16/09/2022
வக்பு நிலம் 300 ஏக்கரை இந்து சகோதரர் பயன்படுத்த அனுமதித்த வக்பு வாரியம்:
வக்பு சொத்து மீட்பை
மதசாயம் பூசி அரசியல் லாபம் தேடுவதா?
தமிழ்நாடு வக்பு வாரியத்தலைவர் எம்.அப்துல் ரஹ்மான் எக்ஸ் எம்பி பேட்டி
வக்பு சொத்துக்கள் மக்கள் பயன்பாட்டிற்காக இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டவை. ஆக்கிரமிப்புகளில் இருந்து அவைகளை மீட்க முயலும் போது அதற்கு மதசாயம் பூசி அரசியல் ஆதாயம் தேடுவதா? என கேள்வி எழுப்பிய தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் எம். அப்துல் ரஹ்மான் (முன்னாள் எம்பி ), திருநெல்வேலி மாவட்டத்தில் வக்பு நிலம் 300 ஏக்கரை இந்து சமய சகோதரர் பயன்படுத்த வக்பு வாரியம் அனுமதி அளித்ததை சுட்டிக்காட்டி இது மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டு இல்லையா? என குறிப்பிட்டார்.
திருச்சி மாவட்டம் திருச்செந்துறை உள்ளிட்ட சில கிராமங்களின் வக்பு சொத்து தொடர்பாக எழுந்துள்ள விவகாரங்களுக்கு பதிலளித்து தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் எம். அப்துல் ரஹ்மான் ( முன்னாள் எம்பி )
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
தமிழ்நாடு வக்பு வாரியம் என்பது வக்பு நிறுவனங்கள் என்று சொல்லக்கூடிய மசூதிகள், தர்காக்கள், மத்ரஸாக்கள் போன்ற நிறுவனங்களை மேற்பார்வை செய்வதும், அந்த நிறுவனங்களின் பெயரால் உள்ள வக்பு சொத்துக்களை பாதுகாப்பதிலும் முழு கவனம் செலுத்தக்கூடிய அரசு சார்ந்த துறையாகும்.
வக்பு சொத்துக்கள் என்பது முன்பிருந்த நல்லவர்கள், இப்போதுள்ள கண்ணியமானவர்கள் பொதுமக்கள் நன்மைக்காக இறைவன் பெயரால் அர்ப்பணிக்கிறோம் எனச்சொல்லி வக்பு நிறுவனங்களின் பெயரில் அர்ப்பணித்திருக்கிறார்கள்.
வக்பு சட்டம் உருவாக்கப்பட்டு நடைமுறைக்கு வந்த 1954 ஆம் ஆண்டுக்கு முன்புவரை அர்ப்பணிக்கப்பட்ட வக்பு சொத்துக்களை முறையாக அரசாங்கத்திற்குரிய அங்கீகரிக் கப்பட்ட சர்வேயர்கள் (நில அளவையாளர்கள்) வைத்து அளவீடு செய்து பதிவேடுகளில் ஏற்றி இருக்கிறார்கள்.
எந்தந்த ஊரில், எந்தந்த அளவிளான சொத்துக்கள், எந்தெந்த வகையிலான சொத்துக்கள் என்பதை எல்லாம் அளவீடு செய்து அரசு இந்த பதிவை உருவாக்கி இருக்கிறது. அந்த பதிவு தான் வக்பு வாரியத்தில் இருக்கிறது.
1954க்குப் பிறகு புதிதாக அர்ப்பணிக்கப்பட்ட வக்பு சொத்துக்களும் அவ்வப்போது இதில் சேர்த்துக்கொள்ளப்பட்டு வருகின்றன. இது நடைமுறையில் உள்ள தொடர்ச்சியான ஒன்று.
வக்பு சொத்துக்களில் சில இடங்களில் பெரும் பகுதியாகவும், சில இடங்களில் ஓரளவு சிறு பகுதியாகவும் தவறான ஆவணங்களைத் தந்து விற்பனை செய்யப்பட்டதாகவும், ஆக்கிரமிக்கப்பட்ட சொத்துக்களாகவும் இருப்பதை நாம் அறிந்திருக்கிறோம்.
