04/02/2026
🏏 T20 உலகக் கிண்ணம்: இந்தியாவுக்கு எதிராக விளையாட மறுப்பு – பாகிஸ்தானுக்கு ஐ.சி.சி. கடும் எச்சரிக்கை
T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியாவுடன் விளையாட முடியாது என பாகிஸ்தான் அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு (PCB) ஐ.சி.சி. மீண்டும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணித்தால், ஒளிபரப்பு நிறுவனங்களிடமிருந்து சட்ட நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானுக்கான ஆண்டு வருமானப் பகிர்வான ரூ.316 கோடியை (இந்திய மதிப்பில்) ஐ.சி.சி. தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இந்த நிதியை ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு வழங்கும் வாய்ப்பும் இருப்பதாக கூறப்படுகிறது.
ஒளிபரப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்தால், பாகிஸ்தானுக்கு எந்த விதத்திலும் ஐ.சி.சி. ஆதரவு வழங்காது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், ஐ.சி.சி.யின் கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.