Mahimai TV

Mahimai TV Tamil Christian TV Channel

10/06/2026

The Crossway Ministries
அநுதினமும் சிலுவையைச் சுமப்போம்

ஜுன் 10

அப்பொழுது ராஜாவின் அரமனை வாசலிலிருக்கிற ராஜாவின் ஊழியக்காரர் மொர்தெகாயைப் பார்த்து: நீ ராஜாவின் கட்டளையை மீறுகிறது என்ன என்று கேட்டார்கள். இப்படி அவர்கள் நாளுக்குநாள் அவனுடனே சொல்லியும், அவன் தங்களுக்குச் செவிகொடாதபோது, தான் யூதன் என்று அவன் அவர்களுக்கு அறிவித்திருந்தபடியால், மொர்தெகாயின் சொற்கள் நிலைநிற்குமோ என்று பார்க்கிறதற்கு, அதை ஆமானுக்கு அறிவித்தார்கள் (எஸ்தர் 3:3-4).

“மொர்தெகாயின் சொற்கள் நிலைநிற்குமோ?”

மொர்தெகாய், தான் ஏன் ஆமானை வணங்கி நமஸ்கரிக்கவில்லை என்ற காரணத்தை ராஜாவின் அரண்மனை ஊழியக்காரருக்கு விபரித்துக் கூறினான். ஆமானை அவமதிப்பதோ அல்லது ராஜாவின் கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் இருக்கிறதோ தன்னுடைய நோக்கம் அல்ல. தான் ஒரு எபிரெயனாக இருப்பதனாலும், தான் ஜீவனுள்ள ஒரே ஒரு தேவனையே வணங்குவதனாலும் வேறொருவரையும் தன்னால் வணங்கமுடியாது என்ற தன்னுடைய நிலைப்பாட்டை மொர்தெகாய் கூறியிருந்தான். இந்த மாதிரியான நமஸ்காரத்தைத் தானியேல் செய்யாததனிமித்தம் சிங்கங்களின் கெபியிலே போடப்பட்டான் (தானி. 6:16). மூன்று இளவரசர்களாகிய யூதர்களும் அக்கினிச்சூளையில் போடப்பட்டார்கள் (தானி. 3:21); மொர்தெகாயின் அறிக்கை, அவன் தானியேலுடையதும், மூன்று இளவரச யூதர்களுடைய தோழன் என்பதனையும் உறுதிப்படுத்தியது. உண்மையில் ஆமான் ஒரு அமலேக்கியன்; ஆனபடியினால், அவன் தேவனுக்குப் பகைஞன். யாத்திராகமம் 17:16ன்படி “அமலேக்கின் கை கர்த்தருடைய சிங்காசனத்துக்கு விரோதமாயிருந்தபடியால், தலைமுறை தலைமுறைதோறும் அவனுக்கு விரோதமாய் கர்த்தரின் யுத்தம் நடக்கும்” என மோசே சொல்லியிருந்தான்.

தேவனுடைய பகைஞர்கள் மொர்தெகாயின் பகைஞர்கள்; ஏனென்றால், மொர்தெகாய் தேவனுடைய ஊழியக்காரனாயிருந்தான். இதுவும் ஆமானை மொர்தெகாய் கனம்பண்ணாததற்கு மேலதிகமான காரணமாகும். கர்த்தருடைய ஊழியக்காரர் சில வேளைகளில் உயிருக்கு ஆபத்தான தீர்மானங்களை எடுக்கவேண்டிவரும். வேதத்தில் தம்முடைய உயிரைக் கர்த்தருக்கென்று கொடுத்தவர்கள் உண்டு (வெளி. 12:11; 20:4). மேலும், ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து மத்தேயு 10:28ல் “ஆத்துமாவைக் கொல்லவல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம்கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்” எனக் கூறியிருக்கிறார்.

09/06/2026

The Crossway Ministries
அநுதினமும் சிலுவையைச் சுமப்போம்

ஜுன் 9

என் தேவனே, தொபியாவும் சன்பல்லாத்தும் செய்த இந்தச் செய்கைகளுக்குத்தக்கதாக நீர் அவர்களையும், நொவதியாள் என்னும் தீர்க்கதரிசியானவளையும், எனக்குப் பயமுண்டாக்கப்பார்த்த மற்றத் தீர்க்கதரிசிகளையும் நினைத்துக்கொள்ளும் (நெகேமி. 6:14).

“தேவனே, இவர்களை நினைத்துக்கொள்ளும்”

துரதிஷ்டவசமாகத் தேவனுடைய ஜனங்கள் உலகத்தோடு சேர்ந்து, தேவனுடைய மனுஷனாகிய நெகேமியாவை அழிப்பதற்கு முயற்சி செய்வதை நெகேமியா 6:13ல் காணக்கூடியதாயிருக்கிறது; இந்த அவலட்சணமான வழிமுறை இன்னும் தொடர்கிறது. நெகேமியாவுக்கெதிராகச் சதித்திட்டம் தீட்டுவதற்கு சில தீர்க்கதரிசிகளும், நொவதியாள் என்ற தீர்க்கதரிசியும் உலகத்துடன் ஒன்று சேர்ந்தனர்.

