Zhiyan

Zhiyan From the mysteries of the cosmos to the latest in scientific discoveries, let’s expand our horizons together. ✨

பூமியில் உயிர் எவ்வாறு உருவானதென்று பல நூறு ஆண்டுகளாக ஆய்வாளர்களுக்கு மத்தியில் ஒரு தேடல் இருந்து கொண்டேயிருக்கிறது. அதற...
02/02/2025

பூமியில் உயிர் எவ்வாறு உருவானதென்று பல நூறு ஆண்டுகளாக ஆய்வாளர்களுக்கு மத்தியில் ஒரு தேடல் இருந்து கொண்டேயிருக்கிறது. அதற்கான விடையைத் தேடி இன்றும் பல மில்லியன் டொலர்கள் செலவோடு பூமியிலும், பூமியை தாண்டியும் பல ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

உயிரின் தோற்றம் பற்றிய தேடலில் அறிவியலாளர்களுக்கு மத்தியில் இரண்டு கொள்கைகள் பிரபலமானவை. ஒன்று உயிர் இரசாயனக் கோட்பாடு (Abiogenesis), மற்றையது வான் விதை கோட்பாடு (Panspermia).

உயிர் இரசாயனக் கோட்பாட்டின் படி பூமி உருவாகிய காலத்தில் அத்தனை கனிமங்களும் அதன் ஆதிக் கடலில் கரைந்திருந்தன. ஆதிக் கடலெனும் இந்த கரைசல் அதிகளவான வெப்பம், கதிர்வீச்சு என்பவற்றினால் தாக்கமடைந்த போது அதிலிருந்த மூலக்கூறுகள் சேர்ந்து கடலின் எங்கோ ஒரு ஆழத்தில் முதல் உயிரினம் உருவானது.

இந்தக் கொள்கையை 1953 இல் மில்லர் - யுரே என்ற இரு ஆய்வாளர்கள் தங்கள் பரிசோதனைக் கூடத்தில் நிரூபித்துக் காட்டினர். அவர்களால் ஆதிக் கடலின் அதே நிலைமைகளை தங்கள் பரிசோதனைக் கூடத்தில் உருவாக்கி உயிரங்கிகளின் கட்டமைப்புக்கு அத்தியவசியமான 20 அமினோ அமிலங்களில் 5 அமினோ அமிலங்களை வெற்றிகரமாக உருவாக்க முடிந்தது.

இதனால் ஏனைய கோட்பாடுகள் எல்லாம் ஓரங்கட்டப்பட்டு உயிர் இரசாயனக் கோட்பாடு முதன்மை பெற்றது. பிற்காலத்தில் இந்தக் கோட்பாட்டை வைத்து முதல் உயிர் அந்த ஆதிக் கடலின் எவ்விடத்தில் தோன்றியிருக்கலாம் என ஆழமாக ஆராயப்படுகிறது. கடலுக்கடியிலிருக்கும் வெப்ப ஊற்றுகள், எரிமலைகள், கார ஊற்றுக்கள் என்பன இவ்வாறு ஆராயப்படுகின்றன.

வான் விதை கோட்பாட்டின் படி பூமியின் முதல் உயிரானது பூமிக்கு வெளியே எங்கிருந்தோ வந்திருக்கிறது. இதற்காக ஏனைய கோள்கள், அவற்றினுடைய துணைக்கோள்கள், விண்கற்கள் என்பன தொடர்ச்சியாக ஆராயப்படுகின்றன. ஆனால் இந்நாள் வரையிலும் இந்த ஆராய்ச்சிகள் எதுவும் சாதகமான பெறுபேறுகளை நமக்கு கொடுக்கவில்லை.

இப்படியிருக்க நாஸா 2016 ஆம் ஆண்டு பெண்ணு (Bennu) என்றழைக்கப்படும் ஒரு விண்கல்லை நோக்கி OSIRIS-REx என்றொரு விண்கலத்தினை ஏவியது. அது 2018 ஆம் ஆண்டு பெண்ணுவில் தரையிறங்கி ஆராந்து, 2020ஆம் ஆண்டு அதன் மாதிரிகளை சேகரித்துக் கொண்டு பூமியை நோக்கி கிளம்பியது. 2023 ஆம் ஆண்டு அம்மாதிரிகள் பூமியை வந்தடைந்தன.

நேற்று பெண்ணுவின் மேற்பரப்பில் பெறப்பட்ட இம்மாதிரிகளின் ஆய்வு முடிவுகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டிருக்கின்றன. இவை அறிவியலில் அதிலும் குறிப்பாக பூமியில் முதல் உயிர் எப்படி உருவானது என்ற கோட்பாட்டில் யாருமே எதிர்பார்க்காத மிகப் பெரிய திருப்பத்தினை ஏற்படுத்தியிருக்கின்றன.

உயிரினங்களின் கட்டமைப்பிற்கு அத்தியவசியமான 20 அமினோ அமிலங்களில் 14 அமினோ அமிலங்கள் பெண்ணுவின் மேற்பரப்பில் கிடைத்திருக்கின்றன. அத்தோடு உயிரினங்களின் மரபணுக்களான DNA, RNA களை உருவாக்கும் உப்பு மூலங்கள் (Nucleobases) ஐந்தும் இருக்கின்றன.

DNA/RNA இன் உதவியுடன் அமினோ அமிலங்கள் தொடராக அடுக்கப்படும் போது அவை புரத நார்களை உருவாக்குகின்றன. இந்த புரதங்கள் சேர்ந்து கலங்களை உருவாக்குகின்றன. இந்த கலங்கள் DNA/RNA ஊடாக பிரிவடைந்து பெருகுகின்றன. அடுத்த கலங்களும் அதே செயற்பாட்டை செய்வதற்கான தகவல்களை பிரிவடைந்த DNA/RNA களே தமக்குள் வைத்திருக்கின்றன.

ஆக ஒரு உயிரங்கியை உருவாக்குவதற்கு தேவையான அத்தனை மூலக்கூறுகளையும் பெண்ணுவின் மேற்பரப்பில் பெற்றிருப்பதாக இன்று மார்தட்டிக் கொள்கிறது அறிவியல். இதற்கு மேலதிகமாக ஹைட்ரோ காபன் சங்கிலிகள், அமோனியா என்று இன்னும் பல வகை மூலக்கூறுகளும் இருக்கின்றன.

வரலாற்றில் முதல் தடவையாக நாம் பயன்படுத்தும் மேசை உப்பு (Sodium Chloride) உட்பட 11 வகை கனிமங்களை பெண்ணுவின் மாதிரிகள் கொண்டிருக்கின்றன. இவை யாவும் நீரில் கரைந்திருந்து காலப் போக்கில் நீர் ஆவியாகும் போது எவ்வகையான பளிங்குகளை உருவாக்குமோ அதே வடிவத்தில் காணப்படுகின்றன. இது விண்வெளி ஆய்வின் மிகப் பெரிய மைல்கல்.

