01/08/2026
குவைத்தின் ஜலீப் அல்-ஷுயூக் பகுதியில் நடைபெற்ற சோதனையில் இதுவரை 1253 பேர் கைதாகியுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது:
குவைத் காவல்துறை மற்றும் பிற துறைகளை சேர்ந்த அதிகாரிகள் ஒருங்கிணைப்பில் ஜலீப் அல்-ஷுயூக் பகுதியில் நடைபெற்று வரும் விரிவான பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பாதுகாப்பு காரணங்களுக்காகவும், குடியிருப்பு மற்றும் தொழிலாளர் சட்டங்களை மீறியதற்காகவும் தேடப்பட்டு வந்த 1,253 நபர்களை கைது செய்ததாக உள்துறை அமைச்சகம் இன்று(01/08/26) சற்றுமுன் அறிவித்துள்ளது. முதல் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் ஃபஹத் யூசுஃப் சவுத் அல்-சபாவின் வழிகாட்டுதலின் கீழும், சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளுடன் ஒருங்கிணைந்தும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இந்த சோதனையில் திருமணத்திற்குப் புறம்பாகப் பிறந்த 36 குழந்தைகள் கண்டறியப்பட்டு, அவர்கள் தங்கள் தாய்மார்களுடன் கூடுதல் நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்தது. குவைத் நகராட்சி 777 விதிமீறல்களை பதிவு செய்தன, அத்துடன் கைவிடப்பட்ட 27 வாகனங்களை கைப்பற்றியது. மேலும் கைவிடப்பட்ட பிற 64 வாகனங்களில் எச்சரிக்கை ஸ்டிக்கர்களை ஒட்டியதுடன் தூய்மைப் பணிகளும் மேற்கொண்டு வருகின்றன.
அதேபோல் சட்டவிரோதமான 1200 குடியிருப்புகளின் மின் இணைப்பைத் துண்டித்தன, இதன் விளைவாக, மின்சாரம், நீர் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் ஃபர்வானியா மாகாணத்தில் மின்சாரப் பயன்பாட்டை 60 சதவீதம் குறைத்துள்ளது. பொதுப்பணி அமைச்சகம் 1,432 பாழடைந்த வீடுகளை அடையாளம் கண்டது, 20 சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகளை நிறுத்தியது மற்றும் அப்பகுதி தெருக்களில் ஏற்பட்ட 60 கழிவுநீர் பெருக்கெடுப்புகளுக்கு
தீர்வும் கண்டுள்ளது. வர்த்தகம் மற்றும் தொழில்த்துறை அமைச்சகம் 256 விதிமீறல் அறிக்கைகளையும் 10 மூடல் உத்தரவுகளையும் பிறப்பித்தது. சுகாதார அமைச்சகம் 784 நபர்களுக்கு சிகிச்சை அளித்தது மற்றும் 61 பேரை மருத்துவமனைக்கு அனுப்பியது. குவைத் தீயணைப்புப்படை 188 மூடல் உத்தரவுகளை பிறப்பித்தது.
அதேபோல் சுற்றுச்சூழல் பொது ஆணையம் 90 விதிமீறல் அறிக்கைகளை வழங்கியது. அவற்றை அரசுத் தரப்பு வழக்கறிஞருக்குப் பரிந்துரைத்து, அதே நேரத்தில் விதிமீறல்களைக் கண்காணிக்க ஆய்வுப் பணிகளையும் தொடர்ந்து செய்து வருகின்றன. உணவு மற்றும் ஊட்டச்சத்துக்கான பொது ஆணையம் 315 விதிமீறல்களை பதிவு செய்து, உணவுப் பொருட்கள் அழிக்கப்பட்டதற்காக 9 அறிக்கைகளையும் பிறப்பித்ததுடன், விதிமீறி செயல்பட்ட 12 நிறுவனங்களை மூட உத்தரவுகளையும் வழங்கியது. மனிதவளத்திற்கான பொது ஆணையம் 376 நபர்களிடம் கள ஆய்வுகளை நடத்தியது, குடியிருப்பு அனுமதிகள் தொடர்பான 129 வழக்குகளைக் கண்டறிந்தது, மேலும் வெளிநாட்டுத் தொழிலாளரில் 110 பேர் அவர்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து நாடுகடத்தல் மையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டன.