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவைக் கொலைசெய்வதற்கேதுவாக யூதாஸ்காரியோத்து பிரதான ஆசாரியர்களோடும், ரோமர்களோடும் கூட்டுச்சேர்ந்த மாதிரி இன்றும் தேவமனுஷருக்கெதிராகச் சதித்திட்டம் தீட்டப்படுகிறது; உண்மையில் மோசமான தீங்கு சபைக்குள்ளிருந்தே ஆரம்பமாகிறது! நான் சொல்லப்போகிறதை எந்தக் காலத்திலும் ஞாபகத்தில் வைத்திருக்கவேண்டும். அதென்னவென்றால், தீர்க்கதரிசனத்திற்கு நேரமும் திகதியும் குறிக்கப்பட்டிருக்கும்பொழுது, அது நிறைவேறாவிட்டால் அல்லது தீர்க்கதரிசனத்தில் சொல்லப்பட்டவைகள் வேதவாக்கியத்திற்கு இசைவாயிராவிட்டால், சொல்லப்பட்ட பொய்யான செய்தி கள்ளத் தீர்க்கதரிசிகளிடமிருந்தே வந்தது; தற்பொழுது பூமி கள்ளத்தீர்க்க தரிசிகளினால் நிறைந்துபோயிருக்கிறது.

இதுபற்றி Iயோவான் 4:1-3ல் “பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனாலுண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள். தேவஆவியை நீங்கள் எதினாலே அறியலாமென்றால்: மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது. மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது” என அப்போஸ்தலர் யோவான் கூறியிருக்கிறார்.

ஆனால், ஒற்றுமை என்ற போர்வையினால் அவர்கள் வஞ்சிக்கப்பட்டிருக்கையில், அவர்களிடம் கணக்குக்கேட்பது தவிர்க்கப்பட்டிருக்கிறபடியினால், “தேவனே இவர்களை நினைத்துக்கொள்ளும்” என்று ஜெபம்பண்ணுவதுமட்டுமே நமக்கு இருக்கிற ஒரே ஒரு வழியாகும்.

08/06/2026

The Crossway Ministries
அநுதினமும் சிலுவையைச் சுமப்போம்

ஜுன் 8

கட்டுகிறவர்கள் அவரவர் தங்கள் பட்டயத்தைத் தங்கள் இடுப்பிலே கட்டிக்கொண்டவர்களாய் வேலை செய்தார்கள்; எக்காளம் ஊதுகிறவன் என்னண்டையிலே நின்றான் (நெகேமி. 4:18).

“எக்காளம் ஊதுகிறவன்”

நெகேமியாவோடு சேர்ந்து ஆலயத்தின் மதிலைக் கட்டுபவர்கள் தங்கள் பட்டயத்தைத் தங்கள் இடுப்பிலே கட்டிக்கொண்டவர்களாய் வேலை செய்தார்கள். அவர்கள் ஆலயத்து மதிலைக் கட்டுவதுமட்டுமல்ல, அவர்கள் அதனையும் தங்களையும் பாதுகாக்கிறவர்களாயுமிருந்தார்கள். இதேபோல புதிய ஏற்பாட்டில் “.... ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்” (எபேசி. 6:17) எனப் பவுல் அப்போஸ்தலர் கூறியிருக்கிறார்.

நெகேமியாவின் காலத்தில் தன்னுடைய ஆயுதத்தை ஏந்தியிராத வேலைக்காரன் பாதுகாப்பற்ற வேலைக்காரன். சத்துருவானவன் அன்றுபோல் இன்றும் ஆவியில் தாக்குதலை நடத்திய வண்ணமேயிருக்கிறான். அப்படியானால், விசுவாசி ஆவியின் பட்டயத்தை எந்நேரமும் ஏந்திய வண்ணமே இருக்கவேண்டும்; அதன் பொருள் வேதவசனத்தை அறிந்து, அதன் ஆவிக்குரிய பொருளை அறிந்திருக்கவேண்டும்; வேதவாக்கியத்தின் ஆவிக்குரிய பொருளை அறியாதவன் பாதுகாப்பு இல்லாதவன். போதிய அறிவில்லாவிட்டால் சத்துருவுக்கு முன்பாகப் பாதுகாப்பு அற்றவனாயிருக்கிறான்; இதனிமித்தமே, அநேகர் பொய்யான உபதேசங்களுக்கு இரையாகிப் போயிருக்கிறார்கள்; அவர்கள் வேதவசனத்தை (ஆவியின் பட்டயத்தை) உபயோகித்து எதிரியின் தாக்குதலை முறியடிக்காவிட்டால் இலகுவாக எதிரியினால் பிடிபட்டுப்போவார்கள். கள்ள அப்போஸ்தலர்கள் (சாத்தானின் ஊழியக்காரர் IIகொரி. 11:13-15) எவ்வாறு பேதைகளான விசுவாசிகளைத் தந்திரமாக இணங்கப்பண்ணுகிறார்கள் என்பதனையும், பிடிபட்ட விசுவாசிகளின் பரிதாபகரமான நிலைமையையும் சாலொமோன் தெளிவாக நீதிமொழிகள் 7:21-23, 26-27ல் கூறியிருக்கிறான்.

