News4 Tamil

News4 Tamil Welcome to Official page of News4 Tamil. Our page provides true facts for Online Tamil News

Welcome to Official page of News4 Tamil.We are providing latest updates from State and National level Current Events,Cinema,Sports and Business with true facts

எம்ஜிஆர் கொடுத்த செக்கை பெற மறுத்த செங்கோட்டையன்.. 54 ஆண்டுகளாக கட்சியில் இருந்தவரை நீக்கிய எடப்பாடிஅதிமுக முன்னாள் அமைச...
31/10/2025

எம்ஜிஆர் கொடுத்த செக்கை பெற மறுத்த செங்கோட்டையன்.. 54 ஆண்டுகளாக கட்சியில் இருந்தவரை நீக்கிய எடப்பாடி

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு எம்ஜிஆர் ஒரு பிளாங்க் செக்கை பொதுக்கூட்ட மேடையிலேயே கொடுத்தார். அதனை வாங்க மறுத்தவர் செங்கோட்டையன். அதிமுக தொடங்கப்பட்டது முதல் 54 ஆண்டுகளாக பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்த செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமியால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களாகவே அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே மனக்கசப்பு நீடித்து வந்த நிலையில், அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "அதிமுக ஒன்றிணைய வேண்டும். பிரிந்தவர்களை இணைக்க வேண்டும். 10 நாட்கள் கெடு" எனத் தெரிவித்தார். இந்நிலையில், நீண்ட ஆலோசனைக்குப் பிறகு செங்கோட்டையனின் கட்சிப் பதவிகளைப் பறித்தார் எடப்பாடி பழனிசாமி.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன் இணைந்து செங்கோட்டையன் ஒன்றாக சென்று மரியாதை செலுத்தியிருந்த நிலையில், அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளார்.

எம்ஜிஆர் கொடுத்த செக்
1972 ஆம் ஆண்டு திமுகவில் இருந்து எம்ஜிஆர் வெளியேற்றப்பட்டபோது, எம்.ஜி.ஆர் உருவாக்கிய அதிமுகவில் இணைந்தார் செங்கோட்டையன். எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமான இவர் கட்சியில் இணையும்போதே எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார்.

1975 ஆம் ஆண்டில் கோவையில் நடைபெற்ற கட்சியின் பொதுக்குழுவைச் சிறப்பாக நடத்தி முடித்ததன் மூலம் எம்ஜிஆரிடம் நற்பெயரைப் பெற்று கவனம் ஈர்த்தார் செங்கோட்டையன். அந்தக் பொதுக்குழு கூட்டத்தை சிறப்பாக முடித்ததால் மிகவும் மகிழ்ந்த எம்.ஜி.ஆர் செங்கோட்டையனுக்கு ஒரு பிளாங்க் செக்கை விழா மேடையிலேயே கொடுத்திருக்கிறார். ஆனால் அதனை செங்கோட்டையன் வாங்க மறுத்தார். அதன்பிறகான காலகட்டத்தில் எம்ஜிஆரோடு பிரசாரத்திற்கு செல்வது என்று நெருக்கமானார்.

நீண்ட கால எம்.எல்.ஏ
எம்ஜிஆரின் முதல் ஆட்சிக் காலத்தில் சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றார் செங்கோட்டையன். 1980ஆம் ஆண்டு முதல் கோபிசெட்டிப் பாளையத்தில் போட்டியிட்டு தொடர்ந்து வெற்றிகளைப் பதிவு செய்திருக்கிறார். 1980-ல் இருந்து தற்போது வரை அதே தொகுதியில் போட்டியிட்டு வருகிறார். 1996ல் மட்டும் தோல்வி அடைந்தார். மற்ற அனைத்து முறையும் எம்.எல்.ஏவாக வென்றிருக்கிறார் செங்கோட்டையன்.

தமிழக அரசியல் வரலாற்றில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, அமைச்சர் துரைமுருகன் வரிசையில், அதிக முறை சட்டமன்ற உறுப்பினரான செங்கோட்டையன், அதிமுகவில் சூப்பர் சீனியராக இருக்கிறார். இப்போதைய அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் சீனியர் தான் செங்கோட்டையன். 2014-ல் ஜெயலலிதா சிறை செல்ல நேரிடும்போதும், 2017ல் சசிகலா சிறை செல்ல நேரிடும்போதும் செங்கோட்டையனின் பெயர்தான் முதல்வர் பதவிக்கு அதிகமாக அடிபட்டது.

54 ஆண்டுகளாக
கடந்த ஜூலை மாதம் கோவையில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணத்தை தொடங்கியபோதும், ஈரோட்டில் பரப்புரை செய்தபோதும் பங்கேற்காமல் புறக்கணித்த செங்கோட்டையன், நேற்று, கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் 10 நாட்கள் கெடு என்றும் அறிவித்திருந்தார். இதையடுத்து அவரது கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டன.

இந்நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த காரணத்தால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் செங்கோட்டையன். 1972 ஆம் ஆண்டு முதல் 54 ஆண்டுகளாக அதிமுகவில் பல்வேறு பதவிகளில் இருந்து வந்த செங்கோட்டையன் தற்போது எடப்பாடி பழனிசாமியால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பாக்யராஜ் மாதிரி விஜய்க்கு ரிட்டர்ன் அரசியல்தான்.. ஜானகியுடன் சிவாஜி சென்ற அரசியல்.. பிரபலம் கருத்துவரப்போகும் தேர்தலையு...
31/10/2025

பாக்யராஜ் மாதிரி விஜய்க்கு ரிட்டர்ன் அரசியல்தான்.. ஜானகியுடன் சிவாஜி சென்ற அரசியல்.. பிரபலம் கருத்து

வரப்போகும் தேர்தலையும் விஜய் சந்திக்க முடியாது, அப்படியே சந்தித்தாலும் நஷ்டத்தைதான் தவெக சந்திக்க வேண்டியிருக்கும்.. தவெகவில் தலை மட்டுமே உள்ளது, மற்றபடி உடம்பு, கை, கால் எதுவுமே இல்லை. வெறும் தலையை மட்டுமே வைத்து கொண்டு, எப்படி தேர்தலை சந்திக்க முடியும்?அந்த தலையும் நேர்திசையில் இல்லாமல், குழப்பமாக உள்ளது என்கிறார் விமர்சகர் ரவீந்திரன்.

Aadhan Tamil என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, சிவாஜி, ரஜினிகாந்த், பாக்யராஜ் வரிசையில், ரிட்டன் அரசியல்தான் விஜய்க்கு அமையும்.. ஜனநாயகன் படம் ரிலீஸானதுமே, அரசியலிலிருந்து திரும்பி செல்வதற்கான வாய்ப்பு விஜய்க்கு பிரகாசமாக உள்ளது.

