22/04/2026
வாராரு வாராரு நம்ம தளபதி (மறுபடியும்) வாராரு!
கள்ளழகரை வரவேற்கத் தயாராகிக் கொண்டிருக்கும் மதுரை மறுபடியும் எம்.எல்.ஏ. ஆக தேர்வாகப் போகும் கோ.தளபதியை வரவேற்று வாழ்த்தவும் தடபுடலாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது!
மதுரை வடக்கு தொகுதியில் திரும்பும் பக்கமெல்லாம் தளபதியின் கொடியே ஏறுமுகத்தில் இருக்கிறது. வாக்குப்பதிவுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் அத்தனையிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் திமுகவின் தளபதிக்கே வெற்றி வாய்ப்பு என உறுதிசெய்யப்பட்டுள்ளது.
எளிமையானவர், பழகுவதில் இனியவர், பந்தா இல்லாதவர், நினைத்தவுடன் சந்திக்கலாம்… என்ற நற்பெயரை தொகுதி மக்களிடம் பெற்றிருக்கும் தளபதியின் உடலில் ஓடுவது திமுக ரத்தம்.
“எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. அப்போ எனக்கு ஏழு வயசு. திருப்பரங்குன்றத்தில் திமுக மாநாடு நடந்துச்சு. கருப்பு சிகப்பு பேட்ஜ் குத்திட்டு மாநாட்டுக்குப் போனேன். அப்ப இருந்தே என் அரசியல் பயணம் ஆரம்பிச்சிடுச்சுன்னு சொல்லலாம். எங்க அப்பாவும் திமுக காரர். தலைவர் கலைஞர் அந்தக் காலத்துலயே எங்க வீட்டுக்கு வந்திருக்கார். இப்ப எனக்கு எழுபது வயசாச்சு. ஒதுங்கி, ஓரமா உட்கார்ந்துடலை. வார்டு வார்டா ஊர் சுத்தி இருக்கேன். கடை கண்ணிக்கு போனா, எல்லோரையும் பேர் சொல்லி கூப்புடுற அளவுக்கு தெரிஞ்சு வச்சிருக்கேன்..” என்று கூறும் தளபதி, இருபது வயது இளைஞரின் வேகத்துடன்தான் தொகுதியை வலம் வருகிறார்.
“வாரத்துல நாலு நாள் எம்.எல்.ஏ. ஆபிஸ்ல உட்கார்ந்து, நேரம் ஒதுக்கி தொகுதி மக்களை சந்திச்சிருக்கேன். பிரச்னைன்னு என்னை தேடி வந்தவங்களுக்கு நல்லதை செஞ்சு கொடுத்திருக்கேன். தொகுதி மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கு. இந்த முறை அவற்றையும் செஞ்சு கொடுத்துடுவேன்..” என்றார்.
“நிரந்தர எம்.எல்.ஏ.ன்னு பெயரெடுக்கத் திட்டமா?” என்றதும், சிரித்தார் தளபதி.
“பிரதிபலன் பார்த்து செய்யும் வேலை இல்லை இது. நீங்களே பார்க்குறீங்கதானே… பிரசாரத்துக்கு போறப்ப தொகுதி மக்கள் எவ்வளவு அன்பை காட்டுறாங்க. இப்பவும் நான்தான் எம்.எல்.ஏ.னு முடிவு செஞ்சு, பதவியேற்கிறதுக்கு முன்னாடியே என்கிட்ட கோரிக்கை மனுக்களையும் பலர் கொடுக்கறாங்க. இந்த அளவுக்கு என் மேல நம்பிக்கை வச்சிருக்கும் மக்களுக்கு நல்லது செய்றதை என் கடமையா பார்க்குறேன். அது எனக்கு மகிழ்ச்சி கொடுக்குது. அந்த மகிழ்ச்சிதான் உற்சாகத்துடன் என்னை இப்போதும் வச்சிருக்கு..” என்றார்.
“பதவியேற்றதும் என்னவெல்லாம் பண்ணப்போறீங்க?”
“லிஸ்ட் போட்டு எழுதி வச்சுட்டேன். அதை சொல்லித்தான் வாக்கு கேட்கிறேன்” என்று சொன்னவர், நம் கையில் ஒரு துண்டுப்பிரசாரத்தைக் கொடுத்தார். ‘சொன்னதைச் செய்தோம்’ என்று இதுவரை தொகுதிக்குச் செய்தவற்றைப் பட்டியலிட்டிருக்கிறார். ‘செய்வதைச் சொல்வோம்’ என்று இம்முறை செய்யத் திட்டமிட்டிருப்பவற்றை பட்டியலிட்டிருக்கிறார். பார்க்கும்போதே அழகாக இருக்கிறது.
“மதுரை வடக்கு தொகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்க்கையும் அழகாகும். தொகுதி மக்களை, கொடுத்து வச்சவங்கன்னு எல்லோரும் சொல்லணும், அந்த அளவுக்கு தொகுதியை மாத்திக்காட்டணும். பராமரிக்கப்படாம இருந்த வண்டியூர் பூங்காவை எப்படி மாத்தி இருக்கேன் என்பது மதுரை மக்களுக்குத் தெரியும். அடுத்த அஞ்சு வருஷத்துல இன்னும் பல பூங்காக்களை சீரமைப்பேன். பூங்கா நகரம்னு பெங்களூரை சொல்வாங்க, இனி மதுரை வடக்கையும் சொல்ல வைப்பேன். எல்லா இடத்திலும் தரமான நடை பயிற்சித் தளம் அமைப்பேன். நல்ல காத்தும், நடை பயிற்சியும் கிடைச்சா ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உத்தரவாதம். மிக முக்கியமா, பாதாள சாக்கடை திட்டத்தை செஞ்சு முடிப்பேன். மேம்பாலம், தெருக்களின் மூலை முடுக்கெல்லாம் விளக்கு வசதி, சிசிடிவி வசதி.. இப்படி இன்னும் பல திட்டங்கள் இருக்கு. பார்க்கத்தானே போறிங்க இந்த தளபதியோட செயல் வீச்சையெல்லாம்…”
- செயல் வீரராகப் புன்னகைக்கிறார் வெற்றித் தளபதி.