எனவே வக்புக்கு சொந்தமான ஆக்கிரமிக்கப்பட்ட சொத்துக்களையும், தவறான ஆவணங்கள் தரப்பட்டு பதிவு அல்லது விற்பனை செய்யப்பட்ட சொத்துக்களையும் மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு வக்பு வாரியத்திற்கு இருக்கக்கூடிய தார்மீக கடமை.
அரசும் இந்த ஆக்கிரமிக்கப்பட்ட சொத்துக்களையும், இது போன்று அபகரிக்கப்பட்ட சொத்துக்களையும் மீட்டெடுத்து வக்பினுடைய நேரடி ஆளுகைக்கு கொண்டு வர வேண்டும் என்று அவ்வப்போது அறிவுறுத்தி வந்துள்ளது.
சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு வக்பு விவரங்கள்:
அந்த அடிப்படையில் இந்த ஆண்டு ஒரு முடிவு எடுத்தோம். வக்புக்கு சொந்தமான நிலங்கள், மற்றுமுள்ள சொத்துக்கள் இவைகளுடைய சர்வே எண்கள் என்ன என்பதை எல்லாம் சேகரித்து, அவைகளை அந்தந்த பகுதியிலேயே இருக்கக்கூடிய சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு அனுப்பி இந்தந்த சொத்துக்களை இனியாரும் விற்கவோ வாங்கவோ அல்லது ஒருவருக்கொருவர் மாற்றிக்கொள்ளவோ முடியாது; காரணம் இது அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்ட பதிவேட்டில் வக்பு வாரியத்தில் பாதுகாக்கப்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய பதிவு விளக்கங்கள் என்ற முறையில் மாநிலம் முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு அனுப்பி, வக்பு சொத்துக்களை வாங்க, விற்க, மாற்ற முடியாது என்பதற்கு ஏற்பாடுகளை செய்தோம். அது இப்போது நடைமுறையில் இருக்கிறது.
வக்பு சொத்துக்களை எந்தனையோ பேர் வாங்கியுள்ளனர். அவர்கள் தெரிந்து வாங்கியதல்ல, தெரியாமல் வாங்கியிருப்பார்கள். ஒருவர் வாங்கி அவர் அடுத்தவருக்கு விற்றிருப்பார். அவர் இன்னொருவருக்கு விற்றிருப்பார்; அவர் நான்காம் நபருக்கு விற்றிருப்பார் என்கிற நிலையில் இனிமேல் அந்த சொத்து ஐந்தாம் நபருக்கு விற்க முடியாது என்ற நிலையில் வருகிறது என்றால் அந்த சொத்தை வாங்கி வைத்திருப்பவர் மீது எந்த குற்றமும் கிடையாது. அவருக்கு தெரியாமல் நடந்தது அது.
ஆனாலும் அது வக்பு சொத்து என்பதனை அரசு பதிவில் எப்படி வக்பு வாரியத்தில் பாதுகாக்கப்பட்டு வந்திருக்கிறதோ அதனை மீண்டும் எத்தகைய பதிவும் ஆகாமல் பார்த்து, அதற்குப்பிறகு அதனை மீட்டெடுக்க வேண்டிய நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்ற நோக்கில் தமிழ்நாடு முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு அந்த சொத்துக்களின் விவரங்களை அனுப்பியுள்ளோம்.
அப்படி வக்பு வாரிய பதிவில் இருந்து எடுத்து அனுப்பப்பட்ட விவரங்களில் மிகச்சில சொத்துக்கள் கிராமத்தின் பெயரில் இத்தனை ஏக்கர்கள் உள்ளன என்பதை 1954 அரசு ஆவணப்படியான விவரத்தை அனுப்பினோம். வக்பு வாரியத்தில் இருக்கக்கூடிய பதிவுகளின் அடிப்படையில் தான் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டன. தனிப்பட்ட சர்வே எண் உள்ள சொத்துக்களை பற்றிய வினாக்கள் வந்தால் நேரடியாக பதில் சொல்லக்கூடிய ஆவணங்கள் நம்மிடத்தில் உள்ளன.
ஆனால் ஒரு கிராமம் என்று வருகிற போது ஒரு ஏரியா பரந்த பரப்பளவாக இருக்கும் என்ற காரணத்தால் குறிப்பிட்ட சர்வே எண்கள் விவரங்கள் காட்டப்படக்கூடிய ஆவணங்கள் அரசு ஆவண காப்பகத்தில் தான் இருக்கின்றன.