ஒரு தேர்தலையும் சந்திக்க விஜய் சந்திக்க முடியாது, அப்படியே சந்தித்தாலும் நஷ்டத்தைதான் அவர் சந்திக்க வேண்டியிருக்கும்.. தவெகவில் தலை மட்டுமே உள்ளது, மற்றபடி உடம்பு, கை, கால் எதுவுமே இல்லை. வெறும் தலையை மட்டுமே வைத்து கொண்டு, எப்படி தேர்தலை சந்திக்க முடியும்? அந்த தலையும் நேர்திசையில் இல்லாமல், குழப்பமாக உள்ளது.

விஜய் செய்ய வேண்டியது என்ன
வரும் தேர்தலை சந்திக்க வேண்டுமானால், முதலில் விஜய்க்கு ஒரு உறுதியான நிலைப்பாடு வேண்டும். அப்படி தனித்து போட்டி போடுவதற்கு விஜய், தன்னுடைய கொள்கைகளையும், பிரச்சனைகளையும் எடுத்து முன் வைக்க வேண்டும்.

பிறகு செய்தியாளர்களை சந்திக்க தயாராக வேண்டும். அது தொடர்பாக பொதுக்கூட்டத்துக்கு தயாராக வேண்டும். இப்போதைக்கு 234 தொகுதிகளிலும் தனித்து நிற்க வேண்டும் என்ற எண்ணம் விஜய்க்கே இல்லை..

அடுத்தக்கட்டமாக, புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார், விஜயலட்சுமி, தாஹீரா, ஆடிட்டர் வெங்கட்ரமணன் போன்றோர் விஜய்க்கு அடுத்தக்கட்டமாக உள்ளனர்.. இவர்களில் யாருக்குமே தனித்து போட்டியிட்டு, 31-ல் பார்த்து கொள்ளலாம் என்ற எண்ணமும் வரவில்லை..

அடுத்தக்கட்டமாக, மாவட்ட அளவிலான தலைவர்களுக்கும் தனித்து நின்று போட்டியிட விருப்பமில்லை.. இதற்கு அடுத்தக்கட்டமாக, தொண்டர்களுக்கும் எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி சேர வேண்டும் என்ற விருப்பம் உள்ளதால், அதிமுக கூட்டத்தில் கொடிகளை அசைத்து கொண்டிருக்கிறார்கள்.

சார் விவகாரத்தில் தவெக நிலைப்பாடு?
தற்போது வாக்காளர் சார் விவகாரத்தில் திமுகவும், கூட்டணி கட்சிகளும் கடுமையான கண்டனங்களை பாஜகவுக்கு எதிராக சொல்லி வருகின்றன.. சீமானும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆனால் விஜய் அதை பற்றி இன்னமும் பேசவேயில்லை.

ஒரு அரசியல் கட்சியானது, ஒரு நிலைப்பாட்டை எடுத்து பயணிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தால் இந்நேரம் சார் பற்றி பேசியிருப்பார்கள்.. ஆனால் தவெக தரப்பில் அமைதியாகவே இருப்பதால் பாஜகவுடன் கூட்டணியோ? என்ற சந்தேகம் எழுகிறது. இந்தியா கூட்டணிக்கு ஆதரவு முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என அனைவருமே இதை உற்று கவனிக்கவே செய்கிறார்கள்.

ஜானகி - சிவாஜி அரசியல்
திருச்சியில் பாஜகவை எதிர்த்து பேசியதைகூட, இப்போது பேசாமல் உள்ளார் என்றால், அவரது நிலைப்பாட்டில் மாற்றம் உள்ளதாகவே அர்த்தம்.. ஒருவேளை பாஜக ஆதரவு நிலைப்பாட்டை விஜய் எடுத்தால் அவரது அரசியல் காலியாகும்.. வி.என்.ஜானகியுடன் சிவாஜி சென்ற நிலைமையை போலாகிவிடும்.

அப்படி விஜய் பாஜகவுடன் சென்றால் அவரது அரசியல் காலியாகும்.. சினிமா காலியாகும்.. இமேஜ் காலியாகும். 47 தொகுதிகளிலும் நான்கைந்து சதவீத வாக்குகளே உள்ளன நிலையில், வெறும் 3 தொகுதிகளில் உள்ள 20 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் உள்ளன.. இங்கேயும் சிக்கல் வந்துவிடும். பாக்யராஜ் மாதிரி அசிங்கப்பட்டு போகாமல், முதலிலேயே விலகி கொள்ளலாம்" என்றெல்லாம் கருத்து கூறியிருக்கிறார்.

தனிமரமாய் நிற்கப்போகிறாரா எடப்பாடி பழனிசாமி? செங்கோட்டையனை தவிர்த்துவிட முடியுமா? யதார்த்தம் இதுதான்கட்சியிலிருந்து நீக்...
31/10/2025

தனிமரமாய் நிற்கப்போகிறாரா எடப்பாடி பழனிசாமி? செங்கோட்டையனை தவிர்த்துவிட முடியுமா? யதார்த்தம் இதுதான்

கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களுடன் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்று அறிவித்தும், அதற்கு எதிராக செயல்பட்டார் என்று கூறி செங்கோட்டையனை அதிமுகவின் கட்சி உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் எடப்பாடி பழனிசாமி நீக்கியிருக்கிறார். இது எடப்பாடி பழனிசாமிக்குதான் பின்னடைவாக இருக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர் கூறியதாவது, "ஈரோடு போன்ற இடங்களில் செங்கோட்டையன் வெளியேறுவதால் மிகப்பெரிய அளவு அண்ணா திமுகவுக்கு பாதிப்பு ஏற்படும். தொண்டர்களை பொறுத்தவரை அதிமுக தலைவர்களில் ஒருவராகத்தான் செங்கோட்டையன் தெரிவார்.

செங்கோட்டையன் வெளியேறி எதிர் நிலைக்கு போய்விட்டார் என்றாலும் அவரை கட்சி தொண்டர்கள் கைவிட மாட்டார்கள். ஏற்கெனவே செங்கோட்டையின் பொறுப்பு பறிக்கப்பட்டபோது, ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் ஒன்று திரண்டு செங்கொட்டையனுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்கள்.

இப்படி செல்வாக்கு கொண்ட செங்கோட்டையனை எளிதில் ஒழித்துவிட முடியாது. இந்த சூழலை எதிர்கொண்டு செங்கோட்டையனும் நிற்பார். இது எடப்பாடிக்கு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும். தற்போது எடப்பாடி எடுத்திருக்கும் நடவடிக்கை ஈரோடு, கோபி என 8-10 சட்டமன்ற தொகுதிகளில் எதிரொலிக்கும். தொண்டர்கள் கட்சியை அவ்வளவு சீக்கிரத்தில் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்" என்று கூறியிருக்கிறார்.

