14/09/2026
The Crossway Ministries
அநுதினமும் சிலுவையைச் சுமப்போம்
செப்டம்பர் 14
அப்பொழுது அவர்கள் அவரை நோக்கி: தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது என்றார் (யோவா. 6:28-29).
“மனுஷகுலமும் நற்கிரியைகளும்”
இரட்சிக்கபட்டாலென்ன, இரட்சிக்கப்படாவிட்டாலென்ன இயற்கையாகவே தம்முடைய இரட்சிப்புக்கு தாம் ஏதாவது செய்யவேண்டுமென்கிற விருப்பம் மனுஷகுலத்திற்கு உண்டு. இந்த நிலைப்பாடு சுயாதீனத்தின் அடிப்படையில் உருவானது; மனுஷனுடைய வீழ்ச்சிக்குப்பின்பு (ஆவியில் மரித்தபின்பு), அவன் தேவனை நம்பியிருப்பதைத் தவிர்த்து, தன்னைத்தான் நம்பியிருப்பதைத் தெரிந்துகொண்டான். ஆவியில் மரணம் சம்பவித்த காலந்தொட்டு (தேவனைவிட்டு விலகிய காலந்தொட்டு), தேவநீதி அவனுக்குக் கிடைக்காமற்போனதன் நிமித்தம் சுயநீதியை நாடுவதைத்தவிர, வேறெந்த வழியும் அவனுக்கு இருக்கவில்லை; சுயமே அவனுடைய வல்லமையின் ஆதாரமாயிருந்தது; ஆனபடியினால், அவன் சுயபலத்தை விரும்புகிறானேயன்றித் தேவபலத்தை ஏற்றுக்கொள்ள விரும்புவதில்லை.
சுயநீதி அவனை நியாயப்பிரமாணத்திற்குள் இழுத்துச்சென்றதன் நிமித்தம் கிரியைகளைச் செய்வதற்கு அவன் பிரியமாக இருக்கிறான். சுயநீதியை அகற்றிப் பிரமாணங்களைத் தவிர்த்து, கிரியைகளை நம்பியிராமல் தேவனைமட்டும் விசுவாசிப்பது என்பது மனுஷபலத்தினால் முடியாத காரியமாகும். அவனுடைய சுயநீதியில் இரண்டுவிதமான சாபக்கேடுகள் உண்டு. சுயநீதியில் தங்கியிருப்போர் தாம் நீதிமான்களென நினைத்து, மற்றவர்களை அற்பமாக எண்ணுகிறார்கள் (லூக். 18:9) ; ஆனால், கிறிஸ்து “....என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது” (யோவா. 15:5) எனவும், “மிகவும் அற்பமான காரியமுதலாய் உங்களால் செய்யக்கூடாதிருக்க, மற்றவைகளுக்காக நீங்கள் கவலைப்படுகிறதென்ன?” (லூக். 12:26) எனவும் கூறியிருக்கிறார்.
இப்படியிருக்க, இஸ்ரவேலிய புத்திரர்கள் தாம் ஏதாவது செய்யவேண்டும் என்பதில் பிடிவாதமாயிருந்தார்கள்; ஆனால், கிறிஸ்துவோ அவர்கள் கிருபையைத் தவிர்த்துக் கிரியைகளின்மூலம் தேவனிடத்தில் வரமுடியாது என்பதனை அவர்களுக்குப் பிரதியுத்தரமாக “.....அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது” என வலியுறுத்தினார் (யோவா. 6:29); அப்படியாயின், கிரியைகள் தேவையில்லை எனக் கூறுகிறோமோ? இல்லவேயில்லை, அவைகள் இரட்சிக்கப்பட்டோருக்காக ஏற்கனவே பரிசுத்த ஆவியானவரினால் நியமிக்கப்பட்டிருக்கிறது (எபேசி. 2:10; பிலி. 1:5, 2:13). பொருத்தமான விசுவாசம், பொருத்தமான கிரியைகளை அதிகரிக்கச்செய்யும்; கிரியைகள் இல்லாத விசுவாசம் செத்ததாயிருக்கும் (யாக். 2:20). ஆகையால், நாம் விசுவாசத்தின்மூலம் பெற்ற நீதியைப் பாதுகாப்பதற்குத் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக்கொண்டு, கிறிஸ்துவைப் பின்பற்றுவோமாக; இதுவே தேவனுடைய வழியாகும் (லூக். 9:23).