இதனிமித்தமே, பவுல் அப்போஸ்தலர் IIதீமோத்தேயு 2:15ல் நாம் எப்படி நடக்கவேண்டும் எனக் கூறியிருக்கிறார். அதெப்படியெனில், கிறிஸ்துவின் சிலுவையில் விசுவாசத்தை வைத்திருப்பவன் ஒருபொழுதும் வெட்கப்பட்டுப்போவதில்லை எனவும், வேறெதனிலும் விசுவாசத்தை வைத்திருப்பவன் சந்தேகத்துக்கிடமின்றி அவமானத்தைச் சந்திக்கிறான் எனவும் சொல்லப்பட்டிருக்கிறது; மேலும் கிறிஸ்துவின் சிலுவையின் தாற்பரியத்தை (இரட்சிப்புக்கும் பரிசுத்தத்திற்கும், நாளாந்த கிறிஸ்தவ வாழ்க்கைக்கும்) அறியாவிட்டால், அவன் சத்திய வசனத்தை நிதானமாய்ப்பகுத்து அறியவும்முடியாது என்பது தெளிவாக்கப்பட்டிருக்கிறது. சத்தியத்தை அறியாவிட்டால், விசுவாசி, தன்னை சாத்தானுக்கு இரையாக ஒப்புக்கொடுக்கிறான் (IIதீமோ. 2:15-18); தற்போதைய கிறிஸ்தவர்களின் பரிதாபகரமான நிலைமை இதுவே.

08/06/2026

The Crossway Ministries
அநுதினமும் சிலுவையைச் சுமப்போம்

ஜுன் 7

நாங்கள் அலங்கத்தைக் கட்டுகிற செய்தியைச் சன்பல்லாத் கேட்டபோது, அவன் கோபித்து, எரிச்சலடைந்து, யூதரைச் சக்கந்தம்பண்ணி: அந்த அற்பமான யூதர் செய்கிறது என்ன, அவர்களுக்கு இடங்கொடுக்கப்படுமோ, பலியிடுவார்களோ, ஒருநாளிலே முடித்துப்போடுவார்களோ, சுட்டெரித்துப்போடப்பட்டு மண்மேடுகளான கற்களுக்கு உயிர்கொடுப்பார்களோ, என்று தன் சகோதரருக்கும் சமாரியாவின் சேனைக்கும் முன்பாகச் சொன்னான். அப்பொழுது அம்மோனியனாகிய தொபியா அவன் பக்கத்தில் நின்று: அவர்கள் கட்டினாலும் என்ன, ஒரு நரி ஏறிப்போனால் அவர்களுடைய கல் மதில் இடிந்துபோகும் என்றான் (நெகேமி. 4:1-3).

“சுட்டெரிக்கப்பட்ட கற்கள்”

சத்துருவான சன்பல்லாத் பல்வேறு வழிகளினால் யூதர்கள் ஆலயத்தின் மதிலைக்கட்டுவதற்குத் தடையாக இருந்தான். கிறிஸ்தவர்களாகிய நாமும் அந்தமாதிரியான தடைகளை நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையில் சந்திக்கவேண்டியதாயிருக்கும் என்பதனைக் கிறிஸ்தவர்கள் மறந்துவிடக்கூடாது; ஏனெனில், சாத்தானுடைய யுக்திகள் எப்பொழுதும் பலன் தருவதனால், தன் யுக்திகளை அடிக்கடி மாற்றவேண்டிய அவசியம் அவனுக்கில்லை. சன்பல்லாத்தின் எதிர்ப்புக்களை நாம் உன்னிப்பாகக் கவனிக்கவேண்டும்.

*அவனுக்குக் கோபம் வந்தது, எரிச்சலடைந்தான், யூதர்களைச் சக்கந்தம் (கேலி) பண்ணினான்.

*ஆலயத்தின் மதிலைக் கட்டும் யூதர்களை “அற்பமான யூதர்கள்” என்று அழைத்தான் (நெகேமி. 4:2).

*அவர்களுக்கு இடங்கொடுக்கப்படுமோ (நெகேமி. 4:2) என்று கேலிபண்ணினான்.

*பலியிடுவார்களோ (நெகேமி. 4:2) என்று பார்வோனைப்போல் உக்கிரகோபம் (யாத். 5:7-9, 17) அடைந்தான்.

*ஒரு நாளிலே முடித்துப்போடுவார்களோ? (நெகேமி. 4:2) என்றான்.

*சுட்டெரித்துப் போடப்பட்டு மண்மேடுகளான கற்களுக்கு
உயிர்கொடுப்பார்களோ (நெகேமி. 4:2) என்று கூக்குரலிட்டான்.

இன்னுமொரு சத்துருவான அம்மோனியனாகிய தொபியா, அவர்கள் கட்டினாலும் என்ன, ஒரு நரி ஏறிப்போனால் அவர்களுடைய கல் மதில் இடிந்துபோகும் என்றான் (நெகேமி. 4:3). அந்த யூதர்களிடமிருப்பது சுட்டெரிக்கப்பட்ட கற்களே; அதற்குப் பெலனும் இல்லை, தைரியமும் இல்லை என்பதே அவர்களுடைய அனுமானம்; ஆனால், அவர்கள் அறியாதது என்னவெனில், தேவன் சுட்டெரிக்கப்பட்ட கற்களையே பாவிக்கிறார்; அதெப்படி சாத்தியமாகும் எனக் கிறிஸ்தவர்கள் ஆச்சரியப்படுவது வேதனைக்குமேல் வேதனையாயிருக்கிறது.

