News21 Tamil

News21 Tamil Reliable News, Around the Clock

பொதுப் போக்குவரத்தில் புதிய அத்தியாயம்: சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 104 புதிய 'மெட்ரோ' பஸ்கள் இலங்கையை வந்தடை...
30/07/2026

பொதுப் போக்குவரத்தில் புதிய அத்தியாயம்: சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 104 புதிய 'மெட்ரோ' பஸ்கள் இலங்கையை வந்தடைந்தன

இலங்கையின் பொதுப் போக்குவரத்து சேவையை மேலும் வினைத்திறனும், பயணிகளுக்கு ஏற்ற தரமான சேவையாகவும் மாற்றும் நோக்கில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 104 புதிய 'மெட்ரோ' பஸ்கள் நேற்று (29) நாட்டை வந்தடைந்துள்ளன.

பொதுப் போக்குவரத்து கட்டமைப்பை நவீனமயமாக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த புதிய பஸ்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. சீனாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த மெட்ரோ பஸ்கள், அதிக பயணிகளை பாதுகாப்பாகவும் வசதியாகவும் ஏற்றிச் செல்லக்கூடிய நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.

நாட்டின் போக்குவரத்து சேவையின் தரத்தை உயர்த்துவதற்காக இந்த பஸ்களை இறக்குமதி செய்வதற்கான உத்தியோகபூர்வ ஒப்பந்தம் கடந்த மே மாதத்தில் கைச்சாத்திடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் முதல் கட்ட அமலாக்கமாகவே தற்போது 104 புதிய மெட்ரோ பஸ்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்த புதிய பஸ்கள் சேவையில் இணைக்கப்படுவதன் மூலம், பயணிகளுக்கான போக்குவரத்து வசதிகள் மேம்படுவதோடு, நெரிசல் அதிகம் காணப்படும் முக்கிய வழித்தடங்களில் சேவையின் செயல்திறனும் அதிகரிக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

மேலும், பொதுப் போக்குவரத்து துறையில் தரமான மாற்றத்தை ஏற்படுத்தவும், பாதுகாப்பான மற்றும் நவீன பயண அனுபவத்தை மக்களுக்கு வழங்கவும் இந்தத் திட்டம் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முழுமையான செய்தியை வாசிக்க news21 : Link in comments

2026 பொதுநலவாய விளையாட்டில் இலங்கைக்கு முதல் பதக்கம்! பாலித பண்டார மீண்டும் வெள்ளி வென்று சாதனைகிளாஸ்கோவில் நடைபெற்று வர...
30/07/2026

2026 பொதுநலவாய விளையாட்டில் இலங்கைக்கு முதல் பதக்கம்! பாலித பண்டார மீண்டும் வெள்ளி வென்று சாதனை

கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில், ஆண்களுக்கான பரிதி வட்டம் எறிதல் போட்டியில் இலங்கையின் பாலித பண்டார வெள்ளிப் பதக்கத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

2026 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை வென்றுள்ள முதல் பதக்கம் இதுவாகும்.

பாலித பண்டார, ஆண்களுக்கான F42-44/F61-64 பாரா தடகளப் பிரிவில் பங்கேற்று, இந்த வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

இறுதிப் போட்டியில் 46.84 மீற்றர் தூரத்துக்கு பரிதி வட்டத்தை எறிந்த அவர், இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இது சர்வதேச அரங்கில் அவரது தனிப்பட்ட சிறந்த பதிவாக அமைந்துள்ளது.

இது பாலித பண்டார பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் வெல்லும் இரண்டாவது தொடர்ச்சியான வெள்ளிப் பதக்கமாகும். இதற்கு முன்னர் 2022ஆம் ஆண்டு பேர்மிங்ஹாமில் நடைபெற்ற போட்டிகளிலும் அவர் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அரங்கில் பாலித பண்டார வெளிப்படுத்திய இந்தச் சிறப்பான திறமை இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளது.

முழுமையான செய்தியை வாசிக்க news21 : Link in comments

இலங்கையின் கடன் மதிப்பீட்டில் முக்கிய முன்னேற்றம்... அரசாங்கம் கூறும் வெற்றிக் காரணம் என்ன?ஸ்டேண்டர்ட் எண்ட் பூவர்ஸ் (S&...
30/07/2026

இலங்கையின் கடன் மதிப்பீட்டில் முக்கிய முன்னேற்றம்... அரசாங்கம் கூறும் வெற்றிக் காரணம் என்ன?

