Rks தமிழ்

Rks தமிழ் செய்திகளை உடனுக்குடன் facebook மூலம் தெரி? News

வரலாற்றுச் சிறப்புமிக்க ஐ.நா. சுற்றுலாத் துறைப்  பொதுக் கூட்டம், உலக TOURISE உச்சிமாநாட்டையும் நடாத்த தயாராகும் சவூதி!எழ...
09/10/2025

வரலாற்றுச் சிறப்புமிக்க ஐ.நா. சுற்றுலாத் துறைப் பொதுக் கூட்டம், உலக TOURISE உச்சிமாநாட்டையும் நடாத்த தயாராகும் சவூதி!

எழுத்து- காலித் ரிஸ்வான்

வருகின்ற நவம்பர் மாதம் 7ம் திகதி முதல் 11 வரை சவூதி அரேபியா, ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுற்றுலா அமைப்பின் (UNWTO) பொதுக்குழுக் கூட்டத்தை ரியாத் நகரில் நாடாத்த தயாராகி வருகிறது.

உலக சுற்றுலா அமைப்பு பொன் விழாக்காணும் இவ்வாண்டில் இக்கூட்டம் சவூதி அரேபியாவில் நடாத்தப்படுவதானது ஒரு சிறப்புக்குரிய விடயமாக கருதப்படுகிறது. இந்தப் பொதுக் கூட்டமானது “எதிர்காலத்தை மீண்டும் வரையருக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு மயப்படுத்தப்பட்ட சுற்றுலா” என்ற கருப்பொருள் தாங்கி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வு, உலக அளவில் சுற்றுலா துறையில் செயற்கை நுண்ணறிவு (AI) எவ்வாறு புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது என்பதைக் கண்டறிந்து, புத்துணர்வு வாய்ந்த சுற்றுலாத் தளங்கள் முதல் நிலைத்திருக்கக்கூடிய பயண அனுபவங்கள் வரை அனைத்து அம்சங்களையும் ஆராயவுள்ளது.

இந்நிகழ்வில் 160க்கும் மேலான நாடுகள் பங்குபற்றவுள்ளதோடு சர்வதேச அமைப்புகள், தொழில்துறை வல்லுனர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களும் உலகளாவிய சுற்றுலாத் துறையின் அடுத்த கட்டத்தை வடிவமைக்க கைகோர்க்கவுள்ளனர். இந்த கூட்டத்தில் கொள்கைசார் கலந்துரையாடல்கள், செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் புதிய கண்டுபிடிப்புக்கள், மற்றும் சுற்றுலாவை மேலும் இணக்கமானதும் எதிர்காலத்திற்குத் தயாரானதுமானதாக்கும் நோக்கத்துடன் நடக்கும் முக்கிய தீர்மானமிக்க அமர்வுகளும் இடம்பெறவுள்ளன.

சவூதி அரேபியாவின் சுற்றுலாத் துறை அமைச்சர் அஹமத் அல்-கதீப் அவர்கள் இந் நிகழ்வு தொடர்பாக கூறியதாவது: “இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை உலக நாடுகளுக்காக நடத்துவதில் சவூதி அரேபியா பெருமைப்படுகிறது. இது சுற்றுலாத் துறை தொடர்பான கலந்துரையாடல்கள் மற்றும் ஒத்துழைப்பிற்கான மையமாக சவூதி அரேபியாவின் மீதான சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது,” என்று அவர் குறிப்பிட்டார். மேலும் கூறுகையில்: “நாடுகள் சுற்றுலாத் துறையில் இணைந்து செயல்படும் முறையை மறுபரிசீலனை செய்வதும், வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மைக்கான இயக்க சக்தியாக சுற்றுலாத் துறையின் பங்கினை வலுப்படுத்துவதும் எமது நோக்கமாகவுள்ளது.” எனவும் குறிப்பிட்டார்.

சவூதி அரேபியாவின் விஷன் 2030 திட்டத்தின் முக்கிய தூணாக விளங்கும் அதன் சுற்றுலாத் துறை வளர்ச்சியும் இந்நிகழ்வில் முக்கியமாக பேசப்படும் அம்சமாக இருக்கும். சவூதி மிக வேகமாக உலக சுற்றுலாத் துறையில் ஒரு சக்திவாய்ந்த மையமாக உருவெடுத்துள்ளது, புதுமை மற்றும் முதலீடு இணைந்தால், சுற்றுலாத் துறையை துரித பொருளாதார வளர்ச்சிக்கும் கலாச்சார பரிமாற்றத்திற்கும் ஊக்கமாக மாற்ற முடியும் என்பதை சவூதி அரேபியா எடுத்துக்காட்டுகிறது.

இந்த நிகழ்வு நடைபெறவிருக்கும் வாரம், புதிய ஐ.நா. சுற்றுலாத் துறை பொதுச்செயலாளர் தேர்வு, குழு அமர்வுகள், மேலும் சுற்றுலாத் துறையின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாட்டை மையப்படுத்திய கருப்பொருள் அமர்வுகள் போன்ற முக்கிய நிகழ்வுகளால் நிரம்பியதாக இருக்கும்.

