20/07/2025
ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனில் டிக்கெட் கட்டணம் பெற க்யூ ஆர் கோடு சர்வரில் பிரச்னை ஏற்பட்டதால் கட்டணத்தை செலுத்த முடியாமல் பயணிகள் அவதிப்பட்டனர்.
ராமேஸ்வரம் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் ரயில் மூலம் வந்து செல்கின்றனர்.
பயணிகளின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் முன்பதிவு டிக்கெட் கட்டணத்தை க்யூஆர் கோடு மூலம் பெறுகின்றனர்.
ஆனால் நேற்று மதியம் முன்பதிவு செய்த பயணிகளின் டிக்கெட் கட்டணத்தை க்யூ ஆர் கோடு மூலம் செலுத்த முன் வந்தனர்.
ஆனால் க்யூ ஆர் கோடு சர்வரில் பிரச்னை ஏற்பட்டதால், கட்டணத்தை செலுத்த முடியாமல் பயணிகள் அவதிப்பட்டனர்.
டிக்கெட் கட்டணத்தை ரொக்கப் பணமாக செலுத்துங்கள் என ரயில்வே ஊழியர் தெரிவித்த நிலையில், ஏடிஎம்.,ல் பணம் எடுக்க பயணிகள் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து 1 கி.மீ., வெளியே சென்று எடுக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு வி.எச்.பி., மண்டல அமைப்பாளர் சரவணன் கூறுகையில், ராமேஸ்வரத்தில் டிஜிட்டல் முறையில் டிக்கெட் கட்டணத்தை வசூலிக்கும் ரயில்வே நிர்வாகம், அதன் நெட்வொர்க்கை துரிதப்படுத்தாதது வேதனைக்குரியது.
க்யூஆர் கோடு சர்வர் பிரச்னையால் வெளியூர் பயணிகள் ரொக்க பணத்திற்காக ஏடிஎம்., மையத்தை தேடி அலைந்தனர்.
இதுபோன்ற பிரச்னைக்கு தீர்வு காண ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் ஏடிஎம்., மையம் அமைத்து, நெட்வொர்க்கை விரிவுபடுத்த வேண்டும் என்றார்.