ஸ்டேண்டர்ட் எண்ட் பூவர்ஸ் (S&P) சர்வதேச தரநிர்ணய நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய மதிப்பீட்டின் அடிப்படையில், இலங்கையின் கடன் மதிப்பீட்டை அரசாங்கம் ஸ்திரமான நிலையில் பேணுவதில் வெற்றி கண்டுள்ளதாக தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

இந்த மதிப்பீடு தொடர்பாக கருத்து வெளியிட்ட அவர், டிட்வா சூறாவளி தாக்கம் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் போன்ற பல்வேறு வெளிப்புற சவால்கள் இருந்தபோதிலும், அரசாங்கம் பின்பற்றிய சரியான பொருளாதாரக் கொள்கைகளின் காரணமாக இந்த முன்னேற்றம் சாத்தியமானதாகக் குறிப்பிட்டார்.

முதலீட்டாளர்களின் நம்பகத்தன்மையை பிரதிபலிக்கும் 'பரிமாற்றம் மற்றும் மாற்றத்தக்க தன்மை' மதிப்பீட்டிலும் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

2022ஆம் ஆண்டில் மிகுந்த ஆபத்து நிறைந்த 'CCC' தரத்தில் இருந்த இலங்கை, 2025 ஆம் ஆண்டில் 'CCC+' தரத்துக்கும், தற்போது 2026ஆம் ஆண்டில் 'B-' தரத்துக்கும் உயர்ந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், இறக்குமதிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்காமலும், பொருளாதார நடவடிக்கைகளைச் சுருக்காமலும், இலங்கை மத்திய வங்கியின் மூலோபாய நடவடிக்கைகள் மூலம் நாட்டின் வெளிநாட்டு நாணயக் கையிருப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, கடன் வெளிப்படைத்தன்மை (Debt Transparency) தொடர்பில் இலங்கை சர்வதேச அளவில் நான்காவது இடத்தைப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முழுமையான செய்தியை வாசிக்க news21 : Link in comments

போதைப்பொருளுடன் தெஹிவளை பொலிஸ் SI கைது: ஹெரோய்ன், கஞ்சா, வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் பணிய...
30/07/2026

போதைப்பொருளுடன் தெஹிவளை பொலிஸ் SI கைது: ஹெரோய்ன், கஞ்சா, வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்

தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த உப பொலிஸ் பரிசோதகர் (SI) ஒருவர், போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்தார்.

பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, குறித்த உப பொலிஸ் பரிசோதகரிடமிருந்து ஹெரோய்ன், கஞ்சா மற்றும் வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட அதிகாரி போதைப்பொருள் பாவனைக்கு கடுமையாக அடிமையானவர் என்பதும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதனையடுத்து, அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் பிற பொருட்கள் தொடர்பிலும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் 26 வயதுடையவர் எனவும், அவரை கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

முழுமையான செய்தியை வாசிக்க news21 : Link in comments

பெந்தோட்ட கடலில் வான் சாகச விபத்தில் வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணி உயிரிழப்பு!பெந்தோட்ட கடற்பரப்பில் இன்று (29) பிற்பக...
29/07/2026

பெந்தோட்ட கடலில் வான் சாகச விபத்தில் வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணி உயிரிழப்பு!

பெந்தோட்ட கடற்பரப்பில் இன்று (29) பிற்பகல் இடம்பெற்ற பாராமோட்டர் (மோட்டார் பொருத்தப்பட்ட பாராகிளைடர்) விபத்தில் வெளிநாட்டைச் சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து, இன்று புதன்கிழமை மாலை சுமார் 4.30 மணியளவில் பெந்தோட்ட கடற்பகுதியில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் 31 வயதுடைய பாலஸ்தீனப் பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

சுற்றுலாப் பயணிகளுக்காக பொழுதுபோக்கு வான்வழி சாகசச் சவாரிகளை நடத்தி வந்த தனியார் நிறுவனம் ஒன்றின் பாராமோட்டர் இயந்திரக் கோளாறு காரணமாக பறந்து கொண்டிருந்தபோது, திடீரென கடலில் விழுந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்து நேரத்தில் பாராமோட்டரில் விமானியைத் தவிர, மேற்படி பெண் சுற்றுலாப் பயணியும் பயணித்துக் கொண்டிருந்தார்.

விபத்தில் விமானி உயிர் தப்பிய நிலையில், கடலில் விழுந்த பெண் சுற்றுலாப் பயணி முதலில் காணாமல் போயிருந்தார். பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது அவரது சடலம் பெந்தோட்ட கடற்பகுதியில் இருந்து மீட்கப்பட்டது.

