23/10/2025
ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச தினம்: சவூதி அரேபியாவும் உலகளாவிய அமைதி மற்றும் வளர்ச்சியை ஆதரிப்பதில் அதன் செயலுறு வகிபாகமும்.
எழுத்து: இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் கெளரவ காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானி
ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் 24 ஆம் திகதி அன்று, உலக நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச தினத்தைக் கொண்டாடுகின்றன. இந்த நாள், சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை அடைவதற்கும், நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சர்வதேச அமைப்பை நிறுவிய, 1945 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் நடைமுறைக்கு வந்ததை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படுகிறது. உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளவும், மக்களிடையே அமைதி மற்றும் புரிதலின் மதிப்புகளை மேம்படுத்தவும் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் கூட்டு நடவடிக்கையின் முக்கியத்துவத்தை உறுப்பு நாடுகளுக்கு நினைவூட்டுவதற்கும் இந்த நாள் உதவுகிறது.
சவூதி அரேபியா, இந்த அமைப்பின் நிறுவன உறுப்பினராக இணைந்ததிலிருந்து, ஐக்கிய நாடுகள் சபையின் இலக்குகளை ஆதரிப்பதில் ஒரு முன்னணி நாடாகத் திகழ்ந்து வருகிறது. மோதல்கள் மற்றும் இயற்கை பேரழிவுகள் இடம்பெறும் பாகங்களில் மனிதாபிமான மற்றும் நிவாரண பங்களிப்புகள் மற்றும் குறிப்பாக வளரும் நாடுகளில், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட வளர்ச்சித் திட்டங்களுக்கு தொடர்ச்சியான ஆதரவு வழங்குவதன் மூலம் சர்வதேச ஒத்துழைப்பின் மதிப்புகளை உறுதியான யதார்த்தமாக மாற்றுவதற்கு சவூதி அரேபியா எப்போதும் முயற்சித்து வருகிறது. இந்த முயற்சியானது, அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் நிலையான வளர்ச்சி ஆகிய கொள்கைகளுக்கான சவூதி அரேபியாவின் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாகும். மேலும் இது, பொதுவான சவால்களை எதிர்கொள்ள சர்வதேச ஒத்துழைப்புதான் சிறந்த வழி என்பதை உலகிற்கு உணர்த்தும் ஒரு சிறந்த செய்தியுமாகக் கருதப்படுகிறது.
மோதல்கள் மற்றும் இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவிகளை வழங்குவதன் மூலம் நேரடி மனிதாபிமான பங்களிப்புகள், உலகின் பல்வேறு பகுதிகளில் அகதிகள் மற்றும் இடம்பெயர்ந்தோரை ஆதரிப்பது உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் சவூதி அரேபியாவின் முயற்சிகள் தெளிவாகத் தெரிகின்றன. கல்வி, சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் முதலீடு செய்வதன் மூலமும், வறுமை, பசி மற்றும் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளில் பங்கேற்பதன் மூலமும், ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான அதன் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் வகையில், சவூதி அரேபியா நிலையான வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது.
மேலும், மக்கள் மற்றும் கலாச்சாரங்களிடையே சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வின் மதிப்புகளை ஊக்குவிப்பதிலும், காலநிலை மாற்றம், உணவுப் பாதுகாப்பு, சுத்தமான எரிசக்தி மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் போன்ற பொதுவான உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதிலும் சவூதி அரேபியா குறிப்பிடத்தக்க அளவு பங்களிப்புச் செய்கிறது. இந்த முயற்சிகள் அனைத்தும் சவூதி அரேபியாவின் விஷன் 2030 உடன் இணங்கிச்செல்கின்றன. இது சவூதி அரேபியாவின் மனிதாபிமான மற்றும் சர்வதேச வகிபாகத்தின் முக்கியத்துவத்தையும் பிராந்திய மற்றும் சர்வதேச மட்டங்களில் நேர்மறையான மற்றும் நிலையான தாக்கத்தை உருவாக்குவதற்கான அதன் முயற்சிகளையும் வலியுறுத்தி நிற்கின்றன.
மனிதகுலத்திற்கு மிகவும் நிலையான மற்றும் வளமான எதிர்காலத்தை அடைவதற்கு சர்வதேச கூட்டுச் செயற்பாடே சிறந்த வழி என்பதை சவூதி அரேபியா தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கைகளுக்கான அதன் அர்ப்பணிப்பு வெறும் கோஷம் மட்டுமல்ல, மாறாக அனைத்து ஐ.நா. முயற்சிகள் மற்றும் திட்டங்களிலும் தீவிரமாக பங்கேற்பதன் மூலமும், உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு உதவும் சர்வதேச தீர்மானங்களுக்கு ஆதரவளிப்பதும், ஒரு நடைமுறைச் செயற்பாடாகும்.
ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச தினத்தைக் கொண்டாடுவதென்பது, கூட்டு சர்வதேச சாதனைகளை முன்னிலைப்படுத்தவும், உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள ஒன்றிணைந்து செயல்படுவதற்கான நமது உறுதிப்பாட்டை புதுப்பிக்கவும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இந்நிலையில், சவூதி அரேபியா ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு தீவிர பங்காளியாக அதன் தலைமைப் பங்கைத் தொடர்ந்தும் செய்துவருகிறது. உலகளாவிய மட்டத்தில், அமைதி, அபிவிருத்தி மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதில் பங்களிப்புச்செய்யும் அதேவேளை நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பும் புரிதலும் அனைத்து மனிதகுலத்திற்கும் மிகவும் நியாயமான மற்றும் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான அடித்தளம் என்பதை எப்போதும் உறுதிப்படுத்துகிறது.