கட்சியை பலப்படுத்த வேண்டும், பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும், தொடர் தோல்வி கட்சியை காணாமல் போக செய்துவிடும் என்று செங்கோட்டையன் கூறி வந்தார். வெறுமென கருத்து மட்டும் தெரிவிக்காமல், அதிமுக தலைமை தனது கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்றும் இதற்காக 10 நாட்கள் கெடுவையும் விதித்தார். இதனையடுத்து செங்கோட்டையனின் கட்சி பதவிகள் பறிக்கப்பட்டன. சூட்டுடன் சூடாக டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி அமித்ஷவை சந்தித்து பேச, பதிலுக்கு டெல்லிக்கு போய் நிர்மலா சீதாராமனை தனியாக சந்தித்து பேசினார் செங்கோட்டையன்.

இரு தரப்பும் தொடர்ந்து அமைதி காத்து வந்த நிலையில், தற்போது செங்கோட்டையனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் எடப்பாடி பழனிசாமி நீக்கியுள்ளார்.

இது குறித்து அவர் விடுத்திருந்த அறிக்கையில், "கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்; கழகத்தில் இருப்பவர்கள், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பது தெரிந்திருந்தும்,

அவர்களுடன் ஒன்றிணைந்து, கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்ற காரணத்தினாலும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த K.A.செங்கோட்டையன்(கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதி) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்திருந்தார்.

ஜெயலலிதாவே செய்யாத சாதனை.. கோபியில் செங்கோட்டையன் செய்த சம்பவம் தெரியுமா?2026 சட்டமன்ற தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள்...
31/10/2025

ஜெயலலிதாவே செய்யாத சாதனை.. கோபியில் செங்கோட்டையன் செய்த சம்பவம் தெரியுமா?

2026 சட்டமன்ற தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. அதிமுகவில் மட்டும் உள்கட்சி பிரச்சனை தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. கொங்கு மண்டலத்தில் அந்தக் கட்சியின் முக்கிய தலைவராக இருந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதிமுகவில் மற்ற தலைவர்களை விட செங்கோட்டையன் முக்கிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதுகுறித்த விவரங்களை பார்க்கலாம்.

செங்கோட்டையன் அதிமுகவில் எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதி. ஜெயலலிதாவின் பிரச்சார பயணங்களை வகுத்தவர். அதிமுகவின் கொங்கு மண்டல முகமாக வலம் வந்தவர். இது எல்லாம் கடந்த காலம். அதிமுகவின் பவர்சென்டராக கொங்கு மண்டலம் வந்த பிறகு நிலைமை தலைகீழாக மாறியது. சமீபகாலமாக செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து சற்று விலகியே இருந்தார்.

கோபியின் தோனி
அவிநாசி அத்திக்கடவு நிகழ்ச்சி பாராட்டு விழாவில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் புறக்கணிக்கப்படுகின்றன, தன் கோபி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய ஆதரவாளர்களை தவிர்த்துவிட்டு அவரின் ஆதரவாளர்களுக்கு பதவியளிப்பது, பிரிந்தவர்களை ஒன்றிணைப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களின் செங்கோட்டையன் நேரடியாக எடப்பாடியை எதிர்த்தார்.

தேவர் ஜெயந்தி நிகழ்வின்போது கூட, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டால் சந்தோஷப்படுவேன் என்று கூறியிருந்தார். தற்போது அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார். செங்கோட்டையன் அதிமுகவின் முக்கிய தலைவராக மாறியதற்கு அவரின் ஆழமான கள அரசியல் தான் முக்கிய காரணம். அதிமுக சந்தித்த முதல் சட்டமன்ற தேர்தலான 1977 தொடங்கி 2021 வரை தேர்தல் வரை செங்கோட்டையன் கோபிசெட்டிப்பாளையத்தில் போட்டியிட்டுள்ளார்.

வரலாற்று சாதனை
1996 தேர்தலில் மட்டும் அவர் வெற்றி பெறவில்லை, 2001 தேர்தலில் செங்கோட்டையனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. 8 தேர்தல்களில் அவர் வெற்றி பெற்றுள்ளார். தமிழ்நாடு தேர்தல் வரலாற்றில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, அமைச்சர் துரைமுருகன் ஆகியோருக்கு அடுத்து அதிகமுறை எம்எல்ஏவான தலைவர் என்ற பெருமை செங்கோட்டையனுக்கு உள்ளது.

அதிமுக கட்சியில் அதிகமுறை எம்எல்ஏவான தலைவர் பட்டியலில் செங்கோட்டையன் முதலிடத்தில் உள்ளார். ஒருபக்கம் அமைச்சர் பதவி, மறுபக்கம் கட்சியில் துணைப் பொதுச்செயலாளர், தலைமை நிலைய செயலாளர் என்று பவர்ஃபுல்லாக வலம் வந்தவர். ஜெயலலிதா காலத்தில் பவர் சென்டராக இருந்த ஐவர் அணியில் செங்கோட்டையன் இருந்தார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவர் தான் அடுத்த முதல்வராக நியமிக்கப்படுவார், கட்சியின் அவைத் தலைவராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. கட்சியில் இருந்து நீக்கப்பட்டாலும் கோபி தொகுதியில் செங்கோட்டையனுக்கு தனி செல்வாக்கு இருப்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.

செங்கோட்டையன் நாளை என்ன பேசுவார்? அதிமுக bylaw-வை கையிலெடுக்கும் KAS!அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கே.ஏ. செங்கோட்டையன் ...
31/10/2025

செங்கோட்டையன் நாளை என்ன பேசுவார்? அதிமுக bylaw-வை கையிலெடுக்கும் KAS!

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கே.ஏ. செங்கோட்டையன் நாளை காலை 11 மணிக்கு விரிவாக செய்தியாளர்களை சந்திப்பதாக கூறியுள்ள நிலையில் அப்போது அவர் என்ன பேசுவார் என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். கட்சி பதவிகள் கடந்த செப்டம்பர் மாதம் பறிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் அதிமுகவிலிருந்தே நீக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பசும்பொன்னில் நேற்று நடந்த தேவர் ஜெயந்தி விழாவில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோருடன் வந்த செங்கோட்டையன் ஒன்றாக சேர்ந்து தேவர் சிலைக்கு மாலை அணிவித்தார். சசிகலாவுடனும் அவர் பேசினார். அதிமுகவிலிருந்து தன்னை எடப்பாடி பழனிசாமி நீக்கினாலும் மகிழ்ச்சியே என சசிகலாவிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமியிடம் கேட்ட போது கட்சி கட்டுப்பாட்டை மீறினால் நிச்சயம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், அந்த வகையில் செங்கோட்டையனை நீக்க தயக்கம் இல்லை என தெரிவித்திருந்தார். ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை அதிமுகவில் இருந்து நீக்கும் போதும் இவர்களுடன் கட்சியினர் தொடர்பு வைத்துக் கொள்ள கூடாது என கட்சி தலைமை தெரிவித்திருந்தது.