பாராமோட்டரை இயக்கிய கொலம்பிய நாட்டைச் சேர்ந்த விமானி உயிர் தப்பியுள்ளார் என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் சடலம், நாகொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

முழுமையான செய்தியை வாசிக்க news21 : Link in comments

ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு குழுக்கள் மீது சவுதி மற்றும் அமெரிக்கா வான்வழித் தாக்குதல்சவுதி அரேபியா, அமெரிக்க மத்திய கட்ட...
29/07/2026

ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு குழுக்கள் மீது சவுதி மற்றும் அமெரிக்கா வான்வழித் தாக்குதல்

சவுதி அரேபியா, அமெரிக்க மத்திய கட்டளையுடன் இணைந்து, ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்கள் மீது இலக்கு வைக்கப்பட்ட வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.

சவுதி பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்று புதன்கிழமை (29) அதிகாலையில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்கள், சமீபத்தில் சவுதி அரேபியா மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல்களுக்குப் பதிலடியாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஈராக் எல்லைக்குள் இருந்து ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாதக் குழுக்களால் ஏவப்பட்ட பல ட்ரோன்கள், சவுதியின் ரியாத் மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பெட்ரோலிய ஆலைகளைத் தாக்க முயன்றபோது, அவை சவுதி வான் பாதுகாப்புப் படையினரால் இடைமறித்து அழிக்கப்பட்டன.

"நாங்கள் மோதலை விரும்பவில்லை. ஆனால், எங்கள் மீது நடத்தப்படும் எந்தவோர் ஆக்கிரமிப்புக்கும் தகுந்த பதிலடி கொடுப்போம்" என்று சவுதி அரேபியா எச்சரித்துள்ளது.

இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈராக் பிரதமர் அலி அல்-சைதி, நாளை வியாழக்கிழமை சவுதி அரேபியாவுக்குப் பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஈராக் தனது நிலப்பரப்பை அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்தப் பயன்படுத்த அனுமதிக்காது என்று அந்நாட்டு இராணுவம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது.

இதற்கிடையில், ஈரான் ஆதரவு பெற்ற 'ஈராக்கின் இஸ்லாமிய எதிர்ப்பு' அமைப்பு, சவுதியின் குற்றச்சாட்டுகள் புனையப்பட்டவை என்றும், தங்களுக்கு இந்தத் தாக்குதலில் எவ்விதப் பங்கும் இல்லை என்றும் கூறியுள்ளது.

Source: Al Jazeera

முழுமையான செய்தியை வாசிக்க news21 : Link in comments

ஆடி பௌர்ணமியில் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு செல்வமும் முன்னேற்றமும் தேடி வருமாம்!மேலும் ...
29/07/2026

ஆடி பௌர்ணமியில் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு செல்வமும் முன்னேற்றமும் தேடி வருமாம்!

மேலும் வாசிக்க - https://www.news21.lk/Kendra-Drishti-Yoga-formed-on-Aadi-Pournami

இலங்கையில் யானை-மனித மோதலைத் தடுக்க மூங்கில் ‘உயிரியல் வேலி’: சீனா ஆதரவுஇலங்கையில் நீண்டகாலமாக நிலவி வரும் யானை-மனித மோத...
29/07/2026

இலங்கையில் யானை-மனித மோதலைத் தடுக்க மூங்கில் ‘உயிரியல் வேலி’: சீனா ஆதரவு

இலங்கையில் நீண்டகாலமாக நிலவி வரும் யானை-மனித மோதலுக்கு ஒரு நிலையான தீர்வாக மூங்கில் "உயிரியல் வேலி" (bio-fences) அமைக்கும் திட்டத்துக்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி உதவிகளை வழங்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது.

சூழலியல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி தலைமையிலான இலங்கைத் தூதுக்குழுவினர், பெய்ஜிங்கில் உள்ள சர்வதேச மூங்கில் மற்றும் பிரம்பு மையத்திற்கு (ICBR) மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இந்த முன்மொழிவு குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்தச் சந்திப்பின் போது, மூங்கில் பயிர்ச்செய்கை, நவீன பதப்படுத்தும் தொழில்நுட்பங்கள் மற்றும் மூங்கில் சார்ந்த தொழில்துறை தயாரிப்புகள் குறித்து இலங்கைத் தூதுக்குழுவினர் ஆராய்ந்தனர்.