இதிலிருந்து பெண்ணு பூமியில் உயிரினம் ஒன்றின் உருவாக்கத்துக்கு தேவையான அனேகமாக மூலகங்களையும், நீரையும் கொண்டிருந்த ஒரு விண்கல் என்பது தெளிவாகிறது. இது சனிக் கோளுக்கு பின்னாலுள்ள ஏதோவொரு வான்பொருளின் உடைந்த பகுதி என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

ஆக உயிரினங்கள் உருவாக்கக்கூடிய அத்தனை அம்சங்களையும் கொண்ட ஒரு வான் பொருளொன்று நமது சூரியத் தொகுதியில் தூரத்தில் எங்கேயோ இருக்கிறது. அது உயிரினங்கள் வாழலாம் என்று சந்தேகிக்கின்ற சனியின் துணைக்கோளான Enceladus ஆகவோ/ குருங் கோலான Ceres ஆகவோ இருக்கலாம்.

பெண்ணுவின் தோற்றம் 4.6 பில்லியன் வருடங்களுக்கு முன்னானது. ஆனால் பூமியில் முதல் உயிரினம் 3.8 பில்லியன் வருடங்களுக்கு முன்தான் உருவாகியதாக அறிவியல் சொல்கிறது. ஆக பூமிக்கு பெண்ணு போன்ற ஏதேனுமொரு விண்கல் ஒன்றின் மூலமாக உயிர் வந்திருப்பதற்கான சாத்தியங்களே அதிகம் இருக்கின்றன.

இந்தக் கண்டுபிடிப்பு உயிர் இரசாயனக் கோட்பாட்டை விடவும் வான் விதைக் கோட்பாட்டை முதலாவதாக முன்னிருத்துகின்ற அதே வேளை உயிர் என்பது பூமிக்கு மட்டும் சொந்தமானதல்ல என்பதையும் ஆதாரங்களுடன் சொல்லிச் சென்றிருக்கிறது.

#ஷியான்_யாக்கூப்

அந்தப் புள்ளியை மீண்டும் பாருங்கள். இதோ இங்கிருக்கிறது. அதுதான் எங்களுடைய இருப்பிடம். அது நாமேதான். அதிலேதான் நீங்கள் வி...
09/11/2024

அந்தப் புள்ளியை மீண்டும் பாருங்கள். இதோ இங்கிருக்கிறது. அதுதான் எங்களுடைய இருப்பிடம். அது நாமேதான். அதிலேதான் நீங்கள் விரும்புகின்றவர்கள், தெரிந்தவர்கள், கேள்விப்பட்டவர்கள் என அத்தனை மனிதர்களும் வாழ்ந்து மறைந்தார்கள், வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம்முடைய மகிழ்ச்சிகள், துன்பங்கள், மதங்கள், சித்தாந்தங்கள், பொருளாதார கோட்பாடுகள் என அத்தனையும் இந்த சிறு புள்ளியில்தான் நிறைந்திருக்கின்றன.

ஒவ்வொரு வேட்டைக்காரனும், நாடோடியும், வீரனும், கோழையும், அரசனும், விவசாயியும், காதலனும், காதலியும், தாயும், தந்தையும், குழந்தையும், விஞ்ஞானியும், ஆசிரியனும், அரசியல்வாதியும், ஊழல்வாதியும், தலைவர்களும், கதாநாயகர்களும், புனிதர்களும், பாவிகளும் என அத்தனை பேருமே சூரிய ஒளியில் மின்னிக் கொண்டிருக்கும் இந்த துகளின் மீதுதான் வாழ்ந்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

-கார்ள் சாகன்

Happy Birthday Carl ❤️

நவம்பர், டிசம்பர் மாதங்கள்ல மாத்திரம் வானத்துல காட்சி தருகிற ஒன்று இருக்கு. அது மூன்று நட்சத்திரங்களினால் ஆன ஒரு முக்கோண...
09/11/2024

நவம்பர், டிசம்பர் மாதங்கள்ல மாத்திரம் வானத்துல காட்சி தருகிற ஒன்று இருக்கு. அது மூன்று நட்சத்திரங்களினால் ஆன ஒரு முக்கோண வடிவம். அத Summer Triangle னு சொல்லுவாங்க.

இந்த முக்கோண வடிவத்தை உருவாக்குற மூன்று நட்சத்திரங்களும் மூன்று வெவ்வேறான விண்மீன் தொகுதிக்குரியவை. Lyra Constellation ஓட Vega உம், Cygnus Constellation ஓட Deneb உம், Aquila Constellation ஓட Altair உம் சேர்ந்து உருவாக்குகின்ற வடிவமே இந்த Summer Triangle.

பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளா மக்கள் காலநிலை மாற்றங்களை அறிந்து கொள்ளவும், தங்களோட வாழ்வாதாரத்த திட்டமிடவும் கண்காணித்த முக்கியமான ஒரு வடிவம் இந்த Summer Triangle.

இத பார்க்க விரும்பினா நள்ளிரவு நேரத்துல உச்சி வானத்துல Aquila Constellation இனை இலகுவாக அவதானிக்கலாம். அது பருந்தோட வடிவத்துல இருக்கும். அத அடையாளம் கண்டா இந்த முக்கோணத்தையும் இலகுவா அடையாளம் காணலாம்.

இதற்கு பின்னால்தான் Milky Way Galaxy பரந்து விரிந்திருக்கிறது. பொருத்தமான கெமரா/ தொலைநோக்கி இருந்தா Milky Way ஓட சேர்த்து இந்த Summer Triangle அயும் பார்த்து ரசிக்கலாம்.

#ஷியான்_யாக்கூப்

140 மில்லியன் ஒளியாண்டுகள் தூரத்துல நடக்குற ஒரு மிகப் பெரிய பிரபஞ்ச நடனமொன்ற ஜேம்ஸ்வெப், ஹப்பிள்னு இரண்டு தொலைகாட்டிகளைய...
07/11/2024

140 மில்லியன் ஒளியாண்டுகள் தூரத்துல நடக்குற ஒரு மிகப் பெரிய பிரபஞ்ச நடனமொன்ற ஜேம்ஸ்வெப், ஹப்பிள்னு இரண்டு தொலைகாட்டிகளையும் வச்சு படம் பிடிச்சிருக்காங்க.

இது பெருநாய் விண்மீன் கூட்டத்துல (Canis Major) இருக்குற இரண்டு கேலக்ஸிகளோட பலே நடனம். NGC 2207னு ஒரு பெரிய கேலக்ஸி தனக்கு அருகில இருந்த IC 2163னு சொல்ற சின்ன கேலக்ஸி ஒன்ன கவர்ந்து இழுக்குறதுதான் இந்த நடனம்.

கேலக்ஸிகளோட இணைவுங்குறது பார்க்க ரொம்பவே அழகா இருக்கும். ஒரு கம்பியூட்டர் அனிமேசன் போல இரண்டு நட்சத்திரச் சக்கரங்கள் ஒன்றுக்குள்ள ஒன்னா பின்னிக்கும்.

