
05/07/2025
இந்த ஆண்டிற்கான தகைசால் தமிழர் விருதுக்குப் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தேர்வு!
மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து!!
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் வாழ்த்துச் செய்தி:
தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்திடும் வகையில் ஆண்டுதோறும் ‘தகைசால் தமிழர் விருது’ வழங்கப்பட்டு வருகிறது. இதுகாறும் இவ்விருது விடுதலைப் போராட்ட வீரர்கள் தோழர் சங்கரய்யா, தோழர்.ஆர்.நல்லகண்ணு, ஆசிரியர் திரு. கி.வீரமணி மற்றும் இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வரிசையில், 2025ஆம் ஆண்டுக்கான ‘தகைசால் தமிழர் விருது’க்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேரா.கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்விருதிற்குப் பேரா.கே.எம்.காதர் மொகிதீனை தேர்வு செய்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பேரா. கே.எம்.காதர் மொகிதீன், மனிதநேய பண்பாளர், பழகுவதற்கு இனிமையானவர், ஆரம்பக் காலம் முதலே மனிதநேயத்துக்கும் மதநல்லிணக்கத்துக்கும் தம்மை அர்ப்பணித்துக் கொண்டு செயலாற்றியவர்.
இளம்வயது முதல் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, சிறுபான்மையின முஸ்லிம்களின் உரிமைக்காக நாடாளுமன்றம் வரை குரல் கொடுத்தவர். 80 வயதைக் கடந்தும் தொய்வில்லாமல் சமுதாயப் பணி ஆற்றிவரும் பேரா.கே.எம்.காதர் மொகிதீன் இவ்விருதுக்கு மிகவும் பொருத்தமானவர்.
இப்படிக்கு
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர் மனிதநேய மக்கள் கட்சி
#தகைசால்_தமிழர்விருது