29/05/2026
🚨 மட்டக்களப்பில் ஓட்டோ சாரதிக்கு மயக்க மருந்து தெளித்து நகை, பணம் கொள்ளை!
மட்டக்களப்பு நகரில் ஓட்டோவை வாடகைக்கு அமர்த்திச் சென்ற மர்ம நபர்கள், சாரதிக்கு மயக்க மருந்து தெளித்து அவரைப் பாழடைந்த காட்டுப் பகுதியில் வீசிவிட்டு, நகை, கையடக்கத் தொலைபேசி மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றுள்ளனர்.
நடந்தது என்ன?
பூநொச்சிமுனைப் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய ஓட்டோ சாரதி, மட்டக்களப்பில் இருந்து வாழைச்சேனைக்குச் சவாரி சென்றபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. புதன்கிழமை இரவு 07 மணியளவில் இருந்து காணாமல் போயிருந்த இவர், வியாழக்கிழமை (28) காலை ரிதிதென்னை காட்டுப் பகுதியில் மயங்கிய நிலையில் மக்களால் மீட்கப்பட்டார்.
கொள்ளையர்கள் சாரதியிடமிருந்த ஒரு பவுன் தங்க மோதிரம், பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசி ஆகியவற்றை அபகரித்துச் சென்றுள்ளனர்.
தற்போது குறித்த சாரதி, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை மற்றும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் இணைந்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.