13/08/2025
கரிகாலன் கல்லணையைக் கட்டியதற்கும்,
கரிகாலனது இமயப்படையெடுப்பிற்கும் நேரடியான கல்வெட்டு, செப்பேடு ஆதாரங்கள் உண்டா.?
இக்கேள்விகளுக்கானப் பதிலை பலமுறை விளக்கமாகவும் விரிவாகவும் எடுத்துரைத்த போதும் மீண்டும் ஒருமுறை சுருக்கமாகப் பார்ப்போம்..
சோழர்கள் செப்பேடுகள் அனைத்தும் கரிகாலனை காவிரி ஆற்றுடன் தொடர்புபபடுத்தியே பதிவுசெய்கின்றன.
காவிரியின் கரைகளை உயர்த்திய கரிகாலன். காவிரியின் கரைகளை உயர்த்தி வேளாண்மையைப் பெருக்கிய கரிகாலன். இந்த செய்திகள் திரும்ப திரும்ப அனைத்துச் செப்பேடுகளிலும் இடம் பெறும்.
சோழர்காலக் கல்வெட்டுகள் காவிரியை கரிகால்ச்சோழப் பேராறு என்று அழைக்கின்றன. அந்த காவிரி ஆற்றின் ஒரு குறிப்பிட்டப் பகுதியை கரிகாலக்கரை என்றழைக்கின்றன.
செப்பேடுகள் சொல்லும் கரிகாலன் செய்த கரையை, கல்வெட்டுகள் கரிகாலக் கரை என்று பெயர் சூட்டுகிறது.
இங்குதான் ஐயம் ஏற்பட்டது.
காவிரியாற்றின் இருபக்கக் கரைகள்தானே உயர்த்தப்பட்டது. ஆற்றின் குறுக்கே அணை அல்லது தடுப்பு கட்டிய செய்தி எங்கே உள்ளது.?
இதற்கானப் பதில் செப்பேடுகளிலேயே உள்ளது.
அதிவேகமாக பாய்ந்து செல்லும் காவிரியை தடுத்து நிறுத்தி அதை கட்டுப்படுத்தினால்தானே பாசனத்திற்குப் பயன்படுத்தமுடியும். இருபக்க கரைகளை உயர்த்தி ஆற்றின் குறுக்கே தடுப்பு ஒன்றை அமைத்தால்தானே அதிவேக நீரைக் கட்டுப்படுத்தமுடியும்.? அந்தத் தடுப்புதான் கல்வெட்டுகள் கூறும் கரிகாலக்கரை. இன்றைய கல்லணை.
இதை எவ்வாறு உறுதி செய்யலாம்.?
முதலாம் பராந்தகனின் வேளஞ்சேரி செப்பேடு. வடமொழிப் பகுதியின்8ஆவது சுலோகம். கரிகாலனைப்பற்றிக் கூறும் போது..
"காவேரி தட யுக்மா ருத்தே ஸலிலா ஜாதா சாரஜ்ஞா "
இந்த வரிகளுக்கான தமிழ் மொழிபெயர்ப்பை சோழர் செப்பேடுகள் நூல் எழுதிய பேராசிரியர் சங்கரநாரயணன் அவர்கள் அழகாக எடுத்துரைக்கிறார்.
" காவிரியை இருகரைகளுக்குள் அடங்கிய நீருள்ளனவாய் செய்த கரிகாலன் "
இச்செப்பேட்டை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடுகிறார் தொல்லியல் அறிஞர் நாகசாமி. நூலின் பெயர்
Tiruttani and velachery copper plates "
இவர் இந்த சுலோகத்தை இவ்வாறு மொழிபெயர்க்கிறார்.
"In that family took place the birth of Karikala Cholendra - the water-course of the river Kaveri, was controlled by the embankments on either side "
என்று பதிவு செய்கிறார்.
Controlled by embankments
என்று உறுதி செய்கிறார்.
Embankment என்றால்
கட்டுக்கரை, அணைக்கரை, தடுப்பணை என்று பொருள்கொள்ளமுடியும்.
ஆகவே.. செப்பேடு சொல்லும் செய்தி- காவிரி நீரை கரைகட்டி கட்டுப்படுத்தினான் கரிகாலன். இந்தக் கரைதான் கல்லணை.
இரண்டாவது கேள்வி.
கரிகாலனின் இமயப் படையெடுப்பிற்கு சான்று உண்டா.?
இதே செப்பேடு அந்த சான்றைத் தருகிறது.
முதல் வரி இவ்வாறு ஆரம்பிக்கிறது.
" ப்ராலேயாத்ரி தடேஷூ "
பனிமலையில் தனது தடத்தைப் பதித்த கரிகாலன்.
ஆகவே ---
கரிகாலன் கட்டியக் கல்லணைக்கும் அவரது வடபுல இமயப் படையெடுப்பிற்கும் நேரடியான தொல்லியல் சான்று உள்ளது.
=========================
அன்புடன்..
மா.மாரிராஜன்.