பொதுக் கூட்டத்தினைத் தொடர்ந்து, நவம்பர் 11 முதல் 13 வரை உலகில் முதல் முறையாக நடைபெறும் TOURISE உச்சிமாநாட்டை சவூதி அரேபியா, ரியாத் நகரில் நடாத்த உள்ளது. இந்தப் புதிய உலகளாவிய மன்றத்தில், அரச அதிகாரிகள், தனியார் துறை தலைவர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் ஒரே இடத்தில் இணைத்து, நாளைய சுற்றுலாத் துறையை வடிவமைக்கும் சவால்கள் மற்றும் வாய்ப்புகளைப் பற்றிய கலந்துரையாடல்களை நடாத்தவுள்ளனர்.

நிலைத்தன்மை வாய்ந்த, அனைவரும் பங்குகொள்ளும் வகையிலான, தொழில்நுட்பமயமான சுற்றுலாத் துறையின் எதிர்காலத்திற்கான தெளிவான ஒரு திட்டத்தை உருவாக்குவதே இந்த TOURISE உச்சிமாநாட்டின் நோக்கமாகும். இந்த இலக்கு, தங்களின் சுற்றுலாத் துறையினை மீண்டும் உயிர்ப்பிக்கவும் நவீனமயப்படுத்தவும் முயலும் இலங்கை உள்ளிட்ட பல நாடுகளின் பொதுவான நோக்கமாகவும் உள்ளது.

இந்த இரண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகளை தொடர்ச்சியாக நடத்துவதன் மூலம், சவூதி அரேபியா சுற்றலா ஒத்துழைப்பு மற்றும் புத்தாக்கம் ஆகிய துறைகளில் உலகளாவிய முன்னணித் தலைமையாக தன் நிலையை மேலும் வலுப்படுத்துகிறது. இதன் மூலம், அடுத்த 50 ஆண்டுகளுக்கான சுற்றுலாத் துறையின் புதிய யுகத்திற்கான தளத்தை அமைக்கிறது.

"ரியாத் சர்வதேச புத்தகக் கண்காட்சி - 2025" இன்று ஆரம்பம்..!✍️ எஸ். சினீஸ் கான்சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில், “ரிய...
02/10/2025

"ரியாத் சர்வதேச புத்தகக் கண்காட்சி - 2025" இன்று ஆரம்பம்..!

✍️ எஸ். சினீஸ் கான்

சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில், “ரியாத் சர்வதேச புத்தகக் கண்காட்சி - 2025” இன்று (02-10-2025) ஆரம்பமாகியது. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து 2,000க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் பங்கேற்கும் இந்நிகழ்ச்சி, அரபு உலகின் மிகப் பெரிய பண்பாட்டு மேடைகளில் ஒன்றாக திகழ்கிறது.

இந்நிகழ்வை இலக்கியம், பதிப்பகம் மற்றும் மொழிபெயர்ப்பு ஆணையம் (Literature, Publishing and Translation Commission) ஏற்பாடு செய்துள்ளதுடன், இக் கண்காட்சி எதிர்வரும் அக்டோபர் 11 ஆம் திகதி வரை பிரின்சஸ் நூரா பின்த் அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது.

இந்த ஆண்டிற்கான விருந்தினர் நாடு “உஸ்பெகிஸ்தான்” ஆகும். இது, சவுதி அரேபியாவுக்கும் உஸ்பெகிஸ்தானுக்கும் இடையிலான பண்பாட்டு மற்றும் வரலாற்றுத் தொடர்புகளை பிரதிபலிக்கிறது.

புத்தகக் கண்காட்சியில் 200க்கும் மேற்பட்ட பண்பாட்டு நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன. சிறுவர்களுக்காக தனித்துவமான சிறுவர் பிரிவு அமைக்கப்பட்டு, குழந்தைகளின் வயதினை கருத்தில் கொண்டு பல்வேறு கல்வி மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.

மேலும், வணிக மண்டபம் (Business Zone) மீண்டும் தொடங்கப்படுகின்றது. இது பதிப்பகத் துறையில் சர்வதேச கூட்டுறவுகளை வலுப்படுத்தவும், புதிய வணிக வாய்ப்புகளை உருவாக்கவும் உதவும். இம்மண்டபத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், தொழில்முனைவோர் மற்றும் சர்வதேச இலக்கிய முகவர்கள் பங்கேற்கின்றனர்.

அத்துடன், தொழில்முனைவு, பதிப்புரிமை, உரிமம், புத்தக வெளியீடு போன்ற தலைப்புகளில் உரையாடல் அமர்வுகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகள் நடைபெறவுள்ளன.

இதனுடன், புகழ்பெற்ற எழுத்தாளர்கள், அறிவுஜீவிகள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் பங்கேற்பதால், இக்கண்காட்சி சவுதி அரேபியாவை உலக இலக்கியத்திற்கும் அறிவுத்துறைக்கும் முக்கிய சந்திப்பிடமாக மாற்றுகிறது.

இந்நிகழ்வுகள் அனைத்தும் சவுதி அரேபியாவை உலக பண்பாட்டு மற்றும் அறிவுத்துறையின் தலைசிறந்த மையமாக மாற்றும் தலைவர்களின் பார்வையும் வழிகாட்டுதலின் விளைவாக அமைகின்றன. இராச்சியத்தின் காவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் அல்சௌத் அவர்களின் தொலைநோக்கு பார்வையும், பிரதமர் முகம்மது பின் சல்மான் அவர்களின் “விஷன் 2030” நோக்கும், சவுதி அரேபியாவின் பண்பாட்டு முன்னேற்றத்தையும் உலகளாவிய இடத்தையும் வலுப்படுத்துகின்றன.

