10/06/2026
The Crossway Ministries
அநுதினமும் சிலுவையைச் சுமப்போம்
ஜுன் 10
அப்பொழுது ராஜாவின் அரமனை வாசலிலிருக்கிற ராஜாவின் ஊழியக்காரர் மொர்தெகாயைப் பார்த்து: நீ ராஜாவின் கட்டளையை மீறுகிறது என்ன என்று கேட்டார்கள். இப்படி அவர்கள் நாளுக்குநாள் அவனுடனே சொல்லியும், அவன் தங்களுக்குச் செவிகொடாதபோது, தான் யூதன் என்று அவன் அவர்களுக்கு அறிவித்திருந்தபடியால், மொர்தெகாயின் சொற்கள் நிலைநிற்குமோ என்று பார்க்கிறதற்கு, அதை ஆமானுக்கு அறிவித்தார்கள் (எஸ்தர் 3:3-4).
“மொர்தெகாயின் சொற்கள் நிலைநிற்குமோ?”
மொர்தெகாய், தான் ஏன் ஆமானை வணங்கி நமஸ்கரிக்கவில்லை என்ற காரணத்தை ராஜாவின் அரண்மனை ஊழியக்காரருக்கு விபரித்துக் கூறினான். ஆமானை அவமதிப்பதோ அல்லது ராஜாவின் கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் இருக்கிறதோ தன்னுடைய நோக்கம் அல்ல. தான் ஒரு எபிரெயனாக இருப்பதனாலும், தான் ஜீவனுள்ள ஒரே ஒரு தேவனையே வணங்குவதனாலும் வேறொருவரையும் தன்னால் வணங்கமுடியாது என்ற தன்னுடைய நிலைப்பாட்டை மொர்தெகாய் கூறியிருந்தான். இந்த மாதிரியான நமஸ்காரத்தைத் தானியேல் செய்யாததனிமித்தம் சிங்கங்களின் கெபியிலே போடப்பட்டான் (தானி. 6:16). மூன்று இளவரசர்களாகிய யூதர்களும் அக்கினிச்சூளையில் போடப்பட்டார்கள் (தானி. 3:21); மொர்தெகாயின் அறிக்கை, அவன் தானியேலுடையதும், மூன்று இளவரச யூதர்களுடைய தோழன் என்பதனையும் உறுதிப்படுத்தியது. உண்மையில் ஆமான் ஒரு அமலேக்கியன்; ஆனபடியினால், அவன் தேவனுக்குப் பகைஞன். யாத்திராகமம் 17:16ன்படி “அமலேக்கின் கை கர்த்தருடைய சிங்காசனத்துக்கு விரோதமாயிருந்தபடியால், தலைமுறை தலைமுறைதோறும் அவனுக்கு விரோதமாய் கர்த்தரின் யுத்தம் நடக்கும்” என மோசே சொல்லியிருந்தான்.
தேவனுடைய பகைஞர்கள் மொர்தெகாயின் பகைஞர்கள்; ஏனென்றால், மொர்தெகாய் தேவனுடைய ஊழியக்காரனாயிருந்தான். இதுவும் ஆமானை மொர்தெகாய் கனம்பண்ணாததற்கு மேலதிகமான காரணமாகும். கர்த்தருடைய ஊழியக்காரர் சில வேளைகளில் உயிருக்கு ஆபத்தான தீர்மானங்களை எடுக்கவேண்டிவரும். வேதத்தில் தம்முடைய உயிரைக் கர்த்தருக்கென்று கொடுத்தவர்கள் உண்டு (வெளி. 12:11; 20:4). மேலும், ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து மத்தேயு 10:28ல் “ஆத்துமாவைக் கொல்லவல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம்கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்” எனக் கூறியிருக்கிறார்.