சுட்டெரிக்கப்பட்ட கற்களையே தேவன் அழைத்திருக்கிறார்; அவர்களே ஆவிக்குரிய போராட்டத்தில் ஈடுபட்டு (எபேசி. 6:12) உஷ்ணத்தை அனுபவித்து, அதன் பலனாக நஷ்டத்தை அனுபவித்தவர்கள்; அவர்களில் தழும்பு வெளிப்படையாகத் தெரிகிறது; அவர்கள் காயப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்; இவர்கள் சுயநீதியில் செயற்படாமல், தேவநீதியில் செயற்படுபவர்கள் (ரோம. 10:3); அவர்களே பரிசுத்த ஆவியின் கைகளினால் இலகுவாகத் தனக்கு ஏற்றபடி வளைக்கப்படக்கூடியவர்கள்; தேவன் சுட்டெரிக்கப்பட்ட கற்களையே பாவிப்பார்.

எகிப்து, ஆகார், அபிமலேக்கு ஆகியவை ஆபிரகாம் ஒரு சுட்டெரிக்கப்பட்ட கல் எனச் சாட்சியளிக்கிறது. யாக்கோபை உடனடியாகவே அவன் ஒரு சுட்டெரிக்கப்பட்ட கல் என அறியக்கூடியதாயிருக்கிறது. அப்படியே தாவீதையும், ஏசாயாவையும், எரேமியா வையும், பேதுருவையும் பவுல் அப்போஸ்தலரையும் மற்றும் வேதாகமத்தில் எபிரெயர் 11ம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்ட பரிசுத்தவான்கள் யாவரும் சுட்டெரிக்கப்பட்ட கற்களாயிருக்கிறார்கள். சுட்டெரிக்கப்படாத கல்லாயிருப்பவன் இன்னும் ஆவிக்குரிய அரங்கத்தில் ஆவிக்குரிய யுத்தத்தைச் சந்திக்காமல் சாத்தானோடு உடன்படிக்கை செய்தவனாகும் (லூக். 14:28-35); ஆகையால், நெகேமியா சுட்டெரிக்கப்பட்ட கற்களைமட்டுமே ஆலயத்தின் மதில்களைக் கட்டுவதற்குப் பாவிக்கமுடியும். சுட்டெரிக்கப்பட்ட கற்களாக இருப்பவர்கள் பலமான விசுவாசத்தினாலேயே சுட்டெரிக்கப்பட்டார்கள் என்பதனை நாம் அறிந்துகொள்ளவேண்டும். அவிசுவாசிகளைப்பற்றியோ அல்லது விசுவாசத்தைத் திசைதிருப்பினவர்களைப்பற்றியோ சாத்தான் அவ்வளவாகக் கவலைப்படுவதில்லை.

06/06/2026

The Crossway Ministries
அநுதினமும் சிலுவையைச் சுமப்போம்

ஜுன் 6

பின்பு நான் அவர்களை நோக்கி: எருசலேம் பாழாயிருக்கிறதையும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டுக்கிடக்கிறதையும், நாம் இருக்கிற சிறுமையையும் பார்க்கிறீர்களே; நாம் இனி நிந்தைக்குள்ளாயிராதபடிக்கு, எருசலேமின் அலங்கத்தைக்
கட்டுவோம் வாருங்கள் என்று சொல்லி (நெகேமி. 2:17).

“எருசலேமின் அலங்கத்தைக் கட்டுவோம் வாருங்கள்”

அன்றைய ஆலயத்தின் வாசல்கள் அக்கினியினால் சுட்டெரிக்கப்பட்டிருக்கிறதுபோல, இன்றைய கிறிஸ்தவ சபைகளும் உடைத்தெறியப்பட்டிருக்கிறது. தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியும் அலங்கம், ஜெப அலங்கம், வேதப்படிப்பு அலங்கம் ஆகிய அலங்கங்கள் தற்பொழுது அடியோடு சுட்டெரிக்கப்பட்டிருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக மீட்பின் திட்டத்திற்குக் கீழ்ப்படியும் அலங்கம் பரிதாபகரமாகச் சுட்டெரிக்கப்பட்டிருக்கிறது.