"சவூதி நூர்" திட்டம் வெற்றிகரமாக நிறைவு; இலங்கையில் ஆயிரக்கணக்கான நோயாளிகள் நன்மையடைந்தனர்..!சவூதி அரேபியாவிற்கும் இலங்க...
30/09/2025

"சவூதி நூர்" திட்டம் வெற்றிகரமாக நிறைவு; இலங்கையில் ஆயிரக்கணக்கான நோயாளிகள் நன்மையடைந்தனர்..!

சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால சிறப்பான உறவுகளை அடிப்பையாகக் கொண்டும் மற்றும் உலகெங்கிலும் உள்ள குறைந்த வருமானம் பெறும் மக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களின் துன்பத்தைத் துடைக்கும் நோக்கில், இரு புனிதஸ்த்தலங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் ஆல் ஸுஊத் மற்றும் பட்டத்து இளவரசரும் பிரதம மந்திரியுமான இளவரசர் முஹம்மத் பின் சல்மான் ஆல் ஸுஊத் அவர்களின் தலைமையிலான சவூதி அரேபிய அரசு மேற்கொள்ளும் முயற்சிகளின் அடிப்படையிலும், மன்னர் சல்மான் நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான மையம் (KSrelief) வழங்கி வரும் மனிதாபிமானப் பணிகளின் தொடர்ச்சியாக, இம் மையம் பார்வையின்மை மற்றும் பார்வையின்மையோடு தொடர்பான நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கான சவூதி நூர் தன்னார்வத் திட்டத்தை நிறைவு செய்ததது. இத்திட்டமானது, கிழக்கு இலங்கையில் சம்மாந்துறை மற்றும் சுப்ரகமுவா மாகாணத்தில் எம்பிலிபிட்டிய போன்ற பகுதிகளில் உள்ள இரண்டு அரச மருத்துவமனைகளில் செப்டம்பர் 15 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டம் நோயாளிகளுக்கு மருத்துவ சேவைகளை வழங்குவதில் வெற்றி கண்டுள்ளது. இந்தத்தன்னார்வாத் திட்டத்தின் போது பின்வரும் அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டன:

கிழக்கு மாகாணம், சம்மாந்துறை பகுதியில் உள்ள தள வையத்தியசாலையில் வழங்கப்பட்ட மருத்துவ சேவைகள் பின்வருமாறு:மருத்துவ பரிசோதனைகள்: 4,336
• லென்ஸ் பொருத்துதல்கள்: 416
• மூக்குக் கண்ணாடி விநியோகம்: 1,028
• அறுவை சிகிச்சைகள்: 428

சபரகமுவ மாகாணம், எம்பிலிபிட்டிய பகுதியில் உள்ள தள வையத்தியசாலையில் வழங்கப்பட்ட மருத்துவ சேவைகள் பின்வருமாறு::
• மருத்துவ பரிசோதனைகள்: 4,300
• லென்ஸ் பொருத்துதல்கள்: 407
• மூக்குக் கண்ணாடி விநியோகம்: 1,010
• அறுவை சிகிச்சைகள்: 410

இந்த மனிதாபிமான முயற்சியானது, கண் பார்வையை மீட்டெடுக்க உதவுவது மட்டுமல்லாமல், பயனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இம்முயற்சியானது, அவர்களை தமது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பவும், சமூக செயற்பாடுகளில் பங்கேற்கவும் உதவுகிறது.
இந்த முயற்சியானது மருத்துவ அம்சத்துடன் மட்டும் நின்றுவிடாமல், கண் நோய்களைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட விழிப்புணர்வு திட்டங்கள் மூலம் உள்ளூர் சமூகங்களிடையே சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் நிலையான சுகாதாரப் பராமரிப்புக்கு ஏதுவான சூழலை ஏற்படுத்துதல் போன்றவற்றையும் உள்ளடக்கியுள்ளது. இந்த முயற்சிகள் இலங்கைக் குடியரசின் ஆயிரக்கணக்கான பயனாளிகளிடத்தில் உறுதியான நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது மட்டுமல்லாமல், அவர்களிடத்தில் மீளவும் நம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களின் பார்வைக் குறைபாடுகளால் ஏற்படும் சவால்களை சமாளிக்கவும் இது உதவியுள்ளது.

மன்னர் சல்மான் நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான மையத்தின் (KSrelief) புள்ளிவிவரங்களின்படி, இந்த மையம் இதுவரையில் இலங்கையில் 25 திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. இதன் மொத்தச் செலவு $15 மில்லியன் அமெரிக்கா டொலர்களுக்கும் அதிகமாகும்.

இரு புனிதஸ்த்தலங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் ஆல் ஸுஊத் மற்றும் பட்டத்து இளவரசரும் பிரதம மந்திரியுமான இளவரசர் முஹம்மத் பின் சல்மான் ஆல் ஸுஊத் ஆகியோரின் தலைமையில், சவூதி அரேபியா, தனிநபர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு பங்களிக்கும் மனிதாபிமான முயற்சிகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்துவருகிறது. குறிப்பாக சுகாதாரத் துறையில், "சவூதி நூர் " திட்டம் இலங்கை உட்பட உலகெங்கிலும் உள்ள கண் நோயாளிகளுக்குத் தேவையான மருத்துவ சேவையை வழங்குவதன் மூலம் இந்த உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.