ஆனால் அதை மீறி செங்கோட்டையன் அந்த மூவருடனும் பேசினார். இந்த நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் நாளை கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் காலை 11 மணிக்கு நீக்கம் குறித்து பேசுவதாக செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் செங்கோட்டையன் என்ன பேசுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிலும் கட்சி அலுவலகத்தில் பேசுவதாக கூறியிருக்கிறார். இதுகுறித்து தராசு ஷியாம் நியூஸ் 18 தமிழ்நாடு சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார்.

இது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்காது. இது எதிர்பார்த்த ஒன்றுதான். எனவே நாளை அவர் என்ன பேசுவார் என்றால், "நான் கட்சியின் அமைப்புச் செயலாளர், ஈரோடு மேற்கு மாவட்டச் செயலாளர். கட்சியின் விதிப்படி எனக்கு நோட்டீஸ் கொடுத்து விளக்கம் கேட்டுதான் என்னை நீக்க முடியும். அவ்வாறு நோட்டீஸ் ஏதும் கொடுக்காமல் நீக்கியிருப்பது சட்டப்படி செல்லாது.

என்னை நீக்க கட்சி விதிகளின் படிதான் செயல்பட வேண்டும். நான் பொதுக் குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளேன். எனவே என்னை எடப்பாடி பழனிசாமியோ சிறு குழுவோ நீக்க உரிமை இல்லை. நான் நீதிமன்றம் செல்வேன்" என்பதை தாண்டி அவரால் வேறு ஏதும் பேச முடியாது. எனவே தன்னை கட்சியில் இருந்து நீக்கிய உத்தரவுக்கு கோர்ட்டுக்கு போய் இடைக்கால தடை பெற முயற்சிப்பார் என தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.

செங்கோட்டையன் நீக்கத்தால் பாஜக தலைமை மகிழ்ச்சியாக இருக்கும் என அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். அதிமுகவை சேர்ந்த செங்கோட்டையன் தங்களை சந்தித்தால் அவருக்கு பிரச்சினை, இது பிற கட்சியின் உள் விவகாரத்தில் தலையிடுவது போன்றாகிவிடும் என்பது பாஜக தலைமைக்கு நன்றாக தெரிந்திருந்தும் செங்கோட்டையன் சந்திப்பை தவிர்க்கவில்லை. எனவே பாஜகவை பொருத்தமட்டில் வரும் தேர்தலை காட்டிலும் அடுத்து வரக் கூடிய தேர்தல்களையே முக்கியமாக கருதுகிறார்கள்.

அதிமுகவின் பலத்தை இழக்கச் செய்து திமுக வெர்சஸ் பாஜக என்ற நிலையை உருவாக்கி எப்படியாவது ஆட்சியை பிடிக்கவே பாஜக போராடுவதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

அதிமுகவின் மூத்த நிர்வாகி.. எம்.ஜிஆர் காலத்து தலைவர்.. ஜெ.விசுவாசி.. யார் இந்த செங்கோட்டையன்?அதிமுகவின் சீனியர் நிர்வாகி...
31/10/2025

அதிமுகவின் மூத்த நிர்வாகி.. எம்.ஜிஆர் காலத்து தலைவர்.. ஜெ.விசுவாசி.. யார் இந்த செங்கோட்டையன்?

அதிமுகவின் சீனியர் நிர்வாகியான செங்கோட்டையன் அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து இன்று எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்டுள்ளார். எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கியதில் இருந்தே செல்வாக்காக வலம் வந்த செங்கோட்டையன் அதிமுகவில் கடந்து வந்த அரசியல் பாதையை பார்க்கலாம்.

அதிமுகவில் இருந்து விலகியவர்கள், நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் வலியுறுத்தி வந்த நிலையில், நேற்று பசும்பொன்னில் டிடிவி தினகரன், ஓபன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்தார். இதையடுத்து, கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

செங்கோட்டையன் நீக்கம்
அதிமுகவின் மிக மூத்த நிர்வாகியான செங்கோட்டையனின் அரசியல் பாதையை பார்க்கலாம். ஈரோடு மாவட்டம் குள்ளம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செங்கோட்டையன். திமுகவில் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய செங்கோட்டையன், 1972ஆம் ஆண்டு திமுகவில் இருந்து எம்ஜிஆர் வெளியேற்றப்பட்ட பிறகு எம்.ஜி.ஆர் தொடங்கிய அதிமுகவில் இணைந்தார்.

எம்.ஜி.ஆரின் குட்புக்கில் இடம்பெற்ற செங்கோட்டையன், 1977ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றார். அதன்பிறகு, 1980-ஆம் ஆண்டு முதலே கோபிசெட்டிப் பாளையத்தில் போட்டியிட்டு தொடர்ந்து வெற்றியை பெற்றுள்ளார்.

பல்வேறு துறைகளில் அமைச்சர் பதவி
எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின் அதாவது, 1989 ஆம் ஆண்டில் அதிமுக ஜெ.அணி.. ஜா.அணி என்று இரண்டாக பிளவுபட்டது. அப்போது, ஜெயலலிதா அணியில் இருந்த செங்கோட்டையன் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 1996 தேர்தலில் மட்டும் தோல்வியை சந்தித்திருக்கிறார் செங்கோட்டையன் தோல்வியை தழுவியுள்ளார். அதன்பிறகு அடுத்த அனைத்து தேர்தல்களிலும் செங்கோட்டையன் வெற்றியே பெற்றுள்ளார்.

கடந்த 1991 - 1996 ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும், 2011 - 2016 ஆட்சிக் காலத்தில் விவசாயம், ஐடி, வருவாய் துறை என்று பல்வேறு துறைகளுக்கு அமைச்சராகவும் செங்கோட்டையன் இருந்துள்ளார்.

ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய நபர்
கடந்த 2016 - 2021 காலகட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் அமைச்சரவையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக செங்கோட்டையன் இருந்தார். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய நபராக இருந்த செங்கோட்டையன், ஜெயலலிதாவின் பயணத் திட்டங்களை வகுத்து வந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் மீண்டும் உள்கட்சி மோதல் வெடித்தது.

எடப்பாடி எழுச்சி செங்கோட்டையன் வீழ்ச்சி
ஓ பன்னீர் செல்வம் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தர்மயுத்தம் தொடங்கினார். அப்போது முதல்வர் பொறுப்புகளில் பரீசிலிக்கப்பட்டவர்களின் பெயர்களில் செங்கோட்டையன் பெயரும் அடிபட்டது. எனினும், எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்று அதிமுகவில் செயல்பட்டார். எனினும், எடப்பாடி பழனிசாமி எழுச்சிக்கு பிறகு செங்கோட்டையன் செல்வாக்கு குறைந்தது.