இயேசுகிறிஸ்துவையும், அவர் சிலுவையில் நிறைவேற்றியதையும் பிரதிபலிக்கும் மீட்பின் திட்டத்தின் அலங்கம் ஏறி மிதிக்கப்படுகிறது. எருசலேம் அப்பொழுது நிந்தையாயிருந்ததுபோல, இப்பொழுது கிறிஸ்தவ சபைகள் தேவனுடைய பார்வைக்கு நிந்தையாயிருக்கிறது என்பதனைக் கடைசிக்கால சபையாகிய லவோதிக்கேயா சபைக்குக் கர்த்தர் சொல்லியது எவ்வளவு பொருத்தமாயிருக்கிறது; இதுபற்றி வெளி. 3:14-20ல் “லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது; உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும். இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன். நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒருகுறைவுமில்லையென்றும் சொல்லுகிறபடியால்; நான்: நீ ஐசுவரியவானாகும்படிக்கு நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு நீ உடுத்திக்கொள்வதற்கு வெண்வஸ்திரங்களையும் என்னிடத்திலே வாங்கிக்கொள்ளவும், நீ பார்வையடையும்படிக்கு உன் கண்களுக்குக் கலிக்கம்போடவும் வேண்டுமென்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன். நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு. இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்” எனச் சொல்லப்பட்டிருக்கிறது.

05/06/2026

The Crossway Ministries
அநுதினமும் சிலுவையைச் சுமப்போம்

ஜுன் 5

அப்பொழுது அவனுடைய ஊழியக்காரர் அந்த இரதத்தின்மேலிருந்த அவனை இறக்கி, அவனுக்கு இருந்த இரண்டாவது இரதத்தின்மேல் ஏற்றி அவனை எருசலேமுக்குக் கொண்டுவந்தார்கள்; அவன் மரணமடைந்து தன் பிதாக்களின் கல்லறையில் அடக்கம்பண்ணப்பட்டான்; யூதாவிலும் எருசலேமிலுமுள்ள யாவரும் யோசியாவுக்காகத் துக்கங்கொண்டாடினார்கள் (IIநாளா. 35:24).

“யோசியாவின் திடீர் மரணம்”

வேதவல்லுனர்களும் கிறிஸ்தவர்களும் யோசியா ஏன் இப்படிச் செய்தான் என்ற தர்க்கவாதத்தை அந்தக் காலந்தொடக்கம் இன்று வரையும் ஏறெடுத்தவண்ணமாயிருக்கிறார்கள்; இங்கு குறிப்பிடப்பட்ட தகவல்களைவிட மேலதிகமாக வேதவாக்கியங்களில் ஒன்றும் சொல்லப்படவில்லை.
கிடைக்கப்பட்ட தகவல்களைப் பார்த்தால், கர்த்தர் யோசியாவை எச்சரிக்கை செய்திருக்கிறார் என்பது தெளிவாகிறது. ஆயினும், யோசியா அந்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தினதாகத் தெரியவில்லை; ஏனென்றால், இந்தப் புறஜாதியும், புறமதத்தலைவனுமாகிய பார்வோனோடு கர்த்தர் பேசினார் (IIநாளா. 35:21) என்பதனை அவனால் ஜீரணிக்கமுடியவில்லை. யோசியா ராஜாவினால் அதனை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை; இந்த மாதிரியான தவறுகளை நாமும் விடுவதுண்டு. மிகவும் சொற்பமான தகவல்களே கொடுக்கப்பட்டிருக்கிறபடியினால், அபிப்பிராயத்தைமட்டுமே நாம் மேற்கொள்ளமுடியும். கர்த்தர் கழுதை மூலமும் பேசமுடியும் (எண். 22:30), பின்வாங்கிப்போன தீர்க்கதரிசியின்மூலமும் பேசமுடியும் (Iஇராஜா. 13:19-22); அபிமெலேக்கு மூலமும் பேசமுடியும் (ஆதி. 20:3-7).

இப்படியிருக்க, யோசியாவின் சீர்திருத்தங்கள் யூதாவில் பலமாக இருந்தும், யூதேயாவினருடைய இருதயம் கர்த்தரிடத்தில் அவ்வளவாகத் திரும்பவில்லை; ஆனபடியினால், கர்த்தர் யோசியாவைத் தன்னிடமாக எடுத்துக்கொண்டார். ஏனென்றால், யூதேயாவுக்கு நியாயத்தீர்ப்பின் காலம் நெருங்கிவிட்டது. இதனை மனதில் வைத்தே ஏசாயா தீர்க்கதரிசி “நீதிமான் மடிந்துபோகிறான், ஒருவரும் அதை மனதில் வைக்கிறதில்லை; புத்திமான்கள் எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள், ஆனாலும் தீங்கு வராததற்குமுன்னே நீதிமான் எடுத்துக்கொள்ளப்படுகிறான் என்பதைச் சிந்திப்பார் இல்லை” என ஏசாயா 57:1ல் கூறியிருந்தான்.

04/06/2026

The Crossway Ministries
அநுதினமும் சிலுவையைச் சுமப்போம்

ஜுன் 4

அப்பொழுது உசியா கோபங்கொண்டான்; அவன் தூபகலசத்தைத் தன் கையிலே பிடித்து, ஆசாரியரோடே கோபமாய்ப் பேசுகிறபோது, ஆசாரியருக்கு முன்பாகக் கர்த்தருடைய ஆலயத்திலே தூபபீடத்தின் முன்நிற்கிற அவனுடைய நெற்றியிலே குஷ்டரோகம் தோன்றிற்று. பிரதான ஆசாரியனாகிய அசரியாவும் சகல ஆசாரியரும் அவனைப் பார்க்கும்போது, இதோ, அவன் தன் நெற்றியிலே குஷ்டரோகம் பிடித்தவனென்றுகண்டு, அவனைத் தீவிரமாய் அங்கிருந்து வெளிப்படப்பண்ணினார்கள்; கர்த்தர் தன்னை அடித்ததினால் அவன் தானும் வெளியே போகத்தீவிரப்பட்டான் (II நாளா. 26:19-20).