காட்டு யானைத் தாக்கம் --- தென்னை மரங்கள் அழிப்பு...!!!(எஸ்.எம்.அறூஸ்)அட்டாளைச்சேனை புறத்தோட்டம் குடியிருப்பு பகுதியில் ந...
25/09/2025

காட்டு யானைத் தாக்கம் --- தென்னை மரங்கள் அழிப்பு...!!!

(எஸ்.எம்.அறூஸ்)

அட்டாளைச்சேனை புறத்தோட்டம் குடியிருப்பு பகுதியில் நேற்றிரவு உட்புகுந்த காட்டு யானைகள் பயன்தரக்கூடிய 20 தென்னை மரங்களை அழித்து நாசப்படுத்தியதுடன் சுற்று மதிலையும் உடைத்து சேசதப்படுத்தியுள்ளது.

நேற்றிரவு 1.30 மணியளவில் புறத்தோட்டம் குடியிருப்புப் பகுதிக்குள் இரண்டு காட்டு யானைகள் உட்புகுந்து ஒரு குடியிருப்பாளரின் காணியில் பராமரிக்கப்பட்டு வந்த சுமார் 20 பயன்தரும் தென்னை மரங்களை அழித்து நாசப்படுத்தியுள்ளது. அத்தோடு அவரின் சுற்று மதிலையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளது.

மேலும், குறிப்பிட்ட இந்த இரண்டு காட்டு யானைகளும், ஏனையவர்களின் வீடுகளுக்குச் செல்ல முற்பட்ட போதிலும் மக்கள் வீதிகளுக்கு வந்து யானைகளை விரட்டியுள்ளனர். இதன் மூலம் இன்னும் பாரிய அழிவுகள் தடுக்கப்பட்டுள்ளதாக கிராம வாசிகள் தெரிவிக்கின்றனர்.

குறித்த புறத்தோட்டம் பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும், எல்லைப்பகுதியில் யானை வேலிகள் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திற்கு முன்வைத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட போதிலும் இதுவரை யானை வேலைகள் அமைப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

எனவே, புறத்தோட்டம் கிராமத்திற்குள் காட்டு யானைகள் உட்புகுந்து மக்களின் உடமைகளையும், பயிர்களையும், தென்னை மரங்களையும் அழித்து சேதப்படுத்துவதை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தடுப்பதற்கான நடவடிக்கையினை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்படுகின்றது.

அக்கரைப்பற்று ஹபீபுர் ரஹ்மான் SLAS அதிகாரியாக நியமனம்...01.10.2025 முதல் இலங்கை நிர்வாக சேவை - SLAS அதிகாரியாக நியமிக்கப...
24/09/2025

அக்கரைப்பற்று ஹபீபுர் ரஹ்மான் SLAS அதிகாரியாக நியமனம்...

01.10.2025 முதல் இலங்கை நிர்வாக சேவை - SLAS அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஹபீபுர் ரஹ்மான் அகமது மொஹிதீன் அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்.

அமைதி தினம்: உலக பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதில் சவூதி அரேபியாவின் முயற்சிகள்..!எழுத்து: கலித் ஹமூத் அ...
20/09/2025

அமைதி தினம்: உலக பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதில் சவூதி அரேபியாவின் முயற்சிகள்..!

எழுத்து: கலித் ஹமூத் அல்-கஹ்தானி
இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர்

அமைதி மதிப்புகளுக்கா உலக ன உலகளாவிய அர்ப்பணிப்பு:
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21 ஆம் திகதி, உலகளாவிய மக்கள், உலக அமைதி தினத்தை கொண்டாடுகின்றனர். இது மக்களிடையே சகவாழ்வு மற்றும் புரிந்துணர்வின் மதிப்புகளுக்கான சர்வதேச சமூகத்தின் அர்ப்பணிப்பை புதுப்பிக்கவும், உலக பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையின் அடித்தளங்களை நிறுவுவதற்குமான சந்தர்ப்பமாகும்.

இந்த நாளில், உரையாடல் மற்றும் அமைதியான தீர்வுகளை மேம்படுத்துவதற்காக நாடுகள் எடுக்கும் முயற்சிகள் வெளிப்படுகின்றன. இவற்றில் முன்னணியில் நிற்கும் சவூதி அரேபிய அரசு, பிராந்திய மற்றும் சர்வதேச மட்டங்களில் உரையாடல், மனிதாபிமான மற்றும் அரசியல் ஒத்துழைப்பின் மதிப்புகளை ஆதரிக்கும் அமைதிக்கான குரலாக எப்போதும் இருந்து வருகிறது.

சவூதி அரேபிய அரசின் வரலாற்று ரீதியான முன்முயற்சிகள்:
சவூதி அரேபியா, அது நிறுவப்பட்டதிலிருந்து, சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கான சிறந்த வழிமுறையாக உரையாடல் மற்றும் புரிந்துணர்வு இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வருகிறது. அது, 2002ஆம் ஆண்டில் அரபு அமைதி முன்முயற்சியை தொடங்கியது, இது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நியாயமான மற்றும் விரிவான அமைதியை அடைவதற்கான அடிப்படை கட்டமைப்பாக இன்றும் திகழ்கிறது. மேலும் 1989ஆம் ஆண்டில் தாயிஃப் உடன்படிக்கை லெபனானுக்கு நிலைத்தன்மையை மீட்டெடுத்து உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வர உதவியது, இது அமைதியான தீர்வுகளை ஆதரிப்பதில் அரசின் ஆரம்பகால பங்கை பிரதிபலிக்கிறது.

