16/08/2026
நேற்றைய வைரல் கண்டெண்ட் இதுதான்..
நடிகர் மம்முட்டி, காரைக்குடியில் இருந்து மதுரை செல்லும் வழியில் கூகுள் மேப் திசை மாற்றி அலைக்கழிக்கவிட்ட நிலையில், படத்தில் இருக்கும் இந்த நபர், தன்னுடைய டூவீலரில் கிட்டத்தட்ட பத்து கிலோ மீட்டருக்கு வழிகாட்டியாக இருந்து, மதுரை பிரதான சாலையில் அனுப்பி வைத்துவிட்டு வந்தாராம்.
அவரின் இந்த உதவியில் நெகிழ்ந்த மம்முட்டி, "நம்ம ஃப்ரெண்ட்" என தோளில் கைப்போட்டு ஃபோட்டோ எடுத்துக்கொண்டிருக்கிறார். இதில் விசேஷம் என்னவெனில் , உதவிய அந்த நபர் போட்டோ பற்றி யோசிக்காத நிலையில் மம்முட்டியே இனிஷியேட் செய்திருக்கிறார்.. அதுமட்டும் இல்லாமல், இந்த நபர் காருக்கு முன்னால் தனது பைக்கில் வழிகாட்டியாக சென்றதை காரில் இருந்தபடியே வீடியோவாகவும் பதிவு செய்து, மம்முட்டி தரப்பின் வழியாகத்தான் அது இந்த நபருக்கு அனுப்பப்பட்டு சோசியல் மீடியாவிலும் வெளியானது.
மம்முட்டி இதனை வைத்து விளம்பரம் தேடிக்கொள்ளும் ஆள் இல்லை, அவருக்கு அப்படியான அவசியமும் இல்லை. இன்றைக்கும் அவர் சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்தில் இருப்பவர்தான்.. எனினும் இதை அவர் செய்ய காரணம் நன்றி உணர்ச்சி. உதவியதற்கு பணமாக கொடுத்து சிறுமை படுத்திவிடாமல், தனது அன்பினை இப்படியாக அவர் வெளிப்படுத்தி, அந்த நபருக்கு ஒரு மறக்க முடியாத அனுபவமாக மாற்றிக் கொடுத்தது பாராட்டுக்குரியதாகப் பார்க்கிறேன்.
இப்படியான மனிதர்களை ஊர் பக்கம் காண முடியும்.. மம்முட்டி என்று பிரபலங்களுக்குதான் இப்படி வழி சொல்லுவார்கள் என்றில்லை.. வழி தெரியாமல் தடுமாறி நிற்கும் யாருக்கும் இப்படி கூடவே வந்து வீடு வரைக்கும் கொண்டு வந்து விடுகிற ஆட்கள் உண்டு. அதை மகிழ்வாகவும் செய்வார்கள்.. இப்படியான தருணங்களில்தான் மனிதம் மீது பெரு நம்பிக்கை துளிர்க்கும்.
இந்த குறிப்பிட்ட சம்பவத்தில் .. காருக்குள் இருந்து இந்த நபரை வீடியோ எடுத்தபோது, நட்பின் சிறப்பை வெளிப்படுத்தும் தளபதி படத்தின் 'காட்டுக்குயிலு மனசுக்குள்ள' பாடலின் 'பந்தம் என்ன சொந்தம் என்ன' வரியினை மம்முட்டி முணுமுணுத்தபடி அமர்ந்திருப்பது, அவர் என்ன மாதிரி ஓர் உணர்வு நிலையில் இந்த மனிதரை பார்த்து நெகிழ்து போயிருக்கிறார் என்பதனைக் காட்டும் விதமாக டச்சிங்காகவும் இருந்தது.