இருந்த போதிலும் இருவருக்கும் இடையே மோதல் வெளிப்படையாக வெடிக்காத நிலையில் அண்மையில், பிரிந்து சென்றவர்களை கட்சியில் இணைக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் நானே அதற்கான பணிகளை தொடங்குவேன் என்றும் பேசியிருந்தார். இதையடுத்து, செங்கோட்டையனின் கட்சி பதவிகள் பறிக்கப்பட்டது. அப்போதே அவர் கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என பேசப்பட்டது. ஆனால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை. இந்த நிலையில் தான் நேற்று பசும்பொன் தேவர் நிகழ்ச்சியில் டிடிவி, ஓ பிஎஸ்சுடன் சந்தித்திருந்ததை அடுத்து இன்று அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.

அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் நீக்கம்! எடப்பாடி பழனிசாமி அதிரடிஅதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்...
31/10/2025

அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் நீக்கம்! எடப்பாடி பழனிசாமி அதிரடி

அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சேலத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில் எடப்பாடி பழனிசாமி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து தலைமை கழக அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும் கழகத்தில் இருப்பவர்கள், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்பது தெரிந்திருந்தும் அவர்களுடன் ஒன்றிணைந்து, கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிற காரணத்தாலும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்சை சேர்ந்த கே.ஏ.செங்கோட்டையன் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அண்மைக்காலமாக கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமியால் வெளியேற்றப்பட்ட நிர்வாகிகளை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கெடுவும் விதித்திருந்தார்.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். கடந்த செப்டம்பர் மாதம் அவரது கட்சி பதவிகள் பறிப்புக்குள்ளானார். இந்த நிலையில் நேற்று பசும்பொன்னில் நடந்த தேவர் ஜெயந்திக்கு சென்ற செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி தினகரனுடன் இணைந்து தேவர் சிலைக்கு மாலை அணிவித்தார்.

அத்துடன் ஓபிஎஸ்ஸுடன் ஒரே காரில் பயணம் செய்து பசும்பொன்னிற்கு செங்கோட்டையன் சென்றார். அத்துடன் மூவரும் சேர்ந்து செய்தியாளர்களையும் சந்தித்தனர். மேலும் சசிகலாவுடனும் செங்கோட்டையன் சந்தித்து பேசியிருந்தார்.

கட்சி பதவி பறித்ததற்கு செங்கோட்டையனிடம் சசிகலா வேதனை தெரிவித்த போது கட்சியில் இருந்து நீக்கினாலும் மகிழ்ச்சிதான் என செங்கோட்டையன் கூறியிருந்தாராம்.

இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, மூவரும் துரோகிகள் என்றும் பேசி வைத்துக் கொண்டு ஒன்றாக தேவர் ஜெயந்திக்கு வந்துள்ளார்கள் என்றும் செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்க எந்த தயக்கமும் இல்லை என கூறியிருந்தார். கட்சிக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்றார்.

இந்த நிலையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடனும் கட்சி நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்தி வந்தார். செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்குவது குறித்து ஆலோசனையாக இருக்குமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் ஆலோசனை முடிந்ததும் செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளார்.

செங்கோட்டையன் தற்போது கோபிச்செட்டிபாளையம் எம்எல்ஏவாக உள்ளார். தற்போது கட்சியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டதால் வரும் தேர்தலில் அவர் அதிமுக சார்பாக போட்டியிட முடியாது. எனவே செங்கோட்டையன் தனித்து சுயேச்சையாக போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியான செங்கோட்டையன் 1977 ஆம் ஆண்டு சத்தியமங்கலத்தில் போட்டியிட்டு முதல்முறையாக எம்எல்ஏவானார் என்பது குறிப்பிடத்தக்கது. செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளதால் அவரது ஆதரவாளர்களான சத்யபாமா உள்ளிட்டோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

த.வெ.க-வின் புதிய வியூகம்: 234 தொகுதிகளை 10 மண்டலங்களாகப் பிரித்து பொறுப்பாளர்களை நியமித்த விஜய்2026 சட்டமன்றத் தேர்தலை ...
31/10/2025

த.வெ.க-வின் புதிய வியூகம்: 234 தொகுதிகளை 10 மண்டலங்களாகப் பிரித்து பொறுப்பாளர்களை நியமித்த விஜய்

2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) தலைவர் விஜய், கட்சிப் பணிகளைத் தீவிரப்படுத்தவும், கட்டமைப்பை வலுப்படுத்தவும் புதிய நிர்வாக ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.

த.வெ.க-வின் புதிய வியூகம்: 2026 தேர்தலுக்கு 10 மண்டலப் பொறுப்பாளர்கள் நியமித்த விஜய்

2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கட்சிப் பணிகளைத் தீவிரப்படுத்தும் நோக்கில், தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவர் விஜய் முக்கிய நிர்வாக முடிவை எடுத்துள்ளார். கட்சியின் செயல்பாடுகளைக் கூர்மைப்படுத்த, தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளையும் 10 மண்டலங்களாகப் பிரித்து, அவற்றிற்குப் பொறுப்பாளர்களை நியமித்துள்ளார்.

தவெக-வின் புதிய கட்டமைப்பு: 10 மண்டலங்கள், 20 பொறுப்பாளர்கள்

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளும் தலா 23 தொகுதிகளைக் கொண்ட 10 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த ஒவ்வொரு மண்டலத்திற்கும் தலா 2 பேர் வீதம், மொத்தம் 20 மண்டலப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த மண்டலப் பொறுப்பாளர்களின் முக்கிய பணி, கட்சி பணிகளை தீவிரப்படுத்துவதும், அந்தந்த மாவட்டச் செயலாளர்களின் களப்பணிகளை தொடர்ந்து கண்காணிப்பதுமாகும்.

விஜய்யின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயல்பாடு

நியமிக்கப்பட்டுள்ள இந்த 20 மண்டலப் பொறுப்பாளர்களும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்குவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இவர்கள் கட்சி மற்றும் தேர்தல் பணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பார்கள் என்றும், அதன்பிறகு தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரம் தொடர்பான ஏற்பாடுகளையும் கவனிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் மண்டலப் பொறுப்பாளர்களுக்கான இந்த நியமன அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான த.வெ.க-வின் ஆயத்தப் பணிகள் சூடுபிடித்துள்ளன.

ஓபிஎஸ், டிடிவி திமுகவின் பி டீம்..! செங்கோட்டையன் அதிமுகவில் நீக்கப்படுவாரா? இபிஎஸ் அதிரடி பதில்!ஓபிஎஸ், டிடிவி தினகரன் ...
31/10/2025

ஓபிஎஸ், டிடிவி திமுகவின் பி டீம்..! செங்கோட்டையன் அதிமுகவில் நீக்கப்படுவாரா? இபிஎஸ் அதிரடி பதில்!

ஓபிஎஸ், டிடிவி தினகரன் திமுகவின் பி டீம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற அதிமுக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதே வேளையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சசிகலா மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் எதிராக உள்ளனர்.