திருச்செந்துறை கிராமத்தின்
389.03 ஏக்கர் நிலம்:
இதில் திருச்சிக்கு அருகாமையில் உள்ள சில கிராமங்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டு அனுப்பப்பட்டுள்ளன. அதில் மிக முக்கியமாக திருச்செந்துறையும் ஒன்றாக உள்ளது. இந்த கிராமத்தில் 389.03 ஏக்கர் வக்பு இடம் என்று 1954ல் அரசு நில அளவீடு அதிகாரியால் பதிவு செய்யப்பட்ட விவரத்தை அனுப்பி இருந்தோம். ஆனால் இந்த 389.03 ஏக்கர் அளவுள்ள பகுதியில் மற்ற விவரங்கள் ஆவண காப்பகத்தில் உள்ள பதிவு புத்தகத்தில் இருப்பதால் அவைகளை எடுத்து குறிப்புகளோடு மீண்டும் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு அனுப்புவதற்கு சில நாட்கள் அவகாசமாகலாம்.
இப்போது ஆட்சேபனை என்று வரக்கூடிய கேள்விகளுக்கெல்லாம் தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு சர்வே எண்ணிற்கும் நாம் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறோம். வந்தவர்கள் அவைகளை கேட்டுவிட்டு சரி என்று திரும்பியிருக்கிறார்கள். இது அன்றாடம் நடந்து கொண்டிருக்கிறது.
ஒரு கிராமமாக இருக்கிற காரணத்தால் ஒவ்வொருவருக்கும் பதில் சொல்லவேண்டும் என்றால் ஆவண காப்பகத்தில் இருந்து பெற்றுத்தான் பதில் சொல்ல இயலும். அதற்கு சில நாட்கள் அவகாசம் தேவை என்பதால், இப்போதைக்கு கிராம பெயரில் சர்வே எண் இல்லாத பகுதிகளை பத்திரப்பதிவு எப்போதும் போல் தொடரலாம்; ஆவண காப்பகத்தில் இருந்து ஆதாரங்களை பெற்று சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு மீண்டும் தகவல் தருகிறோம் என்று நாங்கள் சொல்லியிருக்கிறோம்.
கிராமத்தை பொருத்தவரையிலும் எங்களால் விற்க முடியவில்லை, வாங்க முடியவில்லை பதிவு செய்யமுடியவில்லை என்ற குறைபாடுகளுக்கு தகுந்த தீர்வாக தற்காலிக ஏற்பாடாக இடைகால தளர்ச்சி காட்டியுள்ளோம்.
அதனால் அந்த கிராமத்தில் உள்ள 389.03 ஏக்கர் நில பரப்பளவு வக்பு நிலம் இல்லை என்ற அர்த்தம் அல்ல; வக்பு சொத்துக்கள் என்று குறிப்பிட்டு சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டவை இன்னமும் நடைமுறையில் இருக்கின்றன. அதில் எந்த சமரசமும் கிடையாது.
மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள், மிகுந்த அக்கறையோடு பெருந்தனக்காரர்கள், சான்றோர் பெருமக்கள், பொதுமக்களுக்காக வாரி வழங்கி இருக்கக்கூடிய வக்பு சொத்துக்களை அபகரிப்பில் இருந்தும், ஆக்கிரமிப்புக்களிலிருந்தும், தனியாரிடத்தில் இருந்தும் சட்டரீதியாக மீட்டெடுத்து அவைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உகந்ததாக ஆக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அந்த வழிகாட்டுதலின் அடிப்படையில் வக்பு சொத்துக்கள் பொதுமக்களுக்கு பயன்பட வேண்டும்.
பொதுமக்கள் என்பது ஒரு குறிப்பிட்ட மதத்தினர் என்றல்ல. முஸ்லிம்களுக்கு தனிப்பட்ட முறையிலோ, இந்துக்களுக்கு தனிப்பட்ட முறையிலோ, கிறிஸ்தவர்களுக்கு தனிப்பட்ட முறையிலோ அல்ல. ஒட்டு மொத்தமாக பொதுமக்களுடைய பயன்பாட்டுக்கு என்பது முதல்வர் அவர்களுடைய அறிவுறுத்தல்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள திருச்செந்துறை மாத்திரம் அல்ல, தமிழகம் முழுவதும் உள்ள எல்லா பகுதிகளில் இருந்தும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வக்பு சொத்துக்களை மீட்டெடுக்க முயற்சி மேற்கொண்டுள்ளோம்.