சர்வதேச மத்தியஸ்த முயற்சிகளில் சவூதி அரேபியாவின் வகிபாகம்:
சர்வதேச அளவில், யெமென் மற்றும் சூடான் போன்ற நாடுகளில் ஏற்பட்ட பல நெருக்கடிகளில் நம்பகமான மத்தியஸ்தராக சவூதி அரேபிய அரசு செயல்பட்டது. மனிதாபிமான மத்தியஸ்தங்கள் மற்றும் கைதிகள் பரிமாற்றம் மூலம் ரஷ்ய-உக்ரேனிய போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சிகளில் திறம்பட பங்களிப்புச்செய்தது, அமைதி என்பது தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டிய மூலோபாய தேர்வு என்பதை அது உறுதிப்படுத்துகிறது.

உச்சி மாநாடுகள் மற்றும் சர்வதேச சந்திப்புக்கள்:
சவூதி அரேபியாவின் பங்களிப்பு இருதரப்பு மத்தியஸ்தத்துடன் நின்றுவிடவில்லை, மாறாக அமைதியை மேம்படுத்துவதற்கான உச்சி மாநாடுகள் மற்றும் சர்வதேச சண்டிகாப்புக்களுக்கு தலைமை தங்குவது வரை விரிந்து சென்றது.

• 2017 ஆம் ஆண்டு ரியாத் அரபு-இஸ்லாமிய-அமெரிக்க உச்சி மாநாடு, இது 50க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்களை அமெரிக்காவுடன் ஒன்றிணைத்து பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கும் அமைதியான சகவாழ்வை மேம்படுத்துவதற்குமான ஒத்துழைப்பை வலுப்படுத்தியது.

• 2020 ஆம் ஆண்டு, G20 குழுவிற்கு சவூதி அரேபியா தலைமை வகித்தது, இங்கு உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்கான சர்வதேச ஒற்றுமையின் முக்கியத்துவத்தையும் மற்றும் சுகாதார பாதுகாப்பை அமைதி மற்றும் நிலைத்தன்மையுடன் இணைப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியது.

• 2023 ஜெட்டா அரபு உச்சி மாநாடு, இது அரபு ஒற்றுமையை உறுதிப்படுத்தியது மற்றும் பிராந்திய நெருக்கடிகளுக்கான அரசியல் தீர்வுகளை ஆதரித்தது.

• 2023 ஆம் ஆண்டில் ஜெட்டா அரபு உச்சி மாநாட்டை நடத்தியது, இம்மாநாடு அரபு ஒற்றுமையை உறுதிப்படுத்தியதோடு பிராந்திய நெருக்கடிகளுக்கான அரசியல் தீர்வுகளை ஆதரித்தது.

• 2023 ஆம் ஆண்டில் உக்ரேனிய நெருக்கடி தொடர்பான ஜெட்டா சர்வதேச சந்திப்புக்களை நடாத்தியது, இதில் 40க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றன, இச்சந்திப்புக்கள் அமைதியான தீர்வுகளுக்கான அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தியது.

• 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், ரியாத் நகரில் அமெரிக்க-ரஷ்ய அமைதி உச்சி மாநாட்டை நடாத்தடியாது, இங்கு ரஷ்ய-உக்ரேனிய போர் வெடித்ததிலிருந்து முதல் முறையாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மற்றும் அவரது ரஷ்ய அதிகாரிகள் சந்தித்ததுக்கொண்டனர். அங்கு இரு தரப்பும் தூதரக பணிகளை தொடர்வதற்கும் உரையாடலை மீண்டும் தொடங்குவதற்கும் ஒப்புதல் அளித்தனர், இது பெரும் சக்திகளுக்கிடையே தொடர்புக்கான தளமாக சவூதி அரேபியாவின் வகிபாகத்தில் சர்வதேசம் கொண்டுள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.

• பாலஸ்தீன பிரைச்சினைக்கு அமைதித்தீர்வு மற்றும் இரு-அரசு தீர்வை நடைமுறைப்படுத்துவதற்கான உயர்மட்ட சர்வதேச மாநாடு, இந்த மாநாடு நியூயார்க்கில் இவ்வாண்டு ஜூலை 28-29 ஆம் திகதிகளில் சவூதி அரேபிய அரசு மற்றும் பிரான்சின் கூட்டு தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டின் விளைவாக செப்டம்பர் 12 ஆம் திகதி அன்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்கெடுப்பின் முடிவுகள் இந்தப்பிரகடனத்துக்குச் சார்பாக 142 நாடுகள் வாக்களித்தன.

அமைதி மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதில் அரசின் முயற்சிகள்:
மிதமான மையம் (மர்கஸ் இஃதிதால்) மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான இஸ்லாமிய இராணுவ கூட்டணியின் தலைமை போன்ற முன்முயற்சிகள் மூலம் தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், மக்களிடையே உரையாடல் மற்றும் புரிந்துணர்வை மேம்படுத்துவதற்கும் சவூதி அரேபியா தொடர்ந்து முயற்சி செய்து வருவதை அது உறுதிப்படுத்துகிறது, இது சர்வதேச மட்டத்தில் அமைதியான மற்றும் நிலையான சூழலை ஏற்படுத்திடுவதற்குப் பங்களிக்கிறது.