ஓபிஎஸ், டிடிவி, செங்கோட்டையன் ஒன்றாக சந்திப்பு

அதிமுக ஒன்றிணைய வேண்டும் ஓபிஎஸ், டிடிவி, சசிகலா மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்பட வேண்டும் என்பதை செங்கோடையன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் இன்று செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் ஒன்றாக இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர்.

இபிஎஸ் மதுரையில் பேட்டி

அப்போது அவர்கள் ''எடப்பாடி பழனிசாமியை வீழ்த்தும் வரை ஓய மாட்டோம். உண்மையான தொண்டர்கள் அதிமுக ஒன்றிணைய விரும்புகின்றனர்'' என்று தெரிவித்து இருந்தனர். இதன்பிறகு தேவர் நினைவிடம் வந்த சசிகலாவையும் ஓபிஎஸ், டிடிவி சந்தித்து பேசினார்கள். இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மதுரை கப்பலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

ஓபிஎஸ், டிடிவி திமுகவின் பி டீம்

அப்போது ஓபிஎஸ், டிடிவி, செங்கோட்டையன் ஒன்றாக இணைந்தது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த இபிஎஸ், ''அதிமுகவுக்கு அவர்கள் துரோகிகள். ஓபிஎஸ், டிவிடி இருவரும் திமுகவின் பி டீம் ஆக உள்ளனர். ஓ.பன்னீர் செல்வம் போன்ற துரோகிகளால் தான் கடந்த தேர்தலில் அதிமுக ஆட்சியை கைப்பற்ற முடியவில்லை.

திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்று கூறும் ஓபிஎஸ் எப்படி அதிமுகவுடன் ஒன்றிணைய முடியும்? பயிர் வளர வேண்டும் என்றால் களை எடுக்க வேண்டும். கட்சியில் உள்ள களை நீக்கப்பட்டு விட்டது. இப்போது அதிமுக என்னும் பயிர் செழித்து வளர்ந்து ஆட்சியை பிடிக்க போகிறது'' என்றார்.

செங்கோட்டையன் மீது நடவடிக்கை பாயுமா?

அப்போது அதிமுக ஒன்றிணைய வேண்டும் என ஓபிஎஸ், டிடிவியை சந்தித்த செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று இபிஎஸ்ஸிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், ''கட்சியின் கட்டுப்பாட்டை மீறினால் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவித்தார். செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்படுகிறார் என்ற செய்தி விரைவில் வெளியாகும் என பலரும் தெரிவித்து வருகின்றனர்.

தவெகவுடன் அதிமுக கூட்டணியா? பிள்ளையார் சுழி போட்டது ஏன்? உண்மையை உடைத்து பேசிய இபிஎஸ்!கரூர் விவகாரத்தை சிறப்பாக கையாண்ட ...
31/10/2025

தவெகவுடன் அதிமுக கூட்டணியா? பிள்ளையார் சுழி போட்டது ஏன்? உண்மையை உடைத்து பேசிய இபிஎஸ்!

கரூர் விவகாரத்தை சிறப்பாக கையாண்ட இபிஎஸ்

கரூர் கூட்ட நெரிசல் சம்பத்துக்கு பிறகு திமுக, அதன் கூட்டணி கட்சிகள் மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தவெக தலைவர் விஜய் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. ஆனால் பாஜகவும், அதிமுகவும் விஜய்க்கு ஆதரவாக நின்றன. எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கரூர் விவகாரத்தை சிறப்பாக கையாண்டார்.

இபிஎஸ் மீது தவெகவினரின் கரிசனம்

தவெகவுக்கு சில அறிவுரைகளை வழங்கிய அவர் காவல்துறை சரியாக பாதுகாப்பு வழங்காததே கரூர் கூட நெரிசலுக்கு காரணம் என திமுக அரசை குற்றம்சாட்டினார். இதானல் இபிஎஸ் மீது தவெக தொண்டர்களுக்கு கரிசனம் கூடியது. சமூக வலைத்தளங்களில் இபிஎஸ்ஸை புகழந்து தள்ளிய அவர்கள் அவர் பிரசாரம் செய்யும் இடங்களில் எல்லாம் தவெக கொடியுடன் சென்றனர்.

பிள்ளையார் சுழி போட்ட எடப்பாடி

மேலும் விஜய் இபிஎஸ்ஸுடன் கூட்டணி வைக்க வேண்டும் எனவும் ஒருசில தவெக தொண்டர்கள் தெரிவித்து வந்தனர். அதிமுக பிரசார கூட்டத்தில் தவெக கொடி பறந்த நிலையில், 'வலிமையான கூட்டணி அமைய உள்ளது. பிள்ளையார் சுழி போட்டாச்சு' என தவெக கொடியை பார்த்து இபிஎஸ் சொன்னது அதிமுகவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியது. இதனால் அதிமுக, தவெக கூட்டணி உறுதியானது என பலரும் கருத்து கூறி வந்தனர்.

தவெக திட்டவட்டமாக மறுப்பு

ஆனால் அதிமுகவுடன் கூட்டணி தொடர்பாக விஜய்யோ, தவெகவின் மற்ற தலைவர்களோ கருத்துகள் ஏதும் தெரிவிக்காமல் இருந்து வந்தனர். இதற்கிடையே நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தவெகவின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூகஊடகப் பிரிவு துணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், ''ஒரு மாதத்துக்கு முன்பு (கரூர் சம்பத்துக்கு முன்பு) தவெக எந்த நிலைப்பாட்டில் இருந்ததோ, அந்த நிலைப்பாடு இப்போதும் தொடர்கிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை'' என்று தெரிவித்தார். அதாவது அதிமுக, தவெக கூட்டணி இல்லை என்று அவர் தெளிவுப்படுத்தினார்.

கூட்டணி குறித்து பேசவில்லை

இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரை கப்பலூரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம், அதிமுகவுடன் தவெக கூட்டணி வைக்க போகிறதா? என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

இதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, ''அதிமுக இதுவரை தவெகவுடன் கூட்டணி குறித்து பேசவில்லை. தவெகவும் எங்களுடன் கூட்டணி குறித்து பேசவில்லை. ஊடகங்கள் தான் இதுகுறித்து தவறாக பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.'' என்று தெரிவித்தார்.

பிள்ளையார் சுழி குறித்து விளக்கம்

மேலும் அதிமுக கூட்டத்தில் இருந்த தவெக கொடியை பார்த்து 'கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போட்டாச்சு' என தான் பேசியது குறித்து விளக்கம அளித்த இபிஎஸ், ''அதிமுக கூட்டத்தில் தவெக கொடியுடன் அக்கட்சி தொண்டர்கள் இருந்தனர். அவர்கள் ஆரவாரமாக இருக்கின்றனர்.

குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் இருந்து எழுச்சி பெறுவோம். தொண்டர்கள் அதற்கு பிள்ளையார் சுழி போட்டு விட்டனர் என்று சொன்னேன். ஆனால் அதை நீங்கள் பெரிதாக பேசி விட்டீர்கள். கூட்டணி குறித்து அந்த கட்சி தலைமை தானே முடிவு எடுக்கும்'' என்று கூறினார்.

திமுகவில் யாருக்கு கிடைக்கும் ஆம்பூர்..? மாற்றத்தை நோக்கி காத்திருக்கும் நிர்வாகிகள்..! ஆளை மாற்றுகிறதா அறிவாலயம்..?திரு...
31/10/2025

திமுகவில் யாருக்கு கிடைக்கும் ஆம்பூர்..? மாற்றத்தை நோக்கி காத்திருக்கும் நிர்வாகிகள்..! ஆளை மாற்றுகிறதா அறிவாலயம்..?

திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் நான்கு சட்டமன்ற தொகுதிகளில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, ஆம்பூர் தொகுதிகளை தன் வசமாக்கியது திமுக. கடந்த தேர்தலில் வாணியம்பாடி தொகுதி கூட்டணிக்கு ஒதுக்கீடு செய்ததால் திமுக தோற்றது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் நான்கு சட்டமன்ற தொகுதிகளில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, ஆம்பூர் தொகுதிகளை தன் வசமாக்கியது திமுக. கடந்த தேர்தலில் வாணியம்பாடி தொகுதி கூட்டணிக்கு ஒதுக்கீடு செய்ததாலும் அந்த கட்சி ஏணி சின்னத்தில் போட்டியிட்டதாலே திமுக தோற்றது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டிருந்தால் வாணியம்பாடியும் திமுக வசமாகியிருக்கும் என அப்போதே இஸ்லாமியர்கள் மத்தியில் விமர்சனம் எழுந்தது.

அதுபோல்தான் ஆம்பூர் தொகுதியும், இங்கு திமுகவே இடைத்தேர்தல், 2021 பொதுத்தேர்தல் என தொடர்ந்து போட்டியிடுவதால் உதயசூரியன் வெற்றி பெற்று வருகிறது. இந்த முறையும் இங்கு உதயசூரியன் சின்னத்திலே போட்டியிட வேண்டுமென திமுக கூட்டணி கட்சியினரின் விருப்பமாக உள்ளது. திமுக சிட்டிங் எம்எல்ஏ வில்வநாதன் மீண்டும் மூன்றாவது முறையாக போட்டியிட்டால் வாய்ப்பு எப்படி இருக்கும்? இவரைத் தவிர யார் யாருக்கு இங்கு வாய்ப்புள்ளது என்று தொகுதி உள்ள திமுகவினரிடம் விசாரித்தபோது பலரும் வில்வநாதனுக்கு எதிராகவே கொதித்து எழுந்தனர். தொகுதி மக்களும் கொட்டித் தீர்த்து விட்டனர்.

திமுகவிலிருந்து வைகோ பிரிந்து சென்றபோது (நாயுடு) சாதி உணர்வோடு மதிமுகவுக்கு சென்ற வில்வநாதன் மீண்டும் 1996-ல் திமுகவுக்கு திரும்பி ஊராட்சி மன்ற தலைவரானார். பேர்னாம்பட்டு ஆசிரியர் கோவிந்தனுக்கு சில வேலைகள் செய்து ஒன்றிய செயலாளர் பதவியை பிடித்தார். அப்படியே இராணிப்பேட்டை காந்தியிடம் நெருக்கமாகி 2011-ல் மனைவி பத்மாவதியை யூனியன் சேர்மன் ஆக்கினார். அதனைத்தொடர்ந்து மாவட்டம் பிரிந்து திருப்பத்தூர் மாவட்டம் உதயமானபோது 2016-ல் ஆம்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் பாலசுப்பிரமணிக்கு ஆர்வமாக தேர்தல் வேலை செய்தது தெரிந்து திமுக தலைமை நடவடிக்கை எடுக்க தயாராக, இராணிப்பேட்டை காந்தியை வைத்து தப்பித்து விட்டார்.

டிடிவி.தினகரன் பக்கம் போனதால் ஆம்பூர் பாலசுப்பிரமணி இரண்டே ஆண்டில் பதவி இழக்க, இடைத்தேர்தலில், நாயுடு நின்ற தொகுதியில் நாயுடுவுக்கே சீட் என வில்வநாதன் சவுண்டு விட, பின்னணியில் இராணிப்பேட்டை காந்தியும், அணைக்கட்டு நந்தகுமாரும் துணைக்கு நின்றார்கள். அப்போது அணைக்கட்டு நந்தகுமாருடன சிறிய ஒப்பந்தம்கூட போட்டுக்கொண்டார். இடைத்தேர்தல் உனக்கு, அடுத்து வரும் பொதுத்தேர்தலில் எனக்கு என்பதுதான் அந்த ஒப்பந்தம். இடைத்தேர்தல் பதவிக்காலம் முடிந்து மீண்டும் வந்த சட்டமன்ற தேர்தலில் வேட்டியை மடிடததுக்கட்டிய வில்வநாதன், ‘‘பக்கத்து மாவட்டகாரர் ஆம்பூருக்கு வரக்கூடாது. மண்ணின் மைந்தருக்குதான் வாய்ப்பு தரவேண்டும்’’ என்று கோஷம் போட ஆரம்பித்தார்.

அதற்கு ஆதரவாக பொதுச் செயலாளர் துரைமுருகனும், தொழிலதிபர் பரிதா பாபுவும் இருந்தனர். 2021-ல் மீண்டும் ஆம்பூர் தொகுதிக்கு எம்எல்ஏ சீட்டு வாங்கி மீண்டும் வென்றவுடன், திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் எ.வ.வேலுவுடன் ஐக்கியமாகிவிட்டார் எம்.எல்.ஏ வில்வநாதன். மொழி (தெலுங்கு) உணர்வால் எ.வ.வேலுவையும் , கே.என்.நேருவையும், நெருக்கமாக்கிக்கொண்டு இருவரின் பக்க பலத்தில் ஆம்பூர் தொகுதியில் உள்ள திமுகவினரை ஒருவழி பண்ணிவிட்டார் வில்வநாதன்.

அடுத்து வந்த உள்ளாட்சி தேர்தலில் மாதனூர் யூனியனில் மச்சானின் மனைவி சாந்தியை துணை சேர்மன் ஆக்கியதோடு, மாவட்ட துணை செயலாளராகவும் ஆக்கிவிட்டார். மச்சான் சீனிவாசனை பத்து ஊராட்சிக்கு ஒன்றிய செயலாளராக்கிவிட்டார். மாமன் , மச்சான் வெளியே மட்டும் எதிரி போல காட்டிக் கொள்வார்கள். வில்வநாதனின் இந்த பாலிடிக்ஸை பக்கத்திலிருந்து வேடிக்கை பார்த்த மகன் அசோக்குமார், அப்பாவிடமிருந்த எம்எல்ஏ பவரை பிடுங்கி கொண்டு கையெழுத்து போட மட்டுமே பயன்படுத்தி வருகிறார்.

