையும், 'உனக்கு எப்படி விருப்பமோ, அப்படிச் செய், அதில் மகிழ்ச்சியாக இரு, உன்னால் முடிந்ததை சிறப்பாகச் செய்' என்றுதான் எனக்கு சொல்லப்பட்டது. தொழுகை செய்வது நல்லது என்று என்னிடம் சொன்னார்கள். அதனால் நான் அதைச் செய்தேன். அவர்கள் சொன்ன விதம், அதை செய்ய வேண்டும் என்ற உணர்வைத் தூண்டியது. என் வாழ்நாள் முழுவதும், என் குழந்தைகளையும் அப்படி வளர்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்

விஜய்யுடன் கைகோர்க்கும் ஓபிஎஸ், டிடிவி தினகரன்? எடப்பாடிக்கு நெருக்கடி!ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் ...
05/09/2025

விஜய்யுடன் கைகோர்க்கும் ஓபிஎஸ், டிடிவி தினகரன்? எடப்பாடிக்கு நெருக்கடி!

ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அடுத்தடுத்து வெளியேறியுள்ளனர். இந்த திடீர் முடிவு, அவர்கள் இருவரும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கப் போகிறார்களோ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

பின்னணி: பாஜக உடனான ஓபிஎஸ்ஸின் உறவு

ஒரு காலத்தில் அதிமுகவில் சசிகலாவுக்கு எதிராக ‘தர்மயுத்தம்’ நடத்திய ஓ. பன்னீர்செல்வம், அப்போது முதல் பாஜகவுடன் நெருக்கமாக இருந்தார். பாஜகவின் தலையீட்டால்தான் அவர் எடப்பாடி பழனிசாமியுடன் மீண்டும் இணைந்தார். ஓபிஎஸ் மகன் ஓ.பி. ரவீந்திரநாத்தும் நாடாளுமன்றத்தில் பாஜகவை ஆதரித்து வந்தார்.

ஆனால், அதிமுக தலைமை தொடர்பான வழக்குகளில் ஓபிஎஸ்ஸிற்கு டெல்லி ஆதரவு கிடைக்கவில்லை. தொடர்ச்சியான தோல்விகளுக்குப் பிறகு, தற்போது பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டுள்ளார்.

டிடிவி தினகரனின் அதிரடி அறிவிப்பு

ஓபிஎஸ்ஸை போலவே, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இனியும் காத்திருப்பது சரியல்ல. துரோகம் செய்தவர்கள் திருந்துவார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அதற்கு வாய்ப்பில்லை. இனி நாங்கள் எங்கள் வழியில் செல்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், “அமித் ஷாவின் திட்டம் தோல்வியடைந்துவிட்டது. ஆணவம், அகங்காரம் பிடித்தவர் போல் எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார்” என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

விஜய்யுடன் கூட்டணி சாத்தியமா?

2026 சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம், ஓபிஎஸ் அணி மற்றும் அமமுக ஆகியவை கூட்டணி அமைக்க அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது நடந்தால், தென் தமிழகத்தில் அதிமுக கூட்டணிக்கு பெரும் பின்னடைவு ஏற்படும்.

கடந்த மக்களவைத் தேர்தலில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனின் பங்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 18% வாக்குகளைப் பெற்றுத் தந்தது. இந்த இரு தலைவர்களும் விஜய்யுடன் இணைந்தால், அவர்களின் சமூக வாக்குகளை தமிழக வெற்றிக் கழகத்திற்கு மாற்ற முடியும். இது எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Address

Vadapalani
Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Live Tamil News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share