15/07/2025
காமராஜர் ஆட்சியை இனி யாராலும் தர முடியாது!
காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் கே.ஜி.ரமேஷ்குமார் நெகிழ்ச்சி
காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் கே.ஜி.ரமேஷ்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “காமராஜர் ஆட்சியமைப்போம் என அனைவரும் அறைகூவல் விடுத்தாலும், காமராஜரின் ஆட்சி தனித்துவமானது. யாராலும் இனி அப்படி ஒரு நேர்மையான, சுதந்திரமான, வெளிப்படைத்தன்மை கொண்ட ஆட்சியை கட்டியமைத்துவிட முடியாது!
1954 இல் கர்மவீரர் காமராஜர் அவர்கள் முதல்வரானார். 1963 வரை அப்பதவியில் இருந்தார். நிதிநிலையைக் காரணம் காட்டி கல்விக்கு நிதி மறுக்கப்படக் கூடாது என்பதற்காகவே ஒரே நபரை (சி.சுப்பிரமணியம்) கல்வி அமைச்சராகவும், நிதி அமைச்சராகவும் ஆக்கினார். மாநில பட்ஜெட்டில் 30% கல்விக்கு ஒதுக்கப்பட்டது. அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் ஊர் ஊராக, கிராமம் கிராமமாகச் சென்று குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டியதன் அவசியத்தை மக்களிடம் பிரச்சாரம் செய்ய உத்தரவிட்டார்.
காமராஜர் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற போது தமிழகத்தின் 15,000 கிராமங்களில், 6,000 கிராமங்களில் மட்டுமே ஏதேனும் ஒரு பள்ளியாவது இருந்தது. பள்ளிக்குச் செல்ல வேண்டிய வயதில் இருந்த சிறார்களில் 50 சதவீதத்தினர் மட்டுமே பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தார்கள். வறுமையில் உழன்ற பெற்றோர் பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாமல் இருந்ததே இதற்குக் காரணம். இதனால் 1960-ல் அரசுப் பள்ளிகளில் தொடக்கக் கல்வி இலவசமாக்கப்பட்டது.
1964-ல் 11-ம் வகுப்புவரை கல்வி இலவச மாக்கப்பட்டதற்கும் அவரது ஆட்சியில் போடப்பட்ட அடித்தளங்களே காரணம். 1957இல் 15,800 ஆக இருந்த தொடக்கப் பள்ளிகளின் எண்ணிக்கை 1962 இல் 29,000 ஆக உயர்ந்தது. 1957-ல் 814 ஆக இருந்த உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 1962-ல் 1995 ஆனது. பள்ளியில் பயின்றுகொண்டிருந்த மாணவர்களின் எண்ணிக்கை இந்தக் காலகட்டத்தில் 19 லட்சத்திலிருந்து 36 லட்சமாக அதிகரித்தது.
இவை தவிர காமராஜரின் ஆட்சிக் காலத்தில்தான் ஓராசிரியர் பள்ளிகள் உருவாக்கப்பட்டன. பள்ளிக்கு வர முடியாத மாணவர்களுக்கு, அவர்கள் இருக்கும் இடம் தேடி ஆசிரியரே சென்று கல்வி கற்பிக்கவே இந்த ஓராசிரியர் பள்ளிகள். அதேபோல் அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்கும் நடைமுறையும் தொடங்கப்பட்டது. 1962-ல் அரசுப் பள்ளிகளில் இலவச மதிய உணவுத் திட்டத்தை காமராஜர் அறிமுகப்படுத்தினார். சென்னையில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், பின்னர் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இந்தத் திட்டத்துக்காக அந்தக் காலகட்டத்தில் ரூ.1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.அதேபோல் மாணவர்களுக்கிடையே சமத்துவத்தைப் பேண அரசுப் பள்ளிகளில் இலவச சீருடையை காமராஜர் அறிமுகப்படுத்தினார்.
கல்வித்துறை மட்டுமல்லாது, பொதுவாழ்வில் நேர்மை, அரசியலில் தூய்மை என்பதை இறுகப்பற்றி வாழ்ந்தவர் கர்ம வீரர். தமிழகத்தின் விவசாயத்தைக் காக்க ஏராளமான அணைக்கட்டுகள், விவசாயத் திட்டங்கள் என இன்னும் பலதலைமுறைகளும் நினைவுகூறத் தக்கப் பணிகளைச் செய்தவர் கர்ம வீரர் காமராஜர். அவரிடத்தை இனி எவராலும், எப்போதும், எந்த ஆட்சியாலும் நிரப்பிவிட முடியாது. அவர் கனவுகளைச் சுமந்து அதை நடைமுறைப்படுத்தும் லட்சியத்தோடு பயணிப்போம்.”இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.