இந்த இரண்டு கேலக்ஸிகளும் 40 மில்லியன் வருசங்களுக்கு முதலே இணைய ஆரம்பித்திருக்குனு சொல்றாங்க. இத்தன மில்லியன் வருடங்களா இரண்டுமே வெறும் ஓரங்கள்லதான் இன்னுமே தொட்டிட்டு இருக்கு.

முற்றா இணைந்து ஒன்றாக பில பில்லியன் வருடங்களாவது போகும். இரண்டு கேலக்ஸிகள் இணைய ஆரம்பிக்கும் போது அவற்றோட உயிர்ப்புத் தன்மை பல மடங்கு அதிகரிக்கும்.

ஒவ்வொரு வருசமும் நம்மளோட பால்வெள்ளி இரண்டு/ மூனு நட்சத்திரங்களதான் உருவாக்கும். ஆனா இந்த கேலக்ஸிகள் ஒன்வொன்னுப் கிட்டத்தட்ட 25க்கு மேற்பட்ட நட்சத்திரங்கள உருவாக்குது. அந்தளவுக்கு ரொம்பவே உயிர்ப்பானவை.

நட்சத்திரங்களோட பெரு வெடிப்புகள் கடந்த ஐம்பது வருசத்துல ஒன்னுதான் நம்மளோட பால்வெள்ளில நடந்திருக்கு. ஆனா கடத்த பத்து வருசத்துலயே இந்த கேலக்ஸிகள்ல 7 முறை இந்த பெருவெடிப்புகள் நடந்திருக்கு.

இந்த கேலக்ஸிகள் எப்படி இணைய ஆரம்பிக்குதோ அது போல நம்மளோட கேலக்ஸி அன்ட்ரோமேடா கேலக்ஸியோட இன்னும் சில பில்லியன் வருசங்கள்ல இணைய ஆரம்பிக்கும். அதுக்காக நம்மள நோக்கி அன்ட்ரோமேடா வந்திட்டு இருக்கு.

ஆனா பிரபஞ்சத்தோட அந்த அழகிய நடனத்த பார்க்க பூமியோ/ பூமில வாழுற ஏதேனும் உயிரிணங்களோ இருக்காது. ஒருவேளை வேறொரு கோளுக்கு இடம்பெயர முடிந்தால் அதை ரசிக்கக் கிடைக்கலாம்.

Two galaxies dance across the cosmos, bound by gravity's eternal pull. In their collision, stars will be born, light will scatter, and a new galaxy will rise. ✨

#ஷியான்_யாக்கூப்

ரொம்ப நாளைக்கு அப்பறமா பூமில இருந்து ஓநாய் ஒன்ன படம்  பிடிச்சிருக்காங்க. ரொம்ப நாளைக்கு அப்பறம்னா ஓநாய் இனம் அழியப்போகுற...
05/11/2024

ரொம்ப நாளைக்கு அப்பறமா பூமில இருந்து ஓநாய் ஒன்ன படம் பிடிச்சிருக்காங்க. ரொம்ப நாளைக்கு அப்பறம்னா ஓநாய் இனம் அழியப்போகுற ஆபத்துல இருக்கோனு நினைக்காதேங்க.

இது வானத்துல இருக்குற ஒரு கருமையான ஓநாய். 5300 ஒளியாண்டுகள் தூரத்துல இருக்குற இந்த ஓநாய் ரொம்ப அடர்த்தியான பிரபஞ்சத் துகள்களால் ஆனது. இதனால் இதனூடாக ஒளி பயணிப்பது தடுக்கப்படுகிறது.

வழமையாக நெபுலாக்கள் எனப்படுகின்ற பிரபஞ்சத் துகள் மேகங்கள் ஒளியை பிறப்பிக்கும் ஆற்றலை கொண்டவை. ஆனால் இந்த கருமை ஓநாய் அதற்கு நேர்மாறாக இருக்கின்றது.

இதனால் இந்த கருமை ஓநாயினை வெற்றுக் கண்ணால் பார்க்க முடியாது. ஸ்கோர்பியன் விண்மீன் கூட்டத்திலுள்ள இதனை செங்கீழ் கதிர்களை படம்பிடிக்கும் தொலைநோக்கியின் உதவியுடனே படம்பிடிக்க முடியும்.

இந்த கருமை ஓநாய் அதிகளவிலான நட்சத்திரங்களின் பிறப்பிடமாக இருக்கின்றது. அதனை சூழ மிளிர்ந்து கொண்டிருக்கும் ஹைட்ரஜன் வாயுக்கள் அதற்கான சான்றுகளாகும்.

ஒரு நட்சத்திரம் புதிதாக உருவாகும் போது வெளிவிடும் கதிரியக்கத்தினால் எப்போதும் அதனை சூழ்ந்திருக்கும் வாயுக்கள் சக்தியை உறிஞ்சி மிளிர்ந்து கொள்ளும்.

படத்தில் சிவப்பு நிறத்தில் மிளிர்ந்து கொண்டிருப்பவை இவ்வாறு சக்தி பெற்ற ஹைட்ரஜன் வாயுக்களாகும்.

#ஷியான்_யாக்கூப்

பூமி மேற்குல இருந்து கிழக்கு நோக்கி சுத்துறதால நமக்கு சூரியனும் சந்திரனும் கிழக்குல உதிச்சு மேற்குல மறையுறது போல ஒரு தோற...
04/11/2024

பூமி மேற்குல இருந்து கிழக்கு நோக்கி சுத்துறதால நமக்கு சூரியனும் சந்திரனும் கிழக்குல உதிச்சு மேற்குல மறையுறது போல ஒரு தோற்றத்த தருது. ஆனா அது எல்லா இடங்களுக்கும் பொதுவானதொரு நிகழ்வு இல்ல.

சுழற்சி வேகம், சுழற்சிக் கோணம், சுற்றுகை வேகம், சுற்றி வரும் பாதை இது நான்கையும் வைத்து இயல்பியலின் துணையுடன் பிரபஞ்சம் நிகழ்த்தி வைத்திருக்கும் மாயாஜாலங்கள் ஒரு தொகை இருக்கின்றன.

நாம புதன் கோள்ல இருக்கம்னு வைங்க. அங்க ஒரு நாள் எப்படி ஆரம்பிக்கும்னா சூரியன் மிகப் பெரிய அளவுல கிழக்குப் பக்கமா உதிச்சு உச்சிக்கு வந்து உச்சில இருக்கும் போது தூரத்துக்குப் போய் சிறிதாகி, திரும்பி பெரிதாகி வந்து மேற்குப் பக்கமா மறையும்.

சில நாட்கள்ல கிழக்குல உதித்து உடனே கிழக்குலேயே மறைந்துடும். திரும்பயும் கிழக்குல உதித்து மேற்குல மறையும். திரும்ப மேற்குல உதித்து உடனே மேற்கிலேயே மறையும். தலை குழம்புற போல இருக்குல? இத Double Sunrises, Sunsets னு சொல்லுவாங்க.