பல்வேறு துறைகளில் சவூதி அரேபியாவின் முயற்சிகள், சர்வதேச உச்சி மாநாடுகள் மற்றும் மன்றங்களின் தலைமைத்துவத்துடன் சேர்ந்து, அமைதி என்பது தற்காலிக தேர்வு அல்ல, மாறாக அதன் தேசிய மற்றும் இராஜதந்திர அடையாளத்தின் ஒரு பகுதியை உருவாக்கும் நிலையான செய்தி என்பதை உறுதிப்படுத்துகிறது.

🇸🇦🤝🇱🇰 இலவச கண் சத்திரசிகிச்சை முகாமை பார்வையிட்டார் தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி..!✍️ எஸ். சினீஸ் கான்"சவூதி நூ...
17/09/2025

🇸🇦🤝🇱🇰 இலவச கண் சத்திரசிகிச்சை முகாமை பார்வையிட்டார் தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி..!

✍️ எஸ். சினீஸ் கான்

"சவூதி நூர்" தன்னார்வத் திட்டத்தின் மூலம் கிழக்கு மாகாணத்தில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் நடைபெற்று வரும் இலவச கண்புரை சத்திர சிகிச்சை முகாமை இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி அவர்கள், நேரில் சென்று இன்று (17) பார்வையிட்டார்.

கண்சார்ந்த நோய்களை குணமாக்க இலவசமாக முன்னெடுக்கப்படும் இத்திட்டம், கிங் சல்மான் மனிதாபிமான உதவிகள் மற்றும் நிவாரண மையத்தினால் செப்டம்பர் 15 முதல் 21 ஆம் திகதி வரை சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் இடம்பெறும்.

இந்நிகழ்வில் உரையாற்றிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி, மனிதாபிமான பணிகளை உலகம் முழுவதும் மேற்கொள்வதில் சவூதி அரேபியாவின் அடிப்படை மதிப்புகளே பிரதிபலிக்கின்றன எனக் குறிப்பிட்டார். குறிப்பாக சுகாதார துறையில் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு, இரு புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சௌத் மற்றும் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகம்மது பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சௌத் ஆகியோரின் தலைமையில் சவூதி அரசு வழங்கி வரும் அக்கறையை அவர் பாராட்டினார்.

மேலும், மன்னர் சல்மான், பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான், கிங் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம், அல்-பஸர் சர்வதேச அமைப்பு, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் பணியாளர்களுக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார்.

அதேபோன்று, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் பிரபாஷங்கர் அவர்கள் உரையாற்றுகையில்,

இலங்கைக்கு வழங்கப்பட்ட இம்மனிதாபிமான உதவிக்காக சவூதி அரசின் தலைமைத்துவத்திற்கும், குறிப்பாக மன்னர் சல்மான் மற்றும் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானுக்கும் நன்றியைத் தெரிவித்தார். மேலும், இரு நாடுகளுக்குமிடையிலான நீண்டகால நட்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி அவர்கள் செய்துவரும் முயற்சிகளையும் அவர் பாராட்டினார்.

அவ்வாறே, செப்டம்பர் 22 முதல் 28 ஆம் திகதி வரை, சவூதி நூர் திட்டத்தின் அடுத்த கட்ட முகாம் எம்பிலிபிடிய ஆதார வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.

ஸஊதி அரேபியாவில் நீதித்துறை சேவைகள் டிஜிட்டல் மயமாக்கம்..!✍️ எஸ். சினீஸ் கான்ஸஊதி அரேபியாவில் நீதித்துறை சேவைகளை டிஜிட்ட...
16/09/2025

ஸஊதி அரேபியாவில் நீதித்துறை சேவைகள் டிஜிட்டல் மயமாக்கம்..!

✍️ எஸ். சினீஸ் கான்

ஸஊதி அரேபியாவில் நீதித்துறை சேவைகளை டிஜிட்டல் முறையில் மேம்படுத்துவதற்கான முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. நீதி அமைச்சர் வலீத் அல்-ஸமானி மற்றும் டிஜிட்டல் அரசாங்க ஆணையர் அஹ்மத் அல்-ஸுவைய்யன் தலைமையில் இக்கரார் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் நீதித்துறையில் நவீன தொழில்நுட்ப வசதிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இதன் மூலம் மக்களுக்கு எளிதான, விரைவான, வெளிப்படையான சட்ட சேவைகள் வழங்கப்படுவதோடு, மக்கள் நலனுக்கேற்ப புதிய தீர்வுகள் உருவாக்கப்படுகின்றன.

ஏற்கனவே 2024 ஆம் ஆண்டு “நாஜிஸ் (Najiz)” எனும் ஒருங்கிணைந்த தளத்தின் மூலம் ஸஊதி நீதி அமைச்சு, டிஜிட்டல் மாற்ற அளவீட்டில் “புதுமை” நிலையை அடைந்ததோடு, டிஜிட்டல் அனுபவத் தரக் குறியீட்டில் “அதிகரிக்கப்பட்ட” நிலையைப் பெற்று சர்வதேச மட்டத்திலும் பாராட்டுக்குரிய முன்னேற்றம் கண்டுள்ளது.

இந்த நடவடிக்கை, இளவரசர் முகம்மது பின் சல்மான் அவர்களின் “விசன் 2030” தொலைநோக்கு திட்டத்தின் ஒரு அங்கமாகும். நாட்டின் அனைத்து துறைகளிலும் நவீன தொழில்நுட்பத்தை இணைத்து, மக்கள் வாழ்க்கையை எளிதாக்கி, உலக அரங்கில் ஸஊதி அரேபியாவை முன்னணியில் நிலைநிறுத்தும் முயற்சியின் சான்றாக இது அமைகிறது.