“உசியாவின் நெற்றியிலே குஷ்டரோகம்”

இரட்சகருடைய தலையீடு இல்லாமல் தேவனைத் தொழுதுகொள்ள முயற்சித்தபடியினால், கர்த்தர் அவனைக் குஷ்டரோகத்தினால் அடித்தார். பிரதான ஆசாரியருடைய நெற்றியில் “கர்த்தருக்குப் பரிசுத்தம்” என்று எழுதப்பட்ட பொற்தகடு கட்டப்பட்டிருக்கிறது. உசியாவினுடைய நெற்றியிலோ பாவம் நிறைந்திருக்கிறது என்பதற்கு அறிகுறியாகக் குஷ்டரோகம் காண்பிக்கப்பட்டிருக்கிறது. நாம் எப்பொழுதும் அறிந்திருக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், ஒரு விசுவாசியைப் பொறுத்தளவில் அவனுக்குக் கிறிஸ்துவே ஆதாரம் என்பதனையும், சிலுவையின் மூலமாகவே சகலதும் அவனுக்குக் கிடைக்கிறது என்பதனையும் அவன் உறுதியாக அறிந்திருக்கவேண்டும். சிலுவையல்லாமல் கர்த்தரிடத்திலிருந்து வேறேதாவது வழியில் நம்முடைய தேவைகளைப்பெற முயற்சிப்போமானால், உசியா நானே இரட்சகரென உரிமைகோரினதுபோல, சிலவேளைகளில் அறிந்தோ அறியாமலோ நாமும் நாமே இரட்சகர் என்று உரிமைகோருகிறோம்.

உசியா தன்னைத் தேவன் கொல்லப்போகிறார் எனப் பயந்து “தானும் வெளியே போகத்தீவிரப்பட்டான்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. தேவனுடைய இரக்கத்தினால் உடனடியாக மரிக்காமல் தப்பினான். இப்படியே சுய இரட்சகர்களுக்கும் நடக்கும் என்பதனை அறிந்திருப்போமாக; குஷ்டரோகம் அவனுடைய நெற்றியில் ஆரம்பமாயிற்று; ஆனால், பரிசுத்தத்தைப் பிரதிபலிக்கிற பொற்தகடு பிரதான ஆசாரியரின் நெற்றியில் அணியப்பட்டிருக்கிறது. அந்தச் சிறப்புப் பெயருக்குத் தகுதியானவர் கிறிஸ்து ஒருவரேயாகும். கிறிஸ்துவையும், அவர் சிலுவையில் நிறைவேற்றியதையும் விசுவாசிக்கும்பொழுதே மனுஷன் பரிசுத்தமாயிருக்கிறான். கிறிஸ்துவில் பொருத்தமான விசுவாசத்தை வெளிப்படுத்தும்பொழுதே தேவநீதியும், பரிசுத்தமும் ஒருவன்மேல் உடனடியாகவே சுமத்தப்படுகிறது; அப்படியில்லாவிட்டால், பரிசுத்தம் அவனில் இல்லை; குஷ்டரோகமே அவனில் இருக்கிறது; ஆயினும், உசியா மனந்திரும்பினதாக வேதத்தில் சொல்லப்படவில்லை (IIநாளா. 26:23).

03/06/2026

The Crossway Ministries
அநுதினமும் சிலுவையைச் சுமப்போம்

ஜுன் 3

அவன் பலப்பட்டபோது, தனக்குக் கேடுண்டாகுமட்டும், அவனுடைய மனம் மேட்டிமையாகி, தன் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக மீறுதல் செய்து, தூபபீடத்தின்மேல் தூபங்காட்ட கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசித்தான் (IIநாளா. 26:16).

“உசியாவின் பாவம்”

உசியா பலப்படுமட்டும் ஆச்சரியமாக அவனுக்கு அனுகூலம் உண்டாயிற்று என்றும், அவனுடைய கீர்த்தி வெகுதூரம் பரம்பிற்று என்றும் IIநாளாகமம் 26:15ல் சொல்லப்பட்டிருக்கிறது; தேவன் அவனை ஆசீர்வதித்தார்; ஆனால், அவன் பலப்பட்டபொழுது ஆபத்தான மண்டலத்திற்குள் பிரவேசித்தான். பவுல் அப்போஸ்தலரோ தான் எப்பொழுது பலமாயிருந்தார் என்பதுபற்றி IIகொரிந்தியர் 12:10ல் “அந்தப்படி நான் பலவீனனாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்; ஆகையால் கிறிஸ்துவினிமித்தம் எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்” எனக் கூறியிருப்பதை நாம் அவதானமாகக் கவனிக்கவேண்டும்.