இதுவே வெள்ளிக் கோள்னு வைங்க. விநோதமா சூரியன் மேற்குல உதிச்சு கிழக்குல மறையும். அதையே வெள்ளி ஒரு நாளைக்கு ரெண்டு நிகழ்த்தும். புரியுதா? அதாவது வெள்ளில ஒரு நாளைக்கு சூரியன் இரண்டு தடவை உதிச்சு மறையும்.

இத்தனைக்கும் இந்த இரண்டு கோளுக்கும் நிலவுகள் ஏதுமே இல்ல. இருந்திருந்தா இந்த இடியப்பச் சிக்கல்ல இன்னும் அட்டகாசமா இருந்திருக்கும். இப்போ செவ்வாய் கோள பார்க்கலாம்.

செவ்வாய் இன்னும் சுவாரசியமானது. சூரியன் உதிக்குறதும் மறையுறதும் பூமியப் போலவை நிகழும். ஆனா சூரியனோட நிறம் நீலமா இருக்கும். செவ்வாய்க்கு இரண்டு நிலவுகள் இருக்கு. கதையே இங்கதான் ஆரம்பிக்குது.

செவ்வாயோட சிறிய நிலவு கிழக்குல உதித்து மேற்குல மறையும். ஆனா பெரிய நிலவு இதுக்கு மாற்றமா மேற்குல உதித்து கிழக்குல மறையும். ஆச்சர்யம் என்னனா இரண்டுமே ஒரே திசையில தான் சுற்றிக் கொண்டிருக்கும்.

இது எப்டி சாத்தியம்? சாத்தியம். ஏன்னா செவ்வாய் இந்த விநோதத்த நிகழ்த்த இயல்பியலோட ரொம்ப சாதாரணமான யுக்திய பாவித்திருக்கு. அதுவெல்லாம் என்னனு நான் இங்க எழுதல. வெறுமனே நிகழ்வுகள மட்டுமே எழுதுறன்.

வியாழன் கோளுக்கு வந்தாலும் ஒரு விநோதம் இருக்கு. சூரியன் கிழக்குல உதிச்சு மேற்குல மறையும்.
ஆனா வியாழனுக்கு 95 நிலவுகள் இருக்கு. நீங்க திரும்புற திசையெல்லாம் நிலவுகள் நிறைந்திருக்கும்.

இங்க 91 நிலவுகள் கிழக்குல உதித்து மேற்குல மறையும். ஆனா 4 நிலவுகள் மேற்குல உதித்து கிழக்குல மறையும். இந்த நிலவுகள் எதிர் எதிர் திசையில பயணித்து நெருங்குறதயும், விலகுறதயும் பார்க்க எவ்வளவு அழகா இருக்கும். வியாழனோட வானம் தினசரி இந்த வேடிக்கைய நிகழ்த்திட்டே இருக்கும்.

சனிக்கோளுக்கு வந்தா சூரியன் கிழக்குல உதித்து மேற்குல மறையும். அது போலவேதான் நிலவுகளும். ஆனா சனிக் கோளோட விசேஷம் என்னனா அதனோட வானத்துல 140 நிலவுகள் நிலவுகள் உலா வரும். சனிக் கோள்ல யாராவது கவிஞர்கள் வாழ்ந்தா அவங்களோட நிலமைய நெனச்சுப் பாருங்க.

அதுக்கும் மேலதிகமா அதனோட வளையம் ஒரு அழகக் கொடுக்கும். வானத்துல எப்பவுமே வானவில் இருக்குறது போல சனியோட வானம் அதனோட வளையத்த காட்சிப் படுத்திட்டே இருக்கும்.

அடுத்தது யுரேனஸ். யுரேனஸ் மட்டும் செங்குத்தா சாய்ந்துதான் சுழலும். இதனால அதனோட 28 நிலவுகள், நட்சத்திரங்கள் எல்லாமே கிழக்குல இருந்து மேற்குக்கு நகர சூரியன் மட்டும் புது அவதாரம் எடுக்கும்.யுரேனஸோட மத்தில இருந்து பார்க்கும் போது சூரியன் ஒவ்வொரு நாளும் உதித்து மறையும்.

ஆனா யுரேனஸோட முனைகள்ல இருந்து பார்க்கும் போது சூரியன் எப்பவுமே வானத்துல வட்டமா சுற்றிய படியே இருக்கும். சூரியன் அதனோட வானத்துல காலத்திக்கும் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கும்.

நெப்டியூன்ல சூரியன், நிலவுகள்னு எல்லாமே கிழக்குல உதிச்சு மேற்குல மறையும். ஆனா அதனோட மிகப் பெரிய நிலவு மட்டும் இதுக்கு விதிவிலக்கு. அது மட்டும் மேற்குல உதிச்சு கிழக்குல மறையும்.

இந்த விநோதங்களையெல்லாம் பூமியோட ஒப்பிட்டா இருக்குறத்துலயே சுவாரசியமில்லாத ஒரு காட்சிய நம்மளோட வானம் மட்டும்தான் நிகழ்த்திக் கொண்டிருக்குனு எனக்கு அடிக்கடி தோணும். ஆனா இருக்குற காட்சிகளோட அழக விபரிக்கவே எங்கிட்ட வார்த்தைகள் போதுமாயிருக்காது.

சனிக்கோளோட மிகப் பெரிய நிலவு டைடன். ஒரு சின்ன கற்பனைக்கு உங்கள நான் கண்கள கட்டி அங்க கூட்டிட்டு போறன். கண் கட்ட அவித்ததுமே நீங்க பார்க்கப் போகிற காட்சி நான் பதிவேற்றியிருக்குற காட்சிதான். இத நீங்க என்ன வார்த்தைகள கொண்டு வர்ணிப்பிங்க?

#ஷியான்_யாக்கூப்

நேற்றிரவு பைக்ல போகும் போது கண்ணுக்குள்ள பூச்சி விழுந்துட்டு.  "நல்ல காலம் பூச்சியெல்லாம் சின்னதா இருக்குற. நாலு/அஞ்சு இ...
27/10/2024

நேற்றிரவு பைக்ல போகும் போது கண்ணுக்குள்ள பூச்சி விழுந்துட்டு. "நல்ல காலம் பூச்சியெல்லாம் சின்னதா இருக்குற. நாலு/அஞ்சு இஞ்சுக்கு இருந்தா நம்மளோட நிலமை என்னாகும்"னு சொல்லி சிரிச்சாங்க. நான் "அதுக்கு நீ டைனோசருக்கு தான் தாங்க்ஸ் பண்ணணும்"னு சொன்னதும் "ஏன்"னுஆச்சர்யமா கேட்டாங்க.

நீங்க வாகனங்கள்ல போகும் போதும் வின்ட் ஷீல்ட்ல நிறைய பூச்சிங்க வந்து விழுந்திருக்கும். சில பேருக்கு அது எரிச்சலாவும் இருக்கும். ஆனா உண்மைக்கும் நாம இந்த பூச்சிகள நினைத்து சந்தோசப்படனும். ஏன்னா பூச்சிகளோட வரலாறு ரொம்பவே டெரரானது.

