28/08/2025
சம்புக்களப்பில் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் சல்வீனியாவை துப்புரவு செய்ததை வைத்துக் கொண்டு சம்புக்களப்பு வடிச்சலை நிறைவு செய்தது போன்று பேசுவது கவலைக்குரிய விடயமாகும்..!
கே எ ஹமீட்
அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தெரிவிப்பு
ஒவ்வொரு வருடமும் சம்புக்களப்பில் வந்தடையும் சல்வீனியாவை அக்கரைப்பற்று நீர்ப்பாசனத் திணைக்களம் துப்பரவு செய்வது வழமையாகும். இதனை வைத்து சம்புக்களப்பு வடிச்சல் திட்டம் நிறைவு செய்தது போன்று பேசுவது கவலைக்குரிய விடயமாகும் என அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா தலைமையில் நேற்று (27.08.2025) நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்…
சம்புக்களப்பு வடிச்சல், அட்டாளைச்சேனை கோணாவத்தை வடிச்சல் நீண்டகாலமாக நீர் வடியாமல் தடைப்பட்டிருந்தன. இவ்வடிச்சல் திட்டத்திற்காக முன்னாள் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவும், கிழக்கு மாகாண சபை அமைச்சராக பதவி வகித்த நானும் இத்திட்டத்தினை ஆரம்பிப்பதற்காக இரண்டு லெஜர் சம்புக்களப்பு வடிச்சல் தோண்டுவதற்கு நீர்ப்பாசன திணைக்களத்திற்கு வழங்கி வடிச்சல் திட்டத்தினை ஆரம்பித்ததுடன் அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றில் நீண்டகாலமாக தடைப்பட்டிருந்த தடைகளை நீக்கியது மாத்திரமல்லாது 5000 தென்னை மரங்களை தறித்து அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றினை அகலப்படுத்தும் வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தினோம். இதனால் இன்று அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று பிரதேசங்களில் வெள்ள காலத்தில் நீர் வழிந்தோடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
உலக வங்கியினால் இரண்டு வருடங்களுக்கு முன் சம்புக்களப்பு (தில்லையாறு) அகலமாக்கும் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 30 மில்லியன் ரூபா இதுவரையும் செலவு செய்யாத நிலமை தோன்றியுள்ளது. இது தொடர்பாக நான் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இரண்டு தடவைகள் கோரிக்கை விடுத்தும் இதுவரையும் இந்த நிதியினை செலவு செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை. இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்காமல் 76 வருட காலமாக சம்புக்களப்பு வடிச்சல் தொடர்பாக முன்னாள் அரசியல்வாதிகள் எதுவும் செய்யவில்லை என தெரிவிப்பது குறித்து தான் கவலையடைவதாகவும், அரசியல் அதிகாரம் கிடைத்துள்ளது என்பதற்காக வரலாறுகளை மறந்து பேசுவதை பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா எம்.பி உடன் நிறுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
எங்களின் அரசியல் பாதையில் அபிவிருத்தி பணிகளை யார் செய்தாலும் நாங்கள் ஆதரவு வழங்கியுள்ளோம் என்.பி.பி அரசாங்கத்திற்கு அம்பாறை மாவட்ட மக்கள் அதிகமான வாக்குகளை அளித்துள்ளனர். ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் மக்கள் பணிகளை நிறைவேற்ற வேண்டும். நாங்கள் ஒரு காலத்தில் மக்களுக்கான அபிவிருத்திப் பணிகளை முடிந்தளவு செய்திருக்கின்றோம். ஆதம்பாவா (எம்.பி)அவர்கள் அம்பாறை மாவட்ட மக்களுக்கு வேகமாக இயங்கி பல அபிவிருத்தி திட்டங்களை நிறைவு செய்துவிட்டு எங்களால் மக்களுக்கு பூர்த்தி செய்யப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை ஒப்பிட்டு பார்த்து ஆதம்பாவா எம்.பி எங்களை விட அதிகமான அபிவிருத்தித் திட்டங்களை மக்களுக்கு பூர்த்தி செய்தால் நாங்களும் அவரை வாழ்த்துவோம்.