இளவரசர் முகம்மது பின் சல்மான் அவர்களின் உறுதியான தலைமைத்துவமும், சீர்திருத்த மனப்பான்மையும், ஸஊதி அரேபியாவை நவீனமயமாக்கி, அரபு உலகிற்கு முன்னுதாரணமாக அமைத்துள்ளது.

இன்றைய ஸஊதி அரேபியா, எரிசக்தி வளங்களின் நாடாக மட்டுமல்லாது, அறிவு, தொழில்நுட்பம் மற்றும் புதுமை ஆகிய துறைகளிலும் உலகின் கவனத்தை ஈர்க்கும் வல்லமை பெற்ற நாடாகவும் திகழ்கிறது.

முஸ்லிம் சமூகத்தின் அடையாளம்; பெருந்தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்..!மாபெரும் தலைவர் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களுடைய இழப்பு என...
16/09/2025

முஸ்லிம் சமூகத்தின் அடையாளம்; பெருந்தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்..!

மாபெரும் தலைவர் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களுடைய இழப்பு என்பது முஸ்லிம் சமூகத்தை பொறுத்தவரையில் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவர் முஸ்லிம் சமூகத்திற்கு விட்டுச் சென்ற மிகப் பெரும் சொத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகும். அதன் மூலமாக இன்று இந்த நாட்டில் பல முஸ்லிம்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக, தலைவர்களாக உருவாகியிருக்கின்றனர். அத்தனை பேருக்குரிய தாயகமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸே இருக்கிறது.

அவர் முஸ்லிம் மக்களுக்காக பல்வேறு தியாகங்களை செய்தவர். எந்தச் சந்தர்ப்பத்திலும் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளையும், உணர்வுகளையும் விட்டுக் கொடுக்காதவர்.

நான் அவருடன் 1989 ஆம் ஆண்டு தொடக்கம் 2000 ஆம் ஆண்டுவரை பாராளுமன்றத்தில் இருந்தேன். அவரோடு பல்வேறு கூட்டங்கள், நிகழ்வுகள், சர்வதேச கலந்துரையாடல்களுக்கு சென்றிருக்கிறேன்.

குறிப்பாக முஸ்லிம்களுக்கு மிக மோசமான, பயங்கரமான காலகட்டம்தான் 1990 - 2000 வரையிலான காலப்பகுதி. முஸ்லிம்கள் படுகொலை, முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்டமை, கிழக்கு மாகாணத்தில் பல முஸ்லிம் கிராமங்கள் அழிக்கப்பட்டமை, முஸ்லிம்களின் சொத்துக்கள் சுரண்டப்பட்டமை உட்பட பல சோதனையான காலம். அப்போது முஸ்லிம்களை பாதுகாப்பது, கிராமங்களை பாதுகாப்பது, LTTE யின் அட்டகாசத்திலிருந்து மக்களை பாதுகாப்பது போன்ற முக்கிய விடயங்களுக்கு அவருடைய தலைமையில் தான் கட்சி முகங்கொடுக்க வேண்டியிருந்தது.

அந்தக் காலப்பகுதியில் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் அர்ப்பணிப்பு என்றும் நினைவில் கொள்ள வேண்டியது. நாம் அவரோடு ஒன்றாக இருந்து இவ்விடயங்களை கையாண்டோம்.

அதுபோன்று, முஸ்லிம் இளைஞர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல அச்சுறுத்தல்களை எதிர்நோக்கிய சந்தர்ப்பத்தில், பல சவால்களை எதிர்நோக்கி போராடி, தென்கிழக்கு பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.

இவ்வாறு முஸ்லிம் சமூகத்தில் எதிர்நோக்கிய பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றிற்கு தீர்வை பெற்றுக் கொடுத்தவர் பெருந்தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள்.

முஸ்லிம் சமூகத்திற்கு அவர் ஆற்றிய பணிகள், அபிவிருத்திப் பணிகள் பல உள்ளன. LTTEயினரால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு புத்தளம் பிரதேசத்தில் காணிகளை வழங்கி குடியேற்றியது போன்ற பல சிறப்புப் பணிகளை செய்தவர்.

எமது மறைந்த மாபெரும் தலைவர், முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர், முஸ்லிம் சமூகத்தின் மூத்த விடுதலைப் போராளி, விடுதலை உணர்வை எமக்கு ஊட்டிய எம் தலைவருடைய தூய பணிகளை அல்லாஹ் தஆலா ஏற்று, உயர்ந்த சுவர்க்கத்தை அவருக்கு வழங்குவானாக என்று பிரார்த்திக்கின்றோம்.

– கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்
(பாராளுமன்ற உறுப்பினர்)
பிரதித் தலைவர்,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்.

___________________________
-- ஊடகப்பிரிவு --

அல்- மீஸான் பௌண்டசனின் 20 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்திய வருடாந்த பரிசளிப்பு நிகழ்வும் பேர்ல்ஸ் சீஸன் 04 கௌரவிப்பு...
14/09/2025

அல்- மீஸான் பௌண்டசனின் 20 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்திய வருடாந்த பரிசளிப்பு நிகழ்வும் பேர்ல்ஸ் சீஸன் 04 கௌரவிப்பும் !