200 மில்லியன் வருசங்களுக்கு முதல்ல பூச்சி இனமே ரொம்ப பெரியதா இருந்துச்சு. சாதாரணமா நம்ம வாசல்ல பறந்து திரியுற தும்பி இருக்குதானே? அதனோட சொந்தக்கார இனம் ஒன்னு அந்தக் காலத்துல வாழ்ந்துச்சு. Meganeuraனு பேரு.

அந்த இனத்தோட இறக்கைகள் மட்டும் இரண்டு அடி நீளமிருக்குமாம். ஆக பெரிய தீக்கோழி அளவுல இதுங்க இடையெல்லாம் பறந்து திரிஞ்சிருக்கு. இதே அளவுல இப்போ இருந்திருந்தா நாம கவச வாகனங்கள்ல தான் போகவேண்டி வந்திருக்கும்.

இன்னொரு பயங்கரமான விசயம் என்னனா நம்மள ரொம்பவே தொந்தரவு பண்ணுற கரப்பான் அப்போ அரை அடி அளவுல இருந்திருக்கு. பாத்ரூம்ல ரெண்டு கரப்பான் வந்தா பொண்ணுங்க டெட் பொடியத்தான் மீட்க வேண்டி வந்திருக்கும்.

அந்த காலகட்டத்துல இதெல்லாம் ஏன் இவ்ளோ பெருசா இருந்துச்சுனா அதுக்கு காரணம் வளிமண்டலம். அப்போ வளி ரொம்ப ஈரமானதா, மிதமான சூடானதா இருந்ததோட ஒட்சிசனோட அளவு 35% இருந்தது. இதனால பூச்சிகளோட வாயுப் பரிமாற்றம் அதிகரிச்சு அதுங்க ரொம்ப பெரிதா வளர சந்தர்ப்பம் கிடைத்தது.

அந்த பெரிய அளவு பூச்சிகள் எங்க போனிச்சுனு ஒரு கேள்வி வரலாம். அதுக்கு முதலாவது காரணம் டைனோசர்கள். 200 மில்லியன் வருசங்களுக்கு முதல்தான் டைனோசர்கள் தரை விலங்குகளா இருந்து பறக்கும் உயிரிணங்களா பரிமாணம் அடைந்தன.

இந்த மாற்றத்தால பாதிக்கப்பட்டது யாருனா பூச்சிகள்தான். பெரிய அளவுல இருந்த பூச்சிகளால பறக்கும் டைனோசர்களோட போட்டி போடவோ, அவற்றுக்கிட்ட இருந்து தப்பிக்கவோ முடியாம போனதால பெரும்பாலான பூச்சி இனங்கள் அழிந்து போனதா அறிவியல் சொல்லுது.

இரண்டாவது காரணம் வளிமண்டல ஒட்சிசன் அளவு குறைவடைந்தது. இதனால பூச்சிகளோட வாயுப் பரிமாற்றம் குறைவடைந்ததால பெரிய அளவிலான பூச்சிகளால தாக்குப்பிடித்து வாழ முடியாது போனிச்சு. ஆனா இதற்கு மாற்றமா டைனோசர்கள் வெற்றிகரமா பறவைகளா கூர்ப்படைந்திச்சு.

Next time you spot an insect, think about how big their ancestors used to be.

#ஷியான்_யாக்கூப்

வேட்டையாடிகளாக தங்கள் வாழ்க்கையை ஆரம்பித்த மனித இனம் பல்லாயிரம் வருடங்களுக்கு பிறகு விவசாயத்தை கண்டடைந்தது. ஒன்பதாயிரம் ...
25/10/2024

வேட்டையாடிகளாக தங்கள் வாழ்க்கையை ஆரம்பித்த மனித இனம் பல்லாயிரம் வருடங்களுக்கு பிறகு விவசாயத்தை கண்டடைந்தது. ஒன்பதாயிரம் வருடங்களுக்கு முன்பு உருவான விவசாயம் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் உலகம் முழுவதும் பரவியிருந்தது.

மனிதன் வேட்டையாடியாக இருந்த போது அவனிடம் எதிர்காலம் பற்றிய எந்த அச்சங்களும் இருக்கவில்லை. நாடோடியான அவனால் விரும்பிய நேரத்தில் விரும்பிய இடத்திற்கு செல்ல முடிந்தது. ஆனால் அவன் விவசாயி வேடமணிந்த போது நிலமை தலைகீழாக மாறியது.

மண்ணில் விதைகளை விதைத்த பின்னர் அவனில் எதிர்காலம் பற்றிய பயம் குடிகொள்ளத் தொடங்கியது. அறுவடை வரைக்கும் வெள்ளத்திற்காகவும், வரட்சிக்காகவும் பயந்த படி அவன் வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனால் நாடோடியாக பிடித்த படி வாழ முடியாமல் போனது. அவன் தன்னுடைய பயிர்களுக்கு அருகிலேயே இரவும் பகலும் காவல் காக்க வேண்டியிருந்தது. இதனால் ஓரிடத்தில் நிரந்தரமாக குடிசையமைத்து வாழ்நாள் முழுக்க அவன் தங்கும் நிலை வந்தது.

இப்படித்தான் குடியேற்றங்களை மனித இனம் நிறுவிக் கொண்டது. மொசப்பத்தேமியாவிலும், எகிப்திலும் உருவான கிராமங்களுக்கு பின்னால் ஆரம்பகால விவசாயியின் இத்தனை அவலங்கள் இருந்தன.

போதுமான மழை பொழியவும், போதுமான விளைச்சல் கிடைக்கவும் அவன் இயற்கையை வழிபட ஆரம்பித்ததாக அறிவியல் சொல்கிறது. இதுவே கடவுள் நம்பிக்கை பிறந்த இடம் என அது எம்மோடு வாதிடுகிறது.

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் விவசாயிகள்தான் மால்டாவில் முதலாவது கோயிலையும், வானத்தை ஆராய்வதற்காக வட்டக்கல்லையும் (Stonehenge) கட்டியதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

இதற்குப் பின்னர்தான் இயற்கை நிகழ்வுகளை மனிதர்கள் முதன் முதலாக கடவுள் நம்பிக்கையுடன் தொடர்புபடுத்தலானார்கள். இந்தக் காலப்பகுதியில்தான் அட்லஸ் என்றொரு வால்வெள்ளி பூமிக்கு காட்சி தந்திருக்கும்.

வட்டக்கல்லடியில் (Stonehenge) கூடியிருந்த மக்கள் இதை பற்றி பேசியிருப்பார்கள். ஏதோவொரு கடவுளின் பெயரால் வந்த எச்சரிக்கையென அவர்கள் பயந்திருக்கவும் கூடும். அதற்காக விலங்குகளையோ/ கன்னிப்பெண்களையோ அவர்கள் பழிகொடுத்திருக்கவும் கூடும்.

இந்த கதைகளை பற்றி எதையும் அறியாத அட்லஸ் சூரியனை தன்னோட பாதையில ஒரு முறை சுற்றி வந்திருக்கும். அதற்கு முதல் எத்தனை தடவை அது சூரியனை சுற்றி வந்ததென்று தெரியாது. ஆனா அப்போது சுற்றியதுதான் அதனுடைய தன்னிறைவான கடைசி சுற்றுகை.