அப்புறமென்ன, ஆம்பூர் தொகுதியில் அசோக்குமார் மயமானது. காவல்நிலையம், வருவாய்த்துறை, நகராட்சி, யூனியன், பத்திர பதிவு அலுவலகம் மணல் டெண்டர் இதர கனிமவளங்கள் என அனைத்தும் ஆக்டிங் எம்எல்ஏ அசோக்குமார் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது. சட்டப்பூர்வமாக இருந்தாலும் சரி, சட்டத்துக்கு புறம்பாக இருந்தாலும் சரி, மகன் அசோக்குமாரைத்தான் தொடர்புகொள்ள வேண்டும். ஆம்பூர் தொகுதியில் உள்ள திமுகவினர் பொதுமக்கள் அனைவரும் தன்னை சின்னவர் என்று அழைக்குமாறு வாய்மொழி உத்தரவு போட்டவர்தான் அசோக்குமார்’’ என்கின்றனர்

அப்படி வரும் பணத்தை வில்வநாதனோ, ஆக்டிங் எம்எல்ஏ அசோக்குமாரோ வீணடிக்காமல் ஆம்பூர் தொகுதிக்குள் நிலங்கள், சுற்றியுள்ள பகுதிகளில் எங்கு பிளாட் போட்டாலும் முதல் ஆளாக ஆஜராகி டோக்கன் அட்வான்ஸ் போட்டு இரண்டு பிளாட் வாங்கி விடுவார்கள். இதையெல்லாம்விட சென்னை , பெங்களுர்ருவில் சொத்துக்கள் ஏராளமாய் வாங்கி குவித்திருக்கிறார்கள். தன் மகனை ஒன்றிய செயலாளர் பதவியில் உட்கார வைத்துவிட்டு, இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் பிரிக்கும்போது அதில் வாணியம்பாடி, ஆம்பூர் தொகுதிகளை இணைத்து புதியதாக உருவாகும் மாவட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஆக்கிவிட வேண்டும் என்பதே வில்வநாதனின் தீராத ஆசை. அதற்குண்டான வேலைகளை பார்த்தவரின் கனவு காணல் நீராகிபோனது.

திமுக நிர்வாகிகளை தன்னுடன் நெருங்க விடுவதில்லையே தவிர, அதிமுக , பாஜகவிலுள்ள தன் சமுதாயா (நாயூடு) உறவுகளோடு நட்பு பாராட்டுகிறார். தன்னை எதிர்த்து வளரும் ஆம்பூர் தொகுதிக்குட்பட்ட ஆலங்காயம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஞானவேலனோடு நட்புறவு பாரட்டியும், அகரம்சேரி சண்முகம் மகன் ஒன்றிய சேர்மன் சுரேஷ்குமாரையும் பொறுப்பு அமைச்சர் எ.வ.வேலுவிடம் தப்பு தப்பாக வத்தி வைத்து தனக்கு எதிராக இவர்களை வளரந்துவிடாதவாறு பார்த்துக் கொண்டார். தனது 6,500 மதிப்புள்ள செருப்பை சேற்றில் படாதவாறு திமுக பட்டியலின ஒன்றிய செயலாளரை விட்டு கையில் தூக்க வைத்த சம்பவத்தால் பட்டியலின மக்களிடையே கடும் கோபத்திற்கு ஆளாகினார்.

தனது தொகுதிக்குட்பட்ட ஊராட்சி மன்ற தலைவவர்களிடம் 60% கமிஷன் கேட்டு வெளியான ஆடியோ, 3 சென்ட் இடத்தை அபகரித்துக் கொண்டார் எம்எல்ஏ என கலெக்டர் அலுவலகத்தில் நந்தன் என்பவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம், நிலம் வாங்கியவருக்கு தெரியாமலே விற்ற வரை மிரட்டி, தனது மனைவி பெயரில் நிலத்தை கிரையம் செய்து கொண்ட விவகாரம், இப்படி எம்எல்ஏ வில்வநாதன் வில்லங்கநாதன் ஆனதை தலைமை கூப்பிட்டு கடுமையாக எச்சரித்ததால் தற்போது பவ்யமாக செயல்பட்டு வருகிறார் என்கின்றார்கள்

தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் மறந்துபோச்சி, தொகுதிக்கென்று எம்எல்ஏ அலுவலகம் இல்ல, சொல்லும்படியான திட்டங்கள் எதுவும் கொண்டுவரல, எப்படி ஓட்டு கேட்கபோவதென்று வெறுப்பின் உச்சத்தில் ஆம்பூர் திமுகவினர் இருக்க மூன்றாவது முறையும் எனக்குதான் எம்எல்ஏ சீட்டு என வலம் வரும் வில்வநாதன் , தொகுதிக்குள் தனியாக நடந்து போகமுடியாது என்பதே தற்போது அவருடைய ஒரிஜினல் செல்வாக்காக இருக்கிறது.

அரக்கோணம் எம்பி ஜெகத்ரட்சகன் தீவிர ஆதரவாளரும் , ஆலங்காயம் மேற்கு ஒன்றிய செயலாளருமான ஞானவேலன், தொழிலதிபர் ஆர்.டி.சரவணன், மாதனூர் யூனியன் சேர்மன் சுரேஷ்குமார், ஆம்பூர் நகரமன்ற தலைவர் ஏஜாஸ் அகமது உள்ளிட்டவர்கள் எம்எல்ஏ சீட் தனக்குதான் என்கிற நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். ஆனால், ஞானவேலனுக்கு தான் சீட் உறுதி என்கின்றனர் சீனியர் உடன்பிறப்புகள். அதிமுகவில் தொகுதி மாறி வரும் மாஜி மந்திரி நிலேபர் கபில், பொறியாளர் வெங்கடேசன், கூட்டணியில் இணைந்தால் தேமுதிகவை சேர்ந்த எல்.கே.சுதீஷ் ஆகியோரில் ஒருவருக்கு வழங்கப்படலாம் எனக்கூறப்படுகிறது. ஆம்பூர் தொகுதியில் ஆதிதிராவிடர்களும், இஸ்லாமியர்களும் வெற்றியை தீர்மானிக்க கூடியவர்களாக இருக்கின்றார்கள். இவர்கள் திமுக கூட்டணிக்கு ஆதரவாக இருப்பதால் திமுகவுக்கு பலம் என்கின்றனர்.

இந்த முறை திமுகவில் ஆம்பூர் தொகுதி யாருக்கு கிடைக்கப்போகிறதோ..?

Address

Anna Nagar West
Chennai
600040

Alerts

Be the first to know and let us send you an email when News4 Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News4 Tamil:

Share