அல்- மீஸான் பௌண்டசனின் 20 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்திய வருடாந்த பரிசளிப்பு நிகழ்வும் பேர்ல்ஸ் சீஸன் 04 கௌரவிப்பும் பௌண்டசனின் தவிசாளரும், கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணைக்குழு முன்னாள் உறுப்பினருமான யூ.எல்.என். ஹுதா உமரின் தலைமையில் சாய்ந்தமருது கலாச்சார மத்திய நிலையத்தில் நடைபெற்றது.

கல்முனை வீகாஸ் கெம்பஸின் அனுசரணையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். ஜெகராஜன், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் மேலதிக செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன், கிழக்கு மாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழு செயலாளர் ஜே. லியாக்கத் அலி ஆகியோர் பிரதம அதிதியாகவும், நிந்தவூர் பிரதேச செயலாளர் ஏ.எல்.ஏ. லத்தீப், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்கள மாகாண பிரதிப்பணிப்பாளர் பொறியியலாளர் எம்.எம்.எம். முனாஸ் ஆகியோர் கௌரவ அதிதியாகவும், கல்முனை சட்டத்தரணிகள் சங்க தலைவி சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிக்கா சறூக் காரியப்பர், நளீர் பௌண்டஷன் தலைவர் எம்.ஏ. நளீர், திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எச். அல் ஜவாஹிர் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

இதன்போது மக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்றி பதவி உயர்வு பெற்ற சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரிகள், கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள், கல்முனை கல்வி வலயத்திலிருந்து 09 ஏ சித்திகளை பெற்ற 130 மாணவர்கள், சர்வதேச அளவில் மற்றும் தேசிய அளவில் சாதித்த சாதனையாளர்கள், முஸ்லிம் பாடசாலைகளில் தேசிய அளவில் முதலிடம் பெற்ற கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியினர், சமூக சேவகர்கள் என பலரும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் இந்நிகழ்வில் அல்- மீஸான் பௌண்டசனின் ஆளுநர் சபையினர், செயற்குழுவினர், பாடசாலைகளின் அதிபர்கள், கல்விமான்கள், பொது அமைப்பின் பிரதானிகள், பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

SLMC மத்திய குழுவின் விசேட கலந்துரையாடல்(முகம்மட் அன்வர்)SLMC அட்டரளைச்சேனை மத்திய குழுவின் விசேட  கலந்துரையாடல் தலைவர் ...
11/09/2025

SLMC மத்திய குழுவின் விசேட கலந்துரையாடல்

(முகம்மட் அன்வர்)

SLMC அட்டரளைச்சேனை மத்திய குழுவின் விசேட கலந்துரையாடல் தலைவர் ஹலீம் தலைமையில் நேற்றிரவு இடம்பெற்றது.

இதன்போது, SLMC கட்சியின் பிரதித் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர், உயர்பீட உறுப்பினர் யூ.எம்.வாஹித் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள், மத்திய குழுவின் செயலாளர் ஹாரீத் மாஸ்டர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

SLMC கட்சிக்கு அதிகாரம் இல்லாத சந்தர்ப்பங்களில் பலரும் கட்சியைவிட்டு விலகி. கட்சிக்கும், போராளிகளுக்கும் பல்வேறு அநீயாயங்களை செய்தபோதும் கட்சியின் வளர்ச்சிக்காக அட்டாளைச்சேனை மத்திய குழு பெரும் பங்காற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.

அக்கரைப்பற்றில் தொடர்ந்து தீப்பற்றும் மின் மாற்றிகள், மக்களின் அன்றாட வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளன.பள்ளிக்குடியிருப்...
11/09/2025

அக்கரைப்பற்றில் தொடர்ந்து தீப்பற்றும் மின் மாற்றிகள், மக்களின் அன்றாட வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளன.
பள்ளிக்குடியிருப்பு முற்சந்தியில் அமைந்துள்ள ரான்ஸ்போமர், மாதத்திற்கு பலமுறை செயலிழந்து, மின் விநியோகத்தில் தடைகளை ஏற்படுத்தி வருகிறது.

பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்ட மின்கம்பங்கள், சாலைவழி மற்றும் குடியிருப்பு பகுதிகளில் விபத்து அபாயங்களை ஏற்படுத்துகின்றன.
இந்நிலையை எதிர்த்து, பிரதேச சபை உறுப்பினர் ம.ஹ. பைறூஸ் அவர்கள், இலங்கை மின்சார சபைக்கு அதிகாரப்பூர்வ மனுவை நேற்று கையளித்தார்.

மனுவில், பழுதடைந்த ரான்ஸ்போமரை புதுப்பித்து, அப்பகுதியில் உள்ள அதிகமான மின்கம்பங்களை அகற்றி, ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள கோரப்பட்டுள்ளது.மனுவின் பிரதிகள், பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் செயலாளர் ஆகியோரிடம் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கை, மக்களின் பாதுகாப்பும், நிரந்தர மின் விநியோகம் உறுதிசெய்வதற்குமான ஒரு முக்கிய புள்ளியாகக் கருதப்படுகிறது.

பொது நலத்திற்காக சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கும் இது போன்ற முயற்சிகள், மக்கள் நம்பிக்கையை உறுதியாக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Address

182/3 2/3 Common Road Akkaraipattu/16
Akkaraipattu
32400

Alerts

Be the first to know and let us send you an email when Rks தமிழ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rks தமிழ்:

Share