2020 ஆம் ஆண்டு அட்லஸ் இன்னொரு தடவை சுற்றுவதற்காக சூரிய தொகுதிக்குள்ள நுழைந்த போது பல பகுதிகளாக உடைந்து போனது. அதில் எஞ்சியிருக்கும் மீதி விடாப்பிடியாக தன் பாதையில் வந்து கொண்டிருக்கிறது.

இம்முறை அட்லஸ் சூரியன சுற்றி முடிக்குமா என்பது கூட தெரியாது. அதற்குள் அது உடைந்துவிடவும் கூடும். அதிர்ஷ்டவசமாக அது சுற்றி முடித்தாலும் கூட இனி எப்போதும் அது சூரியனிடம் மீளப் போவதேயில்லை.

It's getting ready for its last performance. 💔

இதோ!! ஐயாயிரம் வருடங்கள் கழித்து அட்லஸ் மீண்டுமொரு முறை காட்சி தர வருகிறது. தன்னுடைய இறுதிப் பயணத்தில் பிரியாவிடை பெற்றுப் போக வருகிறது. கடைசியாக வந்த போது அந்த விவசாயிகள் அதை குறித்து வைத்தார்களா என்று தெரியாது.

ஆனால் இம்முறை அட்லஸ் வரலாற்றில் ஓர் அங்கம் ஆகப் போகிறது. எதிர்கால மனித குலம் வால்வெள்ளிகளை பற்றி கற்கும் போது அவர்களால் நிச்சயம் அட்லஸின் பெயரை தவிர்க்க முடியாது.

28ஆம் திகதியிலிருந்து சில நாட்களுக்கு சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு மேற்கு வானில் உடைந்து போன தன் சிறிய தலையுடனும், நீளமான வாலுடனும் அட்லஸ் கடைசியாக ஒரு முறை காட்சி தரும்.

Brace yourself for the goodbye party! 🌠

#ஷியான்_யாக்கூப்

The Nobel Prize in Medicine 2024நம்முடைய உடம்பில் இருக்கின்ற அத்தனை கலங்களுக்குள்ளேயும் (Cells) ஒரே DNA அமைப்புதான் இருக...
11/10/2024

The Nobel Prize in Medicine 2024

நம்முடைய உடம்பில் இருக்கின்ற அத்தனை கலங்களுக்குள்ளேயும் (Cells) ஒரே DNA அமைப்புதான் இருக்கும். உங்களுடைய தலை முடியில் இருந்து பாதம் வரைக்கும் இருக்குற அத்தனை பாகங்களும் உங்களோட DNA அமைப்பதான் கொண்டிருக்கும்.

DNA தான் ஒவ்வொரு கலத்தோட கட்டமைப்பினையும், அதனுடைய தொழிற்பாடையும் தீர்மானிக்கும். அப்படியென்றால் ஒரே DNA இனை சுமந்திருக்கின்ற உடலிலுள்ள அத்தனை கலங்களும் ஒரே கட்டமைப்போடு, ஒரே தொழிலை செய்கின்ற ஒரு பிண்டமாக இருக்க வேண்டுமல்லவா?

ஆனால் நமது உடலோ அப்படி இல்லை. மூளை நம்மை கட்டுப்படுத்துகின்றது, நுரையீரல் காற்றை பறிமாற்றம் செய்கிறது, இரைப்பை உணவை அரைக்கின்றது, சிறுநீரகம் கழிவுகளை வெளியேற்றுகின்றது. எப்படி இந்த ஒவ்வொரு பாகங்களும் தங்களை தனித்துவமாக செதுக்கிக் கொள்கின்றன என்பது உயிரியலில் இத்தனை காலம் பெருங்குழப்பமாகவே இருந்தது.

இந்தக் கலங்களுக்கு DNA இலிருக்கின்ற மொத்த செய்திகளையும் ஆராய்ந்து இவை இவைதான் உனக்கானது, இவை இவை அவனுக்கானது, இவனுக்கானதென்று சாமர்த்தியமாக பங்கு வைப்பது எது? ஆகா இது எவ்வளவு பெரியதொரு அற்புதம் என்று சொல்லி அறிவியல் ஒரு போதும் வேடிக்கை பார்ப்பதில்லை. அற்புதம் என்பது அறிவியல் அறியும் வரையும்தான்.

இந்த அற்புதத்தை ஆராய்ந்து உலகுக்கு அம்பலப்படுத்திய இரு அறிவியலாளர்களுக்குதான் இந்த வருடத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. சரி அவர்கள் எதனை கண்டுபிடித்திருக்கிறார்கள், எது இந்த கலங்களை தனித்துவமாக திரிபடைய காரணமாக இருக்கிறதென்று பார்ப்போம்.

நம்மளுட ஜனாதிபதி அனுர குமார இருக்கிறார். அனுரவால் நாட்டில் நடக்க வேண்டிய அத்தனை விடயங்களிலும் பங்கெடுக்க முடியாதல்லவா.
இதனால் அவர் அதிகாரத்தின் எல்லைகளில் பாதுகாப்பாக நின்று கொண்டு ஒவ்வொரு திணைக்களத்திற்கும் பொறுப்பை பிரித்து வழங்குவார். அவர்கள் அந்த பொறுப்பை ஏற்று செயற்றிடங்களை உருவாக்கி ஊழியர்களை கொண்டு நடக்கவேண்டியதை செய்வார்கள்.

இதே போல DNA தான் ஜனாதிபதி என்று வைத்துக் கொள்ளுங்கள். இப்போது உடலில் இருக்கும் அத்தனை கலங்களுக்கும் ஜனாதிபதி அதுதான். DNA தன்னிடமிருக்கின்ற ஒரு செய்தியை mRNA வடிவில் ஒரு இடத்திற்கு வழங்கும். இன்னொரு mRNA செய்தியை இன்னொரு இடத்திற்கு வழங்கும்.

இதை Transcription என்பார்கள். இந்த mRNA செய்தியை rRNA வாசித்து அதற்கேற்ப புரதத்தை தொகுக்கும். இதை Translation என்பார்கள். இப்படி தொகுக்கப்படும் புரதம் கடைநிலை அரச ஊழியர்களுக்கு ஒப்பானது. இதுதான் ஒரு கலத்தினுடைய கட்டமைப்பிற்கும், தொழிற்பாட்டிற்கும் காரணமாக இருக்கும்.

நமது பிரச்சனை ஒவ்வொரு இடங்களுக்கும் எப்படி Transcription மூலம் வேறு வேறான mRNA உருவாக்கப்படுகிறது என்பதுதான். இந்த இடத்தில்தான் புதிதாக microRNA என்ற ஒரு மூலக்கூறு வெளிச்சத்திற்கு வருகிறது. இந்த microRNA தான் DNA இலிருந்து எந்த எந்த இடங்களுக்கு என்ன என்ன வகையாக mRNA உருவாக்கப்பட வேண்டும் என்பதை ஒழுங்குபடுத்துகிறது.