நாங்கள் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். எங்களின் குரல்களால் மக்களுக்கான நல்ல பணிகள் சில நடைபெற்று வருகின்றன.
புதிய அரசாங்கம் ஊழலில் ஈடுபட்ட முன்னாள் அரசியல் பிரமுகர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை எடுப்பதுடன், புதிய அரசியல்வாதிகளுக்கும் எதிரான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது பாராட்டப்பட வேண்டிய விடயமாகும். எனவே, புதிய அரசியல்வாதிகளும் கவனமாக செயல்பட வேண்டும் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் என்பது பிரதேச மக்கள் பிரதிநிதிகளும், அரச உயர் அதிகாரிகளும் ஒன்றிணைந்து மக்களின் தேவைகளை நிறைவேற்றும் இடமாகும். அபிவிருத்திக் கூட்டத்தை அரசியல் கூட்டமாக மாற்றும் செயற்பாடுகள் இனிமேல் நடைபெறக்கூடாது எனவும், அரசியல் பேசுவது என்றால் மக்கள் மத்தியில் மேடை அமைத்து நாம் பேசுவோம் எனவும் அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானம், தீகவாபி விளையாட்டு மைதானம், ஒலுவில் விளையாட்டு மைதானம், பாலமுனை ரக்பி விளையாட்டு மைதான அபிவிருத்தி தொடர்பாக நான் பாராளுமன்றத்தில் விளையாட்டு அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் கோரிக்கை விடுத்துள்ளேன்.
அட்டாளைச்சேனை, ஒலுவில், பாலமுனை, திராய்க்கேணி, தீகவாபி பிரதேசங்களுக்கான மாஸ்டர் பிளேன் (Master Plan) தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநரிடம் நான் கோரிக்கை விடுத்ததை அடுத்து ஆளுநர் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு மாஸ்டர் பிளேன் (Master Plan) தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு பணிப்புரை வழங்கியுள்ளார். எனவே, பிரதேச செயலகம் மாஸ்டர் பிளேன் (Master Plan) தொடர்பான செயற்பாடுகளில் இணைந்து செயற்படுவதுடன், எதிர்காலத்தில் நடைபெறும் அபிவிருத்தித் திட்டங்களை இவ் மாஸ்டர் பிளேன் (Master Plan) ஊடாக முன்னெடுக்க வேண்டும்.
அட்டாளைச்சேனை அஷ்ரப் வீதியின் மிகுதிப் பணிகள், 12 கிராமிய பாலங்கள் அமைத்தல், ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை OPA வீதியினை வீதி அதிகார சபைக்கு பாரம் கொடுப்பதுடன் கல்முனையில் இருந்து ஒலுவில், சின்னப்பாலமுனை, அட்டாளைச்சேனை ஊடாக அக்கரைப்பற்றுக்கு புதிய பஸ் சேவையினை ஏற்படுத்துவதுடன் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அமைந்துள்ள 11 வட்டாரங்களில் கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கான முன்மொழிவுகளும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
ஒலுவில் பொண்ணன்வெளிக் காணிகளை இழந்தவர்களுக்கு காணி வழங்குவது தொடர்பான முன்மொழிவுகளை அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நீண்ட நேரம் விபரங்களை பெற்றுவிட்டு அம்பாறை கச்சேரியில் நடைபெறும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பொண்ணன்வெளி காணி இழந்தவர்கள் முறையிடலாம் என ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஆதம்பாவா (எம்.பி) அவர்கள் கூறுவது தவறான விடயமாகும். அட்டாளைச்சேனைப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பொண்ணன்வெளி காணி இழந்தவர்களுக்கு காணி வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை மேற்கொண்டு விட்டு அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு இது தொடர்பான விபரங்களை அனுப்பி வையுங்கள். பொண்ணன்வெளி காணி தொடர்பான விடயங்களை அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முன்மொழிய யாரும் இல்லையெனில் என்னால் அடுத்த அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இது தொடர்பான முன்மொழிவினை சமர்ப்பிக்க முடியும் என அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.