ஆனால், நாம் நினைப்பதைவிட உசியாவின் மீறுதல் விபரீதமானது; பொன்தூபபீடத்தில் தூபங்காட்ட எடுத்த முயற்சியின் நிமித்தம் தனக்கு ஒரு இரட்சகர் தேவையில்லை என அவன் பிரகடனப்படுத்துகிறான். ஆசாரியர் ஒருவனே தூபம் காட்டமுடியும்; ஏனென்றால், அவன் கிறிஸ்துவின் மாதிரியும், கிறிஸ்து தேவனுக்கும் மனுஷனுக்குமிடையில் மத்தியஸ்தராகவும் இருக்கிறதைப் பிரதிபலிக்கும் மாதிரியாகவும் இருக்கிறபடியினால், ஆசாரியரைத்தவிர வேறொருவரும் தூபம் காட்டமுயற்சிக்கக்கூடாது.

அப்படியே தற்போதைய கிறிஸ்தவ சபையினரும் சிலுவையை உதாசீனஞ்செய்து, அதனை நிராகரித்து, தங்களுடைய பாவச்செயல்களை உறுதிப்படுத்துகின்றனர். கிறிஸ்துவை இரட்சகராகத் தொழுதுகொள்ளவேண்டும்; சிலுவையின்மூலமே அவர் நம்முடைய இரட்சகராக இருக்கிறார் (Iகொரி. 1:17-18, 23, 2:2). ஒருவன் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை வேறேதாவது வழியினால் தொழுதுகொண்டால் அல்லது வேறொரு வழியினால், அவரைத் தேடினால், அவன் வேறொரு இயேசுவையே தேடுகிறான்; வேறொரு இயேசுவைத் தேவன் ஒருபொழுதும் ஏற்றுக்கொள்ளமாட்டார் (IIகொரி. 11:4).

02/06/2026

The Crossway Ministries
அநுதினமும் சிலுவையைச் சுமப்போம்

ஜுன் 2

அப்பொழுது தேவனுடைய ஆவி ஆசாரியனாகிய யோய்தாவின் குமாரனான சகரியாவின்மேல் இறங்கினதினால், அவன் ஜனத்திற்கு எதிரே நின்று: நீங்கள் கர்த்தருடைய கற்பனைகளை மீறுகிறது என்ன? இதினால் நீங்கள் சித்திபெறமாட்டீர்களென்று தேவன் சொல்லுகிறார்; நீங்கள் கர்த்தரை விட்டுவிட்டதினால் அவர் உங்களைக் கைவிடுவார் என்றான் (II நாளா. 24:20).

“தேவனுடைய ஆவி சகரியாவின்மேல் இறங்கியது”

தன் தகப்பனாகிய யோய்தா மரணமடைந்த பின்பு, அவன் குமாரனாகிய சகரியா பிரதான ஆசாரியனாயிருந்தான். விசுவாசி தேவனுடைய கட்டளைகளை மீறும்பொழுது, பணத்தின் ஐசுவரியத்தைப்பெற்றாலும், நிச்சயமாக ஆவிக்குரிய ஐசுவரியத்தைப் பெறமாட்டான். இந்த உண்மையை சகரியாமூலம் கர்த்தருடைய ஆவியானவர் எல்லா மனுஷரும் விளங்கக்கூடிய முறையில் ஒரு தீர்க்கதரிசனத்தைக் கொடுத்தார். அதென்னவென்றால், “நீங்கள் கர்த்தரை விட்டுவிட்டதினால் அவர் உங்களைக் கைவிடுவார்” என்பதேயாகும். அப்படியானால், நாம் அவரை விட்டுவிடாதிருந்தால், அவரும் நம்மைக் கைவிடமாட்டார் என்பது தெளிவாகிறது.

ஆவியானவருடைய அசைவாட்டம் இருந்தால், நிச்சயமாக அங்கே பிசாசின் அசைவாட்டமும் உண்டு என்பதனை நாம் அறிந்திருக்கவேண்டும்; மேற்கூறிய தீர்க்கதரிசனம் வெளிப்பட்டவுடன், ராஜாவும், அவனிடம் வந்துசேர்ந்த யூதேயாவின் பிரபுக்களும் கோபமடைந்து, சகரியாவுக்கு விரோதமாகக் கட்டுப்பாடுபண்ணி, அவனைக் கல்லெறிந்து கொன்றார்கள். இங்கு சொல்லப்பட்டிருக்கும் சகரியா, சகரியா புஸ்தகத்தை எழுதிய தீர்க்கதரிசி அல்ல என்பதனை நாம் அறிந்திருக்கவேண்டும். இரண்டு சகரியாவும் கல்லால் எறியப்பட்டு மாண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவன் ஆலயப்பிராகாரத்திலும் (IIநாளா. 24:21), மற்றவன் தேவாலயத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவேயும் (மத். 23:35) கல்லினால் எறிந்து கொல்லப்பட்டனர்.