Victor Ambros, Gary Ruvkun ஆகிய இரண்டு ஆய்வாளர்களால் C.Elegans என்ற ஒரு வகையான வட்டப்புழுக்களில் 1990 ஆம் ஆண்டு முதன்முறையாக lin-4 என்றழைக்கப்படும் microRNA கண்டுபிடிக்கப்பட்டது. இந்த microRNA தான் வட்டப்புழுக்களின் வளர்ச்சிக்காலத்தை கட்டுப்படுத்துகின்றது என Ambros உம், Ruvkun உம் தம் ஆய்வினை சமர்ப்பித்தனர்.

ஆனால் இந்த விடயம் சரியாக வெளிச்சத்திற்கு வரவும், அதன் முக்கியத்துவம் அறியப்படவும் பல வருடங்கள் தேவைப்பட்டன. இந்த microRNA கண்டுபிடிப்பிற்காகவே இந்த வருட மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த கண்டுபிடிப்பின் மூலம் microRNA இல் ஏற்படுகின்ற கோளாருகள் எப்படி புற்று நோய்களுக்கும், பிறவி நோய்களுக்கும் காரணமாக அமைகின்றன என்ற புரிதல் எமக்கு கிடைத்திருக்கிறது. இதனால் எதிர்காலத்தில் இந்த நோய்களை குணமாக்கும் சிகிச்சை முறைகள் உருவாகிய வண்ணமுள்ளன.

| #ஷியான்_யாக்கூப்

மனது சோர்வடையும் வேளைகளில் எல்லாம் கண்கள் வானத்தையே நோக்குகின்றன. வானம் என்பது ஒரு போதும் அடையமுடியாத ஒரு இலக்கு. நாம் வ...
06/10/2024

மனது சோர்வடையும் வேளைகளில் எல்லாம் கண்கள் வானத்தையே நோக்குகின்றன. வானம் என்பது ஒரு போதும் அடையமுடியாத ஒரு இலக்கு. நாம் வானத்தை ரசிக்க ஆரம்பித்தால் அது ஓராயிரம் ஆச்சர்யங்களை எங்களுக்கு பரிசளிக்கும்.

ஆதிமனிதனின் முதல் பொழுதுபோக்கு வானம் பார்த்தலாகவே இருந்திருக்குமென்று எங்கேயோ படித்த ஞாபகம். அமைதிக்கு, அழகுக்கு, அறிவுக்கு என்று வானம் பார்த்தல் சதா நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.

வானமென்பது பிரபஞ்சத்தின் ஒளித்திரை. ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் அது விரிந்து கொண்டே செல்வதாக அகம் உணர்கிறது. அந்த உணர்தலே அகத்தின் அகங்காரங்களை எல்லாம் அகற்றச் செய்கிறது.

வானத்தை புரிதலுடன் பார்க்கும் போது அது இன்னும் இன்னும் வலிமை பெற்று விரிகிறது. நான் பிடித்தவர்களுக்கெல்லாம் வானத்தின் மீதான புதிய பார்வையை அறிமுகம் செய்து வைக்கிறேன். அதனோடு அவர்கள் தொலைந்து போவதை கண்டு மகிழ்கிறேன்.

வானம் ஒரு யட்சி. ஒரு தடவை மனதை ஆட்கொண்டு விட்டால் காலத்துக்கும் அதன் மீது ஆட்சி செய்யும் வித்தைகளை அது தன்னகத்தே ஒளித்து வைத்திருக்கிறது.

அதுவே இறந்து போன விண்மீன்களின் ஒளிகளை சுமந்து வருகிறது, எரிகற்களை பரிசளிக்கிறது, வால்வெள்ளிகளை கொண்டு குறிப்புணர்த்துகிறது. பேரிருளில் கூட அழகை உணர்த்தும் ஒன்று பிரபஞ்சத்தில் இருக்கிறதென்றால் அது வானம்தான்.

இதைத்தானே காலம் முழுக்க எழுதிக்கொண்டிருக்கிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். இன்று எழுத ஒரு காரணம் இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் 04-10 வரையான நாட்கள் உலக விண்வெளி வாரமாக கொண்டாடப்படுகிறது.

மனித குலத்தின் அபிவிருத்திக்காகவும், அறிவுக்காகவும் இது அறிவியல் கொண்டாட்டம் பார்க்கப்படுகிறது. வானத்தின் அற்புதங்களை எத்தி வைப்பதை ஒரு கடமையாக எண்ணுவதால் இதை இங்கு ஞாபகப்படுத்துகிறேன்.

Wishing you all a splendid Space Week, dear friends. ✨

இன்றைக்கு பூமிக்கு மேலே பல இலட்சக்கணக்கான செய்மதிகள் சுற்றி வருகின்றன. தொடர்பாடல், காலநிலை, ஆய்வு, பாதுகாப்பு போன்ற பல க...
04/10/2024

இன்றைக்கு பூமிக்கு மேலே பல இலட்சக்கணக்கான செய்மதிகள் சுற்றி வருகின்றன. தொடர்பாடல், காலநிலை, ஆய்வு, பாதுகாப்பு போன்ற பல காரணங்களுக்காக அவை விண்ணுக்கு ஏவப்பட்டிருக்கின்றன.

இன்றைக்கு பூமிக்கு மேலேயிருக்கும் வெளியில் விண்வெளிக் குப்பைகளை உருவாக்குவதில் பாரிய பங்களிப்பு செய்பவை செய்மதிகள்தான். இது தவிர வானியலாளர்களுக்கு ஆகப்பெரிய தலைவலியாகவும் இந்த செய்மதிகள் மாறியிருக்கின்றன.

இந்த இலட்சக்கணக்கான செய்மதிகளுக்கெல்லாம் ஹெட் மாஸ்டர் ஒன்று இருக்கிறது. அதுதான் சோவியத் ரஷ்யா முதன்முதலில் விண்ணுக்கு ஏவிய Sputnik 1 விண்கலம். ஒரு Ballistic Missile ஒன்றில் வைத்து முதல் செய்மதியை ரஷ்யா விண்ணுக்கு அனுப்பிய போது அமேரிக்கா திகைத்துப் போயிருந்தது.

நமது தலைகளுக்கு மேலே ரஷ்யாவினால் சுற்ற முடிகின்றதென்றால் எந்தக் கணமும் நம் மீது குண்டு போட்டு நம்மை கொல்ல முடியுமென்று அமேரிக்க மக்கள் மனதில் பயம் ஆட்கொண்டிருந்தது. அன்றைய பனிப்போரில் அமேரிக்காவை பல வருடங்களுக்கு லெப்டில் டீல் பண்ணி சாதித்து வந்தது ரஷ்யா.

இயற்கையை தாண்டி மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு பொருள் விண்ணுக்குச் சென்றதும், பூமியை சுற்றி வந்ததும் அதுவே முதன்முறை. Sputnik 1 எழுப்பிய ரேடியோ சமிக்ஞைகளை உலகம் எங்கிலும் இருந்த பல மக்களால் தங்களுடைய ரேடியோ வாங்கிகளின் மூலம் கேட்க முடிந்தது.