யானை-மனித மோதலைக் குறைப்பதற்கு மூங்கில் உயிரியல் வேலிகளை உருவாக்க சீனாவின் உதவியை இலங்கை கோரியிருந்தது. இதற்குப் பதிலளிக்கும் விதமாக, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, நவீன தொழில்நுட்பம் மற்றும் சிறந்த நடைமுறைகள் மூலம் ஆதரவளிக்க சீனத் தரப்பு உறுதியளித்துள்ளது.

முழுமையான செய்தியை வாசிக்க news21 : Link in comments

ஒரே நாளில் இடம்பெற்ற வெவ்வேறு வீதி விபத்துகள்: மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் உட்பட நால்வர் உயிரிழப்புநாட்டின் பல்வேறு பக...
29/07/2026

ஒரே நாளில் இடம்பெற்ற வெவ்வேறு வீதி விபத்துகள்: மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் உட்பட நால்வர் உயிரிழப்பு

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று செவ்வாய்க்கிழமை (28) இடம்பெற்ற வெவ்வேறு வீதி விபத்துகளில், 03 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் உட்பட நால்வர் உயிரிழந்தனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

ஹுரிகஸ்வெவ பகுதியில், வீதியைக் கடந்து சென்ற நாயைத் தவிர்க்க முயன்றபோது, மோட்டார் சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்த 59 வயது நபர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

கொடகவெல பகுதியில், 21 வயது இளைஞன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகிக் கவிழ்ந்ததில், அவர் உயிரிழந்தார். அவருடன் பயணித்திருந்த ஒருவர் காயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாவத்தகம பகுதியில், கண்டி–குருநாகல் பிரதான வீதியைக் கடக்க முயன்ற 67 வயதுடைய பாதசாரி ஒருவர் மோட்டார் சைக்கிள் மோதியதில் உயிரிழந்தார். இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும், பின்னால் பயணித்தவரும் காயமடைந்துள்ளனர்.

மஹவ பகுதியில், குறுக்கு வீதியிலிருந்து பிரதான வீதிக்குள் நுழைந்த கார் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில், 65 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பில் காரை ஓட்டிய சாரதி, பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முழுமையான செய்தியை வாசிக்க news21 : Link in comments

உணவகத்தில் திடீர் வயிற்று வலி... கல்லீரல் வெடித்து உயிருக்குப் போராடிய நபரை மீட்ட மேலாளர்!சீனாவின் ஹாங்சோ (Hangzhou) பகு...
28/07/2026

உணவகத்தில் திடீர் வயிற்று வலி... கல்லீரல் வெடித்து உயிருக்குப் போராடிய நபரை மீட்ட மேலாளர்!

சீனாவின் ஹாங்சோ (Hangzhou) பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் உணவருந்திக் கொண்டிருந்த ஹுவாங் (Huang) என்ற நபருக்கு திடீரென்று கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு, உடல் வியர்த்துக் கொட்டியது.

அவரது வயிறு வழக்கத்துக்கு மாறாக வீங்கியிருப்பதை கவனித்த உணவக ஊழியர்கள், அவரை உடனடியாக வைத்தியசாலைக்குச் செல்லுமாறு வற்புறுத்தினர்.

வைத்தியசாலையில் பரிசோதித்தபோது, ஹுவாங்கின் கல்லீரல் வெடித்து சுமார் 2 லிட்டர் இரத்தப்போக்கு ஏற்பட்டது தெரியவந்தது. "இன்னும் அரை மணி நேரம் தாமதித்திருந்தால் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியாது" என்று வைத்தியர்கள் அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்தனர்.

வைத்தியசாலைக்கு விரைந்ததோடு மட்டுமல்லாமல், ஹுவாங்கிற்குத் தேவையான மருத்துவக் கட்டணத்தைச் செலுத்தி, போர்வை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களையும் வழங்கி, அந்த உணவக மேலாளர் மனிதாபிமானத்துடன் உதவியுள்ளார். சரியான நேரத்தில் உதவி செய்து தனது உயிரைக் காப்பாற்றிய மேலாளருக்கு ஹுவாங் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

உரிய நேரத்தில் செயல்பட்டு ஓர் உயிரைக் காத்த அந்த உணவக ஊழியர்களுக்கும், மேலாளரின் பெருந்தன்மைக்கும் சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

மேலும் பல செய்திகளுக்கு பக்கத்தைப் பின்தொடருங்கள்.

Address

Colombo
00600

Alerts

Be the first to know and let us send you an email when News21 Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News21 Tamil:

Shortcuts

Share