05/06/2023
மட்டக்களப்பில் டெங்கு பரவலை கட்டுப்படுத்துவதற்கான விசேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (05) இடம் பெற்றது.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களின் வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்குப் பரவலை ஒழிப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
மாவட்டத்தில் அண்மைக்காலமாக டெங்கு நோய்த்தாக்கம் அதிகரித்து வருவதுடன் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டமாக காணப்படுவதனால் அதிகமாக டெங்கு நுளம்பு பரவக்கூடிய பிரதேசங்களை அடையாளம் கண்டு அவற்றை அழித்தல் மற்றும் டெங்கு பரவக்கூடிய வகையில் பேணியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
மேலும் பராமரிப்பின்றி காணப்படும் இடங்கள் மற்றும் வீடுகளிற்கு பொலிசாரின் உதவியுடன் சென்று சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் பாடசாலை மாணவர்கள் அவர்களது வீடுகளில் மேற்கொள்வார்களாயின் கட்டுப்படுத்த முடியும் என துறை சார் நிபுணர்கள் கருத்து தெரிவித்ததுடன் ஒவ்வொரு பாடசாலைகளிலும் டெங்குவை கட்டுப்படுத்துவதற்கு பொறுப்பாக ஒரு ஆசிரியரை நியமித்து கண்காணிப்பு பணியினை மேற்கொள்ள வேண்டும் என கலந்துரையாடப்பட்டது.
இதன் போது டெங்கு நுளம்பு பரவலை கட்டுப்படுத்துவதற்கு தேவையான ஆலோசனை மற்றும் வழிகாட்டல்கள் அரசாங்க அதிபரினால் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ.சுகுணன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சசிகலா புண்ணியமூர்த்தி, பிரதேச செயலாளர், வைத்தியர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், துறைசார் நிபுணர்கள்,முப்படை அதிகாரிகள், பொலிசார், திணைக்கள தலைவர்கள்,கல்வி பணிப்பாளர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், மற்றும் உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்
#தமிழ்செய்திகள் #இலங்கைசெய்திகள் #இலங்கை
#தமிழ்விருட்சம்