29/08/2026
ஆறு தசாப்தங்களுக்கும் மேலான கலைப் பயணம்: திஹாரியில் கௌரவிக்கப்பட்ட சிரேஷ்ட கலைஞர் ஞெய் ரஹீம் சஹீத்.
இலங்கை வானொலி மற்றும் தொலைக்காட்சித் துறையில் ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக கலை மற்றும் ஒலிபரப்புப் பணியாற்றி வரும் சிரேஷ்ட கலைஞரும் அறிவிப்பாளருமான கலாபூஷணம் ஞெய் ரஹீம் சஹீத் கௌரவிக்கப்பட்டார்.
1963ஆம் ஆண்டு இலங்கை வானொலியின் முஸ்லிம் மற்றும் தமிழ்ச் சேவைகளுக்கான கலைஞர் தேர்வுகளில் வெற்றி பெற்ற இவர், அறிவிப்பாளர், நடிகர், பாடகர் என பல்வேறு துறைகளில் தொடர்ச்சியாகப் பங்களித்து வருகிறார்.
குறிப்பாக, தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘அபு நானா’ நாடகத்தில் இவர் ஏற்ற ‘ஆரிபா தாத்தா’ கதாபாத்திரம் மூலம் மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டார்.
இலங்கை தமிழ் மற்றும் சிங்களத் திரைப்படங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் மற்றும் விளம்பரங்களிலும் இவர் தனது கலைப் பங்களிப்பை வழங்கியுள்ளார்.
‘கலைத் தாரகை’, ‘நவரசத் திலகம்’, ‘முத்தமிழ் தாரகை’, ‘கலாபூஷணம்’ உள்ளிட்ட பல கௌரவப் பட்டங்களைப் பெற்றுள்ள இவர், 2025ஆம் ஆண்டு இலங்கை வானொலியின் நூற்றாண்டு விழாவையொட்டி களனி பல்கலைக்கழகத்தினால் வானொலி வளர்ச்சிக்கு பங்களித்த முன்னோடிகளில் ஒருவராக கௌரவிக்கப்பட்டார்.
திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் நடைபெற்ற “ரேடியோ மீலாத் 2026” நிகழ்வில், முஸ்லிம் சேவைக்கும் கலைத்துறைக்கும் ஆற்றிய நீண்டகால பங்களிப்பைப் பாராட்டி கலாபூஷணம் ஞெய் ரஹீம் சஹீத் கௌரவிக்கப்பட்டார்.
--- திஹாரிய நியூஸ் ---