பூமியின் தாழ்வான சுற்றுவட்டப்பாதையில் 1400 தடவைகள் பூமியை சுற்றிய Sputnik 1 சரியாக மூன்று மாதங்களின் பின்னர் வளிமண்டலத்திற்குள் நுழைந்து எரிந்து போனது. எப்போது Sputnik 1 ஏவப்பட்டதோ அன்றிலிருந்து ஏழு நாட்களை சர்வதேச விண்வெளி வாரமாக ஆய்வாளர்கள் கொண்டாடுகின்றனர்.

அன்று ஏவப்பட்ட ஒரு கருவி இன்று வானியலில் பல்லாயிரக்கணக்கான மர்மங்களை நமக்கு விலக்கித் தந்திருக்கிறது, பிரபஞ்சத்தை பற்றிய தங்களுடைய அறிவினை மனித இனம் வளர்த்துக் கொள்வதற்கும், வேற்றுலகங்களில் இறங்கி வாழ்வதற்கான வழிகளை தேடுவதற்கும் அடித்தளமிட்டது Sputnik 1 தான்.

1957 ஆம் ஆண்டு இதே நாளில் Sputnik 1 கஸகஸ்தானின் ரஷ்யாவின் இராணுவ ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்ட இது மனிதனுடைய மகத்தான கண்டுபிடிப்புகளில் ஒன்று. விண்வெளி ஆய்வினை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய Sputnik 1 இனை கொண்டாடுவோம்.

Thank you, Sputnik 1, for paving the way for space exploration!

- Zhiyan Yakoob

80000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆரம்பகால மனிதர்கள் குழுக்களாக சேர்ந்து வேட்டையாடுபவர்களாக இருந்தார்கள். அவர்களுடைய முக...
01/10/2024

80000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆரம்பகால மனிதர்கள் குழுக்களாக சேர்ந்து வேட்டையாடுபவர்களாக இருந்தார்கள். அவர்களுடைய முக்கியமான ஆயுதங்களாக எல்லாம் கற்களே இருந்தன.

ஆபிரிக்கா கண்டத்தில் இருந்து வெளியேறி ஐரோப்பா, ஆசியா என்று மனித இனம் விரிந்து செல்ல ஆரம்பித்த காலம் அது. இன்னைக்கு பலஸ்தீன், எகிப்து, சவூதினு நமக்கு கிடைக்கின்ற தொல்பொருட்கள் எல்லாம் அந்த மனிதர்களுடையதுதான்.

எப்போதெல்லாம் இந்த ஆதிகால மனிதர்களை பற்றிய தகவல்களை படிக்கின்றேனோ அப்போதெல்லாம் அவர்கள் பாலைவனத்திலும், சமவெளிகளிலும் இரவு நேரங்களில் அலைந்து திரிவதைப் போல் கற்பனை செய்து கொள்வேன்.

அவர்கள் எப்படி வேட்டையாடி இருப்பார்கள், எப்படி குழுக்களாக உறவாடி இருப்பார்கள் என்ற எந்த எண்ணமும் என்னில் எழுவதில்லை. எந்த செயற்கையோ, மாசுபாடோ கண்டிராத அந்த சூழலில் ஆதி மனிதனுடைய இரவு வானம் எப்படி இருந்திருக்கும் என்றே என் அகம் அறியத் துடிக்கும்.

பல இரவுகள் என் கண்கள் ஒளி மாசடைந்த வானத்தை பார்த்திருக்க என் ஆன்மா ஆதி மனிதர்களோடு சேர்ந்து உலாவியிருக்கிறது, மலை முகடுகளிலும், மணல் குன்றுகளிலும் நின்று குளிரில் நடுங்கியிருக்கிறது.

இப்போதெல்லாம் இரவு வானத்தை விட்டும் மனிதர்களை தொழிநுட்பம் இயன்றளவில் தூரப்படுத்திவிட்டது. தன் வீட்டுக்கு வெளியே வந்து ரசிக்கக் கூடிய நிகழ்வுகளை கூட மனிதர்கள் சமூகவலைத்தளங்களில் ரசித்துக்கொள்ளலாம் என்ற மனநிலைக்கு மாறிவிட்டார்கள்.

அப்போதெல்லாம் மனிதர்களுக்கு திசைகாட்டி, நாட்காட்டி, கடிகாரம், வேதம் என எல்லாமாகவும் வானமே இருந்தது. ஒவ்வொரு எரிகல்லுக்கும், வால்வெள்ளிக்கும் மனிதர்களிடம் ஏராளமான கதைகளும், நம்பிக்கைகளும் நிறைந்திருந்தன.

இவற்றையெல்லாம் ஏன் எழுதிக்கொண்டிருக்கிறேன் என்று நீங்கள் யோசிக்கலாம். 80000 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த மனிதர்களுக்கு வானில் காட்சியளித்த ஒரு வால்வெள்ளி இத்தனை காலம் கழித்து மீண்டும் நமக்கு காட்சி தர வந்துகொண்டிருக்கின்றது.

C/2023 A3 என்றழைக்கப்படும் இந்த வால்வெள்ளியை கடந்த ஆண்டு வானியலாளர்கள் முதன் முதலாக அவதானித்த போது தொலைவிலிருந்து வருகின்ற ஒரு விண்கல் என்றே எண்ணியிருந்தார்கள். தொடர்ச்சியான ஆய்விலேயே அது நீண்ட சுற்றுகை காலத்தை கொண்ட ஒரு வால்வெள்ளி என்பதை அறிந்துகொண்டனர்.

அதாவது சூரியனை ஒவ்வொரு முறையும் சுற்றி வர இந்த வால்வெள்ளி 80000 ஆண்டுகளை எடுத்துக் கொள்கிறது. பூமியை விட்டு 157 மில்லியன் மைல்கள் தொலைவில் பயணிக்கின்ற பல கிலோமீட்டர் விட்டம் கொண்ட இந்த வால்வெள்ளி தற்போது அதிகாலையில் தென்பட ஆரம்பித்திருக்கிறது.

இம்மாதம் 13 ஆம் திகதிக்குப் பின்னர் மாலையில் சூரிய அஸ்தமனத்திற்குப் பின் நம்மாள் அந்த வால்வெள்ளியை வெற்றுக் கண்களால் அவதானிக்கக் கூடியதாயிருக்கும். ஆர்வமுள்ளவர்கள் இதனை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இந்த வால்வெள்ளிக்காக அவர்கள் எத்தனை கதைகளையும், எதிர்வுகூறல்களையும் சொல்லியிருப்பார்கள் என்பதை நினைக்கையில் மனம் கனக்கின்றது. இன்று அத்தனை மனிதர்களும், அவர்களின் சந்ததிகளும் மாண்டு போனார்கள், ஆனால் அதே வால்வெள்ளி சாதாரணமாக இன்னொரு தடவை வந்து போகிறது.

- Zhiyan Yakoob

Address

Colombo

Alerts

Be the first to know and let us send you an email when Zhiyan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zhiyan:

Share