ஆக்கிரமிப்பு வக்பு சொத்துக்கள்
மீட்பு என்பதே எம் இலக்கு:
ஏற்கனவே சில பகுதிகளில் இருந்த ஆக்கிரமிக்கப்பட்ட வக்பு சொத்துக்களை மீட்டெடுத்து விட்டோம். இன்னும் பல பகுதிகளில் ஆக்கிரமிப்பு வக்பு சொத்துக்களை மீட்க முயற்சி மேற்கொண்டுள்ளோம். அவைகளை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மீட்டெடுத்து, ஒரு காலகட்டத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட வக்பு சொத்துக்கள் என்பதே இல்லை; அவை எல்லாம் மீட்டெடுக்கப்பட்டு விட்டன என்ற நிலை வரவேண்டும் என்பதை இலக்காகக்கொண்டு செயல்பட்டு வருகிறோம்.
கிராமம் என்ற அளவில் உள்ள வக்பு சொத்துக்களை பொறுத்தவரை கடந்த காலங்களில் கவனம் செலுத்தப்படாமல் இருந்திருக்கலாம். அந்த கிராமங்களில் இந்துக்கள் வாழ்கிறார்கள், முஸ்லிம்கள் அறவே இல்லை, அப்படியானால் வக்புக்கு உரிய சொத்து இது கிடையாது என்றெல்லாம் கூட சில கருத்துக்கள் சொல்லப்படுகின்றன.
வக்பு சொத்துக்களை பொறுத்தவரை பொதுபயன்பாட்டிற்காக இறைவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டவை என்பதால் இவைகளில் யார் வாழ்கிறார்கள், யார் அவைகளை பயன்டுத்திக்கொண்டிருக்கிறார்கள் என பார்க்கக்கூடாது. இன்னமும் சொல்லப்போனால் வக்பு சொத்துக்களில் கோயில்கள் கட்ட இடங்கள் அளிக்கப்பட்டுள்ளன. கோவில் குளங்கள் கட்ட இடம் அளிக்கப்பட்டுள்ள தகவல்கள் பாதுகாக்கப்பட்ட வக்ப் ஆவணங்களில் காணப்படுகின்றன.
பிரச்சனைகளை உருவாக்கவே மதரீதியாக பார்க்கிறார்கள்:
இந்துக்கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், பள்ளிவாசல்கள் என்ற எல்லா வழிபாட்டுத்தளங்களுக்கும் நாம் மரியாதை செலுத்த வேண்டும். இதனை மதரீதியான கண்கொண்டு பார்ப்பது என்பது நல்ல மனிதாபிமான முறையும் அல்ல. மதரீதியாக பார்த்து தர்மம் செய்வதில் என்னபலன் இருக்கிறது? தர்மம் செய்பவர்கள் மதரீதியிலான கண்கொண்டு பார்ப்பதில்லை. ஆனால் பிரச்சனைகளையும் குழப்பங்களையும் உருவாக்க நினைப்பவர்கள் மத ரீதியிலான கண்கொண்டு இவைகளை பார்ப்பது துரதிருஷ்டவசமான சூழ்நிலை. அதை பார்க்கிற போது வேதனையாக உள்ளது.
இன்னும் உங்கள் புரிதலுக்காகச் சொல்கிறேன். சில வக்புகளில் நிறைய கடைகள் உள்ளன. அவைகளில் முக்கால் வாசி கடைகளில் முஸ்லிம் அல்லாதவர்கள்தான் இருக்கிறார்கள். இதில் முஸ்லிம் அல்லாதவர்கள் தொழில் செய்யக்கூடாது என சொல்வதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. அவர்களுக்கு எதிரான வழக்கு வக்பு வாரியத்திற்கு வந்தாலும், இந்து சமய சகோதரரின் நிலைப்பாடு நியாயமானதாக இருக்குமேயானால் அந்த மஸ்ஜித் நிர்வாகம் சொல்லும் குற்றச்சாட்டை நாம் ஏற்பது இல்லை. இந்து சமுதாய சகோதரர் தொடர்ந்து அந்த கடையை நடத்துவதற்கு சாதகமான தீர்ப்பை தான் வக்பு வாரியம் சொல்கிறது. அதனால் இது மஸ்ஜிதுகளுக்கு எதிரான வக்பு வாரியம் என்று யாரும் கூறிவிடமுடியாது.
