01/08/2026
டாஸ்மாக் மதுபான கொள்முதல் மற்றும் டெண்டர்களில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படும் வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜி, முன்னாள் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது. முன்னாள் மண்டல மேலாளர்கள் ராமதுரை, முருகன், பன்னீர்செல்வம் மற்றும் செந்தில் பாலாஜியின் முன்னாள் தனி உதவியாளர் பாஸ்கர் ஆகியோரும் வழக்கில் இடம்பெற்றுள்ளனர்.
2020 முதல் 2025 வரை விதிமுறைகளை மீறி அதிகாரிகளுடன் இணைந்து ரூ.17.27 கோடி முறைகேடு நடந்ததாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்த வழக்கில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. விசாரணை ஆரம்ப நிலையில் இருப்பதால், ரூ.100 கோடி வரை முறைகேடு நடந்திருக்க வாய்ப்புள்ளதாகவும், விரிவான விசாரணை அவசியம் என்றும் அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் வாதிட்டது. மேலும், முறைகேடு மற்றும் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு தொடர்பாக ஆதாரங்கள் உள்ளதாகவும், செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்கத் தேவையுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அதேநேரத்தில், முதல் தகவல் அறிக்கையில் செந்தில் பாலாஜிக்கு எதிராக நேரடி குற்றச்சாட்டு இல்லை; டாஸ்மாக் அதிகாரிகள் செய்ததாகக் கூறப்படும் செயல்களுக்கு செந்தில் பாலாஜிக்கு தொடர்பில்லை என்று அவரது தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
டாஸ்மாக் முறைகேடு வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய கூட்டாளிகளாகக் கூறப்படும் கார்த்திக் மற்றும் ரமேஷை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்துள்ளனர்.
முன்னதாக, தவெக ஆட்சிக் கவிழ்ப்பு வழக்கில் ஜாமீனில் வெளியே வந்திருந்த இருவரையும், தற்போது டாஸ்மாக் முறைகேடு தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் மீண்டும் கைது செய்துள்ளனர்.