சகரியா மரிக்கும்பொழுது “....கர்த்தர் அதைப் பார்ப்பார், அதைக் கேட்பார் என்றான்” (IIநாளா. 24:22); அப்படியே நியாயத்தீர்ப்பு அவர்கள் எல்லார்மேலும் வந்தது (IIநாளா. 24:23-25). நடந்த சம்பவத்தைப் பார்க்கும்பொழுது யோவாஸ் பரலோகத்திற்குச் சென்றிருப்பானா என்பது சந்தேகமாயிருக்கிறது. எப்படியான ஆரம்பம் எப்படி முடிந்தது? இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய படிப்பினை, மனுஷன் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவதொன்றே தேவையானது; ஆனால், அவன் விசுவாசத்திற்குக் கீழ்ப்படியாவிட்டால், தேவனுடைய வார்த்தைக்கும் கீழ்ப்படிய அவனால் முடியாது; கீழ்ப்படியவேண்டிய அந்த விசுவாசம், சிலுவையில் அறையப்பட்ட இயேசுகிறிஸ்துவாகும் (Iகொரி. 2:2).

02/06/2026

The Crossway Ministries
அநுதினமும் சிலுவையைச் சுமப்போம்

ஜுன் 1

யோய்தா மரணமடைந்தபின்பு யூதாவின் பிரபுக்கள் வந்து, ராஜாவைப் பணிந்துகொண்டார்கள்; அப்பொழுது ராஜா அவர்களுக்குச் செவிகொடுத்தான். அப்படியே அவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தை விட்டுவிட்டு, தோப்பு விக்கிரகங்களையும் சிலைகளையும் சேவித்தார்கள்; அப்பொழுது அவர்கள் செய்த இந்தக் குற்றத்தினிமித்தம் யூதாவின் மேலும் எருசலேமின்மேலும் கடுங்கோபம் மூண்டது (II நாளா. 24:17-18).

“யோய்தா மரணமடைந்தபின்பு”

யோவாஸ் ராஜா தன்னுடைய ஆட்சியின் ஆரம்பத்தில் ஆசாரியனாகிய யோய்தாவின் பக்கம் திரும்பியிருந்தான். யோய்தா தேவனுடைய மனுஷனாயிருந்தான். யோய்தா மரணமடைந்த பின்பு, யோவாஸ் யூதாவின் பிரபுக்கள் பக்கம் திரும்பி, அவர்களுக்குச் செவிகொடுத்தான். அவர்களோ அநீதியான கொடுமையான மனுஷராக இருந்தார்கள். மனுஷன் நல்லவனாயிருந்தாலென்ன, கொடுமை நிறைந்தவனாயிருந்தாலென்ன மனுஷனுக்குச் செவிகொடுப்பது நாசத்தையே ஏற்படுத்தும். யோவாஸ் ராஜா தேவனுக்குச் செவிகொடுத்து, அவர் பக்கம் திரும்பி இருந்தால், அவனுடைய வரலாறு எவ்வளவு பிரகாசமாயிருந்திருக்கும்.

யூதாவின் பிரபுக்கள் ராஜாவாகிய யோவாசைச் சத்தியத்தைவிட்டு விலக்கி, பாவத்துக்குள் வழிநடத்தினார்கள். வழமையாக ராஜாக்களே, பிரபுக்களையும், ஜனங்களையும் தவறான வழியில் நடத்துபவர்களாயிருந்தார்கள்; ஆனால், இங்கு அப்படியில்லை; தேவனுடைய கோபம் எந்தக் காலத்திலும் பாவத்தின்மேல் கட்டாயமாக வரவேண்டும். பாவம் என்ன ரூபத்தில் வந்தாலும், தேவன் அதனைச்சகிக்கமாட்டார். அப்படியாயின், மனுஷனுக்கு இருக்கும் ஒரேவழி, கல்வாரி சிலுவையில், நம்முடைய பாவத்துக்காகக் கிறிஸ்துவின்மேல் விழுந்த கோபத்தை ஏற்றுக்கொள்வதேயாகும். கிறிஸ்து எந்தப் பாவமும் செய்யவில்லை, அவரில் எந்தப் பாவமும் இல்லை (Iகொரி. 5:21; எபி 7:26); அவர் நமக்காகச் சிலுவையில் நிறைவேற்றியதை ஏற்றுக்கொள்வதொன்றே நமக்கிருக்கும் ஒரே விடுதலையாகும்; அப்படியில்லாவிட்டால், நம்மேல் விழுந்த கோபத்தை அனுபவிக்கவேண்டியதேதவிர வேறெந்த வழியும் நமக்கு இல்லை.
தேவன் ஒருபொழுதும் மனுஷனை அழிந்துபோக, அவன் பாட்டுக்கு விடுவதில்லை; அவர் கடைசிவரையும் தன்னிடம் திருப்புவதற்கு முயற்சிசெய்வார்; மனுஷன் செவிகொடுத்தால், பிழைப்பான் இல்லையேல், தன்னைத்தான் அழித்துக்கொள்ளுவான். அவர்களே தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள் என IIநாளாகமம் 24:19ல் சொல்லப்பட்டிருக்கிறது. சத்தியத்தைவிட்டு விலகினால், அவர்களைப் பாதுகாப்பதற்கு வேறெந்தப் பெலனும் போதுமானதல்ல (யோவா. 8:32).

Address

498E, Thomson Building
Vallioor
627117

Alerts

Be the first to know and let us send you an email when Mahimai TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mahimai TV:

Share

Category