வக்பின் ஒரு கடையை முஸ்லிம் ஒருவர் நடத்துகிற போது பிரச்சனை ஏற்பட்டு மஸ்ஜித் நிர்வாகம் அவருக்கு எதிராக புகார் அளித்தால், அதை விசாரிக்கும் போது கடைநடத்துபவர் மீது நியாயம் இருந்தால் அவர் தொடர்ந்து கடை நடத்த உத்தரவிட்டுகிறோம். மஸ்ஜித் நிர்வாகத்தின் புகாரை நிராகரிக்கிறோம். இது முஸ்லிம் என்பதற்கான தீர்ப்பு அல்ல.
எனவே நாம் நடைமுறையில் பார்க்கக்கூடிய பார்வை என்பது மதரீதியான பார்வை அல்ல என்பதற்காக இந்த விளக்கத்தை தருகிறேன். வக்பு வாரியத்தின் கண்காணிப்பில் உள்ள சொத்துக்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உரியவை.
வக்பு நோக்கங்களை நிறைவேற்றுவது நம் கடமை:
ஒவ்வொரு வக்பு சொத்தும் எந்தெந்த நோக்கங்களுக்காக வக்பு செய்யப்பட்டுள்ளதோ, எந்தெந்த பயன்பாட்டிற்கு உரியவை என்று சொல்லப்பட்டுள்ளதோ அந்த நோக்கங்களை அந்தந்த வக்பு நிறுவனங்கள் நிறைவேற்ற வேண்டியது கடமை. அதை மீற முடியாது. அதற்காக வக்பு வாரியம் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்பதை வெளிப்படையாக தெரிவித்துக்கொள்கிறேன்.
எனவே இப்போது கிராமம் என்கிற அளவில் நாங்கள் சொல்லியிருக்கக்கூடிய வக்புகளுக்கான தகவல்களை, ஆவண காப்பகத்தில் இருந்து பெற்று தனித்தனியாக தருவதற்கு அவகாசம் தேவை என்கிற காரணத்தால் அந்த கிராமப்புறத்திலே இருக்கக்கூடிய வக்பு சொத்துக்களுக்கு கால அவகாசம் அளித்து, முன்பிருந்த நிலை தொடரலாம் என்று கூறியிருக்கிறோம். அது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் வரை; அதற்காக இதிலிருந்து பின் வாங்கிவிட்டோம் என அர்த்தமல்ல.
வக்பு சொத்துக்கள் இவைதான் என்று அங்கீகரிக்கப்பட்ட அரசு நில அளவையாளர்களால் அளக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ள சொத்துக்களை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு அனுப்பிய விவரங்களிலிருந்து வக்பு வாரியம் ஒரு போதும் பின் வாங்காது. ஏனென்றால் அவை அரசால் அங்கீகரிக்கப்பட்ட பதிவுகள்.
எனவே இப்போதைக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மக்களின் எதிர்ப்பார்ப்புகளுக்கு ஏற்ப முழுமையான விவரங்கள் வருகிற வரை இந்த இடைக்கால நிலை தொடரும்.
இதனால் யாருக்கும் வெற்றி அல்லது தோல்வி என்று பேசப்படும் பேச்சு அழகானது அல்ல. ஒட்டு மொத்த மக்களின் பயன்பாட்டிற்கே பணி செய்கிறோம்.
வக்பு வாரியத்தில் குடியிருப்போர் வெளியேற வேண்டுமா?
வக்பு சொத்துக்களை ஆக்கிரமிக்கிறார்கள் அல்லது விற்கிறார்கள் என்று வக்பு வாரிய கவனத்திற்கு வரும்போதெல்லாம் உடனடி நடவடிக்கை எடுக்கிறோம். எங்களின் கவனத்திற்கு கொண்டு வரப்படாமல் அல்லது அந்தந்த வக்பு நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருந்த வக்பு சொத்துக்களின் ஆக்கிரமிப்புகளையும் இப்போது கணினி மயமான வசதிகளை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கிறோம். எனவே அப்போது நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிட்டது நியாயமா? எனக்கேட்கிறீர்கள். அது நியாயம் இல்லை தான். அதற்காக இப்போதும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பது சரியானது அல்ல.
ஆக்கிரமிக்கப்பட்ட வக்பு சொத்துக்களை நாம் கண்டறிந்து மீட்கும் போது அதில் வீடு கட்டி வாழ்பவர்களை உடனடியாக வக்பு வாரியத்திற்கு அதை ஒப்படைத்து விட்டு வெளியேறி விடுங்கள் என சொல்லப்போவதில்லை. அதை விற்க முடியாது. வக்பு சொத்து என உறுதியானதும் அந்த வக்பு நிர்ணயிக்கும் நிலவாடகை அளித்து அதில் தொடர்ந்து அவர்கள் குடியிருக்கலாம்.
வக்பு வாரியத்தின் வருமானத்திற்காக ஆக்கிரமிப்பு சொத்துக்கள் மீட்கப்படுவதில்லை. வக்பு சொத்துக்கள் அந்தந்த வக்பு நிறுவனங்களுக்கே சொந்தமானவை. அதன் வருமானத்திலிருந்து சிறு சகாய தொகையே வக்பு வாரியத்திற்கு தரப்படுகிறது. வக்பு சொத்துக்கள் வக்பு வாரியத்திற்கு சொந்தமானது அல்ல. மேற்பார்வை செய்வது மட்டுமே.
வக்பு நிலம் என்று சொல்லி இந்துக்களை வெளியேற்ற வக்பு வாரியம் முயற்சிக்கிறது என்பதே முறையற்ற பிரச்சாரம். யாராக இருந்தாலும் மதரீதியாக இதை அணுகுவதே தவறானது. முஸ்லிம்கள் நிறைந்து வாழும் ஒரு கிராமத்தின் மீது இது போன்று செய்தால் அது முஸ்லிம்களுக்கு எதிரானது என சொல்ல முடியுமா? முஸ்லிம்கள் எத்தனையோ பேரிடமிருந்து ஆக்கிரமிக்கப்பட்ட வக்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. முஸ்லிம்கள் தானே என அவைகளை விட்டுவிடவில்லை.
எனவே இது போன்ற பிரச்சனைகள் வருகிற போது உடனே அவைகளை கையில் எடுத்துக்கொண்டு மதரீதியிலான முலாம் பூசுபவர்கள் தான் இப்படி பேசுவார்கள். பொதுநலன் பேசக்கூடியவர்கள், எல்லா மதத்தவரும் சமம் என கருதுபவர்கள், நல்லிணக்கம் காக்கக்கூடியவர்கள் இப்படிப்பட்ட பேச்சை பேசமாட்டார்கள்.
இந்து சமய பெருமக்கள் பயன்பாட்டில் வக்பு சொத்துக்கள் :
வக்பு வாரிய கண்காணிப்பில் இருக்கின்ற எத்தனையோ சொத்துக்கள் இந்து சமய பெருமக்கள் பலரின் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. அது வக்பு சொத்து என்பதனால் ஒரு முஸ்லிம் அதை அத்துமீறி அபகரிக்கமுடியாது. அப்படி செய்தால் அந்த முஸ்லிம் செய்வது அநீதி என வக்பு வாரியம் தீர்ப்பளிக்கும்.
திருச்செந்துறை கிராமத்தில் 389.03 ஏக்கர் என்பது அரசின் நில அளவை சர்வேயாளர்களால் பதிவு செய்யப்பட்ட பதிவு. அதை இல்லை என்று சொல்லமுடியுமா?
அப்படியானால் அதை அரசு தவறாக பதிந்துள்ளதா? அது முஸ்லிம்கள் செய்த பதிவல்ல. வக்பு வாரியத்தில் புரபார்மா அறிக்கை என்ற ஆவணத்தில் உள்ளது. புரபார்மா அறிக்கை என்பது ஓரிரு பக்கங்கள் தான் இருக்கும். 389 ஏக்கருக்கான விவரங்கள் பல பக்கங்கள் என்பதால் அவை ஆவண காப்பகத்தில் இருக்கும்.
எனவே புரபார்மா அறிக்கைபடி அனைத்து சொத்து விவரங்களும் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டது போல் திருச்செந்துறை கிராம விவரமும் அனுப்பப்பட்டது. முழு விவரங்கள் ஆவண காப்பகத்தில் இருந்து பெறப்பட்டு அனுப்பப்படும். அது வரை தற்காலிகமாக இது ஒத்தி வைக்கப்படுகிறது.
வக்பு சொத்துக்கள் மக்களின் பயன்பாட்டிற்கு என்பதற்காக அதில் திரையரங்கோ, ஒழுக்க மாண்புகளை கேள்விக்குறியாக்கும் விடுதிகளோ கட்ட முடியாது. பெரும்பாலும் கல்வி நிறுவனங்கள், மருத்துவ மனைகள் தேவைப்பட்டால் வணிக வளாகங்கள் கட்டி மக்கள் பயன்பாட்டிற்கு அளிக்கலாம். அதற்கு யாரும் முன்வரலாம்.
இந்து சமய சகோதரருக்கு 300 ஏக்கர் வக்பு நிலம் பயன்படுத்த அனுமதி:
வக்பு இடத்தில் கல்லூரியோ, மருத்துவ மனையோ கட்ட இந்து, கிருஸ்தவ சமுதாய சகோதரர்கள் முன்வந்தால் நாங்கள் வரவேற்போம். சம்பந்தப்பட்ட வக்பு நிறுவனத்தின் நிபந்தனைகளின் படி வக்பு வாரிய கூட்டத்தில் முடிவு செய்து அதற்கான அனுமதி தரப்படும்.
இன்று தமிழ்நாடு வக்பு வாரிய கூட்டத்தில் திருநெல்வேலி மாவட்டம் ஆத்தங்கரை பள்ளி அருகில் வக்புக்கு சொந்தமான 300 ஏக்கர் நிலத்தை ஒரு இந்து சமய சகோதரர் பயன்படுத்தி விவசாயம் செய்து அபிவிருத்தி செய்ய விரும்புவதாக அளித்த மனுவை ஏற்று அதற்கு அனுமதி அளித்துள்ளோம்.
வக்பு சொத்துக்களை கண்காணிக்கும் அரசு சார்ந்த துறை தான் வக்பு வாரியம். வக்பு சொத்துக்கள் வக்பு வாரியத்திற்கு சொந்தமானவை அல்ல.
நாடாளுமன்றத்தில் வக்பு சட்டம் 1995ல் இயற்றப்பட்டு 2013 ல் திருத்தங்கள் செய்யப்பட்டு அமலில் உள்ளதைத்தான் தமிழ்நாடு வக்பு வாரியம் நடைமுறைப்படுத்துகிறது. இதிலிருந்து அது விலகிச்சென்றால் உச்சநீதிமன்றம் வரை எடுத்துச்செல்லலாம் என்பதை கருத்தில் கொண்டு தான் தமிழ்நாடு வக்பு வாரியம் செயல்படுகிறது.
எனவே வக்பு சொத்துக்களில் குடியிருப்போர் சம்பந்தப்பட்ட வக்பு நிறுவனங்களோடு பேசி எத்தகையசமரசம் செய்கிறார்களோ அதை வக்பு வாரியத்திற்கு தெரிவித்தால் வக்பு சட்டப்படி எது சரியோ அதனை வக்பு வாரியம் செயல்படுத்தும்.
இந்த உண்மைகளை எல்லாம் மறைத்து இந்துக்களுக்கு எதிராக வக்பு வாரியம் செயல்படுகிறது என அறியாத மக்களை தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பவர்களை மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். அவர்களைப்பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை.
இவ்வாறு தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் எம். அப்துல் ரஹ்மான் குறிப்பிட்டார்.
இந்த பேட்டியின் போது வாரிய உறுப்பினர்கள் வழக்கறிஞர்கள் எம்.கே.கான் , சைய்யத் ரேஹான், செய்யது அலி அக்பர் ஆகியோர் உடனிருந்தனர்.